கோணல் புத்தி கொண்டவர்களுக்கு எந்தச் சம்பவம் கிடைத்தாலும் கேணை சேஷ்டைகள் செய்வதைத் தவிர்க்கவே இயலாது போலிருக்கிறது
சமீபத்தில் நிகழ்ந்த என்கவுண்டர் கொலைகள் குறித்த தனது இரு முகநூல் குறிப்புகளில் திருவாளர் பரமார்த்த குரு அவர்கள் இடையிலே சொருகிச் செல்லும் நாகாசு வரிகள் இந்தக் கோணல் புத்திக்கு சமீபத்தைய உதாரணம்.
முதலாவது, அன்பு கசிய எழுதப்பட்ட குறிப்பிலே சொட்டும் போலித்தனம்!
யூமா வாசுகி என்று அறியப்பட்ட புலம்பல் புடைப்பாளியின் ”நெஞ்சை நக்கி” கசக்கிப் பிழிந்து கண்ணீர் விட்டு அரசியல் நிகழ்வுக்கு நகரும் கள்ளக் கசட்டுத்தனம்!
யூமா வாசுகியை கிட்டத்தட்ட 94 ஆம் வருட அளவில் பழக நேர்ந்திருக்கிறேன். பெருமாள் முருகனின் நட்பினூடாக!
அப்போது, நாங்கள் வாடகை இருந்த வீட்டிலே பக்கத்து ஒரு போர்ஷன் (ஒரு அறை – ஒரு சமையலறை கொண்டது) காலியாகிவிட, வாசிப்பு நிமித்தம் தனிமை வேண்டிய எனது வற்புறுத்தலுக்கு இணங்கி அதையும் வாடகைக்கு எடுத்து எனக்கென்று தந்தனர் எனது பாவப்பட்ட பெற்றோர். (அதுவரை நாங்கள் இருந்த வாடகை வீட்டில் மூன்றே அறைகள் – ஒன்று “ஹால்”; ஒன்று சமையலறை; மற்றது, பெற்றோர் உறங்கும் “பெட்ரூம்”). வாடகை அப்போதைய இந்தியப் பணத்தில் 150 ரூபாய் மட்டுமே!
பக்கத்து போர்ஷனை வாடகைக்கு எடுத்த பின்னரே, வாசிப்பிற்குரிய தனிமையும் நண்பர்களின் வருகையும் தங்குதலும் நீண்ட உரையாடல்களும் சாத்தியமாயின.
பெருமாள் முருகன் தவிர்த்து அந்த 4 – 5 வருடங்களில் அதிகம் தங்கியவர் பைத்தியக்காரன் என்ற பெயரிலே ப்ளாக் உலகிலே அறியப்பட்ட சிவராமன். கோணங்கி தங்கிய இரு சந்தர்ப்பங்கள் சுவாரசியமானவை!
95 ஐஆம் வருடம் இருக்கும். ஒருநாள் மதிய அளவில், (இரவு முழுக்க வாசித்து நான் எழும் நேரமது அக்காலங்களில்) பதைபதைக்க வந்தார் யூமா வாசுகி. வழமையான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு மிக நேரடியாக, தனது ஜோல்னாப் பையில் இருந்து, ஒரு கத்தியை எடுத்து நீட்டி, “வளர்மதி, இரண்டு நாட்களுக்கு முன்பு “முன்றில்” – ல் சாரு நிவேதிதாவுக்கும் எனக்கும் சண்டையாகிவிட்டது. என்னவென்றே தெரியவில்லை. அவனைக் கத்தியால் குத்திவிட வேண்டும் என்று வெறிபிடித்திருக்கிறது. இந்தக் கத்தியோடேயே அலைந்து கொண்டிருக்கிறேன்” என்று பதட்டம் சற்றும் குறையாமல் கலங்கினார் [சிற்றிதழ் உலகிலே புகழ் பெற்ற அச்ச்சம்பவம் => சாரு நிவேதிதா, “தமிழில் எழுத்தே கிடையாது” என்று சொல்ல, யூமா வசுகி “அப்போ ஏனடா தமிழிலே எழுதுகிறாய்?” என்று கேட்டு - அப்போதும் அடித்தது யூமா வாசுகியே!]
விழித்து எழுந்திருந்த எனக்கு என்ன சொல்வதென்றோ செய்வதென்றோ புரியவில்லை. எப்படிச் சமாதானம் செய்து அனுப்பினேன் என்றும் நினைவில்லை.
வார இறுதியில் பெருமாள் முருகனை வழமையாக சந்திக்கும் போது சம்பவத்தைச் சொன்னதும், “அவர் அப்படித்தான். விடுங்க” என்று சிரித்தார்.
அடுத்த சம்பவம், மேற்கு மாம்பலத்தில் ஒரு சாராயக் கடையில் நிகழ்ந்தது.
நண்பர் ஒருவரோடு மதுவருந்திக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, அருகில் இருப்பவர் யூமா வாசுகி என்பதைக் கண்டுகொண்டு, அவரோடு சேர்ந்து மதுவருந்தத் தொடங்கினோம்.
பேச்சு சுவாரசியத்தில், ஒரு சந்தர்ப்பத்தில் அவரது தொடையைத் தட்டிப் பேசிவிட்டேன்.
அவ்வளவுதான். “நீ என்ன, எனக்கு மாமனா, மச்சானாடா! என் தொடையைத் தட்டுகிறாய்!” என்று என் கண்ணத்திலே அறைந்தார்.
எனக்குப் புரியவில்லை. என் உயரத்திற்கு யூமா வாசுகி பூச்சி. அதைச் சொன்னேன். அடித்தால் தாங்க மாட்டாய் என எச்சரித்துவிட்டு நாங்கள் நகர்ந்துவிட்டோம்.
சரி. இது அற்பக் குடித்தகராறு!
கடைசியாக நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்!
இது நடந்தது திருத்துறைப்பூண்டியில். 2003 என்று நினைவு.
(ஆவணப்படுத்தி வைத்திருக்கும் அழைப்பிதழ்களில் எஞ்சியிருந்தால் (பழையவற்றை நினைவில் வைத்திருக்கக்கூடாது என்று தீர்மானம் செய்து [நீட்ஷே வை வாசித்த உத்வேகத்தில் - ஆனால், என்ன செய்ய! நினைவுக் குப்பைகளைச் சில கழிசடைகள் கிளறி விட்டு விடுகின்றனவே!
அனைத்து கடிதப் போக்குவரத்துகளையும் எரித்திருக்கிறேன்] அதிலே, ஆரம்ப காலகட்டத்தில் எழுதிய துண்டுப் பிரசுரங்கள் சிலவும் அடங்கும். [இக்குறிப்பு “அறிக்கை திருட்டுக் கையெழுத்து ஸ்பெஷெலிஸ்ட்டின் கவனித்திற்காக] பார்த்து உறுதி செய்கிறேன்.)
ஒரு இலக்கிய விமர்சனக் கூட்டம். பல நூல்களுக்கு. ஏற்பாடு செய்தவர்கள் பரமார்த்த குருவின் அடிவருடிகளில் ஒருவரான சிவகுருநாதன் மற்றும் “கிழக்கு” என்ற பெயரில் வந்த சிற்றிதழின் ஆசிரியர் குழுமத்தின் ஆசிரியர் – அப்துல் காதர் என்று அறியப்பட்டவர்.
எனது நண்பன் தய். கந்தசாமியின் வற்புறுத்தலின் பேரிலேயே கலந்துகொள்ளச் சம்மதித்தேன். அவனது சொந்த ஊருக்குச் செல்லும் ஆர்வம் ஒரு காரணம்.
காலை தொடங்கி கூட்டம். எனது அமர்வு மதிய இடைவேளை முடிந்து எனச் சொல்லப்பட்டது.
காலை பாதி அமர்வின்போதே, யூமா வாசுகி வந்து சேர்ந்தார். அவருக்கு பட்டுக்கோட்டை. திருத்துறைப்பூண்டிக்கு மிக அருகில். எனது அருகிலேயே வந்து அமர்ந்தார். மேலே சொன்ன இரு சம்பவங்களுக்குப் பிறகும் அவரோடு எனக்கு எந்த மனத்தாங்கலும் இருக்கவில்லை.
பாதிக்கூட்டத்திலேயே “போரடிக்கிறது. குடிக்கப் போகலாமா?” எனக் கேட்டார்.
சரியென்று கிளம்பினோம். அருகிலேயே கடை. முடித்துவிட்டு உணவருந்திவிட்டு மதிய அமர்வுக்கு இருக்கைகளில் அருகருகே அமர்ந்தோம்.
நான் பேச இருந்த அமர்வு வந்தது. ஆனால், அழைக்கப்படவில்லை.
சம்பந்தமேயில்லாமல், கூட்ட அமைப்பாளர்களில் ஒருவரான, மேலே குறிப்பிட்ட சிவகுருநாதன் தனது கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தார். ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் கழிந்த பின்னர் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
காரணம், கூட்ட அழைப்பிதழிலே அவர் கட்டுரை வாசிக்கப் போவதாக எந்தக் குறிப்பும் இருக்கவில்லை.
தாள மாட்டாமல், எழுந்து இடை மறித்தேன். “கட்டுரை வாசிப்பதாக இருந்தால், கூட்ட அமைப்பாளர்களில் ஒருவராகிய நீங்கள் உங்களது தலைப்பை அழைப்பிதழிலேயே அறிவித்திருக்க அனைத்து முன் உரிமைகளும் உண்டு. அதைச் செய்யாமல், இப்படி எந்த அறிவிப்பும் இல்லாமலேயே, நிகழ்ச்சி நிரலில் இல்லாமல், இங்கே கட்டுரை வாசிப்பது அதிகார துஷ்பிரயோகம்” என்று அவரது பேச்சிலே இடமறித்தேன்.
பக்கத்திலே இருந்து விழுந்தது என் கன்னத்திலே ஒரு அறை. திரும்பவும் யூமா வாசுகி.
பேசிக் கொண்டிருந்த தருணத்திலே எதிர்பாராது விழுந்த அந்த அடியைத் திரும்பிப் பார்த்தால் திரும்பவும் அந்தப் பூச்சி யூமா வாசுகி. என்ன செய்வதென்று புரியாது விழித்துக் கொண்டிருக்கையில், கூட்டத்திலே சலசலப்பு. ”சிவகுருவைப் பேசவிடுங்கள். அவனை வெளியேற்றுங்கள்” என்று என்னை.
எனக்குச் சுத்தமாகக் குழம்பிப் போய்விட்டது. கூட்டத்திலே பேசுவதாக அறிவிக்கப்படாத கூட்ட அமைப்பாளர் தொடர்பில்லாமல் எழுந்து ஒரு நீண்ட “எலக்கிய விமர்சனக் கட்டுரை” வாசிக்கிறார். அதன் ஜனநாயகத் தன்மை குறித்து கேள்வி கேட்ட, கூட்டத்திலே பேச சென்னையில் இருந்து அழைக்கப்பட்ட பேச்சாளர்களில் ஒருவரான என்னை வெளியேறச் சொல்கிறார்கள்!
அக்கணம், மேடையிலே அமர்ந்திருந்தவர்களிலே ஒருவரான, மனித உரிமைப் போராளியான பரமார்த்த குரு வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை.
அழுதுகொண்டே வெளியேறிய என்னோடு வந்தவன் தய். கந்தசாமி மட்டுமே. அவனே என்னைப் பத்திரமாக சென்னை திருப்பி அனுப்பியும் வைத்தான்.
தான் காதலிக்கும் எழுத்தாளர்களில் ஒருவரான யூமா வாசுகி பதட்டப்பட்டு சமீபத்திய என்கவுண்டர் கொலைகள் குறித்து பேசியதும் தான் நெஞ்சுருகிப் போய் நெக்குருகி எழுதுவதாக பாசாங்கு காட்டியது இந்தப் பழைய குப்பை அனைத்தும் கிளறவிட்டன!
என்ன செய்வது! அத்தனையும் பாசாங்கு! அத்தனை பொய்! அத்துனை அதிகார துஷ்பிரயோகம். அத்துனை வன்முறை! அத்துனை நேர்மை!
சரி! கிடக்கட்டும். இவையெல்லாம், இலக்கிய வாழ்வுக் குப்பையிலே நிகழ்ந்துவிட்ட துரதிர்ஷ்ட வசமான சம்பவங்கள் என்றுகூட இந்த யோக்கிய சிகாமணி – நான் அறை வாங்கியதையும், கூட்டத்திலே பேச அழைக்கப்பட்ட என்னை, என் சந்தர்ப்பம் வரும் முன்னாலேயே அறிவிப்பின்றி இடையீடு செய்ததைக் கேள்வி கேட்டதற்காக, கூட்டத்தை விட்டே வெளியேற்றிய யோக்கியத்தனத்தையும் அமைதியாக மேடையிலே உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஜனநாயகப் பண்பாளரான பரமார்த்த குரு கூறக்கூடும்.
ஆனால், பூச்சியைப் போல இருந்து கொண்டு, தனது சொந்த வாழ்வில் மிக வன்முறையாளனாக இருந்து கொண்டு, அந்த வன்முறையை நாவலாக எழுதியே சுயபச்சாதமும் தேடிக் கொண்ட ஒரு அற்பப் பூச்சிதான் இவரது காதலுக்குரிய எழுத்தாளர்களில் ஒருவராக இருப்பது ஆச்சரியத்திற்கு உரிய ஒன்றா என்ன!
இல்லவே இல்லை!
பரமார்த்த குரு நேசிக்கும் இன்னொரு வன்மம் மிகுந்த எளுத்தாளப் புடுங்கி யாரென்று கேட்டால் அது லஷ்மி மணிவண்ணன். அவர் நாடார் என்பது இன்னொரு சிறப்பு. அந்தப் பாசம் எங்கோ ஒளிந்திருக்கிறதோ என்று எனக்கு ஒரு சந்தேகமும் உண்டு.
இதே பாங்கு, மரண தண்டனை குறித்து ராஜன் குறை – ஷோபா சக்தி இருவருக்கிடையே நிகழ்ந்த பரிமாற்றத்தில் இடையீடு செய்து, ஷோபா சக்தியின் “வன்மையான” வார்த்தைப் பிரயோகங்களை நியாயப்படுத்தி பரமார்த்த குரு எழுதியதிலும் கவனிக்கலாம்.
ஆனால், இந்த வன்மையின் நியதி வளர்மதிக்கு மட்டும் மறுக்கபடுவதின் மர்மம் என்ன!
மேலே குறிப்பிட்ட மூவரும். பரமார்த்த குருவுக்கு ஜல்லியடிப்பவர்கள், வளர்மதி அப்படியல்லன் என்பதுதானா?
மேலே விவரித்த சம்பவங்கள் எவையும் தனிப்பட்ட வாழ்விற்கு உரியவை அன்று! பொது வாழ்விலே புழங்கும் புளுத்தவை!
அந்தப் பொது வாழ்வுக்குரிய அரசியல் புலத்திற்கே வருகிறேன்.
யூமா வாசுகி குறித்த “பாசம் ததும்பும்” குறிப்புகளில் இருந்து தொடங்கி, என்கவுண்டர் நிகழ்வுக்கு நகரும் பரமார்த்த குரு “சந்திலே சொருகிச் செல்லும்” அற்பத்தனமான குசும்பு குறித்ததே அது!
//இல்லைததமிழர்களில்லை, இவர்கள் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன எனத் திருப்தி கொள்ளப் போகிறோமா?//
என்ன மண்ணாங்கட்டிக்கு இந்தக் குறிப்பு இடை நுழைகிறது?
நடக்கும் பிரச்சினையின் மையம் தமிழர்களுக்கும் தமிழர்கள் அல்லாதோருக்கும் இடையிலானது என்று முன்வைக்கப்பட்டதா? இனவிரோதம் கட்டமைக்கப்பட்டதா?
அரசு தரப்பு மறைமுகமாக எழுப்பும் பிரச்சினை “பிற பிறதேசங்களுக்குக் குடியேறும் தொழிலாளர்” குறித்த பிரச்சினை (immigrant labor). அவ்வாறு பிழைப்பு தேடி, அடிமட்ட கூலி வேலைக்காக, ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கத் துணியும் பிற மொழி பேசும் பிற தேசிய இனத்தவரை பலிகடா ஆக்குகிறது தமிழக அரசுத் தரப்பு.
அவர்களது “குறைந்த கூலித் தகுதி (cheap labor) காரணமாகவே, தமிழகத்தில் இயங்கும் இந்தியத் தேசிய அளவிலான (pan – indian) நிறுவனங்களும், அவர்களைச் சார்ந்து இயங்கும் சிறு தொழில் முனைவோரும் அத்தகைய வட – இந்தியக் கூலித் தொழிலாளர்களை கடந்த இரண்டு – மூன்று ஆண்டுகளில் மிக அதிகமாக வேலையில் அமர்த்துகின்றனர் என்பதுவும் சமூக நிகழ்வுகளை மிக மேலோட்டமாக அவதானித்து வருகிற, ஆர்வம்மிக்க எந்த சமூக அறிவு’சீவி’க்கும் புலம்பும்.
ஆனால், பரமார்த்த குருவுக்கு மட்டும் அந்த அடிப்படை அறிவுகூட புலப்படாது!
சம்பவங்களை முன்னிட்டு அவர் கேள்விகளை எழுப்புவார்.
இடதுசாரி இயக்கங்கள் என்ன சொல்கின்றன? என்று.
ஆனால், தமிழ் தேசிய இயக்கங்கள் மீது கூசாமல் குற்றம் சாட்டத் துணிவார்.
“ தமிழ் தேச அமைப்புகள் கண்டிக்காததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று.
என்ன மண்ணைப் புரிந்து கொண்டார் இந்த மக்கு மட மண்ணு!
இந்தக் கேள்வியை சிபிஎம் பருப்புகளை நோக்கி மட்டும் இவர் எழுப்பாததன் மர்மம் அல்லது மடத்தனம் அல்லது யோக்கியத்தனம் என்ன?
ஏய்யா! எதுக்கெடுத்தாலும், தமிழ் தேசிய இயக்கங்கள் இதற்கு என்ன சொல்கின்றன என்று கேட்கும் ஆளான நீவீர், இந்தப் பிரச்சினைக்கு இஸ்லாமிய இயக்கங்கள் என்ன சொல்கின்றன என்று கேட்கக் கூடாதா?
இஸ்லாமியப் பாதுகாவலர் பதில் சொல்வாரா?
இஸ்லாமியராவது ஒடுக்கப்படுவோர்!
”ஆண்ட பரம்பரை” யினரான சி பி எம் பார்ப்பனர்கள் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்ற கேள்வியை ஏன் பரமார்த்த குரு எழுப்பவே இல்லை?