ஏன் கலை ? … 4

அனைத்திலும் பொதுவான அம்சமாக இருப்பது பயனுள்ள பொருட்கள் – கருவிகள்: முகமூடி, நூல், குடுவை, ஊதல், மூக்குக் கண்ணாடி – கைப்பை, வாசனை திரவியங்கள், மூளை – இதயம், குப்பி, foil paper …. விதிவிலக்காக இருப்பது பயன் தீர்ந்து வீசப்பட்ட அழுக்குப் பொம்மைகள்.

கருவியின் மீது சிறிது ‘அழகியல்’ மதிப்பைத் திணித்துக் கொடுத்துவிடுவதில் ஒரு படைப்பு உருப்பெற்றுவிடுவதில்லை. கருவியின் பயன்பாட்டுத்தன்மையை நீக்கிவிட்டு கண்காட்சியில் வைப்பதாலேயே அது கலைப்பொருளாகிவிடுவதில்லை.

படைப்பு, தன்னிலிருந்து வெளிக்காட்டும் உலகு, முன்னிறுத்தும் மண், இவற்றுக்கிடையிலான மோதல், – உறவு, இதில் வெளிப்படும் ஆற்றல் – இயக்கத்திலேயே கலையாகிறது.

பெனிட்டாவின் கண்காட்சி, முழுமை என்ற அளவில் நின்று எழுப்பிக்காட்டும் உலகு – தேடல், ‘நான்’ குறித்த குழப்பம்; முன்னிறுத்தும் மண் – பெண்ணாயிருத்தல்.

Hand mirror தொலைப்பார்வையில் ஒரு பெண்ணின் முகத்தை முன்னிறுத்துகிறது; அருகில் சென்றால் வாயில் பொருத்திய ஊதல். ஒரு illusion – காட்சி மயக்கம் – குழப்பம். பாட்டியின் கைப்பையும் மூக்குக் கண்ணாடியும் நினைவு கூர்வது ஒரு உலகை – தாய்வழிப் பாரம்பரியத்தை.

அதே நேரத்தில், கைப்பை மண்ணாக முன்னின்று அதைக் கையாண்ட பெண்ணின் (பாட்டியின்) மெல்லிய, சுருக்கங்கள் விழுந்த கைகள், அதன் மெதுவான அசைவுகள், ஊதல் வாங்கக் கெஞ்சி அடம் பிடித்து நிற்கும் பேத்திக்கு ஒரு ரூபாய் நாணயத்தை எடுக்க அதை (கைப்பையை) மடியில் இருத்தி, மெல்லத் திறந்து துழாவுவது, அதில் படிந்திருக்கும் தேய்வுகளில் விரிகிறது. கணவனுக்குத் தெரியாமல் சேர்த்திருந்த பணத்தின் இரகசியத்தை நம் காதோரம் சொல்கிறது. பேரப்பிள்ளைகளுடனான உறவின் கனிவு அதில் கசிந்திருக்கிறது. அவசரத்திற்கென்று எப்போதும், ஏதாவது சிறிது பணம் இருக்கும் என்ற நம்பிக்கை அதனூடாக, மெல்லிய அதிர்வாக நம்மைச் சேர்கிறது.

மாட்டின் இதயம் சட்டென்று ஒரு சமூகப் பிரிவினரின் வரலாற்றுப் பாரம்பரியத்தை நம் முன் நிறுத்துகிறது. Make – up rack பெண்ணாயிருத்தல் என்பதன்றி வேறென்ன? சர்ச்சில் முகமூடி அணிவதில்லை என்ற அறிவிப்பு ‘நான்’கள் குறித்த அவரது குழப்பத்தை – உலகை அறிவித்து விடுகிறது.

பெண்ணாயிருத்தலுக்கும் (மண்) ‘நான்’கள் குறித்த தேடல் – குழப்பத்திற்கும் (உலகு) இடையிலான மோதல் எப்படியாக வெளிப்பாடு கொள்கிறது?

Who did my portrait – ல் இதயம் (மண்) ஓவியமாக சட்டகத்திலிட்டு மாட்டப்பட்டிருக்கிறது. மூளை (‘நான்’களின் பரப்பு – உலகு) ஓவியத்திலிருக்கும் பெண்ணால் நிராகரிக்கும் தொனியில் எதிரே நீட்டப்பட்டிருக்கிறது. சுவற்றில், மேலே கேள்வியாய் விரிந்திருக்கும் வலை (கலை உலகு – அதில் தனது இடம் என்ன?) மண்ணில், கீழேயிருக்கும் முகமூடி (பெனிட்டா) என்று இந்த மோதல்.

இரண்டிற்குமிடையிலான உறவாக வெளிப்படுவது குழந்தைமை. அனைத்திலும் குழந்தைமையின் அடையாளங்கள் (ஊதல், பொம்மைகள், குழந்தைக் கால நினைவுகள்). மொத்தக் காட்சியும் இந்தப் புள்ளியில் குவிகிறது.

இதில் வெளிப்படும் ஆற்றல்: இயக்கம். பொருண்மை இயக்கம், ஆழ்ந்த அதீத உள்ளியக்கம் இரண்டும்.

பார்வையாளர்கள், Last Supper – ல் இருத்தியிருக்கும் பெனிட்டாவின் உருவத்தை முன்னே நின்று மட்டும் நோக்காமல் சுற்றி வருவது, வைன் குப்பியை எடுத்துப் பார்ப்பது, அப்பம் உள்ள பெட்டியைத் திறந்து பார்ப்பது, Door No: 62 – ல் போர்வைகளை விலக்கிப் பார்ப்பது, Make – up rack – ல் முகமூடிகளை எடுத்துப் பார்ப்பது என்பதாக பொருண்மையான இயக்கம் வெளிப்பாடு கொள்கிறது.

Door No: 62 – ல் ஏன் இந்த அழுக்குப் பொம்மைகள் என்ற உறுத்தலான கேள்வியாக, அதில் இரண்டாவதில், முழுக்கப் போர்த்தியிருப்பதை விலக்கி, உள்ளே இருக்கும் sprayer – ஐப் பார்த்து வியப்பது அல்லது குழந்தைமை நினைவுகள் கிளறிவிடப்பட்ட குதூகலமாக; Mary Ammal Appartment (A – Block) – ல் இது என்ன என்று அண்ணாந்து பார்க்கும் குழந்தைகளின் துருதுருப்பான கேள்வியாக; கடைசியாகத் தொங்கும் ஓவியத்தில், மூன்றாவது உருவின் பின்னணியில் பொறித்திருப்பதை, நெருங்கி உற்று ஆராயும் குழந்தை மனமாக; அதில் பொறித்துள்ள வசனமே (”கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும் …” என்று தொடங்கும் சங்கீதம்: 102) தந்தையிடம் கெஞ்சும் குழந்தையின் வினையாக. மீண்டும் Door No: 62 – ல் அழுக்கான, அகோரமான பொம்மைகளில், குழந்தைமையில் உள்ளுறைந்திருக்கும் அமானுஷ்யத்தைக் கண்ணுற்ற அதிர்ச்சியாக, அதீத உள்ளியக்கம், உறக்கம்போல் இயக்கம் பார்வையாளர்கள் அறியாமல் அவர்களை ஆட்கொண்டுவிடுகிறது. காட்சியில் உள்ளுறைந்திருந்த இயக்கம், ஆற்றல் பார்வையாளர்களைத் தன்னுள் இழுத்து சுழற்றி விடுகிறது.

கடந்த இரண்டரை நூற்றாண்டு காலமாக, அழகியல் என்பதாக (உருவம் – உள்ளடக்கம்) ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பிலிருந்து விலகி நிற்கத் தொடங்கும்போது (பெனிட்டாவின் கண்காட்சியில் வெளிப்பட்டது போன்ற) கலை, வாழ்வை – ஆற்றல் என்ற விரிந்த பொருளில்; மானுட வாழ்வு என்ற குறுகிய பொருளில் அல்ல – வியந்து நோக்க, குழந்தைமைக்கு, குதூகலத்திற்கு நம்மையுமறியாமல் இழுத்துச் செல்கிறது.

நமது இன்றைய அறமும், மதமும், தத்துவமும் மானுட வாழ்வு என்ற குறுகிய பரப்பிற்குள், அதிலும் சீரழிந்த எதிர்வினைக்குள் தள்ளுபவை. அரசியலைப் பொருத்தவரையில், அது அறவியல் புலத்திற்குட்பட்டது. அரசியலின் பிரதான கேள்வி நீதி. நீதி என்பதோ ஒரு அறவியல் பிரச்சினை. மேலோர் அறவியலின் (Master morality) நோக்கில் நீதி என்பது நியாயமாக நடந்துகொள்வது (justice as fairness). அடிமை அறவியலின் (Slave morality) நோக்கில் நீதி என்பது பழிவாங்குதல் (justice as revenge).

நமது இன்றைய அரசியல் (இடதுசாரி அரசியல், தலித் அரசியல், ‘பின் – நவீன’ அரசியல் உட்பட) அடிமை அறவியல் நோக்கில், பழிவாங்குதல், வன்மம் (resentment) என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டவை. அதனாலேயே, நமது மதமும், தத்துவமும், அறமும் (அரசியலும்) மானுட சீரழிவின் வடிவங்கள். பரபரப்பு, விசாரம், துறவு, விலக்கி வைத்தல் இவற்றின் இயக்க வடிவங்கள்.

இதனாலேயே கலை, மேற்காட்டியது போன்ற, ஆழ்ந்த அமைதியுள்ள, அதீத ஆற்றல்/இயக்கமுள்ள கலை, நமக்கு அவசியமாக இருக்கிறது.

(முற்றும்).

பன்முகம் ஜூலை – செப்டெம்பர் 2003.

ஓவியம், கலை, தத்துவம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: