அகன்ற வெளி … 3

அவர்கள் ஒரு நல்ல ஜோடியாக அமைந்தார்கள். பால் மிஷன் மாவட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து அவர்களுடைய எல்லா பொருட்களையும் கொண்டுவந்து சேர்த்தான். அவளுடைய பயணங்களில் சேகரித்திருந்த போஸ்டர்கள், ஓவியங்கள், சிற்பங்களை எடுத்து சுவர் மூலைகளையும் மேசைகளையும் அலங்கரித்தார்கள். பாலுடைய ஏராளமான புத்தகங்கள் சிறிய லிவிங் ரூமில் உயரமான பழுப்புநிற புத்தக அலமாரிகளில்  ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டன. திருமணத்திற்குப் பிறகு நான் சந்தித்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மிகுந்த ம்கிழ்ச்சியாக இருந்தது போலத் தெரிந்தது. சிதறிப் போயிருந்த வாழ்க்கையின் உடைந்த பாகங்களைப் பொறுக்கி எடுத்து சரிசெய்வதில், ஒன்று சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது போலத் தோன்றினார்கள். விர்ஜினியா அரசு நிறுவனம் ஒன்றில் குமாஸ்த்தாவாக வேலைக்குச் சேர்ந்தாள்.  பால் பகலில் ஒரு கட்டிடக் கம்பெனியில் வேலை செய்தான். இரவில் ஒரு சமூகக் கல்லூரியில் பட்டம் படித்தான். இலக்கை அடைந்தே தீரும் உறுதியோடு திட்டமிட்டு கடுமையாக உழைத்தான். ஆனால், ஒரு பெருநகரத்தில் வசதியான வாழ்க்கைத் தரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்த மெக்சிக நண்பர்களிடமிருந்து இருவரும் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டார்கள். நல்ல இயல்பும் தனித்தன்மையும் உள்ளவர்களாகப் பார்த்து நண்பர்களை பொறுக்கி எடுத்தார்கள். நான் சந்தித்த நபர்களிலேயே மிக அதிக ஜனநாயக உணர்வுள்ளவர்களாக இருந்தார்கள். எல்லோரையும் பேச அனுமதித்தார்கள். மெக்சிக்கர்கள், ஆசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், ப்ரேசில் நாட்டவர்கள், கருப்பர்கள், வெள்ளை அமெரிக்கர்கள் என்று எல்லோரிடமும் உறவு வைத்திருந்தார்கள். ஆனால், எப்போதும் பலரும் வந்து போய்க்கொண்டிருந்த ஒரு இடத்தில் வசித்துவந்தார்கள். இது, கிழக்கில் நிகழ்ந்தது போல அவ்வளவு கொடூரமானதாக இல்லயென்றாலும் அதே போன்ற விளைவுகளைத் தரக்கூடியதாக அமைந்துவிட்டது.

இந்த சமயத்தில், பாலுடைய தந்தை கான்ஸாஸில் இருந்துகொண்டே நிர்ப்பந்தங்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். விர்ஜினியா பற்றிய யோசனை அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டிருந்தது என்று நினைக்கிறேன். அவருடைய பெயருக்கு ஏற்படவிருக்கும் களங்கம் அவரை பயமுறுத்த ஆரம்பித்து விட்டிருக்கவேண்டும். பால் தனது முடிவை மறுபரிசீலனை செய்வதாக இருந்தால் தனது முழு உதவியும் அவனுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று உறுதி சொல்லி தொலைபேசியில் தொடர்ந்து தொந்தரவு செய்தார். தனது முயற்சிக்கு நிச்சயம் பலன் இருக்கும் என்று எதிர்பார்த்தார். தொலைபேசியிலேயே அவர்கள் வாதிட்டார்கள். வாலிபப் பருவத்தின் பரவசத்தில் மயங்கிவிட்டதாகக் குறை கூறினார். நீக்ரோவைப் போலவே யோசிக்க ஆரம்பித்துவிட்டான் என்று குற்றம் சாட்டினார். குறுகிய மனப்பான்மை அவரை விட்டு அகலவில்லை என்று மகன் தந்தையைக் குற்றம் சொன்னான். எதுவும் தீர்க்கப்படவில்லையென்றாலும் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து நடந்தன. தந்தை ஒரு நல்ல வியாபாரி. சந்தையில் அடுத்தது என்ன என்பதை நன்கு அறிந்தவராக இருந்தார். மகன் ஒரு மோசமான முதலீடு செய்திருப்பதாகவும் விர்ஜினியாவிடம் சரக்கு இருப்பு தீர்ந்ததும் சீக்கிரமே திருந்திவிடுவான் என்று நம்பினார் என்றும் நினைக்கிறேன். சாயம் போகாத நிறம், சலித்துவிடாத பழம் என்று எது இருக்கிறது. அவருடைய பார்வையில் அது அவ்வளவு சுளுவானது. ஆனால் பாலின் பார்வை அப்படியிருக்கவில்லை.

டிசம்பரின் ஆரம்பத்தில் ஒருநாள் இரவு உணவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். அந்த இரவு விர்ஜினியா சொன்னாள், “அந்தக் கிழட்டு ராஸ்கல் ஒருநாள் ஒரு நீக்ரோக் குழந்தையை எடுத்து கொஞ்ச வேண்டியிருக்குமே என்று பயப்படுகிறான். எனக்கு மட்டும் கல்நெஞ்சாக இருந்திருந்தால் அவனுக்கு குழந்தையை கோமாளி வேஷமிட்டு படமெடுத்து அனுப்புவேன்.” சொல்லிக்கொண்டே சிரித்தாள். ஆனால், வழக்கமான முரண்தொனி அதில் இல்லை. தனது லெவி ஜீன்ஸின் பின் பாக்கெட்டுகளுக்குள் கைகளை விட்டுக்கொண்டு அடுப்பின் மீது சாய்ந்து கொண்டாள்.

பால் சமையலறை மேசையில் உட்கார்ந்து வைன் குடித்துக்கொண்டிருந்தான். விர்ஜினியாவின் தாக்குதலில் சற்று நிலைகுலைந்து விட்டிருந்தாலும் உறுதியாக இருப்பது போலத் தெரிந்தான். “என் அப்பா அவருக்கே உரிய முறையில் நாகரீகம் மிக்கவர். உலகின் ஒரு சிறிய பகுதிதான் அவருக்குத் தெரியும். அவரைப் போலில்லாத புதியவர்களோடு ஆழமாகப் பேசியிருப்பது கொஞ்சம்தான். கருப்பு மக்களை அவருக்குத் தெரியாது. ஜின்னியைப் புரிந்துகொள்ள அவர் நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும்” என்றான். “முரண்களின் மொத்த உருவம் அவள். எல்லாவிதமான விதிகளையும் உடைத்துவிடுவாள். ஆனால், எல்லோருமே சில சமயங்களில் அதைச் செய்வதுண்டுதானே.” கண்கள் ஒளிவிடச் சிரித்தான்.

மேசைக்கருகில் நானும் உட்கார்ந்துகொண்டு ஒரு கிளாஸ் சிகப்புவைனை ஊற்றிக் கொண்டேன். விர்ஜினியா காரம் மூக்கைத் துளைத்த ஒரு ஸ்பானிஷ் உணவு வகையை சமைத்துக் கொண்டிருந்தாள். அதன் நெடியில் வழக்கத்துக்கு மீறிய நிம்மதி உணர்வு வந்தது. க்ளாஸை காலி செய்துவிட்டு சொன்னேன், “உன் அப்பாவுடைய வருத்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சாதாரண வழக்கப்படி உங்களிருவரில் ஒருவர் செத்துப்போக வேண்டும். அல்லது நோயில் விழுந்துவிட வேண்டும். அல்லது ஒரு அற்புதமான மாலை வெயில் பொழுதில் காதல் செய்துகொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு மின்னல் இறங்கி செத்துவிழ வேண்டும்.”

பால் சிரித்தான். க்ளாஸிலிருந்து வைனை லேசாக உறிஞ்சினான். “இது சினிமா இல்லை. நிஜ வாழ்க்கை. எப்படியோ, எதையும் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.”

விர்ஜின்யா ஒரு சிகப்பு சாஸை கலக்கிக் கொண்டிருந்தாள். அறையின் காற்றில் காரசாரமான நெடி கலந்து பரவியிருந்தது.

“ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பழைய கதைகளை திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” பாலைப் பார்த்துச் சொன்னேன்.

பால் திரும்பவும் சிரித்தான். “இது யதார்த்தமான வாழ்க்கை.” இப்போது கொஞ்சம் போதை ஏறியிருந்தான். ஒரு மடக்கு குடித்துவிட்டு சொன்னான், “இந்த வீட்டில் யதார்த்தத்திற்கு நாங்கள் அதிகக் கவனம் கொடுக்கிறோம். பொது அபிப்பிராயத்தில் ஜின்னி ஒரு கருப்பி. ஆனால் உண்மையில் அவள் ஆப்ரிக்க, ஐரோப்பிய, இந்திய ரத்தங்களின் கலப்பு. அங்கே வெளி உலகத்தில் அவள் முரட்டுத்தனமானவள். ஆனால், இங்கே வீட்டில் மென்மையானவள், இனிமையானவள். மற்றவர்கள் எதிரில் இறுக்கமாகத் தெரிவாள். ஆனால் என்னிடம் பூனைக்குட்டியாகிவிடுவாள். அவளுடைய முரண்களைப் புரிந்துகொள்ள எனக்கே அதிக காலம் பிடித்தது. என் குடும்பத்தவர்களுக்கு இன்னும் அதிக காலம் பிடிக்கும். என் அப்பாவுக்கு நெளிவு சுளிவுகளில்லாத விறைப்பான மூளை. ஆனால், நான் காத்திருக்கத் தயாராக இருக்கிறேன். என் எதிர்காலத்திற்கு ஒரு முதலீடாக என் திருமணத்தைப் பார்க்கிறேன். என் அப்பா கொஞ்சம் இளகிய பிற்பாடு அவளை வீட்டிற்கு அழைத்துப் போவேன். கவலைப்படவேண்டிய அவசியம் எதுவும் எனக்கில்லை.”

அடுப்புக்குப் பக்கத்திலிருந்து விர்ஜினியா கத்தினாள். “போன் செய்யும்போது அந்தக் கிழ ராஸ்கல் என்னிடம் பேசவாவது செய்திருக்கலாம்.”

முற்றுகையில் மாட்டிக் கொண்டுவிட்டவனைப் போலத் தெரிந்த பால் விரல்களால் வைன் க்ளாஸில் தாளம் போட்டுக்கொண்டு இருந்தான்.

அது என் கதை இல்லை. என்றாலும் அதில் தலையிடாமல் இருக்கமுடியவில்லை. கதைக்கு ஒரு ஒழுங்கான போக்கு இல்லை என்பது போலத் தெரிந்தது. இன்னொரு க்ளாஸ் வைன் ஊற்றிக்கொண்டு மேசைக்கு எதிர்ப்பக்கம் உட்கார்ந்திருந்த பாலை உற்று நோக்கினேன். எங்களுக்கு மேலே தொங்கிக்கொண்டிருந்த மின்விளக்கு எனது க்ளாஸ் வைனில் நடுங்கிக் கொண்டிருந்தது. நான் சொன்னேன், “கிழக்கில் இருந்ததைவிட காலம் இங்கு வித்தியாசமாக இருக்கிறது.  நாம் இங்கு மதிய வணக்கம் சொல்லும்போது கிழக்கில் மக்கள் இரவு வணக்கம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இது மதிப்புகளைப் பற்றிய விஷயம் அல்ல.  தூரம் குறித்த விஷயம். கிழக்கில் தொடங்கும் கருத்துக்கள் தகவல் சாதனங்களின் ஊடாக வேகமாகப் பரவிவிடுகின்றன. ஆனால், இங்கு நிலவும் வித்தியாசங்களால் அது கட்டுப்பட்டுவிடுகிறது. இருந்தும், தன்னைப் பற்றிய உணர்வை மறுபடியும் தொகுத்துக் கொள்வதற்கு தொடர்பு சாதனங்களின் உதவி மூளைக்கு தேவைப்படுகிறது. தன்னிறைவு பெற்ற கற்பனை என்று எதுவும் இல்லை.”

பால் என்னை எரிச்சலோடு பார்த்தான். “நீ சொல்வது எனக்குப் புரியவில்லை,” என்றான்.

நான் தொடர்ந்தேன். “உன்னைச் சொந்தம் கொண்டாட யாரோ ஒருவர் இங்கு வரப்போகிறார். சீக்கிரமே நீயே உனக்கு அசடாகத் தெரிவாய். நேரம் இருக்கும்போதே உன் மனைவியின் மறுக்கமுடியாத இருப்பை உன் தந்தையின் மூளைக்குள் நீ இறக்கிவிட வேண்டும். முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு உன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.”

உண்மையிலேயே அவன் புரிந்துகொள்ளவில்லை. இன்னமும் அவன் தானே சுதந்திரமாக விஷயங்களைத் தீர்மானிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். சமையலறை மேசையில் விறைப்பாக உட்கார்ந்துகொண்டு வைனை உறிஞ்சிக் கொண்டிருந்தான். அடிப்பட்டது போலக் குழம்பி, கோபத்தின் விளிம்பில் இருந்தான். அவன் கதையில் தலையிட்டு விட்டதற்காக வருந்தினேன். என்றாலும் அவனுக்கு உணர்த்தவேண்டிய விஷயம் இருந்தது என்று நினைத்தேன். சமையலறைக் கதவில் மாட்டியிருந்த ஒரு நைஜீரியச் சடங்கு முகமூடியைக் காட்டினேன். எங்களுக்கு மேலாக இருந்த விளக்கின் தூய வெள்ளை ஒளிபட்டு மெருகேறியிருந்த அந்த மூகமூடி தகதகத்தது. “அது அழகாக இருக்கிறதா?” கேட்டேன்.

பால் நிமிந்து அதை நோட்டமிட்டான். மனித முகத்தின் மிகை யதார்த்தம் போல இருந்தது அது. உறைய வைத்துவிட முடியாத மனித ஆளுமை மரத்துண்டில் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கண்களின் இடத்தில் இரு துளைகள். அகன்ற வாயிலிருந்து ஏதேதோ கோணங்களில் பற்கள் துருத்திக் கொண்டிருந்தன. நெற்றியின் மேலாக, வளைந்த மேடுகள் மலை ஆடுகளின் கொம்புகள் போல புடைத்திருந்தன. பால் வைனை உறிஞ்சினான். “அது அழகுதான். இபாதானில் ஒரு வியாபாரியிடம் ஜென்னி அதை வாங்கினாள். அதற்குப் பின்னால் ஒரு சுவையான கதை இருக்கிறது.”

“அது சரி. அது உனக்கு அழகாகப் படுகிறதா?” நான் கேட்டேன்.

“கதையா முகமூடியா?” அடுப்பருகிலிருந்து விர்ஜினியா கேட்டாள். ஒரு சுயஎள்ளல் தொனியில் சிரித்தாள். ஆனால், அந்த ஒலியில் அவளுடைய அந்தரங்க நானை மறைத்துக்கொள்ள ஒரு திரைச்சீலை இழுத்துவிடப்பட்டது போல இருந்தது.

“அதிலென்ன சந்தேகம். முகமூடியைத்தான் சொல்கிறேன்.” பால் சாதாரணமாகச் சொன்னான். கண்களில் உணர்ச்சி பொங்கி வழிய என்னைப் பார்த்துச் சொன்னான், “அற்புதமாக இருக்கிறது.”

இப்போது நான் பேசினேன், “நீ கலைப் பொருட்களை விற்கும் ஒரு வியாபாரி என்று வைத்துக்கொள்வோம். மிகவும் வித்தியாசமான ரசனையுள்ளவன். ஆனால், உன் கடை ஒரு சிறிய டவுனில் இருக்கிறது. உன்னுடைய ஒரு நல்ல வாடிக்கையாளருக்கு இதை அழகானது சுவாரசியமானது என்று நம்பவைத்து நீ விற்க வேண்டும். ஆனால் டவுனில் இருக்கும் மற்ற எல்லா வியாபாரிகளும் இதை அசிங்கமாயிருக்கிறது என்று சொல்கிறார்கள். உன் வாடிக்கையாளரை எப்படி சமாதானம் செய்து விற்பாய்?”

பாலுடைய கண்கள் விரிந்து ஒளி தெரித்தது. எழுந்திருக்கப் பார்த்து முடியாமல் தள்ளாடி உட்கார்ந்தான். “ஞானப் பால் புகட்டப்படுவதை நான் விரும்புவதில்லை.” அவன் குரலில் வெறுப்பு தெறித்தது. “என்னை உட்காரவைத்து புத்திமதி சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை!” அடக்கிக் கொண்ட கோபம் தெரிந்தது. திரும்பவும் எழப் பார்த்தான்.

“சாப்பாடு தயார்!” விர்ஜினியா கத்தினாள்.

“ஒரு உளவியல் யுத்தத்திற்குள் நீ மாட்டிக்கொண்டுவிட்டாய்.” நான் அவனை விடவில்லை.

பொறியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டவனைப் போலத் தெரிந்தான். மனைவியின் முகத்தைப் பார்க்கத் திரும்பினான். அவள் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்தாள். பாத்திரத்தைத் திறக்க அவசியமில்லாமல் நிறைய சத்தம் செய்துகொண்டிருந்தாள். ஒரு பழைய நீக்ரோப் பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தாள் என்று ஞாபகம். மீண்டும் திரும்பி என்னைப் பார்த்தான். ஒரு பயங்கர அச்சம் அவன் முகத்தில் கப்பிக் கொண்டிருந்தது. “இன்னும் ஏன் இங்கு இருக்கிறாய்!” கத்தினான். “போய்விடு! இங்கிருந்து போய்விடு!

அவனைத் தாண்டி நின்றுகொண்டிருந்த விர்ஜினியாவைப் பார்த்தேன். பழுக்கச் சிவந்திருந்த ஒரு பாத்திரத்தை வெறுங்கைகளால் பிடித்துக் கொண்டிருந்தாள். அடிபட்ட சிறு பறவையைப் போல நடுங்கிக் கொண்டிருந்தாள். மோசமான ஒரு தோல்வியின் சாயல் அவள் முகத்திலிருந்தது. கத்தினாள். “போய்விடு! தயவுசெய்து வெளியே போய்விடு! நீ என்ன நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவன் என் கணவன்!”

அவர்களைத் தனியே விட்டுவிட்டுப் பிரிந்தேன். அது என் கதை இல்லை. அவர்கள் நிதானத்திற்கு வரும் வரைக்கும் எதையும் பேசாமலிருப்பது நல்லது.

இந்தப் பகுதியை கொஞ்சம் அலச வேண்டும். மிகவும் நுட்பமாக இருக்கிறது. இன்னும் தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது.

அவனுடைய மூளைக்குள் நுழைய முயற்சித்து தோல்வியடைந்தேன்.

விளக்கம் தேவை!

நிறத்தால் அவனை மோதினேன். அவன் வெளுத்துவிட்டான்.

தெளிவில்லை. விளக்கம் தேவை! விளக்கம் தேவை!

அவனுடைய “நான்” இருந்த பொதுவெளி ஒன்று இருந்தது. அராஜகம் என்று தவறாகக் கொள்ளப்படுகிற அமைதியிழந்த நிலை அதன் அடித்தளமாக இருந்தது. உண்மையில் உலகத்தோடு அவனது உறவு இப்படித்தான், இதன்வழியாகத்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கட்டமைவை மிகவும் நேரடியாக, முரட்டுத்தனமான ஒரு தாக்குதல் தொடுத்து அதன் முன் அனுமானங்களைத் தகர்த்துவிட முயற்சி செய்தேன். என் தலையிட்டைப் புரிந்துகொண்டு அவனது இருத்தலைத் தக்கவைத்துக்கொள்ள உணர்ச்சிவயமாக என்னை எதிர்கொண்டான். அவன் உலகத்திலிருந்து என்னை வெளியே தள்ளி கதவை அடைத்துக்கொண்டான்.

தெளிவில்லை. விளக்கம் தேவை.

நான் நானாக இருக்கிறேன். நான் நாமாக இருக்கிறேன். நீ நீயாக இருக்கிறாய்.

இந்த விஷயத்தில் தெளிவு அவசியம் தேவை. விளக்குக.

கோடிக்கணக்கான சிறிய முன் அனுமானங்கள் வருடத்திற்கு வருடம் சேர்ந்து, பல்தேய்ப்பது போன்ற சாதாரணமான வழக்கமாகி விடுகின்றன. வளர்த்துக்கொள்ள வேண்டிய கடமை எதுவும் இல்லாத ஒரு ஆளுமையின் பகுதியை அந்த முழுமை மறைத்து, தடுத்து வந்தது. அவன் பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னமேயே மற்றவர்களின் செயல்கள், தகுதி, அதிகாரம், பிம்பங்கள் வழியாக வெளியே, உலகத்தில் தேவையான எல்லா வாய்ப்புகளும் சூழல்களும் அவனுக்காக காத்துக் கிடந்தன. அந்த வரையறுக்கப்படாத “நானில்” (I)  இந்த மொத்த உலகத்தின் வரைவெல்லைகளை, வரைவெல்லைகளை மட்டுமே தொட்ட ஒரு சுயம் (Ego) இருந்தது. அவனது கைக்கு மீறிய நனவிலி நிகழ்வு அது. அவன் தன்னிலையை இது வரையறுத்தது. ஒழுங்கு பற்றிய அவனது உணர்வை வரையறுத்த முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு அது. அவனது தனிப்பட்ட அனுபவங்கள் இந்த ஒழுங்கை சிதைத்துவிடாமலிருக்க பார்த்துக் கொள்ளும்படி நனவிலியில் இயக்கிவிடப்பட்டது அது. அழைப்பில்லாமலேயே நான் இந்த வெளிக்குள் நுழைய முயற்சித்து நெட்டித் தள்ளப்பட்டேன். அது அவன் உரிமை. அந்தரங்கமான அறைக்குள் அனுமதின்றி நுழைய ஒரு விருந்தாளிக்கு இடமில்லை. முன்பின் அறிமுகமில்லாத புதிய சத்தத்தைக் கேட்ட ஒரு குருடன் அடுத்த அடி எடுத்து வைப்பது இல்லை.

இந்த இடத்தில் தெளிவு அவசியம் தேவைப்படுகிறது. தயவு செய்து விளக்குங்கள்.

ஒழுக்கம், அறம் பற்றிய ஒரு தீவிரத் தேடலை மீண்டும் தான் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டுவிட்டான் என்று நினைக்கிறேன்.

கிறிஸ்துமஸ் கழிந்து விர்ஜினியா தொலைபேசியில் என்னைப் பிடித்தாள்: “நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாயோ தெரியாது. அவன் வருந்திக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நல்ல மனது இருக்கிறது. ஆனால் நீ தான் தூண்டிவிட்டாய்.  நிறைய பயணித்ததில் நான் சேகரித்துக்கொண்ட அனுபவம் ஒன்று, மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தொடங்கவேண்டும் என்பதுதான். ஆப்ரிக்கர்களும் கொடூரமானவர்களாக இருக்கமுடியும் என்பது உனக்குத் தெரியும். அராபியர்களை மட்டும் நான் நம்பத் தயாராக இருந்ததில்லை. என்றாலும், அவ்வளவு எளிதில் கோபத்திற்கு ஆட்படாத கருப்புக் குரங்குகள் (niggers) நம்மில் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால், அந்தக் கந்தல் சூத்து இந்தியர்கள் பொறுமை,  நம்பிக்கையோடு காத்திருப்பது பற்றி எனக்குக் கொஞ்சம் கற்றுக்கொடுத்துத் தொலைத்துவிட்டார்கள். நம்பிக்கை வைக்க அவர்களிடம் எதுவுமே இல்லையென்றாலும்கூட பொறுமையோடு காலத்தைக் கடத்துகிறார்கள். கல்கத்தாவில் முடமான பிச்சைக்காரர்கள் எங்குபார்த்தாலும் திரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், மக்கள் அவர்களை சட்டை செய்யாமல் போய்க்கொண்டு இருப்பார்கள். இப்போது, ஒரு மேற்கத்தியன் அதைக் கொடூரம் என்று சொல்லலாம். ஆனால் இந்தச் சனியன் பிடித்த இந்தியர்களுடைய மூளையை என்னவென்று சொல்வது. அவ்வளவு சிக்கலானது. அதே பிச்சைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக அவர்களை ஆண்ட அழகான அரசன் ஒருவன் எக்கச்சக்கமான காரம் தின்று வலிப்பு வந்து செத்துப் போனான் என்றும் அவன்தான் இப்போது மறுபிறவி எடுத்து இப்படிப் பிறந்திருக்கிறான் என்றும் அமைதியாகச் சொல்லிவிடுவார்கள்! அதனால் இப்போது அவனுக்கு எதுவும் செய்யவேண்டியதில்லை. அவன் செய்த பாவத்தை அவன் அனுபவிக்கிறான். கொடுமையே! ஆனால் பொறுமையாக இருப்பது என்பது ஒரு கிறிஸ்துமஸ் காலையைப் போன்றது. கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் என்ன வைக்கப்பட்டிருக்கிறதோ அதைத் திருப்தியோடு ஏற்றுக்கொண்டு சான்டா க்ளாஸ் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இரண்டு பேருமே, நீயும் என்னுடைய அந்தக் குரங்கனும் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நான் எதையும் விடப்போவதில்லை! ஒரு மயிரையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை! அதனால் நீ ஏன் உன் கந்தல் சூத்தை இழுத்துக்கொண்டு வருடப் பிறப்பு சிறப்பு வழிபாட்டுக்கு எங்களோடு வரக்கூடாது?”

நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். விர்ஜினியா ஒரு மந்திரப் பெண்.

(தொடரும் … )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: