அகன்ற வெளி … 4

பிரம்மாண்டமான அந்தக் கதீட்ரல் இருண்டிருந்தது. காற்றில் ஆடிய மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளி பட்டு புனித தெய்வ உருவங்களின் நிழல்கள் பெரிய வளைந்த கறைபடிந்த சாளரங்களின் மீது விழுந்து ஆடின. நீண்ட வெள்ளை அங்கிகளை அணிந்த திருச்சபை பாதிரிமார்கள் பீடத்தின் மீது நின்றுகொண்டு திருமறை ஏட்டிலிருந்து புனித வாசகங்களை படித்துக் கொண்டிருந்தார்கள். பழுப்பேறியிருந்த தூபக்கலங்களில் சாம்பிராணி எரித்துக் கொண்டு, கருத்த அங்கிகளில் சிறுவர்கள் பீடத்தின் மேலும் கீழும் சத்தம் எழாமல் பவ்யமாக நடந்துகொண்டிருந்தார்கள். எங்களைச் சுற்றிலும் சிறியவர், பெரியவர், நடுத்தர வயதினர், நாகரீகமாக உடையணிந்த மேட்டுக்குடியினர், வெளுத்துப்போன ஆடைகளை அணிந்திருந்தவர்கள், கைவிடப்பட்டவரகள், வாழ்வில் இன்னமும் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். மெலிதான தாடிகளோடு தலைகுனிந்தபடி இளைஞர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் எல்லையில் நீண்டகாலம் வாழ்ந்த முன்னோடிப் பெண்களைப்போல அலைக்கழிக்கப்பட்ட தோற்றத்தில் வெளுத்த இறுகிய முகங்களோடு இளம் பெண்கள். கலைந்த அடிப்பாகங்களோடு நீண்ட ஃப்ராக்குகளுக்கு மேலாக சிறிய கண்ணாடிகள் பதித்த ஜாக்கெட்டுகளை இந்தப் பெண்கள் அணிந்திருந்தார்கள். பலர் தோல் பூட்சுகளில் வந்திருந்தார்கள். ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் பிரிந்து அங்கும் இங்குமாக சிதறி அந்தக் கூட்டத்தில் மெல்லக் கறைந்துவிடுவதுபோலத் தலைகளைக் கவிழ்த்து கைகளைக் கோர்த்து உட்கார்ந்திருந்தார்கள். விர்ஜினியா தனது வழக்கமான அசட்டுத் தொப்பியை அணிந்திருந்தாள். அவளுடைய சுருண்ட மயிரில் அது அழுந்தி உட்கார்ந்திருந்தது. அவளுக்கு வலப்பக்கம் நானும் இடப்பக்கம் பாலும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தோம். அந்த இடம் முழுக்க ஒரு தெய்வீகத்தன்மை சுடர்விட்டுக் கொண்டிருந்தது.

எங்களுக்கு மேலே கருப்பு – வெள்ளை அங்கிகளில் இரண்டு சேர்ந்திசைக் குழுக்கள் ஒரு இறைப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். வரத் தவறிய கடவுளை மீண்டும் பூமிக்கு வரச்சொல்லி வருந்தி அழைத்துக் கொண்டிருந்த தேவதைகளைப் போல அவர்களுடைய குரல் தொனித்தது. சிரத்தை மிகுந்த முயற்சி. ஆனால், எங்களைச் சுற்றிலும் இருந்த எல்லோருமே உணர்ச்சிகள் வடிந்து சோர்ந்திருந்தார்கள். இறைப்பாடலை சிரத்தை எடுத்து கவனிக்க முயற்சி செய்ததுபோல இருந்தது. நாங்கள் கண்களை மூடிக்கொண்டு எங்கள் தனிப்பட்ட பிரார்த்தனைகளை சொல்லிக் கொண்டிருந்தோம். நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. சேர்ந்திசைக் குழுவின் ஏறி இறங்கிய ராகத்தில் பாக் – கின் நம்பிக்கை தொனித்தது. அதற்குப் பதில் சொல்வது போல, அங்கிருந்தவர்களின் அமைதியில் ஒரு ஆழமான வெறுப்பை உணர முடிந்தது. அப்போது சற்றும் எதிர்பாராமல் எங்களுக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் அந்த மௌனத்தின் மீது விழுந்தது. “இளைஞனே!” அது அரற்றியது. “சர்ச்சுக்குள் தொப்பியைக் கழற்றும் நாகரீகம் இல்லையென்றால் வெளியே போய்விடு!” இரண்டு வரிசைகள் நெடுகிலும் இருந்தும் முறுகி இறுகியிருந்த கழுத்துகள் திரும்பும் சத்தம் கேட்டது. “இளைஞனே!” அந்தக் குரல் விர்ஜினியாவை திரும்பவும் மிரட்டியது. “நான் சொல்வது காதில் விழவில்லையா? ஆங்கிலம் புரியாத அளவுக்கு நீ முட்டாளா?” நான் கண்களைத் திறந்து திரும்பினேன். என்னருகில் விர்னிஜியா கண்களை இன்னும் இறுக மூடியிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் பால் தலையை உயர்த்தி நெருப்பு கக்கிய கண்களை அந்த வயதான கனவான் முகத்தில் வீசியதைப் பார்த்தேன். அவனுடைய குரலில் அப்போதுதான் அவன் உணர்வுப்பூர்வமாக அணையிட முயற்சித்துக் கொண்டிருந்த அந்த வழக்கமான அராஜகம் தொனித்தது. “கிழக்குசுவே!” மேலிருந்து எங்கள் மீது கவிந்து கொண்டிருந்த அந்த இனிமையான இசையை மறித்து அவனது குரல் கேட்டது. “இவள் என் மனைவி. அவள் தொப்பி அணிந்திருப்பது உனக்குப் பிடிக்கவில்லையெனில் அப்புறம் பிரச்சினைதான்!”

தங்கள் குரலின் வலிமையால் அந்தச் சம்பவத்தை அழித்துவிட முயற்சிப்பது போல, சேர்ந்திசைக் குழு குரலை உயர்த்தியது. எங்களைச் சுற்றியிருந்தவர்கள் லேசாக இருமினார்கள். பால் தன் கைகளை விர்ஜினியாவின் தோள்களில் ஆதரவாக அணைத்தான். கண்களை மூடிக்கொண்டு அவள் காதுகளில் எதோ கிசிகிசுத்தான். நான் கண்களை மூடிக்கொண்டு இசையில் கறைந்துவிட முயன்றேன். ஆனால், அந்தச் சம்பவம் எனக்கு நம்பிகையும் பெருமையும் ஊட்டியது. இவன் ஆண்மகன். நான் நினைத்துக்கொண்டேன்.

ஜனவரி ஆரம்பத்திலிருந்து பால் தனது வரலாற்றின் மறைக்கப்பட்ட பரிமாணங்களை அலச ஆரம்பித்திருந்தான். அவனது மூளைக்குள் இருந்த ஏதோ ஒன்று திறந்து கொண்டிருந்தது. தகவல்களைத் தேடி பசியோடு அலைந்தான். மாற்றுப் பார்வைகளை அறிந்துகொள்வதற்காகவென்று வார்த்தைகளை, பிரச்சாரங்களைக் கழித்துவிட்டு உண்மை விவரங்களைத் தேடி அலசி, ஏராளமான புத்தங்களைப் படித்தான். நிறைய அடிக்கோடுகள் இட்டான். ஓரங்களில் கேள்விகளைக் கிறுக்கினான். வெளிப்படையாக கேள்விகள் கேட்டான். படித்ததில் ஏராளமானவற்றை நிராகரித்தான். ஆனால், அவனது மூளையின் அந்தத் தனிமைப் பிரதேசத்தில் அவ்னைத் தாக்கிய அந்த ஒன்று அவனை அமைதியாக்கிவிட்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். சற்று வருத்தமாகவும் கிடந்தான். நான் அவனைக் கூர்ந்து கவனித்து வந்தேன். ஆனால், எனது எல்லைக்குள் நின்று கொண்டேன். அவனது துணிச்சலான அலசிப் பார்க்கும் முயற்சியை வியந்து எனக்குள் பாராட்டிக் கொண்டிருந்தேன்.

ஆனால், பிப்ரவரியில் ஒரு நாள் விர்ஜினியாவோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டின் நிறுத்திமிடத்தில் நின்று கொண்டிருந்தபோது ஒரு கார் நிறைய பிள்ளைகள் அவனைக் கருப்புக் குரங்கு (nigger) என்று உரக்க கேலி செய்தார்கள். அவர்கள் பாடிய பாடலின் தாளத்திற்கேற்ப அவர்களுடைய நாயும் குறைத்தது. “அந்தச் சின்னப் பொறுக்கிகளைப் பார்த்து நான் சிரிக்க மட்டுமே செய்தேன்,” என்றாள் விர்ஜினியா.

ஆனால், பால் ஏன் அவ்வளவு நிலைகுலைந்து போனான் என்பதைத்தான் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாள்.

பிப்ரவரி கடைசியில் சன்செட் மாவட்டத்தில் மழையில் விர்ஜினியாவோடு சேர்ந்து நடந்து போய்க் கொண்டிருந்தபோது இரண்டு சிறிய குழந்தைகள் அவனை கருப்புக் குரங்கு என்று கூவி அழைத்தனர்.

“Nigger என்றால் என்ன அர்த்தம்?” தொலைபேசியில் என்னிடம் கேட்டான். “அதாவது அது உனக்கு என்ன அர்த்தம் தருகிறது?”

“ப்ரொமீத்தியஸின் வழித்தோன்றல், அதிஉயர்ந்த சுதந்திரத்தின் வெளிப்பாடு,” என்றேன்.

ஃபோனை வைத்துவிட்டான்.

நான் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை. அர்த்தங்களை அவனே கண்டுபிடிக்க வேண்டும் என்ற தெளிவு எனக்குப் பிறந்துவிட்டிருந்தது.

மார்ச் ஆரம்பத்தில் விர்ஜினியா தான் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்டுகொண்டாள்.

அதே மாதத்தில், பால் தனது தந்தை, தங்களுடைய விவாதங்கள் ஒன்றின்போது அவருடைய அலுவலகத்தை துடைத்து எடுத்துக்கொண்டு போன கருப்பு வாயிற்காவலனின் முழுப்பெயரையும் சொல்லிவிட்டார் என்பதைத் தெரிவித்தான். ஆனால், அந்த வயதானவருக்கு குழந்தையைப் பற்றிய செய்திதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

கிறிஸ்துமசுக்குப் பிந்தைய மாதங்களில் அவ்ர்களை மிகச் சில நாட்களே சந்தித்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டு அப்போதுதான் பரோலில் வந்திருந்த ஒரு ஆளின் மீது எனது ஆர்வம் திரும்பியிருந்தது. சொல்வதற்கு நிறைய சுவையான கதைகளை அவன் வைத்திருந்தான். அவர்களுடைய வீட்டிற்குப் பாதிதூரத்திலேயே இருந்த அவனுடைய அறைக்குப்போக ஆரம்பித்தேன்.

செஸ் விளையாடிக்கொண்டும் அவன் பேச்சைக் கவனித்துக்கொண்டும் இருந்தேன். சுதந்திரத்தின் ஆடம்பரமான சுகங்களுக்கு வாழ்த்து சொல்லி அற்புதமான பாடல்கள் பாடினான். அவன் சிறைக்குப் போக நேர்ந்த சம்பவங்களின் காவியத் தன்மை வாய்ந்த நிகழ்வுகளை எனக்காக விவரித்தான். லட்சியங்கள், காமவேட்டைகள், நிறைய ஆசைகள் என்று துள்ளித் திரிந்தான். ஆனால், எல்லாம் இருந்தும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கடிகாரத்தின் துடிப்புக்கேற்றபடி அறைக்குள் அவனது செயல்கள் அமைந்திருந்தது போல எனக்குப் பட்டது. கதவை நோக்கி நடந்து போனவன் திடீரென்று குழம்பிப் போனதைப் போல அப்படியே நின்றுவிடுவான். கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த தன் நாற்காலிக்குத் திரும்பிவிடுவான். அவன் அறையின் சாளரம் சூரியன் கடலுக்குள் இறங்கிய அந்தக் காட்சிக்கு நேரெதிராக இருந்தது. ஆனால், சாளரத்தில் திரைச்சீலை எப்போதும் தொங்கிக்கொண்டு இருந்தது. ஒருமுறை மதிய உணவுக்கு வரச்சொல்லி என்னைக் கட்டாயப்படுத்திவிட்டு, ஒரேயொரு ஸ்பூன் பீச் பழச்சாற்றை மட்டும் பகிர்ந்து கொள்வோம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய நலம் விரும்பிகள் தந்த ஒரு பார்ட்டிக்கு என்னையும் அழைத்தான். அங்கு அறையின் ஒரு மூலையில் நெடுநேரம் மௌனமாக உட்கார்ந்திருந்துவிட்டு முற்றிலும் அறிமுகமில்லாத ஒருவன் அவனுடைய நினைவலைகளில் ஆர்வம் காட்டிய பிறகே முகம் மலரச் சிரித்தான். அதே கதைகளை வரிக்கு வரி மாறாமல் அப்படியே சொன்னான். மாலை வெகு நேரம் கழிந்த பிறகு விருந்து வைத்தவளிடம் பேசினேன். இந்தப் பெண்மணி சிறைகளை உணர்ச்சிமயமான ஒரு வெறுப்போடு நிராகரித்துவிட்டு என் கண்களை நேராகப் பார்த்தாள்.  சீரான இடைவெளியில் காலியான தனது மதுக் கோப்பையை எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது வலப்பக்கமாக ஒரு வளைவாகத் திரும்பி வைத்தாள். அவள் திரும்பிப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லாதபடிக்கு, அவளுடைய வளைந்த அசைவு முடிந்த இடத்தில், சரியாக அந்த இடத்தில், ஒரு வேலைக்காரன் தட்டைத் தயாராக வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். அவளுடைய கருநீலக் கண்ணாடியில் என் முகம் பிரதிபலித்தது. நான் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.

மேலுள்ள பகுதி சுத்தமாக தெளிவில்லாமல் இருக்கிறது. அது வெட்டப்படவேண்டும். 

நான் அதை அப்படியே விட்டுவிடுவேன். அந்தக் காலத்தின் சூழலைத் தொட்டுக் காட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன்.

ஆனால், இந்த இடத்தில் கதை திசை மாறிப்போகிறது. கதைப்பொருள், மனநிலை, கதையின் மையத்திலிருந்து இங்கு ஒரு விலகல் தெரிகிறது. வெட்டிவிடுவது உகந்தது. 

அந்தக் காலத்தில் உணர்ச்சிகள் தொய்ந்து போயிருந்தன. எந்த மையநோக்கும் இருக்கவில்லை.

விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு கதைசொல்லிக்கு இருக்கிறது.

இந்த விஷயத்தில் கதைசொல்லி தோல்வியடைந்து விடுகிறான். அங்கு தெளிவு இருக்கவில்லை. குவிமையம் இருக்கவில்லை. கட்டுப்பாடு இருக்கவில்லை. ஒரு ராட்சச கடிகாரத்தின் முட்கள் தாறுமாறாக சுழன்று கொண்டிருந்தது போல இருந்தது. கிழக்குக்கும் மேற்குக்கும் இனியும் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை.

அது யாரையும் விட்டுவைக்கவில்லை. எல்லோருமே சோர்ந்துவிட்டது போலத் தெரிந்தது. குண்டு வெடித்துப் பாழாகிப்போன இடம்போல எனக்குள் உணர்ந்தேன். இயேசுவின் அங்கியையும், மாத்திரைகளையும், பாட்டில்களையும் இறுகப் பற்றிக்கொண்டிருந்த மனிதர்களை எங்கு போனாலும் பார்த்தேன். சோர்வில் எரிந்துவிழும் மனப்பான்மை என்னையும் தொற்றிக்கொண்டது. எனக்கு உள்ளேயும் வெளியேயும் கிடந்த உலகத்தில் வெறுமனே பெருமூச்சுகளும், தேம்பல்களும், புலம்பல்களுமே கேட்டேன். இந்தக் காலத்தில் எல்லோருக்கும் தெரிய எங்கும் ஒரு நிர்வாணம் கவிந்திருந்தது. ஏறெடுத்துப் பார்க்க யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. நான் கவனித்தேன். எல்லாவற்றையும் கவனித்தேன். விர்ஜினியா தன் கதைகளின் மீது கட்டுப்பாடு இழந்து நின்றதைப் பார்த்தேன். அவளுடைய வயிறு பெரிதாக பெரிதாக அவளுடைய நினைவலைகள் ஒழுங்கை இழந்தன. அவற்றின் செறிவு மறைந்துவிடவில்லை என்றாலும்கூட அவை கதைகள் என்ற தன்மையை இழந்து அசைபோடுதல் என்பதாகிவிட்டிருந்தன. தெளிவும் ஒழுங்கும் அற்று விழுந்துவிட்டிருந்தன. இன்னமும் அவள் பெயர்களையும், பேச்சு வாடைகளையும், தனிப்பட்ட இந்தியர்கள், ஆசியர்கள்,  இஸ்ரேலியர்களின் விளையாட்டுகளையும் நினைவில் வைத்திருந்தாள். ஆனால், அவை மெல்ல ஞாபகத் துணுக்குகளாக சிதறிக் கொண்டிருந்தன. தனியொருத்தியின் சாகசக் காவியத் தன்மையை இழந்துவிட்டிருந்தன. அவளுடைய கதைகளில் அவளே காணாமல் போயிருந்தாள். பழையவற்றுக்கான ஏக்கம், கவர்ச்சி சாகசங்கள் என்கிற துருவ எல்லைகளுக்குள் அபாயகரமாக அவை உலவ ஆரம்பித்திருந்தன. சில நேரங்களில் அவள் பளிச்சிடும் நினைவுகளைச் சொல்கிற திறம் வாய்ந்தவளாக, அப்புறம் திடீரென்று உறைந்து, வாழ்ந்து, மறைந்து போகிறவளாக ஒரு திறமையான நிகழ்த்துபவளாக ஆகிப்போனாள். சர்வதேச அளவில் விரிந்த அனுபவங்கள் நிறைந்த சாகசக் காவியம் அவளுக்குள் இருந்தது. ஆனால், அதற்கு நிரந்தரமான வடிவம் கொடுக்கும் அவசியமான உணர்ச்சி வேகம் மெல்ல மெல்ல வடிந்து கொண்டிருந்தது. அவளுடைய ஒரு பகுதி, தனித்து இருக்க விரும்பிய வருங்காலத் தாயாகவும் மற்றது பிரம்மாண்டமான கதைகளைச் சொல்கிற கிராமப்புற கதைசொல்லியாகவும் பிளவுபட்டுக்கொண்டே போனது.

அந்தக் காலமே அப்படி ஆகிவிட்டிருந்தது என்று ஏற்கனவே சொன்னேன்.

பாலுக்குள்ளும் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. அவனுடைய மூளைக்குள், அவன் தன் வரையறுக்கப்படாத அந்த “நானை” கண்டுபிடித்து வெளியேற்ற, அதன் அமைவைக் குலைக்க கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், எதிரியைக் கண்டுபிடிக்க அவனால் முடியாது போலிருந்தது. ஒரு தற்காப்பு நோக்கில்கூட அவனுள் எழுந்திருந்த புதிய சிந்தனை அவசியமான எந்த யுக்தியையும் கற்றுத் தரவில்லை. இன்னமும் அவன் புத்தகங்கள், பேச்சுக்கள், வாழ்வின் யதார்த்தங்களோடு நெருங்கியிருந்தவர்களோடு பழகுதல், இவற்றின் வழியாக அறிந்துகொள்ள வாய்ப்புள்ள சில இரகசியங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டு இருந்தான். ஏறக்குறைய எல்லா வெள்ளை ஆண்களோடும் தொடர்புகளை துண்டித்துக்கொண்டான். ஒரு நில அளவிடும் குழுவில் சேர்ந்து எப்போதும் வெளியிடங்களிலேயே இருந்தான். அவனுடைய தசைகள் இறுகி முகம் பழுப்பேற ஆரம்பித்தது. நீண்ட கருப்பு தாடி வளர்த்தான். விவிலியம், கீர்கேகார்ட், ஒழுக்கவியல் குறித்த கடினமான அருவமான ஆய்வுரைகளைத் தேடிப் பிடித்து படித்தான். நிறைய அடிக்கோடுகள் இட்டான். துன்பத்தை வலியத் தாங்கிக் கொண்டிருந்த கிறிஸ்துவின் தோற்றத்தோடு, அவனுடைய தாடியும், சிமிட்டாத ஆழ்ந்த கண்களும் இயைந்து கலந்து போயின. இந்த சமயத்தில் முச்சந்தி பிலுக்கனுடைய உடைகளைப் பரிசோதித்து விளையாடிக் கொண்டிருந்தான். உரையாடல்களின்போது அடிக்கடி ஏழைகள் புறக்கணிக்கப்படுவது குறித்து வருத்தத்தோடு பேசினான். ஜெர்மையாவின் புலம்பல் குறிப்புகளிலிருந்தும், இஸய்யாவின் புத்தகங்களிலிருந்தும் நீண்ட பகுதிகளை மனப்பாடமாக மேற்கோள் சொன்னான். தன் தந்தையை அற மதிப்புகள் இழந்த கோழை என்று இகழ்ந்தான். தன்னைத்தானே சரி செய்துகொண்டு, போராடிக்கொண்டு ஆனால் ஆழங்காண முடியாத தனிமையில் இருந்தான். என்றாலும் அவன் முகத்தில் அந்த ஒளிவட்டம் இன்னும் இருந்தது. அவனது பெரிய பழுப்பு விழிகள் இன்னும் அதே கேள்வியை, இப்போது கொஞ்சம் தாங்கமுடியாத வேட்கையோடு கேட்டன: “நான் யார்?”

பல நேரங்களில் தன் தனிமையை மறைத்துக்கொள்ள அவன் பிரயத்தனப்படுவதைப் பார்த்து, “புராணப் பரிமாணங்கள் நிறைந்த அந்த அருவமான வெள்ளையனாகவே நீ மாறிவிட்டால், மீண்டும் அந்த முழுமை உனக்குக் கிடைத்துவிடும்,” என்று சொல்ல விரும்பினேன். ஆனால், கதை இன்னும் முடிந்திருக்கவில்லை. அவசியமில்லாமல் தலையிட்டு அதன் போக்கைக் குலைத்துவிட நான் விரும்பவில்லை. பதுங்கி, மாறாமல் இருந்த அந்த முழுமை வடிவத்திலிருந்து அவன் மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருந்த உள்ளடக்கங்களைப் போலவே அவனுடைய குழப்பங்களும் அவனுக்கே உரியவை. ஆனால் அவனுக்கும் நியாயம் செய்தாக வேண்டும். இந்தக் காலம் முழுதும் அவன் ஒருமுறைகூட “எனக்குப் புரியவில்லை” என்று விர்ஜினியாவிடம் சொல்லிக் கேட்டதில்லை. அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் காத்திருக்கிற எளிமையான உலகத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, அவனுடைய மௌனத்தின் விருப்பு வெறுப்பற்ற தனிமையைப் பார்த்தால் யாரும் அவனை நேசிக்காமல் இருக்க முடியாது.

அப்புறம் ஜூன் ஆரம்பத்தில் இரண்டு பக்கங்களில் இருந்தும் பெற்றோர்கள் நல்ல சமிக்ஞைகள் காட்ட ஆரம்பித்தார்கள். விர்ஜினியா வீட்டிலிருந்து அடிக்கடி வந்துபோனார்கள். குழந்தைக்குத் தங்கள் குடும்பப் பெயர்களை முன்மொழிந்தார்கள். பாலின் தாயார் தொட்டிலுக்கு பணம் அனுப்பிவைத்தாள். ஆனால், குழந்தையின் நரம்புகளில் ஐரோப்பிய ரத்தம்தான் ஓடுகிறது என்பது உறுதியாகத் தெரியவேண்டும் என்பதை மிக இரகசியமாக, சூட்சமமாக சொல்லி வைத்தாள். ஆனால், தந்தை இன்னும் வளைந்துகொடுத்தபாடில்லை. அவருடைய வாதங்கள் இன்னும் சிக்கலாகியிருந்தன. குழந்தையை அங்கீகரித்தாரேயானால் விர்ஜினியாவின் பெற்றோர்களை அங்கீகரித்தாக வேண்டும். அவர்களுடைய வீட்டிற்கு ஒருமுறையாவது போய்வர வேண்டும். அப்படியாகிவிட்டால் அவர்கள் அவரை வந்து பார்க்கவேண்டும். இந்தப் புதிய நோக்கில் மிக வெளிப்படையாகவே வர்க்க வேற்பாடு குறுக்கே வந்தது. அவருடைய மூளை நுட்பமில்லாதிருந்தது. ஆனால், அவருடைய ஒழுங்கு பற்றிய உணர்வை ஒருவர் வியந்துதான் ஆகவேண்டும். அவருடைய சொந்த முயற்சியில் தனது கம்பெனியில் ஒரு கருப்பனை வேலைக்குச் சேர்த்திருப்பதாக மகனிடம் சொன்னார். பால் அது போதாது என்றான். தாயார் இதுபற்றி அவர் யோசிப்பார் என்றும் அவர் மறுபரிசீலனை செய்தபிறகு விர்ஜினியாவும் குழந்தையும் வீட்டில் வரவேற்கப்படுவார்கள் என்றும் கூறினாள். ஆனால், விர்ஜினியா பாலிடம் இதுவும் போதாது என்று கூறினாள்.

அவளுடைய நோக்கிலிருந்து ஒருவரும் விஷயத்தைப் பார்க்கவில்லை.

“கௌரவ வெள்ளைப் பட்டம் என் குழந்தைக்குத் தேவையில்லை,” என்றாள்.

(தொடரும் … )

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: