அகன்ற வெளி … 5


கோடை மத்தியில் ஜப்பானிய தேநீர் அரங்கில் பார்க்கில் பேசிக்கொண்டிருந்தபோது இப்படிச் சொன்னாள். பார்வையாளர் மாடத்தின் கீழ் எங்களைச் சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள் தின்பண்டங்களை மென்றுகொண்டும், சூடான் தேநீர் உறிஞ்சிக்கொண்டும் அந்த அதிகாலைப் பனியில் நெருங்கி உடார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது விர்ஜினியா தனது பேண்ட்டுக்கு மேலாக குழந்தை மேலங்கியை அணிந்திருந்தாள். ஆனால், அந்த அசட்டுத் தொப்பி இன்னும் விடாமல் அவள் சுருண்ட கூந்தல் மீது சவாரி செய்து கொண்டிருந்தது. வளர்ந்து கொண்டிருந்த கருவினால் அவளுடைய வயிறு பெருத்துக் கொண்டிருந்தது. பழுப்புக் கன்னங்களில் சதைப்பிடிப்பு ஏறியிருந்தது. கண்கள் மட்டும் ரொம்பவும் சோர்ந்திருந்தன. “நான் கருப்பினத்தவள்தான். அதை எப்போதோ ஜீரணித்துக் கொண்டேன். ஆனால், அதையும் மீறி எனக்கென்று ஒரு வெளியை உருவாக்கிக்கொண்டேன் இல்லையா?” ஆட்காட்டி விரலை பக்கவாட்டில், நெற்றியின் ஓரத்தில் தட்டி, “மேலே, இங்கே!” கசப்பாக சிரித்து தேநீரை உறிஞ்சினாள். “காலமும் சூழலும் நிர்ப்பந்திக்கும்போது யார்வேண்டுமானாலும் வெள்ளையனாக மேலெழுந்துவிட முடியும்.  கருப்பர்கள் அதைப் பல நூற்றாண்டுகளாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது ஒன்றும் புதிதில்லை. ஆனால், இந்த உலகு அளவுக்கு விரிந்த ஒரு தன்னிலையிலிருந்து, கருப்பு – வெள்ளை மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் வாய்ப்பு, சூழல் மட்டும் ஒரு கருப்பனுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?” சிரித்தாள். “அந்தக் கருப்பன் அற்புதமானவனாக இருப்பான் இல்லையா?” 

தேநீரை உறிஞ்சிக்கொண்டே பூக்களிலிருந்து பனி விலகிக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குக் கீழே நடைபாதைகளில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

நான் சொன்னேன், “நீ விளையாடினாய். உண்மைதான். நீ துணிச்சலாக இறங்கிப் பார்த்தாய். நீ மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான கருப்பிதான்.” 

“நான் கருப்பை விடக் கருப்பானவள். வெண்மையைவிட வெள்ளையானவள். எப்படியோ, பனித்திரையை ஊடுருவிப் பார்க்கவாவது கற்றுக்கொண்டுவிட்டேன்.” 

“பரவாயில்லை. நீ எல்லாவற்றையும் விளையாடிப் பார்த்துவிட்டாய்.” 

ஒரு சுற்றுலாப் பயணி எங்களைத் தாண்டிப் போனான். சற்று தயங்கி நின்று லேசான படபடப்போடு சிரித்தான். எங்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான். 

விர்ஜினியா தொடர்ந்தாள். “எல்லாமே கெட்டுச் சீரழிந்து கிடக்கிறது! உனக்கு இரண்டே தேர்வுகள்தான் உண்டு. இரண்டுமே நட்டநடு வெயிலில் மாட்டிக்கொண்ட வௌவாலின் கதியைப் போல – உன்னைக் குருடாக்கிவிடும். புதிதாக அடியெடுத்து வைப்பவர்கள் போல முதலில் இரண்டுமே வேண்டும் என்று தோன்றும். பிறகு உலகத்தில் உள்ள எல்லாமே தேவைப்படும். ஆனால், கடைசியில் கொஞ்சம் நினைவுக் கொத்துகளோடு ஒரேயொரு கண்ணோடு சுருண்டு விழவேண்டும். ஆனால், என் குழந்தை ஒரு கௌரவ வெள்ளையனாக, பொட்டைக் கண்ணோடு முடிந்து விடுவதில் எனக்கு விருப்பமில்லை. கருப்பு – கண்களில், ஓரங்களில் எட்டிப் பார்க்கவாவது செய்யும்.” 

திடீரன்று அந்த அதிகாலைப் பனி என் தோள் மீது படிந்தது போன்ற மெலிதான ஒரு குளிர்வு எனக்குள் படர்ந்தது போல உணர்ந்தேன். அவர்களிருவரைப் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் இனியும் எனக்கு எந்த அக்கறையும் இருக்க அவசியமில்லை. சொல்லத் தகுதியான கதைகள் எதுவும் அவர்களிடம் இருப்பதாகப் படவில்லை. வேறு பக்கம் திரும்பிக் கொண்டு சொன்னேன், “என்ன செய்வது வாழ்க்கை காடினமானது.” 

விர்ஜினியா தனது தேநீர் கோப்பையை சுழற்றிக் கொண்டிருந்தாள். கைகளால் வண்ணம் தீட்டப்பட்டிருந்த அந்த ட்ரேயின் மீது அதைச் சுற்றிக் கொண்டிருந்தாள். தலையை உயர்த்தி பூக்களைப் பார்த்துச் சொன்னாள், “ஆனால் என்னுடைய அந்தக் கருப்பு குரங்கனைப் பற்றிதான் எனக்குக் கவலை. அவனுக்கு மென்மையான இதயம் என்று சொல்லியிருக்கிறேன். அவனுடைய மூளையில் இன்னும் எல்லாக் குப்பைகளையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருண்டிருக்கிறான். அந்த பலவீனமான இடத்திற்குக் கீழே அவன் கழுதையைப் போன்ற பிடிவாதத்தோடு இருக்கிறான். இப்போதுதான் அவன் கண்கள் லேசாகத் திறந்திருக்கின்றன. ஆனால், திடீரென்று ஒரு கண்ணை மூடிக்கொண்டு சிந்தனையில் மூழ்கி மௌனமாகிவிடும்போது நான் கற்பனைகூட செய்து பார்த்திராத அளவு கருப்பனாகிவிடுகிறான். அப்படித்தான் அவன் சமாளித்துக் கொள்கிறான்.” 

அவர்களுக்கு இனியும் கடமைப்பட்டிருப்பவனாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், முன்பு ஒரு காலத்தில் அவள் தன் கதைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டதால் அவளுக்குக் கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்திருந்தேன். தொங்கிப் படந்திருந்த சிகப்பு ஊதா க்ரோட்டன்ஸ்களுக்கு ஊடாக பயணிகள்  தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தார்கள். மென்மையான இதழ்கள் பலவற்றை மிதித்துவிட்டிருந்தார்கள். பார்வையாளர்கள் அரங்கம் இப்போது பயணிகளால் நிரம்பியிருந்தது. விர்ஜினியாவின் வயிற்றை நோக்கி குனிந்து சொன்னேன். “அப்படியானால் உன் குழந்தையின் பொருட்டாவது கருப்பாக இருக்காதே. வழமையான, எல்லோரையும் மகிழ்விக்கிற nigger ஆக இரு.” 

அவள் சிரித்தாள். என் முதுகைச் செல்லமாகத் தட்டினாள். 

கிழக்கிற்குத் திரும்புவதற்கு முன்னால் பாலோடு நகரைச் சுற்றி வந்துகொண்டு இருந்தேன். இது குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால், கோடையின் இறுதியில். அவனுக்கு ஏதோ கடமைப்பட்டிருப்பதாக ஒரு உணர்வு இன்னும் இருந்தது. அது ஞாயிற்றுக்கிழமை. அன்று காலை பால் ஒரு க்வேக்கர் கூட்டத்தில் கலந்துகொண்டு வந்திருந்தான். திருப்தியாகத் தெரிந்தான். மதியம் முழுக்க நடந்துகொண்டிருந்தோம். நீண்ட நிழற்சாலைகள், கடற்கரையை ஒட்டியிருந்த சாலை, பூங்காவுக்குள் வெட்டிச்சென்ற அகன்ற சாலைகள் என்று இலக்கில்லாமல் மௌனமாக நடந்துகொண்டிருந்தோம்.  மனிதர்கள் மங்கலான, உருவற்ற பேய்களால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் போல, சுரத்திழந்திருந்தது போலத் திரிந்தார்கள். என் கண்களுக்கு கருப்பர்கள் மட்டுமே தட்டுப்பட்டார்கள். கோல்டன் கேட் பார்க்கில், நல்ல குடி போதையிலோ கஞ்சாவிலோ இருந்த ஒரு கருப்பன், குழந்தையை ஒரு சிறிய வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு நடந்து போன ஒரு பெண்மணியைப் நோக்கி விசித்திரமான சைகைகள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த இளம் தாயின் மனதில் ஆடிய நினைவுகளைக் கிண்டல் செய்வதில் குறியாக இருப்பது போலத் தெரிந்தான். நான் நின்று பாலுக்கு அவனைக் காட்டினேன். “Nigger என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டாயே, இதோ பார்த்துக்கொள்.” பான்ஹாண்டிலில் சாதாரணமாக உடையணிந்திருந்த வெள்ளையர்களுக்கு மத்தியில், அதிகப் பகட்டான உடைகள் அணிந்து முப்பத்தியிரண்டு பற்களும் தெரியச் சிரித்துக்கொண்டிருந்த ஒரு கருப்பனை நின்று கவனித்தோம். போவோர் வருவோருக்கெல்லாம், “என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். என்னிடம் மறைப்பதற்கு இன்றும் இல்லை என்பதை நான் அறிவேன் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதும் எனக்குத் தெரியும்,” என்று தம்பட்டமடிப்பது போல இருந்தது அந்தச் சிரிப்பு. அவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு பாலிடம் சொன்னேன், “பால் இவனும் ஒரு nigger.” பால் இப்போது இன்னும் நிம்மதியாகத் தெரிந்தான். லிங்கன் வே – யில் பேருந்து நிறுத்தத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது பம்பர்களில் நிறைய ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்த கார் ஒன்று கடந்து போனபோது, பால் அதைச் சுட்டிக் காட்டினான். மோட்டார் லூப்ரிக்கண்ட் விளம்பரம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை, இன்னும் பல அற்ப உலக விஷயங்கள் என்று ஏதேதோ ஒட்டியிருந்தது. பின்பக்க பம்பர் மத்தியில், கருப்பு எழுத்துக்களில் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் இப்படி அறிவித்தது. “Nigger – ஆக இருப்பதற்கு பெருமைப்படு.” 

பால் சிரித்தான். அதை ஏதோ ஒரு நுட்பமான கிண்டலாக அவன் நினைத்திருக்க வேண்டும். 

ஆனால், பூங்காவிலிருந்து ஒரு நாலைந்து தெருக்கள் தள்ளி வந்துகொண்டு இருந்தபோது பளபளப்பான ஒரு சிகப்பு கியர் சைக்கிளில் கனமான தாடி வைத்திருந்த ஒரு வெள்ளை இளைஞனை நோக்கித் தலையசைத்தேன். அவன் முகம் பல நாட்களாகக் கழுவாமல் சிவந்திருந்தது தெரிந்தது. அவனுடைய கருப்பு பேண்டும் சட்டையும் தூரத்திலிருந்து பார்த்தபோதே அழுக்காகத் தெரிந்தன. பேன்கள் ஊர்வதுகூடத் தெரிந்தது. வண்டியை மிதித்துக்கொண்டு அவன் போனபோது, டயரை உரித்து செய்திருந்த செருப்புகளிலிருந்து முரட்டுப் பாதங்கள் துருத்திக்கொண்டு இருந்தன. எதிலிருந்தோ மீண்டு வந்தவனைப் போன்ற ஒரு தன்னுணர்வு அவன் முகத்தில் தெரிந்தது. சிவந்த முகத்தின் கோடுகளில் குழப்பமான அராஜகம் பளிச்செனத் தெரிய, அந்த மதிய நெரிசலில் எல்லா சிரமங்களுக்கு மத்தியிலும் சர்வசாதாரணமாக நீந்திச் சென்றான். தெருவின் கோடியில் அவன் திரும்பியபோது, நான் பாலிடம் சொன்னேன். “இவன் ஒரு மோசமான போலி. பகுதிநேர nigger வேஷம் போட்டிருக்கிறான்.” 

பால் சிரிக்கவில்லை. அவன் புரிந்துகொள்ளவில்லை. 

நான் தொடர்ந்தேன். “ஒரு தெருவில் இரண்டு பேர் நடந்து போவதாக கற்பனை செய்துகொள். ஒருவன் இப்போது போனவனைப் போல உடையணிந்த ஒரு வெள்ளையன். இன்னொருவன் ஒரு கருப்பன். ஒரு கனவானுடைய உடைக்கு கேலியான ஒரு மாடல். உன் மனதில் அல்லது உன் தந்தையின் மனதில், இவர்களிருவரில் யார் இயல்பிலிருந்து விலகியவர்களாக, வித்தியாசமானவர்களாக, வேடிக்கையானவர்களாகத் தெரிவார்கள்?” 

பால் நின்றுவிட்டான். மோசமாகப் புண்பட்டவனைப்போலத் தெரிந்தான். “இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. என்னை இனவெறியன் என்று நினைக்கிறாய். அப்படித்தானே?” 

எனக்குள் ஒரு குளிர்ச்சி பரவியது போல உணர்ந்தேன். ஒரு புதிய கதையைத் தேடும் கடமை இனி இல்லை என்பது போல உணர்ந்தேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் பாலிடம் சொன்னேன், “ஒருவிதமான ஒழுங்கமைப்பை மதிப்பவர்களுக்கு மத்தியில் நீ தனியனாகப் பிறந்திருப்பாய் என்று நினைக்கிறேன். ஒரு காலண்டரில், வானத்திற்கும் பரந்த புல்வெளிக்கும் நடுவில் பரந்த வெளியில் தன்னந்தனியாக ஒருவன் நின்றுகொண்டிருப்பதைப் போன்ற படத்தை ஒருமுறை பார்த்திருக்கிறேன். ஒரு சிறிய பெட்டிக்குள் அடைபட்டவனைப் போல அந்தப் பரந்த வெளியால் அழுத்தப்பட்டது போலத் தெரிந்தான். அந்த இடத்தின் எளிமையான தாளத்தில் குறுகிப்போனதுபோல இருந்தான். அந்தத் தாளங்களோடு இயைந்து போவதற்கு – எளிமையாகச் சொல்வதென்றால், அவனது மூளையில் ஏதோவொரு முறையியலை கடைப்பிடிப்பவனாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.” 

ஆனால், பால் நான் இன்னமும் அவனைக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதாக, தவறுகளுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். “மனிதர்கள் வளர்வது உண்டு. என்னைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவும் இருக்காது. ஆனால், என் குழந்தைகள் மாபெரும் சாதனைகள் செய்வார்கள்,” என்றான். 

நான் சொன்னேன், “ஒன்று அவர்கள் கருப்பாக, குருடர்களாக இருப்பார்கள். அல்லது, வெள்ளையர்களாக எடுத்துக்கொள்ளப் படுவார்கள். இந்த இரண்டு வாய்ப்புகளே சாத்தியம்.” 

பால் என்னை விட்டு விலகி வேகமாக நடந்தான். 

பத்தொன்பதாவது சாலையில் பஸ் நிறுத்தத்தில் திரும்பி என்னைப் பார்த்து “எனக்காக வீடுவரை வரவேண்டாம். அனேகமாக ஜின்னி இப்போது தூங்கிக் கொண்டிருப்பாள்,” என்று சொல்லிவிட்டு சட்டென்று பார்வையை சிக்னல் மாறுவதற்காக பேருந்துகள் காத்துக் கொண்டிருந்த பக்கம் திருப்பிக் கொண்டான். பனிமூட்டம் கவிந்திருந்தது. இருட்டிக் கொண்டிருந்தது. வாகனங்களின் வெளிச்சத்தில் அவன் கண்கள் சிவந்து சோர்ந்திருப்பது தெரிந்தது. அவன் முகத்தைத் தெளிவாக பார்க்கும் நெருக்கத்தில் நான் இருக்கவில்லை. ஆனால் அதில் எப்போதும் தகதகத்துக் கொண்டிருந்த ஒளிவட்டம் சுத்தமாக மறைந்துவிட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. என் கண்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் போலவே அவனும் சோர்ந்திருந்தான். 

நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம். உலகில் புதிய கதைகள் எதுவுமே இல்லை என்று சமாதானம் செய்துகொண்டு நடக்க ஆரம்பித்தேன். 

இரண்டு பக்கமும் வண்டிகள் என்னைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. அவற்றின் கிறீச்சிடல்களுக்கும் ப்ரேக் உராய்வுகளுக்கும் மேலாக எழுந்த பாலின் குரல் கேட்டது. “குறைந்தது நான் முயற்சியாவது செய்தேன்! போராடிக் கொண்டாவது இருக்கிறேன். அப்புறம், nigger என்பதற்கு அர்த்தம் என்ன என்பதும் இப்போது எனக்குத் தெரியும். ஒருவன் தன்னை ஒரு கலைப் பொருளாக உணரத் தொடங்கும்போது அவன் nigger ஆகிவிடுகிறான்!” 

இரண்டு வாரங்கள் கழித்து, கிழக்குக்கு புறப்படும் முன்பாக, அவர்களுடைய அபார்மெண்டுக்குச் சென்றேன். தொலைபேசி வயர் துண்டிக்கப்பட்டிருந்தது. அவர்களிடம் சொல்லிக்கொள்வதற்குள் போய்விட்டிருந்தார்கள். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து அப்போதுதான் இறங்கியிருந்த ஒரு மெக்சிக ஜோடி, பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். மோசமான ஆங்கிலத்தில் பேசினார்கள். நான் தேடிக் கொண்டிருந்த ஜோடியைப் பற்றி விசாரித்ததற்கு மெதுவாக தலையை ஆட்டினார்கள். பெரிய தொந்தியோடு தொங்கு மீசை வைத்திருந்த கணவன் உள்ளே இருந்து ஒரு பெரிய குப்பைக்கூடையை இழுத்து வந்தான். அதற்குள் இருந்து ஒரு பெரிய பலகையை எடுத்து மார்புக்குக் குறுக்காக வைத்துக் காட்டினான். அதில். “இப்போது நாங்கள் பெற்றோர்கள், உள்ளே வராதே,” என்று எழுதியிருந்தது. 

பழைய கதைகளை சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் கிழக்குக்க் கிளம்பினேன். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, விடாமல் நினைவுக்கு வந்துகொண்டிருந்த ஒரு நாட்டுப்புறக் கதையின் இரக்கமற்ற இதயத்தின் ஆழத்திற்குள் இறங்க என் மூளைக்குள் முட்டிக் கொண்டிருந்தபோது ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கான்சாஸிலிருந்த ஒரு சிறிய டவுனிலிருந்து சான் ஃப்ரான்சிஸ்கோ வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது. ஏழு, எட்டு மாதங்களான ஒரு குழந்தையின் பிறப்பை அறிவித்தது. மூன்று கலர் ஃபோட்டோக்களும் அதோடு இருந்தது. அக்டோபர் முதல் தேதியிட்ட ஒன்றில் கருப்பு சுருள் முடியோடு ஒரு சிறிய இளஞ்சிவப்புக் குழந்தை. கொஞ்சம் சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவதில் கொழுத்த பழுப்புப் பையன் விரிந்திருந்த உலகத்தை பழுப்புக் கண்களில் ஆச்சரியம் விரிய வெறித்துக் கொண்டிருந்தான். பின்னால், “டானியல் பா. ஃப்ராஸ்ட்; 4 மாதங்கள், 8 நாட்கள்,” என்று அச்சிட்டிருந்தது. மூன்றாவதில், ஒரு வயதான ஜோடி நடுவில் இருக்க, ஒரு பக்கம் பாலும் இன்னொரு பக்கம் விர்ஜினியாவும் நின்றுகொண்டிருந்தார்கள். விர்ஜினியா வழக்கமான தன் தொப்பியை அணிந்து வெற்றிப் புன்னகையோடு இருந்தாள். பெரியவர் ஆழ்ந்த அமைதியோடு இருந்தார். பழுத்த வெள்ளை முடியோடு பாட்டி குழந்தையைக் கையில் வைத்திருந்தாள். இவர்களிடமிருந்து சற்றுத் தள்ளி கைகளை மடித்துக்கொண்டு பால் நின்றிருந்தான். அந்தப் பழைய தாடி இல்லை. யாருக்கும் பணியாதவனைப் போல மிடுக்காக நின்றிருந்தான். பரிச்சயமான அந்தத் தேடல் இன்னும் முகத்தில் தெரிந்தது. இந்தப் படத்திற்குப் பின்னால் யாரோ எழுதியிருந்தார்கள்: “இவன் முதல்தரமான nigger – ஆக இருப்பான்.” 

இந்தக் குறிப்பின் அர்த்தத்தை தெளிவுபடுத்துக. 

அது என்னால் முடியாது. சிரமம். ஆரம்பம் முதலே இது என் கதை இல்லை. அதன் செறிவான சிக்கல்களை விளக்கும் நுண்ணாற்றல் எனக்கில்லை. என்றாலும் இதை மட்டும் சொல்ல முடியும். தாய் பரந்த அனுபவமுள்ள நாட்டுப்புறக் கதைசொல்லி. தந்தை விஷயங்களைத் தெளிவாக பார்க்கும் ஆற்றல் உள்ளவன். நான் மீண்டும் அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்கள் டென்னெஸெவின் காடுகளுக்குள் வாழ்ந்துவந்த வித்தியாசமான மற்ற உறவினர்களைப் பார்க்கப் போய்விட்டார்கள் என்பது தெரிய வந்தது. நான் காத்திருப்பேன். தாய் தைரியம் மிக்கவள். எது எப்படி இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தவன் தந்தை. ஆனால், காத்திருக்கும் காலத்தில் அந்தப் பையனுடையை கதையின் வலிமை மீது இல்லையென்றாலும்கூட இலட்சிய வேகத்தின் மீது நம்பிக்கையோடு பந்தயம் வைப்பேன். 

குறிப்பு தெளிவில்லை. விளக்கம் தேவை. விளக்கம் தேவை. 

(முற்றும்.)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: