என் அருமைக் கன்னுக்குட்டி – திரைக்கதை

இக்குறும்படத்திற்கான திரைக்கதை செப்டம்பர் 2020 இல் எழுதப்பட்டது. நவம்பர் 13, 2020 அன்று தயாரிப்பு முடிந்து கையளிக்கப்பட்டது. சில காரணங்களினால், தாமதமாக மே 11, 2021 இல், தமிழ்நாடு அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் அலுவல்பூர்வமான யூ ட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்டது: https://www.youtube.com/watch?v=Sji9kTKXCHc

தற்போது, ரெட்பிக்ஸ் யூ ட்யூப் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது: https://www.youtube.com/watch?v=VNwYhB5F-c4

திரைக்கதை

காட்சி 1:

30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், சீருடை அணிந்த 5 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே வருகிறாள். வாசலில் நின்று, தன் கணவனுக்கு குரல் கொடுக்கிறாள்.

பெண்: “என்னங்க, பாலை கொதிக்க வச்சு அணைச்சிடுங்க.  மறந்துடாதீங்க.”

வீட்டினுள் இருந்து ஆண் குரல்: “ஆங் ஆங்.”

வாசலில் நிறுத்தியிருக்கும் ஸ்கூட்டியை நோக்கி மகளுடன் நடக்கிறாள். அவள் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்ததும், சிறுமி தாயை பார்த்து சொல்கிறாள்.

சிறுமி: “அம்மா, ஸ்கூல்ல என்னை எல்லாரும் ‘ஸ்கூட்டி குட்டி, ஸ்கூட்டி குட்டி’ன்னு கேலி செய்யுறாங்கம்மா.”

தாய்: (சிரித்து) “அதுக்கு நீ என்னடி குட்டி சொன்னே?”

சிறுமி: “போடி எருமன்னு சொல்லி வெவ்வே காட்டினேம்மா.”

தாய்: அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடீ கண்ணு. நீ தினம் குடிக்கிறியே அது என்ன பாலுன்னு தெரியுமில்ல?”

சிறுமி: “எரும பால்.”

தாய்: “நமக்கு பால் தர்ற எருமை பேரச் சொல்லி திட்டலாமா சொல்லு?”

சிறுமி: “அப்ப, நான் என்னம்மா சொல்றது?”

தாய்: “இந்த ஊர்லயே எங்க அம்மாகிட்டதான் ஸ்கூட்டி இருக்கு. உங்க யார் அம்மாகிட்டயாவது ஸ்கூட்டி இருக்கான்னு கேட்கணும். புரிஞ்சுதா?”

சிறுமி: “ம்ம்ம்.” தலையை ஆட்டி சிரிக்கிறாள்.

தாய் சிறுமியை தூக்கி முன்னால் நிற்க வைத்து, ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்கிறாள். வண்டி ஓடத் துவங்குகிறது. “ஸ்கூட்டி குட்டி, ஸ்கூட்டி குட்டி” என்ற குழந்தைகளின் கேலிக் குரல்கள் அவள் காதுகளில் ஒலிக்கின்றன. அவள் புன்னகைக்கிறாள். அக்குரல்கள் மங்கி, “எருமக் குட்டி, எருமக் குட்டி” என்ற குழந்தைகளின் கேலிக் குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. திரை மங்கி மறைகிறது. ஃப்ளேஷ் பேக்காக கதை தொடர்கிறது.

காட்சி 2:

வாய்ஸ் ஓவர் (தாயின் குரல்): எல்லோருக்கும் வாழ்க்கையில ஒரு திருப்புமுனை வரும்னு சொல்வாங்க. ஆனா, என் வாழ்க்கையோட தொடக்கப் புள்ளியே ஒரு திருப்புமுனையா இருந்துச்சு.

ஆறாமணி கிராமப் பலகையைக் காட்டி காமிரா கிராமத்திற்குள் திரும்பி நுழைகிறது.

வாய்ஸ் ஓவர் (தாயின் குரல்): நான் பிறந்து வளர்ந்தது ஒரு சின்ன குக்கிராமம். கூகுள் மேப் காட்டாத கிராமம். மொத்தமே 20 வீடுகள்தான். மனுசங்களைவிட எங்க ஊருல எருமைகள் அதிகம். ரசாயன உரத்தோட வாடையே இல்லாம சாண எருவிலேயே வயல்கள் இன்னைக்கும் செழிப்பா இருக்கிற கிராமம்.

காமிரா எருமைகளையும், சாண எரு மேடுகளையும் காட்டிச் செல்கிறது.

வாய்ஸ் ஓவர் (தாயின் குரல்): வயல்களுக்கு அப்பால இருக்குற இந்த ஆலமரம்தான் சின்னப் பசங்க எங்க எல்லோருக்கும் நந்தவனம். இங்கதான் நாங்க ஆடினோம், பாடினோம், சண்டை போட்டோம், சமாதானம் ஆனோம், சாமி கும்பிட்டோம். எந்த நல்ல காரியமானாலும் இங்க பூசை போட்டுதான் பெரியவங்க வேலையை ஆரம்பிப்பாங்க. என்னை பள்ளிக்கூடத்துல சேர்த்த அன்னைக்கும் இங்க சாமி கும்பிட்டுதான் என்னை அழைச்சிட்டு போனார் என் அப்பா.

நட்டு வைத்திருக்கும் சிறு கல்லின் முன்பாக சூடத்தை மூன்று முறை சுற்றி, திரும்பி ஒரு சிறுமியின் முன் சூடம் காட்டப்பட, ஒரு கை சூடத்தை தொட்டு அச்சிறுமியின் முகத்தில் ஒற்றிவிட்டு, குங்குமப் பொட்டை அவள் நெற்றியில் இடுகிறது.

வாய்ஸ் ஓவர் (சிறுமியின் தந்தையின் குரல்): “படிச்சு பெரிய ஆளா வரணும்டீ என் கண்ணு.”

சிறுமி மகிழ்ச்சி பொங்க சிரிக்கிறாள்.

வாய்ஸ் ஓவர் (தாயின் குரல்): பள்ளிக்கூடம் எங்க ஊர்ல இருந்து மூனு கிலோமீட்டர். இன்னைக்கும் எங்க ஊர் பிள்ளைங்க மூனு கிலோமீட்டர் நடந்து போய்தான் படிச்சிட்டு வர்றாங்க. ஆனா, எங்க அப்பாவுக்கு என் பிஞ்சு கால்கள் அவ்வளவுதூரம் நடக்குறதுல இஷ்டமில்ல.

காட்சி 3:

அலங்காரம் செய்யப்பட்ட ஒரு எருமை மாட்டின் மீது சிறுமியை அவள் தந்தை ஏற்றி உட்கார வைக்கிறார். சிறுமி சிரிக்கிறாள். தந்தை பெருமிதத்தோடு சிரிக்கிறார். சுற்றிலும் நின்று ஆட்கள் வேடிக்கை பார்க்கிறார்கள்.

தந்தை: “என் பிள்ளையை பள்ளிக்கூடத்துல சேர்க்கப் போறேன். ஊர்கோலமா கூட்டிப்போயி கொண்டாட வேணாமா!.”

சிறுவர்கள் ஆரவாரத்துடன் பின் தொடர, எருமை மாட்டை நடத்திக் கொண்டு செல்கிறார் தந்தை.

தந்தை பாடுகிறார்: “என் அருமைக் கன்னுக்குட்டி, என் அருமைக் கன்னுக்குட்டி”

காட்சி 4:

சிறுமியை ஏற்றிய எருமை மாடு பள்ளிக்கூடத்திற்குள் நுழைகிறது. மாட்டை நிறுத்தி சிறுமியை கீழே இறக்கிவிடுகிறார் தந்தை. எருமை மாடு பள்ளிக்கூடத்திற்குள் நுழைவதைக் கண்டதும் ஓடி வரும் காவலாளி, அருகில் வந்து,

காவலாளி: “ஏய் ஏய்! நில்லுய்யா. இன்னா இது? இப்படியா பிள்ளைய பள்ளிக்கூடத்துக்கு கூட்டியார்றது?”

தந்தை: “ஏய்யா, எம் பிள்ளைய ராசாத்தி மாதிரி கூட்டியாந்திருக்கேன். (எருமையச் சுட்டி) என்னை வாழ வைக்கிற தெய்வம் இது. (குழந்தையை சுட்டி) குழந்தை வாழுற தெய்வம்யா. (பள்ளிக்கூடத்தைச் சுட்டி) ரெண்டு தெய்வத்தையும் ஊர்வலமா கோயிலுக்கு கூட்டியாந்திருக்கேன். இதுல உனக்கு என்னாய்யா கோவம்?”

காவலாளி: “யோவ்! பைத்தியமாய்யா நீயி? கிளம்புய்யா! கெளம்பு, கெளம்பு!”

தந்தை: “பிக்காலிப் பய! இவனுக்கு என்ன ஆச்சு!”

அச்சரியப்பட்டவாறு திரும்பி, குழந்தையை பார்த்து,

தந்தை: “கன்னுக்குட்டி, உன்னை பள்ளிக்கூடத்துக்கு கூட்டியாந்து உட்டுட்டேன். இனிமே நீதான் சூதானமா படிச்சிக்கனும், சரியா?”

சிறுமி: (தலையை ஆட்டி) “சரிப்பா!”

“என்னருமைக் கன்னுக்குட்டி” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க தந்தை எருமை மாட்டை ஓட்டிக் கொண்டு உற்சாகமாக பள்ளியை விட்டு வெளியே செல்கிறார்.

காட்சி 5:

வகுப்பறையில் பிள்ளைகள் பாடம் படிக்கும் காட்சி.

வாய்ஸ் ஓவர் (தாயின் குரல்): நான் படிச்சு என்ன ஆகணும்னு அப்பாவுக்கு தெரியாது. ஆனா நான், படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு மட்டும் அவருக்கு அளவில்லாத ஆசை இருந்துச்சு. அதுக்காக என் மேல ஒரு தூசு கூட பட்டுடாம கண்ணைப் போல பாத்துக்கிட்டாரு.

பள்ளிக்கூட வாயிலருகே சிறுமி நடந்து சென்று கொண்டிருக்கிறாள்.

வாய்ஸ் ஓவர் (தாயின் குரல்): பள்ளிக்கூடத்துக்கு போன ரெண்டொரு நாள்லயே பெரிய பிள்ளைகள் என்னை கேலி செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.

வளர்ந்த இரண்டு சிறுவர்கள், சிறுமியை பார்த்து, “ஏய்! எருமக் குட்டி!” என்று அழைத்து சிரிக்கிறார்கள். “என் எருமக் கன்னுக்குட்டி, என் எருமக் கன்னுக்குட்டி!” என்று கேலியாக பாடுகிறார்கள்.

வாசலில் நின்று கொண்டிருக்கும் தந்தை இதை கேட்டுவிட்டு கோபத்துடன்,

தந்தை: “அடி! என்னடா சொன்னீங்க என் பிள்ளைய! நாளைக்கு வர்ரேண்டா உங்க வீட்டுப்பக்கம். வந்து உங்க அப்பன் ஆத்தாகிட்ட வச்சுக்கிறேன்.”

சிறுவர்களை விரட்டிவிட்டு, முகம் வாடியிருக்கும் மகளை தூக்கி தந்தை,

“நீ வாடி என் செல்லம். நீ என் அருமையான கன்னுக்குட்டிடீ!” என்று சொல்லி, அவளைத் தன் தோள்மீது வைத்து நடந்து செல்கிறார்.

காட்சி 6:

வாய்ஸ் ஓவர் (தாயின் குரல்): சொன்ன மாதிரியே அப்பா மறுநாள் அந்தப் பசங்க குடியிருக்கும் தெருவுக்கு போய் சத்தம் போட்டாரு.

பள்ளிக்கூடம் இருக்கும் கிராமத்தின் நடுத்தெருவில் நின்று, தலையில் முண்டாசும் கையில் பால் கேனும் வைத்துக்கொண்டு தந்தை கத்துகிறார்.

தந்தை: “இனிமே எந்தப் பயலாவது என் பிள்ளைய கேலி செஞ்சானுவ, பால்ல மூத்திரத்த கலந்து ஊத்திடுவேன். ஆமா சொல்லிப்புட்டேன். மாட்டும் மூத்திரத்துக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாத பயலுவளா! புள்ளைங்கள நிம்மதியா படிக்க விடுங்கடா!”

கோபத்துடன் முண்டாசை அவிழ்த்து உதறிக்கொண்டு செல்கிறார்.

காட்சி 7:

(வாய்ஸ் ஓவரில் சொல்லப்படுவது காட்சியாக)

வாயஸ் ஓவர் (தாயின் குரல்): அப்பா மேல பக்கத்து ஊருக்காருங்களுக்கு கொஞ்சம் பயம் இருந்துச்சு. முரடர், சொன்னதை செஞ்சிடுவார்னு பயம். மறுநாள்ல இருந்து பெரிய பிள்ளைகள் என்னை முறைச்சு பார்த்துட்டே போவாங்க. நானும் முறைச்சு பார்ப்பேன். அப்பா மாதிரி நானும் பெரிய முரடுன்னு நினைப்பு. அப்பா செல்லத்துல கொஞ்சம் விட்டேத்தியாவே வளர்ந்தேன்.

நிழலுருவில் சிறிய பெண் பெரியவளாகிறாள்.

காட்சி 8:

வாயஸ் ஓவர் (தாயின் குரல்): அம்மாதான் என்னை கண்டிச்சிட்டே இருப்பா. அப்பாவை போல அடங்காதவளா வளர்ந்துடுவேனோன்னு அவளுக்குப் பயம். பொம்பளப் புள்ள அடக்க ஒடுக்கமா வளரணும்னு ஏதாச்சும் வீட்டு வேலைய சொல்லிட்டே இருப்பா. ஆனா அப்பா என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டார்.

முன்னணியில் தந்தை கயிற்றுக் கட்டிலில் படுத்து காலை ஆட்டிக் கொண்டிருக்கிறார். பின்னணியில் காட்சிகள் நிழலுருக்களாக நகர்கின்றன.

சிறுமியின் நிழலுருவம் படித்துக் கொண்டிருக்கிறது.

பெண் குரல்: “ஏய், அங்க என்ன சும்மா படிச்சிக்கிட்டே இருக்க. அடுப்புல சோறு வெந்துடுச்சான்னு போய் பாரு.”

சிறுமியின் நிழலுருவம் சலிப்புடன் எழுந்து நிற்கிறது.

தந்தையின் குரல்: “கன்னுக்குட்டி, நீ படி. போகாத. அவளே சோத்த பொங்கட்டும்.”

சிறுமியின் நிழலுருவம் சட்டென்று உட்கார்ந்து புத்தகத்தை கையில் எடுத்துக் கொள்கிறது.

பெண் குரல்: “ஏய், நான் தனியா இங்க சாமான தேச்சிட்டிருக்கேன். உனக்கு அங்க என்ன சொகுசா படிப்பு. வந்து கூடமாட ஒத்தாச செய்யேண்டி கழுத!”

சிறுமியின் நிழலுருவம் சலிப்புடன் எழுந்து நிற்கிறது.

தந்தையின் குரல்: “கன்னு. கண்டுக்காத. நீ பாட்டுக்கு படி.”

சிறுமியின் நிழலுருவம் சட்டென்று உட்கார்ந்து கொள்கிறது.

பெண் குரல்: “ஏன்டி…”                                                               

கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் தந்தை விருட்டென்று எழுந்து உட்கார்ந்து, துண்டை உதறி, சத்தமாக கத்துகிறார்.

தந்தை: “ஏய், அப்ப பிடிச்சு நானும் பார்க்கிறேன். பிள்ளைய படிக்கவிடாம, சும்மா நொய்யி நொய்யின்னுட்டு ஏதாச்சும் வேலை விட்டுட்டே இருக்க! அவ படிச்சு பெரியாளாகி, நாளைக்கு உன்னை உக்கார வச்சு சோறு போடுவா. அதுவரைக்கும் சும்மா கிட!” என்று அதட்டுகிறார்.

காட்சி 9:

வானத்தில் நிலவைக் கடந்து செல்லும் மேகங்கள். காலம் கடந்து செல்வதை உணர்த்தும் முகமாக, வளர்பிறையும் தேய்பிறையுமாக நிலா வளர்ந்து தேய்ந்து வளர்கிறது.

வாய்ஸ் ஓவர் (தாயின் குரல்): இப்படித்தான் நான் படிச்சேன். அப்பா சொன்ன மாதிரியே அம்மா இப்போ நிம்மதியா சந்தோஷமா என்னோட இருக்கா. அவ கனவுல அடிக்கடி அப்பா வந்து, “என் பொண்ணு படிச்சு பெரிய ஆளாகிட்டா பார்த்தியா?”ன்னு சொல்லுறாராம்.

என் கூட படிச்ச பல பிள்ளைகள், படிப்ப பாதியிலயே விட்டுடாங்க. சிலர், வசதியில்லாம படிப்ப விட்டுட்டு வேலைக்கு போனாங்க. சிலருக்கு சின்ன வயசுலயே கல்யாணம் ஆயிடுச்சு. “எந்த காரணத்தினாலயும் பொம்பளப் பிள்ளைங்க படிப்ப, பாதியில நிறுத்தவேகூடாது,”ன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வார். சொன்ன மாதிரியே என்னை கஷ்டப்பட்டு படிக்க வச்சார். எங்க ஊர்லயே நான் மட்டும்தான் கல்லூரி படிப்பை முடிச்சேன்.

இப்போ, கல்லூரியில பேராசிரியரா இருக்கேன். என் அப்பாவைப் போல என் பிள்ளையையும் கவனமா படிக்கவைப்பேன்.

பெத்தவங்க பிள்ளைகளுக்கு செய்யிற கடமை அது.

காட்சி 10:

ஸ்கூட்டி கிரீச்சிட்டு நிற்கிறது.

சிறுமி வண்டியிலிருந்து இறங்கி, மகிழ்ச்சியோடு கையசைத்துவிட்டு பள்ளிக்கூடத்திற்குள் ஓடிச்செல்கிறாள்.

திரையின் ஒரு பாதியில் தந்தையின் உருவம் தோன்றி, “எந்த காரணத்தினாலயும் பொம்பளப் பிள்ளைங்க படிப்ப பாதியில நிறுத்தவேகூடாது,” என்று பார்வையாளர்களை நோக்கி சொல்கிறார். திரையின் மறு பாதியில், ஸ்கூட்டியில் அமர்ந்திருக்கும் அவரின் மகள் புன்முறுவலிக்கிறார்.

குறும்படம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: