ரசனாவாத இலக்கியமும் வாசக அடிமைத்தனமும் திமுக மூடரும்

ஜெயமோகனின் “இப்படி இருக்கிறார்கள்”  கட்டுரையில் வரும் முக்கிய பாத்திரம் ஒரு தி.மு.க காரர். அண்ணாவின் நூல்களையும் கண்ணதாசனின் பாடல்களையும் விட்டால் அவருக்கு வேறு எதுவும் பேச இல்லை. அவை தாண்டி ”நவீன இலக்கிய வாசனையற்ற” ஒரு “முட்டாள்” தி.மு.க “அதிகப்பிரசங்கி”, நவீன இலக்கியத்தின் “சாதனையாளர்களை” நோக்கி அசட்டுத்தனமாக கேள்விகளைக் கேட்கிறார்.

ஜெயமோகனோ, இந்தியத் தத்துவ ஞான மரபையும், சங்க இலக்கியத்தையும், தெரிதாவில் இருந்து தொ. பரமசிவன் வரையிலும் நேரடியாக வாசிக்காமலேயே (மலையாளத்தில் எழுதப்பட்ட கோனார் நோட்ஸ்கள் மூலமாக வாசித்து) கரைத்துக் குடித்தும் திண்ணைப் பேச்சுகளில் அறிந்தும் கருத்து உதிர்ப்பவர். அவரது கட்டுரையின் பாத்திரமான திமுக – காரர் கேட்கும் அசட்டுத்தனமான கேள்விகளை விடப் பன்மடங்கு அசட்டுத்தனமான, குரூரமான, இந்துத்துவச் சார்பான கருத்துக்களை சகட்டு மேனிக்கு உதிர்த்துச் செல்பவர். அவை குறித்து எவர் எவ்வளவு தெளிவான, நியாயமான, அறிவுப்பூர்வமான கேள்விகளை தர்க்க நியாயங்களோடும் ஆதாரங்களோடும் எழுப்பினாலும் சட்டென்று கேள்வி கேட்பவர்களை நோக்கி பாய்ந்து நான்கு தாக்குதல்களைத் தொடுத்துவிட்டு ஒன்றுமே நடவாதது போல, அடுத்த “ஆராய்ச்சிக்” கட்டுரையை எழுதுவதில் முனைந்துவிடுபவர்.

அதாகப்பட்டது, எவ்வளவு அறியாமை கொண்ட ஆணவத்தில் நடந்து கொள்கிற நபரகாக அந்தத் திமுக-காரரைச் சித்தரித்திருக்கிறாரோ, அதன் பன்மடங்கு ஆணவ உருக்கொண்ட “ஆளுமை”.

அறியாமை சுடர் விட்டு ஒளிரும் இந்த “ஆளுமை”யின் பேதமையைக் குறிக்க சில எடுத்துக் காட்டுகள்.

இலக்கியம் தொடர்பாக: Meta – fiction என்பது தெரியாமல், Meta – novel என்று திருவாய் மலர்ந்தருளிய “எழுத்தாள மேதை”. (இது 2000 ஆண்டில்)  Epistemology என்ற புலம் எது குறித்தது என்பதும் அறியாதவர் – அச்சொல்லின் ஸ்பெல்லிங்கும் அறியாதவர் (இதுவும் 2000 ஆம் ஆண்டு).

Popular Literature என்பதை பரப்பிய இலக்கியம் என்றும் Populism என்பதை ”பரப்பியம்” என்றும் பரப்பிய பெரும் மேதை. பொன்னியின் செல்வன் நாவலை “பரப்பிய இலக்கியத்திற்குள்” வரும் “க்ளாசிக்” எனும் அளவிற்கு இலக்கிய ரசனை முற்றியவர். (இது 2010 இல்) இந்தப் பத்து வருடங்களில் இவரின் இலக்கிய ரசனை மாறவேயில்லை. அந்த அளவிற்கு அறியாமை எனும் சுடரொளியை தன் ஆன்மாவிற்குள் கரைத்துக் கொண்டவர்.

மிருகங்களுக்கும் ஆன்ம நெருக்கடி உண்டாகும் என்பதை முதன் முதலாக உலகுக்கு உய்த்தியவர். (இது சில நாட்களுக்கு முன்பாக)

நாட்டாரியலுக்கும் வரலாற்று ஆய்வுகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர். ”தமிழகத்திலே இப்ப இருக்கிற பெரிய ஹிஸ்டாரியன்” என்று நாட்டாரியல் ஆய்வாளர் அ. கா. பெருமாளுக்கு சர்ட்டிபிக்கேட் தரும் அளவு அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்த மாமேதை. தான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களாகச் சில வருடங்களுக்கு முன்பாக இவர் தந்திருந்த ஆசிரியர் பட்டியலை வாசித்து மூர்ச்சையடைந்த விபத்தும் எனக்கு நேர்ந்திருக்கிறது.

இன்னும் பலப்பல எடுத்துக்காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், ஜெயமோகன் எதற்கும் அசரமாட்டார். “ஆன்ம தரிசனத்தில்” அவர் மூழ்கி எடுக்கும் கழிவுகளை தமிழ் எழுத்து உலகின் மீதும் வாசகர்கள் மீதும் வாறி இறைத்து திரும்பிப் பார்க்காமல் நடைபோட்டுக் கொண்டே இருப்பார்.

அவர் உதிர்த்துச் செல்லும் அபிப்பிராய முத்துக்களின் மூலம்  பற்றிச் சுருக்கமாகக் கூறுவதென்றால் இரண்டு புள்ளிகளைக் குறிப்பிடலாம்.

முதலாவதாக, ஜெயமோகனின் அறிவுத்துறை ”விசாலத்தின்” எல்லையானது தெரிதாவில் இருந்து தொ. பரமசிவன் வரையில் அவர்களது எழுத்துக்கள் எதையும் வாசிக்காமலேயே இலக்கியத் திண்ணைப் பேச்சுகளில் கேட்ட செய்திகளையும் மலையாள கோனார் நோட்சுகளில் வாசித்தவற்றையும் தமிழில் உதிர்ப்பது என்ற அளவில் நிற்பது.

இரண்டாவது, அவருடைய இலக்கிய ரசனை மூலவர்கள், அவரே ஒப்புக் கொண்டிருப்பதிலிருந்து ரசிகமணி டிகேசியும் கல்கியும். அவர்களின் தற்காலத்தைய அவதாரமே ஜெயமோகன். டிகேசியின் கம்பரசக் கதாகாலட்சேப வகைப்பட்ட இலக்கிய ரசனையின் அடியாக, அவரது அடிப்பொடியாக எழுதிய (தமிழ் இசை “ரசனையை உருவாக்குவதில் பெரும் பங்கு ஆற்றிய) தலையணை நாவல்களை எழுதிக் குவிப்பதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொண்டிருந்த கல்கியின் மிகச் சரியான வாரிசு.

ஜெயமோகனை உச்சிமுகர்ந்து கொண்டாடும் வாசகர்களின் எல்லையும் கல்கி வாசகர் வட்ட எல்லையே. அவர்கள், கல்கியை விளாசி அக்காலத்தில், புதுமைப்பித்தன் எழுதிய “ரஸ மட்டம்” கட்டுரையை வாசிப்பது நல்லது.

தமிழில் இறக்குமதி செய்யப்பட்ட பின் – அமைப்பியல் விமர்சனம்  ரசனாவாத இலக்கிய நுகர்வின்  சாதகமான சில அணுகுமுறைகளையும் சேர்த்து வீழ்த்தி “குடலாபரேஷன்”  அணுகுமுறையாகத் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் வைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. அத்தகைய “குடலாபரேஷன்” அணுகுமுறையின் எதிர் விளைவாகத்தான் ஜெயமோகன் இன்று மேலும் வலுவாக ரசனாவாத இலக்கிய அணுகுமுறையை முன்வைப்பதும் அதற்கு வாசகர்களிடத்தில் வரவேற்பு கிடைப்பதும். புதுமைப்பித்தனின் “ரஸ மட்டம்” கட்டுரையின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு, ரசனாவாத அணுகுமுறையின் சில சாதக அம்சங்களையும் எடுத்துக் கொண்டு, பின் அமைப்பியல் நோக்கை மறுவரையறை செய்ய வேண்டிய தேவை இன்னமும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கிறது என்பது எனது எண்ணம்.

ஜெயமோகனின் கட்டுரையில் அவரது வழமையான திராவிட இயக்க எதிர்ப்பு காழ்ப்புணர்வு அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கிறது. அதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை. இதில் சப் – டெக்ஸ்டாக, திராவிட இயக்கத்து கருத்தியலாளர்கள், செயல்பாட்டாளர்கள் தலித்துகளுக்கு எதிரானவர்கள் என்ற விஷ ஊசியும் ஏற்றப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு நைச்சியமான ஜால்ராவும் அடிக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக, ஜெயமோகனின் ரசனாவாத இலக்கிய அணுகுமுறையும் வாசகர்களிடத்தில் அவர் கோரும் கேள்விக்கு இடமற்ற பற்றுறுதியும் (அடிமைத்தனம் என்று சொன்னால் பலருக்கு அதீதமாகப் படலாம் என்பதால் பற்றுறுதி என்கிறேன்) எத்தகைய வகைப்பட்டது என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு எடுத்துக் காட்டைத் தருவது உதவியாக இருக்கும்.

ஜெயமோகன் காழ்ப்பைக் கக்கும் அதே திராவிட இயக்கத்தைச் சேர்ந்த,  – குறிப்பாக திமுக சாய்வு கொண்ட, ஒரு தமிழ் இலக்கண ஆய்வாளரின் நூலில் இருந்து இந்த விவரிப்பைச் சற்று எளிமைப்படுத்தித் தருகிறேன். நூலாகப்பட்டது, திரு. மு. வை. அரவிந்தன் அவர்கள் எழுதிய ”உரையாசிரியர்கள்”.

தமிழ் இலக்கண நூல்களுக்கு உரை நூல்கள் எழுதுவது தமிழ் இலக்கண மரபின் நீண்ட வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு காரணிகளால் (சமணத்தின் மீதான தாக்குதல், தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் நிகழ்ந்த மாற்றங்கள், மேலும் பல காரணிகள்) அவசியமாக இருந்தது. அவ்வாறு எழுதப்பட்ட உரை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படுவது (உண்மை இல்லை எனினும்) ”இறையனார் அகப்பொருள்” என அழைக்கப்பெறும் உரை நூல். இறைவனால் எழுதப்பட்ட நூல் என்பது தொன்மம் (திருவிளையாடல் தருமிக்கு மண்டபத்தில் பாட்டெழுதிக் கொடுத்துவிட்டு இறைவனாரான சோமசுந்தரக் கடவுள் செய்த அடுத்த வேலை இந்த உரையை எழுதியதாம்).

அவ்வுரைக்கு உரை எழுதப்பட்டது குறித்தும் ஒரு தொன்மக் கதை இருக்கிறது.

பாண்டிய மன்னனின் வேண்டுதலுக்கு இணங்கி இறைவனார் சோமசுந்தரக் கடவுளானவர், “அகப்பொருள்” உரையை எழுதிக் கொடுத்த பிறகு, அதற்கு ஒரு சிறந்த உரையை எழுதித் தருமாறு, பாண்டிய மன்னன் தனது புலவர்களிடத்தில் வேண்டினான். அவன் வேண்டுதலுக்கு இணங்கி சங்கப் புலவர்கள் யாவரும் ஆளுக்கொரு உரை எழுதினர். ஆனால், அவற்றுள் எது சிறந்த உரை என்ற கருத்தொருமிப்பு உருவாகவில்லை. அவரவர் உரையே சிறந்தது என்று ஒவ்வொருவரும் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, இறைவனாகப்பட்டவர், அசிரீரியாக பின்வருமாறு கூறுகிறார். அவ்வூர் உப்பூரி குடிகிழார் என்பவருக்கு உருத்திரசன்மன் என்று ஒரு மகன் இருக்கிறான். செவி கேளாத ஊமை அவன் (பேசவியலாமையோடு கேட்கும் திறனும் இருக்காது). குமார தெய்வத்தின் அவதாரம். ஒரு சாபத்தினால் இவ்வாறு பிறந்திருக்கிறான். அவனை தீர்ப்பாசனத்தில் அமர வைத்து, அவன் முன்பாக, ஒவ்வொரு புலவரும் தமது உரையை வாசிக்கட்டும். சிறந்த உரை வாசிக்கப்படும் போது, அவன் மெய்சிலிர்த்து குடம் குடமாய் கண்ணீர் வார்ப்பான். சாதா உரை என்றால் உணர்ச்சியற்று இருப்பான். அதிலிருந்து கண்டு கொள்க என்கிறார்.

அவ்வாறே மன்னனும் புலவர்களும் செய்கின்றனர்.

புலவர்கள் ஒவ்வொருவராக தமது உரைகளை வாசிக்க, மதுரை மருதனிளநாகனார் எனும் புலவர் தமது உரையை வாசிக்கும்போது, அந்த ஊமைச் சிறுவன், சில இடங்களில் மெய் சிலிர்த்து கண்ணீர் விடுகிறான். நக்கீரனார் தமது உரையை வாசிக்கும்போது, ஒவ்வொரு பதந்தோறும் கண்ணீர் வார்த்து மெய் சிலிர்க்கிறான். நக்கீரனார் உரையே சிறந்த உரை என்று தேர்வு செய்யப்படுகிறது.

இத்தொன்மம், ஆசிரியன் – உரையாசிரியன் (விமர்சகர்) – வாசகன் என்ற எழுத்து – வாசகத் தொடர்ச்சி நிலை குறித்து நூற்றாண்டுகளாக தமிழ் இலக்கிய மரபில் நிலவி வந்திருக்கும் – ஆதிக்கத்தில் இருந்திருக்கும் கருத்து நிலையைக் குறிப்பால் உணர்த்துகிறது என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஆசிரியனின் எழுத்தை சாதாரண வாசகனால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாது. அதை விளக்கப்படுத்தும் பணி உரை ஆசிரியனுக்குரியது (விமர்சகருக்கு). உரை ஆசிரியனால், விளக்கபெறும் பிரதியை காது கேளாத, வாய் பேச இயலாத வாசகன் உணர்ந்து, குடம் குடமாகக் கண்ணீர் உகுத்து, மெய்சிலிர்த்து உணர்ச்சிவயமாக நுகர வேண்டும்.

இம்மரபின் தொடர்ச்சிதான் டிகேசி-யும் அவரது வாரிசான கல்கி-யும். இவர்களின் தற்காலத்தைய அவதாரம்தான் ஜெயமோகன். ஒரு சிறிய கூடுதல் விஷயம்  என்னவென்றால், ஜெயமோகன் தனது “படைப்பு”கள் மட்டுமல்லாது பிறரின் படைப்புகளும் இப்படியாகத்தான் வாசிக்கப்பட வேண்டும் என்று “உரை” வாசிக்கும் வேலையையும் தனது பிறவி மோட்சக் கடமையாக மேற்கொண்டிருக்கிறார் என்பதுவே.

தமிழில் அட்டை காப்பியாக இறக்குமதி செய்யப்பட்ட ”குடலாபரேஷன்” அமைப்பியல் மற்றும் பின் – அமைப்பியல் எழுத்தாளர்களுமே இவ்வகையான போக்கில் இருந்து விடுபட்டவர்கள் அல்லர் என்பதற்கு எடுத்துக்காட்டு தமிழவன் தனது நாவலுக்கு தானே எழுதிய “பொழிப்புரை”.

ஜெயமோகனின் குரூரமான ரசனாவாத இலக்கிய அணுகுமுறையில் இருந்து விடுபடுவதோடு, அட்டை காப்பி பின் – அமைப்பியல் அணுகுமுறையின் “குடலாபரேஷன்” ஆய்வுகளில் இருந்தும் விடுபடவேண்டும் என்ற காத்திரமான அவசியம் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

மேற்கத்திய அறிவுச்சூழலில் உருவான கருத்தமைவுகளை உள்வாங்கிக் கொண்டு நமது சூழலுக்குப் பொருத்தமான கருத்தமைவுகளை உருவாக்கவேண்டிய மிகக்கடினமான பணியின் ஒரு கண்ணி அது.

Pleasure of the text – என்ற கருத்தாக்கம் முன்வைக்கும்  எழுத்துடனான வாசக உறவுக்கும் ரசனாவாத இலக்கிய அணுகுமுறை முன்வைக்கும் உணர்ச்சித் ததும்பலுக்கும் பல மைல்கள் இடைவெளி உண்டு. அது ஜெயமோகனுக்குப் புரியவே புரியாது. பின் – அமைப்பியல் விமர்சனத்தை காப்பி – பேஸ்ட் செய்த அதிநவீன மேதாவிகளுக்கும் பிடிபடவில்லை.  அதனால்தான் அவர்கள் ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” நாவல் நோபல் பரிசு பெறத்தக்கது என்று பாராட்டினார்கள். இன்னும் பல கழிவுகளையும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடலாபரேஷனும் செய்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் புனைவு எழுத்துகளுக்கு தாமே நோட்ஸுகளும் அருளிக் கொண்டிருக்கிறார்கள்.

———

குறிப்பு: திமுகவின் அரசியல் நிலைப்பாடுகளின் சந்தர்ப்பவாதம், திருகுத்தனம் குறித்தான எனது விமர்சனங்கள், இங்கு குறித்திருப்பவற்றால் சமரசம் செய்து கொள்ளப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படக்கூடாது.

பிரபாகரன் பாசிஸ்ட்டு, ரோகண புரட்சியாளன்!

குறிப்பு: இரண்டு வருடங்களுக்கு முன்பாக, அன்றைய பணி நிமித்தச் சூழலின் நிர்ப்பந்தங்களின் காரணமாக, “நடராசன்” என்ற பெயரில் எழுதியது. 

ஒரு வெட்டி வேலையைச் செய்ய உட்கார்ந்து எத்தனை மணி நேரம் வெட்டியாகப் போனது என்று கணக்கிட்டுப் பார்க்கிறேன். நேரத்தைக் கணக்கிடச் செலவிட்ட 24 மணித்துளிகளும் சேர்த்து பாட்டா செருப்பு விலையைப் போல முழுதாக 18 மணி நேரம் 59 மணித்துளிகள்.

இத்தனை மணி நேரம் வெட்டியாக வேலை செய்து எழுதிய வெட்டிக் கட்டுரையை வெட்டியோ வெட்டாமலோ பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும் உங்கள் இஷ்டம். “இணைய தள வெட்டிப் பத்திரிகைகளில் வெட்டிப் பயல்கள் எழுதும் கட்டுரைகளுக்கெல்லாம், வெட்டிப் பிடுங்கிக் களையெடுத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்ற பதிலே இந்தக் கட்டுரைக்கும் கிடைக்கும் என்று மட்டும் வெட்டொன்று துண்டொன்றாக சொல்லி வைத்து விடுகிறேன் அல்லது “தோழர்கள் இது போன்ற அவதூறுகளை எதிர்த்து போராட வேண்டும்” என்ற அறைகூவல் விடப்படலாம். அல்லது இங்கே தப்பித் தவறி விழும் ஓரிரு வெட்டி வார்த்தைகளை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு வெட்டிச் சண்டைக்கிழுத்து ஓரிரு புத்தி சிகாமணிகள் குதிக்கவும் செய்யலாம்.

புலம் பெயர்ந்து அகதியாக வாழும் நாட்டில் குடியுரிமை கூட பெறாமல், வேலை வெட்டி இல்லாமல், அரசியலே மூச்சாக வாழ்வதாக வெட்டித் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு இலக்கியவாதி (ஆனால், அவருக்கு உலகின் பல நாடுகளுக்கும் இஷ்டப்படி சென்று வர விசாவும் பணமும் கொடுக்கும் ஆபீசர்களும் புரவலவர்களும் எங்கே கிடைக்கிறார்கள் என்ற மர்மம் மட்டும் தொங்கிக் கொண்டே இருக்கிறது) எழுதிய சிறுகதைத் தொகுப்பிற்கும், அவர் அடித்த ஒரு வெட்டி அரசியல் விவாதப் புத்தகத்திற்கும் இன்று மாலை நடக்க இருக்கும் விமர்சன அரங்கில் கலந்து கொள்ளவோ கட்டுரை வாசிக்க அழைக்கப்படவோ வாய்ப்பே இல்லாத ஒரு வெட்டிப் பயல் எழுதும் விமர்சனங்களடங்கிய முன்குறிப்பு இது.

வாசிக்க நேர்ந்த அந்த சிறுகதை தொகுப்பின் தலைப்பு “எம்.ஜி.ஆர். கொலை வழக்கு”. எழுதிய இலக்கியவாதி ஷோபா சக்தி.

இலக்கியத்தில் யதார்த்தவாதம், சோஷலிச யதார்த்தவாதம், பெண்ணிய இலக்கியம், தலித் இலக்கியம், ஒடுக்கப்பட்டோர் இலக்கியம் என்று வகைப்பாடுகள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால், புலி எதிர்ப்பு இலக்கியம் என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கிறீர்களா? அப்படியொரு புதிய இலக்கிய வகைப்பாட்டை தன்னந்தனியனாக நின்று தோற்றுவித்து வளர்த்த ஒர்ர்ரே இலக்கியவாதி என்ற பெருமைக்குரியவர் என இலக்கிய வரலாற்றுப் புத்தகங்கள் வருங்காலத்தில் ஷோபாசக்தியைப் பெருமையாகக் குறிப்பிடலாம்.

பத்து சிறுகதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பை ஒரே மூச்சில் வாசித்து முடித்ததும் எழுந்த முதல் மனப்பதிவு இதுதான். “ரம்ழான்”, ”வெள்ளிக்கிழமை”, “திரு. மூடுலிங்க” இந்த மூன்று சிறுகதைகள் தவிர்த்து தொகுப்பில் உள்ள மற்ற ஏழு சிறுகதைகளும் ஷோபசக்தி அரசியல் களத்திலே செய்து வரும் புலி எதிர்ப்பு பிரச்சாரத்தின் இலக்கியச் சாயம் பூசிக் கொண்ட கதைகள் என்பதற்கு மேலாக எந்தத் தகுதியும் உடையவை அல்ல. மேலே சொன்ன மூன்று கதைகளை உத்தி பரிசோதனைக் கதைகள் என்ற நோக்கில் பார்த்தாலும் அசட்டுச் சிறுபிள்ளைத்தனமான பரிசோதனைகள் என்பதற்கு மேலாக எழுபவையும் அல்ல. மற்ற ஏழும் விஷம் தடவிய இனிப்பு.

மொத்த தொகுப்பின் நாடித் துடிப்பையும் உரத்து ஒலிக்கும் கதை ”பரபாஸ்”. நாகரீகத்தின் வாசனை படாத ஒரு காலத்திலே ஒரே ஒரு ஊர், அலைக்கழிக்கும் வாழ்க்கை இல்லாது சோம்பித் திரியும் மக்கள், அவர்களுக்கு ஒரே ஒரு பிரச்சினை, அந்த ஊரிலே ஒரு சிறு திருடன். சின்னக் கள்ளனின் சிறு திருட்டுகளை கையும் களவுமாக பிடித்தாலும் மன்னித்து விட்டுவிடும் பெருந்தன்மை மிக்க கிராமத்து மக்கள்.

நாகரீகத்தின் வாசனை எட்டிப் பார்க்கும் காலத்தில் இன்னொரு திருடன். சற்றே பெரிய திருட்டுகள். பிரச்சினை இப்போது போலீசுக்குப் போகிறது. கள்ளனிடம் பறிகொடுத்ததைக் காட்டிலும் போலீசுக்கு அதிகமாகப் பறிகொடுத்து வாய்மூடி மௌனியாக கைகட்டி நிற்கும் கிராமம்.

அடுத்த வருகை ”இயக்கம்”. இயக்கத்தின் வருகையோடு திருடனின் குடும்பமே தற்கொலை செய்துகொள்கிறது. கிராமத்தின் குறியீடாக நிற்கும் ஆலயமே களவுக்கு உள்ளாகிறது. கிராமத்தின் ஆன்மா ஊரைவிட்டே போய்விடுகிறது. கதையின் தொடக்கத்தில் விவரிக்கப்படும் பொட்டல் காடாக அழிகிறது.

சந்தியாப்புலம், சந்தியோகுமையர் தேவாலயம், ஒரு மாய யதார்த்தவாதம் போலத் தொனிக்கும் அதிகாலைப் பொழுதுகளில் புரவியில் வலம் வரும் சந்தியோகுமையர் என்ற கிராமத்து மக்களின் ஐதீகம், கள்ளக் கபிரியல் என்ற வயதான நோஞ்சான் சிறு திருடன், வில்லியம் என்ற நாகரீக – படிப்பு வாசனை கிட்டிய சற்றே பெரிய கள்ளன், இவர்களைச் சுற்றிய ஒரு கதைப் புலம், வட்டார வழக்கு, இத்யாதி இத்யாதியான இலக்கியப் பூச்சுகள்.

சிறு திருட்டு பெரிய திருட்டாகும் போதோ, போலீஸ் வந்து மிரட்டிப் பறித்துக் கொண்டு போகும்போதோ ஊரை விட்டுப் போகாத கிராமத்தின் ஆன்மா, இயக்கம் வந்தபின் ஊரை விட்டு கடலுக்குள் கரைந்துவிடுகிறது.

இலக்கிய இனிப்பு தடவி ஷோபாசக்தி கொடுக்கும் மெசேஜ் இதுதான்.

இதிலே ஷோபாசக்தி நாசூக்காக வைக்கும் விஷம் என்ன?

இயக்கம் எதிலே வருகிறது தெரியுமோ? வெள்ளை வேனில் வருகிறதாம். இதுதான் விஷம். ஈழத்து நடப்புகள் அறிந்தோருக்குத் தெரியும் வெள்ளை வேனில் வருவோர் யாரென்று. சிங்க‌ள‌ பாசிச‌ அர‌சுக்கு எதிரானவ‌ர்க‌ளுக்கு முடிவு க‌ட்ட‌ பிள்ளையான் அனுப்பும் வேனை, இய‌க்க‌த்தின் வேனாக‌ திரித்துக் காட்டுகிறார்.

ஷோபாசக்தியின் கதைகளின் நாடித்துடிப்பு இதுதான்.

இடையிலே ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் இன்னொரு சிறு நாடியும் இருக்கிறது. அதே கதையில் வரும் ஒரு விவரிப்பில் அது பல் இளித்துக் காட்டி நிற்கவும் செய்கிறது. அது பின்வருமாறு:

“கபிரியலுக்கு எழுபது வயதிருக்கும். நல்ல வாட்டசாட்டமான உடலும் தீர்க்கமான கண்களும் கம்பீரமான நடையும் வெண்ணிறத் தாடியுமாக ஆள் பார்ப்பதற்கு சுந்தர ராமசாமி போலவேயிருப்பார்.”

கதைப் புலத்திற்கு ஒட்டு சம்பந்தமில்லாத சுந்தர ராமசாமி எதற்குக் கதைக்குள் வருகிறார்? கபிரியல் ஒரு காமெடி காரக்டர். காமெடி காரக்டரோடு முடிச்சு போட்டு சுந்தர ராமசாமியை ஒரு இடி இடித்து செல்கிறாராம் புத்திசாலி கதை சொல்லி ஷோபாசக்தி. இதை “பகிடி பாருங்கோ பகிடி பாருங்கோ” என்று கூவிக் கெக்கலித்துச் சிரித்து அல்ப சந்தோஷம் கொள்ள ஒரு சிறு கும்பல். பரம சந்தோஷம் கொள்வார் அ. மார்க்ஸ்.

ஈழப் புலம் பெயர் இலக்கியப் பரப்பில் ஷோபாசக்தி அவிழ்த்துக் கொட்டியுள்ள கதைப்புலக் குப்பையின் சாரம் இதுதான்: ”இயக்கத்தின்” (விடுதலைப் புலிகள்) மீதான சூசகமான பழிப்புகள், ஈழக் கள அரசியல் யதார்த்தத்திற்குப் புறம்பான அப்பட்டமான திரிப்புச் செய்திகள், வரலாற்றுப் பொய்கள். தான் சார்ந்த இலக்கிய கேம்பிற்கு எதிரான கேம்ப் மீதான பழிப்புக் காட்டல்கள்.

இந்தச் சிறுகதை தொகுப்பில் உள்ள பிற கதைகளையும் எடுத்து விலாவாரியாக குடலாபரேஷன் செய்து இதைக் காட்ட முடியும். ஷோபாசக்தியின் மொத்த இலக்கிய output ஐயும் எடுத்து மொத்தத்தையும் இது போல குடலாபரேஷன் செய்து காட்டவும் முடியும்.

ஷோபாசக்தி போடும் ”மொக்குப் போடு” style –ல் சொல்வதென்றால் “It is just a beginning” என்று இப்போதைக்கு சொல்லி வைப்போம்.

ஈழக் கள அரசியல் நடைமுறை யதார்த்தத்திற்குப் புறம்பான ஷோபாசக்தியின் ஒரு திரித்தலைச் சுட்டிக் காட்டினேன் (வெள்ளை வேன் பற்றிய குறிப்பு). வரலாற்றுத் திரிப்பிற்கு இரு உதாரணங்கள்.

தொகுப்பின் முதல் சிறுகதை “Cross Fire”. ஒரு அரசியல் படுகொலை நிமித்தமான நினைவஞ்சலிக் கூட்டத்தில் பேசும் இடதுசாரி சிங்கள இதழாளரின் உரையாக நீளும் கதை. இரண்டாம் பத்தியிலேயே விஷம் தோய்ந்த வரலாற்றுத் திரிபு. அந்த ‘இடதுசாரி’ சிங்கள இதழாளர் பேசுகிறார்:

“இங்கே பேசிய தோழர் ரகுநாதன் முஸ்லீம் மக்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய இனத்தில் பிறந்ததற்குத் தான் வெட்கப்படுவதாகச் சொன்னார். அவரை அடியொற்றிச் சொன்னால் பெரும்பான்மைச் சிங்கள இனத்தில் பிறந்ததற்காக நான் குற்றவுணர்வு கொள்கிறேன்.”

எவ்வளவு பிரமாதமான அரசியல் நிலைப்பாடு என்று இடதுசாரிப் போக்குள்ள வாசகர்களுக்கு எடுத்த எடுப்பில் தோன்றும். ஷோபாசக்தியின் ’வெற்றி’யின் ரகசியமும் அதுதான். ஒரு சரியான அரசியல் நிலைப்பாட்டை வாய்ப்பாடாக கற்றுவைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல வரலாற்றைத் திரித்து ஒரு கதைக்களனை வடித்துக் கொள்வது.

இங்கே திரிக்கப்பட்டுள்ள வரலாற்றுக் களன் என்ன?

சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்குகிறார்கள். தமிழர்கள் இஸ்லாமிய மக்களை ஒடுக்குகிறார்கள். இது சரிதானே?

சிங்கள இனவெறி முஸ்லிம் மக்களை ஒடுக்கவில்லை என்ற பொருள் இதில் ஒளிந்து கொண்டிருப்பதுதான் விஷம் தடவிய வரலாற்றுத் திரிப்பு. அதை ஒரு சிங்கள இடதுசாரி கதாபாத்திரத்தின் கூற்றாகச் சொல்வது இன்னும் நுட்பமான திரிப்பு.

கிழக்கில் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பகைப்புலத்தை சிங்கள இனவெறி அரசு திட்டமிட்டு வளர்த்துப் பரப்பியது ஒரு தனிக்கதை. இஸ்லாமியர்கள் ஏன் அதற்குப் பலியானார்கள் என்ற கேள்வி இதில் முக்கியமானது.

1915 –ல் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு தென்னிலங்கை முழுதும் பரவலாக அரங்கேற்றப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் பெரும் கலவரங்கள் இலங்கை முஸ்லிம் அரசியல் போக்கில் தீர்மானகரமான ஒரு திருப்பு முனையாக அமைந்த வரலாற்று நிகழ்வு. சிங்கள இனவெறியர்களின் மூர்க்கத்தனமான தாக்குதலால் நிலைகுலைந்து போன தென்னிலங்கை முஸ்லீம்கள் அந்த வரலாற்று நிகழ்விலிருந்து எடுத்துக் கொண்ட இரு பாடங்கள் – எக்காரணம் கொண்டும் ஆதிக்கத்தில் இருக்கும் சிங்கள இனத்தவரைப் பகைத்துக் கொள்ளக் கூடாது; அரசு எந்திரத்தைக் கைக்குள் வைத்திருக்கும் தரப்பை எக்காரணம் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது.

கலவரத்தைத் தொடர்ந்த ஆண்டுகளில் தென்னிலங்கை இஸ்லாமியச் சமூகம் பிரிட்டிஷ் அரசின் இருப்பு மட்டுமே தனக்குப் பாதுகாப்பானது என்று உணர்ந்து காலனிய அரசோடு நெருக்கமாக தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டது. இலங்கைக்கு அரசியல் சுதந்திரம் கிடைத்த கையோடு அரசு எந்திரம் சிங்களப் பெரும்பான்மையரின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. சிங்கள இனவெறியின் மூர்க்கத்தனத்தை 1915 -ல் அடிபட்டு உணர்ந்திருந்த தென்னிலங்கை இஸ்லாமியச் சமூகத்தினர் இன்னொரு சிறுபான்மைச் சமூகமான தமிழர்களின் அரசியலோடு அடையாளப்படுத்திக் கொள்வது மீண்டும் சிங்கள இனவெறியின் மூர்க்கத்தனத்திற்கு பலியாவது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். அச்சமயம் யாழ் மைய அரசியலாகவிருந்த தமிழர் அரசியல் கோரிக்கைகளோடு முறித்துக் கொண்டு சிங்கள இனவெறியர்களின் கட்டுக்குள் வந்திருந்த அரச நலன்களோடு அய்க்கியமாயினர்.

தென்னிலங்கை இஸ்லாமியச் சமூகம் கிழக்கு முஸ்லீம்களையோ யாழ்ப்பாண முஸ்லீம்களையோ தமது சமூகத்தினராக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவும் இல்லை முயற்சிக்கவும் இல்லை. தமக்கு இணையானவராகக் கூட கருதவில்லை. இலங்கை முஸ்லீம்கள் என்று அவர்கள் கட்டமைத்த அடையாள அரசியல் கிழக்கு மற்றும் யாழ் முஸ்லீம்களை முற்றாக விலக்கி வைத்த அடையாளமாகவே இருந்தது.

சிங்கள இனவெறி நலன்களுக்கும் தமிழர் நலன்களுக்கும் இடையிலான மோதல்கள் கூர்மையடைந்த வரலாற்றுப் போக்கில் சிங்கள அரசு கிழக்கில் இஸ்லாமியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பகைப்புலத்தை திட்டமிட்டு வளர்த்ததற்கும் இத்தென்னிலங்கை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஊக்கமாகப் பங்குபெற்றதற்கு ஈழப் போராட்ட வரலாற்றில் நிரம்ப சான்றுகள் உண்டு.

இந்த வரலாற்றுப் பின்புலத்தை மறைத்து விட்டு, இஸ்லாமியர்கள் மீது கொலைவெறியோடு பாய்ந்த குதறிய சிங்கள இனவெறி குறித்து மௌனிக்கும் ஒரு சிங்கள ’இடதுசாரி’ கதாபாத்திரத்தின் ஊடாக,  தமிழர்கள் முஸ்லீம்களை ஒடுக்குகிறார்கள் என்று சொல்ல வைப்பது அரசியல் களவானித்தனம் என்றல்லாமல் எப்படிச் சொல்வது!

புத்தகத்தின் சமர்ப்பண வாசகத்திலேயே இந்தக் கயவாளித்தனம் முகத்தில் அறைந்து நிற்கிறது.

“தோற்றுப்போன புரட்சியாளன் ரோகண விஜேவீரவிற்கு” நூலை காணிக்கை செய்திருக்கிறார் ஷோபாசக்தி.

பிரபாகரன் பாசிஸ்ட், ரோகண விஜேவீர புரட்சியாளன்!

இலங்கை அரசியலின் நுட்பங்கள் அறியாதவர்களுக்கு இங்கு சில வரலாற்றுத்  தகவல்கள் அவசியம்.

60 –களின் மத்தியில் சண்முகதாசனின் இயக்கத்தில் இருந்து பிரிந்த ரோகண விஜேவீர JVP இயக்கத்தைத் தொடங்குகிறார். சிங்கள ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கத் தொடங்கி 1971 –ல் பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களைப் பலிகொண்ட அரைவேக்காட்டு ஆயுத எழுச்சி நிகழ வித்திடுகிறார் (அப்பாவித் தமிழ் மக்களை பலிகொண்ட கொலைவெறி ஆயுதப் போராட்டத்தை நடத்திய கொடூரன் பிரபாகரன் என்று வசைபாடுவதைப் போல ரோகண விஜேவீரவை ஷோபாசக்தி பழிக்கவில்லை; புரட்சியாளன் என்கிறார்).

1977 வரை சிறைவாசம். இக்காலத்தில் JVP -யின் பொதுச் செயலாளராக இருந்த Lionel  Bopage –ன் செல்வாக்கில் தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கை என்ற நிலைப்பாட்டை அரைமனதோடு ஏற்றுக்கொள்கிறார். 1982 தேர்தலையொட்டி தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை அங்கீகரிப்பதாக முன்வைத்து JVP தமிழர் பகுதிகளிலும் போட்டியிடுகிறது.

தேர்தலில் படுதோல்வி அடையும் ரோகண விஜேவீர தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்ததால்தான் சிங்களவர்களிடையே தாம் செல்வாக்கு இழந்ததாக முடிவுக்கு வருகிறார். தமிழர்களின் கோரிக்கை மீதான JVP யின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும், அதை மறுக்கும் அறிக்கையை கட்சிக்குள் சுற்றுக்கு விடுகிறார். 1986 –ல் இந்த சுற்றறிக்கை “Solutions to Tamil Eelam Struggle” என்ற நூலாக வருகிறது. அதில் ஈழ விடுதலைக் கோரிக்கை இலங்கையைத் துண்டாட அமெரிக்கா செய்யும் சதி என்று காரணத்தை முன்வைத்து ஈழ விடுதலையை மறுக்கிறார். சிங்கள இனவெறி நிலைப்பாட்டைத் தழுவுகிறார். ஜேவிபியின் இன்றைய‌ இன‌வாத‌ அர‌சிய‌லுக்கு மூல‌வித்து ரோக‌ண‌தான்.

1989 –ல் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்ட எழுச்சியைத் தொடங்கிய ரோகண விஜேவீர சிங்கள அரசால் படுகொலை செய்யப்படுகிறார்.

இறுதிவரை களத்தில் நின்று தன் பெண்டு பிள்ளைகளையெல்லாம் பலிகொடுத்தும் உறுதி குலையாமல் போராடிய பிரபாகரன் ஷோபாசக்திக்கு பாசிஸ்ட். தன் வாழ்நாளிலேயே சிங்கள இனவெறி நிலைப்பாட்டை எடுத்த ரோகண விஜேவீரே ஷோபாசக்திக்கு புரட்சியாளன். இனவெறி நிலைப்பாடு கொண்டவருக்கு இலக்கியம் சமர்ப்பணம்!

ஷோபாசக்தி அடிக்கடி விடும் அதிரடி அரசியல் ஸ்டேட்மெண்டுகளில் மட்டுமல்ல இலக்கியம் என்ற பெயரில் கழித்திருக்கும் அஜீரணக் குப்பையிலும் இதே மொக்கு அரசியலே ஒளிந்திருக்கிறது.

சான்றுகள்:

1.http://issues.lines-magazine.org/Art_May03/bopagefull.htm

2.Sinusoidal nature of the JVP Policy on the National Question

3.Feature article: The JVP’s campaign among the Tamils, 1977-1982 by Lionel Bopage who was a former General Secretary of the JVP

4.Rohana Wijeweera’s killing – still a mystery By K T Rajasingham

5. “Unmooring Identity : The Antinomies of Elite Muslim Self-representation in Modern Sri Lanka”, Qadri Ismail (in) Unmaking the Nation: The Politics of Identity and History in Modern Sri Lanka, Edited by Pradeep Jeganathan & Qadri Ismail, Social Scientist’s Association, Colombo, 1995

6. தொடர்புடைய மற்றுமொரு பதிவு: திருவிளையாடல் தருமி மற்றும் பிலால் முகம்மது ’விவாத’ டெக்னிக்குகள்

நன்றி: கீற்று

ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் அவுட், டாக்டர் சூப்பர்! … 1

நண்பர் பைத்தியக்காரன் நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தரின் கவிதையை முன்வைத்து வாசிப்பு – மொழி – அதிகாரம் இவற்றுக்கிடையிலான உறவுகளை விளக்க முற்பட்டு எழுதிய பதிவிற்கு பின்னூட்டமிடலாம் என்று நினைத்து உட்கார்ந்தேன். ஏற்கனவே சில நாட்களுக்கு முன் எழுதி அனுப்பிய பின்னூட்டத்தை தனிப்பதிவாக வெளியிட நேர்ந்த ‘துர்பாக்கியத்தை’ அவருக்கு மீண்டும் தந்துவிட வேண்டாம் என்று தோன்ற, இந்தப் பதிவு.

பைத்தியக்காரன் தனது கருத்துக்களை இரண்டு பகுதிகளாக தெளிவாகப் பிரித்து, முதல் பகுதியில் மொழியின் அமைப்பு – அர்த்தங்கள் உருவாகும் விதம் – அதிகாரம் இவற்றுக்கிடையிலான உறவுகளைப் பற்றி பொதுவான குறிப்புகளைத் தந்துவிட்டு, இரண்டாவது பகுதியில் சுந்தரின் கவிதை பற்றியும் எழுதியிருப்பதை வாசிப்பவர் எவரும் எளிதாக உணர்ந்திருக்கலாம்.

முதற்பகுதியிலும் எனக்கு மாறுபட்ட சில கருத்துக்கள் உண்டு. மொழியின் அமைப்பு பற்றி (வித்தியாசங்களின் ஊடாக உருப்பெறுவதே மொழி) பெரிய கருத்து மாறுபாடு ஏதும் இல்லை. மொழியின் இயக்கம் பற்றிய அவரது சிதறலான குறிப்புகளில் மிகுந்த மாறுபாடு இருக்கிறது. அவற்றை சந்தர்ப்பம் வாய்க்கும்போது பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

இரண்டாவது பகுதியில் சுந்தரின் கவிதையை எடுத்துக்கொண்டு, ஒரு ‘பன்முகப்பட்ட’ வாசிப்பை எப்படி நிகழ்த்திக் காட்டலாம் என்று அவர் முன்வைத்திருக்கும் அடுக்கடுக்கான கேள்விகளின் மீது மட்டும் தற்போதைக்கு.

பைத்தியக்காரன் அடுக்கடுக்காக வைத்திருக்கும் கேள்விகளுக்குள் நான் நுழையப்போவதில்லை. “பதிவின் இந்தத் தலைப்பையே பலவிதமாக வாசிக்கலாம்” என்று தொடங்கி சுந்தரின் கவிதை வரிகளை சில தொகுப்புகளாகப் பிரித்து அவற்றுக்கு எப்படியெல்லாம் ‘பலவிதமான’ அர்த்தங்கள் இருக்கலாம் என்று அவர் அடுக்குவதன் அடிப்படையைக் கேள்விக்கு உட்படுத்துவதே இங்கு செய்ய விழைவது.

(அவர் எழுப்பிய சில கேள்விகளே தவறானவை என்பதை சிலர் குறிப்பிட்டுள்ளதும் மிகச் சரியே. எ – கா: “Cum for me, I am on pills” I understand that she has taken contraceptive pills and he can cum inside her without worrying about pregnancy! என்று “சும்மா” என்பவரும் “tamil” என்பவரும் சுட்டிக் காட்டியுள்ளதைக் குறிப்பிடலாம்.)

பைத்தியக்காரன் தனது கட்டுரையில் சுந்தரின் கவிதைக்குள் புகுமுன்பாக, முதல் பகுதியை முடிக்கும் கடைசிப் பத்தியை எடுத்துக் கொள்வோம்.

“பன்முக வாசிப்பு சாத்தியப்பட வேண்டுமாயின், அதன் அர்த்தங்கள் இதுதான் என்று முத்திரை குத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.”

இதில் பெரிய பிரச்சினைகள் இல்லை. ‘பன்முக வாசிப்பு’ என்பதை எதற்காகச் செய்து பார்க்க வேண்டும் என்ற கேள்வியைத் தவிர. அதற்குப் பிறகு வருவோம்.

“ஒரு கவிதையை புரிந்துக் கொள்ள அதை கவிஞனின் கற்பனாரீதியான எழுச்சியாகவோ அதன் உரைநடை அளவிலான வாக்கிய அலகுகளாகப் பிரித்தோ இனம் காணக்கூடாது. இந்த இரண்டுமே குறுகலான வாசிப்புக்கே இட்டுச் செல்லும்.”

முதல் வரி, “ஆசிரியன் மறைந்துவிட்டான்” (death of the author) என்ற கருத்தாக்கத்தோடு தொடர்புடையது. ஆசிரியனின் ‘கற்பனையில் உருவான’ படைப்புக்கு அவன் கொள்ளும் அர்த்தம் மட்டுமே அறுதியானதல்ல என்று வலியுறுத்துவது. மாறுபாடில்லை. சில நுணுக்கமான வித்தியாசங்கள் உண்டு. அதற்கும் வருகிறேன்.

இரண்டாவது வரியில் முழு உடன்பாடு. மொழியின் இலக்கண அமைப்பு அதன் வாக்கிய அமைப்பிலேயே எவ்வாறாக subject x predicate என்ற துருவங்களை உருவாக்கி “நான்” என்று சொல்லப்படும் ஒற்றைத் தன்னிலையைக் கொண்டிருக்கிறது, அதற்கு நாம் எவ்வாறு பழக்கமாகி அடிமைத் தன்னிலைகளை வரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதோடு நேரடியாகத் தொடர்புடையது.

இந்த இடத்தில் மேலே குறிப்பிட்டுள்ள முதல் வரியின் கருத்தமைவோடு பைத்தியக்காரனின் கட்டுரை முடியும் இறுதிப் பத்தியில் வரும் இந்த வரியை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அது பின்வருமாறு (இப்படிப் ‘பின்வருமாறு’ என்று எழுதுவதெல்லாம் எனக்குப் பிடிக்காத நடை. என்றாலும் வாசகர்களுடன் எத்துனை எளிதாக உறவுகொள்ள முடியுமோ அத்துனை முயற்சி செய்யவேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்):

“எனவேதான் சுந்தர் வார்த்தைக் கூட்டங்களில் மட்டுமே அக்கறை செலுத்துபவராக இல்லாமல், பல்வேறு கலைத்துறைகளின் தற்காலப் போக்குகளை பருண்மையாகப் பார்க்கும் போக்கை பெற்றிருப்பவராகவும் இருக்கிறார். எழுதப்படுகிற எழுத்து என்பதைத் தாண்டி, ஓவியம், கொலாஜ் கலந்த ஒரு புதிய அமைப்பைக் கவிதையிலும், உரைநடையிலும் இனம்காட்டுகிறார். இதன் மூலம் ஒற்றைத்தன்மையைத் தவிர்த்து, கவிதையின் சக்தியை, மொத்த கலாச்சார விடுதலைக்கான உந்துதலாக மாற்றுவதுடன், ஆதிக்கச் சக்திகளால் காயடிக்கப்பட்ட பொருளாக மாறிவிடமாலும் பார்த்துக் கொள்கிறார்.”

எனது கேள்வி இதுதான். “ஆசிரியன் இறந்துவிட்டான்” என்று ஒப்புக்கொண்டபின், ஆசிரியன் ஒரு பிரதியை – கவிதையை, சிறுகதையை, குறுநாவலை, நாவலை – எத்துனை கவனமாக, சிறப்பாக எழுதியிருக்கிறாள்/ன் என்று அதே மூச்சில் நாம் ஏன் பாராட்ட வேண்டும்? (primordial sentiment – என்று தமிழவனும், “மரணச் சடங்கின் பதிலீடு” என்று நாகார்ஜுனனும் சொல்லக்கூடுமோ?!)

விட்ட இடத்திற்கு மீண்டும் திரும்பினால் தொடரும் வரி, “கவிதையாக்கம் என்பது, வாசிப்பவனுக்குக் கவிதை தனது ஒலி – வார்த்தை அமைப்புகளைத் திறந்து காட்டுவதாக அமையவிருப்பதைப் பார்க்க வேண்டும்” என்று தொடர்கிறது.

மீண்டும் அதே பிரச்சினை. முந்தைய வரி “ஆசிரியன் செத்துவிட்டான்” என்ற கருத்தை வழிமொழிவதாக இருக்கிறது. கட்டுரையின் கடைசிப் பத்தியில் வரும் மேற்குறிப்பிட்ட பகுதி ஆசிரியனைப் பாராட்டுகிறது. இந்த வரியும் கவிஞனுக்கு அழுத்தத்தைக் குறைத்து ‘கவிதையாக்கம்” என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

தொடர்ந்து பத்தியின் கடைசி வரி, “இந்த அமைப்பு திறந்தவுடன் அர்த்தங்கள் முடிவாக ஏதுமின்றி, ஒன்றிலிருந்து மற்றதற்கான அமைப்பியல் மாற்றம் அடையவே வடிகோலுகின்றன. வாசிப்பவன் இந்த மாற்றங்களை அடையாளம் கண்டுகொண்டு சென்றால், கவிதையின் புரியாதமுகம் கிழிந்து, கவிதை புரிய ஆரம்பிக்கும்” என்கிறது.

மீண்டும் கவிஞனைவிட கவிதைக்கு முக்கியத்துவம் (ஆனால், கட்டுரையின் இறுதிப் பத்தியில் கவிஞனைப் பற்றிய சிலாகிப்பு). அதேசமயம், இதில் புதிதாக மூன்று விஷயங்கள் சேர்ந்துகொள்கின்றன.

கொஞ்சம் நேர்மாறான வரிசையில் கேள்விகளை எழுப்பிப் பார்ப்போம்.

3) “கவிதையின் புரியாதமுகம் கிழிந்து, கவிதை புரிய ஆரம்பிக்கும்.” அதாவது கவிதை ‘புரிய வேண்டும்’.

(அடுத்த பகுதிக்கு வருமுன் யோசிக்க சில புள்ளிகள்:

கவிதை புரியக்கூடாது.

கவிதை புரிதலுக்கு அப்பாற்ப்பட்டது.

கவிதை மட்டுமல்ல இலக்கியம்/கலை என்று நாம் சொல்லக்கூடிய எதுவும் புரிதலுக்கு அப்பாற்ப்பட்டது.

முதல் மட்டமாக, புரிதல் என்பதை நாம் இங்கு understanding என்ற கருத்தாக்கத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். Understanding என்பது “(மேலோட்டமாக அறிந்து) தெளிவது”. அது ஒரு அபிப்பிராயத்தை – opinion – நமக்குள் உருவாக்கும்.

இதற்கும் மேலாக, புரிதல் என்பது ஒரு கருத்தை (idea or concept) உருவாக்கிக் கொள்வது.

2) “வாசிப்பவன் இந்த மாற்றங்களை அடையாளம் கண்டுகொண்டு சென்றால் (செல்ல வேண்டும்)”. கேள்வி்: ‘ஆசிரியனைக் கொன்ற பிரதியை’ வாசிக்கும் வாசகர், பிரதியை எப்படித் தொடர்ந்து செல்ல வேண்டும்? ஏன் தொடர்ந்து செல்ல வேண்டும்?

1) “இந்த அமைப்பு திறந்தவுடன் அர்த்தங்கள் முடிவாக ஏதுமின்றி, ஒன்றிலிருந்து மற்றதற்கான அமைப்பியல் மாற்றம் அடையவே வடிகோலுகின்றன்”.

அதாவது, அர்த்தங்களுக்கு எல்லை கிடையாது. Unlimited semiosis என்று இதைச் சொல்வார்கள். எந்த ஒரு பிரதிக்கும் – கவிதை, நாவல் இன்னபிற – முடிந்த முடிவான அர்த்தம் கிடையாது; எந்த ஒரு சூழ்நிலைமையிலும், அதற்கான அர்த்தங்களை வரையறுக்க முடியாது; ஒரு வாசகனின் புரிதலுக்கு ஏற்ப ஒரு பிரதி எந்த ஒரு அர்த்தத்தையும் உருவாக்கும் சாத்தியத்தையும் தனக்குள் கொண்டிருக்கிறது.

ஆக, பிரதி தனது சூழலில் இருந்து விலகி அல்லது கடந்து அல்லது மேலாக நின்று, எந்த அர்த்தங்களையும் கொடுக்கக் கூடியதாக, தனது சூழலை மீறி எல்லாக் காலத்திற்கும் எல்லா அர்த்தங்களையும் தனக்குள் உள்ளடக்கியதாக ஒரு கருத்து முன்மொழியப்படுகிறது. இது சமயம், இதைச் செய்வது ‘ஆசிரியன்’ அல்ல; ‘பிரதி’ அல்லது பெரும்பாலான சமயங்களில் ‘வாசகர்’ – the work of art or the slavish reader becomes eternal in place of the artist; transcendental argument in another guise.

(ஒப்புக்கொள்வதென்றால், பைத்தியக்காரன் “ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற கருத்தாக்கத்தின் தொடர்ச்சியாக, பிரதியை முன்வைக்கிறார். ஆனால், பிரதிக்கு காலம் – இடம் சார்ந்த வரையறுப்புகளை மீறிய ஒரு ‘அற்புதத் தன்மையைத்’ தருகிறார். இதற்கு முன்னதாகச் சிலர் இந்த இடத்தை வாசகருக்குத் தந்து, வாசகரே என்ன அர்த்தத்தை வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ளலாம் என்று மிகைப்படுத்திப் புரிந்திருந்தனர்.)

மொத்தத்தில், ஆபரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் அவுட், டாக்டர் சூப்பர் !!!

இலக்கியம், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

விஜயபாரதமும் விஷ்ணுபுரமும்

குறிப்பு:

ஜெயமோகனின் அரசியல் வெளிப்படையாகத் தெரிவது. ஆனால், அவரது இலக்கிய முயற்சிகளின்பால் பெரும்பான்மையான வாசகர்களுக்கு ஒரு பிரமிப்பு உள்ளது. முதலாவதாக அந்தப் பிரமிப்பு எப்படி உருவாக்கப்பட்டது, பொதுக்கருத்தியலுக்கும் அதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது குறித்து எழுதப்பட வேண்டும். பிறகு அவரது எழுத்துக்களை குறிப்பாக எடுத்துக் கொண்டு அணுகிப் பார்க்க வேண்டும். இரண்டிற்குமே பொறுமையும் கால அவகாசமும் தேவை.

என்னால் ஜெ – வைப் போல பேசுவதையெல்லாம் எழுதிவிட முடியாது. அதில் எனக்கு விருப்பமும் கிடையாது. நண்பர்களுடன் விரிவாகப் பேசுவது எனக்கு, சில கருத்தமைவுகளுக்கு என்ன எதிர்வினை கிடைக்கிறது, சிலவற்றை எந்த அளவிற்கு எளிமையாகச் சொல்ல வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே. பேசியதையெல்லாம் எழுதியிருந்தால் பல தலையணைகள் விழுந்திருக்கும். ஜெயமோகனைப் போல ஒரு பெருத்த வாயாடி என்ற பெயரையும் ஈன்றிருக்கலாம்தான். அதைவிட “சோம்பேறி” என்ற பெயரே பரவாயில்லை.

அது கிடக்கட்டும். எனது விரிவான விமர்சனங்களை கால அவகாசம் எடுத்துக் கொண்டு நிதானமாக எழுத நாள் பிடிக்கும். அதற்கு முன்பாக, ஜெ – வின் “விஷ்ணுபுரம்” நாவல் குறித்த பொ. வேல்சாமியின் இந்த சுவாரசியமான review உங்கள் வாசிப்பிற்கு. அவரிடம் ஒரு வார்த்தை கேட்ட பிறகே இதை இங்கு பதிவிலிடுகிறேன்.

இதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லையெனினும், தமிழக வரலாற்றுக்கும் இந்நாவலுக்கும் இடையிலான உறவுப் புள்ளிகளாக அவர் சுட்டும் விஷயங்கள், புனைவெழுத்தில் கற்பனைக்கு உள்ள உறவு என்ன என்ற கேள்வியுடன் தொடர்புடையவை. அது குறித்த உரையாடலைத் தொடங்க இது ஒரு தொடக்கப் புள்ளியாக அமையலாம்.
__________________________________

ஜெயமோகனின் விஷ்ணுபுரத்திற்கு எதிர்பார்த்தபடி வரவேற்புகள் கிடைத்துள்ளன. சென்னை புத்தகச் சந்தையில் ஆர். எஸ். எஸ். பத்திரிகையான விஜயபாரதம் தன் முன்னாள் ஊழியர் எழுதிய இந்த நாவலை தனது கடையில் வைத்து விற்பனை செய்ததை திருநெல்வேலி கூட்டத்தில் எஸ். ராமகிருஷ்ணன் போட்டு உடைத்தார். விஜயபாரதம் கடையில் விற்பனையான முக்கிய புத்தகம் விஷ்ணுபுரம் மட்டும்தான்.

மேற்கே ஞானி தனது பரிவாரங்கள் புடைசூழ விஷ்ணுபுத்தை விதந்தோதுகிறார். கலைப்படைப்பில் ஆகட்டும், தத்துவ ஞானத்திலாகட்டும், சிற்ப சூத்திர நுட்பங்களை சொல்வதில் ஆகட்டும் இந்த நாவலை ‘பீட்’ அடிக்கிற மாதிரி வேறு எதுவும் தமிழில் இல்லை என அவர் சேலம் தமிழ்ச் சங்கத்தில் பேசியதை நான் நேரில் கேட்டேன்.

என்ன மாதிரி இதை நிறுவப் போகிறார் என நான் ஆவலாக காத்திருந்தபோது முன்பெல்லாம் ரேடியோவில் ஒலிச்சித்திரம் போடுவார்களே அதுபோல கதைச் சுருக்கத்தை கச்சிதமாகக் கூறி என்னை ஏமாற்றிவிட்டார். (இடையில் “நுண் வெளிக் கிரணங்கள்” நாவலின் கதையோடு இதைப்போட்டுக் குழப்பியபோது மேடையில் இருந்தவர்கள் ஞானிக்கு நினைவூட்டி இழுத்து வந்தனர்.)

தெற்கே சுந்தர ராமசாமி குழுவினர் விஷ்ணுபுரத்திற்கு விழா எடுக்கின்றனர். தமக்குத் தோதான ஆட்களை மட்டுமே வைத்து இலக்கியக் கூட்டங்கள் நடத்தும் காலச்சுவட்டினர் இம்முறை தெரியாத்தனமாக எஸ். இராமகிருஷ்ணனை அழைக்கப் போக அவர் இந்த நாவலின் இந்துத்துவச் சார்பைப் போட்டுடைத்து சுந்தர ராமசாமி குழுவினரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டார்.

வடக்கே நமது அன்பிற்குரிய இராஜமார்த்தாண்டன் தினமணியி விஷ்ணுபுரத்தைப் புகழ்ந்து தள்ளிவிட்டார். தலைமறைவாய்த் திரியும் சிலதுகள் இந்த நாவலுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமெனச் சொன்னதாக நண்பர் பாப்லோ அறிவுக்குயில் இன்று என்னிடம் சொன்னார்.

தமிழர்களுக்குப் பொதுவாக பெரிசாக இதைப் பார்த்தாலும் ஒரு அதிர்ச்சி, பிரமிப்பு. அதனால்தான் யார் பெரிய கட் அவுட் வைப்பது என்ற போட்டி இங்கே முக்கியமாக இருக்கிறது. எண்ணூறு பக்கத்தில் டெம்மி சைஸ்சில் ஒரு புத்தகம் வந்தால் அதைப் படிக்காமலேயே எழுதியவருக்கு அறிஞர் பட்டம் கொடுக்காமல் சும்மா விடுவார்களா? விஷ்ணுபுரத்திற்கும், ஜெயமோகனுக்கும் இந்தப் பெருமையைச் சாற்றுவதற்கு தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்.

இது, மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ள தருணம் மட்டுமல்ல தமிழகத்தில் உறுதியாக காலூன்ற முயற்சிக்கும் நேரம். அ. இ. அ. தி. மு. க., பா. ம. க., ம. தி. மு. க முதலிய கட்சியினர் தத்துப்பித்தென்று பாரதிய ஜனதாவுக்கு மாலை போட்டு வரவேற்பது மட்டுமல்லாமல் நமது மதிப்பிற்குரிய தலித் எழில்மலை போன்றவர்கூட அடக்கி வாசிக்க நேர்ந்திருக்கும் ஆபத்தான தருணம் இது. இச்சூழலில் விஷ்ணுபுரத்திற்கான வரவேற்பில் பொதிந்து கிடக்கும் ஆபத்தை தமிழ் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்கள் என்ற வகையில் பொறுப்புடன் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

இந்நாவலைப் பற்றி – இந்த வரவேற்பின் பின்னணியில் – ஒரு சில அம்சங்களை இன்கே பகிர்ந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இது நாவலின் விமர்சனமல்ல, விரிவான விமர்சனம் அடுத்த நிறப்பிரிகையில் வெளிவரும்.

முதலில் இந்நாவல் தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தாத கற்பனைகளை உள்ளடக்கியது என்பதைச் சுட்டிக் காட்டியாக வேண்டும். கற்பனை என்று வந்த பின்பு அப்புறம் என்ன பொருந்துவது பொருந்தாதது என ஒருவர் கேட்கலாம். வரலாற்றை துணைக்கு அழைத்து எழுதும்போது ஒவ்வொரு முறையும் எழுதப்படும் காலகட்டத்தின் வரலாறுதான் மீண்டும் எழுதப்படுகிறது. வில்லங்கமான ஒரு நோக்குடன் வரலாறு வாசிக்கப்படும்போது நாம் இந்த பொருந்தாமையைச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

புதுமைப்பித்தனும்கூட வரலாற்றுப் பின்னணியில் “கபாடபுரம்”, “அன்றிரவு” போன்ற கதைகளை எழுதி உள்ளார். இந்தக் கதைகளின் நோக்கம் நிலவும் ஆதிக்கக் கருத்துக்களை (status-quo) கேள்வி கேட்பது. கவிழ்க்க முயல்வது. புதுமைப்பித்தனின் இத்தகைய கதைகள் கிடைக்கும் தரவுகளுடன் பொருந்திப் போகக் கூடியவை. ஜெயமோகனின் விஷ்ணுபுரமோ நிலவும் இந்துத்துவச் சொல்லாடலுக்குத் துணைபோவது. ஏராளமான வரலாற்றுத் திரிபுகளுடன் இதனை அவர் செய்திருக்கும்போது நாம் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

முதலில் இந்த நூலின் தொடக்கத்தில் போடப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டமான வரைபடம். விஷ்ணுபுரம் என்னும் கற்பனையான ஊரையும், பழனி, மதுரை, வைகை நதி என இப்போதும் உள்ள புவியியல் வெளிகளையும் இணைத்துப் போடப்பட்டுள்ளது. வைகை நதி பழனி மலையிலிருந்து வருவது போல படம் வரையப்பட்டுள்ளது. சேலத்திற்கு அருகாமையில் உள்ள சேர்வராயன் குன்றுகள் போடிநாயக்கனூர் பக்கம் உள்ளதாகக் காது குத்துகிறார் ஜெ. நதியாவது காலப்போக்கில் இடம் மாறியதாக ஒரு ‘டுபாகூர்’ விடலாம். மலை எப்படி ஐயா இடம் பெயரும்?

துறவியாக ஆகும் திருநோக்குடன் காலையில் வீட்டை விட்டுக் கிளம்பிய ஜெயமோகனுக்கு திருவருளால் கைவந்த இந்த நாவலின் மையப் படிமத்திலேயே இந்த வரைபடமும் இடம் பெற்ற என்பதை அவர்தான் விளக்க வேண்டும். இல்லை ஞானி, சு. ராவாவது விளக்கினால் நல்லது.

இந்த நாவல் காலம். வெளி கடந்தது என்றெல்லாம் இவர்கள் உரிமை கொண்டாட முடியாது. இந்த நாவலின் மையப்பாத்திரமான பவதத்தரின் பாட்டனார் களப்பிரரை வெற்றி கொண்ட பாண்டியன் கடுங்கோனின் காலத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரு குறிப்பு நூலில் இடம் பெறுகிறது (பக்கம்: 318). இக்கால கட்டம் கி. பி. 600 எனில் விஷ்ணுபுரம் நாவலின் மையக் கதையின் காலம் கி. பி. 700 லிருந்து கி. பி. 900 க்கு இடைப்பட்டது எனலாம். இக்காலகட்டத்து வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் எதிராக கட்டப்பட்டுள்ளது விஷ்ணுபுரம்.

வைணவத்திற்கும், பெளத்தத்திற்கும் இடையிலான மோதலின் களமாக தமிழ் நாடு இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றது. தமிழகத்தில் மத மோதல் என்பது பெளத்தத்திற்கும் வைணவத்திற்கும் இடையில் ஏற்பட்டதில்லை. மாறாக சைவத்திற்கும், சமணத்திற்கும் இடையில் தான் இங்கே மோதல்கள் நிகழ்ந்தன. வைணவம் இங்கே எக்கால கட்டத்திலும் சகல வல்லமையுடன் கோலோச்சியதில்லை. அதிலும் குறிப்பாக இந்தக் கால கட்டத்தில் வைணவம் இங்கே ஆட்சி செய்ததில்லை.

தமிழ்க் காப்பியங்களுள், குறிப்பாக மணிமேகலையிலும் நீலகேசியிலும் தர்க்க விவாதங்கள் இடம் பெறுகின்றன. இந்த மோதல்களின் வெற்றி தோல்வி என்பது தர்க்கத்தின் அடிப்படையிலும், எதிரே உள்ள மக்கள் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையிலும்தான் நிர்ணயிக்கப்படுகின்றது. மாறாக, தீபம் எரிவது, வெள்ளைப் பறவை மல்லாக்கப் பறப்பது போன்ற அதீத கற்பித நிகழ்வுகளின் மூலம் நிர்ணயிக்கப்படுவதில்லை.

ஆனால் அனல்வாதம், புனல்வாதம் என்று வைதிகர்கள் சமணர்களை கழுவேற்றியதை நியாயப்படுத்துவதற்காக தொன்மங்களை கட்டமைத்தது போல இங்கே ஒரு வெள்ளைப் பறவையைப் பறக்க விடுகிறார் ஜெ. அஜீதன் என்கிற பெளத்தர் வைணவப் பார்ப்பனர்களை வென்றது தர்க்கத்தின் மூலமாக அல்ல, இப்படியான ஒரு ‘அற்புத’ நிகழ்ச்சியினால்தான் எனச் சொல்வது ஜெ – யின் நோக்கம்.

இதனை பார்ப்பனர்கள் ஆட்சேபிக்கும்போது வைணவப் பார்ப்பனரான பவதத்தர் பெருந்தன்மையோடு அஜீதன் வெற்றி பெற்றதாக அறிவிக்கிறாராம். பாட்டன் நிர்மாணித்த விஷ்ணுபுரத்தை பெளத்தனின் கையில் தாரை வார்க்கிறாராம். எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றதுதான் வைதீகம் தமிழனுக்குக் காட்டிய பெருந்தன்மை. ஆனால் ஜெ காட்டும் வரலாறோ கத்தியின்றி, இரத்தமின்றி பெளத்தனுக்குத் தாரை வார்க்கும் வரலாறு!

தர்க்கத்தை ஆங்காங்கு கிண்டலடிகிறார் ஜெ. இது ஏதோ போஸ்ட் மார்டனிஸ்டுகள் தர்க்கத்தை மறுப்பது போல் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். வேதங்களை மறுக்கும்போதும் அதற்கு இவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணரும்போதும் மட்டும்தான் தர்க்கத்தின்மீது இவர்களுக்கு ஆத்திரம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் நாத்திகர்களோடு மோதும்போது மட்டும்தான் இவர்களுக்கு தர்க்கம் பிடிக்காது. வேதத்தை பிரமாணமாக ஏற்றுக் கொண்டால் தர்க்கம் இவர்களுக்கு இனிக்கும்.

பெளத்தர்கள் கையில் அளிக்கப்பட்ட விஷ்ணுபுரம் அடுத்த நூற்றாண்டுகளில் இசுலாமிய படையெடுப்பால் அழிக்கப்பட்டது என்கிறார் ஜெ. இசுலாமிய படையெடுப்பு வட இந்தியாவில் நடைபெற்றதற்கும் தமிழகத்தில் ஏற்பட்டதற்கும் இடையில் சுமார் ஐநூறு ஆண்டுகள் இடைவெளி உள்ளது. விஷ்ணுபுரம் அழிவதாகச் சொல்லப்படும் கால கட்டத்தில் இசுலாமிய படையெடுப்பு தமிழகத்தில் நடந்ததாகச் சொல்ல முடியுமா? தவிரவும் இசுலாமியர்கள் கோவில்களை இடித்து நொறுக்கி ஊர்களை தரைமட்டமாக தமிழகத்தில் ஆக்கினர் என்பதற்கும் சான்றுகள் காட்ட முடியுமா?

கொள்ளை அடித்திருக்கலாம். பொன்னையும் மணியையும் ஐம்பொன் சிலைகளையும் அள்ளிச் செல்வது இசுலாமியர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம். சீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இருந்ததில்லை. “விஷ்ணுபுரத்தின்” மூலம் தமிழகத்தின் வரலாற்றையே சொல்ல முயல்வதாக உரிமை கொண்டாடி, தமிழகம் வீழ்ந்ததே இசுலாமிய படையெடுப்பால்தான் என்ற கருத்தாக்கத்தை உருவாக்க முனைவது யாரை திருப்தி செய்ய?

விஜயபாரதம் “விஷ்ணுபுரத்தை” விற்பனை செய்வதை நம்மால் புரிந்த் கொள்ள முடிகிறது. ஞானியும், சு. ராவும் இதனை ஏன் தலையில் சுமந்து திரிகிறார்கள்? தமிழ்த் தேசீயம் பற்றி புத்தகம் வெளியிடும் ஞானியும், விஷ்ணுபுரத்தை விற்கும் விஜயபாரதமும் எந்தப் புள்ளியில் இணைகின்றனர்? இதற்கு ஞானி மட்டும் பதில் சொன்னால் போதாது. ஞானியின் பின்னால் திரியும் தமிழ்த் தேசீயர்களும், கோவை மாவட்ட கலை இலக்கிய அன்பர்களும் பதில் சொல்லியாக வேண்டும்.

கடைசியாக இந்த நாவலில் முன்னுரை மற்றும் நன்றிகள் என்கிற பெயர்களில் ஜெ அடிக்கிற லூட்டியைப் பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும். துறவியாக முயன்றது, துறவியாகவே அலைந்து திரிந்தது, ஒரு மார்ச் 22 ஆம் தேதி காலையில் நாவலின் மையப் படிமம் இவரை வந்தடைந்தது, நாவலை எழுதுவதற்கு முன் இவர் பேரிலக்கியங்கள், காவிய மரபு, இந்திய ஞான மரபு, தாந்திரிகவியல், சிற்பவியல் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்தது, போதானந்தா, ஆத்மானந்தா, பிரம்மானந்தா, சைதன்யர், ஞானி, சுந்தர ராமசாமி இன்னும் பெயர் தெரியாத திருவண்ணாமலைத் துறவி ஆகியோரின் அருளை இறக்கிக் கொண்டது (நடுவே திடீரென்று பித்துக்குளி முருகதாஸ் போல திருமணம் செய்து கொண்டது) என இந்த நாவலுக்கு ஒரு தெய்வீகத்தைக் கற்பிப்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.

Tail Piece: இந்த நாவலின் கருவை 1991 – இல் தேனிலவு நாட்களில் மனைவியிடம் பேசித் தீர்த்தாராம் ஜெ. பாவம் சகோதரி அருள்மொழியை அவர் அப்படிக் கொடுமை செய்திருக்க வேண்டியதில்லை.

– பொ. வேல்சாமி

நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4, மே 1998.

அரசியல், இலக்கியம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . Leave a Comment »

சில தப்புகளைப் பற்றி …

சிறுபத்திரிகை உலகத்தைப் போல அரைவேக்காடுகள் நிரம்பிய உலகம் எதுவும் இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ கையில் ஒரு ஆங்கிலப் புத்தகம் (ஜோல்னாப் பை பழைய ஸ்டைல்), ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற ஒரு பாவனை, மூக்கு நுனியில் காத்திருக்கும் ‘நான்’ – இதன் citizen – களின் சில தனிச்சிறப்புகள்.

இத்தகைய ‘தனிச் சிறப்புகள்’ வாய்ந்தவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது என்ற முடிவெடுத்து சமீப காலமாக தனித்து திரிந்துகொண்டிருந்த வேளையில், சில நாட்களுக்கு முன்பாக சென்னை ஜெமினி மேம்பாலத்திற்கு அருகில் உள்ள Land Mark புத்தகக் கடைக்குள் நுழைந்தேன்.

புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒன்று (புத்தகம்தான்) கண்களில் வெட்டியது. (சனியன், அன்று யார் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை.) சு. ரா -வின் “புளியமரத்தின் கதை” ஆங்கிலத்தில். Penguin வெளியீடு. எடுத்துப் புரட்டினேன்.

மொழிபெயர்ப்பாளர் (எஸ், கிருஷ்ணன்?) குறிப்பு. இரண்டாம் பத்தி. The novel is different in that it attempts magical realism before the phrase had become popular. (“மாந்த்ரீக யதார்த்தவாதம் என்ற பதம் பரவலான புழக்கத்திற்கு வருவதற்கு முன்பாகவே அதை முயற்சித்துப் பார்த்திருக்கிறது என்ற வகையில் இந்த நாவல் சற்று வித்தியாசமானது”, என்று ஒரு குத்துமதிப்பாக மொழிபெயர்க்கலாம்.)

சாமி, பேத்தலுக்கு ஒரு அளவேயில்லையா! முன்பு “ஜே. ஜே: சில குறிப்புகள்” எக்ஸிஸ்டென்ஷியலிச நாவல் என்ற சிலாகிப்பு. இப்போது “புளியமரத்தின் கதை” magical realism ஆகப் பார்க்கிறது. சாயிபாபா ஸ்டைலில் சு.ரா. உள்ளங்கையை உயர்த்தினால் எக்சிஸ்டென்ஷியலிசமும் magical realism – மும் கொட்டுகிறது. பக்த கோடிகள் புல்லரித்து பொட்டு வைத்துக் கொள்கிறார்கள்.

* * *
ஒரு சின்ன அபத்த நாடகம்.
காட்சி – 1

விசாலமான ஒரு வீடுதான் அரங்கு. பின்புறம் நோக்கித் திறக்கும் ஒரு வாசல். முன்பக்கமும் ஒரு வாசல் உண்டு.

காலம்: “சுபமங்களா”வில் கடுமையான விவாதங்கள் சற்று ஓய்ந்திருந்த சமயம். சு. ரா. அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த நேரம். புத்தகங்கள் சீராக அடுக்கி வைத்த அறை. அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி, ரவிக்குமார் ஒரு அரைவட்டமாக அமர்ந்திருக்க எதிரில் சு. ரா.

சு. ரா: அமெரிக்காவில் நூலகங்கள் அற்புதமாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் நாம் கேள்விப்பட்டிருக்காத மேதைகளுடைய நூல்களையெல்லாம் வைத்திருக்கிறார்கள்.

அ. மா: அப்படியா! என்ன மாதிரியான மேதைகள், யாராவது ஒருவரைச் சொல்லுங்களேன்.

சு. ரா: இம்ம்மானுவேல் க்க்கான்ட்ட்!

திரை கவிழ்கிறது.

திரைக்குப் பின்னிருந்து ஒரு குரல்: “இந்த அபிஷ்டுவுக்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது!”

* * *

ஒரு ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக (1998), அதுவரை வாசித்திருந்ததை தொகுத்துக் கொள்ளவும், மேற்கொண்டு இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டிய திசைகளைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவும் போட்ட வரைபடம் இது.

[அதை இங்கு பகிர்ந்து கொள்ள இயலவில்லை. Scan செய்து பார்த்தேன். தெளிவாக வரவில்லை. மற்றொன்று. கல்விப் புலம் சார்ந்து நான் +2 விற்கு மேலாக படிக்கவில்லை. மிகவும் சாதரணமான ஒரு நர்சரிப் பள்ளியில் 5 – ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி. பின் மீண்டும் மிகவும் சராசரியான அரசு சார் பள்ளியொன்றில் +2 வரை. இதுவே எனது கல்விப் பின் புலம். இதையும் மீறி பல துறை சார்ந்த விரிவான எனது வாசிப்பிற்கு சோர்வடையாத எனது கடும் முயற்சி மட்டுமே காரணம். நான் பயணித்த பல்வேறு துறை சார்ந்த வாசிப்புகள், நூல்களின் கடும் ஆங்கிலத்திற்கும் தமிழ் நாட்டில் உள்ள மேட்டுக்குடி பள்ளிக் கல்விக்கும்கூட ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இந்நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.]

இதிலுள்ளவர்கள் அத்தனை பேரையுமோ அல்லது குறிப்பிட்ட சிலரது படைப்புகள் அத்தனையையுமோ வாசித்து விட்டதாக இன்னும்கூட சொல்லிவிட முடியாது. இங்கு வாசகர்களுக்கு இதைத் தருவதற்கு சில காரணங்கள் உண்டு.

தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலின் வாசகர் தளத்தை சற்று பொதுமைப்படுத்தி இரண்டு விரிவான பிரிவினர் இருப்பதாகச் சொல்லலாம். இலக்கியம் ‘உய்விக்கும்’ என்ற ஒருவிதமான பரவச மனநிலையில் மிதந்து கொண்டிருப்பது; பிச்சமூர்த்தி, மெளனி, புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் என்று ஒரு லிஸ்டைப் படித்துவிட்டால் தமக்கும் ‘இலக்கியம்’ சித்தித்துவிடும் என்று ஒரு உத்வேகம்; ‘சற்றே’ பலவீனமான ஆங்கில வாசிப்பு; தத்துவங்கள், கோட்பாடுகள் என்றாலே ஒரு அலர்ஜி; அவை ‘படைப்புத் திறனை’ மழுங்கடித்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை; தமது சமூக இருப்பு, தமது ‘நான்’கள் குறித்த எந்தவிதமான தீவிரமான விசாரணைகளும் இல்லாமல் கையளிக்கப்பட்ட ‘நான்’கள் துருத்திக் கொண்டிருப்பது; ஒரு பிரிவினரின் ‘குணாதிசயங்கள்’ இவை. சிறுபத்திரிகைச் சூழலின் பெரும்பான்மையான ‘படைப்பாளிகள்’, ‘படைப்பாளிகளாகத் துடித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள்’ இதற்குள் விழுவர்.

விமர்சகர்களாக, கோட்பாட்டாளர்களாக, ‘அரசியல் அறிஞர்களாக’, ‘அறிவுப் பயங்கரவாதிகளாக’, அறியப்படுபவர்கள், இவர்களுடைய வாசகர்கள் இரண்டாவது பிரிவினர். முதல் பிரிவினருடைய அத்தனை நம்பிக்கைகளையும் கோட்பாட்டளவில் கேள்விக்குள்ளாக்குபவர்கள். ஆனால், ‘நான்’கள் குறித்த விசாரணை என்ற அந்தப் புள்ளியில் மட்டும் இவர்களுக்கும் மேலுள்ளவர்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் கிடையாது (அடியேன், இதற்குள் விழுவேன் என்று நினைக்கிறேன்.)

இன்னும் சற்று துல்லியமாகச் சொல்வதென்றால், ‘நான்’கள் குறித்த இவர்களுடைய விசாரணைகள் வெறும் கோட்பாட்டளவில் நின்றுவிடும். தமது ‘சொந்த’ ‘நான்’கள் குறித்த எச்சரிக்கைகளோ, விசாரணைகளோ இவர்களிடத்திலும் இல்லை என்பது அடியேனின் அவதானிப்பு (சிலரைப் பொருத்த அளவில் இது தவறானதாகவும் இருக்கலாம்.) இதனால், முதல் பிரிவினரைப் போன்றே இவர்களுடைய ‘நான்’களும் துருத்திக் கொண்டு முன்னே வந்து நிற்பதுண்டு. என்றாலும், இதையும் மீறி, சிறுபத்திரிகை வாசிப்புச் சூழலில் பல புதிய திசைகளைத் திறந்துவிட்டது, எந்தக் கேள்விகளுக்கும் இடமேயில்லாத ‘லகரி’ இலக்கியம், ‘அப்பாவித்தனமான’ வாசிப்புகள், போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கியது இவர்களது பங்களிப்புகளில் சில.

இந்த இரண்டாவது பிரிவினரில் விழுந்துவிட்டவர்களில் ஒருவன் என்கிற முறையில், மேற்சொன்ன ‘சுயவிமர்சனம்’ (இன்னும் பல உண்டு) நீட்ஷேவை வாசித்த பிறகே கிடைத்தது என்கிற ஒப்புதலை வாசகர்கள் முன் வைக்க விரும்புகிறேன்.இரண்டாயிரம் ஆண்டு கால மேற்கத்திய தத்துவ மரபு இருப்பின் ஆதாரம், அடிப்படை (Being of beings) என்ன என்ற கேள்வியில் சிக்கியிருந்ததன் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி தேக்கமடையாமல், தொடர்ந்து உருவாகி, உருமாறிக் கொண்டிருக்கும் நிகழ்வின்மீது (Becoming) அழுத்தத்தைக் குவிக்கும் நீட்ஷே “வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” என்றும் முன்மொழிகிறான்.

இவ்விடத்தில், “நமது மதம், ஒழுக்கவியல், தத்துவம் அனைத்தும் மனிதனின் சீரழிவின் வடிவங்கள். இதன் எதிர் – இயக்கம் கலை” என்ற நீட்ஷேவின் மும்மொழிதலை ஏற்றுக் கொள்ள முடிகிற போது, சு.ரா “ஒரு இலக்கிய அறிதல்முறை வேண்டும்” என்று சொல்வதைக் கேட்டு எங்களைப் (அதாவது இரண்டாவது பிரிவினரி சிலர்) போன்றவர்கள் ‘பாய்ந்து பாய்ந்து தாக்குவதேன்?”

ஒன்று, சு. ரா முன்வைக்கும் ‘இலக்கிய அறிதல்முறை’, ‘எங்கோ, ஏதோவொரு’ இடத்தில், இறுதியில் இருப்பின் ஆதாரம் குறித்த தேடலாகத்தான் முடிகிறது. இரண்டாவது, நீட்ஷே மூளைச் சோம்பேறி அல்ல.

“வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” எனும்போது இலக்கியம் குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்த இலக்கியம் Being – ஐ நோக்கிய ஏக்கமாக அல்ல Becoming – ஐப் பிடிக்க முயற்சிப்பதாக (அது சாத்தியமேயில்லை என்றாலும்கூட) அதற்கு அழுத்தம் தருவதாக இருக்க வேண்டும்.

இந்த முன்மொழிதல்களை அதன் சிக்கல்களோடும் செறிவுகளோடும் ஆழத்தோடும் புரிந்துகொள்ள ஒருவர் மேற்கத்திய தத்துவ மரபை ‘கரைத்துக் குடித்தே’ ஆக வேண்டும். முன்னும் பின்னுமாக ஒரு தீவிர வாசிப்பைத் தந்தே ஆகவேண்டும். அதன்பிறகு, அதோடு சேர்த்து நாம் ‘இந்தியத்’ தத்துவ மரபுகள் குறித்துப் பேசலாம்.

மேற்கத்திய தத்துவ மரபுக்கு இவ்வளவு அழுத்தம் தருவதற்குக் காரணங்கள் உண்டு. ஒன்று, நாம் இன்று முன்வைக்கும் அத்தனை வடிவங்களும் மேற்கிற்கே உரியவை. அப்புறம், காலனியத்திற்குப் பிறகு காலனியக்கறை படியாத, ‘தூய’ தனித்துவமான பாரம்பரியம் என்று எதுவும் இல்லை. ‘இந்தியத்’ தத்துவ மரபுகளைக்கூட நாம் மேற்கத்திய தத்துவச் சொல்லாடல்களின் ஊடாகத்தான் பேச வேண்டியிருக்கிறது.

எனது வாசிப்பு இந்த வரைபடத்தின் வலது கீழ் மூலையிலிருந்து (லெனின்) தொடங்கி இடப்பக்கமாக மெதுவாக நகர்ந்த ஒன்று. இன்னொருவருக்கு இன்னொரு மாதிரியாகவும் இருக்கலாம். அதோடு, இது முழுமையான, நிறைவான ஒன்றும் இல்லை. உதாரணத்திற்கு, விட்கென்ஸ்டெய்னுக்கு முன்னும் பின்னுமான analytic மற்றும் linguistic தத்துவ மரபுகளைத் தவிர்த்திருக்கிறேன். ‘இம்ம்மானுவேல் க்க்கான்ட்’ – ற்கு பின்னே நீண்டு செல்லும் மத்தியகால தத்துவப் போக்குகள், கிரேக்க தத்துவப் பாரம்பரியம் அத்தனையும் விட்டிருக்கிறேன்.

எது எப்படியிருந்தாலும் ஒரு புதிய அழகியலோடு, வீர்யம் மிகுந்த படைப்புகளைத் தருவதற்கு, அறிவின் அதிகாரத்தை வெல்வதற்கு, ‘பைத்திய நிலைக்குள்’ போவதற்கு, ஒருவர் முதலில் அறிவை வென்றாக வேண்டும். ‘நிதானமானவர்கள்’ தான் ‘பைத்தியமாக’ முடியும். பிறவியிலேயே பைத்தியங்கள் கிடையாது. அப்படியானவர்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்கள். இல்லையா?

(முற்றும்.)

நிறப்பிரிகை இதழ் 10, 2000.

சில தப்புகளைப் பற்றி தப்புத் தப்பாய் சில குறிப்புகள் – தப்புக்குப் பிறந்தவன்

குறிப்பு:
இக்கட்டுரையில் spelling mistake குறித்து எழுதியிருப்பவை அச்சொற்கள் குறிக்கும் கருதுகோள்கள் குறித்த அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாமல் ஜெயமோகன் போன்றவர்கள் உளறிக் கொட்டியவை குறித்த ‘பகடி’ என்பதை வாசகர்கள் ‘உய்த்து உணர்ந்து கொள்வார்கள்’ என்று நம்புகிறேன்.
_______________________________________________
இரத்தத்தால் எழுது. இரத்தமே ஆன்மா என்றுணர்வாய்.
ஒரு காலத்தில் ஆன்மா கடவுளாக இருந்தது. பின்பு மனிதனானது. இப்போது எழுத்துக் குப்பையாகியிருக்கிறது.
மனிதன் மிருகத்திற்கும் மீமனிதனுக்கும் இடையில் ஒரு பாலம் – அதளபாதாளத்திற்கு மேல் தொங்கும் பாலம்.
– Nietzsche, Thus Spoke Zarathustra.
முதலில் சில பிரகடனங்களைச் செய்துவிடுகிறேன்:
1. மக்கள் மந்தைகள்.
2.மனிதன் இன்றைக்கு நீட்ஷே சொன்ன பாலமாகக்கூட இல்லை. மனிதக்குரங்கு என்ற இன்னொரு இடைப்பட்ட நிலையிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறான்.
3. இதில் சிலதுகள் ‘இலக்கியம்’ சமைப்பதாகவும், ‘ஆய்வுகள்’ செய்யும் ‘அறிஞர்’களாகவும், அரசியல் ‘செயலாளிகளாகவும்’ பாவனைகள் செய்து கொண்டிருக்கின்றன.
இனிவரும் குறிப்புகள் தமிழ்நாட்டு அரசியல், இலக்கியச் சூழலில் இந்தச் சிலதுகளின் on/off the record சேஷ்டைகள் சிலவற்றைப் பற்றிய பதிவுகள்.இங்கு இந்த விஷயங்களைப் பதிவு செய்வது “இந்த உலகில் மிகச் சிறந்த விஷயங்கள்கூட அவற்றை வைத்து வேடிக்கை காட்ட யாரும் இல்லையென்றால் சீண்டுவாரில்லாமல் ஆகிவிடுகின்றன; இந்தப் பாவனை மனிதர்களைத்தான் மக்கள் அறிஞர்கள் என்கிறார்கள்,” (நீட்ஷே) என்பதைச் சுட்டிக்காட்டத்தான். மற்றபடி, இவர்கள் எவரிடமும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொள்ளும் அளவுக்கு இவர்களோடு எனக்குப் பழக்கம் இல்லை என்பதை சொல்லி விடுகிறேன்.
* * *
ஒரு வருஷத்திற்கு மேலாகிறது. காலச்சுவடு ஜனவரி – மார்ச் ’99 இதழில் ‘குரு’ நித்ய சைதன்ய யதியுடன் உரையாடல். உரையாடியவர் சிற்றிதழ் உலகத்தை கதிகலங்கடித்துக் கொண்டிருக்கும் நமது ‘வருங்கால முதல்வர்’ (புரியாதவர்கள் எக்ஸில் – 09 இல் சாருவின் “கோணல் பக்கங்களைப்” பார்க்க) சு. ரா – விற்குப் பிறகு இலக்கிய பீடத்தின் தலைமைப் பொறுப்பைச் ‘சுமக்கப்’ போகிறவர் என்பதால் இப்படிச் சொல்வது தவறாகிவிடாது. அதற்கான முஸ்தீபுகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்பதை விளக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
உரையாடலைப் படித்துக் கொண்டிருந்தபோது இரண்டு வார்த்தைகளால் கொஞ்சம் சங்கடப்பட்டுப் போனேன். வாசகர்களுக்கு சந்தேகம் வேண்டாம். ‘கீழ்த்தரமான’ வார்த்தைகளைப் போடுகிறவர் அல்ல ஜெயமோகன். Epitome, epitomology. ஜெயமோகன் இவற்றை முறையே அறிவுக்கூறு, அறிவியங்கியல் என்று ‘மொழியாக்கம்’ (சுதந்திர மொழிபெயர்ப்பு!) செய்திருக்கிறார். அது கிடக்கிறது விடுங்கள். Spelling mistake – தான் என் கண்களை உறுத்தியது. Episteme, epistemology என்பதுதான் சரியான spelling. சரி, ஏதோ அச்சுப்பிழை என்று சமாதானம் செய்துகொண்டு மேலே படித்துக்கொண்டு போய்விட்டேன்.
ஆனால், சனியன் என்னை விட்டபாடில்லை. (பிடித்திருப்பது ஏழரை நாட்டு சனியனாம். வீட்டில் சொல்கிறார்கள்.) அடுத்த இதழில் (ஏப்ரல் – ஜூன் ’99) மேற்சொன்ன வார்த்தைகளுக்கு “பிழை திருத்தம்” போட்டிருந்தார்கள்: ” epitome, epitomology என்பது epistome, epistomology என்று இருக்க வேண்டும்” !
இதை ஜெயமோகன் தான் எழுதி அனுப்பியிருந்தாரோ அல்லது ஃஅமீதோ (மன்னிக்க, மனுஷ்யபுத்திரன். முஸ்லீமாகப் பிறந்துவிட்டதற்கு அவர் என்ன செய்வார் பாவம். இயல்பிலேயே ‘சமஸ்கிருத மூளை’ படைத்தவர். அதை நமக்கெல்லாம் அடையாளம் காட்டி அருள்பாலித்தவர் சு. ரா. – சுஜாதாவும். தமிழ் இலக்கிய உலகம் இந்த நன்றிக் கடனை எப்படி கழிக்கப் போகிறதோ!) மனுஷ்யபுத்திரன் திருத்தினாரோ அல்லது கண்ணனோ அல்லது ஜெயமோகன் சரியாக எழுதி அனுப்பி இவர்கள்தான் மீண்டும் தவறு செய்து விட்டார்களோ என்று ஏகமாகக் குழம்பிக் கிடந்த நேரம். ஜுலையில் “சொல் புதிது” ரிலீஸ்.
மீண்டும் ஜெயமோகன். மொழியியல் குறித்த ‘பிரமாதமான’ அவருடைய கட்டுரை. அப்புறம் யதியின் நூலின் ஒரு பகுதி, அவரது மொழியாக்கத்தில். இதிலும் spelling mistake. ‘பிழை திருத்தத்தை’ ஏற்றுக்கொண்டு. Epistime (இதை ‘அச்சுப் பிழை’ என்று மீண்டும் சமாதானம் செய்து கொள்ளலாம்) epistomology !
என்ன கெரகம்யா இது! அப்ப மூணு பேருக்குமே spelling தெரியாதா ?!
என் கனவுகள் தகர்ந்தன. பிம்பங்கள் உடைந்து நொறுங்கின. தமிழ் நாட்டின் ஆகப் பெரிய நாவலாசிரியர், ஆகச் சிறந்த கவிஞர், ஆகச் சிறந்த இலக்கிய மானேசர் இவர்கள்கூட, இப்படியெல்லாம்கூட spelling கூட தெரியாமல் இருப்பார்களா?
Side – ல் இன்னொரு யோசனை. இப்படியெல்லாம் கேட்பது கலைஞனையும் கவிஞனையும் கொச்சையாகப் பார்ப்பதாகிவிடாதா. ஒருவேளை, spelling correctness பார்ப்பது கலையின், இலக்கியத்தின் ‘புதிர்ப் பாதைகளுக்குள்’ பிரவேசிக்க இயலாத என் ‘மன வறட்சியைத்’தான் காட்டுகிறதோ! ஒருவேளை இது இலக்கியத்தின் மீது, இலக்கியவாதிகள் மீது, ‘அறிவாளிகள்’ செலுத்தும் வன்முறை என்று சொல்லப்படுகிறதே, அதாகிவிடாதா! ‘விஷயத்தை’ விட்டுவிட்டு வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில்லையா இது. கெரகம் உனக்கே ஒற்றுப் பிழை பற்றிய பயம் உண்டே, நீ எப்படி இதைப் பற்றியெல்லாம் பேசலாம். இப்படி ஏகப்பட்ட ‘சிந்தனை’ !
ஆனால், இன்னொரு பக்கம், இப்படி spelling mistake செய்திருக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் (இதுவரைக்கும்கூட) நாவலைப் பற்றியும் கவிதையைப் பற்றியும் வாசிப்பு பற்றியும் இலக்கியத்தைப் பற்றியும் தத்துவங்களைப் பற்றியும் தெரிதாவைப் பற்றியும் பின் – நவீனத்துவத்தைப் பற்றியும் அனாசயமாக அபிப்பிராயங்களை உதிர்த்துக் கொண்டு போகிறார்களே அதையெல்லாம் என்னவென்று சொல்வது என்றும் ஒரு யோசனை.
என்னத்த யோசிச்சு என்ன பண்ண, மயிராப் போச்சு, ஏதாவது படிப்போம் என்று பேப்பரைப் புரட்டினால், சாமி அதிலும் (தின மணி, 25.05.00) ஜெயமோகன். சுத்தமான ரஜினி ஸ்டைலில் ஃபோட்டோ. “பின் – நவீனத்துவம் என்பது என்ன?” என்று நடுப்பக்க கட்டுரை. ஏகப்பட்ட பேத்தல்! வேற என்னத்த சொல்ல!
இன்னொரு விஷயம். சமீபத்தில், சென்னையில் அவருடைய மூன்றாவது நாவலுக்கு நடந்த விமர்சனக் கூட்டத்தில் ஜெயமோகன் “விஷ்ணுபுரம்” நாவலைப் பற்றி யாராவது, ஒருத்தராவது, ஒரு வார்த்தையை, ஒரேயொரு வார்த்தையைச் சொல்வார்களா என்று ஏங்கித் தவித்தது பற்றி அங்கலாய்த்தார். கடைசியில், ‘தமிழ் நாட்டில் நான் ஒருத்தன் தான் அறிவாளி’ என்று மார்தட்டிக் கொண்ட (அ. மா., கே. ஏ. குணசேகரன் முன்னிலையில்) ப்ரேம் மட்டும்தான் அந்த வார்த்தையைச் சொன்னாராம். அப்படியென்னப்பா அது யார் வாயிலும் நுழையாத வார்த்தை என்று நானும் வாயைப் பிளந்துகொண்டு காத்திருந்தேன்: ‘meta – novel’ என்று பிரணவ மந்திரத்தை உதிர்த்தார் ஜெயமோகன். “நாவலைப் பற்றியே பேசும் நாவல்” என்று அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார். Self – referentiality – ஐ நாவல் முழுக்கவும் விரவவிட்டிருக்கிற self – conscious – ஆன writing என்று இதை சற்று விளக்கப்படுத்தலாம்.
இதற்கு இரண்டு மறுப்புகளைச் சொல்லவேண்டும். மேற்சொன்ன இரண்டையும் தனிச்சிறப்பான பண்புகளாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள்தான் ‘meta – novel’ என்ற வரையறைக்குள் வரும் என்று சொல்ல முடியாது. காரணம் மிகவும் சாதாரணமானது.
இந்த இரண்டும் எல்லா வகைப்பட்ட எழுத்துக்களிலும், அதிலும் குறிப்பாக, மரபுவழிப்பட்ட யதார்த்தவாத நாவல்களிலுமேகூட ‘நீக்கமற நிறைந்திருப்பதைக்’ காட்ட முடியும். இது குறித்து சற்று விளக்கமான ஒரு கட்டுரையை “வேறு வேறு” இதழில் வாசகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம். [முதல் இதழோடு நின்று போனது. ‘சோம்பலில்’ வேறு எதிலும் எழுதவும் தோன்றவில்லை] சுருக்கம் கருதி இங்கு, ‘meta – novel’ என்று ஜெயமோகன் சொல்ல வருவதை யதார்த்தம் x புனைவு, புனைவெழுத்து x விமர்சன எழுத்து என்று எல்லைக் கோடுகளிட்டு சில புலங்களைப் பிரித்து வைத்திருப்பதை கேள்விக்குள்ளாக்குகிற, ஒரு பிரச்சினைப்பாடாக எடுத்துக்கொண்டு எழுதுகிற நாவல் என்று வரையறுக்கப்பட்டுள்ளதைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இரண்டாவது மறுப்பு மிகவும் அடிப்படையானது. அது ‘meta – novel ‘ இல்லை; meta – fiction. மேற்சொன்ன வகைப்பட்ட நாவல்களை இப்படியாகத்தான் விளிப்பார்கள்.
ஆக, ‘தமிழ் நாட்டிலேயே ஒரே அறிவாளி’ – யான ப்ரேமுக்கு meta – fiction என்ற மிகவும் சாதாரணமான, அடிப்படையான ஒரு வார்த்தைகூடத் தெரியவில்லை என்று ஆகிறது. ஆனால், சடாரென்று இப்படியான முடிவுக்கு வருவதற்கும் சற்று அச்சமாக இருக்கிறது. காரணம், திடீரென்று ‘meta – novel’ என்பது தன்னுடைய ‘neo – logism’ – களில் ஒன்று என்று அவர் எழும்பி வரலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு கத்தியையும் வைத்திருக்கலாம். (தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக meta – fiction – ஐப் பற்றிப் பேசியது நான் தான் அல்லது meta – fiction – ஐ ‘வெறும் கோட்பாட்டு அறிமுகமாக அல்லாமல் முதன்முதலாக படைப்புகளூடாக நிகழ்த்திக் காட்டியவர்கள் நாங்கள்தான்’ என்று தமது அடுத்த ஏதாவது தொகுப்பு ஒன்றின் பின்னட்டையில் போடலாம்.) யார் கண்டது. ஆனால், ஜெயமோகன் அதைச் சொன்ன சீரியஸான தொனியைப் பார்த்தால் அதை அப்படியே literal – ஆக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. தமிழ் நாட்டு அறிவு உயிரிகள், படைப்பாளிகளின் இலட்சணம் … முருகா!
சரி, ஜெயமோகன் கட்டுரைக்கு வருவோம். அதில் தமிழவன் (கொடுமையே!), நாகார்ச்சுனன், ப்ரேம் : ரமேஷ், க. பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக்குமாரசாமி இவர்கள்தான் தமிழில் பின் – நவீனத்துவவாதிகள் என்று மறுபடியும் ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். (அ. மார்க்சை இந்த லிஸ்டில் சேர்க்காததற்கு நன்றிகள் சொல்வோமாக!) இதாவது பரவாயில்லை. லக்கான், லெவி ஸ்ட்ராஸ், ஃபூக்கோ, தெரிதா, போத்ரியா (ஃபூக்கோ – சமூகவியல் அறிஞர், தெரிதா – மொழியியல் அறிஞர்; இந்தப் பட்டங்களை உலகிலேயே முதல் முறையாக இவர்களுக்குக் கொடுத்திருப்பது ஜெயமோகந்தான். துதிப்போமாக!) இவர்கள் மேற்கில் பின் – நவீனத்துவவாதிகள் என்று இன்னொரு லிஸ்ட்.
ஐயா, லெவி ஸ்ராஸுக்கும் பின் – நவீனத்துவத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. தான் ஒரு ஸ்ட்ரக்ச்சுரலிஸ்ட் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர் அவர். மிகக் கறாரான ஸ்ட்ரக்சுரலிச அணுகுமுறை அவருடையது. லக்கானுடைய அணுகுமுறையும் ஸ்ட்ரக்சுரலிச அணுகுமுறையே. ஃபூக்கோ எந்தவொரு பட்டப் பெயருக்கும் அகப்படாதவர். போஸ்ட் – ஸ்ட்ரக்சுரலிஸ்ட் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டதை மறுத்தவர். தெரிதா தத்துவவாதி என்பது உலகறிந்த விஷயம் (நீட்ஷே முன்னறிவித்த வருங்காலத்தின் தத்துவவாதிகளில் – attemptors/artist – philosophers – களில் ஒருவர் என்று சொல்லலாமா?)
அப்புறம், இலக்கியத்தில் post modern writing என்று அடையாளம் சொல்லத்தக்கவை உண்டு. அந்த வகையில், பின் – நவீனத்துவ இலக்கியம் என்று ஒரு ‘இசத்தைப்’ பற்றிப் பேசலாம். ஆனால், தத்துவத்தில் பின் – நவீனத்துவம் என்று ‘இசம்’ எதுவும் இல்லை. பின் – நவீனத்துவம் ஒரு ‘போக்கு’ (trend) இல்லை. சிம்பிளாகச் சொல்வதென்றால், அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சகாப்தத்தின் mood – ஒருவிதமான பொதுவான ‘மனநிலை’.
இறுதி உண்மைகள், உறுதியான பதில்கள், எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான பதில்களைத் தயாராக வைத்திருக்கும் தத்துவங்கள், கோட்பாடுகள் மீது உலகின் பெருவாரியான மக்கள் நம்பிக்கை இழந்து போயிருக்கும் நிலை. (இதனால், இது ஒரு gloomy mood என்று எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.) பின் – நவீனத்துவ நிலை – Post modern Condition.
‘இந்தியக் காவிய மரபின்’ தொடர்ச்சியாக நாவல்கள் பண்ணிக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறீர்கள். வாழ்த்துகிறோம். அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அறிவுத் துறைகள் என்று வந்தால் கொஞ்சமாவது அறிவு தேவை. நிறைய உழைப்பு தேவை. அறிமுகப் புத்தகங்களைப் படித்துவிட்டு, ‘தமிழ் நாட்டின் ஒரே அறிவாளியோடு’ உரையாடிவிட்டு சகட்டுமேனிக்கு அபிப்பிராயங்களை உதிர்ப்பதும், லிஸ்டுகள் போடுவது உங்களுக்கு ‘அழகு செய்யுமா’? யோசித்துப் பாருங்கள்.
* * *
(தொடரும் … )

நிறப்பிரிகை இதழ் 10,செப்டம்பர் 2000.

ஃஓக்கஸ் போக்கஸ்

ஒம் ரீம் க்ரீம், சூ மந்திர காளி!

அன்டா கா கசம், அபூ கா ஃஉகும், திறந்திடு சீசேம்!

இந்த “ரீம் க்ரீம்” “அண்டா கா கசம், அபூ கா ஃஉகும்”, என்பதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

சின்ன வயசிலிருந்தே இது போன்ற ‘மந்திரச்’ சொற்களின் மீது எனக்கு ஒரு ஆர்வம். ஒரு நூறு பேரையாவது இவற்றுக்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருப்பேன். யாரும் இதுவரையில் சொன்னதில்லை.

இதே போல ஆங்கிலத்தில் ஃஒக்கஸ் போக்கஸ் (Hocus Pocus) என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றி சுவாரசியமான ஒரு விஷயத்தை புத்தகங்கள் வழியாக தெரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த ஃஒக்கஸ் போக்கஸ் வெள்ளைக்கார ‘மந்திரவாதிகள்’ தந்திரங்கள் செய்து காட்டும்போது சொல்லும் கொச்சை இலத்தீன் மொழிச் சொற்றொடரின் முதலிரண்டு வார்த்தைகள்.

அந்த சொற்றொடர் இப்படிப் போகும்: ஒக்கஸ், போக்கஸ், டான்டஸ், டேலோன்டஸ், வேட் செலெரிடெர், ஜூபியோ (hocus, pocus,tontus, talontus, vade celeriter, jubeo.) இந்த வார்த்தைகளின் அர்த்தங்களை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.

ஃஒக்கஸ் போக்கஸ் – இது என் உடல்
டான்டஸ் – முழுமை
டேலோன்டஸ் – திறமை
வேட் செலரிடெர் – வேகமாக போ
ஜூபியோ – நான் கட்டளையிடுகிறேன்.

ஆக, இவற்றை சேர்த்துச் சொல்லும்போது, அர்த்தமற்ற வெறும் வார்த்தைக் குவியலாக, உளறலாக வந்து விழும். இதேபோல, கன்னியாகுமரி ஜில்லாவில், தக்கலை என்ற ஊரில் குடியிருக்கும் மலையாள மாந்த்ரீகர் ஒருவர், சில வருடங்களாக உதிர்த்து வரும் மந்திரம்: தமிழில் நாவலே இல்லை. என்னுடைய “விஷ்ணுபுரம்” தான் முதல் நாவல்.

வேறு எந்த மொழியிலாவது, எந்த ஒரு எழுத்தாளராவது இப்படி எழுதிப் பார்த்திருக்கிறீர்களா? தமிழுக்கு மட்டுமே இந்த பாக்கியம் நேர்ந்திருக்கிறது. அதற்காக நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அப்படி எழுதிய பெருமகனாரின் திருநாமத்தைச் சொல்லியே ஆகவேண்டும் இல்லையா: ஜெயமோகன்.

சரி, இந்த உளறலையெல்லாம் கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டியதுதான் என்று அமைதியாக இருக்க முயற்சித்தால், அதை, கேட்பதற்கு ஆளே இல்லை என்பதாக எடுத்துக் கொண்டு விடுகிறார் மேற்படியானவர்.

தெருவோரத்து செப்பிடு வித்தைக்காரன் கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும் “யாராவது இங்கே இருந்து நகர்ந்தால், வீட்டுக்குப் போனதும் ரத்த வாந்தி எடுத்து செத்துப் போவீர்கள்” என்று மிரட்டும் ரேஞ்சுக்கு இறங்கி விடுகிறார். எல்லோர் கவனமும் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக இவர் செய்யும் சில்லறைத் தந்திரங்களை இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.

அப்படி சமீபமாக இவர் செய்த “சீப் ட்ரிக்” கடந்த மூன்று வாரங்களாக “ஃஆட் நியூஸாக” விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

5.10.03 அன்று எழுத்தாளரும் பதிப்பாளருமான இளையபாரதியின் நூல் வெளியீட்டு விழா, முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் அறிவாலயத்தில் நடைபெற்றது. மறுநாள் ஜெயமோகனின் நூல் வெளியீட்டு விழா சென்னை ஃபிலிம் சேம்பரில். கூட்டத்தின் இறுதியில் பேசிய ஜெயமோகன், முந்தைய நாள் நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டு, “கருணாநிதி இலக்கியவாதி அல்ல. மூத்த இலக்கியவாதிகள் எல்லாம் அவரைத் துதிபாடியது கேவலமாக இருந்தது. எழுத்தாளர்கள் இப்படியெல்லாம் சீரழியக்கூடாது” என்று பேச, ஜுரம் தொற்றிக் கொண்டுவிட்டது. ஊரெல்லாம் ஜெயமோகன் பேச்சு.

ஒரு எழுத்தாளன் எழுதுவதை மட்டுமே உயிர்மூச்சாகக் கொண்டவன். கவன ஈர்ப்புத் தந்திரங்களிலிருந்து விலகி நிற்பவன். உருப்படியான சாதனைகளைச் செய்திருக்கிற எழுத்தாளர்களெல்லாம் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். உலக அளவிலும் சரி, தமிழிலும் சரி, இதற்குப் பலரை உதாரணமாகக் காட்டமுடியும். ஜெயமோகன் தனது முன்னோடிகளில் ஒருவராகக் குறிப்பிடும் ஜெயகாந்தனும்கூட அப்படியானவர்தான்.

ஜெயகாந்தனைப் பற்றிக் குறிப்பிடும்போது, சமீபமாகக் கேள்விப்பட்ட சம்பவம் ஒன்றைச் சொல்லத் தோன்றுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய முன்னாள் முதல்வர், முதல்வராக இருந்த சந்தர்ப்பத்தில், மறைந்த கண்ணதாசன் அவர்கள், திரு. கருணாநிதி கலந்து கொண்ட கூட்டமொன்றில் ஜெயகாந்தனையும் தந்திரமாக மேடையேற்றி விட்டிருக்கிறார்.

கருணாநிதி கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று ஆரம்பத்திலேயே மறுத்திருந்த ஜெயகாந்தன், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அன்று, அந்த மேடையில், இலக்கியம் பேசமுடியாது, அரசியல் பேசுகிறேன், என்று அறிவித்து, அன்றைய முதல்வரின் அரசியல் கொள்கைகளை விமர்சித்துப் பேசினாராம்.

இது துணிச்சல், நேர்மை, பலா பலன் எதிர்பாராத – விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத செயல். ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய கர்வம், தன்மதிப்பு, அதாவது சுயமரியாதை.

ஜெயமோகன் செய்திருப்பது போலித்தனம். சில்லறைத்தனம். ஆணவத்தின் வெளிப்பாடு. “எனது முன்னோடிகளாக நினைத்த மூத்த எழுத்தாளர்களெல்லாம் துதிபாடி நின்றார்களே” என்று வடிப்பது போலிக் கண்ணீர். இவர் எங்கெங்கு, எதன் பொருட்டு, யாருக்கெல்லாம் துதிபாடினார், யாருடைய வேலைக்கு வேட்டு வைக்கும் நோக்கத்தோடு மொட்டைக் கடுதாசி போட்டார், ‘குரங்கு டைப் அடிப்பது போல இருக்கிறது’ என்று தன் சக எழுத்தாளரை வசைபாடிய கதையை எல்லாம் எழுதினால் நாறிவிடும்.

அந்த சாக்கடைக்குள் காலைவிட எனக்கு விருப்பமில்லை. அதைவிட, திராவிட இயக்கத்தின் இலக்கியம், பிரச்சார இலக்கியம், என்று அவர் தொடர்ந்து செய்து வரும் பிரச்சாரத்திற்கு பதில் சொல்வது உருப்படியான காரியமாக இருக்கும். முதலாவது பதில், சற்று சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவது.

இலக்கியம் அப்படி ஒன்றும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடக்கூடிய பெரிய விஷயம் இல்லை. ஜெயமோகனின் கருத்துப்படியே இலக்கியத்தில் நாவலைவிட கவிதைதான் உயர்ந்த வடிவம். ஆனால், குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, ஒரு கவிதையைக் கூட, இதுநாள் வரையில் அவர் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. அவருக்கு சீட்டுக் கொடுத்து அனுப்பிவிடலாமா?

சினிமா, இசை, ஓவியம், நாடகம், கட்டிடக்கலை, போன்ற பல்வேறு கலைகளுள் (இதைப் பற்றியெல்லாம் ஜெயமோகனுக்கு என்ன தெரியும்?) நாவலும் கவிதையும் சேர்ந்த இலக்கியமும் ஒரு கலை. அவ்வளவுதான் அதற்கு முக்கியத்துவம். இங்கு, கலை என்பதுதான் முக்கியமான விஷயம். இப்படி, கலை என்ற விரிவான பார்வையிலிருந்து அணுகினால் திராவிட இயக்கத்தின் பங்களிப்பை புரிந்து கொள்ள முடியும்.

என்.எஸ். கிருஷ்ணன், எம்,ஆர், ராதா போன்ற சிறந்த கலைஞர்களை திராவிட இயக்கம்தான் உருவாக்கியது. திரு. கருணாநிதியின் திரை வசனங்கள் அவரைக் கலைஞர் ஆக்குபவை. அவற்றின் மொழித்திறனை யாரும் மறுத்துவிட முடியாது. அண்ணாவின் சிறுகதைகளில் பல, இலக்கியத் ‘தரத்தில்’ இருந்து இம்மியளவும் கூட இறங்கி விடாதவை.

திராவிட இயக்கம் மணிக்கொடி இயக்கத்தைப் புறக்கணித்தது என்று ஜெயமோகனைப் போல அசட்டுத்தனமான குற்றச்சாட்டை வைப்பவர்களால்தான் அவற்றைப் (எதையும்) படிக்காமலேயே பிரச்சாரம் என்று புறக்கணிக்க முடியும். மணிக்கொடி எழுத்தாளர்கள்தான் திராவிட இயக்கத்தை புறக்கணித்தார்களே தவிர திராவிட இயக்கம் அல்ல. புதுமைப் பித்தன் மறைந்தபோது “திராவிட நாடு” இதழில் அண்ணா வெளியிட்ட இரங்கல் குறிப்பு அவரது அக்கறைக்கு சாட்சியாக நிற்கும்.

இன்னமும், திராவிட இலக்கியம் பிரச்சார இலக்கியம் என்று ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தால். ராஜாஜி தொடங்கி, மெளனி, சுந்தர ராமசாமி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்றோர், சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட இலக்கியம் என்ற பெயரில் மறைமுகமான, நுட்பமான இந்துத்துவ பிரச்சாரத்தைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் என்று ஒருவர் எதிர் – வாதம் வைக்க முடியும்.

ஜெயமோகன் மீதேகூட அவர் ஆர்.எஸ்.எஸ்,காரர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அவரும் அதைத் தொடர்ந்து மறுத்து வருகிறார். அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம். ஆனால், அவரது விஷ்ணுபுரம் நாவலை விஜயபாரதம் ஸ்டாலில் வைத்து விற்றார்கள் என்பது ஊரறிந்த கதை. அதற்கு அவர் என்ன செய்வார் பாவம் என்று ஒருவர் ‘அப்பாவித்தனமாகக்’ கேட்கலாம்.

நாஜிக்களின் ஜெர்மனியில் வாழ நேர்ந்த துரதிர்ஷ்டசாலியான கலைஞர்களுள் ஒருவர் ஃப்ரிட்ஸ் லேங். மிகச் சிறந்த சினிமாக் கலைஞரான (இயக்குனர்) அவரது திரைப்படங்களை, ஃகிட்லர் தனது கொள்கைகளுக்கு நெருக்கமானவை என்று உச்சிமோந்து பாராட்டினான். மனிதகுல விரோதிகளுக்கு ஏதோ ஒரு வகையில் சாதகமாக அமைந்துவிட்ட படங்களை எப்படி தான் எடுக்க நேர்ந்தது என்று அதிர்ந்துபோன லேங், முதல் காரியமாக, தனது படங்களைத் தானே நிராகரித்தார். ஜெர்மனியைவிட்டே வெளியேறினார்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தமக்குச் சாதகமானது என்று கருதிய ஒரு படைப்புடன், ஒரு கலைஞன் என்ற வகையில் ஜெயமோகனுக்கு என்ன உறவு இருக்க முடியும்? ஜெயமோகனின் பதில் இதுவரையில் கள்ள மெளனமாகத்தான் இருந்து வருகிறது.

பின் குறிப்பாக:

இக்கட்டுரை “நக்கீரன்” (அக்டோபர் 31, 2003) இதழில் வெளியானது. அவ்வருட சென்னை புத்தகக் கண்காட்சியின்போது பலருக்கும் பதில் சொல்லும் பொருட்டு (அவருக்கும் காலச்சுவடு குழுவினருக்கும் மோதல் உச்சத்திலிருந்தாக நினைவு) ஜெயமோகன் ஒரு நீண்ட துண்டறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், அவர் மீது ‘அவதூறு’ வீசியவர்களாக ஒரு நீண்ட பட்டியலைத் தந்திருந்தார். அதில் எனது பெயரும் சேர்க்கப்பட்டிருந்து. மற்றபடி, இக்கட்டுரையில் எழுப்பியுள்ள கேள்வி எதற்கும் அவர் பதில் அளிக்க முயற்சிக்கவில்லை. இனி அதற்கு அவருக்கு நேரமும் இருக்கப் போவதில்லை. சினிமாவைப் பற்றிய (மாற்று சினிமாவைப் பற்றி மறந்துவிடுங்கள்) எந்த அக்கறையும், எந்தத் தேடலும் அற்ற ஜெயமோகன் இப்போது கோடம்பாக்கத்தில் குப்பை அள்ளிக் கொண்டிருக்கிறார்.

%d bloggers like this: