வாய்ப்பாட்டு மார்க்சியரின் அலுங்காத இந்திய எதிர்ப்பும் அமெரிக்க தீர்மானத்தின் சட்ட நுணுக்க அரசியலும்

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்திய அரசு நீர்த்து போகச் செய்த விடயம் உலகறிந்தது. தீர்மானம் நிறைவேறிய பிறகு இலங்கை அரசின் அமைச்சரவைப் பிரதிநிதி கெஹெலியா ரெம்புக்வேலா, தீர்மானத்தில் ஒரு முக்கியமான அழுத்தம் நீக்கப்பட்டதற்கு தமது அரசு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று அறிவித்தார்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அரசு துணைச் செயலாளர் ராபர்ட் ப்ளேக்கும், இத்தீர்மானத்தின் அம்சங்களை வடிவமைப்பதில் அமெரிக்காவுடன் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒத்துழைத்தது என்று அறிவித்தார். ஆக, பெயரளவில் அது அமெரிக்க தீர்மானமாக இருந்தாலும், இந்தியாவின் ஒத்துழைப்பின்றி அதன் அம்சங்கள் வரையறுக்கப்பட முடியாது என்பது தெளிவு.

இவ்வருடமும், தீர்மானத்தின் இரண்டாவது வரைவிலேயே மிக மோசமான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இலங்கை அரசு இராணுவ நீக்கம் செய்யவேண்டும் என்று முதல் வரைவில் இருந்த பகுதியே நீக்கப்பட்டிருக்கிறது. மீண்டும், செப்டெம்பர் மாதம் வர இருக்கும் ஐநா மனித உரிமைக் கவுன்சிலின் அமர்வு வரையில் சிங்கள அரசுக்கு அவகாசமும் அனுசரணையும் வழங்கப்பட உள்ளது. கடந்த வருடமும் சிலர் அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கக்கூடாது என்றும் இந்திய அரசை எதிர்த்து போராடுவதே நமது வேலை என்றும் குட்டையைக் குழப்பினார்கள்.

இவ்வருடமும் அதே குழுவினர் அமெரிக்க தீர்மானத்தை எதிர்ப்பது நமது வேலை அல்ல. ”வலுவான” தீர்மானம் ஒன்றை ஐநா மனித உரிமை கவுன்சிலில் கொண்டுவரும்படி இந்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அத்திசையில் நமது போராட்டங்கள் இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார்கள். அத்தகைய வாதம் இந்திய அரசுக்கு எவ்வகையில் சாதகமானது என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

முதலில், அமெரிக்க தீர்மானத்தின் முக்கிய அம்சம் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வது நல்லது. அமெரிக்கா முன்மொழியும் தீர்மானம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இனப்படுகொலை என்ற வார்த்தையையே மிகக் கவனமாகத் தவிர்த்து வருகிறது. அவ்வாறு தவிர்ப்பதன் காரணம் என்ன? இனப்படுகொலை குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கில் தீர்மானம் இயற்றினால் ஏற்படும் பாரதூர விளைவுகள் யாவை?

1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு எதிரான ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையின் முதல் பிரிவு, இனப்படுகொலையை தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கிறது. இரண்டாம் பிரிவு, இனப்படுகொலைக்கான வரையறையைத் தருகிறது. மூன்றாம் பிரிவு, இனப்படுகொலை தொடர்பாகத் தண்டனைக்குரிய செயல்கள் எவை என்று வரையறுக்கிறது. அவை பின்வருமாறு:

அ) இனப்படுகொலை

ஆ) இனப்படுகொலை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டுதல்

இ) இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் பகிரங்கமாகவும் தூண்டுதல்

ஈ) இனப்படுகொலை செய்ய முயற்சித்தல்

உ) இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல். (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide Adopted by Resolution 260 (III) A of the United Nations General Assembly on 9 December 1948.)

இப்பிரிவுகள் சிலவற்றின் முக்கியத்துவத்தையும் நுட்பத்தையும் புரிந்துகொள்வது அவசியம். பொதுவாக, அனைத்து நாட்டுச் சட்டங்களும், குற்றத்தைப் புரிந்தவரை முதன்மைக் குற்றவாளி என்று வரையறுக்கின்றன. இரண்டாம் நிலைக் குற்றவாளிகளாக, முதன்மைக் குற்றவாளியின் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தவர்களை வரையறுக்கின்றன. “உடந்தையாக” இருந்தவர்களுக்கான வரையறை என்பது குற்றத்தை இழைக்கத் துணைபுரிந்தவர்கள், திட்டம் தீட்டியதில் பங்குபெற்றவர்கள், குற்றத்தை இழைக்கத் தூண்டியவர்கள் எனப் பலப் படிநிலைகள் கொண்டது.

குற்றத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்து இரண்டாம் நிலைக் குற்றவாளிகளான உடந்தையாக இருந்தவர்களுக்கான தண்டனையின் தீவிரம் மாறுபடும். மேலே குறித்துள்ள படிநிலை வரிசையில் அவர் எந்நிலையில் இருக்கின்றார் என்பதைப் பொறுத்து அவருக்கான தண்டனையின் தீவிரம் மாறுபடும். எடுத்துக்காட்டாக, கொலைக் குற்றத்தைச் செய்தவருக்கு, அவர் அக்கொலைக் குற்றத்தைச் செய்யப் போகிறார் என்று தெரிந்தே அதற்கான ஆயுதத்தைத் அளிப்பவருக்கு நிச்சயம் தீவிரமான தண்டனை கிடைக்கும். தெரிந்தே ஆயுதத்தைத் தந்தவருக்கும், அக்கொலையைச் செய்யத் திட்டமிடுவதில் பங்குபெற்ற – ஆனால், நேரடியாகக் கொலையைச் செய்யாத மற்றொருவருக்கும் இடையில் “உடந்தையின்” தன்மையில் வித்தியாசம் இருப்பதால், தண்டனையின் தீவிரத்திலும் வித்தியாசம் இருக்கும்.

இனப்படுகொலை குறித்தான சர்வதேசச் சட்டம் இதிலிருந்து மாறுபட்டது. சர்வதேசச் சட்டம் இனப்படுகொலையை “குற்றங்களில் எல்லாம் ஆகப்பெரும் குற்றம்” – “Crimes of Crimes” என்று வகைப்படுத்துகின்றது. இக்குற்றத்தை நிச்சயமாக ஒரு நபரால் மட்டுமே நிகழ்த்த முடியாது. பல்வேறு படிநிலைகளில் பல்வேறு நபர்கள், தரப்பினரின் ஒத்துழைப்பின்றி, பங்குபெறுதல் இன்றி இனப்படுகொலை நிகழமுடியாது. ஆகையால், அவ்வாறு பங்குபெறும் எந்த ஒரு நபரும், தரப்பும் தண்டனையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறையோடு சர்வதேசச் சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இனப்படுகொலையைக் களத்தில் நிகழ்த்துபவர்கள் ஈழத்தில் நிகழ்ந்தது போல, மிகச் சாதாரணமான சிங்கள இராணுவ வீர்ர்களாக இருக்கலாம். அல்லது ருவாண்டாவில் நிகழ்ந்தது போல இராணுவ வீர்ர்கள் மட்டுமின்றி மிகச் சாதாரண அண்டை வீட்டுக்காரராகவும் இருக்கலாம். ஜெர்மனியில் யூத இனப்படுகொலையைக் களத்தில் நிகழ்த்திய மிகச் சாதாரணமான அரசு ஊழியர்களாகவும் இருக்கலாம். நடப்பில், பெரும்பாலான இனப்படுகொலைகள் இத்தகைய “சாதாரண” மனிதர்களாலேயே களத்தில் நிகழ்த்தப்படுகின்றது.

இனப்படுகொலையை நிகழ்த்தத் தூண்டுபவர்கள், திட்டமிடுபவர்கள், வழிநடத்துபவர்களோ களத்தில் இருந்து வெகுதொலைவில் இருப்பவர்கள். அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் நபர்கள் – ஜனாதிபதிகள், சர்வாதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், சிவில் உயர் அதிகாரிகள். இராஜபக்சே காய்கறி நறுக்குவதற்காகக் கூட தன் வாழ்நாளில் ஒருமுறைகூட கத்தியைப் பிடிக்காதவராக இருக்கலாம். ஹிட்லர் தனிப்பட்ட முறையில் ஆகப்பெரும் கோழையாக இருக்கலாம். ஆனால், இவர்களே இனப்படுகொலையின் சூத்திரதாரிகள்.

தேசியச் சட்டங்களின்படி நோக்கினால், இனப்படுகொலையைத் ”திட்டமிடுவது, தூண்டுவது, வழிகாட்டுவது” ஆகிய குற்றங்கள் இரண்டாம் நிலைக் குற்றங்கள் என்ற அளவிலே நின்றுவிடும். நேரடியாகக் களத்தில் இனப்படுகொலையைச் செய்தவர்களே முதன்மைக் குற்றவாளிகள் ஆனபடியால், அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையைக் காட்டிலும் குறைவான தண்டனையே தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று அதிகாரத்தின் உச்சங்களில் இருப்பவர்கள் தப்பித்துக் கொண்டுவிட முடியும். இதை மனதில் கொண்டு, இனப்படுகொலை தொடர்பாகத் தண்டனைக்குரிய செயல்களாக இனப்படுகொலைக்கு எதிரான ஜெனீவா மாநாட்டுத் தீர்மானத்தின் மூன்றாம் பிரிவு வரையறுத்துள்ள செயல்களை மீண்டும் பார்ப்போம்:

அ) இனப்படுகொலை

ஆ) இனப்படுகொலை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டுதல்

இ) இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் பகிரங்கமாகவும் தூண்டுதல்

ஈ) இனப்படுகொலை செய்ய முயற்சித்தல்

உ) இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல்.

இவற்றில் முதலாவதும் நான்காவதும் (இனப்படுகொலை, இனப்படுகொலை செய்ய முயற்சித்தல்) களத்தில் நேரடியாக இனப்படுகொலை செய்பவர்கள் குறித்தவை. இரண்டாவதும் மூன்றாவதும் (இனப்படுகொலை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டுதல், இனப்படுகொலை செய்ய நேரடியாகவும் பகிரங்கமாகவும் தூண்டுதல்) களத்தில் இனப்படுகொலையில் ஈடுபடாத, அதிகாரத்தின் உச்சங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருப்பவர்கள் குறித்தவை. இறுதியாக வருவது இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல். அதாவது, சர்வதேசச் சட்டம், வழமையான தேசியச் சட்டங்களின்படி குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் இரண்டாம்நிலைக் குற்றவாளிகள் செய்யக்கூடிய செயல்களான ”சதித்திட்டம் தீட்டுதல், தூண்டுதல்” ஆகியவற்றை முதல் நிலைக் குற்றச்செயல்களாக வரையறுக்கிறது.

இத்தகைய நுட்பத்தின் மூலம், குற்றத்தில் நேரடியாக ஈடுபடாத, அதிகாரத்தின் உச்சங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருக்கும், ஆனால் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளான ஜனாதிபதிகள், சர்வாதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், சிவில் உயர் அதிகாரிகள் எவரும் எவ்வகையிலும் தப்பித்துவிடுவதற்கான வழிகளை அடைத்துவிடுகிறது. இவற்றுக்கு அப்பாற்பட்ட வேறுவகைகளிலான செயல்களை இனம்பிரித்துக் காண, ”உடந்தையாக இருத்தல்” என்று தனியாக ஒரு பிரிவையும் உருவாக்கி வைத்திருக்கிறது. அவற்றையும் தண்டனைக்குரிய குற்றங்களில் ஒன்றாகத் தனித்தும் நேரடியாகவும் குறிப்பிடுவதன் மூலம் “குற்றங்களில் எல்லாம் ஆகப்பெரும் குற்றமான” இனப்படுகொலையைப் பொறுத்த அளவில், முதல்நிலைக் குற்றங்கள் – இரண்டாம்நிலைக் குற்றங்கள் என்ற பிரிவினைக்கே இடம் இல்லை என்பதை வலியுறுத்துகின்றது.

இது தொடர்பில் கவனத்திற்குரிய மேலும் இரு அம்சங்கள் உண்டு. ஒன்று, சர்வதேசச் சட்டங்களின்படி களத்தில் நேரடியாக இனப்படுகொலையில் ஈடுபட்ட குற்றவாளி தண்டனைபெறாமல் இருந்தாலும் (தப்பித்து தலைமறைவாக இருக்கும்பட்சத்தில்) இனப்படுகொலைக்கு உடந்தையானவரை அக்குற்றச் செயலுக்காகத் தண்டிக்க முடியும். மற்றது, இனப்படுகொலையை நிகழ்த்துவதற்குப் பயன்பட்ட கருவிகளை, ஆயுதங்களை, பிற பொருட்களை (எ. கா: விஷவாயு) அளித்த தனியார் நிறுவனங்களும் அதன் அதிகாரிகளும்கூட இனப்படுகொலைக் குற்றத்திற்கு உடந்தையானவர் என்று தண்டிக்கப்பட முடியும்.

இதில் நாம் அடுத்து கவனத்தில் கொள்ள வேண்டியது இறுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள இனப்படுகொலைக்கு உடந்தையாக இருத்தல். இனப்படுகொலையில் உடந்தையாக இருந்தமையாகக் கருதத்தக்க செயல்கள் யாவை?

ருவாண்டாவிற்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் பிரிவு 91 இனப்படுகொலையில் உடந்தையாக இருப்பவர்களை கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறது:

1) அன்பளிப்புகள், வாக்குறுதிகள், மிரட்டல்கள், அதிகார அத்துமீறல், குற்றமாகக் கருதத்தக்க வகைகள் அல்லது சூழ்ச்சிகள் மூலம் அத்தகையை செயலைச் செய்யும்படி நேரடியாகத் தூண்டுதல் அல்லது செய்யும்படி ஆணையிடும் நபர் அல்லது நபர்கள்.

2) அத்தகைய செயலில் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்தே, ஆயுதங்கள், கருவிகள் அல்லது வேறு வழிவகைகளைப் பெற்றுத்தருதல்.

3) அத்தகைய செயலைச் செய்யும் குற்றவாளி அல்லது குற்றவாளிகள் அத்தகைய செயலைச் செய்வதற்குத் தயார்படுத்தல் அல்லது திட்டமிடுதல் அல்லது அச்செயலைத் திறம்படச் செய்து முடித்தலுக்கு அறிந்தே உதவி செய்யும் அல்லது தூண்டுதல் செய்யும் நபர் அல்லது நபர்கள்.

இவற்றில், மூன்றாவதான செயல்களில் ஈடுபட்டதாக இந்திய அரசைக் குற்றம்சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்களை உடனடியாகத் திரட்ட முடியாதென்றாலும், அத்தகைய வகையில் இந்தியா செயல்பட்டிருக்கிறது என்பது பலமான ஊகத்திற்கு உரியது என்று குறைந்தபட்சமாகவேணும் கூற இயலும்.

ஆனால், இரண்டாவது செயலில் இந்திய அரசு ஈடுபட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்படையாகவே இருக்கின்றன. 2000 ஆம் ஆண்டு இந்திய அரசு சிங்கள அரசிற்கு சுகன்யா என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் 2007 ஆம் ஆண்டு (இனப்படுகொலை போரின் துவக்கத்தில்) விக்ரம் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் ரோந்துக் கப்பலையும் வாடகைக்கு அளித்திருக்கிறது. மேலும் இந்திரா என்று பெயரிடப்பட்ட ராடார்களை 2006 – இல் இரண்டும் 2007 – இல் இரண்டும் அளித்திருக்கிறது. (Arms Trade with Sri Lanka – global business, local costs. Jonas Lindberg, Camilla Orjuela, Siemon Wezeman, Linda Åkerström, 2001 பக்: 44 – 45) இவ்வாயுதங்களின் உதவியில்லாமல் சிங்கள அரசாங்கம் இனப்படுகொலையை நடத்தி முடித்திருக்கவியலாது.

இந்த ஆதாரம் ஒன்றே, ஈழத்தில் இனப்படுகொலையை நிகழ்த்திய சிங்கள அரசிற்கு, ஆங்கு இனப்படுகொலை அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்தே உதவி செய்த இந்திய அரசு அவ்வினப்படுகொலைக்குத் துணைநின்ற உடந்தையான குற்றவாளி என்பதைக் காட்ட போதுமானது. சற்று முன்னர் குறித்துள்ளபடி, “குற்றங்களில் எல்லாம் ஆகப்பெரும் குற்றமான” இனப்படுகொலையில் முதல் நிலைக் குற்றம், இரண்டாம் நிலைக் குற்றம் என்ற பாகுபாட்டிற்கே இடமில்லை. அவ்வகையில் இந்திய அரசைச் சர்வதேசச் சட்டத்தின் கீழ் இனபடுகொலை குறித்த விசாரணையில் குற்றவாளிகளில் ஒரு தரப்பாக நிறுத்த முடியும். அதே போன்று, அமெரிக்க அரசும் பிரிட்டிஷ் அரசும் இனப்படுகொலையில் உடந்தையான தரப்பினராக நிறுத்தப்பட முடியும்.

அத்தகைய ஒரு சூழல் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காகவே, ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானங்களில், இனப்படுகொலை என்ற வார்த்தையை அமெரிக்க அரசும் இந்திய அரசும் மிகக்கவனமாகத் தவிர்த்து வருகின்றன. தற்சார்பான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மெலிதான அழுத்தத்திலும்கூட இனப்படுகொலை குறித்து கவனமாக மௌனம் காக்கின்றன.

மாற்றாக, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணையே (ஒருவேளை நடந்தால்) நடத்தப்பட வேண்டும் என்பதையே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இவ்விடயங்கள் குறித்த விசாரணையில், சிங்கள அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு உள்நாட்டுத் தரப்புகள் மட்டுமே குற்றவாளி எனக் குற்றம் சுமத்தப்பட முடியும். மூன்றாம் தரப்பான வேறு நாடுகளை உடந்தையான குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லை என்றும் கூறலாம்.

இலங்கை தீவினில் நடைபெற்ற போர் சர்வதேசச் சட்டங்களின்படி ஒரு “உள்நாட்டு போர்”. சர்வதேச போர் அன்று. ஆனால், சர்வதேச நாடுகளின் பங்களிப்பைப் பலவகைகளில் (அமைதிப் பேச்சு வார்த்தைகள், இராஜ தந்திரத் தலையீடுகள், ஆயுதங்கள் கொள்வினை) கொண்டிருந்த போர். இதில், சர்வதேச நாடுகளின் பலவிதமான பங்களிப்புகளும் தலையீடுகளும் அதன் விளைவுகளும் வெளிவருவதைத் தவிர்த்துவிட்டு, “உள்நாட்டு போர்” குறித்த உள்நாட்டு விசாரணையோடு, உள்நாட்டுத் தரப்புகளை மட்டுமே குற்றவாளிகளாக நிறுத்திப் பிரச்சினையை அதோடு மூடிவிடவே இந்திய அமெரிக்க அரசுகள் முயற்சிக்கின்றன.

இனப்படுகொலை குறித்த தற்சார்பான சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றால், இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால், உடந்தைக் குற்றவாளிகள் அனைவரும் குற்றவாளிக் கூண்டில் ஏற நேரிடும். புவிசார் அரசியல் என்ற அம்சத்திற்கு அப்பாற்பட்டு, இலங்கை அரசின் மீது கடுமையான நடவடிக்கை எதையும் ஐநா மன்றமோ ஐநாவின் மனித உரிமைக் கவுன்சிலோ எடுத்துவிடாமல் இந்திய அமெரிக்க அரசுகள் தடையாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். “வலுவான”தொரு தீர்மானத்தை ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவருமாறு இந்திய அரசை நிர்பந்தித்து போராட வேண்டும் என்ற வாதத்திற்குத் திரும்புவோம்.

இதுவரை விளக்கியிருப்பதை மனதில் கொண்டால், இந்த வாதம் இனப்படுகொலையில் உடந்தைக் குற்றவாளியாகக் குற்றம்சாட்டப்பட வேண்டிய இந்திய அரசிற்கு அத்தகையை நெருக்கடி உருவாகாமல் தடுக்கும் வாதம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். வேறுவகையில் இத்தகைய வாதத்தை வைப்பவர்களை குற்றத்திற்கு உடந்தையான தரப்பிற்கு உடந்தையாக இருப்பவர்கள் என்றே சொல்ல முடியும். உடந்தைக் குற்றவாளிக்கு உடந்தையான இத்தரப்பின் முன்வரிசையில் தோழர் தியாகு நிற்கிறார். வாய்ப்பாட்டு மார்சியர்களின் முற்றிய தமிழ் வாரிசே தான் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார். திண்ணைப் பேச்சு மார்சியத்தை தாண்டியவரல்ல என்று சாட்சியமளிக்கிறார்.

திண்ணைப் பேச்சு மார்க்சியர்களுக்கே உரிய குதர்க்கத்தோடு, “இனப்படுகொலை என்ற முன்முடிவோடு எப்படிப் பன்னாட்டு விசாரணையை கோரமுடியும்?” என்று எதிர் கேள்வியும் எழுப்புகிறார். இவ்விடயம் தொடர்பாக, 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் 18 இல் ஐநா மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சிலில் இயற்றப்பட்ட தீர்மானம் 1564 இன்படி அமைக்கப்பட்ட டார்ஃபர் குறித்த பன்னாட்டு விசாரணைக் குழு, டார்ஃபரில் சர்வதேச மனிதநேயச் சட்டங்களும் மனித உரிமைச் சட்டங்களும் மீறப்பட்டுள்ளனவா என்பதை மட்டுமின்றி இனப்படுகொலை நிகழ்ந்துள்ளதா இல்லையா என்பதைப் பற்றியும் விசாரிக்க அதிகாரம் கொண்டதாக அமைக்கப்பட்டது என்பதை அவரது கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

(Acting under Chapter VII of the United Nations Charter, on 18 September 2004 the Security Council adopted resolution 1564 requesting, inter alia, that the Secretary-General ‘rapidly establish an international commission of inquiry in order immediately to investigate reports of violations of international humanitarian law and human rights law in Darfur by all parties, to determine also whether or not acts of genocide have occurred, and to identify the perpetrators of such violations with a view to ensuring that those responsible are held accountable’. – Report of the International Commission of Inquiry on Darfur to the United Nations Secretary-General Pursuant to Security Council Resolution 1564 of 18 September 2004)

இவ்வாறு உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பரப்பி, இனப்படுகொலை என்ற நோக்கில் விசாரணை நடத்தக் கோருவதையே கேள்விக்குரியதாக்கும் தியாகு, வெறுமனே திண்ணை பேச்சு வாய்ப்பாட்டு மார்க்சியர் மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் நலன்களால் பீடிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகத்தையே இது எழுப்புகின்றது. இவரோடு சேர்ந்து இயங்கும் வாய்ப்பாட்டு மார்க்சியக் குழுவினரும், “பிரதான எதிரி” “புரட்சியை ஏற்றுமதி செய்யவியலாது” “ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடுவது என்பது உள்நாட்டு அரசை எதிர்த்து போராடுவது” என்பது போன்ற லெனினிய சூத்திரங்களை ஒப்பித்துக் கொண்டே, குற்றத்திற்கு உடந்தையான தரப்பிற்கு உடந்தையாக செயல்படுகின்றனர்.

சுற்றுச்சூழல் தொடர்பான தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை வைத்திருக்கும் பா. ம. கவை சேர்ந்த அருள் இரத்தினம் என்பவரும், தி. மு. க வின் “டெஸோ” குழுவினரும்கூட இந்திய அரசிற்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும் என்ற தியாகுவின் வாதத்தையே மீண்டும் மீண்டும் வைக்கின்றனர். பன்னாட்டு பெரும் நிறுவனங்களின் பிடியிலும் பார்ப்பனர்களின் கட்டுக்குள்ளும் அகப்பட்டிருக்கும் இந்திய அம்னெஸ்டி “கம்பெனியும்” ”வலுவான தீர்மானத்தைக் கொண்டுவருமாறு பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்தும்” கையெழுத்து இயக்கமொன்றை முன்னெடுத்திருக்கிறது.

மார்க்சிய எதிர்ப்பு, அமெரிக்க ஆதரவு தமிழ்நாட்டு என். ஆர். ஐ பெயர்ப் பலகை அமைப்பு ஒன்றும் அமெரிக்காவை எதிர்க்கக்கூடாது என்று தீவிர “லாபி” இயக்கமொன்றை முன்னெடுத்திருக்கிறது.

மேடையில் ஆடுபவர் யாரென்று தெரிகிறது. ஆட்டுவிப்பவர் யாரோ?

தொடர்பில் வாசிக்க வேண்டியவை: 

Genocide in International Law The Crimes of Crimes, William A. Schabas, Cambridge University Press 2000.

Enforcing international humanitarian law: Catching the accomplices, William A. Schabas,   RICR Juin IRRC June 2001 Vol. 83 No 842 (439 – 458)

The Permanent International Criminal Court – Legal And Policy Issues Edited by Dominic McGoldrick, Peter Rowe and Eric Donnelly. Oxford and Portland Oregon, 2004.

நன்றி: tamilsnow.com

அமெரிக்க தீர்மானம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

தமிழ் நாடு எங்கும் மாணவர் போராட்டங்களையும் அனைத்து அரசியல் வட்டாரங்களிலும் பலத்த சர்ச்சைகளையும் உருவாக்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கமிஷனின் 22 வது அமர்வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 13 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க, 8 நாடுகள் வாக்களிக்காமல் தவிர்க்க, 26 நாடுகளின் ஆதரவு ஓட்டுக்களைப் பெற்று ஒருவழியாக நிறைவேறி முடிந்தது.

அரசு வட்டாரங்களில், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானமாக சொல்லப்பட்டாலும், இதன் அம்சங்களைக் கூர்ந்து கவனித்த அரசியல் பார்வையாளர்கள் பலதரப்பினரும் அமெரிக்காவின் இத்தீர்மானம், உண்மையில் இலங்கை அரசு சீனாவின் பக்கம் மேலும் சாய்வதைத் தடுத்து,  தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான ஒரு மென்மையான மிரட்டல் முயற்சி என்பதைச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.

மற்றொரு புறம், இத்தீர்மானம் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்த கேள்விகளும் பலமாக எழுந்து கொண்டிருந்தன. இந்திய அரசு வட்டாரங்களில் இருந்து கிடைத்த பதில்கள் அனைத்திலும் ஒரு சில அம்சங்கள் மட்டுமே தொடர்ந்து வலியுறுத்தப்பட்டன. ”தமிழ் மக்களின் ஆதங்கங்களைப் புரிந்து கொள்கிறோம். என்றாலும், இலங்கை நமது நட்பு நாடு. இறையாண்மையுள்ள நமது அண்டை நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை” என்பவையே அவை.

இருவாரங்களுக்கும் மேலாக நீடித்துக் கொண்டிருந்த குழப்பம் மிகுந்த சூழலில், மார்ச் 19 அன்று, அமெரிக்க தீர்மானத்தின் திருத்தப்பட்ட வரைவு வெளியானது. அதில், தீர்மானத்தின் பல முக்கிய அம்சங்கள் நீர்த்துப் போகச் செய்யப்பட்டிருந்தன. நீர்க்கச் செய்ததில் இந்தியாவின் பங்கு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அக்குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

ஆனால், தீர்மானம் நிறைவேறிய பிறகு, இலங்கை அரசின் அமைச்சரவைப் பிரதிநிதி கெஹெலியா ரெம்புக்வேலா, (Keheliya Rembukwella, Cabinet spokesman, Sri Lanka) தீர்மானத்தில் ஒரு முக்கியமான அழுத்தம் நீக்கப்பட்டதற்கு தமது அரசு இந்தியாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது என்று அறிவித்தார். அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அரசு துணைச் செயலாளர் ராபர்ட் ப்ளேக்கும், இத்தீர்மானத்தின் அம்சங்களை வடிவமைப்பதில் அமெரிக்காவுடன் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒத்துழைத்தது என்று கூறியுள்ளார். (http://www.lankanewsweb.com/english/index.php?option=com_content&view=article&id=3714%3Aus-warns-of-international-mechanism-if-sl-fails-impartial-probe&catid=1%3Ageneral&Itemid=29)

அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தின் முதல் வரைவு வலியுறுத்திய அம்சங்கள் என்ன? எவ்வாறு அவை நீர்த்துப் போகச் செய்யப்பட்டன? இலங்கை அரசு, இந்தியாவிற்கு நன்றி தெரிவிக்கும் அளவிற்கு இந்தியா செய்த முக்கிய உதவிதான் என்ன?

அமெரிக்கத் தீர்மானத்தின் முதல் வரைவு பிப்ரவரி 18 ஆம் தேதி ஐநா மனித உரிமைக் கமிஷனில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளிடையே சுற்றுக்கு விடப்பட்டது. அதில் சிறு திருத்தங்கள் செய்யப்பட்டு இரண்டாவது வரைவு மார்ச் 7 ஆம் தேதி மீண்டும் சுற்றுக்கு விடப்பட்டது.

மூன்றாவது திருத்தப்பட்ட வரைவு, மார்ச் 12 ஆம் தேதி சுற்றுக்கு வந்தது. அதில்தான் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் மாற்றங்கள் தலைகாட்டியிருந்தன. மார்ச் 19 ஆம் தேதி நான்காவது திருத்தப்பட்ட வரைவு சுற்றுக்கு வந்தது. அதன் மீதுதான் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த வரைவே இறுதித் தீர்மானமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ஐநா மனித உரிமைக் கமிஷனின் 22 ஆவது அமர்வில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தின் முதல் வரைவில் இருந்து இறுதி வரைவு வரையில் அப்படி என்ன என்ன அம்சங்கள் படிப்படியாக மாற்றப்பட்டன அல்லது நீர்த்துப் போகச் செய்யப்பட்டன?

பிப்ரவரி 18 ஆம் தேதி சுற்றுக்குவிடப்பட்ட முதல் வரைவு வலியுறுத்திய முக்கிய அம்சங்கள் இவை:

  1. தீர்மானத்தின் முகவுரைப் பகுதியின் முதல் வரி “ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் படியும் (இன்ன பிற) பொருத்தமான அம்சங்களின் படியும் வழிநடத்தப்பட்டு” என்று துவங்குகிறது.
  2. மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் அனைத்தையும் தனது மக்களுக்கு இலங்கை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்.
  3. எல் எல் ஆர் சி அறிக்கையின் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை நிறைவேற்ற அமைக்கப்பட்ட தேசிய செயல் திட்டம், அறிக்கையின் அனைத்து அம்சங்களையும் திருப்திகரமான முறையில் நிறைவேற்றும் வகையில் இல்லை என்பதை கவலையோடு குறித்துக் கொள்கிறோம்.
  4. சர்வதேச சட்டத் தொகுப்பின் விதிமுறைகளை இலங்கை அரசு மீறியிருக்கிறது என்ற குற்றச்சாட்டை எல் எல் ஆர் சி அறிக்கை மற்றும் தேசிய செயல் திட்டம் இரண்டுமே திருப்திகரமான முறையில் எதிர்கொள்ளவில்லை என்பதையும் கவலையோடு குறித்துக் கொள்கிறோம்.
  5. அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, தான் அளித்திருந்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறித்து கவலை கொள்கிறோம்
  6. எல் எல் ஆர் சி அறிக்கையின் ஆக்கப்பூர்வமானப் பரிந்துரைகளை (இன்னபிற அம்சங்களையும்) விரைவாகவும் செம்மையாகவும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
  7.  ஐநா வின் சிறப்பு செயல்முறை உரிமைப் பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தடைகளற்ற அனுமதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
  8. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்வதற்கு உதவியாக, ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகம், இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்டு, ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க ஊக்குவிக்கிறோம்.
  9. சர்வதேச சட்டங்களை மீறியுள்ளதாக இலங்கை அரசாங்கம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை உள்ளிட்டு, இப்பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மனித உரிமை ஆணையர் அலுவலகம் இம்மன்றத்தின் 25 ஆவது அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இவற்றில், இலங்கை அரசாங்கத்தின் மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அம்சம் நேரடியாக வலியுறுத்தப்படவில்லை. ஆனால், ஐநாவின் ”சிறப்பு செயல்முறை உரிமைப் பிரதிநிதிகளுக்கு இலங்கை அரசாங்கம் தடைகளற்ற அனுமதியை வழங்க வேண்டும்” என்ற வலியுறுத்தல், மிக மறைமுகமாக, சுற்றி வளைத்து அதற்கான வாய்ப்பைக் கேட்பதாக இருக்கிறது. மேலும், தடையற்ற அனுமதி வழங்கப்பட வேண்டிய ஏழு சிறப்பு செயல்முறை உரிமை ஆணைத் துறைகள் பெயர் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது. அடுத்து, இலங்கை அரசாங்கத்தின் எல் எல் ஆர் சி அறிக்கை சமர்ப்பித்த ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் அமைத்த தேசிய செயல் திட்டம் குறைபாடுள்ளதாக இருந்த போதிலும், அதைச் செம்மையாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கு மேலான கோரிக்கையும் இல்லை.

மார்ச் 7 ஆம் தேதியன்று, இவ்வறிக்கையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டு மீண்டும் சுற்றுக்கு விடப்பட்டது.

இணைக்கப்பட்ட அம்சங்களில் முக்கியமானவை”

  1. தீவிரவாதத்திற்கு எதிராக அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேசச் சட்டத் தொகுப்பின் விதிமுறைகளின் கடப்பாடுகளுக்கு – குறிப்பாக, சர்வதேச மனித உரிமைகள், அகதிகள் மற்றும் மனித நேயச் சட்டங்களுக்கு உட்பட்டவையாகவே இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
  2. மேலும், எல் எல் ஆர் சி மற்றும் தேசிய செயல் திட்டம் இரண்டுமே இலங்கையில் சர்வதேசச் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் திருப்திகரமாக எதிர்கொள்ளவில்லை என்பது குறித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டு அம்சங்களும் முகவுரையில் சேர்க்கப்படுகின்றன.

 

  1. ஐநா மனித உரிமை ஆணையர் அலுவலகத்தின் அறிக்கையை வரவேற்று, அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் மனித நேய சட்டங்களை மீறும் வகையில் இலங்கை நடந்து கொண்டுள்ளது என்பதின் மீதான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் குறித்துக் கொள்கிறோம்.
  2. மனித உரிமை ஆணை அலுவலகத்தின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் செயல்முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
  3. மன்றத்தின் 24 ஆவது அமர்வில் இது குறித்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். 25 ஆவது அமர்வில் முழுமையான அறிக்கையும் அதன் மீதான பரஸ்பர உரையாடலும் (interactive dialogue) நடத்தப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆணை அலுவலகத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த இரண்டாவது அறிக்கையிலேயே, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மனித உரிமை ஆணை அலுவலகத்தின் அறிக்கையைக் குறிப்பிட்டு சுட்டிக் காட்டப்படுகிறது. அதை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நேரடியாகவே வலியுறுத்தப்படுகிறது.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதன் பெயரால், சர்வதேசச் சட்டங்களின் வரைமுறைகளை எந்த அரசும் மீறிவிட முடியாது என்பதும் மறைமுகமாகச் சுட்டிக் காட்டப்படுகிறது.

மேலும், முதல் வரைவில் பட்டியலிடப்பட்டு குறிப்பிடப்பட்டிருந்த  செயல்முறை உரிமை ஆணைத் துறைகளில் ”சித்திரவதை”க்கான துறை நீக்கப்பட்டு, சிறுபான்மையினர் பிரச்சினைகள் மற்றும் பெண்கள் மீதான

பாகுபாடுகள் ஆகிய துறைகள் சேர்க்கப்பட்டு எண்ணிக்கை எட்டாக உயர்த்தப்படுகிறது.

மொத்தத்தில், இந்த அறிக்கையை மேற்கு நாடுகளின் சதி என்று தொடர்ந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்த இலங்கை அரசை வழிக்குக் கொண்டு வர  அழுத்தம் அதிகரிக்கப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது.

அடுத்து, மூன்றாவது வரைவு அறிக்கை, சுற்றுக்கு விடப்பட்டு, அதில் செய்யப்பட்ட மாற்றங்களோடு, அடித்தல் திருத்தல்களோடு மார்ச் 12 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

அதில் செய்யப்படும் முக்கிய திருத்தங்கள், மாற்றங்கள் பின்வருமாறு:

  1. முகவுரையின் முதல் அம்சமாக இருந்த ”ஐநா சபையின் சாசனத்தின் படி வழிநடத்தப்பட்டு” என்ற பகுதி அடிக்கப்பட்டு, ”ஐநா சபையின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளையும் நோக்கங்களையும் மீண்டும் வலியுறுத்தி” என்பதாக மாற்றப்படுகிறது.

அறிக்கை நீர்த்துப் போகச் செய்யப்பட்டது குறித்து எழுதிய பலரும் கவனத்தில் எடுக்கத் தவறிய அல்லது சுட்டிக் காட்டத் தவறிய மிக முக்கியப் புள்ளி இது. அந்த அளவிற்கு இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

ஐநா சபையின் சாசனம் 111 பிரிவுகளை உள்ளடக்கிய 19 அத்தியாயங்களைக் கொண்டது. மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு, சர்வதேசச் சட்டங்களின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய மிகப் பொதுவான வழிகாட்டு நெறிகளாக அவை மீண்டும் மீண்டும் அர்த்தப்படுத்தப்பட்டு வருகின்றன. உறுப்பு நாடுகள் அனைத்தும் அவற்றுக் கட்டுப்பட்டவை.

மிக முக்கியமாக, பிரிவு 99 ஐநா சபையின் பொதுச் செயலாளருக்கு அரசியல் ரீதியான செயல்பாடுகள் இருப்பதை அங்கீகரிக்கிறது. தான் முக்கியமாகக் கருதும் எந்த ஒரு பிரச்சினை குறித்தும் பாதுகாப்புக் கவுன்சிலின் கவனத்திற்குக் கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்கச் சொல்லி வலியுறுத்தும் அதிகாரத்தையும் அது அவருக்கு வழங்குகிறது. மிக அவசரமான நடவடிக்கை தேவை எனக் கருதும் பட்சத்தில் பொதுச் செயலாளரே நேரடியான செயலில் இறங்குவதற்கான உரிமையை வழங்குவதாகவும் சில சந்தர்ப்பங்களில் அப்பிரிவு அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. அத்தகைய சம்பவங்கள் ஐநாவின் வரலாற்றில் நடந்தும் இருக்கின்றன.

”ஐநா சாசனத்தின் வழிகாட்டுதலின் படி” என்ற சொற்றொடர் சேர்க்கப்பட்ட அறிக்கை, இலங்கை அரசாங்கம் தொடர்ந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தால், அதை வழிக்குக் கொண்டுவர, சாசனத்தின் எந்த ஒரு அம்சத்தையும் காட்டி நடவடிக்கை எடுக்க வழி வகுப்பதாக அமைந்துவிடும். முக்கியமாக, பிரிவு 99 ஐக் காட்டி, பொதுச் செயலாளரின் நேரடி நடவடிக்கையை எதிர்காலத்தில் வலியுறுத்த வழிவகுத்துவிடும்.

அதற்கு இடம் கொடுத்துவிடாமல் இருக்கவே, அச்சொற்றொடர் நீக்கப்பட்டு, அத்தகைய நிர்ப்பந்தத்தை – அழுத்தத்தைத் தர வாய்ப்பு இல்லாத ”ஐநா சபையின் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளையும் நோக்கங்களையும் மீண்டும் வலியுறுத்தி” என்ற பொதுவான வாசகம் சேர்க்கப்பட்டிருக்கிறது. வரும் காலங்களில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக, வலுவான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதற்கு அணை போடும் வகையில், அறிக்கையில் செய்யப்பட்ட மாற்றங்களிலேயே மிக பாரதூரமான மாற்றம் இது.

  1. இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை வரவேற்றும் அங்கீகரித்தும் புதிதாக ஒரு பகுதி சேர்க்கப்படுகிறது. முதல் இரண்டு வரைவறிக்கைகளில் இந்தச் சம்பிரதாயமான பாராட்டுகூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  2. எல் எல் ஆர் சி மற்றும் தேசிய செயல் திட்டம் இரண்டும் திருப்திகரமாக இல்லை என்ற குறிப்பில் “கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்” என்பது நீக்கப்படுகிறது.
  3. ”அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, தான் அளித்திருந்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறித்து கவலை கொள்கிறோம்” என்பதில் ”தோல்வி அடைந்திருக்கிறது என்பது குறித்த கவலை கொள்கிறோம்” என்பது நீக்கப்பட்டு, “அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட, இலங்கை அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஊக்குவிக்கிறோம்” என்று மாற்றப்படுகிறது.

 

அதாவது, இலங்கை அரசாங்கம் தனது கடமையில் தோல்வி அடைந்திருக்கிறது என்பதே மறைக்கப்படுகிறது.

  1. அடுத்த முக்கியமான திருத்தம், எல் எல் ஆர் சி அறிக்கையின் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளையும் இன்னபிற கடப்பாடுகளையும் “விரைவாகவும் செழுமையாகவும் நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்பதில் “விரைவாக என்ற வார்த்தை மிகக் கவனமாக நீக்கப்படுகிறது.

அதாவது எந்த வரைமுறையும் இல்லாத, அழுத்தம் தராத, கால அவகாசத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குகிறது.

  1. மனித உரிமை ஆணை அலுவலகம், தனது 24 ஆவது அமர்வில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்குப் பதிலாக “வாழ் மொழி அறிக்கை” சமர்க்க வேண்டும் என்றும் 25 ஆவது அமர்வில் முழுமையான அறிக்கை சமர்ப்பித்து பரஸ்பர உரையாடல்  (interactive dialogue) நடத்தப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக, பொதுவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் மாற்றம் செய்யப்படுகிறது.

இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பது என்பது இலங்கை அரசாங்கம் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் எந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாகவும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் இலங்கை ஏதாவது செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தையும் தருவதாக இருக்கும். பரஸ்பர உரையாடல் உறுப்பு நாடுகள் தீவிரமான பரிசீலனை செய்ய வழிவகுக்கும். இரண்டு நிர்ப்பந்தங்களுமே மிகக் கவனமாக நீக்கப்படுகின்றன.

மேலும் இரண்டு அம்சங்களில் இலங்கை அரசாங்கத்தை “வற்புறுத்துகிறோம்” என்பது நீக்கப்பட்டு, “ஊக்குவிக்கிறோம்” என்ற வார்த்தை சேர்க்கப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவரை திருத்திக் கொள்ள வற்புறுத்தலாம். குற்றமற்றவரை எந்த வகையிலும் வற்புறுத்த முடியாது. ஊக்குவிக்கவே முடியும். அதாவது, இந்தச் சிறிய வார்த்தை மாற்றம், இலங்கை அரசாங்கம் குற்றம் புரிந்திருக்கிறது என்று சொல்வதற்குக்குட இடம் கொடுக்காமல், அதைக் குற்றமற்ற அப்பாவியை உற்சாகப்படுத்துவதைப் போல “ஊக்குவிக்க” கோருகிறது.

மார்ச் 19 ஆம் தேதி, மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்ட நான்காவது வரைவறிக்கை வெளியாகிறது. மிச்சம் இருந்த ஒன்றிரண்டு கூரான பற்களும் பிடுங்கப்பட்ட பொக்கைக் கிழடாக வந்து விழுகிறது.

பிடுங்கப்பட்ட கடைசி கூர் பற்கள்:

  1. ஐநா மனித உரிமை ஆணை அலுவலகத்தின் அறிக்கை கேட்டுக் கொள்ளும் சர்வதேச விசாரணைக்கான வலியுறுத்தல் நீக்கப்படுகிறது.
  2. பெயர் குறித்து பட்டியலிடப்பட்டிருந்த செயல்முறை உரிமை ஆணைத் துறைகள் நீக்கப்பட்டு, பொதுவாக செயல்முறை உரிமை ஆணையர்களுக்கு அனுமதி வழங்கப்பட இலங்கை அரசாங்கம் “ஊக்குவிக்கப்படுகிறது”. அவர்களுக்குத் ”தடைகளற்ற அனுமதி”யும் நீக்கப்படுகிறது.

அதாவது, இந்தச் சிறப்பு ஆணையர்கள் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டாலும், இலங்கை அரசாங்கம் அனுமதிக்கும் இடங்களுக்கு மட்டுமே சென்று பார்வையிட முடியும்.

இவை அனைத்தும் போதாதென்று, செப்டம்பர் 2013 –இல் வட மாவட்டத்தின் மாகாண கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்தப்போவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்கும் பத்தி ஒன்றும் அறிக்கையின் முகவுரையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

நம்புங்கள்.

இலங்கை அரசாங்கம் எந்தக் குற்றமும் புரியவில்லை. எந்த விசாரணையும் தேவையில்லை.

அதைச் சர்வதேச நாடுகள் “வற்புறுத்துவது” அநியாயம். ஒரு அப்பாவியை ஊக்குவிப்பதே நாகரீகம் மிகுந்த ஜனநாயக நாடுகளின் பெருந்தன்மை.

நன்றி: தமிழ் ஆழி, ஏப்ரல் 2013.

அரசியல், ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . Leave a Comment »

அகதிகள் அவலம் …

குறிப்பு: நேற்றிரவு நண்பவர் ஒருவர் அனுப்பிய செய்தியும் புகைப்படங்களும் இவை. ஈழத்தில் பருவமழை துவங்குவதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன. முதற்கட்டமாக, கடந்த வெள்ளியன்று பொழியத் துவங்கிய மழையில் செட்டிக்குளம் பகுதி முகாம் மக்கள் படும் அவலங்கள் கசியத் துவங்கியுள்ளன. மண்பரப்பில் உறங்கி வந்தவர்கள் இப்போது ஈரத்தில் உறங்கவும் இயலாத நிலை. நிரம்பி வழியும் மலக்குழியில் நெளியும் புழுக்கள். முகாமெங்கும் பெருக்கெடுத்து ஓடும் நீரில் கரைவது என்னவென்று அறியாத நிலை. அம்மக்கள் படும் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழியென்னவென்றுதான் தெரியவில்லை 😦

இலங்கை அரசின் அணுகுமுறை இதற்கும் பாராமுகமாகத்தான் இருக்கிறது. அம்மக்கள் குவியல் குவியலாக செத்துத் தொலையட்டும் என்று. இலங்கையின் செய்தி ஊடகங்களிலும் இது குறித்த பெருத்த மௌனம். groundviews.org மட்டுமே இது குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறது. ட்விட்டரில் விதுரா என்பவரும். நண்பர் அனுப்பிய செய்திகளைப் பரவலாக கொண்டு செல்லவேண்டும் என்பதன் பொருட்டு அப்புகைப்படங்களையும் அவர் அனுப்பிய குறிப்பிலிருந்து ஒரு பகுதியையும் பகிர்ந்து கொள்கிறேன்.

மேற்கொண்டு இச்செய்தியை முன்வைத்து பலரும் விரிவாகக் குரல்கள் எழுப்புவது மிகுந்த அவசியம் என்று கருதுகிறேன்.

___________________________________________________________

இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது.. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும்‌ அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை – சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப்பார்த்தால்.. ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை…. இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்..

260, 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள்.. (இணைக்கப் பட்டிருக்கும் படங்கள் சாட்சி)… தற்காலிகமாக அமைக்கப்பட்ட‌ மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்ப‌தாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.. எங்கும் தாங்க முடியாத‌ துர்நாற்றம்.. இது பெருத்த சுகதாரச் சீர்கேட்டுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம்… இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் மனிதக் கழிவின் மீது நெளியும் புழுக்களைக் காணலாம்.. (அரசாங்கம் நெடுநாளைக்கு மக்களை இந்த முகாம்களில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே ஐ.நா தற்காலிக மலசலக் குழிகளை அமைத்துக் கொடுத்திருந்தது… ஆனால் அரசாங்கத்துக்கு அவர்களை இப்போதைக்கு மீளக் குடியேற்றும் எண்ணம் சற்றேனும் இருப்பதாகத் தோன்றவில்லை… குறைந்த பட்சம் வெளியே உறவினர்களோடு சென்று தங்கி வாழக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களையாவது சோதனைகளை முடித்து விட்டுச் செல்ல அனுமதிப்பதாயில்லை.. அப்படிச் செய்வது முகாம்களில் நிலவும் மிகுந்த சனநெரிசலை வெகுவாகக் குறைக்கும்) இங்கே இலங்கையில் ஜனநாயகம் நாளுக்கு நாள் சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது… அனைவரும் ஒரேகுரலில் ஒரேதொனியில் ஒரேபொருளையே உரைக்க வேண்டுமென்று நிர்ப்பந்திருக்கிறது ஒரு சில பேரால் மட்டுமே இயக்கப்படும் அரச யந்திரம்..பெருத்த மௌனம் சனங்கள் மீது ஒரு கரும்போர்வையாகப் படர்ந்திருக்கிறது… ஆனால் வெளியுலகிலும் அப்படியா? இலங்கை அரசுக்கெதிரான குரல் விடுதலைப் புலிகள் அழியும் மட்டும் தான் ஒலித்தென்றால், அவ்வளவும் புலிகளுக்கு ஆதரவாக ஒலித்த குரல் மட்டும் தானா? சனங்களைப் பற்றிய கரிசனை..? இனியான எதிர்காலம் என்ன?

_______________________________________________


ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

கொ. எ. புளி (பாகம் 2): “சக்ஸஸ்! சக்ஸஸ்! புலிகள் தோத்தாச்சு!” ‘விஞ்ஞானி முருகன்களும்’ ‘இலக்கிய ராஜூக்களும்’.

காற்றில் அலையும் சிறகொன்று
பெர்டோல்ட் ப்ரெக்டிற்கு:

சிறு பகிர்வும்
சொல்லொன்னாச் சேதிகள் கசியும் குற்றமோ
எனும் காலமாகிப் போனதை
என்னென்பது?

பால் செலான் (1920 – 70)1

ஈழம் குறித்து எழுத முடிவெடுத்தபோது, இக்கவிதையுடன் தொடங்கவே உத்தேசித்திருந்தேன். சிறு பகிர்வே குற்றமோ” எனும் சூழல் இன்று ஈழத்தில். அம்மக்கள் ‘சொல்லாத சேதிகள்’ எத்தனையோ! “சொல்லொன்னாச் சேதிகள்” இன்னும் எத்தனை எத்தனையோ!

ஆனால், புலம் பெயர்ந்து, இத்தனை ஆண்டுகள் போயும், எந்த ஐரோப்பிய நாடொன்றின் குடிமகனாகவும் ஆகாத, என்றாலும் சர்வசாதாரணமாக ‘உலகம் சுற்றும் வாலிபனாக’ உலாவரும் (ஈழத்தவர் என்றாலே விசா கிடைப்பது எங்கும் கெடுபிடியாயிருக்க, இது எப்படி சாத்தியமாகிறது என்று கேள்வி கேட்கக் கூடாது) ‘விஞ்ஞானி முருகன்’ களுக்கும் – அகிலன் வகையறா – ‘இலக்கிய ராஜூ’க்களுக்கும் – பெயர் சொல்ல அவசியம் இல்லை – (சக்ஸஸ்! சக்ஸஸ்! புலிகள் தோத்தாச்சு!) பேட்டி எடுத்தும் பேட்டி கொடுத்தும் அரசியல் பண்ணுவது ஒரு கலையாகவே கைவந்துவிட்டது. மொட்டைக் கேள்விகளுக்கு மக்குப் பதில்கள் மகாபுத்திசாலித்தனமாக உதிர்க்க பெரும்பத்திரிகைகளைத் தவிர வசதியான இடம் ஏது! அங்குதானே உலகப் பொருளாதாரத்தில் இருந்து உள்ளூர் அரசியல் வரை என்ன அபிப்பிராயத்தை வேண்டுமானாலும் விளாசித் தள்ளலாம்!

ஆனால், சிறு வட்டங்களில் காத்திரமாக எவரும் கேள்விகளைத் தொடுத்தால், ஒன்று மௌனம் (இதன் அர்த்தம் ‘எனக்கு கேள்வி கேக்கத்தான் தெரியும், பதில் சொல்லிப் பழக்கமில்ல’) அல்லது ‘மண்டபத்தில்’ அரட்டை அடித்ததை ஒப்பிப்பது. (கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி … அடடா என்ன கவித என்ன கவித! இதுக்கு அர்த்தம் கேட்டு உயிர வாங்குறீங்களேய்யா!) இன்னொரு எதிர்வினை, எதிர்க்கேள்வி கேட்பது.

கேள்வி எதற்காக? பதிலுக்காக என்பது ‘உலக வழக்கு’. அதில் மறுப்பில்லை. ஆனால், சமகால அரசியல் சிக்கல்களில் இருந்து விடுதலை நோக்கிய வழிகளில் பயணிப்பதற்கான வேட்கையுடன், நிலவும் சூழலைப் புரிந்துகொள்வதற்காக நமக்கு நாமே எழுப்பிக் கொள்ளும் கேள்விகள் மொட்டைப் பதில்களில் திருப்தி கொண்டுவிட்டால் அவற்றை எழுப்பியதன் நோக்கமே பயனற்றதாகிவிடுகிறது. ஆழ்ந்த புரிதலுக்காக நமக்குள் எழுப்பும் கேள்விகள் அடுத்தடுத்த கேள்விகளுக்கு நம்மை இட்டுச் செல்லவேண்டும். ஒரு புதிருக்கான விடையைத் தேடும் உற்சாகத்தோடும் வேட்கையோடும் அவற்றுக்குள் பயணிக்க வேண்டும். புதையலைத் தேடும் மும்முரத்துடன் இருட்குகைகளுக்குள் கேள்விகள் எனும் தீப்பந்தத்தின் துணையோடு, துணிச்சலோடு நுழையவேண்டும்.

ஆனால், நமது ‘மாற்றுக் கருத்தாளர்கள்’ ‘மறுத்தோடி’ சூரப்புலிகளின் எழுத்துக்களை வாசித்தால், கேள்விகளே அதிரடி ‘ஸ்டேட்மெண்டுகள்’ ஆக திருப்பி அடிப்பதைக் கவனிக்கலாம். மற்றவர்களிடமிருந்து கேள்விகள் எழுந்தால், திரும்பக் கிடைப்பது எதிர்க்கேள்விகள். மற்றவர்களை மடக்குவதற்காக இவர்கள் கைக்கொள்ளும் பாணி இது. இவர்களது வழமை.

சரி, இவர்களது ‘குருபீடங்கள்’ எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று தேடிப்போனால், அதிர்ச்சிதான் காத்திருக்கிறது. உள்ளூர் குருபீடத்தை நன்றாகவே அறிவேன் என்பதால், சர்வதேச பீடம் அப்படி என்னதான் செய்கிறது என்று தீவிரமாக அலசியதில் பகிர்ந்து கொள்ள சுவாரசியமான விஷயங்கள் கிடைத்தன. சுவாரசியம் போக, ஈழத்தின் சமகால நிகழ்வுகளில் கடுமையான தாக்கங்கள் விளைவித்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளோடு தொடர்புடையவை அவை.

ஈழத்தில் போர் கொடூரமான முடிவுக்கு வந்த சில நாட்கள் – வாரங்களில் பிரிட்டன், ஃப்ரான்ஸ் உட்பட IMF, சீனா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா என்று போட்டி போட்டுக் கொண்டு, ‘வளர்ச்சி’ நிதியாகவும் அகதிகளின் மறுவாழ்விற்காகவும் எனக் கூறிக் கொண்டு கோடிக் கணக்கில் நிதியுதவியை வாரி வழங்கி வருவதைப் பலரும் கவனித்திருக்கலாம். மேற்கத்திய நாடுகளின் ஏகாதிபத்திய நலன்களும் இலங்கை அரசின் இனப்படுகொலை பாலான அந்நாடுகளின் பாராமுகமும் அப்பட்டமாக வெளிப்பட்டதற்கான அடையாளமாகவும் இதை நோக்கலாம்.

போர் முடிந்த தருணத்தில் ஐ. நாவின் மனித உரிமை ஆணையம் கூட்டிய சிறப்புக் கூட்டத்தில், மேற்கத்திய நாடுகள் கொண்டு வர முயன்ற தீர்மானத்தை இலங்கை அரசு இந்தியா, சீனா, க்யூபா, வெனீசுலா, போன்ற மூன்றாம் உலக, இலத்தின் அமெரிக்க நாடுகளின் துணையோடு விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதையே முறியடித்ததையும் தனது தீர்மானத்தை வெற்றிகரமாக நிறைவேற்றதையும் பலரும் கவனித்திருக்கலாம். உலக அளவில், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக மூன்றாம் உலக சக்திகள் கடும் நிர்ப்பந்த சக்திகளாக மாறியிருப்பதை அடையாளம் காட்டிய நிகழ்வாகவும் அது அமைந்தது.

எனது கேள்வி, இது புதிய நிகழ்வுதானா என்பதே. இதற்கான அறிகுறிகள் இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிகழத் தொடங்கியிருக்கின்றன. நாம் (இவ்விடத்தில் ‘நான்’ என்று சொல்வதே சரி) கவனிக்கத் தவறியிருக்கிறோம். இச்சமயம், அகிலன் கதிர்காமரின் எழுத்துக்களைத் தொடர்ந்து சென்றதில் கிடைத்த தெளிவு இது என்பதற்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.

அவருடைய சிறீலங்கா ஜனநாயகக் களன் வலைப்பக்கத்தில் உள்ள இக்கட்டுரையை வாசித்து அதில் அவர் விமர்சிக்கும் Strategic Conflict Assessment 2 (SCA2) என்ற அறிக்கையையும் தேடிப்பிடிக்க நேர்ந்தது. 6 தொகுதிகளாக (இவற்றையும் தொடர்புள்ள இன்னும் சில அறிக்கைகளையும் இங்கிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்) உள்ள இந்த அறிக்கையின் முதல் தொகுதி, உலகின் பல பாகங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போர்கள் குறித்த மேற்குலக ஆதிக்க சக்திகளின் தற்போதைய அணுகுமுறையையும் தெளிவுபடுத்துகிறது. SCA2 என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் இவ்வறிக்கை 2002 – 2005 ஆண்டுகளில் நடைபெற்ற போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பற்றிய விரிவான ஆவணவமும்கூட. (இதில் இருந்தே தகவல்களை இங்கு பெரும்பாலும் எடுத்தாண்டிருக்கிறேன். அவற்றைக் கையாள்கையில் (SCA2: தொகுதி எண்: பக்க எண்) என்ற சுட்டுமுறையைக் கையாண்டிருக்கிறேன். SCA1 என்று குறிப்பிடப்படும் அறிக்கையை இணையத்திலிருந்து எடுத்துவிட்டிருக்கின்றனர். எனினும், இதன் பொதுவான முடிவுகளை அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துகொண்டிருந்த குறிப்பான நிலைமைகளுக்கு பொருத்திய குறிப்பான ஆய்வாகவே SCA2 எனப்படும் இரண்டாவது ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது).

மூன்றாம் உலக நாடுகளுக்கு ‘வளர்ச்சி நிதி’ வழங்குவதில் அமெரிக்க – ஐரோப்பிய வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கும் புதிய அணுகுமுறை குறித்தும், மூன்றாம் உலக – ஆசிய நாடுகளிடையே உருவாகியிருக்கும் புதிய அணிசேர்க்கை – குறிப்பாக சீனாவின் வல்லாதிக்க விரிவு – குறித்தும் தனியாக ஒரு பகுதியில் பார்க்கலாம். தற்சமயம் அகிலன் கதிர்காமரின் சில ‘லீலைகளை’ வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது அவசியம் என்பதால் அதில் கவனத்தைக் குவிப்போம்.

Economic and Political Weekly என்ற, கல்வியாளர்களிடையே மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ள ஆய்விதழில், மேலே சுட்டியுள்ள ஆய்வறிக்கையை அலசும் அகிலன் கதிர்காமர், தனது கட்டுரையில் (இக்கட்டுரையில் இருந்து ஆளப்படும் மேற்கோள்கள் இனி (அகிலன்: பக்க எண்) என்று இருக்கும்) கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் செய்யத் துணியாத அறிவார்த்த ரீதியான செயல்பாடுகளுக்கு முற்றிலும் விரோதமான intellectual dishonesty என்று சொல்லத்தக்க காரியங்களைச் செய்திருக்கிறார் என்பது எனது நேரடியான குற்றச்சாட்டு. அதற்குக் காரணமாக நான் கருதுவது எந்தச் சூழ்நிலைமையிலும் எல். டி. டி. ஈ இயக்கத்திற்கு எந்தவிதமான அங்கீகாரமும் எத்தரப்பிடமிருந்தும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் அவர் கொண்டிருக்கும் தன்முனைப்பு. எப்படி என்று பார்ப்போம்.

மேற்குறித்த ஆய்வறிக்கையை அலசத் தொடங்கும் கதிர்காமர் முதலில் SCA1 அறிக்கையின் சாதகமான அம்சங்களாகத் தான் கருதுபவற்றைப் பாராட்டுகிறார். அதிலும் குறிப்பாக இவ்வறிக்கைகளின் மிகமுக்கியமான பங்களிப்பாக ஒரு அம்சத்தை உச்சி மோந்து பாராட்டுகிறார். அது பின்வருமாறு: “பிரச்சினையின் அரசியல் பரிமாணங்களைப் பற்றிப் பேசும் ஒரு பகுதியில் SCA1 அறிக்கை, “இனப்பிரச்சினை என்பதாக குறிப்பிடப்பட்டாலும், இலங்கைப் பிரச்சினையின் மையமாக இருப்பது அரசமைப்பின் நெருக்கடியே” (SCA1: 30) என்று குறித்திருக்கிறது. பிரச்சினையின் அடிப்படையை இவ்வாறு முற்றிலும் மறுவரையறை செய்ததானது, இப்பிரச்சினையின் வேர்கள் தேசிய – இனத் தன்மையிலானது என்று புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் மிகப்பரவலானதொரு கருத்தை முற்றிலுமாக நிராகரிக்கிறது.” (அகிலன்: 1790)2

தொடர்ந்து, அவ்வறிக்கை இலங்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை உதாரணங்களாகக் காட்டி இதை உறுதி செய்கிறது என்றும் இந்தியாவில் செய்ததைப் போன்று 1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷார் இலங்கையின் ஆங்கிலக் கல்வி கற்ற சிங்கள மேட்டுக் குடியினரிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டதாகவும், அவர்கள் இந்தியாவில் உள்ளது போன்ற ஒரு ஜனநாயகப் பண்பாடு இல்லாத நிலையில் சிறுபான்மையினரை ஒடுக்கத் தொடங்கிவிட்டதாகவும் அறிக்கை சரியாகவே குறிப்பிடுகிறது என்கிறார். இரண்டாவது அறிக்கை இது குறித்து என்ன பேசுகிறது என்பதற்குள் போகாமல், மிகப் பொதுவாக “SCA2 அரசமைப்பின் மீதான விமர்சனத்தை மீளவும் செய்து தற்போதைய போர்நிறுத்தக் காலத்திற்கு பொருத்திப் பார்க்கவும் செய்கிறது” (அகிலன்: 1791)3 என்று ஒன்றிரண்டு இடங்களில் குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்.

ஆனால், SCA2 அறிக்கை இது குறித்து பேசுவது என்ன? மிகத் தெளிவாகவே இருக்கிறது. “SCA1 இலங்கைப் பிரச்சினையை “இனப் பிரச்சினையாக” அல்லாமல் அரசமைப்பின் நெருக்கடியாக கருத்துருவாக்கம் செய்தது. இது இலங்கையில் பிரச்சினையின் தன்மை இனரீதியான வடிவம் கொண்டிருக்கிறது என்பதையோ ஆட்சியமைப்பு, வளர்ச்சி, சமூக உறவுகள் அனைத்தும் அதிகரித்த அளவில் இனமையமானதையோ மறுப்பதாகாது.” இந்தப் புரிதல் இருந்தும் முதல் அறிக்கை ஏன் பிரச்சினையை அரசமைப்பு நிர்வாகத்தின் தோல்வியாக கருத்துருவாக்கம் செய்தது என்பதற்கான விளக்கத்தையும் அடுத்த வரிகளிலேயே தொடர்கிறது: “ஆனால், இலங்கையின் அரசமைப்பு மற்றும் நிர்வாகத்தின் தன்மை மீது கவனத்தைக் குவிப்பது வட கிழக்கிலும் தெற்கிலும் நிலவும் இராணுவ வன்முறைகளின் பல்வேறு வடிவங்களுக்கிடையிலான உள்ளுறவுகளைப் பற்றிய புரிதல்களைத் தருவதாக இருக்கும். அரசமைப்பை ஊடுருவாத வரையில் சமூக அதிருப்திகளால் மிகப் பரவலான வன்முறைகளைத் தூண்டிவிட இயலாது.” (SCA2: 1: 25)4

சொல்வதோடு நிறுத்திவிடாமல், பிற்பகுதிகளிலும் மற்ற தொகுதிகளிலும் இதை விரிவாக செய்யவும் முயற்சித்திருக்கிறது அறிக்கை. சிங்களக் கட்சிகள், சிங்கள ஆளும் பிரிவினர் அரச எந்திரத்திற்குள் தமக்கு நெருக்கமானவர்களை அதிகாரத்தில் அமர்த்தும் நடைமுறையையும், அதிருப்திக்குள்ளாகும் சிங்கள வெகுமக்களின் கோபங்களுக்கு ஜேவிபி, புத்த பிக்குகள், எனப் பல்வேறு தரப்பினர் எவ்வாறு வடிகால் அமைத்துக் கொடுக்கின்றனர் என்பதையும் விளக்குகிறது. குறிப்பாக, தெற்குப் பகுதி அடித்தள சிங்கள மக்களின் (சிங்கள இனவெறியின் மையம் இலங்கையின் தெற்குப் பகுதி விவசாய மக்களே; மேற்குக் கடற்கரையோரப் பகுதி மக்கள் இனவெறிக்கு ஆட்பட்டிருந்தாலும் சிங்கள இனவெறியின் மையப்பகுதியாக இருப்பதில்லை என்பது இங்கு குறித்துக்கொள்ளப் படவேண்டும்) விருப்பங்கள் பூர்த்தி செய்யப்படாமல் போகும்போது எழும் சிங்கள இனவெறியையும் அதை தமக்குச் சார்பாக மடைமாற்றிக்கொள்ள மையநீரோட்ட சிங்கள அரசியல் கட்சிகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளையும் குறிப்பிடுகிறது. இச்சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளால் அதிருப்தியுற்ற தெற்குப்பகுதி அடித்தள விவசாயப் பிரிவினர் இறுதியாக ஜே. வி. பி. யின் பக்கம் நெருங்கத் தொடங்கியிருப்பதையும் குறிக்கிறது (ராஜபக்சேவும் இந்தப் பிரிவினரின் அதிருப்தியை தனக்குச் சாதகமாகத் திருப்பியிருக்கிறார்).

தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வட – கிழக்குப் பகுதியைக் குறிப்பிடும்போதும் எல். டி. டி. ஈ அமைப்பினரை அடித்தள மக்கள், தலித் சாதியினரை அடித்தளமாகக் கொண்ட, அவர்களது ஆற்றாமைகளுக்கு வடிகாலாக அமைந்த இயக்கமாகக் குறிப்பிடுகிறது அறிக்கை. ஆக, தெற்கு x வட – கிழக்குப் பகுதிகளின், அடித்தள மக்களின் வாழ்வியல் – பொருளாதார – அரசியல் வேட்கைகளை நிறைவேற்றுவதாக தம்மை முன்னிறுத்தும் இயக்கங்கள் அரசதிகாரத்தைக் கைக்கொள்ள, மாறுபட்ட வழிகளில் – அதே சமயம் இனரீதியான அரசியலை முன்வைப்பதில் ஒரே தன்மையானவையாகவும் – வன்முறைகளைக் கைக்கொள்கின்றன என்பதே அறிக்கை நுட்பமாக முன்வைப்பது. அரச நிர்வாகத்தின் தோல்வி என்று அறிக்கை சுட்டிக்காட்ட முனைவதும் இதையே. இதை அறிக்கை நேரடியாகவே இவ்வாறு குறிப்பிடவும் செய்கிறது: “இனமும் மதமும் வன்முறை சாத்தியமாவதற்கான கருத்தியல் மற்றும் குறியீட்டு ரீதியான படைக்கலன்களைத் தருவதாக இருக்கின்றன. என்றாலும், சற்றே வேடிக்கையான புதிராக, எல். டி. டி. ஈ, ஜே. வி. பி. இரண்டுமே ஒரே வகையான பின்புலத்தில் இருந்து – கிராப்புற, அடித்தள சாதிகளைச் சேர்ந்த, தாய் மொழி மட்டுமே கற்ற – ஒரேவிதமான அதிருப்திகளைக் கொண்டிருக்கும் இளைஞர்களிடமிருந்தே தமது அணிகளைத் திரட்டுகின்றன.” (SCA2: 1: 27)5

இவ்வர்க்கங்கள் இனரீதியாக பிரிந்திருந்ததால், வன்முறை இனரீதியாக வெளிப்படுவதும் தவிர்க்கவியலாததானது. அறிக்கை புகத்தவறும் இடம் இது. இலங்கைத் தீவில் அதிகாரத்தை பிரிட்டிஷ் அரசிடமிருந்து நேரடியாகக் கைக்கொண்ட சிங்கள மேட்டுக் குடியினர் தமது அதிகாரத்தைத் உறுதி செய்துகொள்ள சிங்கள அடித்தள மக்களின் அதிருப்தியைக் கிளறி இனவேற்றுமையையும் வெறுப்பையும் வளர்த்து இன்று மேட்டுக்குடி – வெகுமக்கள் என்ற பாகுபாடின்றி இனவெறியாக எங்கும் படந்திருப்பதன் வரலாற்றை, அதன் தடத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் இறங்கவே இல்லை அறிக்கை. அதற்கும், தமிழ் வெகுமக்களின் மீதான ஒடுக்குமுறையின் வெளிப்பாடாகத் – அதைத் தமது நலன்களுக்கு உகந்த வகையில் மடைமாற்றம் செய்துகொள்ள முனைந்த யாழ் வெள்ளாள நலன்களை மீறி – தோன்றி வளர்ந்த ஈழத் தமிழ் வெகுமக்களின் – அடித்தள மக்கட்பிரிவினரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக வளர்ந்த எல். டி. டி. ஈ இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அறிக்கை காணத் தவறுகிறது.

ஆனால், இது அத்தனையும் அகிலன் கதிர்காமருக்கு பொருட்டில்லை. அவர் கண்களுக்கு இவை தென்பட்டாலும் பொருட்படுத்துவதில்லை. இலங்கையின் பிரச்சினை இனரீதியானது அல்ல, அரசமைப்பின் தோல்வி என்ற வாசகங்களைக் கண்டதுமே அவருக்கு சந்தோஷத்தில் மூளை செயலிழந்துவிடுகிறது. தேசிய விடுதலைப் போராட்டமே தேவையில்லை என்பதற்கு இதற்குமேல் வேறு என்ன ஆதாரம் வேண்டும்?! அரசமைப்பின் தோல்வி எனும்போது உடனே சிறுபான்மையினர், மலையக மக்கள், பெண்கள் என்று அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினரும் அரச அதிகாரத்தில் பங்கு பெறுவதை நோக்கிய செயற்பாடுகளில் இறங்கிவிடலாம். இதைத்தான் அவர் தற்சமயம் முன்மொழிந்து கொண்டிருக்கிறார் என்பதும் முன்னர் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால், அதற்கு அவர் கொடுக்கும் விலை?

அடிப்படை அறிவு நாணயம்.

ஒரு அறிக்கை முன்மொழியும் விரிவான கருத்துக்களில் இருந்து தனக்குச் சாதகமான ஒரேயொரு வரியை மட்டும் உருவி எடுத்து அதுவே முழு உண்மை என்பது போலப் பேசும்போது, அது அவ்வறிக்கை சொல்ல வரும் கருத்துக்கே எதிரானதாகப் போய் நிற்கிறது. இது மற்றவர்களுடைய கருத்துக்களை சிதைப்பது, திரித்துப் பேசுவது. இதை அறிவு நாணயம் அற்ற செயல் என்றல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?!

இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் அகிலன் கதிர்காமர் இப்படி நடந்துகொள்கிறாரா என்றால் அதுவும் இல்லை. இன்னொரு முக்கியமான உதாரணத்தையும் தருகிறேன்.

இவ்விடத்தில், ‘நிதியாளர்கள்’ யார் என்பதையும் குறிப்பிட்டுவிட வேண்டும். நெதர்லாந்து, ஸ்வீடன், ப்ரிட்டன் மூன்று அரசுகளும் உலக வங்கியும் ஆசியா ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுமே SCA2 அறிக்கையை எழுத ஆய்வுப் பணி மேற்கொள்வதற்காக நிதி உதவியும் பிற வசதிகளும் செய்துகொடுத்தவர்கள். அறிக்கை ‘நிதியாளர்கள்’ – donors – என்று குறிப்பது சர்வதேசிய மூலதனச் சக்திகளை. உதாரணமாக 2002 – 2005 அமைதிப் பேச்சுவார்த்தைக் காலப்பகுதியில் ஜூன் 9, 2003 -ல் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஆறாம் சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு – எல். டி. டி ஈ இருதரப்பிற்கும் மறுகட்டமைப்பு பணிகளுக்கான நிதியை வழங்குவது பற்றி உறுதி செய்வதாக இருந்தது. அதற்கான தயாரிப்புக் கூட்டத்தில் நார்வேயுடன், ஐரோப்பிய யூனியன், ஜப்பான், அமெரிக்கா ஆகியவையும் co – chairs ஆக இணைந்துகொண்டன. அதாகப்பட்டது மேற்சொன்ன சக்திகள் அனைத்தும் எல். டி. டி. ஈ யினரை அரசுக்கு இணையான ஒரு சக்தியாக அணுக முற்பட்டன. ஆனால், நமது ‘விஞ்ஞானி முருகன்’களுக்கும் ‘இலக்கிய ராஜூ’க்களுக்கும் இது கனவிலும் சாத்தியப்பட்டுவிடக்கூடாத அக்கிரமமாகப் படுகிறது!

சரி விஷயத்திற்குத் திரும்புவோம். SCA1 அறிக்கை, சர்வதேச நிதியாளர்கள், ‘வளர்ச்சி நிதி’ வழங்குவதில் அரசை மட்டுமே மையப்படுத்தி அரசாக இல்லாத சக்திகளைப் (non – state actors) புறக்கணித்து வந்துள்ளமை மீது விமர்சனம் வைத்திருப்பதை தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார் அகிலன் கதிர்காமர். என்றாலும்கூட SCA2 அறிக்கையை எழுதியவர்களுக்கு அத்தகைய அரசாக இல்லாத சக்திகளை எப்படி அணுகுவது என்பது குறித்த தெளிவு இல்லை என்றும் கூறுகிறார். அவருடைய வார்த்தைகளிலேயே பார்ப்போம்:

“அரசாக இல்லாத சக்திகளை எப்படி அணுகுவது என்பது குறித்த புரிதல் SCA – க்களுக்கு இல்லை என்று நாம் வாதிடுவோம். இந்தத் தெளிவின்மையே SCA2 வை எழுதியவர்களை, ஒரு அரசை அணுகுவதிலிருந்து எந்த வித்தியாசமும் இன்றி எல். டி. டி. ஈ யினரை அணுகுவதற்கு முன்மொழிய வைத்திருக்கிறது. SCA க்கள் எல். டி. டி. ஈ யினரை ஒரு இராணுவ அமைப்பு என்பதாகவே அங்கீகரித்தாலும், அதை ஒரு அரசமைப்பு போன்ற கட்டமைப்பாக உருமாறும் தறுவாயில் இருப்பதாகவும் ஊகிக்கிறார்கள். எல். டி. டி. ஈ யினரின் உருமாறுதல் குறித்த இதுபோன்ற ஊகங்கள் தெளிவுபடுத்தப்படாத நிலையில், ஆபத்தானதாகவும் முடியக்கூடும்…. என்றபோதிலும் அறிக்கையை எழுதியவர்கள் “எல். டி. டி. ஈ யின் உருமாற்றம்” குறித்த கருதுகோளை முன்மொழிகின்றனர். இதற்கான வலுவான வாதமாக இருப்பது, புதிதாக எழும் அரசுகள் பாதுகாப்பை வாக்களித்து முன்னெடுக்கப்படும் ஏமாற்று உத்திகளே என்ற டில்லியின் வாதமே. ஆரம்பகால நவீன ஐரோப்பிய அரசுகளின் உருவாக்கம் பற்றிய டில்லியின் கருதுகோளே பிரச்சினைக்குரியது. இந்நிலையில், அக்கருதுகோளை 21 ஆம் நூற்றாண்டு இலங்கையின் வட – கிழக்கிற்குப் பொருத்துவது மேலும் சங்கடத்தை உருவாக்குகிறது. SCA2 ஆசிரியரகள், அவர்கள் குறிப்பிடும் கட்டுரையின் தொடக்கத்திலேயே டில்லி விடுத்திருந்த எச்சரிக்கைக்காவது செவிசாய்த்திருக்க வேண்டும்: “20 ஆம் நூற்றாண்டின் மூன்றாம் உலக நாடுகள், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவை பெரிதாக ஒத்திருக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளின் கடந்த கால வரலாறுகளில் இருந்து மூன்றாம் உலக நாடுகளின் எதிர்காலத்தை எந்த வகையிலும் நாம் கணிக்கவியலாது.” … எல். டி. டி. ஈ யினரின் உருமாற்றத்தை ஊகிக்காமல், SCA2 வின் ஆசிரியர்களால் எல். டி. டி. ஈ யினரை அணுகுவதை எண்ணிப்பார்க்க இயலாத காரணத்தால், டில்லியின் கோட்பாட்டை பிரச்சினைக்குரிய வகையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். (அகிலன்: 1794) 6

இதில் ஒரு புள்ளியை தற்போதைக்கு குறித்துக் கொள்ள மட்டும் செய்வோம். அதாகப்பட்டது, விவாதத்திற்குரிய அறிக்கை எல். டி. டி. ஈ யினரை அரசாக உருமாறும் நிலையில் உள்ள ஒரு அமைப்பாக அங்கீகரித்து, ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசை எந்த நிலையில் வைத்து அணுகவேண்டுமோ அதற்கு இணையாக வைத்து அணுக முற்பட்டிருக்கிறது. இதை ‘வளர்ச்சி நிதி’ வழங்குவதற்குத் தயாராக இருந்த சர்வதேச முகவர்களுக்கு பரிந்துரைக்கவும் செய்கிறது. இதையே அகிலன் கதிர்காமர் மறுக்கமுனைகிறார்.

இதன் பொருட்டு எந்த எல்லைகளுக்குச் செல்லத் தயாராக இருக்கிறார் என்பதை மட்டும் தற்போதைக்கு கவனிப்போம். முதலாவதாக, சார்ல்ஸ் டில்லி (Charles Tilly) என்பார் எழுதிய War Making and State Making என்ற கட்டுரையை (இக்கட்டுரையை scribd.com – லிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம்) அடிப்படையாகக் கொண்டே அறிக்கையை எழுதியவர்கள் எல். டி. டி. ஈ யினரை “அரசாக உருமாறிக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பாக” அணுகுகிறார்கள் என்பது சரிதானென்றாலும், அகிலன் கதிர்காமர் குறிப்பிடுவதற்கு மாறாக, அக்கருதுகோளை சிறிது எச்சரிக்கையுடனேயே அவர்களும் அணுகியிருக்கிறார்கள். அறிக்கையிலிருந்து சுட்டிகாட்ட இது போதும்: “ஆரம்பகால அரசுகளின் உருவாக்கம் என்பது பாதுகாப்பை வாக்களித்து முன்னெடுக்கப்படும் ஏமாற்று உத்திகளே என்ற டில்லியின் (1985) விளக்கம் வட – கிழக்கில் உருவாகிக் கொண்டிருக்கும் அரசாளுகையின் தன்மையில் ஓரளவிற்கு ஒலிக்கவே செய்கிறது. தொடர்ந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரினாலும், அரசின் இருப்பு குறைந்திருக்கும் சூழ்நிலையிலும் வன்முறை வடிவிலான வரிவிதிப்பு, பணம் பறித்தல், பாதுகாப்பு வலைப்பின்னல்கள் அரசு அமைப்புகளோடு போட்டியிடுவதாக அல்லது அவற்றை பதிலீடு செய்பவையாக உருப்பெற்றிருக்கின்றன.” [அழுத்தம் எனது] (SCA2: தொகுதி 1: பக்: 48) 7

ஓரளவிற்கு என்பதன் மீதான எனது அழுத்தம் மேலோட்டமானது என்றே கொள்வோம். அறிக்கை டில்லியை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் அகிலன் கதிர்காமர் என்ன செய்திருக்கிறார்? சார்ல்ஸ் டில்லியின் கட்டுரையின் ஆரம்பத்தில் இருந்து இரண்டு வரிகளை மட்டும் உருவி எடுத்துத் தருகிறார். ஆனால், சார்ல்ஸ் டில்லி தொடர்ந்து என்ன முன்மொழிந்திருக்கிறார்? அதைப் பார்த்தால் விஷயம் தெளிவாகிவிடும்.

அகிலன் கதிர்காமர் உருவி எடுத்துத் தரும் வரிகளைத் அடுத்த வரிகள், சார்ல்ஸ் டில்லியின் கட்டுரையில் இவ்வாறு இருக்கிறது: “எனினும் ஐரோப்பிய அனுபவத்தை கவனமாக ஆய்வதும் நமக்குப் பலன் தருவதாக இருக்கும். ஐரோப்பிய அரசுகளின் உருவாக்கத்தில் வன்முறை நிறைந்த சுரண்டல் மிகப் பெரும் பங்காற்றியிருப்பதை அது நமக்குக் காட்டும். வன்முறை நிறைந்த சுரண்டலுக்கு எதிரான வெகுமக்கள் எழுச்சிகள் அதிகாரத்தைக் கைக்கொண்டவர்களது செயற்பாடுகளின் எல்லைகள், வெகுமக்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் ஆகியவற்றை எவ்வாறு நிர்ப்பந்தித்தன என்பதைக் காட்டும். இது, இன்றைய மூன்றாம் உலக நாடுகளோடு கடந்த காலத்தைய ஐரோப்பாவை ஒப்பிடும் தவற்றைச் செய்வதிலிருந்து நாம் விடுபட உதவியாக இருக்கும். இந்தத் தெளிவு, இன்றைய உலகம் சரியாக எந்த விதத்தில் வித்தியாசமாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதையும், அதன் மூலம் நாம் எதை விளக்க வேண்டியிருக்கிறது என்பதையும் எளிதாக்கும். தற்சமயம் உலகம் முழுவதும் அச்சுறுத்திப் படர்ந்திருக்கும் இராணுவ அமைப்பாக்கத்தையும் நடவடிக்கைகளையும் விளக்கவும் இது உதவக்கூடும்.” [அழுத்தம் எனது] (டில்லி: பக்: 169 – 170) 8

கூறியது கூறலாகவே பட்டாலும் சார்ல்ஸ் டில்லி மேலுள்ள பத்தியில் அழுத்தம் தர முனையும் கருத்துக்களைக் குறித்துக் கொள்வோம்:

1)அவரது ஆய்வு ஆரம்பகால ஐரோப்பிய அரசுகளின் உருவாக்கம் குறித்தது.

2)அதை ஆழ்ந்து ஆய்வு செய்வது, தற்காலத்தைய மூன்றாம் உலக நாடுகளின் அரசுருவாக்க அனுபவங்களை ஐரோப்பிய அனுபவத்தோடு வித்தியாசப்படுத்தி அணுக உதவும். (அதாகப்பட்ட்து, அகிலன் கதிர்காமர் அரைகுறையாக வெட்டிச் சிதைத்திருப்பதற்கு மாறாக, ஐரோப்பிய அனுபவம் குறித்த ஆய்வு, மூன்றாம் உலக நாடுகளின் அனுபவங்களை அவற்றின் தனித்துவத்தோடு அணுக உதவும் என்கிறார்.)

3)தற்காலத்தில், உலகெங்கும் பரவியிருக்கும் இராணுவமயமாதலைப் புரிந்து கொள்ளவும் ஐரோப்பிய அரசுருவாக்க அனுபவம் குறித்த ஆய்வு உதவும்.

ஐரோப்பிய நாடுகளின் அரச உருவாக்க அனுபவம் குறித்த சார்ல்ஸ் டில்லியின் ஆய்வுகளும் அவர் முன்மொழியும் கருதுகோள்களும் தனிச்சிறப்பானவை. நவீன அரசுகள், உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பளிப்பதாக தமது குடிமக்களுக்கு வாக்குறுதி அளித்து, போரை மைய்யமாக வைத்தே படிப்படியாக உருக்கொண்டன என்பதே தமது வரலாற்று ஆய்வுகளில் இருந்து அவர் முன்வைக்கும் மொழிதல். தமது குடிமக்களுக்கு ‘பாதுகாப்பு’ குறித்த அச்சத்தை உருவாக்கி, அதிலிருந்து பாதுகாப்பளிப்பதாக வாக்குறுதியும் தந்து, போர்களை நடத்தி, அரசுகளை உருவாக்கியது என்பதே கொள்ளையர்களின் அச்சுறுத்தல் நடவடிக்கையை ஒத்த ஒரு ஏமாற்று உத்தி என்றும் முன்மொழிகிறார். நவீன அரசுகளின் பொருளாதாரமே ‘போர்ப் பொருளாதாரம்’ என்பதாகவும் விளக்குகிறார். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, படிப்படியாக நடந்தேறிய இந்நிகழ்வுகளின் போக்கில், ஐரோப்பிய வெகுமக்கள் இம்முயற்சிகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தமது நலன்களையும் உரிமைகளையும் வென்றெடுத்ததன் மூலம் அவ்வரசுகளின் புலங்களை வரையறுத்தார்கள் என்ற முக்கிய அம்சத்தையும் தொடுகிறார்.

மூன்றாம் உலக நாடுகளின் தற்காலத்தைய அரசுருவாக்க அனுபவத்தில் விடுபடும் புள்ளி இதுதான். இதுவே, இன்றைய இராணுவ மயமாக்கலுக்கான காரணம் என்பதையும் கட்டுரையின் இறுதியில் மிகத் தெளிவாக விளக்கவும் அவர் தவறவில்லை. விரிவானதாக இருந்தாலும் சார்ல்ஸ் டில்லியின் வார்த்தைகளில் இதைப் பார்த்துவிடுவது நல்லது:

“ஐரோப்பிய அனுபவ அடிப்படையிலான அரசுருவாக்க நிகழ்வுப்போக்கு உலகின் பிற பாகங்களுக்கு நீட்டிக்கப்பட்டதானது, இறுக்கமான ஐரோப்பிய வடிவிலான அரசுகள் எழுவதில் முடிந்துவிடவில்லை. விரிவாக நோக்கினால், பிரதேச அளவிலான பெரும் கிழார்களின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவது, விவசாயிகள் மீதான வரிவிதிப்பு நடவடிக்கைகள் ஆகிய உள்முகமான போராட்டங்கள் ஐரோப்பிய அரசுகளின் அமைப்பாக்கத்தில் முக்கியமான சில அம்சங்களை உருவாக்கின: ஒப்பீட்டளவில் இராணுவ நலன்கள் பொதுமக்களின் நலன்களுக்கு கீழ்ப்பட்டிருப்பது, பொருளாதாரத்தைக் கண்காணிக்க விரிந்ததொரு அதிகார வர்க்கம், தவறிழைக்கப்பட்ட நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்த முறையீட்டு முறைகள், பாராளுமன்றம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மொத்தத்தில், பிற இடங்களில் அரசுருவாக்கம் வேறு வகையில் நிகழ்ந்தது. அந்த வித்தியாசத்தின் மிகக் குறிப்பிடத்தகுந்த அம்சம் இராணுவ அமைப்பாக்கம். ஐரோப்பிய அரசுகள் வெகுமக்களுடனான தொடர்ந்த போராட்டத்தின் ஊடாகவும் மக்கட்பிரிவினரிடையே நிலவிய பல்வேறுபட்ட வர்க்கங்களில் சிலவற்றைத் தேர்வு செய்து பாதுகாப்பை வழங்கியதன் மூலமாகவும் தமது இராணுவ அமைப்பைக் கட்டமைத்தன. பாதுகாப்பின் மீதான ஒப்பந்தங்கள் ஆட்சியாளர்களைக் கட்டுப்படுத்தி வழக்காடுமன்றங்கள், சட்டம் இயற்றும் சபைகள், நிதி ஒதுக்கீடு, சேவைகள், போர்த் திறன்கள் போன்ற விஷயங்களில் கடப்பாடுகொள்ளச் செய்தன. காலனிய நீக்கம் மூலமாகவும், ஆதிக்கத்தில் இருந்த அரசுகள் பிரதேசங்களை மறுபகிர்வு செய்ததன் மூலமாகவும் சமீப காலங்களில் தோன்றிய அரசுகள் பெரும்பாலும் தமது இராணுவ அமைப்பாக்கத்தை, ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையிலான பரஸ்பர உள்முகமான கட்டுப்பாடுகள் இன்றி வெளியில் இருந்தே பெற்றுக் கொண்டுள்ளன. இராணுவ ஒத்துழைப்பு, பண்டங்கள் இவற்றில் ஒன்றுக்காக அல்லது இரண்டிற்குமாக வெளிநாட்டு அரசுகள் இராணுவ தளவாடங்களைத் தரத் தாயாராக இருக்கும் அளவில், புதிய அரசுகள் தமது வரையறைக்குட்பட்ட பகுதிகளுக்குள் அனைத்து பிற அமைப்புகளையும் மறைந்தொழியச் செய்யும், எக்கட்டுப்பாடுகளுமற்ற அதிகாரம் கொண்ட அமைப்புகள் உருவாக வழிகோலுகின்றன. வெளிநாட்டு அரசுகள் தமது எல்லைகளை உறுதி செய்கிற அளவில், இத்தகைய இராணுவ அமைப்புகளின் நிர்வாகிகள் அவற்றுள் அளவற்ற அதிகாரத்தைக் கைக்கொள்கின்றனர். இராணுவ அதிகாரத்தின் பலாபலன்கள் பெருமளவு அதிகரிக்கின்றன. இச்செல்வாக்கு இதன் வழியாக அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தூண்டுதல்களையும் அதிகரிக்கின்றது. ஐரோப்பிய அரசுகளின் உருவாக்கத்தில் போர் செய்தல் வகித்த மாபெரும் பங்கையும் மீறி, ஐரோப்பாவின் பழைய தேசிய அரசுகள், உலகம் முழுவதும் படர்ந்துள்ள அவற்றின் இன்றைய முகவர் அரசுகள் எதிர்கொண்டிருக்கும் தலைவிதியை – இராணுவ அமைப்பாக்கத்திற்கும் பிற அனைத்து அமைப்புகளுக்கும் இடையிலான மாபெரும் இடைவெளியை ஒருபோதும் அனுபவித்ததில்லை. சிவில் அரசாங்கத்தை உலகம் முழுக்க பரப்பியதற்காக, ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக ஐரோப்பியர்கள் பெருமைப்பட்டிருக்கலாம். நமது காலத்தில், அரசு உருவாக்கத்திற்கும் போர் செய்வதற்கும் இடையிலான உறவு – திட்டமிட்ட குற்றங்கள், இவற்றுக்கிடையிலான ஒற்றுமை ஒரு துன்பியல் நிகழ்வைப் போன்று பொருந்தி வருகின்றன. (டில்லி: பக்: 186) 9

இவ்வரிகளுடன் சார்ல்ஸ் டில்லியின் கட்டுரை முடிகிறது. இவற்றிலிருந்து நாம் என்ன புரிதல்களுக்கு வரலாம்?

மேலே மூன்றாவதாகப் பட்டியலிட்டதன் தொடர்ச்சியாக:

4)பாகிஸ்தான், இந்தியா, இலங்கை போன்ற, தெற்காசியப் பிராந்தியத்தில் தற்போதுள்ள மூன்றாம் உலக நாடுகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அந்திமக்காலத்தில் அதன் நலன்கள் தொடர்ந்திருக்க, அது உருவாக்கிய நிர்வாகப் பிரிவினைகளை அவ்வாறே தொடர்ந்த அரசுகள். இவற்றுள் உருவான இராணுவ – சிவில் நிர்வாகப் பங்கீடு வெகுமக்களின் பங்களிப்புகள், இடையீடுகள் இன்றி அல்லது அவர்களது போராட்டங்களிலிருந்து வெகுதூரம் விலக்கி வைத்து பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசால் கையளிக்கப்பட்டவை. இவற்றுள் இராணுவ நிதிஒதுக்கீடு (இந்தியா) தலையீடு (இலங்கை) ஆட்சி (பாகிஸ்தான்) அவற்றுள் எழுந்த வெகுமக்கள் எழுச்சி/பங்களிப்பின் தன்மையைப் பிரதிபலிப்பவை.

5)இந்தியத் துணைக்கண்டத்தைப் பொருத்த அளவில், ஒரு தனித்தேசிய இனமாக அடையாளம் காணமுடியாத, ஆனால் அனைத்திந்திய அளவில் ஆதிக்க சக்தியாக இருந்த/இருக்கும் பார்ப்பனர்களின் கையில் அதிகாரம் போய்ச் சேர்ந்தது. இதனால், இன்று வரையிலும் இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனப் போராட்டங்களுக்கு ஒடுக்கும் தேசிய இனம் என்ற அளவில் ஒரு குவி மையம் இல்லாதிருக்கிறது. அதிகபட்சமாக, போராடும் தேசிய இனங்களுக்கு தில்லி அதிகார மையம் என்ற அருவமே முன்நின்று நிழலாடிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானைப் பொருத்த அளவில், சிந்தி தேசிய ஆதிக்கம் – இஸ்லாமிய மதவாதிகள் – இராணுவ அதிகாரம் என்று மையம் சிதறியிருக்கிறது. இவற்றுக்கெதிராக குவிமையம் சிதறிய நிலையில் பழங்குடியினரும் பிற தேசிய இனங்களும். இலங்கையைப் பொருத்தவரையில், இவற்றிலிருந்து மாறுபட்டு, சிங்கள இனவெறியும் – அரசதிகாரமும் ஈழத்தமிழர்களுக்கு ஒடுக்கும் குவிமையமானது. இம்மூன்று நாடுகளிலும் அரசதிகாரத்தில் இருக்கும், ஐரோப்பிய அதிகார சக்திகளால் ‘ஆசி’ வழங்கப்பட்ட சக்திகளுக்கு பண்டங்கள் – இராணுவத் தளவாட வணிகத்தின் வழி அதிகாரம் தொடர்ந்து உறுதியளிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

6)இந்நிலையில், இலங்கையில் தன்மானத்துடன் வாழ்வதற்கான எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில், ஆயுதம் ஏந்திப் போராடத் துணிந்த ஈழத்தமிழ் மக்களுக்கு – இயக்கங்களுக்கு, இந்த உள்நாட்டு அரசுகளை உருவாக்கி, ஆயுத தளவாடங்கள் தந்து அவற்றின் இருப்பை உறுதி செய்துகொண்டிருக்கும் அமெரிக்க – ஐரோப்பிய சக்திகள் முற்றிலும் எதிரானவை. ஆனாலும், தமது வணிக நலன்கள் சீராகச் செயல்படவேண்டுமென்ற விருப்பில் இந்த மேற்கத்திய வல்லாதிக்க சக்திகள் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர முனைகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றன அல்லது வழிமொழிகின்றன, அவை தொடரத் துணை செய்கின்றன. எல். டி. டி. ஈ யினரை “அரசாக உருமாறும் போக்கில் உள்ள ஒரு அமைப்பாக” அங்கீகரிக்கின்றன.

7)எல். டி. டி. ஈ ஐப் போன்றதொரு அமைப்பு, அரசு உருவாக்கும் முயற்சியில் தனக்கான வரையறுக்கப்பட்ட, உறுதிசெய்யப்படாத குறுகிய ஒரு நிலப்பரப்பில் – மக்கட்தொகுதியுள், மேற்கண்ட சார்ல்ஸ் டில்லியின் விளக்கத்தின்படி ஒரு கடுமையான இராணுவமயப்பட்ட அமைப்பாக உருப்பெறுவதும், அவ்வழிப்பட்ட நடைமுறைகளைக் கைக்கொள்வதும், ஈழத்திலும் புலம் பெயர் மக்களிடத்திலும் கட்டாய வரிவசூல், பணம் பறித்தல், இவற்றுக்கு தமிழ் மக்களின் ஒரே பாதுகாவலனாக, விடுதலையைப் உறுதி செய்யக்கூடிய அமைப்பாகத் தம்மை முன்னிறுத்திக் கொள்வதும் அரசுருவாக்க முயற்சிகளில் இருந்து விதிவிலக்கான நடவடிக்கைகள் அல்ல. அந்த அளவில் SCA2 அறிக்கை அவ்வியக்கத்தை ஆரம்பகால ஐரோப்பிய அரசு உருவாக்க நிகழ்வோடு ஓரளவிற்கு ஒத்திசைந்திருப்பதாகக் குறிப்பிடுவது சரியே. (இதே நடவடிக்கைகளை சிங்கள அரசுடன் கூட்டு வைத்துக்கொண்டு தமிழ் மக்களை வதைக்குட்படுத்தும் இயக்கங்கள் மேற்கொள்ளும்போது முற்றிலும் மாறுபட்ட விளைவுகளையும் அர்த்தங்களையும் கொள்கிறது).

8)இதே நடவடிக்கைகளை சிங்கள அரசும் – பிற எல்லா அரசுகளும் பல்வேறு அளவுகளில் – செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதற்கு அரசியல் அனுமதி, வெகுமக்களின் மௌனித்த மந்தை அங்கீகாரம், சர்வதேச அரசுகளின் அங்கீகாரம், சுருக்கமாகச் சொல்வதானால் அரசியல் சட்ட அங்கீகாரம் – legitimacy – இருக்கிறது. எல். டி. டி. ஈ யினருக்கு legitimacy உள்நாட்டளவிலும் சர்வதேச அளவிலும் இல்லை. Legitimacy இருக்கிறதோ இல்லையோ எல்லா அரசுகளும், அரசு உருவாக்க முயற்சியில் இருக்கும் அமைப்புகளும் இதையே செய்கின்றன. இது ஒரு கள உண்மை (ground reality – in a very Machiavellian sense) என்பதாகப் பார்க்க வேண்டும். விமர்சனத்துடன் அணுகவும் வேண்டும்.

9)அப்படியல்லாமல், மேற்கத்திய அதிகார மையங்கள் வடிவமைத்துத் தந்திருக்கும் ‘மனித உரிமைகள்’ ‘குழந்தைப் போராளிகள்’ ‘கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு’ குறித்த மையநீரோட்ட கருத்தமைவுகள் வழி மட்டுமே நின்று விமர்சனங்கள் என்ற போர்வையில் தாக்குதல்களை வைப்பது ஆரோக்கியமான அணுகுமுறையாகாது (ஆப்பிரிக்கச் சூழலில், மஹ்மூத் மம்தானி என்ற கல்வியாளர் இதுதொடர்பாக முன்னெடுத்திருக்கும் விவாதங்களை இவற்றோடு ஒப்பிட்டும் பார்க்கலாம். உதாரணத்திற்கு இக்கட்டுரையை வாசித்துப் பார்க்கலாம்). இரண்டாம் உலகப் போருக்கு முன்வரை மேற்சொன்ன சொல்லாடல்கள் எதுவும் உலக அளவில் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும், அதன் பின்னரே மேற்குலக அரசுகளாலும் அரசு சாரா நிறுவனங்களாலும் இத்தகைய சொல்லாடல்கள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இச்சொல்லாடல்கள் உருப்பெற்றதில் புதிய அரசுகளின் உருவாக்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவது ஒரு முக்கிய காரணியாக தொழிற்பட்டதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். (இந்த விமர்சனங்களை இத்தகைய இயக்கங்கள் மீது வைக்கக்கூடாது என்பதாகப் பொருள்கொள்ள இக்குறிப்புகளை நோக்கத் தேவையில்லை. இவற்றைக் கையாள்வதில் எச்சரிக்கை தேவை என்பதே இவற்றின் உட்கிடக்கை).

10) தமது வெகுமக்கள் தளம், சர்வதேச – பிராந்திய அரசுகளிடமிருந்தான அங்கீகரிப்பிற்கான (legitimacy) தளம் மிகவும் சுருங்கிய ஒரு நிலையில், எல். டி. டி. ஈ யினரைப் போன்ற ஒரு அமைப்பு ஒன்று தம்மை முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் சக்தியாக மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அது இயலாத நிலையில் மேற்குறித்தது போன்ற மக்கள் மீதான வன்முறை வழிகளைத் தவிர அதற்கு வேறு வழிகள் திறந்திருக்கவில்லை என்பதையும் நாம் காண வேண்டும். முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் சக்தியாக மாறுவதற்கான கதவுகள் சிங்கள அரசால் எப்போதும் அடைத்து வைக்கப்பட்டே இருந்திருக்கின்றன என்பதையும் எவரும் மறுத்துவிட முடியாது. அமைதிப் பேச்சுவார்த்தைக் காலகட்டத்திலும்கூட சிங்கள அரசு செய்த சதிகளையும் ராஜதந்திர நடவடிக்கைகளையும் (diplomacy) புறந்தள்ளி இவ்விஷயங்களைக் காணமுடியாது.

11)இவை அனைத்தையும் (இன்னும் பலவற்றையும்) கவனத்தில் எடுத்துக் கொள்ளாத அல்லது எடுத்துக் கொள்ள மறுக்கிற, எல். டி. டி. ஈ போன்ற ஒரு அமைப்பினரை வசைபாடுவதை மட்டுமே தொழிலாக வைத்திருக்கும் தரப்பினர் ஒன்று வெற்று மார்க்சியப் புரட்சிகர வாய்ப்பாடுகளை (halo marxist rhetoric என்பேன்) ஒப்பிப்பவர்கள் அல்லது ஃபேஷனுக்கு ஏற்றபடி பின் – நவீனத்துவ, பின் – காலனிய, தலித்திய, சிறுபான்மை விடுதலை (post – modern, post – colonial, subaltern) முழக்கங்களை வைப்பவர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. இதல்லாமல் மேற்சொன்ன வாய்ப்பாடுகளைப் பாடிக்கொண்டே சிங்கள அரசுக்குத் துணைபோகும் சக்திகளும் இவர்களில் ஊடுவியிருக்கிறார்கள் என்பதும் நிதர்சனம்.

12)ஒரு ஒப்பீடாக, பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் இயக்கத்தின் செயல்பாடுகள், அது தன் சக போராளி இயக்கமான ஃபதா மீது கட்டவிழ்த்த வன்முறைகள், சர்வதேச அளவில் ஹமாஸ் இயக்கத்திற்கு அங்கீகாரம் (legitimacy) கிடைத்ததன் காரணங்கள் ஆகியவற்றை அதன் வித்தியாசங்களோடு பரிசீலித்துப் பார்க்கவும் செய்யலாம் (இத்தொடரில் அதுவும் வரும்). அத்தகைய வன்முறை நிறைந்த வழிப்பட்ட இயக்கமான ஹமாஸ் எதற்காகப் போராடுகிறதோ – சுதந்திர பாலஸ்தீனம் – அது கிடைத்தால்தான் அம்மக்களுக்கு விடிவு கிடைக்கும்10 என்கிறது ‘தமிழ்நாட்டு மடம்’. ஆனால், ஈழத்திற்கு மட்டும் இtது பொருந்தாது ‘மடத் தலைமைக்கு’ (இங்கு “மடையன்” அதாகப்பட்டது சமையல்காரன் என்ற பொருளில் அல்ல; “மடம்” – அதன் தலைவர் என்ற பொருளில்).

யோசிக்க ஒரு புள்ளியாக: பாலஸ்தீனம், இஸ்லாமிய உலகம் – மேற்குலகம் இரண்டும் சந்திக்கும் புலமாக இருப்பதுதான் அதற்குக் கிடைத்திருக்கும் சர்வதேசக் கவனமோ? மேற்குலகின் ஐரோப்பிய மையவாதத்திற்கான மற்றுமொரு தற்காலத்தைய உதாரணமோ? தெற்காசியப் பிராந்தியத்தில் – இந்து மகா சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வணிக வழியாக – பொருளாதார – இராணுவப் புலமாக மட்டுமே இருப்பதால்தான் என்னவோ ஈழம் சொல்லாடல் களத்தில் பாலஸ்தீனத்திற்கு இணையான கவனக்குவிப்பைப் பெறவில்லையோ?

தெளிவுகளைப் பெற, தெளிவுகளை செயல்வடிவாக்க விழைவோர் இவற்றுள் தம்மை ஆழ்த்திக் கொள்ளலாம். ‘இன்னைக்கு நான் தான் பெரிய புரச்சியாளன்’ என்று பீற்றித் தம் மீது கவனம் குவிப்பதிலேயே முனைந்திருப்போர் இவற்றைப் புறக்கணித்து தம் ‘தொழிலில்’ கவனம் செலுத்துவது சாலச்சிறந்தது.

சார்ல்ஸ் டில்லியின் கட்டுரையில் இருந்து காட்டிய – அகிலன் கதிர்காமர் முழுமையாக காட்ட விரும்பாத – பகுதிகளில் இருந்து மேலும் பல துணிபுகளுக்கு நாம் வர முடியும். வரவேண்டும். அடுத்த கட்ட கேள்விகளுக்கு, நகர்வுகளுக்கு கற்பனைகளுக்கு, கருதுகோள்களுக்கு, செயல் உபாயங்களுக்குப் பல கதவுகளைத் திறந்துவிடுபவை அவருடைய ஆய்வுவழி முன்மொழிபுகள்.

ஆனால், நமது ‘விஞ்ஞானி முருகனுக்கு’ – அகிலன் கதிர்காமர் – ஏற்படுவது பதைபதைப்பு மட்டுமே. எல். டி. டி. ஈ யிருக்கு சர்வதேச அங்கீகாரமா! சத்திய வழிப்படி (கடுதாசிப்படியும்) சாத்தியமாகக் கூடாது என்று ‘களத்தில்’ இறங்குகிறார். எல். டி. டி. ஈ யினரை ‘அரசாக உருவாகும் போக்கில் உள்ள ஒரு அமைப்பாகக்’ கருதக்கூடாது என்கிறார். அரசோடு சமமாக வைத்து அணுகக்கூடாது என்று வாதம் செய்ய இறங்கிவிடுகிறார். அதற்கான கோட்பாட்டு அடித்தளம் வழங்கச் சாத்தியம் உள்ள ஒரு கட்டுரையில் இருந்து, ஒரு வரி மட்டும் உருவி, அதை முன்மொழிந்தவர்கள் சார்ல்ஸ் டில்லியின் கருத்துகோளை – அவரே எச்சரித்ததற்கு மாறாக – மூன்றாம் உலகத்திற்குத் தவறாகப் பொருத்துகிறார்கள் என்கிறார்.

மேலே, சார்ல்ஸ் டில்லியின் கட்டுரையிலிருந்து பார்த்தவற்றிலிருந்தே அகிலன் கதிர்காமர் தமது விருப்பத்திற்கு, மனச்சாய்விற்கு, முன்முடிவிற்கு, வெறுப்பிற்கு ஏற்றார்போல டில்லியின் கருதுகோளை மறைப்பது மட்டுமல்லாமல் வலிந்து அவருக்கு எதிராகவே திரிக்கிறார் என்பது தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

இதற்குப் பெயர் என்ன?

அப்பட்டமான intellectual dishonesty அறிவுத்துறை அயோக்கியத்தனம். தனது முன் தீர்மானித்த கருத்துக்காக மற்றொருவரின் கருத்தைத் துண்டித்து – உருவி – ஒருவர் சொல்ல விழையும் கருத்துக்கு எதிரான முடிவுக்கு அவரது வார்த்தைகளிலிருந்தே வரவழைப்பது. இந்த அயோக்கியத்தனத்தைத் தான் அகிலன் கதிர்காமர் செய்திருக்கிறார். அதிலும் Economic and Political Weekly போன்ற இந்தியாவில் இருந்து வரும், சர்வதேசத் தரம் வாய்ந்த ஒரே கல்வியாளர் இதழாக அறியப்பட்ட ஒன்றில். எந்தக் ‘கழுதை’ இதையெல்லாம் cross – reference (SCA1, SCA2, போன்ற அறிக்கைகளை, Charles Tilly யின் கட்டுரையை) செய்து படிக்கப் போகிறது என்ற தைரியத்தில்!!!

இந்த அகிலன் கதிர்காமர்தான் மனித உரிமை மீறல்களைப் பற்றி வாய்கிழியப் பேசுபவர் என்றால், தலித் அரசியல், சிறுபான்மையினர் அரசியலுக்காக முன்நிற்பவர் என்றால், குமட்டிச் சிரிப்பதைத் தவிர வேறு வழி! இந்தக் கதிர்காமரோடு இணைந்து செயல்படுபவர்கள்தான் ராகவனும் சுசீந்திரனும் என்றால் வெறுத்தொதுக்குவதைத் தவிர வழி! இந்த ‘விஞ்ஞானி முருகன்’ முன்மொழிவதைத்தான் நம்ம ‘இலக்கிய ராஜூ’ ஒப்பிக்கிறார் என்றால் (சக்ஸஸ்! சக்ஸஸ்! புலிகள் தோத்தாச்சு!) கெக்கலித்துச் சிரிப்பதைத் தவிர வழி!

அகிலன் கதிர்காமர் புலம் பெயர் அறிவு’சீவி’கள், இலக்கிய ராஜூக்களை ஒன்றிணைக்கத் தொடங்கிய பின்னர் அல்லது ஒருங்கிணைத்த பின்னர், இவர்களது சொல்லாடல் களனில் முக்கியதொரு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது. எல். டி. டி. ஈ யினரின் ஒட்டுமொத்த அரசியலுமே துரோகிகள் X தியாகிகள் என்பதற்குள் அடங்கிவிடும் என்ற கூச்சல் அதீத அளவில் ஓங்கி ஒலித்ததையே குறிப்பிடுகிறேன். ஷோபா சக்தி, சுகன் இருவரும் இணைந்து செய்த ஆரம்பகாலத் தொகுப்பு முயற்சிகளில் இந்த ‘துரோகிப் பட்ட்த்திற்கு’ எதிரான கூக்குரலை அரிதாகவே காணமுடியும். சற்றேறக்குறைய 2006 வாக்கில் (அதாகப்பட்டது கருணாவின் பிளவிற்குப் பிறகு – அமைதிப் பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முறிந்தபிறகு) இந்தக் கூச்சல் அதிகரித்தது என்பது என் கணிப்பு. கிட்ட்த்தட்ட இதே காலகட்டத்திலேயே இவர்கள் அனைவரும் அகிலனின் ‘குடையின் கீழ்’ இணைகின்றனர். இச்சொல்லாடலை, அகிலன் 2002 வாக்கில் இருந்தே வலுவாக முன்னெடுத்தவர். அது மட்டுமல்லாமல், இத்தரப்பினருக்கான ‘கோட்பாட்டுத்தளத்தை’ (அதன் இலட்சணத்தைத் தான் பார்த்தோம்) கல்வியாளர் வட்டங்களில் தீவிரமாக்க் முன்னெடுத்தவர். அதன் பொருட்டே அவரது கோட்பாட்டு அடித்தளத்தை பரிசீலனை செய்ய இறங்கியதில் கிடைத்த ‘பொக்கிஷங்களையே’ – அதன் மோசடி கருதியே இலக்காக்க் கொண்டு இங்கு பகிர்ந்து கொள்ள நேரிட்ட்து.

ஆக, இப்பகுதி கொஞ்சம் நிதானித்து, ஊறப்போட்டு, வாசிக்க வேண்டியது. ஊறப்போடுவது என்பதும்தான் புளியும் நினைவுக்கு வருகிறது.

தமிழ்த் திருநாட்டில், கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகத் தெருமுனைக் கடைகளில் பாக்கெட் தயிர் கிடைப்பதற்கு முன்பாக, middle class moron களாக ‘வளர்ந்து’ விட்டவர்களின் வீடுகளில் refrigerator சகஜமான பொருளாகப் புழங்குவதற்கு முன்பாக, தயிர் ‘தொய்ப்பதற்கு’ இரவில் பாலில் சிறு ‘புழுக்கை’ புளியைப் போட்டு வைப்பது வழக்கமாக இருந்தது சிலருக்காவது நினைவில் இருக்கலாம். இப்பகுதியை அது போல எடுத்துக் கொள்ளலாம்.

கொஞ்சம் யோசிக்க. ஊற வைக்க. பால் புளிக்க. தயிர் தளுக்க.

நன்றி: கீற்று

பின்குறிப்பு:

முதல் பகுதியில் அகிலன் கதிர்காமரை லக்‌ஷ்மன் கதிர்காமரின் மகன் என்று தவறாகக் குறிப்பிட்டிருந்த்தைப் பலரும் சுட்டிக் காட்டியிருந்தனர். தவறுக்கு வருந்துகிறேன். அவர் சீலன் கதிர்காமரின் மகனார் என்பதையும் பலர் சரியாகவே சுட்டிக் காட்டியிருந்தனர். சில நண்பர்கள் சீலன் கதிர்காமர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் first cousin ஆகையால், ஒருவகையில் பின்னவரின் மகன் முறையே என்றும் குறிப்பிட்டிருந்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

(தொடரும் …)

அடிக்குறிபுகள்:

1 A Leaf, treeless
for Bertolt Brecht:

What times are these
when a conversation
is almost a crime
because it includes
so much made explicit?

Paul Celan: Selected Poems
Translated by Michael Hamburger and
Christopher Middleton, with an
Introduction be Michael Hamburger
Penguin, 1972.

2 In a section on political dimensions of the conflict, the SCA1 notes, “Although it is labelled an “ethnic war”, at the heart of the Sri Lankan crisis is a crisis of the state” (SCA1:30). This complete redefinition of the basis of conflict repudiates the widely held understanding that the root cause of the conflict is of an ethno-nationalist character.

3 “the SCA2 rehashes its critique of the government and applies it to the current ceasefire”.

4 SCA1 conceptualized conflict in Sri Lanka as a crisis of the state rather than an “ethnic conflict.” This is not to deny the ethnically patterned nature of conflict in Sri Lanka and the processes through which governance, development, and social relations have become increasingly ethnicized. But a focus on the nature of the state and the quality of governance in Sri Lanka generates insights about the inter-relations between different forms of militarized violence in the North-East and the South. Societal discontents are seldom sufficient to trigger widespread conflict until they penetrate the
state itself.

5 Ethnicity and religion provide the ideological and symbolic repertoires that make violence possible. Yet, paradoxically, both the LTTE and JVP recruit youth from similar social backgrounds – low caste, rural, Swabasha educated – with similar sets of grievances.

6 We would argue that the SCAs themselves lack a framework to conceptualise an engagement with non-state actors, which leads the writers of the SCA2 to conceptualise engagement with the LTTE as being no different from engagement with a state-like organisation. While the SCAs recognise the LTTE as a military outfit, they assume that it is in the process of transforming into a state-like structure.15 Such assumptions about the transformation of the LTTE are not clearly substantiated, and may also be dangerous. Indeed, the SCAs acknowledge the LTTE’s military structure and the absence of an independent political wing, the thousands of ceasefire violations it has committed, the elimination of Tamil dissent and its attempt to control all civil society organisations. They nevertheless advance a “transformation of the LTTE” thesis, the strongest argument for which is Tilly’s claim that emerging states can be protection rackets. Tilly’s theory of the rise of early modern European states itself is controversial, but to transpose that theory onto the north and east of Sri Lanka in the 21st century is even more worrying. The authors of the SCA2 should have heeded Tilly’s warning in the very essay to which they refer: “The third world of the 20th century does not greatly resemble Europe of the 16th or 17th century. In no simple sense can we read the future of third world countries from the pasts of European countries”.16 The important question for those concerned about governance is whether a non-state actor may continue in a cycle of such abusive practices or even worse, transform into an even more totalitarian or fascist structure, if it is given legitimacy without accountability.17 Without assuming the transformation of the LTTE, the authors of the SCA2 are unable to conceptualise engagement with the LTTE, and for this they make problematic use of Tilly’s theory.

7 Tilly’s (1985) characterization of early states as protection rackets, to some extent, resonates with the evolving dynamics of governance in the North-East. In the context of a limited state presence and an ongoing civil war, predatory networks for taxation, extortion, and protection competed with or even replaced the agencies of the state.

8 The Third World of the twentieth century does not greatly resemble Europe of the sixteenth or seventeenth century. In no simple sense can we read the future of Third World countries from the pasts of European countries (முன்னுள்ள இரு வரிகள் அகிலன் கதிர்காமர் உருவி எடுத்தவை. பின்வருபவை அதைத் தொடர்ந்து வரும் வரிகள்) Yet a thoughtful exploration of European experience will serve us well. It will show us that coercive exploitation played a large part in the creation of the European states. It will show us that popular resistance to (pg. 169) coercive exploitation forced would-be power holders to concede protection and constraints on their own action. It will therefore help us to eliminate faulty implicit comparisons between today’s Third World and yesterday’s Europe. That clarification will make it easier to understand exactly how today’s world is different and what we therefore have to explain. It may even help us to explain the current looming presence of military organization and action throughout the world. (pg. 170)

9 The extension of the Europe-based state-making process to the rest of the world, however, did not result in the creation of states in the strict European image. Broadly speaking, internal struggles such as the checking of great regional lords and the imposition of taxation on peasant villages produced important organizational features of European states: the relative subordination of military power to civilian control, the extensive bureaucracy of fiscal surveillance, the representation of wronged interests via petition and parliament. On the whole, states elsewhere developed differently. The most telling feature of that difference appears in military organization. European states built up their military apparatuses through sustained struggles with their subject populations and by means of selective extension of protection to different classes within those popula- (pg. 185) tions. The agreements on protection constrained the rulers themselves, making them vulnerable to courts, to assemblies, to withdrawals of credit, services, and expertise. To a larger degree, states that have come into being recently through decolonization or through reallocations of territory by dominant states have acquired their military organization from outside, without the same internal forging of mutual constraints between rulers and ruled. To the extent that outside states continue to supply military goods and expertise in return for commodities, military alliance or both, the new states harbor powerful, unconstrained organisations that easily overshadow all other organizations within their territories. To the extent that outside states guarantee their boundaries, the managers of those military organisations exercise extraordinary power within them. The advantages of military power become enormous, the incentives to seize power over the state as a whole by means of that advantage very strong. Despite the great place that war making occupied in the making of European states, the old national states of Europe almost never experienced the great disproportion between military organization and all other forms of organization that seems the fate of client states throughout the contemporary world. A century ago, Europeans might have congratulated themselves on the spread of civil government throughout the world. In our own time, the analogy between war making and state making, on the one hand, and organized crime, on the other, is becoming tragically apt. (pg. 186)

10 பலஸ்தீனப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறி, முழுமையான இறையாண்மை உள்ள நாடுகள் உருவாகும் வரை அங்கே அமைதி சாத்தியமில்லை என்பதுதான் நிதர்சனம்! (அ. மார்க்ஸ், ‘காஸா’வில் ஒரு கண்ணீர் நாடகம்? பக்: 137; “ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஒரு அரசியல் – சுனாமி முதல் ஒபாமா வரை” புலம், 2009).

கொட்டை எடுத்த புளியும் கொட்டை எடுக்காத புளியும் … 1

தமிழர்கள் மட்டும்தான் ரசம் வைக்கிறார்களாம்
திசையெட்டும் திரிந்து நா வளர்த்த
மடத்தமிழர் சொல்லக் கேட்டதுண்டு
வழமையான ரசம்தான்
என் ரசம் அலாதி
அரிசி கழிந்த நீரில் வைத்தது அம்மாவுக்குக் கேலி
கவனம் சிதறிய ஒரு பொழுதில் உப்பு குறைய
எரும
உப்புப் போட்டுத் தின்னாத்தானே சொரண
சட்டித் தலையுள் எங்கோ ஒலித்தது வசவு
உப்பில்லாத பண்டம் குப்பையிலே
எவரோ சொன்னது
பழந்தமிழர் வீரமறவராம்
இருக்கலாம்
மற்றவர்க்கு எப்படியோ
எதிலும் உப்பு கொஞ்சம் மட்டு எனக்கு.

கவிதை எழுதப் பழகிய புதிதில் ‘கவிதை மாதிரி’ எப்போதோ எழுதி வைத்தது. ஆரம்ப காலம் முதலே வருடத்திற்கு நாலைந்து எழுதினாலே அதிகம். இப்போது சிக்கலான இந்த விஷயத்தை எதில் தொடங்கி எப்படி எழுதுவது என்று அசைபோட்டுக் கொண்டு, எதையோ புரட்டிக் கொண்டிருந்தபோது தட்டுப்பட்டது. ஏதோ ‘பொறி பறக்க’ கணிசமான மாற்றங்கள் செய்து, செய்ய நினைத்ததை – சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பந்தா சம்பந்தமில்லாத விஷயங்களில் மாட்டிக் கொள்ளும் எனது வழக்கத்திற்கு ஏற்ற மாதிரி, இந்த ‘வெட்டிக்’
கவிதையில் இருந்து ஆரம்பிக்கிறேன்.

கவிதைக்கு கற்பனை அழகு. புளியில்லாமல் ரசத்தை கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. புலி ? கூண்டுக்குள் இருப்பது நல்லது. வேடிக்கை பார்க்கலாம், சீண்டி விட்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம், பூச்சி காட்டலாம், வீரம் பேசலாம், இட்டுக் கட்டி கதை சொல்லித் தம் பெருமை பேசித் திரியலாம், இன்னும் பல நிம்மதியாகச் செய்யலாம். இல்லாமலிருப்பது மேல். நிம்மதி. ஜனநாயகம் பேச, புரட்சி பேச, சாதி ஒழிக்க, நாடு தழைக்க, நலிந்தோர் கடைத்தேற, நல்லோர் நிம்மதி கொள்ள இப்படி இப்படியாக.

சமீப காலமாக பல்வேறு தரப்புகளில் இருந்து கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்மம் மிகுந்த புலி எதிர்ப்பு பிரச்சாரத்தையே இங்கு குறிப்பிட வருகிறேன். புலிகள் ‘இல்லாது போனாலும்’, (யாருக்குத் தெரியும்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்) அவர்களை வசைபாடுவதையே தொழிலாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் முன்வைக்கும் கருத்துக்களின் அரசியல் – சமூகவியல் பின்னணி குறித்து சில விஷயங்களை தெளிவுபடுத்தவே ஒரு தொடராக இங்கு எழுத விழைகிறேன்.

புலிகளின் அரசியல் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. கடுமையான விமர்சனங்களே உண்டு. ஆனாலும், ஜனநாயகம், மாற்றுக் கருத்துக்கள், தலித்தியம், என்பவற்றின் பேரால் செயல்பட்டு வருபவர்களைக் காட்டிலும், அவர்கள் சில விஷயங்களில் எவ்வளவோ மேல் என்று தோன்றும் அளவுக்கு மேற்குறித்தவர்களின் சமீபகாலச் செயல்பாடுகள் இருப்பதாக உணர்கிறேன். ஈழத்தில் சாதிய அமைப்பு, தமிழகத்தின் சாதிய அமைப்பிற்கும் அதற்கும் இடையிலான வித்தியாசங்கள், ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை சர்வதேச ரீதியில் காத்திரமாக பேசப்படாமைக்கு சர்வதேச அரசியல் சக்திகளின் சதிகள் என்பதற்கு மேலாக சர்வதேசச் சட்டச் சிக்கல்கள், கருத்தியல் எல்லைகள் இவை குறித்தும் இத்தொடரில் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

இவற்றை மையமாக வைத்து எழுதிச் செல்லும்போதே இது தொடர்பான விஷயங்களில் மிக மோசமான அணுகுமுறையை மேற்கொண்டிருக்கும் சில தனிநபர்களை சற்றே நையாண்டி செய்யவும் வேண்டியிருப்பதால் அதுபோன்ற சில விஷயங்களும் இதில் வரும். சில தனிநபர்களின் மோசடிகள் குறித்தும் எழுத வேண்டியிருக்கும். மற்றபடி, அவர்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்போ, பகைமையோ எனக்கில்லை என்பதை ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன்.

சரி, திரும்பவும் புளிக்கு வருவோம். புலிகளுக்கு நேர்ந்த கதி புளிக்கு ஒருபோதும் ஏற்படாது. புளி இல்லாமல் போனால் ‘மறத்’ தமிழருக்கு நாக்கு செத்துவிடும். உணவோடு சேர்ந்து நமது பண்பாட்டிலேயே கலந்து ஊறிவிட்ட ஒன்று. மேற்கு வங்காளத்தில் ”புளிக்கரைச்சலைக் குடிப்பவர்கள்” என்ற பொருள்பட தமிழர்களைக் கேலி செய்வார்கள் என்று கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு நமது பண்பாட்டு அடையாளமாகவே பிற மொழி பேசுபவர்களால் கண்டுகொள்ளப் பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பண்பாட்டையும் இது போல ஏதோ ஒன்றை வைத்து அடையாளப் படுத்துவது புதிதும் இல்லை. கேரளம் என்றால் தேங்காய், ஆந்திரா என்றால் மிளகாய் என்பதுபோல. தேங்காய், மிளகாய் என்று சொல்லும்போதே அதோடு சேர்த்து அந்த பண்பாட்டு மக்களின் – குறிப்பாக பெண்களுடைய பாலியல் வேட்கை சூசகமாக கேலி செய்யப்படுவது சிறிது விவரம்
அறிந்தவர்களுக்கும் தெரியும்.

பிற கலாச்சாரங்களை கேலியாகப் பார்க்கும் வழக்கம் மனித சமூகங்களுக்குள் ஊறிப்போய்விட்ட ஒன்றோ என்று தோன்றும் அளவிற்கு இது போன்ற கேலிப் பேச்சுகள், அவற்றில் தொனிக்கும் மதிப்பீடுகள் எங்கும் பரவியிருப்பதைப் பார்க்கலாம். இதை சற்று எளிமைப்படுத்தி சொல்வதென்றால், நமக்குப் புரியாத எது ஒன்றைப் பார்த்தாலும், அதை அரவணைத்துக் கொள்ள நம்மால் முடிவதில்லை. சமமாக நடத்த முடிவதில்லை. அது, நமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று உடனடியாக நமக்குள் எச்சரிக்கை மணி அடிக்க
ஆரம்பித்துவிடுகிறது. இதன் காரணமாக, அதை நமது ஆளுகைக்குள் கொண்டுவரப் பார்க்கிறோம். முடியாமல்போகும்போது நமது இயலாமை பயமாக, வெறுப்பாக மாறுகிறது.

புவியியல், வரலாற்று – அரசியல் ரீதியாக இரண்டு கலாச்சாரங்கள் இப்படித் தொடர்ந்து இருக்க நேரும்போது, இது பகைமையாகவும், இனவெறித் தூற்றுதலாகவும் வன்முறையாகவும் உருவெடுக்கிறது. முதலீட்டியத்தின் பரவலோடு இது இன வெறியாகவும் இனப் படுகொலையாகவும் புதிய வடிவங்கள் எடுக்கிறது. புவியியல், வரலாற்று – அரசியல் ரீதியாக தூர அல்லது விலகி இருக்கும் இரண்டு பண்பாடுகள் தொடர்பு கொள்ள நேரும்போது வெறும் (சில நேரம் இழிவும் கலந்த) கேலிப் பேச்சுகளோடு இந்த வெறுப்பு மட்டுப்பட்டு இருப்பதையும் பார்க்க முடியும்.

அபூர்வமாக சில சமயம், விலகி இருக்கும் ஒரு பண்பாட்டை உயர்வாக நினைக்கும் வழக்கங்களையும் பார்க்கலாம். உதாரணமாக, கேரளப் பண்பாட்டை சிங்களவர், ஈழத் தமிழர் – குறிப்பாக யாழ்ப்பாணத்தார், இருதரப்பினருமே வெவ்வேறு காரணங்களுக்காக தமக்கு நெருக்கமாக உணர்வதைச் சொல்லலாம். எப்படி இருந்தாலும், இந்த அடிப்படையான பயம் – வெறுப்பு எல்லாவற்றையும் மீறி பண்பாடுகளுக்கு இடையே தவிர்க்க முடியாமல் உறவுகளும் பரஸ்பர பகிர்வுகளும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒரு உதாரணத்திற்குச் சொல்வதென்றால், கேரளாவிலும் ரசம் வைக்கிறார்கள். ஆனால், ரசத்திலும் தேங்காயைத் தூவி விடுகிறார்கள். பண்பாடுகள் கலந்தாலும் தனித்தன்மையும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ருசிக்குப் பழகுவது தமிழகத் தமிழர்களுக்கு சிரமாக இருக்கலாம்தான்.

ருசிக்குப் பழகுவது கொஞ்ச காலம் பிடிக்கும். பயத்திற்குப் பழகுவதற்கும் கொஞ்ச காலம் பிடிக்கும். எதற்குமே கொஞ்ச காலம் பிடிக்கத்தான் செய்யும். ஆனால், என்ன செய்தாலும் பழக்கத்திற்கு கொண்டுவர முடியாத சில விஷயங்களும் (சிலருக்காவது) இருக்கத்தான் செய்கின்றன.

உதாரணத்திற்கு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்களுக்கு புளி பழகக் கொஞ்சம்
கஷ்டமாகத்தான் இருக்கும். எந்தக் காரமான காய்கறியிலும் கொஞ்சம் சர்க்கரை தூவிவிடும் வழக்கம் அவர்களுக்கு உண்டு. அது நமக்கு ரொம்பக் கஷ்டம். அதே போல, புலி அவர்களுடைய பண்பாட்டுப் பெருமிதச் சின்னம். நிஜப் புலிகள் சுற்றித் திரியும் சுந்தர்பந்த் காடுகள் இருப்பதால்தான் என்னவோ இப்படி.

ஆனால், கதைகளில் மட்டுமே புலிகளைக் கேள்விப்பட்டு – அதுவும் பயங்கர மிருகமாகவே – பழகிப் போன நமக்கு புலி என்றாலே நடுக்கம்தான். புலி என்றாலே பயங்கரம்தான். சங்க காலக் கவிதைகளில் இருந்தே புலி பயங்கரமான கொடூர மிருகமாகவே ஒரு சித்தரிப்பு உண்டு.

அதிக பட்சமாக வீரம் பேச மட்டுமே புலி நமது பண்பாட்டில் புழங்கி வந்திருக்கிறது. புலியைவிட கொட்டைப் புளியும், கொட்டை எடுத்த புளியும்தான் நமக்கு அதிகப் பரிச்சயம். புலி அல்ல புளிதான் நமது நாவுக்கு உவப்பான விஷயம். சென்னை வட்டார வழக்கில் அதிகமாக வாய்ப்பந்தல் போடுகிற நபர்களை, “புளிப்பு” என்று சொல்லும் வழக்கமும் உண்டு.

நிஜப்புலிகளைவிட கழுதைப் புலிகள் (1880 – ஆண்டு வாக்கில்கூட செங்கல்பட்டு மாவட்டத்தில் எஞ்சி இருந்த காட்டுப் பகுதிகளில் கழுதைப் புலிகள் ஏராளமாக இருந்திருக்கின்றன. காடுகளைத் திருத்தி பஞ்சமி நிலமாக தலித் மக்களுக்கு வழங்க முற்பட்ட பிரிட்டிஷ் அரசாங்கம், அவற்றைக் கொல்பவர்களுக்கு சன்மானமெல்லாம்கூட அறிவித்திருக்கிறது), காகிதப் (மக்குப்) புலிகள், சூரப்புலிகள்தான் நமது பண்பாட்டில் அதிகம்.

அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ, புளி – புலி – நாய் இந்த மூன்று விஷயத்திலும் தமிழகத் தமிழர்களின் பண்பாட்டுக்கும் ஈழத் தமிழர்களின் பண்பாட்டுக்கும் ஒரு நெருக்கம் உண்டு. ஈழத் தமிழர் சமையலில் புளி உண்டு. அங்கு புலியும் இருந்தது. கழுதைப் புலிகள் இருக்கின்றன. காகிதப் புலிகள் அதிகம். சூரப்புலிகள் அதைவிட அதிகம்.

நாய்களும் உண்டு. இரு பண்பாட்டிலுமே நாய்களுக்கு அதிக மதிப்பும் உண்டு. இரண்டுமே அவற்றின் விசுவாசப் பண்பை உச்சிமோந்து பாராட்டும் பண்பாடுகள்.

தமிழகத்திலிருந்து ஈழம் இது விஷயத்தில் வித்தியாசப்படும் ஒரு புள்ளியும் உண்டு. அது “நாய்ப்பீ” குறித்த அவர்களது மதிப்பீடு. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலகட்டத்தில் அவர்களுடன் கைகோர்த்து தமது மக்களையே கொடூரமாக வதை செய்த EPRLF இயக்கத்தினரை அக்காலகட்டத்தில் ஈழ மக்கள் “நாய்ப்பீ” என்று விளித்து மனதார வெறுத்து ஒதுக்கவும் செய்தனர். இதன் தீவிரத்தை உணர்த்தக்கூடிய ஒரு சம்பவத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் கட்டாயம் விளக்க முற்படுகிறேன்.

தற்சமயம், மேற்சொன்ன இயக்கத்தினரோடும் இந்திய இராணுவத்தோடும் சேர்ந்து ஈழத்தமிழ் மக்களை வேட்டையாடிய மற்றொரு இயக்கமான ENDLF இயக்கத்தினர் கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நடத்திவரும் கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள் இவை குறித்து ஜனநாயகம், மாற்றுக் கருத்துக்கள், தலித் விடுதலை பற்றியெல்லாம் பெருத்த “புளிப்புப் பேச்சு” பேசும், அருவருக்கத்தக்க, மலினமான காரியங்களைச் செய்வதற்கு எந்தத் தயக்கமும் கொள்ளாத நபர்கள் வாய் திறப்பதே இல்லை என்பதை கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

மேற்சொன்ன இயக்கத்தினர் கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் செய்து வரும் நடவடிக்கைகளை வைத்துப் பார்த்தால் அவர்களை மாஃபியாக்கள் என்றுதான் சொல்ல வேண்டிவரும். ஆனால், நமது மறுத்தோடி சூரப்புலிகள் இவர்களைப் பற்றி வாய் திறக்காதது மட்டுமல்ல, ஈழவிடுதலை என்ற நோக்கில் சமரசமற்று இருந்த, ஆனால், அரசியல் செயல்பாடுகள் குறித்த அடிப்படை அறிவும் இல்லாதிருந்த இயக்கமான விடுதலைப் புலிகளை மாஃபியாக்கள் என்று கூசாமல் விமர்சனம் செய்யத் துணிகின்றனர்.

சரி, கிடக்கட்டும். சிங்கள அரச நடவடிக்கைகள், இராணுவப் படுகொலைகள், மே 16 – 17 அன்று நடந்தேறிய கொடூரப் படுகொலை குறித்தாவது தமது கண்டனத்தை வெளிப்படுத்துகிறார்களா? “உள்ளேன் ஐயா” வகை முனுமுனுப்புகளுக்கு மேலாக இது குறித்து அவர்களது எழுத்துக்களில் பார்க்க முடியாது. ஆனால் பாருங்கள், சரியாக மே 16 இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு இணையத்தைத் திறந்தால், “பிரபாகரன் உயிருடனோ அல்லது இறந்தோ வெல்லப்பட்டுவிட்டார்” என்ற செய்தியோடு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பாக பிரபாகரனை “நாயாக” உருவகித்து எழுதப்பட்ட கவிதையை வெளியிட்டு தமது மேன்மையை வெளிப்படுத்தத் தவறுவதில்லை இந்தக் கழுதைப் புலிகள்.

இந்திய – சிங்கள ஊடகங்கள் இந்தச் செய்தியை பெரும் பிரச்சாரமாக ஒலிபரப்பத் துவங்குவதற்கு முன்னால் – எல்லோருக்கும் முன்னால் இந்தச் செய்தி இவர்களுக்கு எப்படித் தெரிய வந்தது? அதுவும் ஜெர்மனியில் உட்கார்ந்துகொண்டு? யார் இந்த நபர்கள்?

மேலே சுட்டியிருக்கும் வலைப்பக்கம் வேறு யாருடையதுமல்ல. “ஈழத்தில் நடப்பது இனப்படுகொலையே அல்ல” என்று பேட்டி கொடுத்த மேன்மை தங்கிய திருவாளர் சுசீந்திரனேதான். தமிழகத் தமிழர்கள் இவரது நடவடிக்கைகள் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் தலித் எழுத்தாளராக அறியப்பட்ட ஆதவன் தீட்சண்யாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் வெகு குறைவு. தலித் அரசியல் என்ற போர்வையில் சுசீந்திரன் அவருக்கு அணிவித்திருப்பது கோமாளித் தொப்பி.

திருவாளர் சுசீந்திரனின் மேற்சுட்டிய அதே வலைப்பக்கத்தில் கொஞ்சம் பின்னே போனால் புலிகள் இயக்கத்தின் நிறுவுனர்களில் ஒருவராக அறியப்பட்ட திருவாளர் இராகவன் என்பவரின் பேட்டி யையும் நீங்கள் வாசிக்கலாம். திருவாளர் இராகவன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை எதிர்ப்பதையே தமது முக்கியக் ‘கடமையாகக்’ கொண்டவர் என்பது அந்தப் பேட்டியை மேய்ந்தாலே தெரிந்துவிடும்.

அந்தப் பேட்டியை எடுத்தவர் யார் தெரியுமா? திருவாளர் அகிலன் கதிர்கிராமர். இவர் சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருந்து விடுதலைப் புலிகள் இயக்கம் அமெரிக்காவாலும் பல ஐரோப்பிய அரசுகளாலும் தடை செய்யப்படுவதற்கு ‘அரும்பாடுபட்ட’ லக்‌ஷ்மன் கதிர்கிராமரின் தவப்புதல்வர். கதிர்கிராமர் என்ற பெயரே சொல்லும் இவர்கள் யாழ்ப்பாணத்து சைவ வெள்ளாளப் பெருந்தனக்காரர் என்று. அகிலன் கதிர்கிராமர் தற்சமயம் மேற்கொண்டிருக்கும் அரும்பெரும் பணியாகப்பட்டது என்னவென்று தெரியுமா? ஈழத்துப் புலம் பெயர் அறிவு’சீவி’கள், ‘ஜனநாயகவாதிகள்’, ‘எழுத்தாளர்கள்’ அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து இலங்கையில் ‘இனநல்லிணக்கத்தை உறுதி செய்யக்கூடிய ‘கூட்டாட்சி’ அரசை உருவாக்குவது. இவர் ஒருங்கிணைத்துள்ள அறிவு’சீவி’களில் ஒருவர்தான் திருவாளர் சுசீந்திரன். இவர் நடாத்தும் இணைய இதழ் புகலி. ‘ஜனநாயகவாதிகளில்’ ஒருவர் எக்ஸில் ஞானம் என்று அறியப்பட்ட திருவாளர். எம். ஆர். ஸ்ராலின். இவர் கருணாவுக்கு ஆலோசகராகச் செயல்பட்டு, கிழக்கின் அதிகார பீடத்தில் அவர் ஏறுவற்கு உறுதுணையாகச் செயல்பட்டவர். தவப்புதல்வன் அகிலனை உச்சி மோந்து பாராட்டும், தலித் அரசியல் பேசும் ‘கவிஞர்’ யார் தெரியுமா? தமிழகத்துக்கு வந்து சிங்கள தேசிய கீதத்தை விறைப்பாக நின்று பாடி பெருமை சேர்த்த ‘ஆசுகவி’ திருவாளர் சுகன்.

இதில் ‘எழுத்தாளர்’ ஷோபா சக்தியின் இடம் என்ன? மேற்சொன்னவர்கள் எல்லோரும் இவருக்கு ‘தோழமைச் சக்திகள்’. இவர்களுடைய கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும் இவருடைய இணையப் பக்கத்தில் ‘ஜனநாயக வெளி’ திறந்து விடப்பட்டிருக்கும். ஆனால், ஷோபா சக்தியையோ அவரது ‘தோழமைச் சக்திகளின்’ கருத்துக்களையோ மறுத்து எழுதுபவர்களுக்கு இந்த ‘ஜனநாயக வெளி’ மூடப்பட்டுவிடும். அது எப்படி என்பதற்கு பிறகு வருகிறேன்.

முதலில் அகிலன் கதிர்கிராமர் இலங்கைத் தீவில் ஜனநாயகம் மலரவேண்டும் என்ற உயரிய நோக்கோடு அறிவு’சீவி’களையும் எழுத்தாளர்களையும் ‘களச்’ செயல்பாட்டாளர்களையும் எங்ஙனம் இணைத்து வருகிறார் என்பதற்கு சில தகவல்களைப் பட்டியலிடுவது அவசியம்.

அகிலன் கதிர்கிராமரை ‘எடை போடுவது’ அவ்வளவு சுலபம் அல்ல. இலங்கைத் தீவின் தமிழ் அறிவு’சீவி’களின் பிரதிநிதியாக ஜனநாயகவாதியாக, ‘களச்’ செயல்பாட்டாளராக சர்வதேச கல்விப் புலங்களில் உலா வருபவர் அவர். இலங்கை ஜனநாயகக் களன் (Sri Lanka Democracy Forum – SLDF) என்ற அமைப்பினை நிறுவி ‘தீவிரமாகச்’ செயல்பட்டு வருபவர். HIMAL SOUTH ASIAN என்ற இணைய இதழின் Contributing Editor – களில் ஒருவர். இதுவல்லாமல், தீவிர ‘இடதுசாரி’ நோக்கிலிருந்து ஊடகங்கள் மீதான விமர்சனங்களையும் அரசியல் விமர்சனத்தையும் முன்னெடுப்பதாக அறிவித்துக் கொள்ளும் kafila.org என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவிலும் ஒருவர் (இதன் ஆசிரியர் குழுவில் பேராசிரியர் வீ. அரசு – வின் தவப்புதல்வி பொன்னி அரசுவும் இருக்கிறார். அது குறித்து பிறகு வருகிறேன்). சும்மா ahilan kadirgamar என்று கூகிள் – ல் போட்டு தேடிப் பாருங்கள் தெரியும். வாஷிங்டன் போஸ்ட் – ல் இருந்து சிறீலங்கா கார்டியன் வரைக்கும் இவரை மேற்கோள் காட்டி எழுதாத பத்திரிகைகளே இல்லை என்பது தெரியவரும்.

சமீபமாக இவர் தீவிரமாக முன்னெடுத்திருக்கும் விவாதம், ஈழத்திற்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு என்ற கருத்தையே மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதே. இரண்டு அழிவுத் தேசியங்களுக்கு (சிங்கள – தமிழ் தேசியங்கள் இரண்டுமே destructive nationalisms என்கிறார். அதாவது சிங்கள இனவெறி தேசியத்தையும் தற்காப்பு நோக்கில் எழுந்த ஈழத் தமிழ்த் தேசியத்தையும் சமன் செய்கிறார். ஈழத் தமிழ் தேசியத்தை defensive nationalism என்று விளக்குவாரும் உண்டு. அது குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்) இடையிலான மோதல் என்ற நோக்கில் இருந்து அணுகுவதிலிருந்து விலகி, சிறுபான்மையினருக்கு அரச அதிகாரத்தில் பங்கு என்ற நோக்கில் மொத்த பிரச்சினையையும் முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிறார். மலையக மக்கள், இஸ்லாமியர்கள், பெண்கள் ஆகிய அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவிருக்காகவும் (இந்தப் புள்ளிகளை வலியுறுத்தி அவர் எழுதியிருக்கும் கட்டுரையை இங்கு வாசிக்கலாம்) இதைவிடவும் ‘முற்போக்காக’ யாரால் சிந்திக்கத்தான் முடியும்?!

(ஆனால், பாவம் ராஜபக்‌ஷேவுக்குத்தான் காது செவிடு போலிருக்கிறது. தேசிய முரண்பாடு என்பதையே மறந்துவிட்டு சிறுபான்மையினர் பிரச்சினையாக அணுக வேண்டும் என்று உலக மகா முற்போக்காளர் அகிலன் கதிர்கிராமர் முன்வைக்கும் தீர்வுக்கான ‘புளிப்பான’ வழி அவருக்குக் கேட்க மாட்டேன்கிறது. சர்வ சாதாரணமாக “சிறுபான்மையினர் என்ற வார்த்தையே எமது அகராதியில் இருந்து நீக்கப்பட்டுவிட்ட்து” என்று பேசிவிட்டுப் போகிறார்.)

தேசியப் பிரச்சினையையே தலைமுழுகிவிட்டு, இஸ்லாமியர், மலையகத் தமிழர், பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான அதிகாரப் பரவல் என்று பேசுவதைவிட மாபெரும் ‘முற்போக்கு’ வேறு எதுவாக இருக்க முடியும்? ஆகையால்தான், தமிழ் முற்போக்கு அறிவு’சீவி’களான சுசீந்திரன், எம். ஆர். ஸ்ராலின், சுகன், ஷோபா சக்தி (பின்னவர் இருவருக்கு இது விஷயத்தில் ‘ஞான குரு’ என அகிலனைச் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். ‘மாமேதை’ அ. மார்க்ஸ் அவர்களே இவர்களது ‘ஞான குரு’ என்பதே உண்மை) போன்றோர், “தேசியப் போராட்டம் உயிர்ப் பலியைத் தவிர வேறு எதைப் பரிசாகத் தந்தது? ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளையும் ஒதுக்கிவிட்டதல்லவா?” என்று ‘கரிசணையோடு’ பேசுகின்றனர்.

இந்தக் ‘கரிசணையை’ இவர்கள் மனதார உணர்ந்தே வெளிப்படுத்துகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால், ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சினைகள் புறந்தள்ளப்பட்டதற்கு ஒட்டுமொத்த பழியையும் விடுதலைப் புலிகள் மீது போடும்போதுதான் நமக்கு சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது.

ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனித்தால், புலிகள் மீதும், புலம் பெயர் சமூகங்களில் உள்ள அவர்களுடைய ஆதரவாளர்களையும் விமர்சிப்பதற்கு இவர்கள் காட்டும் ஆர்வத்தை, சிங்கள இனவெறி அரசையோ, கிழக்கிலும் யாழ்ப்பாணத்திலும் சிங்கள அரசின் பினாமிகளாக செயல்பட்டு, நாள்தோறும் ஆட்கடத்தல்களையும், கொலைகளையும் வரைமுறையின்றி அரங்கேற்றி வரும் கருணா குழுவினரையோ டக்ளஸ் குழுவினரையோ விமர்சிப்பதில் இவர்கள் காட்டுவதில்லை என்பது புலப்படும். தற்சமயம், வன்னியில் அகதி முகாம்களில் சொல்லொன்னாத் துயர் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் துயரைத் தீர்க்க சர்வதேச நிர்ப்பந்தங்களை உருவாக்கவற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்தத் தரப்பினர் மகாஅசட்டையாக நடந்துகொள்வதும் புரியவரும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த மே 16 – 17 தேதிகளில் சிங்கள இனவெறி இராணுவம் 20 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததற்குக் காரணமே விடுதலைப் புலிகள்தான் என்று இவர்கள் பிதற்றும்போது நமக்கு அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.

ஈழம் தொடர்பான எந்தப் பிரச்சினை குறித்துப் பேச ஆரம்பித்தாலும் இவர்கள் (முக்கியமாக அகிலன் கதிர்கிராமர், சுகன், ஷோபா சக்தி) உடனடியாக புலிகளைப் பாய்ந்து பிடுங்குவதை இவர்களது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் கவனிக்க முடியும். சிலகாலத்திற்கு, புலிகள் இயக்கத்தினரின் வன்முறையால் நேரடியாக பாதிப்பிற்கு உள்ளானவர்கள் என்பதால்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றே நானும் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், இதில் மற்றொரு கோணமும் இருக்கிறது என்பதை ஈழம் தொடர்பாக சில மாதங்களாக தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தபோது புலப்பட்டது.

தொடர்ந்து வரும் பகுதிகளில் அது குறித்து விரிவாக எழுதும் யோசனையும் இருக்கிறது. ஆனால், தற்சமயம் இதை சற்று எளிமையாக விளக்க இந்த உதாரணத்தைக் காட்டுவது உதவியாக இருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலை குறித்து பல்வேறு ஊகங்களும் புரளிகளும் எல்லையில்லாமல் பரவி சற்று அடங்கிய பிறகு ஜூன் 10 ஆம் தேதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழகப் பேராசிரியர்களின் குழு ஒரு அறிக்கையை வெளியிட்டதைப் பலரும் கவனித்திருக்கலாம். பிரபாகரனை சிங்கள இராணுவம் கொன்றுவிட்டது என்பதை அந்த நாட்களின் சம்பவங்களை ‘ஆய்ந்து’ பேசும் இந்த அறிக்கை சிங்கள அரசின் இனவெறித் தேசியத்தையும் விமர்சிக்கிறது. அதற்கும் மேலாக, விடுதலைப் புலிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்கிறது. மேலோட்டமாக வாசிக்கும்போது ‘நடுநிலையான’ அறிக்கையைப் போலத் தோற்றமும் தருகிறது.

ஆனால், சற்றே ஊன்றி வாசித்தால், அறிக்கையின் இடையிடையே அந்த நாட்களின் சம்பவங்களில், சிங்கள இராணுவத்தை தமிழர்களை மீட்க வந்த படையாக சித்தரித்திருப்பதையும் கவனிக்க முடியும். எடுப்பாகத் தெரியும் பிரிவு 4.1 – ல் வரும் இந்த வரிகளைப் பாருங்கள்: We begin with what is creditable. Soldiers who entered the No Fire Zone on 19th April 2009 and again on the 9th and 15th May acted with considerable credit when they reached the proximity of civilians. They took risks to protect civilians and helped across the elderly who could not walk. Those who escaped have readily acknowledged this. (பாராட்டத் தகுந்தவற்றில் இருந்து தொடங்குவோம். ஏப்ரல் 19 ஆம் தேதியும், மீண்டும் மே 9 மற்றும் 15 ஆம் தேதிகளிலும் போர் நிறுத்தப் பகுதிக்குள் நுழைந்த இராணுவ வீரர்கள், பொதுமக்களை நெருங்கியபோது மிகுந்த பாராட்டுக்குரிய வகையில் நடந்து கொண்டனர். பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ஆபத்துகளையும் எதிர்கொண்டனர். நடக்க முடியாத முதியவர்களுக்கு உதவவும் செய்தனர். தப்பி வந்தவர்களும் இதை தாராளமாக ஒப்புக் கொள்கின்றனர்).

நம்புவதற்குக் கடினமாக இருக்கிறதா?

இன்னொன்றையும் காட்டுகிறேன். அறிக்கையின் தொடக்கத்தில் தரப்பட்டிருக்கும் சுருக்க விளக்கத்தில் வரும் ஒரு வரி: The report closes with a warning, noting the danger posed by the present government behaving increasingly like a replica of the LTTE (எல். டி. டி. ஈ யின் பிரதிம்பமாகவே மேலும் மேலும் மாறிவரும் தற்போதைய அரசாங்கத்தினால் ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்த எச்சரிக்கையோடு அறிக்கை நிறைவு பெறுகிறது).

மே 16 -17 நாட்களின் சம்பவங்களை கோர்வையாக அடுக்கி, அலசி ஆராய்ந்து பிராபகரன் படுகொலை செய்யப்பட்டு விட்டார் என்பதையும் நிரூபிச்சாச்சு. புலிகள் அப்பாவிப் பொதுமக்களை பிணையக் கைதிகளாக சிறைப் பிடித்து வைத்திருந்தார்கள் என்பதையும் கடுமையாக கண்டிச்சாச்சு. சிங்கள இராணுவம் அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவர்கள் என்பதற்காக அவர்களுக்கு ஒரு ஷொட்டும் கொடுத்தாச்சு.
புலிகளைப் போல மாறிக்கொண்டிருக்கும் ராஜபக்‌ஷேவுக்கும் எச்சரிக்கை விடுத்தாச்சு.

ஒரே கல்லில் (அறிக்கையில்) எத்தனை புளியங்காய் விழுந்திருக்கு பார்த்துக் கொள்ளுங்கள்.

எல். டி. டி. ஈ யின் பிரதிபிம்பமாக ராஜபக்‌ஷே அரசாங்கம் மாறிவருகிறதாம்! இது எந்த ‘லொஜிக்’கில் அடங்கும் என்று யாராவது கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அல்லது எந்த அரசியலுக்குள்? அகிலன் கதிர்கிராமர், சிங்கள தேசியவாதமும் ஈழத் தமிழ்த் தேசியமும் இரண்டுமே ஒரே தன்மையிலான அழிவுத் தேசியங்கள் என்று குறிப்பிடுவதற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

யாழ்ப்பாணத்து பேராசிரியர்களின் அறிக்கையையும், அப்பன் 8 அடி பாய்ந்தால் 16 அடி பாய்ந்து கொண்டிருக்கும் அகிலன் கதிர்கிராமரரையும் முன்வைத்து இந்த விஷயங்களைப் பேசுவதற்கு தொடர்பு இருக்கிறதா? உண்டு. இவர்கள் இருதரப்புமே யாழ்ப்பாண சைவ வெள்ளாளப் பிள்ளைமார்களின் கடைந்தெடுத்த பிரதிநிதிகள்.

யாழ்ப்பாண சைவ வெள்ளாளப் பிள்ளைமார்கள் விடுதலைப் புலிகளை வெறுத்து கனகாலமாயிற்று (இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் ஈழத்தை ஆக்கிரமித்திருந்த ஆண்டுகளிலேயே இது வெளிப்பட்டுவிட்ட்து). அவர்கள் விடுதலைப் புலிகளை வெறுக்க மிகமுக்கியக் காரணமாக இருந்தது விடுதலைப் புலிகளின் சமூக அடித்தளம். அதுநாள் வரையில் யாழ்ப்பாண சைவப் பிள்ளைமார்களின் ஆதிக்கத்தில் இருந்த ஈழ விடுதலைக்கான போராட்டம், விடுதலைப் புலிகள் ஆதிக்கத்திற்கு வந்ததோடு கரையாளர் சமூகத் தலைமைக்கும் சமூக அடித்தளத்திற்கும் கைமாறிப் போனது. சொல்லப் போனால், ஈழப் போராட்டம் இத்துனை உக்கிரமானதற்குக் காரணமே இந்த சமூக அடித்தளம்தான். (இது குறித்தும் ஈழ சாதிய அமைப்பில் ஏற்பட்டு வந்திருக்கும் மாற்றங்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.)

இந்த மாற்றத்தை செறித்துக்கொள்ள இயலாமல்தான் லக்‌ஷ்மன் கதிர்கிராமர் போன்ற யாழ்ப்பாண வெள்ளாள சமூகத்தின் பிரதிநிதி சிங்கள அரசோடு சேர்ந்து விடுதலைப் புலிகள் சர்வதேச அளவில் பல நாடுகளால் தடைசெய்யப்படுவதற்கு அரும்பாடுபட்டார். அவரது ‘தவப்புதல்வன்’ அகிலன் கதிர்கிராமர் இன்னும் நுணுக்கமாகச் சென்று தலித் அரசியலுக்காகவும், இஸ்லாமியர் உரிமைக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் இன்னும் சகல ஒடுக்கப்பட்டோருக்காகவும் கசிந்துருகி சர்வதேச அளவில் கல்வியாளர் வட்டங்களில் அறிவு’சீவி’யாக உருவெடுத்து புலிகளை ஜனநாயக விரோதிகளாக மட்டுமே சித்தரித்து கணிசமான அளவுக்கு அங்கீகாரமும் பெற்றுள்ளார். (ஆதவன் தீட்சண்யாவின் கவனத்திற்கு: ஈழத்தைப் பொருத்தவரையில், சிறுபான்மையினர் அரசியலையும் தலித் அரசியலையும் யாழ்ப்பாணத்து சைவப் பிள்ளைமார் hijack செய்துவிட்டார்கள் என்பதற்கான குறியீடே அகிலன் கதிர்கிராமர்.)

இதில், சுசீந்திரன், எம். ஆர். ஸ்ராலின், சுகன், ஷோபா சக்தி இவர்களை எப்படிச் சொல்வது?

இந்தப் புளியங்கா அடிக்கிற பயல்கள் எப்போதும் ஒரு பத்து வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களாக இருப்பார்கள் (கதிர்கிராமர் வகையறா). அவர்கள் ஒரு நாலு கல்லை வீச ஒரு நாலு கொத்து கீழே விழும். அப்போது, பக்கத்தில் நின்று வாயைப் பிளந்துகொண்டு அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் 4 வயதுப் பொடிசுகள் ” கே” வென்று கத்திக் கொண்டு கீழே விழுவதைப் பொறுக்கி எடுத்து அந்தப் ‘பெருசுகள்’ கையில் கொடுக்கும். ‘பெருசு’களாப் பார்த்து சிறுவர்களுக்கு ஒன்றிரண்டைத் தருவார்கள்.

அதுதான் இவர்களுடைய ‘ரேஞ்ச்’.

அதையும் பார்ப்போம்.

(தொடரும் …)

நன்றி: கீற்று

குறிப்பு: கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அகிலன் கதிர்கிராமர் என்பவர் லக்‌ஷ்மன் கதிர்கிராமரின் மகன் அல்ல. பிழைக்கு வருந்துகிறேன்.

அம்பலத்திற்கு வந்துள்ள தேவதூதர்களின் ஆயுத வியாபாரம்

கடந்த மே 26 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சில் சிறப்புக் கூட்டத்தில் சிறீலங்கா அரசு ஈழ மக்களைப் படுகொலை செய்து ஈட்டிய இராணுவ வெற்றிக்குத் தன்னைத்தானே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த நாடுகளில் ஸ்லோவாக்கியாவும் பிரிட்டனும் அடங்கும். அதற்கு முன்னதாக 19 – ஆம் தேதியன்று இலங்கை நிகழ்வுகள் குறித்து மனித உரிமைக் கவுன்சில் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முன்மொழிந்ததில் இந்த நாடுகள் முக்கியப் பங்காற்றின.

இந்நாடுகள் முன்மொழிந்த தீர்மானமும் இலங்கை அரசுக்கு சிறு கண்டனமும் தெரிவிப்பதாக இருக்கவில்லை. இலங்கை அரசின் உள்விவகாரங்களில் பிறநாடுகளின் தலையிடுவதை மறுத்து இலங்கை அரசின் கைகளிலேயே அடுத்த கட்ட ‘அமைதி’ நடவடிக்கைகளுக்கான முழு பொறுப்பையும் வழங்குவதாகவே அத்தீர்மானமும் இருந்தது. அதைக்கூட ஒப்புக்கொள்ளாத இலங்கை அரசு கொண்டு வந்த தீர்மானமே வெற்றியும் பெற்றது.

இன்று டைம்ஸ் இதழ் மீண்டும் மற்றொரு அநீதியை அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கையில் அமைதியை வலியுறுத்திக்கொண்டே இந்த ‘தேவதூதர்கள்’ இலங்கை அரசுக்கு ஆயுத விற்பனையும் செய்துள்ள கொடூரத்தை பிட்டு வைத்திருக்கிறது டைம்ஸ் இதழ்.

இலங்கைக்கு செய்யப்பட்ட ஆயுத விற்பனை விபரம் பின்வருமாறு:

பிரிட்டன் 13. 6 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்களை இலங்கை அரசுக்கு விற்பனை செய்துள்ளது. இவற்றில் கவச வாகனங்களும் அடங்கும்.
ஸ்லோவாக்கியா 1.1 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ராக்கெட்டுகளை விற்பனை செய்துள்ளது. பல்கேரிய அரசு 1.75 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள ஆயுதங்கள்.

மூன்று நாடுகளும் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பவை என்பது இதில் கவனத்திற்கு உரியது. ஐரோப்பிய யூனியன் 1998 ஆம் ஆண்டு இயற்றிய ஆயுத விற்பனை குறித்த நடத்தை விதிகளின் (Code of Conduct on the Export of Arms) இரண்டாவது வரையறையின் முதல் பிரிவு உள்நாட்டுப் போர் நடக்கும் நாடுகளுக்கு ஆயுத விற்பனையைத் தெளிவாகவே தடைசெய்கிறது. அதன் இரண்டாம் பிரிவு மனித உரிமை மீறல்கள் நிகழும் நாடுகளுக்கு ஆயுத விற்பனை செய்வதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

இலங்கை விஷயத்தில் இந்த இரண்டு வரையறைகளையுமே மேற்குறித்த நாடுகள் மீறியிருக்கின்றன. ஒருவேளை சிங்கள அரசு இந்த நாடுகளிடமிருந்து வாங்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ஈழத்தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை என்று அறிக்கை விட்டால் அதற்கு தலையாட்டக் காத்திருக்கிறார்களோ என்னவோ 😦

ஈழம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: