அகன்ற வெளி … 5


கோடை மத்தியில் ஜப்பானிய தேநீர் அரங்கில் பார்க்கில் பேசிக்கொண்டிருந்தபோது இப்படிச் சொன்னாள். பார்வையாளர் மாடத்தின் கீழ் எங்களைச் சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள் தின்பண்டங்களை மென்றுகொண்டும், சூடான் தேநீர் உறிஞ்சிக்கொண்டும் அந்த அதிகாலைப் பனியில் நெருங்கி உடார்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள். இப்போது விர்ஜினியா தனது பேண்ட்டுக்கு மேலாக குழந்தை மேலங்கியை அணிந்திருந்தாள். ஆனால், அந்த அசட்டுத் தொப்பி இன்னும் விடாமல் அவள் சுருண்ட கூந்தல் மீது சவாரி செய்து கொண்டிருந்தது. வளர்ந்து கொண்டிருந்த கருவினால் அவளுடைய வயிறு பெருத்துக் கொண்டிருந்தது. பழுப்புக் கன்னங்களில் சதைப்பிடிப்பு ஏறியிருந்தது. கண்கள் மட்டும் ரொம்பவும் சோர்ந்திருந்தன. “நான் கருப்பினத்தவள்தான். அதை எப்போதோ ஜீரணித்துக் கொண்டேன். ஆனால், அதையும் மீறி எனக்கென்று ஒரு வெளியை உருவாக்கிக்கொண்டேன் இல்லையா?” ஆட்காட்டி விரலை பக்கவாட்டில், நெற்றியின் ஓரத்தில் தட்டி, “மேலே, இங்கே!” கசப்பாக சிரித்து தேநீரை உறிஞ்சினாள். “காலமும் சூழலும் நிர்ப்பந்திக்கும்போது யார்வேண்டுமானாலும் வெள்ளையனாக மேலெழுந்துவிட முடியும்.  கருப்பர்கள் அதைப் பல நூற்றாண்டுகளாக செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது ஒன்றும் புதிதில்லை. ஆனால், இந்த உலகு அளவுக்கு விரிந்த ஒரு தன்னிலையிலிருந்து, கருப்பு – வெள்ளை மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் வாய்ப்பு, சூழல் மட்டும் ஒரு கருப்பனுக்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?” சிரித்தாள். “அந்தக் கருப்பன் அற்புதமானவனாக இருப்பான் இல்லையா?” 

தேநீரை உறிஞ்சிக்கொண்டே பூக்களிலிருந்து பனி விலகிக்கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குக் கீழே நடைபாதைகளில் சுற்றுலாப் பயணிகள் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். 

நான் சொன்னேன், “நீ விளையாடினாய். உண்மைதான். நீ துணிச்சலாக இறங்கிப் பார்த்தாய். நீ மற்றவர்களிடமிருந்து வித்தியாசமான கருப்பிதான்.” 

“நான் கருப்பை விடக் கருப்பானவள். வெண்மையைவிட வெள்ளையானவள். எப்படியோ, பனித்திரையை ஊடுருவிப் பார்க்கவாவது கற்றுக்கொண்டுவிட்டேன்.” 

“பரவாயில்லை. நீ எல்லாவற்றையும் விளையாடிப் பார்த்துவிட்டாய்.” 

ஒரு சுற்றுலாப் பயணி எங்களைத் தாண்டிப் போனான். சற்று தயங்கி நின்று லேசான படபடப்போடு சிரித்தான். எங்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டான். 

விர்ஜினியா தொடர்ந்தாள். “எல்லாமே கெட்டுச் சீரழிந்து கிடக்கிறது! உனக்கு இரண்டே தேர்வுகள்தான் உண்டு. இரண்டுமே நட்டநடு வெயிலில் மாட்டிக்கொண்ட வௌவாலின் கதியைப் போல – உன்னைக் குருடாக்கிவிடும். புதிதாக அடியெடுத்து வைப்பவர்கள் போல முதலில் இரண்டுமே வேண்டும் என்று தோன்றும். பிறகு உலகத்தில் உள்ள எல்லாமே தேவைப்படும். ஆனால், கடைசியில் கொஞ்சம் நினைவுக் கொத்துகளோடு ஒரேயொரு கண்ணோடு சுருண்டு விழவேண்டும். ஆனால், என் குழந்தை ஒரு கௌரவ வெள்ளையனாக, பொட்டைக் கண்ணோடு முடிந்து விடுவதில் எனக்கு விருப்பமில்லை. கருப்பு – கண்களில், ஓரங்களில் எட்டிப் பார்க்கவாவது செய்யும்.” 

திடீரன்று அந்த அதிகாலைப் பனி என் தோள் மீது படிந்தது போன்ற மெலிதான ஒரு குளிர்வு எனக்குள் படர்ந்தது போல உணர்ந்தேன். அவர்களிருவரைப் பற்றியும் அவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் இனியும் எனக்கு எந்த அக்கறையும் இருக்க அவசியமில்லை. சொல்லத் தகுதியான கதைகள் எதுவும் அவர்களிடம் இருப்பதாகப் படவில்லை. வேறு பக்கம் திரும்பிக் கொண்டு சொன்னேன், “என்ன செய்வது வாழ்க்கை காடினமானது.” 

விர்ஜினியா தனது தேநீர் கோப்பையை சுழற்றிக் கொண்டிருந்தாள். கைகளால் வண்ணம் தீட்டப்பட்டிருந்த அந்த ட்ரேயின் மீது அதைச் சுற்றிக் கொண்டிருந்தாள். தலையை உயர்த்தி பூக்களைப் பார்த்துச் சொன்னாள், “ஆனால் என்னுடைய அந்தக் கருப்பு குரங்கனைப் பற்றிதான் எனக்குக் கவலை. அவனுக்கு மென்மையான இதயம் என்று சொல்லியிருக்கிறேன். அவனுடைய மூளையில் இன்னும் எல்லாக் குப்பைகளையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருண்டிருக்கிறான். அந்த பலவீனமான இடத்திற்குக் கீழே அவன் கழுதையைப் போன்ற பிடிவாதத்தோடு இருக்கிறான். இப்போதுதான் அவன் கண்கள் லேசாகத் திறந்திருக்கின்றன. ஆனால், திடீரென்று ஒரு கண்ணை மூடிக்கொண்டு சிந்தனையில் மூழ்கி மௌனமாகிவிடும்போது நான் கற்பனைகூட செய்து பார்த்திராத அளவு கருப்பனாகிவிடுகிறான். அப்படித்தான் அவன் சமாளித்துக் கொள்கிறான்.” 

அவர்களுக்கு இனியும் கடமைப்பட்டிருப்பவனாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், முன்பு ஒரு காலத்தில் அவள் தன் கதைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டதால் அவளுக்குக் கடமைப்பட்டிருப்பதாக உணர்ந்திருந்தேன். தொங்கிப் படந்திருந்த சிகப்பு ஊதா க்ரோட்டன்ஸ்களுக்கு ஊடாக பயணிகள்  தட்டுத்தடுமாறி நடந்து கொண்டிருந்தார்கள். மென்மையான இதழ்கள் பலவற்றை மிதித்துவிட்டிருந்தார்கள். பார்வையாளர்கள் அரங்கம் இப்போது பயணிகளால் நிரம்பியிருந்தது. விர்ஜினியாவின் வயிற்றை நோக்கி குனிந்து சொன்னேன். “அப்படியானால் உன் குழந்தையின் பொருட்டாவது கருப்பாக இருக்காதே. வழமையான, எல்லோரையும் மகிழ்விக்கிற nigger ஆக இரு.” 

அவள் சிரித்தாள். என் முதுகைச் செல்லமாகத் தட்டினாள். 

கிழக்கிற்குத் திரும்புவதற்கு முன்னால் பாலோடு நகரைச் சுற்றி வந்துகொண்டு இருந்தேன். இது குழந்தை பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால், கோடையின் இறுதியில். அவனுக்கு ஏதோ கடமைப்பட்டிருப்பதாக ஒரு உணர்வு இன்னும் இருந்தது. அது ஞாயிற்றுக்கிழமை. அன்று காலை பால் ஒரு க்வேக்கர் கூட்டத்தில் கலந்துகொண்டு வந்திருந்தான். திருப்தியாகத் தெரிந்தான். மதியம் முழுக்க நடந்துகொண்டிருந்தோம். நீண்ட நிழற்சாலைகள், கடற்கரையை ஒட்டியிருந்த சாலை, பூங்காவுக்குள் வெட்டிச்சென்ற அகன்ற சாலைகள் என்று இலக்கில்லாமல் மௌனமாக நடந்துகொண்டிருந்தோம்.  மனிதர்கள் மங்கலான, உருவற்ற பேய்களால் ஆட்டுவிக்கப்பட்டவர்கள் போல, சுரத்திழந்திருந்தது போலத் திரிந்தார்கள். என் கண்களுக்கு கருப்பர்கள் மட்டுமே தட்டுப்பட்டார்கள். கோல்டன் கேட் பார்க்கில், நல்ல குடி போதையிலோ கஞ்சாவிலோ இருந்த ஒரு கருப்பன், குழந்தையை ஒரு சிறிய வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு நடந்து போன ஒரு பெண்மணியைப் நோக்கி விசித்திரமான சைகைகள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த இளம் தாயின் மனதில் ஆடிய நினைவுகளைக் கிண்டல் செய்வதில் குறியாக இருப்பது போலத் தெரிந்தான். நான் நின்று பாலுக்கு அவனைக் காட்டினேன். “Nigger என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டாயே, இதோ பார்த்துக்கொள்.” பான்ஹாண்டிலில் சாதாரணமாக உடையணிந்திருந்த வெள்ளையர்களுக்கு மத்தியில், அதிகப் பகட்டான உடைகள் அணிந்து முப்பத்தியிரண்டு பற்களும் தெரியச் சிரித்துக்கொண்டிருந்த ஒரு கருப்பனை நின்று கவனித்தோம். போவோர் வருவோருக்கெல்லாம், “என்னைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். என்னிடம் மறைப்பதற்கு இன்றும் இல்லை என்பதை நான் அறிவேன் என்பது உங்களுக்குத் தெரியும் என்பதும் எனக்குத் தெரியும்,” என்று தம்பட்டமடிப்பது போல இருந்தது அந்தச் சிரிப்பு. அவனைப் பார்த்து தலையசைத்துவிட்டு பாலிடம் சொன்னேன், “பால் இவனும் ஒரு nigger.” பால் இப்போது இன்னும் நிம்மதியாகத் தெரிந்தான். லிங்கன் வே – யில் பேருந்து நிறுத்தத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது பம்பர்களில் நிறைய ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்த கார் ஒன்று கடந்து போனபோது, பால் அதைச் சுட்டிக் காட்டினான். மோட்டார் லூப்ரிக்கண்ட் விளம்பரம் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை, இன்னும் பல அற்ப உலக விஷயங்கள் என்று ஏதேதோ ஒட்டியிருந்தது. பின்பக்க பம்பர் மத்தியில், கருப்பு எழுத்துக்களில் ஒரு வெள்ளை ஸ்டிக்கர் இப்படி அறிவித்தது. “Nigger – ஆக இருப்பதற்கு பெருமைப்படு.” 

பால் சிரித்தான். அதை ஏதோ ஒரு நுட்பமான கிண்டலாக அவன் நினைத்திருக்க வேண்டும். 

ஆனால், பூங்காவிலிருந்து ஒரு நாலைந்து தெருக்கள் தள்ளி வந்துகொண்டு இருந்தபோது பளபளப்பான ஒரு சிகப்பு கியர் சைக்கிளில் கனமான தாடி வைத்திருந்த ஒரு வெள்ளை இளைஞனை நோக்கித் தலையசைத்தேன். அவன் முகம் பல நாட்களாகக் கழுவாமல் சிவந்திருந்தது தெரிந்தது. அவனுடைய கருப்பு பேண்டும் சட்டையும் தூரத்திலிருந்து பார்த்தபோதே அழுக்காகத் தெரிந்தன. பேன்கள் ஊர்வதுகூடத் தெரிந்தது. வண்டியை மிதித்துக்கொண்டு அவன் போனபோது, டயரை உரித்து செய்திருந்த செருப்புகளிலிருந்து முரட்டுப் பாதங்கள் துருத்திக்கொண்டு இருந்தன. எதிலிருந்தோ மீண்டு வந்தவனைப் போன்ற ஒரு தன்னுணர்வு அவன் முகத்தில் தெரிந்தது. சிவந்த முகத்தின் கோடுகளில் குழப்பமான அராஜகம் பளிச்செனத் தெரிய, அந்த மதிய நெரிசலில் எல்லா சிரமங்களுக்கு மத்தியிலும் சர்வசாதாரணமாக நீந்திச் சென்றான். தெருவின் கோடியில் அவன் திரும்பியபோது, நான் பாலிடம் சொன்னேன். “இவன் ஒரு மோசமான போலி. பகுதிநேர nigger வேஷம் போட்டிருக்கிறான்.” 

பால் சிரிக்கவில்லை. அவன் புரிந்துகொள்ளவில்லை. 

நான் தொடர்ந்தேன். “ஒரு தெருவில் இரண்டு பேர் நடந்து போவதாக கற்பனை செய்துகொள். ஒருவன் இப்போது போனவனைப் போல உடையணிந்த ஒரு வெள்ளையன். இன்னொருவன் ஒரு கருப்பன். ஒரு கனவானுடைய உடைக்கு கேலியான ஒரு மாடல். உன் மனதில் அல்லது உன் தந்தையின் மனதில், இவர்களிருவரில் யார் இயல்பிலிருந்து விலகியவர்களாக, வித்தியாசமானவர்களாக, வேடிக்கையானவர்களாகத் தெரிவார்கள்?” 

பால் நின்றுவிட்டான். மோசமாகப் புண்பட்டவனைப்போலத் தெரிந்தான். “இப்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. என்னை இனவெறியன் என்று நினைக்கிறாய். அப்படித்தானே?” 

எனக்குள் ஒரு குளிர்ச்சி பரவியது போல உணர்ந்தேன். ஒரு புதிய கதையைத் தேடும் கடமை இனி இல்லை என்பது போல உணர்ந்தேன். எந்தத் தயக்கமும் இல்லாமல் பாலிடம் சொன்னேன், “ஒருவிதமான ஒழுங்கமைப்பை மதிப்பவர்களுக்கு மத்தியில் நீ தனியனாகப் பிறந்திருப்பாய் என்று நினைக்கிறேன். ஒரு காலண்டரில், வானத்திற்கும் பரந்த புல்வெளிக்கும் நடுவில் பரந்த வெளியில் தன்னந்தனியாக ஒருவன் நின்றுகொண்டிருப்பதைப் போன்ற படத்தை ஒருமுறை பார்த்திருக்கிறேன். ஒரு சிறிய பெட்டிக்குள் அடைபட்டவனைப் போல அந்தப் பரந்த வெளியால் அழுத்தப்பட்டது போலத் தெரிந்தான். அந்த இடத்தின் எளிமையான தாளத்தில் குறுகிப்போனதுபோல இருந்தான். அந்தத் தாளங்களோடு இயைந்து போவதற்கு – எளிமையாகச் சொல்வதென்றால், அவனது மூளையில் ஏதோவொரு முறையியலை கடைப்பிடிப்பவனாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.” 

ஆனால், பால் நான் இன்னமும் அவனைக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதாக, தவறுகளுக்குப் பதில் சொல்லவேண்டும் என்று நிர்ப்பந்திப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். “மனிதர்கள் வளர்வது உண்டு. என்னைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவும் இருக்காது. ஆனால், என் குழந்தைகள் மாபெரும் சாதனைகள் செய்வார்கள்,” என்றான். 

நான் சொன்னேன், “ஒன்று அவர்கள் கருப்பாக, குருடர்களாக இருப்பார்கள். அல்லது, வெள்ளையர்களாக எடுத்துக்கொள்ளப் படுவார்கள். இந்த இரண்டு வாய்ப்புகளே சாத்தியம்.” 

பால் என்னை விட்டு விலகி வேகமாக நடந்தான். 

பத்தொன்பதாவது சாலையில் பஸ் நிறுத்தத்தில் திரும்பி என்னைப் பார்த்து “எனக்காக வீடுவரை வரவேண்டாம். அனேகமாக ஜின்னி இப்போது தூங்கிக் கொண்டிருப்பாள்,” என்று சொல்லிவிட்டு சட்டென்று பார்வையை சிக்னல் மாறுவதற்காக பேருந்துகள் காத்துக் கொண்டிருந்த பக்கம் திருப்பிக் கொண்டான். பனிமூட்டம் கவிந்திருந்தது. இருட்டிக் கொண்டிருந்தது. வாகனங்களின் வெளிச்சத்தில் அவன் கண்கள் சிவந்து சோர்ந்திருப்பது தெரிந்தது. அவன் முகத்தைத் தெளிவாக பார்க்கும் நெருக்கத்தில் நான் இருக்கவில்லை. ஆனால் அதில் எப்போதும் தகதகத்துக் கொண்டிருந்த ஒளிவட்டம் சுத்தமாக மறைந்துவிட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. என் கண்களுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் போலவே அவனும் சோர்ந்திருந்தான். 

நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம். உலகில் புதிய கதைகள் எதுவுமே இல்லை என்று சமாதானம் செய்துகொண்டு நடக்க ஆரம்பித்தேன். 

இரண்டு பக்கமும் வண்டிகள் என்னைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. அவற்றின் கிறீச்சிடல்களுக்கும் ப்ரேக் உராய்வுகளுக்கும் மேலாக எழுந்த பாலின் குரல் கேட்டது. “குறைந்தது நான் முயற்சியாவது செய்தேன்! போராடிக் கொண்டாவது இருக்கிறேன். அப்புறம், nigger என்பதற்கு அர்த்தம் என்ன என்பதும் இப்போது எனக்குத் தெரியும். ஒருவன் தன்னை ஒரு கலைப் பொருளாக உணரத் தொடங்கும்போது அவன் nigger ஆகிவிடுகிறான்!” 

இரண்டு வாரங்கள் கழித்து, கிழக்குக்கு புறப்படும் முன்பாக, அவர்களுடைய அபார்மெண்டுக்குச் சென்றேன். தொலைபேசி வயர் துண்டிக்கப்பட்டிருந்தது. அவர்களிடம் சொல்லிக்கொள்வதற்குள் போய்விட்டிருந்தார்கள். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து அப்போதுதான் இறங்கியிருந்த ஒரு மெக்சிக ஜோடி, பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள். மோசமான ஆங்கிலத்தில் பேசினார்கள். நான் தேடிக் கொண்டிருந்த ஜோடியைப் பற்றி விசாரித்ததற்கு மெதுவாக தலையை ஆட்டினார்கள். பெரிய தொந்தியோடு தொங்கு மீசை வைத்திருந்த கணவன் உள்ளே இருந்து ஒரு பெரிய குப்பைக்கூடையை இழுத்து வந்தான். அதற்குள் இருந்து ஒரு பெரிய பலகையை எடுத்து மார்புக்குக் குறுக்காக வைத்துக் காட்டினான். அதில். “இப்போது நாங்கள் பெற்றோர்கள், உள்ளே வராதே,” என்று எழுதியிருந்தது. 

பழைய கதைகளை சொல்லிக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நான் கிழக்குக்க் கிளம்பினேன். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, விடாமல் நினைவுக்கு வந்துகொண்டிருந்த ஒரு நாட்டுப்புறக் கதையின் இரக்கமற்ற இதயத்தின் ஆழத்திற்குள் இறங்க என் மூளைக்குள் முட்டிக் கொண்டிருந்தபோது ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கான்சாஸிலிருந்த ஒரு சிறிய டவுனிலிருந்து சான் ஃப்ரான்சிஸ்கோ வழியாக திருப்பி விடப்பட்டிருந்தது. ஏழு, எட்டு மாதங்களான ஒரு குழந்தையின் பிறப்பை அறிவித்தது. மூன்று கலர் ஃபோட்டோக்களும் அதோடு இருந்தது. அக்டோபர் முதல் தேதியிட்ட ஒன்றில் கருப்பு சுருள் முடியோடு ஒரு சிறிய இளஞ்சிவப்புக் குழந்தை. கொஞ்சம் சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவதில் கொழுத்த பழுப்புப் பையன் விரிந்திருந்த உலகத்தை பழுப்புக் கண்களில் ஆச்சரியம் விரிய வெறித்துக் கொண்டிருந்தான். பின்னால், “டானியல் பா. ஃப்ராஸ்ட்; 4 மாதங்கள், 8 நாட்கள்,” என்று அச்சிட்டிருந்தது. மூன்றாவதில், ஒரு வயதான ஜோடி நடுவில் இருக்க, ஒரு பக்கம் பாலும் இன்னொரு பக்கம் விர்ஜினியாவும் நின்றுகொண்டிருந்தார்கள். விர்ஜினியா வழக்கமான தன் தொப்பியை அணிந்து வெற்றிப் புன்னகையோடு இருந்தாள். பெரியவர் ஆழ்ந்த அமைதியோடு இருந்தார். பழுத்த வெள்ளை முடியோடு பாட்டி குழந்தையைக் கையில் வைத்திருந்தாள். இவர்களிடமிருந்து சற்றுத் தள்ளி கைகளை மடித்துக்கொண்டு பால் நின்றிருந்தான். அந்தப் பழைய தாடி இல்லை. யாருக்கும் பணியாதவனைப் போல மிடுக்காக நின்றிருந்தான். பரிச்சயமான அந்தத் தேடல் இன்னும் முகத்தில் தெரிந்தது. இந்தப் படத்திற்குப் பின்னால் யாரோ எழுதியிருந்தார்கள்: “இவன் முதல்தரமான nigger – ஆக இருப்பான்.” 

இந்தக் குறிப்பின் அர்த்தத்தை தெளிவுபடுத்துக. 

அது என்னால் முடியாது. சிரமம். ஆரம்பம் முதலே இது என் கதை இல்லை. அதன் செறிவான சிக்கல்களை விளக்கும் நுண்ணாற்றல் எனக்கில்லை. என்றாலும் இதை மட்டும் சொல்ல முடியும். தாய் பரந்த அனுபவமுள்ள நாட்டுப்புறக் கதைசொல்லி. தந்தை விஷயங்களைத் தெளிவாக பார்க்கும் ஆற்றல் உள்ளவன். நான் மீண்டும் அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்கள் டென்னெஸெவின் காடுகளுக்குள் வாழ்ந்துவந்த வித்தியாசமான மற்ற உறவினர்களைப் பார்க்கப் போய்விட்டார்கள் என்பது தெரிய வந்தது. நான் காத்திருப்பேன். தாய் தைரியம் மிக்கவள். எது எப்படி இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தவன் தந்தை. ஆனால், காத்திருக்கும் காலத்தில் அந்தப் பையனுடையை கதையின் வலிமை மீது இல்லையென்றாலும்கூட இலட்சிய வேகத்தின் மீது நம்பிக்கையோடு பந்தயம் வைப்பேன். 

குறிப்பு தெளிவில்லை. விளக்கம் தேவை. விளக்கம் தேவை. 

(முற்றும்.)

அகன்ற வெளி … 4

பிரம்மாண்டமான அந்தக் கதீட்ரல் இருண்டிருந்தது. காற்றில் ஆடிய மெழுகுவர்த்திகளின் மஞ்சள் ஒளி பட்டு புனித தெய்வ உருவங்களின் நிழல்கள் பெரிய வளைந்த கறைபடிந்த சாளரங்களின் மீது விழுந்து ஆடின. நீண்ட வெள்ளை அங்கிகளை அணிந்த திருச்சபை பாதிரிமார்கள் பீடத்தின் மீது நின்றுகொண்டு திருமறை ஏட்டிலிருந்து புனித வாசகங்களை படித்துக் கொண்டிருந்தார்கள். பழுப்பேறியிருந்த தூபக்கலங்களில் சாம்பிராணி எரித்துக் கொண்டு, கருத்த அங்கிகளில் சிறுவர்கள் பீடத்தின் மேலும் கீழும் சத்தம் எழாமல் பவ்யமாக நடந்துகொண்டிருந்தார்கள். எங்களைச் சுற்றிலும் சிறியவர், பெரியவர், நடுத்தர வயதினர், நாகரீகமாக உடையணிந்த மேட்டுக்குடியினர், வெளுத்துப்போன ஆடைகளை அணிந்திருந்தவர்கள், கைவிடப்பட்டவரகள், வாழ்வில் இன்னமும் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். மெலிதான தாடிகளோடு தலைகுனிந்தபடி இளைஞர்கள் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் எல்லையில் நீண்டகாலம் வாழ்ந்த முன்னோடிப் பெண்களைப்போல அலைக்கழிக்கப்பட்ட தோற்றத்தில் வெளுத்த இறுகிய முகங்களோடு இளம் பெண்கள். கலைந்த அடிப்பாகங்களோடு நீண்ட ஃப்ராக்குகளுக்கு மேலாக சிறிய கண்ணாடிகள் பதித்த ஜாக்கெட்டுகளை இந்தப் பெண்கள் அணிந்திருந்தார்கள். பலர் தோல் பூட்சுகளில் வந்திருந்தார்கள். ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் பிரிந்து அங்கும் இங்குமாக சிதறி அந்தக் கூட்டத்தில் மெல்லக் கறைந்துவிடுவதுபோலத் தலைகளைக் கவிழ்த்து கைகளைக் கோர்த்து உட்கார்ந்திருந்தார்கள். விர்ஜினியா தனது வழக்கமான அசட்டுத் தொப்பியை அணிந்திருந்தாள். அவளுடைய சுருண்ட மயிரில் அது அழுந்தி உட்கார்ந்திருந்தது. அவளுக்கு வலப்பக்கம் நானும் இடப்பக்கம் பாலும் நெருக்கமாக உட்கார்ந்திருந்தோம். அந்த இடம் முழுக்க ஒரு தெய்வீகத்தன்மை சுடர்விட்டுக் கொண்டிருந்தது.

எங்களுக்கு மேலே கருப்பு – வெள்ளை அங்கிகளில் இரண்டு சேர்ந்திசைக் குழுக்கள் ஒரு இறைப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். வரத் தவறிய கடவுளை மீண்டும் பூமிக்கு வரச்சொல்லி வருந்தி அழைத்துக் கொண்டிருந்த தேவதைகளைப் போல அவர்களுடைய குரல் தொனித்தது. சிரத்தை மிகுந்த முயற்சி. ஆனால், எங்களைச் சுற்றிலும் இருந்த எல்லோருமே உணர்ச்சிகள் வடிந்து சோர்ந்திருந்தார்கள். இறைப்பாடலை சிரத்தை எடுத்து கவனிக்க முயற்சி செய்ததுபோல இருந்தது. நாங்கள் கண்களை மூடிக்கொண்டு எங்கள் தனிப்பட்ட பிரார்த்தனைகளை சொல்லிக் கொண்டிருந்தோம். நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது. சேர்ந்திசைக் குழுவின் ஏறி இறங்கிய ராகத்தில் பாக் – கின் நம்பிக்கை தொனித்தது. அதற்குப் பதில் சொல்வது போல, அங்கிருந்தவர்களின் அமைதியில் ஒரு ஆழமான வெறுப்பை உணர முடிந்தது. அப்போது சற்றும் எதிர்பாராமல் எங்களுக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் அந்த மௌனத்தின் மீது விழுந்தது. “இளைஞனே!” அது அரற்றியது. “சர்ச்சுக்குள் தொப்பியைக் கழற்றும் நாகரீகம் இல்லையென்றால் வெளியே போய்விடு!” இரண்டு வரிசைகள் நெடுகிலும் இருந்தும் முறுகி இறுகியிருந்த கழுத்துகள் திரும்பும் சத்தம் கேட்டது. “இளைஞனே!” அந்தக் குரல் விர்ஜினியாவை திரும்பவும் மிரட்டியது. “நான் சொல்வது காதில் விழவில்லையா? ஆங்கிலம் புரியாத அளவுக்கு நீ முட்டாளா?” நான் கண்களைத் திறந்து திரும்பினேன். என்னருகில் விர்னிஜியா கண்களை இன்னும் இறுக மூடியிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் பால் தலையை உயர்த்தி நெருப்பு கக்கிய கண்களை அந்த வயதான கனவான் முகத்தில் வீசியதைப் பார்த்தேன். அவனுடைய குரலில் அப்போதுதான் அவன் உணர்வுப்பூர்வமாக அணையிட முயற்சித்துக் கொண்டிருந்த அந்த வழக்கமான அராஜகம் தொனித்தது. “கிழக்குசுவே!” மேலிருந்து எங்கள் மீது கவிந்து கொண்டிருந்த அந்த இனிமையான இசையை மறித்து அவனது குரல் கேட்டது. “இவள் என் மனைவி. அவள் தொப்பி அணிந்திருப்பது உனக்குப் பிடிக்கவில்லையெனில் அப்புறம் பிரச்சினைதான்!”

தங்கள் குரலின் வலிமையால் அந்தச் சம்பவத்தை அழித்துவிட முயற்சிப்பது போல, சேர்ந்திசைக் குழு குரலை உயர்த்தியது. எங்களைச் சுற்றியிருந்தவர்கள் லேசாக இருமினார்கள். பால் தன் கைகளை விர்ஜினியாவின் தோள்களில் ஆதரவாக அணைத்தான். கண்களை மூடிக்கொண்டு அவள் காதுகளில் எதோ கிசிகிசுத்தான். நான் கண்களை மூடிக்கொண்டு இசையில் கறைந்துவிட முயன்றேன். ஆனால், அந்தச் சம்பவம் எனக்கு நம்பிகையும் பெருமையும் ஊட்டியது. இவன் ஆண்மகன். நான் நினைத்துக்கொண்டேன்.

ஜனவரி ஆரம்பத்திலிருந்து பால் தனது வரலாற்றின் மறைக்கப்பட்ட பரிமாணங்களை அலச ஆரம்பித்திருந்தான். அவனது மூளைக்குள் இருந்த ஏதோ ஒன்று திறந்து கொண்டிருந்தது. தகவல்களைத் தேடி பசியோடு அலைந்தான். மாற்றுப் பார்வைகளை அறிந்துகொள்வதற்காகவென்று வார்த்தைகளை, பிரச்சாரங்களைக் கழித்துவிட்டு உண்மை விவரங்களைத் தேடி அலசி, ஏராளமான புத்தங்களைப் படித்தான். நிறைய அடிக்கோடுகள் இட்டான். ஓரங்களில் கேள்விகளைக் கிறுக்கினான். வெளிப்படையாக கேள்விகள் கேட்டான். படித்ததில் ஏராளமானவற்றை நிராகரித்தான். ஆனால், அவனது மூளையின் அந்தத் தனிமைப் பிரதேசத்தில் அவ்னைத் தாக்கிய அந்த ஒன்று அவனை அமைதியாக்கிவிட்டிருந்தது. ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான். சற்று வருத்தமாகவும் கிடந்தான். நான் அவனைக் கூர்ந்து கவனித்து வந்தேன். ஆனால், எனது எல்லைக்குள் நின்று கொண்டேன். அவனது துணிச்சலான அலசிப் பார்க்கும் முயற்சியை வியந்து எனக்குள் பாராட்டிக் கொண்டிருந்தேன்.

ஆனால், பிப்ரவரியில் ஒரு நாள் விர்ஜினியாவோடு ஒரு சூப்பர் மார்க்கெட்டின் நிறுத்திமிடத்தில் நின்று கொண்டிருந்தபோது ஒரு கார் நிறைய பிள்ளைகள் அவனைக் கருப்புக் குரங்கு (nigger) என்று உரக்க கேலி செய்தார்கள். அவர்கள் பாடிய பாடலின் தாளத்திற்கேற்ப அவர்களுடைய நாயும் குறைத்தது. “அந்தச் சின்னப் பொறுக்கிகளைப் பார்த்து நான் சிரிக்க மட்டுமே செய்தேன்,” என்றாள் விர்ஜினியா.

ஆனால், பால் ஏன் அவ்வளவு நிலைகுலைந்து போனான் என்பதைத்தான் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாள்.

பிப்ரவரி கடைசியில் சன்செட் மாவட்டத்தில் மழையில் விர்ஜினியாவோடு சேர்ந்து நடந்து போய்க் கொண்டிருந்தபோது இரண்டு சிறிய குழந்தைகள் அவனை கருப்புக் குரங்கு என்று கூவி அழைத்தனர்.

“Nigger என்றால் என்ன அர்த்தம்?” தொலைபேசியில் என்னிடம் கேட்டான். “அதாவது அது உனக்கு என்ன அர்த்தம் தருகிறது?”

“ப்ரொமீத்தியஸின் வழித்தோன்றல், அதிஉயர்ந்த சுதந்திரத்தின் வெளிப்பாடு,” என்றேன்.

ஃபோனை வைத்துவிட்டான்.

நான் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை. அர்த்தங்களை அவனே கண்டுபிடிக்க வேண்டும் என்ற தெளிவு எனக்குப் பிறந்துவிட்டிருந்தது.

மார்ச் ஆரம்பத்தில் விர்ஜினியா தான் கர்ப்பமுற்றிருப்பதைக் கண்டுகொண்டாள்.

அதே மாதத்தில், பால் தனது தந்தை, தங்களுடைய விவாதங்கள் ஒன்றின்போது அவருடைய அலுவலகத்தை துடைத்து எடுத்துக்கொண்டு போன கருப்பு வாயிற்காவலனின் முழுப்பெயரையும் சொல்லிவிட்டார் என்பதைத் தெரிவித்தான். ஆனால், அந்த வயதானவருக்கு குழந்தையைப் பற்றிய செய்திதான் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

கிறிஸ்துமசுக்குப் பிந்தைய மாதங்களில் அவ்ர்களை மிகச் சில நாட்களே சந்தித்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவிட்டு அப்போதுதான் பரோலில் வந்திருந்த ஒரு ஆளின் மீது எனது ஆர்வம் திரும்பியிருந்தது. சொல்வதற்கு நிறைய சுவையான கதைகளை அவன் வைத்திருந்தான். அவர்களுடைய வீட்டிற்குப் பாதிதூரத்திலேயே இருந்த அவனுடைய அறைக்குப்போக ஆரம்பித்தேன்.

செஸ் விளையாடிக்கொண்டும் அவன் பேச்சைக் கவனித்துக்கொண்டும் இருந்தேன். சுதந்திரத்தின் ஆடம்பரமான சுகங்களுக்கு வாழ்த்து சொல்லி அற்புதமான பாடல்கள் பாடினான். அவன் சிறைக்குப் போக நேர்ந்த சம்பவங்களின் காவியத் தன்மை வாய்ந்த நிகழ்வுகளை எனக்காக விவரித்தான். லட்சியங்கள், காமவேட்டைகள், நிறைய ஆசைகள் என்று துள்ளித் திரிந்தான். ஆனால், எல்லாம் இருந்தும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு கடிகாரத்தின் துடிப்புக்கேற்றபடி அறைக்குள் அவனது செயல்கள் அமைந்திருந்தது போல எனக்குப் பட்டது. கதவை நோக்கி நடந்து போனவன் திடீரென்று குழம்பிப் போனதைப் போல அப்படியே நின்றுவிடுவான். கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த தன் நாற்காலிக்குத் திரும்பிவிடுவான். அவன் அறையின் சாளரம் சூரியன் கடலுக்குள் இறங்கிய அந்தக் காட்சிக்கு நேரெதிராக இருந்தது. ஆனால், சாளரத்தில் திரைச்சீலை எப்போதும் தொங்கிக்கொண்டு இருந்தது. ஒருமுறை மதிய உணவுக்கு வரச்சொல்லி என்னைக் கட்டாயப்படுத்திவிட்டு, ஒரேயொரு ஸ்பூன் பீச் பழச்சாற்றை மட்டும் பகிர்ந்து கொள்வோம் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான். அவனுடைய நலம் விரும்பிகள் தந்த ஒரு பார்ட்டிக்கு என்னையும் அழைத்தான். அங்கு அறையின் ஒரு மூலையில் நெடுநேரம் மௌனமாக உட்கார்ந்திருந்துவிட்டு முற்றிலும் அறிமுகமில்லாத ஒருவன் அவனுடைய நினைவலைகளில் ஆர்வம் காட்டிய பிறகே முகம் மலரச் சிரித்தான். அதே கதைகளை வரிக்கு வரி மாறாமல் அப்படியே சொன்னான். மாலை வெகு நேரம் கழிந்த பிறகு விருந்து வைத்தவளிடம் பேசினேன். இந்தப் பெண்மணி சிறைகளை உணர்ச்சிமயமான ஒரு வெறுப்போடு நிராகரித்துவிட்டு என் கண்களை நேராகப் பார்த்தாள்.  சீரான இடைவெளியில் காலியான தனது மதுக் கோப்பையை எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது வலப்பக்கமாக ஒரு வளைவாகத் திரும்பி வைத்தாள். அவள் திரும்பிப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லாதபடிக்கு, அவளுடைய வளைந்த அசைவு முடிந்த இடத்தில், சரியாக அந்த இடத்தில், ஒரு வேலைக்காரன் தட்டைத் தயாராக வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். அவளுடைய கருநீலக் கண்ணாடியில் என் முகம் பிரதிபலித்தது. நான் சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.

மேலுள்ள பகுதி சுத்தமாக தெளிவில்லாமல் இருக்கிறது. அது வெட்டப்படவேண்டும். 

நான் அதை அப்படியே விட்டுவிடுவேன். அந்தக் காலத்தின் சூழலைத் தொட்டுக் காட்டுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன்.

ஆனால், இந்த இடத்தில் கதை திசை மாறிப்போகிறது. கதைப்பொருள், மனநிலை, கதையின் மையத்திலிருந்து இங்கு ஒரு விலகல் தெரிகிறது. வெட்டிவிடுவது உகந்தது. 

அந்தக் காலத்தில் உணர்ச்சிகள் தொய்ந்து போயிருந்தன. எந்த மையநோக்கும் இருக்கவில்லை.

விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு கதைசொல்லிக்கு இருக்கிறது.

இந்த விஷயத்தில் கதைசொல்லி தோல்வியடைந்து விடுகிறான். அங்கு தெளிவு இருக்கவில்லை. குவிமையம் இருக்கவில்லை. கட்டுப்பாடு இருக்கவில்லை. ஒரு ராட்சச கடிகாரத்தின் முட்கள் தாறுமாறாக சுழன்று கொண்டிருந்தது போல இருந்தது. கிழக்குக்கும் மேற்குக்கும் இனியும் எந்த வித்தியாசமும் இருக்கவில்லை.

அது யாரையும் விட்டுவைக்கவில்லை. எல்லோருமே சோர்ந்துவிட்டது போலத் தெரிந்தது. குண்டு வெடித்துப் பாழாகிப்போன இடம்போல எனக்குள் உணர்ந்தேன். இயேசுவின் அங்கியையும், மாத்திரைகளையும், பாட்டில்களையும் இறுகப் பற்றிக்கொண்டிருந்த மனிதர்களை எங்கு போனாலும் பார்த்தேன். சோர்வில் எரிந்துவிழும் மனப்பான்மை என்னையும் தொற்றிக்கொண்டது. எனக்கு உள்ளேயும் வெளியேயும் கிடந்த உலகத்தில் வெறுமனே பெருமூச்சுகளும், தேம்பல்களும், புலம்பல்களுமே கேட்டேன். இந்தக் காலத்தில் எல்லோருக்கும் தெரிய எங்கும் ஒரு நிர்வாணம் கவிந்திருந்தது. ஏறெடுத்துப் பார்க்க யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. நான் கவனித்தேன். எல்லாவற்றையும் கவனித்தேன். விர்ஜினியா தன் கதைகளின் மீது கட்டுப்பாடு இழந்து நின்றதைப் பார்த்தேன். அவளுடைய வயிறு பெரிதாக பெரிதாக அவளுடைய நினைவலைகள் ஒழுங்கை இழந்தன. அவற்றின் செறிவு மறைந்துவிடவில்லை என்றாலும்கூட அவை கதைகள் என்ற தன்மையை இழந்து அசைபோடுதல் என்பதாகிவிட்டிருந்தன. தெளிவும் ஒழுங்கும் அற்று விழுந்துவிட்டிருந்தன. இன்னமும் அவள் பெயர்களையும், பேச்சு வாடைகளையும், தனிப்பட்ட இந்தியர்கள், ஆசியர்கள்,  இஸ்ரேலியர்களின் விளையாட்டுகளையும் நினைவில் வைத்திருந்தாள். ஆனால், அவை மெல்ல ஞாபகத் துணுக்குகளாக சிதறிக் கொண்டிருந்தன. தனியொருத்தியின் சாகசக் காவியத் தன்மையை இழந்துவிட்டிருந்தன. அவளுடைய கதைகளில் அவளே காணாமல் போயிருந்தாள். பழையவற்றுக்கான ஏக்கம், கவர்ச்சி சாகசங்கள் என்கிற துருவ எல்லைகளுக்குள் அபாயகரமாக அவை உலவ ஆரம்பித்திருந்தன. சில நேரங்களில் அவள் பளிச்சிடும் நினைவுகளைச் சொல்கிற திறம் வாய்ந்தவளாக, அப்புறம் திடீரென்று உறைந்து, வாழ்ந்து, மறைந்து போகிறவளாக ஒரு திறமையான நிகழ்த்துபவளாக ஆகிப்போனாள். சர்வதேச அளவில் விரிந்த அனுபவங்கள் நிறைந்த சாகசக் காவியம் அவளுக்குள் இருந்தது. ஆனால், அதற்கு நிரந்தரமான வடிவம் கொடுக்கும் அவசியமான உணர்ச்சி வேகம் மெல்ல மெல்ல வடிந்து கொண்டிருந்தது. அவளுடைய ஒரு பகுதி, தனித்து இருக்க விரும்பிய வருங்காலத் தாயாகவும் மற்றது பிரம்மாண்டமான கதைகளைச் சொல்கிற கிராமப்புற கதைசொல்லியாகவும் பிளவுபட்டுக்கொண்டே போனது.

அந்தக் காலமே அப்படி ஆகிவிட்டிருந்தது என்று ஏற்கனவே சொன்னேன்.

பாலுக்குள்ளும் ஏதோ நிகழ்ந்து கொண்டிருந்தது. அவனுடைய மூளைக்குள், அவன் தன் வரையறுக்கப்படாத அந்த “நானை” கண்டுபிடித்து வெளியேற்ற, அதன் அமைவைக் குலைக்க கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், எதிரியைக் கண்டுபிடிக்க அவனால் முடியாது போலிருந்தது. ஒரு தற்காப்பு நோக்கில்கூட அவனுள் எழுந்திருந்த புதிய சிந்தனை அவசியமான எந்த யுக்தியையும் கற்றுத் தரவில்லை. இன்னமும் அவன் புத்தகங்கள், பேச்சுக்கள், வாழ்வின் யதார்த்தங்களோடு நெருங்கியிருந்தவர்களோடு பழகுதல், இவற்றின் வழியாக அறிந்துகொள்ள வாய்ப்புள்ள சில இரகசியங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டு இருந்தான். ஏறக்குறைய எல்லா வெள்ளை ஆண்களோடும் தொடர்புகளை துண்டித்துக்கொண்டான். ஒரு நில அளவிடும் குழுவில் சேர்ந்து எப்போதும் வெளியிடங்களிலேயே இருந்தான். அவனுடைய தசைகள் இறுகி முகம் பழுப்பேற ஆரம்பித்தது. நீண்ட கருப்பு தாடி வளர்த்தான். விவிலியம், கீர்கேகார்ட், ஒழுக்கவியல் குறித்த கடினமான அருவமான ஆய்வுரைகளைத் தேடிப் பிடித்து படித்தான். நிறைய அடிக்கோடுகள் இட்டான். துன்பத்தை வலியத் தாங்கிக் கொண்டிருந்த கிறிஸ்துவின் தோற்றத்தோடு, அவனுடைய தாடியும், சிமிட்டாத ஆழ்ந்த கண்களும் இயைந்து கலந்து போயின. இந்த சமயத்தில் முச்சந்தி பிலுக்கனுடைய உடைகளைப் பரிசோதித்து விளையாடிக் கொண்டிருந்தான். உரையாடல்களின்போது அடிக்கடி ஏழைகள் புறக்கணிக்கப்படுவது குறித்து வருத்தத்தோடு பேசினான். ஜெர்மையாவின் புலம்பல் குறிப்புகளிலிருந்தும், இஸய்யாவின் புத்தகங்களிலிருந்தும் நீண்ட பகுதிகளை மனப்பாடமாக மேற்கோள் சொன்னான். தன் தந்தையை அற மதிப்புகள் இழந்த கோழை என்று இகழ்ந்தான். தன்னைத்தானே சரி செய்துகொண்டு, போராடிக்கொண்டு ஆனால் ஆழங்காண முடியாத தனிமையில் இருந்தான். என்றாலும் அவன் முகத்தில் அந்த ஒளிவட்டம் இன்னும் இருந்தது. அவனது பெரிய பழுப்பு விழிகள் இன்னும் அதே கேள்வியை, இப்போது கொஞ்சம் தாங்கமுடியாத வேட்கையோடு கேட்டன: “நான் யார்?”

பல நேரங்களில் தன் தனிமையை மறைத்துக்கொள்ள அவன் பிரயத்தனப்படுவதைப் பார்த்து, “புராணப் பரிமாணங்கள் நிறைந்த அந்த அருவமான வெள்ளையனாகவே நீ மாறிவிட்டால், மீண்டும் அந்த முழுமை உனக்குக் கிடைத்துவிடும்,” என்று சொல்ல விரும்பினேன். ஆனால், கதை இன்னும் முடிந்திருக்கவில்லை. அவசியமில்லாமல் தலையிட்டு அதன் போக்கைக் குலைத்துவிட நான் விரும்பவில்லை. பதுங்கி, மாறாமல் இருந்த அந்த முழுமை வடிவத்திலிருந்து அவன் மீட்டெடுக்க முயற்சித்துக் கொண்டிருந்த உள்ளடக்கங்களைப் போலவே அவனுடைய குழப்பங்களும் அவனுக்கே உரியவை. ஆனால் அவனுக்கும் நியாயம் செய்தாக வேண்டும். இந்தக் காலம் முழுதும் அவன் ஒருமுறைகூட “எனக்குப் புரியவில்லை” என்று விர்ஜினியாவிடம் சொல்லிக் கேட்டதில்லை. அந்த வார்த்தைகளுக்குப் பின்னால் காத்திருக்கிற எளிமையான உலகத்தைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, அவனுடைய மௌனத்தின் விருப்பு வெறுப்பற்ற தனிமையைப் பார்த்தால் யாரும் அவனை நேசிக்காமல் இருக்க முடியாது.

அப்புறம் ஜூன் ஆரம்பத்தில் இரண்டு பக்கங்களில் இருந்தும் பெற்றோர்கள் நல்ல சமிக்ஞைகள் காட்ட ஆரம்பித்தார்கள். விர்ஜினியா வீட்டிலிருந்து அடிக்கடி வந்துபோனார்கள். குழந்தைக்குத் தங்கள் குடும்பப் பெயர்களை முன்மொழிந்தார்கள். பாலின் தாயார் தொட்டிலுக்கு பணம் அனுப்பிவைத்தாள். ஆனால், குழந்தையின் நரம்புகளில் ஐரோப்பிய ரத்தம்தான் ஓடுகிறது என்பது உறுதியாகத் தெரியவேண்டும் என்பதை மிக இரகசியமாக, சூட்சமமாக சொல்லி வைத்தாள். ஆனால், தந்தை இன்னும் வளைந்துகொடுத்தபாடில்லை. அவருடைய வாதங்கள் இன்னும் சிக்கலாகியிருந்தன. குழந்தையை அங்கீகரித்தாரேயானால் விர்ஜினியாவின் பெற்றோர்களை அங்கீகரித்தாக வேண்டும். அவர்களுடைய வீட்டிற்கு ஒருமுறையாவது போய்வர வேண்டும். அப்படியாகிவிட்டால் அவர்கள் அவரை வந்து பார்க்கவேண்டும். இந்தப் புதிய நோக்கில் மிக வெளிப்படையாகவே வர்க்க வேற்பாடு குறுக்கே வந்தது. அவருடைய மூளை நுட்பமில்லாதிருந்தது. ஆனால், அவருடைய ஒழுங்கு பற்றிய உணர்வை ஒருவர் வியந்துதான் ஆகவேண்டும். அவருடைய சொந்த முயற்சியில் தனது கம்பெனியில் ஒரு கருப்பனை வேலைக்குச் சேர்த்திருப்பதாக மகனிடம் சொன்னார். பால் அது போதாது என்றான். தாயார் இதுபற்றி அவர் யோசிப்பார் என்றும் அவர் மறுபரிசீலனை செய்தபிறகு விர்ஜினியாவும் குழந்தையும் வீட்டில் வரவேற்கப்படுவார்கள் என்றும் கூறினாள். ஆனால், விர்ஜினியா பாலிடம் இதுவும் போதாது என்று கூறினாள்.

அவளுடைய நோக்கிலிருந்து ஒருவரும் விஷயத்தைப் பார்க்கவில்லை.

“கௌரவ வெள்ளைப் பட்டம் என் குழந்தைக்குத் தேவையில்லை,” என்றாள்.

(தொடரும் … )

அகன்ற வெளி … 3

அவர்கள் ஒரு நல்ல ஜோடியாக அமைந்தார்கள். பால் மிஷன் மாவட்டத்தில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து அவர்களுடைய எல்லா பொருட்களையும் கொண்டுவந்து சேர்த்தான். அவளுடைய பயணங்களில் சேகரித்திருந்த போஸ்டர்கள், ஓவியங்கள், சிற்பங்களை எடுத்து சுவர் மூலைகளையும் மேசைகளையும் அலங்கரித்தார்கள். பாலுடைய ஏராளமான புத்தகங்கள் சிறிய லிவிங் ரூமில் உயரமான பழுப்புநிற புத்தக அலமாரிகளில்  ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டன. திருமணத்திற்குப் பிறகு நான் சந்தித்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மிகுந்த ம்கிழ்ச்சியாக இருந்தது போலத் தெரிந்தது. சிதறிப் போயிருந்த வாழ்க்கையின் உடைந்த பாகங்களைப் பொறுக்கி எடுத்து சரிசெய்வதில், ஒன்று சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தது போலத் தோன்றினார்கள். விர்ஜினியா அரசு நிறுவனம் ஒன்றில் குமாஸ்த்தாவாக வேலைக்குச் சேர்ந்தாள்.  பால் பகலில் ஒரு கட்டிடக் கம்பெனியில் வேலை செய்தான். இரவில் ஒரு சமூகக் கல்லூரியில் பட்டம் படித்தான். இலக்கை அடைந்தே தீரும் உறுதியோடு திட்டமிட்டு கடுமையாக உழைத்தான். ஆனால், ஒரு பெருநகரத்தில் வசதியான வாழ்க்கைத் தரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அவர்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்த மெக்சிக நண்பர்களிடமிருந்து இருவரும் ஸ்பானிஷ் கற்றுக்கொண்டார்கள். நல்ல இயல்பும் தனித்தன்மையும் உள்ளவர்களாகப் பார்த்து நண்பர்களை பொறுக்கி எடுத்தார்கள். நான் சந்தித்த நபர்களிலேயே மிக அதிக ஜனநாயக உணர்வுள்ளவர்களாக இருந்தார்கள். எல்லோரையும் பேச அனுமதித்தார்கள். மெக்சிக்கர்கள், ஆசியர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், ப்ரேசில் நாட்டவர்கள், கருப்பர்கள், வெள்ளை அமெரிக்கர்கள் என்று எல்லோரிடமும் உறவு வைத்திருந்தார்கள். ஆனால், எப்போதும் பலரும் வந்து போய்க்கொண்டிருந்த ஒரு இடத்தில் வசித்துவந்தார்கள். இது, கிழக்கில் நிகழ்ந்தது போல அவ்வளவு கொடூரமானதாக இல்லயென்றாலும் அதே போன்ற விளைவுகளைத் தரக்கூடியதாக அமைந்துவிட்டது.

இந்த சமயத்தில், பாலுடைய தந்தை கான்ஸாஸில் இருந்துகொண்டே நிர்ப்பந்தங்களை அதிகரித்துக் கொண்டிருந்தார். விர்ஜினியா பற்றிய யோசனை அவரைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்துவிட்டிருந்தது என்று நினைக்கிறேன். அவருடைய பெயருக்கு ஏற்படவிருக்கும் களங்கம் அவரை பயமுறுத்த ஆரம்பித்து விட்டிருக்கவேண்டும். பால் தனது முடிவை மறுபரிசீலனை செய்வதாக இருந்தால் தனது முழு உதவியும் அவனுக்கு நிச்சயம் கிடைக்கும் என்று உறுதி சொல்லி தொலைபேசியில் தொடர்ந்து தொந்தரவு செய்தார். தனது முயற்சிக்கு நிச்சயம் பலன் இருக்கும் என்று எதிர்பார்த்தார். தொலைபேசியிலேயே அவர்கள் வாதிட்டார்கள். வாலிபப் பருவத்தின் பரவசத்தில் மயங்கிவிட்டதாகக் குறை கூறினார். நீக்ரோவைப் போலவே யோசிக்க ஆரம்பித்துவிட்டான் என்று குற்றம் சாட்டினார். குறுகிய மனப்பான்மை அவரை விட்டு அகலவில்லை என்று மகன் தந்தையைக் குற்றம் சொன்னான். எதுவும் தீர்க்கப்படவில்லையென்றாலும் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக தொடர்ந்து நடந்தன. தந்தை ஒரு நல்ல வியாபாரி. சந்தையில் அடுத்தது என்ன என்பதை நன்கு அறிந்தவராக இருந்தார். மகன் ஒரு மோசமான முதலீடு செய்திருப்பதாகவும் விர்ஜினியாவிடம் சரக்கு இருப்பு தீர்ந்ததும் சீக்கிரமே திருந்திவிடுவான் என்று நம்பினார் என்றும் நினைக்கிறேன். சாயம் போகாத நிறம், சலித்துவிடாத பழம் என்று எது இருக்கிறது. அவருடைய பார்வையில் அது அவ்வளவு சுளுவானது. ஆனால் பாலின் பார்வை அப்படியிருக்கவில்லை.

டிசம்பரின் ஆரம்பத்தில் ஒருநாள் இரவு உணவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். அந்த இரவு விர்ஜினியா சொன்னாள், “அந்தக் கிழட்டு ராஸ்கல் ஒருநாள் ஒரு நீக்ரோக் குழந்தையை எடுத்து கொஞ்ச வேண்டியிருக்குமே என்று பயப்படுகிறான். எனக்கு மட்டும் கல்நெஞ்சாக இருந்திருந்தால் அவனுக்கு குழந்தையை கோமாளி வேஷமிட்டு படமெடுத்து அனுப்புவேன்.” சொல்லிக்கொண்டே சிரித்தாள். ஆனால், வழக்கமான முரண்தொனி அதில் இல்லை. தனது லெவி ஜீன்ஸின் பின் பாக்கெட்டுகளுக்குள் கைகளை விட்டுக்கொண்டு அடுப்பின் மீது சாய்ந்து கொண்டாள்.

பால் சமையலறை மேசையில் உட்கார்ந்து வைன் குடித்துக்கொண்டிருந்தான். விர்ஜினியாவின் தாக்குதலில் சற்று நிலைகுலைந்து விட்டிருந்தாலும் உறுதியாக இருப்பது போலத் தெரிந்தான். “என் அப்பா அவருக்கே உரிய முறையில் நாகரீகம் மிக்கவர். உலகின் ஒரு சிறிய பகுதிதான் அவருக்குத் தெரியும். அவரைப் போலில்லாத புதியவர்களோடு ஆழமாகப் பேசியிருப்பது கொஞ்சம்தான். கருப்பு மக்களை அவருக்குத் தெரியாது. ஜின்னியைப் புரிந்துகொள்ள அவர் நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும்” என்றான். “முரண்களின் மொத்த உருவம் அவள். எல்லாவிதமான விதிகளையும் உடைத்துவிடுவாள். ஆனால், எல்லோருமே சில சமயங்களில் அதைச் செய்வதுண்டுதானே.” கண்கள் ஒளிவிடச் சிரித்தான்.

மேசைக்கருகில் நானும் உட்கார்ந்துகொண்டு ஒரு கிளாஸ் சிகப்புவைனை ஊற்றிக் கொண்டேன். விர்ஜினியா காரம் மூக்கைத் துளைத்த ஒரு ஸ்பானிஷ் உணவு வகையை சமைத்துக் கொண்டிருந்தாள். அதன் நெடியில் வழக்கத்துக்கு மீறிய நிம்மதி உணர்வு வந்தது. க்ளாஸை காலி செய்துவிட்டு சொன்னேன், “உன் அப்பாவுடைய வருத்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சாதாரண வழக்கப்படி உங்களிருவரில் ஒருவர் செத்துப்போக வேண்டும். அல்லது நோயில் விழுந்துவிட வேண்டும். அல்லது ஒரு அற்புதமான மாலை வெயில் பொழுதில் காதல் செய்துகொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு மின்னல் இறங்கி செத்துவிழ வேண்டும்.”

பால் சிரித்தான். க்ளாஸிலிருந்து வைனை லேசாக உறிஞ்சினான். “இது சினிமா இல்லை. நிஜ வாழ்க்கை. எப்படியோ, எதையும் நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.”

விர்ஜின்யா ஒரு சிகப்பு சாஸை கலக்கிக் கொண்டிருந்தாள். அறையின் காற்றில் காரசாரமான நெடி கலந்து பரவியிருந்தது.

“ஹாலிவுட் தயாரிப்பாளர்கள் பழைய கதைகளை திரும்ப எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.” பாலைப் பார்த்துச் சொன்னேன்.

பால் திரும்பவும் சிரித்தான். “இது யதார்த்தமான வாழ்க்கை.” இப்போது கொஞ்சம் போதை ஏறியிருந்தான். ஒரு மடக்கு குடித்துவிட்டு சொன்னான், “இந்த வீட்டில் யதார்த்தத்திற்கு நாங்கள் அதிகக் கவனம் கொடுக்கிறோம். பொது அபிப்பிராயத்தில் ஜின்னி ஒரு கருப்பி. ஆனால் உண்மையில் அவள் ஆப்ரிக்க, ஐரோப்பிய, இந்திய ரத்தங்களின் கலப்பு. அங்கே வெளி உலகத்தில் அவள் முரட்டுத்தனமானவள். ஆனால், இங்கே வீட்டில் மென்மையானவள், இனிமையானவள். மற்றவர்கள் எதிரில் இறுக்கமாகத் தெரிவாள். ஆனால் என்னிடம் பூனைக்குட்டியாகிவிடுவாள். அவளுடைய முரண்களைப் புரிந்துகொள்ள எனக்கே அதிக காலம் பிடித்தது. என் குடும்பத்தவர்களுக்கு இன்னும் அதிக காலம் பிடிக்கும். என் அப்பாவுக்கு நெளிவு சுளிவுகளில்லாத விறைப்பான மூளை. ஆனால், நான் காத்திருக்கத் தயாராக இருக்கிறேன். என் எதிர்காலத்திற்கு ஒரு முதலீடாக என் திருமணத்தைப் பார்க்கிறேன். என் அப்பா கொஞ்சம் இளகிய பிற்பாடு அவளை வீட்டிற்கு அழைத்துப் போவேன். கவலைப்படவேண்டிய அவசியம் எதுவும் எனக்கில்லை.”

அடுப்புக்குப் பக்கத்திலிருந்து விர்ஜினியா கத்தினாள். “போன் செய்யும்போது அந்தக் கிழ ராஸ்கல் என்னிடம் பேசவாவது செய்திருக்கலாம்.”

முற்றுகையில் மாட்டிக் கொண்டுவிட்டவனைப் போலத் தெரிந்த பால் விரல்களால் வைன் க்ளாஸில் தாளம் போட்டுக்கொண்டு இருந்தான்.

அது என் கதை இல்லை. என்றாலும் அதில் தலையிடாமல் இருக்கமுடியவில்லை. கதைக்கு ஒரு ஒழுங்கான போக்கு இல்லை என்பது போலத் தெரிந்தது. இன்னொரு க்ளாஸ் வைன் ஊற்றிக்கொண்டு மேசைக்கு எதிர்ப்பக்கம் உட்கார்ந்திருந்த பாலை உற்று நோக்கினேன். எங்களுக்கு மேலே தொங்கிக்கொண்டிருந்த மின்விளக்கு எனது க்ளாஸ் வைனில் நடுங்கிக் கொண்டிருந்தது. நான் சொன்னேன், “கிழக்கில் இருந்ததைவிட காலம் இங்கு வித்தியாசமாக இருக்கிறது.  நாம் இங்கு மதிய வணக்கம் சொல்லும்போது கிழக்கில் மக்கள் இரவு வணக்கம் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இது மதிப்புகளைப் பற்றிய விஷயம் அல்ல.  தூரம் குறித்த விஷயம். கிழக்கில் தொடங்கும் கருத்துக்கள் தகவல் சாதனங்களின் ஊடாக வேகமாகப் பரவிவிடுகின்றன. ஆனால், இங்கு நிலவும் வித்தியாசங்களால் அது கட்டுப்பட்டுவிடுகிறது. இருந்தும், தன்னைப் பற்றிய உணர்வை மறுபடியும் தொகுத்துக் கொள்வதற்கு தொடர்பு சாதனங்களின் உதவி மூளைக்கு தேவைப்படுகிறது. தன்னிறைவு பெற்ற கற்பனை என்று எதுவும் இல்லை.”

பால் என்னை எரிச்சலோடு பார்த்தான். “நீ சொல்வது எனக்குப் புரியவில்லை,” என்றான்.

நான் தொடர்ந்தேன். “உன்னைச் சொந்தம் கொண்டாட யாரோ ஒருவர் இங்கு வரப்போகிறார். சீக்கிரமே நீயே உனக்கு அசடாகத் தெரிவாய். நேரம் இருக்கும்போதே உன் மனைவியின் மறுக்கமுடியாத இருப்பை உன் தந்தையின் மூளைக்குள் நீ இறக்கிவிட வேண்டும். முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு உன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.”

உண்மையிலேயே அவன் புரிந்துகொள்ளவில்லை. இன்னமும் அவன் தானே சுதந்திரமாக விஷயங்களைத் தீர்மானிப்பதாக நினைத்துக் கொண்டிருந்தான். சமையலறை மேசையில் விறைப்பாக உட்கார்ந்துகொண்டு வைனை உறிஞ்சிக் கொண்டிருந்தான். அடிப்பட்டது போலக் குழம்பி, கோபத்தின் விளிம்பில் இருந்தான். அவன் கதையில் தலையிட்டு விட்டதற்காக வருந்தினேன். என்றாலும் அவனுக்கு உணர்த்தவேண்டிய விஷயம் இருந்தது என்று நினைத்தேன். சமையலறைக் கதவில் மாட்டியிருந்த ஒரு நைஜீரியச் சடங்கு முகமூடியைக் காட்டினேன். எங்களுக்கு மேலாக இருந்த விளக்கின் தூய வெள்ளை ஒளிபட்டு மெருகேறியிருந்த அந்த மூகமூடி தகதகத்தது. “அது அழகாக இருக்கிறதா?” கேட்டேன்.

பால் நிமிந்து அதை நோட்டமிட்டான். மனித முகத்தின் மிகை யதார்த்தம் போல இருந்தது அது. உறைய வைத்துவிட முடியாத மனித ஆளுமை மரத்துண்டில் செதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கண்களின் இடத்தில் இரு துளைகள். அகன்ற வாயிலிருந்து ஏதேதோ கோணங்களில் பற்கள் துருத்திக் கொண்டிருந்தன. நெற்றியின் மேலாக, வளைந்த மேடுகள் மலை ஆடுகளின் கொம்புகள் போல புடைத்திருந்தன. பால் வைனை உறிஞ்சினான். “அது அழகுதான். இபாதானில் ஒரு வியாபாரியிடம் ஜென்னி அதை வாங்கினாள். அதற்குப் பின்னால் ஒரு சுவையான கதை இருக்கிறது.”

“அது சரி. அது உனக்கு அழகாகப் படுகிறதா?” நான் கேட்டேன்.

“கதையா முகமூடியா?” அடுப்பருகிலிருந்து விர்ஜினியா கேட்டாள். ஒரு சுயஎள்ளல் தொனியில் சிரித்தாள். ஆனால், அந்த ஒலியில் அவளுடைய அந்தரங்க நானை மறைத்துக்கொள்ள ஒரு திரைச்சீலை இழுத்துவிடப்பட்டது போல இருந்தது.

“அதிலென்ன சந்தேகம். முகமூடியைத்தான் சொல்கிறேன்.” பால் சாதாரணமாகச் சொன்னான். கண்களில் உணர்ச்சி பொங்கி வழிய என்னைப் பார்த்துச் சொன்னான், “அற்புதமாக இருக்கிறது.”

இப்போது நான் பேசினேன், “நீ கலைப் பொருட்களை விற்கும் ஒரு வியாபாரி என்று வைத்துக்கொள்வோம். மிகவும் வித்தியாசமான ரசனையுள்ளவன். ஆனால், உன் கடை ஒரு சிறிய டவுனில் இருக்கிறது. உன்னுடைய ஒரு நல்ல வாடிக்கையாளருக்கு இதை அழகானது சுவாரசியமானது என்று நம்பவைத்து நீ விற்க வேண்டும். ஆனால் டவுனில் இருக்கும் மற்ற எல்லா வியாபாரிகளும் இதை அசிங்கமாயிருக்கிறது என்று சொல்கிறார்கள். உன் வாடிக்கையாளரை எப்படி சமாதானம் செய்து விற்பாய்?”

பாலுடைய கண்கள் விரிந்து ஒளி தெரித்தது. எழுந்திருக்கப் பார்த்து முடியாமல் தள்ளாடி உட்கார்ந்தான். “ஞானப் பால் புகட்டப்படுவதை நான் விரும்புவதில்லை.” அவன் குரலில் வெறுப்பு தெறித்தது. “என்னை உட்காரவைத்து புத்திமதி சொல்வது எனக்குப் பிடிக்கவில்லை!” அடக்கிக் கொண்ட கோபம் தெரிந்தது. திரும்பவும் எழப் பார்த்தான்.

“சாப்பாடு தயார்!” விர்ஜினியா கத்தினாள்.

“ஒரு உளவியல் யுத்தத்திற்குள் நீ மாட்டிக்கொண்டுவிட்டாய்.” நான் அவனை விடவில்லை.

பொறியில் அகப்பட்டுக் கொண்டுவிட்டவனைப் போலத் தெரிந்தான். மனைவியின் முகத்தைப் பார்க்கத் திரும்பினான். அவள் அவனுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்தாள். பாத்திரத்தைத் திறக்க அவசியமில்லாமல் நிறைய சத்தம் செய்துகொண்டிருந்தாள். ஒரு பழைய நீக்ரோப் பாடலை முனுமுனுத்துக் கொண்டிருந்தாள் என்று ஞாபகம். மீண்டும் திரும்பி என்னைப் பார்த்தான். ஒரு பயங்கர அச்சம் அவன் முகத்தில் கப்பிக் கொண்டிருந்தது. “இன்னும் ஏன் இங்கு இருக்கிறாய்!” கத்தினான். “போய்விடு! இங்கிருந்து போய்விடு!

அவனைத் தாண்டி நின்றுகொண்டிருந்த விர்ஜினியாவைப் பார்த்தேன். பழுக்கச் சிவந்திருந்த ஒரு பாத்திரத்தை வெறுங்கைகளால் பிடித்துக் கொண்டிருந்தாள். அடிபட்ட சிறு பறவையைப் போல நடுங்கிக் கொண்டிருந்தாள். மோசமான ஒரு தோல்வியின் சாயல் அவள் முகத்திலிருந்தது. கத்தினாள். “போய்விடு! தயவுசெய்து வெளியே போய்விடு! நீ என்ன நினைத்துக் கொண்டாலும் பரவாயில்லை. அவன் என் கணவன்!”

அவர்களைத் தனியே விட்டுவிட்டுப் பிரிந்தேன். அது என் கதை இல்லை. அவர்கள் நிதானத்திற்கு வரும் வரைக்கும் எதையும் பேசாமலிருப்பது நல்லது.

இந்தப் பகுதியை கொஞ்சம் அலச வேண்டும். மிகவும் நுட்பமாக இருக்கிறது. இன்னும் தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது.

அவனுடைய மூளைக்குள் நுழைய முயற்சித்து தோல்வியடைந்தேன்.

விளக்கம் தேவை!

நிறத்தால் அவனை மோதினேன். அவன் வெளுத்துவிட்டான்.

தெளிவில்லை. விளக்கம் தேவை! விளக்கம் தேவை!

அவனுடைய “நான்” இருந்த பொதுவெளி ஒன்று இருந்தது. அராஜகம் என்று தவறாகக் கொள்ளப்படுகிற அமைதியிழந்த நிலை அதன் அடித்தளமாக இருந்தது. உண்மையில் உலகத்தோடு அவனது உறவு இப்படித்தான், இதன்வழியாகத்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கட்டமைவை மிகவும் நேரடியாக, முரட்டுத்தனமான ஒரு தாக்குதல் தொடுத்து அதன் முன் அனுமானங்களைத் தகர்த்துவிட முயற்சி செய்தேன். என் தலையிட்டைப் புரிந்துகொண்டு அவனது இருத்தலைத் தக்கவைத்துக்கொள்ள உணர்ச்சிவயமாக என்னை எதிர்கொண்டான். அவன் உலகத்திலிருந்து என்னை வெளியே தள்ளி கதவை அடைத்துக்கொண்டான்.

தெளிவில்லை. விளக்கம் தேவை.

நான் நானாக இருக்கிறேன். நான் நாமாக இருக்கிறேன். நீ நீயாக இருக்கிறாய்.

இந்த விஷயத்தில் தெளிவு அவசியம் தேவை. விளக்குக.

கோடிக்கணக்கான சிறிய முன் அனுமானங்கள் வருடத்திற்கு வருடம் சேர்ந்து, பல்தேய்ப்பது போன்ற சாதாரணமான வழக்கமாகி விடுகின்றன. வளர்த்துக்கொள்ள வேண்டிய கடமை எதுவும் இல்லாத ஒரு ஆளுமையின் பகுதியை அந்த முழுமை மறைத்து, தடுத்து வந்தது. அவன் பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னமேயே மற்றவர்களின் செயல்கள், தகுதி, அதிகாரம், பிம்பங்கள் வழியாக வெளியே, உலகத்தில் தேவையான எல்லா வாய்ப்புகளும் சூழல்களும் அவனுக்காக காத்துக் கிடந்தன. அந்த வரையறுக்கப்படாத “நானில்” (I)  இந்த மொத்த உலகத்தின் வரைவெல்லைகளை, வரைவெல்லைகளை மட்டுமே தொட்ட ஒரு சுயம் (Ego) இருந்தது. அவனது கைக்கு மீறிய நனவிலி நிகழ்வு அது. அவன் தன்னிலையை இது வரையறுத்தது. ஒழுங்கு பற்றிய அவனது உணர்வை வரையறுத்த முறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு அது. அவனது தனிப்பட்ட அனுபவங்கள் இந்த ஒழுங்கை சிதைத்துவிடாமலிருக்க பார்த்துக் கொள்ளும்படி நனவிலியில் இயக்கிவிடப்பட்டது அது. அழைப்பில்லாமலேயே நான் இந்த வெளிக்குள் நுழைய முயற்சித்து நெட்டித் தள்ளப்பட்டேன். அது அவன் உரிமை. அந்தரங்கமான அறைக்குள் அனுமதின்றி நுழைய ஒரு விருந்தாளிக்கு இடமில்லை. முன்பின் அறிமுகமில்லாத புதிய சத்தத்தைக் கேட்ட ஒரு குருடன் அடுத்த அடி எடுத்து வைப்பது இல்லை.

இந்த இடத்தில் தெளிவு அவசியம் தேவைப்படுகிறது. தயவு செய்து விளக்குங்கள்.

ஒழுக்கம், அறம் பற்றிய ஒரு தீவிரத் தேடலை மீண்டும் தான் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டுவிட்டான் என்று நினைக்கிறேன்.

கிறிஸ்துமஸ் கழிந்து விர்ஜினியா தொலைபேசியில் என்னைப் பிடித்தாள்: “நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாயோ தெரியாது. அவன் வருந்திக் கொண்டிருக்கிறான். அவனுக்கு நல்ல மனது இருக்கிறது. ஆனால் நீ தான் தூண்டிவிட்டாய்.  நிறைய பயணித்ததில் நான் சேகரித்துக்கொண்ட அனுபவம் ஒன்று, மனிதர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தொடங்கவேண்டும் என்பதுதான். ஆப்ரிக்கர்களும் கொடூரமானவர்களாக இருக்கமுடியும் என்பது உனக்குத் தெரியும். அராபியர்களை மட்டும் நான் நம்பத் தயாராக இருந்ததில்லை. என்றாலும், அவ்வளவு எளிதில் கோபத்திற்கு ஆட்படாத கருப்புக் குரங்குகள் (niggers) நம்மில் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால், அந்தக் கந்தல் சூத்து இந்தியர்கள் பொறுமை,  நம்பிக்கையோடு காத்திருப்பது பற்றி எனக்குக் கொஞ்சம் கற்றுக்கொடுத்துத் தொலைத்துவிட்டார்கள். நம்பிக்கை வைக்க அவர்களிடம் எதுவுமே இல்லையென்றாலும்கூட பொறுமையோடு காலத்தைக் கடத்துகிறார்கள். கல்கத்தாவில் முடமான பிச்சைக்காரர்கள் எங்குபார்த்தாலும் திரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், மக்கள் அவர்களை சட்டை செய்யாமல் போய்க்கொண்டு இருப்பார்கள். இப்போது, ஒரு மேற்கத்தியன் அதைக் கொடூரம் என்று சொல்லலாம். ஆனால் இந்தச் சனியன் பிடித்த இந்தியர்களுடைய மூளையை என்னவென்று சொல்வது. அவ்வளவு சிக்கலானது. அதே பிச்சைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக அவர்களை ஆண்ட அழகான அரசன் ஒருவன் எக்கச்சக்கமான காரம் தின்று வலிப்பு வந்து செத்துப் போனான் என்றும் அவன்தான் இப்போது மறுபிறவி எடுத்து இப்படிப் பிறந்திருக்கிறான் என்றும் அமைதியாகச் சொல்லிவிடுவார்கள்! அதனால் இப்போது அவனுக்கு எதுவும் செய்யவேண்டியதில்லை. அவன் செய்த பாவத்தை அவன் அனுபவிக்கிறான். கொடுமையே! ஆனால் பொறுமையாக இருப்பது என்பது ஒரு கிறிஸ்துமஸ் காலையைப் போன்றது. கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் என்ன வைக்கப்பட்டிருக்கிறதோ அதைத் திருப்தியோடு ஏற்றுக்கொண்டு சான்டா க்ளாஸ் என்று ஒருவர் இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் இரண்டு பேருமே, நீயும் என்னுடைய அந்தக் குரங்கனும் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் நான் எதையும் விடப்போவதில்லை! ஒரு மயிரையும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை! அதனால் நீ ஏன் உன் கந்தல் சூத்தை இழுத்துக்கொண்டு வருடப் பிறப்பு சிறப்பு வழிபாட்டுக்கு எங்களோடு வரக்கூடாது?”

நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். விர்ஜினியா ஒரு மந்திரப் பெண்.

(தொடரும் … )

அகன்ற வெளி … 2

விர்ஜினியாவை அவள் சேகரித்து வைத்திருந்த கதைகளுக்காக நான் விரும்பினேன். பால் ஃப்ராஸ்ட் அவற்றுக்கு முழுமுதல் உரிமையும் கொண்டாடியதால் அவனை வெறுக்கவும் செய்தேன். அவளிடமிருந்த அந்தப் புதையலை அவன் விற்றுத் தீர்த்துவிடுவான் என்று பயந்தேன். விர்ஜினியா அப்படி ஒன்றும் பிரமாதமான அழகியில்லை. ஆரம்பத்தில் அவன் எப்படி அவளை விரும்பினான் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சிறிய முலைகளோடு அவள் சற்றே பருமனாக இருந்தாள். எப்போதும் லெவி ஜீன்ஸ்களையும் நாற்பதுகளில் ஹாலிவுட் கொள்ளையர் படங்களில் பிரபலமான விரிந்த ஓரம் வைத்த தொப்பிகளையும் அணிந்தாள். ஆனால், அவளுடைய உடுத்தும் பாங்கை இன்னும் கூர்ந்து கவனித்த பிறகு அவள் ஒளித்து வைத்திருந்த நானை யாரும் கண்டுகொண்டுவிடக் கூடாது என்பதற்காக, கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் அப்படி அணிந்தாள் என்பதைப் புரிந்துகொண்டேன். உரக்கச் சிரிப்பாள். அந்தச் சிரிப்புக்குப் பின்னால் ரகசியமாக கீழே இறங்கி ஆடைகளை சரிசெய்துகொண்ட ஒரு கையின் அசைவுகளைக் கேட்டேன். அவளுடைய பிடிவாதமான வீறாப்பு மென்மையான இதயத்தை தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக இருந்தது. அவள் சிரிப்பின் குரலில் பிசைந்த தொண்டை நார்கள், மிக நுட்பமாக பிண்ணப்பட்டிருந்த அவளுடைய கூருணர்வுகள் தம்மை வெளிக்காட்டிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு மிகுந்த பிரயத்தனப்படுவதைக் கண்டுகொண்டேன். மிகவும் செறிவான, சிக்கலான ஒரு தற்காப்பு முரண்நகையை அவள் பிரயோகித்து வந்தாள். “கருப்பனே! என்னிடம் விளையாடாதே!” என்று அவள் குரல் அதிர்ந்தபோது, அதன் நயத்தின் ஆழத்தில் “ரொம்பவும் நெருங்கி வந்துவிடாதே, எளிதில் உன்னை புண்படுத்திவிடுவேன்,” என்று சொல்வது போலிருந்தது. அல்லது, “இங்கே வா. இவன்தான் நான் மணந்துகொள்ளப் போகிறவன்; உனக்குப் பிடிக்கவில்லையெனில் செத்து நரகத்துக்குப் போய்த் தொலை!” என்று அவள் குரல் சொன்னபோது, துறுதுறுவென்று அந்தக் கரிய விழிகள், எதிர்வினைகளைக் கூர்ந்து எதிர்பார்த்துக் கொண்டே, தமது மௌன மொழியில் “கண்ணே, காயப்படுத்திவிடாதே! காயப்படுத்திவிடாதே!” என்று கெஞ்சின. இதே முரண்நகை கலந்து அவள் தன் கதைகளைச் சுவையாகத் தந்தாள். விர்ஜினியா வேலென்டைன் பல நாடுகளைச் சுற்றி கண்ட அனுபவங்களின் சுவை கூட்டி கதைகளைச் சொன்ன ஒரு நாட்டுப்புற நாடோடிக் கதைசொல்லி. அவற்றைச் சொல்வதன் ஊடாக அவள் தன் மொத்த இருப்பையுமே சிக்கலான முறைகளில் பேசினாள். அவள் தனித்தன்மை சுடர்விட்டவள். அருமையான கதைசொல்லி. ஒரு அற்புதமான மந்திர மங்கை. தேவதை. 


பால் ஃப்ராஸ்ட் அவள் இப்படி மேலுக்காக வெளிக்காட்டி விளையாடிய தைரியத்தைப் பார்த்து மயங்கிவிட்டான். இந்தக் காலத்த்தில் வெறும் ஈர்ப்பைத் தாண்டி உள்ளே ஊடுருவிக் காதலிக்கும் முதிர்ச்சியை அவன் பெற்றுவிட்டிருந்தான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வியாபாரத்தில் வெற்றிகரமாக நிலைகொண்டுவிட்ட ஒரு கான்ஸாஸ் குடும்பத்தில் இரண்டாவது தலைமுறையாகப் பிறந்தவன் அவன். அதனால்தான் என்னவோ வாழ்க்கை மதிப்புகள் குறித்த தேடல் அவனுக்கு இருந்தது. ஆனால், இந்தக் காரணத்தாலோ அல்லது அவனுக்கே இன்னமும் விளங்காத ஏதோ சில காரணங்களால், தன் குடும்பத்தையும் பரந்த மேய்ச்சல் நிலங்களையும் கடந்த காலத்துக்குரியவையாக தள்ளி வைத்துவிட்டான். காலத்தால் அழியாத கலைப் படைப்புகளைத் தந்து, வெறிச்சோடிக்கிடந்த மொட்டையான டவுன்களின் பிடியிலிருந்து தன் குடும்பத்தை விடுவிக்க அவன் கனவு கண்டான் என்று நினைக்கிறேன். அவனுடைய விழிகளின் ஆழத்தில் கூட்டங்கூட்டமாக கொன்று குவிக்கப்பட்ட செவ்விந்தியர்களின் ஆவிகள் அலைக்கழிவதைப் பார்த்ததுபோல எனக்கு ஞாபகமிருக்கிறது. அதே நேரத்தில் ஒளிக்கத் தெரியாத அவன் விழிகளில் அறிவுத்தாகம் சுடர்விட்டுக் கொண்டிருந்ததும் தெரிந்தது. எந்த நொடியிலும் விழுந்துவிட, விரல் நுனியில் இருந்த நியாயமான கேள்விகளுக்கு பதில்களை எதிர்பார்க்கும் பேராசைமிக்க ஆவல் தெரிந்தது. தணியாத ஒரு தாகம் ஒளி உமிழும் மேகத்திரள் போல, இன்னும் அவனோடு கலந்துவிட முடியாமல் உறுத்திக் கொண்டிருந்த பளிச்சிடும் இரண்டாவது தோல் போர்வையைப் போல அது அவனுடைய முகத்தில் எப்போதும் தொக்கிக் கிடந்தது. எதிரே யார் வந்து நின்றாலும் அவர்களிடம் “நான் யார்?” என்று கேட்கக் காத்திருப்பது போலத் தோன்றியது. என் கவனம் முழுக்க இதிலேயே குவிந்திருந்ததால் அந்த முகத்தில் தோன்றி மறைந்த மற்ற உணர்ச்சிகளெல்லாம் கவனத்திலிருந்து தப்பிவிட்டன என்பதை ஒப்புக்கொள்கிறேன். இப்படி என் கவனத்தை சுருக்கிக்கொண்டு, கறாராக வரையறுத்த ஒரு பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததை உணரத் தொடங்கியபோது குற்ற உணர்ச்சியும் வெட்கமும் என்னை சற்று சங்கடத்திற்குள்ளாக்கின. ஏனென்றால் அவனுடைய தேடலைத் தூண்டிவிட்ட அந்தப் புதிரான ஆரமபம், வெறுமனே சாதாரணமான ஒரு குற்றவுணர்ச்சியாகவோ அல்லது அதிகாரத்திற்கான விருப்பமாகவோ அல்லது வெட்கக்கேடான காம வெறியாகவோ, அவனால் வெற்றிகொள்ள முடியாத, அவன் அஞ்சி நடுங்கிய ஒரு பொருளிடம் சரணடைந்து விடுவதற்கான நிர்ப்பந்தமாகவோ இப்படி ஏதோ ஒன்றாகவும் இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் எதுவாக இருந்தாலும் இத்தகைய எல்லா காரணங்களும் காதல் என்கிற அந்த வழக்கமான விஷயத்தில் போய் முடிந்துவிடுவது உண்மை.


என்றாலும், சில நேரங்களில் விர்ஜினியாவின் கண்கள் அவன் முகத்தில் படிந்தபோது மென்மை பூத்ததைக் கவனித்தபோது, அவனுக்குள் கட்டுக்குள் இருந்த, ஆனால் வெளிப்படையாக காட்டிக்கொள்வதற்குக் கூச்சப்படாத அளவுக்கு தன்னம்பிக்கை பதிந்திருந்த, வழக்கத்திற்கு மாறான ஆன்ம வேகம் இருந்ததை, அந்தப் பார்வை அங்கீகரித்ததை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. ஆனால், அவன் தன் குழந்தைமை தொனித்த அறியாமையை உணர்ந்திருக்கவில்லை என்று உறுதியாக நம்புகிறேன். ஒருவேளை அதனால்தான் என்னவோ முற்றிலும் அறிமுகமில்லாத, ஆன்மா நொறுங்கிப் போயிருந்த ஒருவனை அவன் கள்ளங்கபடமில்லாமல் அணுகியபோதெல்லாம் அவளுடைய கண்கள் – அவளது குரல் உறுமிக் கொண்டிருந்தாலும், கேலி பேசிக்கொண்டிருந்தாலும் அல்லது உரக்கச் சிரித்துக்கொண்டிருந்தாலும் – “கண்ணே, காயப்படுத்திவிடாதே! காயப்படுத்திவிடாதே!” என்று கெஞ்சின. தனது கிராமத்துக் கூர்மதியை நுட்பத்தோடு பிரயோகித்த கிராமத்து தேவதை அவள். அப்புறம், நான் அவர்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள ஆரம்பித்த பிறகு, அவர்களுடைய உறவின் பிணைப்பு பற்றியிருந்த கண்ணியை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். மேன்மையான ஆன்மா வாய்க்கப் பெற்றிருந்த அந்த கிராமத்துப் பையனுக்கு நிழல் தர தன் முறிந்த சிறகுகளை – சற்றுக் குழப்பத்தோடுதான் என்றாலும்கூட – விரித்த பருந்து அவள். அவனுடைய ஆன்மாவை சேர்த்து அணைத்துக்கொண்டது அவனை இன்னும் பலவீனமாக்கியது. ஆனால், எத்தனை உயரத்தில் பறந்திருந்தாலும், நிறைய காயப்பட்டிருந்தாலும் இன்னமும் காய்ந்துவிடாமல் இருந்த காயங்களின் மீது எந்த முரட்டு உரசலும் பட்டுவிடாமல் தன்னைக் காத்துக்கொள்கிற அளவுக்கு இந்த உலகத்தைப் பற்றியும் இதில் யாரையும் எக்காலத்திலும் நம்பிவிட முடியாது என்பது பற்றியும் முழுமையாகப் புரிந்திருந்தாலும், அதையும் மீறி அளவில்லாத அன்பைத் தனக்குள் பொதித்து வைத்திருந்தாள். பால் ஃப்ராஸ்ட் ஒரு அப்பாவி. ஆனால் கொடுத்து வைத்தவன். விர்ஜினியா வாலென்டைன் தன்னைக் குணப்படுத்திக்கொள்ள அவனைப் பாதுகாத்தாள். 

அவர்களுடைய திருமணம் ஒரு நீதிபதியின் அலுவலக அறையில் ஆரவாரமில்லாமல் நடந்தேறியது.  பாலுடைய சகோதரன் மாப்பிள்ளைத் தோழனாக நின்றான். நல்ல உயரமாக, கட்டான உடல் வாகோடு இருந்த அவன் தன் சகோதரனின் அருகில் நிற்பதற்காக கான்ஸாஸிலிருந்து பறந்து வந்திருந்தான். கண்ணியத்தோடு மென்மையாக மோதிரத்தைப் பிடித்திருந்தான். பாலின் பெற்றோர்கள் திருமணத்திற்கு வரவில்லை. வழக்கமான கெஞ்சல்களைக் கூவி ஒருமுறையாவது வந்துபோகும்படி பலமுறை அவனை அவர்கள் அழைத்துப் பார்த்தார்கள். ஒன்றும் நடக்காமல் போகவே வாழ்த்து சொல்லி தந்தி அனுப்பி வைத்தார்கள். ஆனால், விர்ஜினியாவின் பெற்றோர்கள் டென்னெஸெவிலிருந்து வந்திருந்தார்கள். இனிமையான கிராமத்தவர்கள் அவர்கள். நீண்ட காலமாக அவளை வீட்டுக்கு வந்துபோகும்படி வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவளுடைய மனதை மாற்ற முடியாது என்பதைப் புரிந்துகொண்டபிறகு, பதப்படுத்திய நாட்டுப் பன்றிக் கறியும், வீட்டிலேயே தயாரித்த கேக் ஒன்றையும், டென்னெஸெவின் காடுகளுக்குள் வாழ்ந்துவந்த, இரத்தத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஒரு செரோகீ – யாக இருந்த அவளுடைய பாட்டி அவளுக்காகவே தயாரித்த மெத்தையையும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார்கள். நலம் விரும்பிய சுற்றத்தார்களிடமிருந்து கைநிறைய பரிசுகளும் கொண்டுவந்திருந்தார்கள். தாயார் இளநீல உடையும் வெள்ளைத் தொப்பியும் அணிந்திருந்தாள். நல்ல கருப்பாக இருந்த அந்தச் சிறிய பெண்மணி ஞாயிற்றுக்கிழமை சர்ச் சேவையில் வந்த கட்டியம் சொல்பவனைப் போல பணிவாக நீதிபதியின் தோல் நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். தந்தை திரு. டானியல் வாலென்டைன் எல்லோரிடமும் சாதாரணமாகக் கலந்து பேசினார். நீதிபதி உரிய சடங்குகளை முடித்ததும் லேசான படபடப்போடு சிரித்துக்கொண்டே எல்லோருடனும் கைகுலுக்கிக் கொண்டார். கருத்த சுருள் முடிகளும், எழும்பிய கன்ன எலும்புகளோடும் ஒரு செவ்விந்தியனைப் போன்ற சாயல் அவர் முகத்தில் தெரிந்தது. விர்ஜினியா ஆழ்ச்சிவந்த பழுப்பு நிறம், சிவப்பு ஓரம் வைத்த எளிமையான வெள்ளை ஆடையை அணிந்திருந்தாள். மருகிக் கொண்டிருந்த தாய்க்கு, “நான்தான் முன்னமே சொன்னேனே, கவலைப்பட ஒன்றுமேயில்லை,” என்கிற தொனியில் சமாதானம் செய்கிற புன்னகையை படரவிட்டிருந்தாள். கருப்பு சூட்டில் இருந்த பால் மேட்டுக்குடி தனியார் க்ளப்பில் இருந்த பணியாளனைப் போல பொறுப்பாகவும் பணிவாகவும் தெரிந்தான்.

கோல்டன் கேட் பார்க்கின் ஒரு வெளிச்சமான் மூலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் டானியல் வாலென்டைன் எல்லோருக்கும் சுருட்டுகள் தந்துகொண்டிருந்தார். பின்னர், பேண்ட் பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக்கொண்டு புல்வெளியில் மெதுவாக நடைபோட்டுக் கொண்டிருந்தார். அவருடைய உடலின் தாக்குப்பிடிக்கும் சக்தியைச் சோதித்த நல்ல நவம்பர் மதியம் அது. அவர் பழகிய சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதிய சூழல் அது. அவருக்குச் சற்று சங்கடமாக இருந்தது நன்றாகவே தெரிந்தது. அவருடைய சங்கடத்தைத் தணிக்க என்னுடைய சுருட்டைப் புகைத்துக்கொண்டே அவரோடு சேர்ந்துகொண்டேன். அவருடைய பழுப்பு முகத்தில் அச்சமும் பெருமையும் புதிரும் கலந்திருந்தது. கடைசிவரை உலகில் நிச்சயமாக மாறவே மாறாது என்று அவர் நம்பிக் கொண்டிருந்த விஷயமும்கூட அவரை ஏமாற்றிவைட்டதைப் புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். உலகத்திலேயே மாற்றமுடியாத உறுதியான பிணைப்பு நிறம்தான் என்று நம்பியிருந்தார். ஆனால், இப்போது எதையோ யாரையோ நினைத்து வெட்கப்பட்டதைப் போலத் தெரிந்தது. “ஒருமுறையாவது வந்துபோகும்படி பலமுறை கேட்டோம்.” நடையை நிறுத்தாமலேயே பேச்சை ஆரம்பித்தார். காலந்தாழ்ந்து பூத்துக் கொண்டிருந்த பூக்களையும், பழுத்துக் கொண்டிருந்த பச்சை மரங்களையும், சட்டையில்லாமல் ஃப்ரிஸ்பீக்களை வீசிக் கொண்டிருந்த இளைஞர்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். “இந்த உலகத்தை முழுமையாக புரிந்துகொண்டுவிட்டதாக நடிக்க இனிமேலும் எனக்கு விருப்பமில்லை. ஆனால், அவனுக்கு நல்ல அறிவுரை சொல்லக்கூடிய அளவுக்கு எனக்கு ஓரளவு உலக அனுபவம் இருக்கிறது. அதைச் சரியாகச் செய்யவும் எனக்குத் தெரியும். என் குழந்தை நீண்ட பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் வந்தவள். அதில் அவள் அம்மாவுக்கும் எனக்கும் நிறைய பெருமிதம் உண்டு. அங்கு, தெற்கில் என் பின்னால் அலைந்த வெள்ளைப் பெண்கள் நிறைய பேரை எனக்குத் தெரியும். அதனால், இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று எனக்கு ஓரளவுக்குத் தெரியும்.  ஆனால், நான் யாருக்கும் விளையாட்டுப் பொம்மை இல்லை. என் குழந்தையும் அப்படியில்லை.” புல்லின் பசுமையையும் மரங்களின் அடர்த்தியையும் நோட்டம் விட்டபடி நுரையீரலை நிரப்பி ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்தார். டென்னெஸெவின் குளிர்ந்த இலையுதிர் காலத்தை நினைவுக்குக் கொண்டுவர அவரது உடல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தது போலத் தெரிந்தது.  லேசாக வியர்த்துக் கொண்டிருந்தது. தொடர்ந்தார், “அவனுடைய குடும்பம் எக்கேடு கெட்டுப்போனாலும் எனக்குக் கவலையில்லை. நரகத்திற்கே போனாலும் எனக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால், என் குடும்பத்தைப் பற்றி மிகுந்த அக்கறை எனக்குண்டு. நேற்று இரவு அவனிடம் தெளிவாகச் சொல்லிவிட்டேன். “என் குழந்தையை எந்த காரணத்திற்காவது துன்புறுத்தினால், அவளுடைய பெண்மைத்தனமான இயல்புகளுக்குச் சம்பந்தமில்லாத ஏதாவது ஒரு தவறுக்காக அவளை அழவைத்தால், உன்னை சும்மா விட்டுவிடமாட்டேன்.” அவனுக்காக ஒரு தடியை செய்து வைத்திருக்கிறேன் என்று எச்சரித்து வைத்திருக்கிறேன்.” ஒரு கருப்பன் இன்னொரு கருப்பனிடம் மனம்விட்டு பகிர்ந்துகொள்கிற முறையில் என்னிடம் பேசினார். நான் அவருக்கு நம்பிக்கையளித்து பொறுப்பேற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் இதையெல்லாம் என்னிடம் சொன்னார். ஆனால், அவருடைய செல்ல மகள், மரபான அபிப்பிராயங்களுக்கு மட்டுமே மதிப்பிருந்த அவருடைய வீட்டிலிருந்து வெகு காலத்திற்கு முன்னமே பல உலகங்கள் தாண்டி போய்விட்டதை, தனக்கென ஒரு உலகத்தை எடுத்துக்கொண்டு அதில் தனது நானை இரகசியமாக போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்ததை எப்படி விளக்கிச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. “அவனுக்கு அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டேன்,” அழுத்தமாக தலையை அசைத்துச் சொன்னார். பிறகு, என் கண்களைத் தவிர்த்துவிட்டு, சுருட்டை இழுத்து, ஒரு யூக்கலிப்டஸ் மரத்துக்கடியில் கூடியிருந்த மற்ற எல்லோரையும் பார்த்து தலையசைத்தார். திருமதி வாலென்டைன் கொண்டுவந்திருந்த மதிய உணவைப் பிரித்துக் கொண்டிருந்தார். பால் சின்னப் பையனைப் போல சிரித்துக் கொண்டு, வாலென்டைனுடன் கோர்த்துக் கொண்டு கைகளை வீசிக் கொண்டிருந்தான். “என்றாலும் அவர்கள் ஒரு நல்ல ஜோடியாக இருப்பார்கள். என்ன, அப்படித்தானே தெரிகிறார்கள்?” என்னைக் கேட்டார். 


(தொடரும் … )

அகன்ற வெளி … 1

ஆசிரியர்: ஜேம்ஸ் ஆலன் மெக்ஃபெர்சன் (1943 – ). 1960 களின் முக்கிய சிறுகதை எழுத்தாளராக வெளிப்பட்டவர். ஜார்ஜியாவில் சவானா பகுதியில் பிறந்த மெக்ஃபெர்சன் ஒரு சட்டப் பட்டதாரி. படித்துக் கொண்டிருக்கும்போதே பரிசுகளை வென்ற பல சிறுகதைகளை எழுதினார். பல்வேறு அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் ஆக்க இலக்கியப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தார்.
 

தனி மனிதர்களுக்கிடையிலான கடக்க முடியாத வேறுபாடுகளை மையமாகக் கொண்ட அற்புதமான சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். அவரது பல கதைகள் ரயில்களைச் சுற்றியுள்ள பண்பாட்டு வாழ்வை விவரிப்பவை. புலிட்சர் பரிசு உட்பட பல பரிசுகளை வென்றவர்.  


Elbow Room என்ற இச்சிறுகதையும் “நிறப்பிரிகை” கருப்பர் இலக்கியச் சிறப்பிதழுக்காக (மே 1998) மொழியாக்கம் செய்தது. ஆங்கிலப் பிரதி தற்போது கைவசம் இல்லை. எந்தத் தொகுப்பில் இருந்து எடுத்தது என்பது நினைவில் இல்லை. “நிறப்பிரிகை”யிலும் இத்தகவல் தவறிவிட்டிருக்கிறது. மன்னிக்க வேண்டுகிறேன். 


சற்றே நெடிய சிறுகதை என்பதால் 5 பகுதிகளாகப் பிரித்து இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.



நன்றிகள்.

– வளர்மதி.



———————————-

“பிரச்சினை அரசியல் ரீதிலானதோ பொருண்மையானதோ அல்ல; அழகியல் ரீதிலானதும் மதிப்புகள் பற்றியதும்தான் என்பதைக் கண்டுகொண்டதில்தான் பூன் -ன் மேதைமை அடங்கியிருக்கிறது.”
“The Discovery of Kentucky”
William Carlos Williams. 



இந்தக் கதை சொல்லி கட்டுக்களில்லாமல் திரிபவன். பிறழ்வு நிலையை தொட்டுக்கொண்டு வடிவம் என்பதையே சட்டை செய்யாத ஒரு மனநிலையைக் காட்டுகிறான். விடாமல் கேட்டதில் மரபுவழிப்பட்ட கதைசொல்லல் உத்திகளுக்கு தான் வெளிப்படையான எதிரி என்று அறிவித்துக்கொள்கிறான். என்ன காரணம் என்று அழுத்திக்கேட்டதில் “எல்லைகள்”, “கட்டமைப்புகள்”, “சட்டகங்கள்”, “ஒழுங்கு”, ஏன் “வடிவம்” என்று எல்லாவற்றையுமே தான் சந்தேகிப்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்ல ஆரம்பித்துவிட்டான். ஒழுங்கீனத்தை ஒரு ஒழுக்கமாகவே வலியுறுத்துகிறான். மரபு வழிப்பட்ட கதைசொல்லல் முறைகளில் வருகிற புதிரான புராதன ஒழுக்கங்கள், ஒருமுகத்தன்மைகள் மீது ஏறக்குறைய ஒரு காட்டுத்தனமான வெறுப்பை தம்பட்டமடித்துக் கொள்கிறான். அவன் தேர்வு செய்துகொண்டிருக்கிற இந்தத் துறையில் அவனுடைய இந்தக் குறை இங்கு எடுப்பாகவே படிந்திருக்கிறது. தணிக்கை செய்கிற எந்த எண்ணமும் இல்லாமல் இந்தக் கதையைக் காப்பாற்றும் நோக்கில் குறைந்தபட்சம் ஒரு ஒழுங்கு இருப்பது போன்ற தோற்றத்தையாவது தரும் பொருட்டு சில இடங்களில் சில விளக்கங்களைத் தரும் நிர்ப்பந்தம் தொகுப்பாளருக்கு நேர்ந்துவிட்டது. ஒரு தொழில்நுட்ப ரீதியிலான ஒழுக்கத்தைப் பேணும் முயற்சி இது. கட்டுக்குள் வராமல் மீறுகிற பிரதிக்கும் இறுதிப் படியை உருவாக்குவதில் இறுதி முக்கியத்துவம் வாய்ந்த – அந்த, எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குகிற பார்வைக்கும் இடையில் இருக்கவேண்டிய அவசியமான பொருத்தத்தை, ஒரு ஒழுக்கத்தின் ஒழுக்கத்தைப் பற்றியே தொகுப்பாளர் இங்கு குறிப்பிடுகிறார்.



அவன் சொன்னதின் சாரம் இதுதான்:



I


கான்சாஸின் அந்தச் சிறிய டவுன்களை விட்டு அந்தக் காலத்தில் பெயர்ந்த ஆயிரக்கணக்கான சிறுவர்களில் பால் ஃப்ராஸ்டும் ஒருவன். திரும்பிப் போகாத மிகச் சிலரில் அவனும் ஒருவன். அவன் வெளியேறிய காலத்தில் போருக்குச் செல்லாமல் தப்பித்துக்கொள்வது எளிதான காரியமாகவே இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அதில் சிரமம் கூடிக்கொண்டே போனது. சிகாகோவில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதே தான் பயணிக்க வேண்டிய பாதை எதுவென்று பால் தீர்மானித்துவிட்டிருந்தான். வருவது எதுவானாலும் எதிர்கொள்ளத் தயாராகவும் இருந்தான். ஒரு சிறிய விடுமுறையில் வீட்டிற்கு வந்தவன் குடும்பத்தவர்களையும் போருக்கு ஆட்களைத் தேர்வு செய்த கமிட்டியையும் எதிர்கொண்டான். அவனைக் குழந்தையாக இருந்தது முதல் பார்த்தவர்கள் அவர்கள். அவனுடைய மறுப்பு அவர்களைக் கடுங்கோபம் கொள்ள வைத்தது. அவர்களுடைய கோபத்தைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தவன் உள்ளுக்குள் அழுதான். சிகாகோவிற்குத் திரும்பி ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் மாற்றுச் சேவை செய்தான். ஆஸ்பத்திரியில் ஒரு குவேக்கர் வட்டத்தின் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தான். வரலாறு, இலக்கியம், ஒழுக்கவியல், தத்துவம் இவற்றில் ஆழமாக படிக்க ஆரம்பித்தான். வெகு சீக்கிரத்திலேயே அங்கு அடைக்கப்பட்டிருந்தவர்களில் நிறைய பேர் உண்மையில் பைத்தியங்கள் இல்லை என்பதைக் கண்டு கொண்டான். இதனால் அவன் கொண்ட அச்சம் மெல்ல மெல்ல அவன் பேச்சைக் குறைத்தது. அதிகம் கவனிக்க ஆரம்பித்தான். இந்த சமயத்தில் கார்ஃபீல்டு பார்க்குக்கு அருகில் ஒரு வாடகை அறையில் தங்கியிருந்தான். சாப்பாடு, வேலை, புத்தகங்கள் எடுத்துவர நூலகம் இவற்றுக்கு மட்டுமே வெளியே போய் வந்தான். பெண்களின் வாசனையே தெரியாமல் கிடந்தான். அவனுக்கு அதில் நாட்டமும் இருக்கவில்லை. அவனுக்குள்ளாகவே சுருங்கி வாழ்ந்து கொண்டிருந்ததால் சீக்கிரத்திலேயே சுற்றியிருந்தவர்கள் அவனை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய இந்த நினைப்பு அவனுக்கு ஒரு வகையில் வசதியாகிப் போனது. அவனுடைய இரகசியமான நானை தீனிபோட்டு வளர்த்தான். இரவுகளில் தனிமையில் அவன் அறையில் அதனுடன் உரையாடிக் கொண்டிருந்தான். பல மாதங்களுக்குப் பிறகு பொது இடத்தில் அவன் பேசியது ஆஸ்பத்திரியின் விளையாட்டு அறையில் ஒரு செஸ்போர்டுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டு மூளைக் கோளாறுக்காக வந்திருந்த ஒருவனோடு நிகழ்ந்தது. “நீ பைத்தியமில்லை”, அவன் காதருகில் கிசுகிசுத்தான். “இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” அந்த நோயாளி பாலை கூர்ந்து நோக்கிவிட்டு மெலிதாகச் சிரித்தான். வாழ்க்கையை உதறிவிட்ட ஞானிகளுக்கே உரிய ஆழ்ந்த அர்த்தம் தொனிக்கிற முறுவல் அவன் உதடுகளில் படிந்திருந்தது. குனிந்து, பலகைக்குக் குறுக்காக சாய்ந்து பாலுடைய கரிய பழுப்புக் கண்களுக்குள் நேராகப் பார்த்தான். “நீ இங்கே என்ன செய்துகொண்டு இருக்கிறாய்?” இந்தக் கேள்வி பாலை நிலைகுலைய வைத்தது. அதை நினைக்க நினைக்க அவனை படபடப்பு துரத்தியது. ஓய்வு நேரங்களில் லாசேல் தெருவில் முற்றிலும் அறிமுகமில்லாத நபர்களிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டு உலா வர ஆரம்பித்தான். ஆனால், எல்லோரும் ஏதோ அவசரத்தில் இருப்பது போல பரபரத்துக் கொண்டிருந்தார்கள். மாற்றுச் சேவையின் இரண்டாவது வருடத்தில் கடற்கரையில் இருந்த ஒரு ஆஸ்பத்திரிக்கு மாற்றுதல் பெற்றுக்கொண்டான். அங்கு ஓக்லாந்தில், பைத்தியக்காரத்தனமான காரியங்களை செய்துகொண்டு சுற்றி வந்தான். ஆனால் நல்ல காலமாக தொடர்ந்து குவிந்திருந்த வேலைகள் அவன் பைத்தியமாகி கான்சாஸிற்குத் திரும்புவதைத் தடுத்து நிறுத்தியது. அவனுடைய கடைசி பைத்தியக்காரத்தனம் டென்னெஸெ – வில் இருந்த க்ளாக்ஸ்வில்லெ – வுக்கு வெளியே இருந்த வாரென் என்ற சிறிய டவுனிலிருந்து வந்திருந்த விர்ஜினியா வாலென்டைன் என்ற கருப்புப் பெண்ணை சான்ஃப்ரான்ஸிஸ்கோ – வில் வைத்து மணம் செய்துகொண்டது. 



II


விர்ஜினியா வாலென்டைன் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பாக தெற்கில் விவசாயிகள் அலை அலையாக ஜெயில்களை உடைத்துக் கொண்டு வெளியேறிய அந்தப் பெரும் அலையில் வாரனை விட்டு வெளியேறியவள். தலைமுறை தலைமுறையாக அடிமைகளாகக் கிடந்த அவளைப் போன்றவர்களுக்கு வெளியே விரிந்திருந்த இந்தப் பரந்த உலகம் இனிமையான வாய்ப்புகளை அள்ளித் தயாராக வைத்திருந்தது போன்ற தெளிவான ஒரு கோட்டோவியம் போலத் தெரிந்தது. ஆனால் எல்லோருக்குமே இந்தச் சுதந்திரம் இஷ்டம் போலத் திரியப் பயன்படவில்லை. நீண்ட சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்த செல்லப் பிராணிகள் எந்த நேரமும் சங்கிலியின் முனையில் இழுத்துப் பிடிக்கப்படுவதை உணர்ந்திருப்பது போல ஒரு எல்லை அவர்களைச் சுற்றி எப்போதும் வரையறுக்கப்பட்டிருந்தது. என்றாலும், விர்ஜினியாவைப் போன்ற மிகச் சிலர் கர்வம் மிக்க பருந்துகள் ஆளில்லாத சிகரங்களின் மேலாக உயர உயரப் பறந்து தங்கள் கூடுகளைக் கட்ட விழைவது போல எழுந்து, பரந்து விரிந்து கிடந்த உலகின் மேலாகப் பறந்தார்கள்.


விர்ஜினியாவின் கனவு ஒரு இலட்சியக் காவியமாக இருந்தது. பத்தொன்பது வயதில் சால்வேஷன் ஆர்மியில் சேர்ந்தவள் ஏழைகளுக்கே உரித்தான உலகப் பயணத்தை மேற்கொண்டாள். நாட்டுப்புற மக்களுக்கே உரிய ஒரு முரட்டுத்தனமான காட்டு வாழ்வின் இயல்பைப் பெற்றவள் அவள். மனிதர்களிடம் புதைந்து கிடந்த மனிதத்தன்மையை சட்டென்று கண்டுகொள்ளும் திறன் அவளுக்கு இருந்தது. நல்ல நகைச்சுவை உணர்வும் வாய்க்கப் பெற்றிருந்தாள். இருபது வயதில் இலங்கையில் குழந்தைகளுக்கு செவிலித் தாயாக வேலை செய்து கொண்டிருந்தாள்.  இருபத்தொன்றில், இந்தியாவில், ஜாம்ஷெட்பூரில் ஒரு சந்தையில் நின்றுகொண்டு போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டு சாதிகளை எண்ணப் பழகிக் கொண்டிருந்தாள். தனது சொந்த மக்களைவிட இந்துக்கள் “கருப்பாக” இருக்கிறார்கள் என்று முடிவு செய்தவள் ஒரு முரண்நகை தொனியில் சற்றுப் பெருமையாகவே தன்னை “கருப்பி” என்று அழைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். நுட்பமான ஒரு நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொண்டாள்.  செனீகலில் மீனவர்களோடு சேர்ந்து வெறுங்கையால் உண்ணப் பழகிக்கொண்டாள். கென்யாவில் ஒரு விடுமுறை நாளில் கிளிமஞ்சாரோவின் சிகரத்தில், கிராமத்தவளைப் போல இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு இன்னும் கால் பதிக்க வேண்டிய சிகரங்களைத் தேடி பார்வையை வீசினாள். கெய்ரோ, செய்த் துறைமுகம், டமாஸ்கஸ் நகரங்களின், நறுமணப் பொருட்களின் வாசம் மூக்கைத் துளைத்து வியர்க்க வைக்கிற சந்தைகளில், சாராயம் குடித்துவிட்டு களித்திருந்த வியாபாரிகளோடு பேரம் பேசி பொருட்களை வாங்குவதில் தேறினாள். பெண்களும் அடிமைகளும் இன்னும் சந்தைகளில் விலைபேசப்படுவதைக் கண்டு அராபியர்களை வசைபாடும் நல்ல பழக்கத்தையும் வளர்த்துக்கொண்டாள். லீக்கி என்ற ஒரு வயதான கிழவனைப் பற்றி நிறைய கதைகளை வைத்திருந்தாள். வடக்கு டான்சானியாவில் ஒரு மாட்டுப் பண்ணையில் அவனோடு சேர்ந்து குடித்துவிட்டு இரவு முழுக்க கதைகள் பேசி உட்கார்ந்திருந்ததைப் பற்றியும், பசுவின் பாலை அப்படியே மடியில் வாய் வைத்தும் பசுவின் இரத்தத்தையும் குடிக்கப் பழகியதைப் பற்றியும் நிறைய பேசினாள். கிழவன் எப்போதும் சிடுசிடுத்தாலும் தன் திறமையைக் காட்டும் வாய்ப்பு வரும்போது எவ்வளவு துடிப்பாக இருந்தான் என்பதைச் சொல்வாள். பால் மோசமில்லை என்றாள். பசுவும் உதைக்கவில்லை என்று சொன்னாள். அராபியர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள், இந்தியர்களுடைய மரியாதை நிமித்தமான பணிவான புன்னகைகளுக்குப் பின்னால் இருந்த அவர்களுடைய உண்மையான உலகில் பிரவேசித்து வந்தாள். அவர்கள் சொன்ன கதைகளில் வாழ்க்கையைப் பற்றிய மாறுபட்ட பல பார்வைகள் பல விதங்களில் படிந்திருப்பதைக் கண்டுகொண்டாள்.  


இருபத்தியிரண்டு வயதில் சொந்த ஊருக்குத் திரும்பியபோது ஏராளமான கதைகளைச் சொல்ல வைத்திருந்தாள். அவளைப் போலவே அப்போது நிறையபேர் இருந்தார்கள். பாஸ்டன், நியூயார்க், ஃபிலடெல்ஃபியா, சிகாகோ என்று கலிஃபோர்னியாவின் எல்லாப் பகுதிகளிலும் மக்கள் கூடிக்கூடி இது போன்ற ஏராளமான கதைகளைப் பேசினார்கள். அவர்களுக்கே புரியாத ஒரு மொழியில் இனிக்க இனிக்க பேசினார்கள். அவர்களுடைய பேச்சுக்களில் உலகின் நான்கு மூலைகளிலும் ஒன்றே போல இருந்த அரிய விஷயங்களைப் பற்றி நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டார்கள். மேட்டுக்குடியினருக்கேயுரிய மட்டமான செயற்கைப் பாசாங்கைத் தொற்றிக் கொள்ளவிடாத அந்த விவசாய மக்கள் உண்மையிலேயே மேன்மைமிக்க மனிதர்கள். வாழ்க்கையின் சாரத்தை சாதாரணமாக புரிந்துகொள்கிற கலை அவர்களுக்குக் கைவந்திருந்தது. அவர்கள் ஒரு புது இனமாக உருவாகியிருந்தார்கள்; தங்களை அப்படி கருதிக்கொண்டார்கள். 


ஆனால், மெதுவாக – மிக மெதுவாக, அவர்களுடைய எண்ண ஓட்டங்கள மாற ஆரம்பித்தன. ஆரம்பத்தில் இது மிகவும் நுட்பமாகவே இருந்தது. உரையாடலின்போது ஒருவர் சாதாரணமாகக் கேட்பார், “என்ன புரிந்துவிட்டதா?” சற்று தயக்கத்திற்குப் பிறகு மறுப்பு மெதுவாக வரும். இந்தக் காலத்தில் விழுந்த நீண்ட மௌனங்களைப் பற்றிய வேதனை ததும்பும் கதைகளை வாலென்டைன் நிறைய வைத்திருக்கிறாள். மக்கள் குற்ற உணர்ச்சியோடும் தங்களைப் பற்றிய கூருணர்வோடும் தவித்தார்கள். கொஞ்சம் நிர்ப்பந்தித்தால், அவளுடைய குழுவில் நடந்த தற்கொலையைப் பற்றி சொல்லிவிடுவாள். மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வது மெல்ல மெல்லக் குறைந்தது. சீக்கிரத்திலேயே அவர்கள் தமக்குள்ளாகவே பேசிக்கொண்டும் தெருக்களில் நடக்கும்போது தலையை ஆட்டிக்கொண்டும் நடந்தார்கள். வேறுவழியில்லாமல் உரையாடல்களின்போது இப்போது பலரும் “இல்லை, எனக்குப் புரியவில்லை!” என்று ஒப்புக்கொள்ள ஆரம்பித்தார்கள். முதலில் இதில் ஒரு தயக்கம், சந்தேகத்தின் சாயல் இருந்தது. ஆனால், போகப்போக மறுக்க முடியாத, ஆணித்தரமான தொனியில் பதில் வந்தது. வெறுப்பும் பகையுணர்ச்சியும் வெளிப்படையாகத் தெரிய சில மாதங்கள் எடுத்துக்கொண்டது. சண்டையில் இறங்க முயற்சித்தவர்கள் குழம்பி எல்லாவற்றையும் வெறுத்தார்கள். இதனால்தான் மற்ற எல்லா உறுதிமிக்கவர்களையும் போல விர்ஜினியாவும் கிழக்கை விட்டு வெளியேறினாள். அடிபட்ட பறவை இறக்கைகளை விரித்துக் கொண்டே தரையிறங்க பயப்படுவதுபோல, காயம்பட்ட தன் மனதுக்கு இதம் தரக்கூடிய ஒரு மென்மையான வெளியை, தனிமையைத் தேடி ஓடிப்போனாள்.


III 



புதிய கதைகளைத் தேடி அந்தப் பிரதேசத்திற்கு நான் போயிருந்தேன். கிழக்கை விட்டு நான் கிளம்பிய அந்தக் காலத்தில் அங்கு புதிய கதைகள் எதுவும் இருக்கவில்லை. கருத்துக்களும் வழக்குகளும் கலந்து கரடுதட்டிப்போன மரபுகளாகிவிட்டிருந்தன. பழைய கதைகளே திரும்பத் திரும்ப பேசப்பட்டன. சொன்னவர்களுக்கே அவற்றில் நம்பிக்கை போய்விட்டிருந்தது தெரிந்தது. வார்த்தைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான பிணைப்பு அறுந்து காதலுணர்ச்சியின் வேகத்தோடு பாய்வது நின்று போயிருந்தது. பழமையான நல்ல புராணங்களும்கூட அவற்றுக்கேயுரிய சடங்குகள் கொண்டாட்டங்களிலிருந்து விலகி தனித்து மிதந்தன. கலைகளை உள்ளூர வெறுத்த வியாபாரிகள் அவற்றை நாட்டுப்புறக் கதைகள் என்று சொல்லி விற்றார்கள். உற்சாகமான சிரிப்பு என்பதே இல்லாமல் போனது. அப்புறம், செல்வச் செழிப்பான புரவலர்களைத் திருப்தி செய்ய மொழியை, தாய்மொழியை அதன் சிறந்த மகன்களே போட்டி போட்டுக்கொண்டு புணர்ந்தார்கள். புதிய கதைகள் ஒன்றுகூட இருக்கவில்லை. புணர்ச்சியின் தொழில்நுட்பத்தை விளக்கப் பெரும் உழைப்பு விரயமாக்கப்பட்டது. காலத்தால் மாற்ற முடியாத, விதிக்கப்பட்டுவிட்ட பாத்திரங்களை திரும்பவும் ஏற்றுக்கொண்டு கருப்பு மக்கள் மற்றவர்களை மகிழ்வித்தார்கள். மாப்பஸானின் தேவடியாக்கள் தொழிற்சங்கத் தலைவர்களின் இரும்புக் கரங்களில் மயிர்சிலிர்த்தார்கள். செக்கோவ், கொகலுடைய உயிர்ப்புமிக்க விவசாயிகள் எல்லோரும் சோர்ந்து, ஆர்வமிழந்து, தம் இரத்ததின் தாளங்களைப் புறந்தள்ளிவிட்டு திண்ணைகளில் உட்கார்ந்து கிடந்தார்கள். புஷ்கினுடைய பெருமைமிக்க கொள்ளைக்காரர்களும் கலகக்காரர்களும், ஒளிமங்கிய கண்களோடு சோர்ந்து வீழ்ந்து கிடப்பதை விரும்பியது போலத் தெரிந்தது. அவர்கள் தமக்குள்ளாகவே ஒருவரையொருவர் கொலை செய்துகொண்டு, வயதான பெண்களை உறிஞ்சிக்கொண்டு, வட்டிக் கடைக்காரர்களிடமிருந்து சில்லறைகளைத் திருடிக்கொண்டு, வெட்டி வீறாப்புப் பேச்சில் மயங்கி அடிமையாகிக் கிடந்தார்கள். பெரிய மனிதர்கள் தொலைபேசியிலும் தனிப்பேச்சுகளிலும் வெற்று வார்த்தைகளை, ஏதோ அவை தமக்காகவே காத்திருக்கிற டேப் ரிக்கார்டருக்குள் பத்திரமாக போய்ச் சேர்ந்துவிடும் என்பது போல கேட்பவர்கள் காதுகளில் திணித்துக் கொண்டிருந்தார்கள். எங்கும் எதிலும் நிஜமான கண்ணீர் இல்லாமல் இந்த அகோரமான சோகம் படிந்திருந்தது. 


கருப்பர்கள் எல்லோரும் மறுபடியும் தனியே பிரித்து வைக்கப்பட்டு நிற வெறியின் திரைகள் இழுத்து விடப்பட்டன. உணவகங்களில், விமானங்களில், சாதாரணமாக நாகரீகமாக நடந்துகொண்டவர்களின் வீடுகளிலும்கூட அச்சமும் பதுங்கிக்கொள்வதும், பாராமுகமாக திரும்பிக் கொள்வதும் மீண்டும் தலையெடுத்தன. அச்சத்தைப் பற்றிய ஒப்புதல்கள், பிரார்த்தனைகளாக வெளிப்பட்ட வெறுப்பின் கூச்சல்கள், மலரவேண்டிய காதல்கள், நம்பிக்கைகள், தேவைகள், கொலைகள், வஞ்சகங்கள், பரிகாரங்கள், ஒளிக்காமல் வெளிப்படுத்திய கோபங்கள் இப்படி எண்ணற்ற விஷயங்களைப் பற்றிய கதைகள், கோடிக்கணக்கான கதைகள் அந்தக் காலத்தில் கிழக்கில் மடிந்துபோயின. அறிமுகமில்லாத ஒரு நபரை அணுகி, “நண்பரே, எனது நானை நிறைவு செய்துகொள்ள உங்களுடைய கதையும் கொஞ்சம் தேவை”, என்று கேட்டிருந்தால் அவரை அலறவிட்டு என்னைக் கொலைகாரன் என்று பழிக்க வைத்த பரிதாபத்திற்குத் தள்ளிவிட்டவனாகியிருப்பேன். ஆனால், இதைச் செய்யாமலிருப்பதும் எனக்குச் சிரமமாக இருந்தது. கதைசொல்லி என்ற கடமையில் இருந்து தவறுவது பெரிய கொடுமை. புதிய பார்வைகள், பரிமாணங்கள் தேவைப்படுகிற காலங்களில் சுற்றிலும் கூர்ந்து கவனிப்பதோடு நின்றுவிடாமல் பேசப்பட வேண்டிய கதைகளையும் கட்டாயம் சொல்லிவிட வேண்டும். ஆனால், அந்தக் காலத்தில், கிழக்கில், இதைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் யாருக்கும் இருக்கவில்லை. புதிய பார்வைகள், வடிவங்கள், புத்துயிர்ப்பு தேவையாயிருந்தது. அவற்றைத் தேடி கிழக்கை விட்டு வெளியேறினேன். 


ஒரு சிறிய விளக்கம். நிறவெறிக் கட்டுப்பாடுகளுக்கும் வடிவத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? 


எல்லாவிதமான தொடர்புகளும் இருகிறது. 


வெள்ளையனாக மாறிவிட விரும்புகிறாயா? 


ஒரு கதைசொல்லிக்கு அவன் பேசுகிற உலகத்தைப் பற்றிய புனைவுகளுக்கு மட்டுமல்ல, அந்த உலகத்திற்குமே வாய்ப்புகள் வேண்டும். 


அப்படியென்றால், கருப்பனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறாயா? 


மற்றவர்கள் கிழித்து வைத்திருக்கிற எல்லைகளை மீறுவதில் என்னிடம் கூடுதல் வேகம் இல்லை என்பது குறித்தே வெட்கப்படுகிறேன். 


ஒருங்கிணைப்பின் மீது உனக்குக் காதல் இருக்கிறது. அப்படித்தானே? 


ஆரோக்கியமான கற்பனையால் சபிக்கப்பட்டவன். 


கற்பனைக்கும் நிற வரையறுப்புகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? 


எல்லாவிதமான தொடர்புகளும். 


இன்னும் ஒரு சிறிய விளக்கம். தனி மனித சுதந்திரம் பற்றிய உனது அபிப்பிராயம் என்ன? 


புதிய கதைகளைக் கட்டுவதற்கு, தேடுவதற்கு எந்தத் தடைகளும் இருக்கக்கூடாது. 


இந்தக் கதைக்கு நீ போதிய கவனம், உழைப்பு செலுத்தினாயா? 


முன்னொரு காலத்தில் சான்ஃப்ரான்சிஸ்கோ – வில் ஒரு திருமணம் நடந்தேறியது.



(தொடரும் … )

ரிச்சர்ட் ரைட்

ரிச்சர்ட் ரைட் (1908 – 1960) “ஒரு குற்றவாளி எழுத்தாளரான கதை” என்பது ரிச்சர்ட் பற்றி எழுதப்பட்ட ஒரு விமர்சனக் கட்டுரையின் தலைப்பு. மிஸ்ஸிசிபி – யைச் சேர்ந்த நாட்சே பகுதியிலுள்ள பெருந்தோட்டம் ஒன்றில் மிகவும் ஏழ்மையான பின்னணியில் தோன்றியவர் ரிச்சர்ட். அம்மா பக்கவாத நோயில் வீழ்ந்த பின் சகோதரரோடு அனாதை இல்லத்தில் தஞ்சம். இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நூலகங்களின் மூலம் எச். எம். மைன்கென், தியோடர் டிரெசியர், ஷெர்வுட் ஆண்டர்சன், சிங்னேர் லூயிஸ் ஆகியோரின் எழுத்துக்களை படித்துத் தீர்க்கிறார். அவரை மிகவும் பாதித்தது மென்கென். “வார்த்தைகளோடு போராடுகிற … போராடுகிற ஒரு மனிதன் … ஒரு தடியைப் பாவிப்பது போல … வார்த்தைகளை ஆயுதமாய்ப் பாவிக்கும் மனிதன்” என்பது மென்கனைப் பற்றிய ரிச்சர்டின் மதிப்பீடு. கிராமப்புற தென் அமெரிக்காவின் இனவெறி, ஏழ்மை, பொது இடங்களில் கருப்பர்களைக் கொல்லும் வழக்கம் ஆகியவற்றுக்குப் பயந்து ஏராளமான கருப்பர்கள் இடம் பெயர்ந்ததை ஒட்டி 1927 – ல் ரிச்சர்ட் சிகாகோ வருகிறார். கண்ணியமான வாழ்க்கை வடக்கிலும் சாத்தியமில்லை என உணர்ந்தபோது 1930 – களின் தொடக்கத்தில் அவர் பொதுவுடைமைச் சிந்தனைகள் மற்றும் இயக்கங்களின் பால் ஈர்க்கப்படுகிறார். எழுத்தாளர்களின் மென்னியைப் பிடிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் விதிமுறைகள் அவரைக் கட்சியோடு முரண்பட வைக்கிறது. இரண்டாம் உலகப் போரில் படையில் கருப்பர்கள் மீது இன ஒதுக்கல் மேற்கொள்ளப்படுவதை கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்காதபோது கட்சியிலிருந்து விலக முடிவெடுக்கிறார். “நான் கம்யூனிஸ்ட்டாக முயற்சித்தேன்” என்கிற கட்டுரைப் பகுதிகள் வெளிவந்தபோது கட்சிக்கும் அவருக்குமான உறவு முழுமையாகச் சிதைகிறது (1944). மார்க்சியத்திற்கும் இலக்கியத்திற்குமான உறவுகள் குறித்து ஆழமாகச் சிந்தித்திருந்த ரிச்சர்ட் அந்த அனுபவங்களின் பின்னணியோடு கருப்பு அமெரிக்க எழுத்துக்கள் குறித்த இலக்கியக் கோட்பாட்டுருவாக்க முயற்சிகளை மேற்கொள்கிறார். Blue Print for Negro Writing [என்ற அவரது கட்டுரை] இந்த வகையில் ஒரு குறிப்பிடத்தக்க ஆக்கம். ஹார்லெம் மறுமலர்ச்சியை “வெள்ளை அமெரிக்காவிடம் கையேந்தி நிற்கும் அலங்காரத் தூதுவர்களின் பணிவான நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் எனக் கேலி செய்து ஒதுக்கிய ரிச்சர்ட் எதார்த்தம் மற்றும் சமூகம் குறித்த ஒரு மார்க்சியக் கருத்தாக்கத்தைப் பரிந்துரைத்தார். இக்காலகட்டத்தில் அவரது முக்கிய ஆக்கம் Uncle Tom’s Children (1938). பெண்களின் நோக்கில் அவர் எழுதியது Long Black Song. அவரது புனைவுகளில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது Native Son. ”[இந்நாவல்] வெளிவந்ததோடு அமெரிக்கக் கலாச்சாரம் என்றென்றைக்குமாக மாறியது” என ஓர் விமர்சகர் குறிப்பிட்டார். ஒரு எதிர்ப்பு எழுத்தாளராக இலக்கிய வரலாற்றில் ஓர் அழுத்தமான இடத்தை இந்த நூல் அவருக்கு உருவாக்கித் தந்தது. “இந்த மாதப் புத்தகம்” என மாதம் ஒரு நூலைத் தேர்வு செய்கிற “Book of the Month Club” என்னும் அமைப்பு முதன் முதலாகத் தேர்வு செய்த கருப்பர் நாவல் Native Son. மூன்று வாரங்களில் இரண்டு லட்சம் பிரதிகள் விற்பனையாயின. 1945 – ல் வெளிவந்த அவரது தன் வரலாறு Black Boy இன்னொரு முக்கிய ஆக்கம். அடுத்த பதினைந்து ஆண்டுகள் – அவரது இறுதிக் காலம் வரை – பாரிசில் கழிந்தன. சார்த்தர், சிமோன் டி பாவே ஆகியோருடன் நெருக்கமான தொடர்பு. சார்த்தர், காம்யூ ஆகியோரின் இருத்தலியல் சிந்தனைகளின் செல்வாக்கில் எழுதப்பட்ட ரிச்சர்டின் The Outsider 1953 – ல் வெளிவந்தது. அவரது இளம் வயது துன்ப வாழ்க்கையின் விளைவாக அவர் இயல்பிலேயே ஒரு இருத்தலியற் சிந்தனையாளராக இருந்தார் எனவும் பாரிசுக்கு வருவத்ற்கு முன்பேகூட அவரது எழுத்துக்கள் சிலவற்றில் இருத்தலியற் கூறுகள் உண்டு எனவும் சில விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். 1950 – களில் அய்ரோப்பா, அமெரிக்கா கண்டங்களைச் சுற்றிய ரிச்சர்ட் உலகளாவிய பின்னணியில் இன ஒடுக்குமுறை குறித்து சிந்தித்தார். Black Power (1954), White Men Listen (1957), The Long Dream (1958), முதலியன இக்காலகட்டத்தில் முக்கிய ஆக்கங்கள். இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது சிறுகதை Eight Men (Thunder’s Mouth Press, NewYork, 1987) என்கிற சிறுகதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.  

குறிப்பு: மேலுள்ள அறிமுகக் குறிப்பு அ. மார்க்சால் எழுதப்பட்டது. இலக்கியச் சிறப்பிதழுக்காக பல மாதங்கள் பல எழுத்தாளர்களை அணுகி படைப்புகளை பிரதியெடுத்துத் தந்து மொழியாக்கம் செய்து தரக் கேட்டு அலைந்து இறுதியில் அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றபோது எனக்கு மிஞ்சியது ஏமாற்றமே. கடைசியில், தஞ்சையில் அ. மார்க்சின் வீட்டில் இரு வாரங்களுக்கும் மேலாகத் தங்கியிருந்து, அவர்கள் தந்த மொழியாக்கங்களை திருத்த முனைந்ததிலும் பெரும் அயற்சியே மிஞ்சியது. ஒரு கட்டத்தில், அவர்களுடைய மொழியாக்கங்களை தூர வைத்துவிட்டு புதிதாக மொழிபெயர்க்க நேர்ந்தது. அவர்களிடம் கொடுத்த கடமைக்காக, அவரவர் பெயரிலேயே மொழியாக்கங்கள் வெளியாயின. ஒரு வழியாக அவசரகதியில் படைப்புகளை மொழிபெயர்த்து முடித்தபின் உண்டான சோர்வில் எழுதத் திட்டமிட்டிருந்த விரிவான அறிமுகத்தை எழுதும் மனநிலை முற்றிலுமாக மறைந்துபோனது. அனைத்தையும் அ. மார்க்சிடம் ஒப்படைத்துவிட்டு சென்னை திரும்பினேன். மூன்று மாதங்கள் கழிந்தும் இதழ் வெளிவருவது குறித்த எந்தத் தகவலும் அவரிடமிருந்து வராதுபோனதும், விசாரித்ததில் கருப்பர் இலக்கியம் குறித்த ‘விமர்சனக்’ கட்டுரை எழுதும் முயற்சியில் அ. மார்க்சுக்கு எதை வாசித்து எழுதுவது என்பது விளங்காததை அறிந்து கொண்டேன். சென்னை அமெரிக்க நூலகத்தில் இருந்து அவசியமான நூல்களை சேகரித்து அவருக்கு அனுப்பியும் வைத்தேன். இரு வாரங்களில் கட்டுரை தயார். இதழில் உள்ள “ஆப்ரோ – அமெரிக்க இலக்கிய விமர்சனம்: நடந்து வந்த பாதையும் கடக்க இருக்கும் தொலைவும்”. அப்புறம் ஒரு மூன்று மாதங்கள் பல இடங்களில் இதை வைத்தே ஒரு ரவுண்டு கூட்டம். மற்றபடி, அ. மார்சுக்கு ஆஃப்ரோ அமெரிக்க இலக்கியத்தோடு எந்த ‘ஸ்நானப் பிராப்தியும்’ கிடையாது என்பதை நன்கு அறிவேன். அத்தொகுப்பிற்காக நான் தேர்வு செய்து கொடுத்த படைப்புகளைத் தவிர வேறு எதையும் அதற்கு முன்னும் பின்னும் அவர் வாசித்ததில்லை; வாசிக்கப் போவதும் இல்லை. மேலுள்ள குறிப்புகளும் கூட Norton Anthology of Afro – American Literature – ல் உள்ள அறிமுகக் குறிப்புகளின் பிரதியாக்கமே தவிர வேறொன்றுமில்லை. அதிலும் கூட அவரது புரிதல் பல்லை இளிப்பதை இக்குறுநாவலை சிறுகதை என்று குறித்திருப்பதிலிருந்து அறியலாம். (பகர அடைப்புக் குறிகளில் உள்ளவை வாசகர்களுக்காக இப்போது நான் சேர்த்தவை.) அத்தொகுப்பை முழுமையாக சரிபார்த்து தனித் தொகுப்பாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. அது சாத்தியப்படும்போது விரிவான அறிமுகத்துடன் தமிழ் சூழலுக்கான பொருத்தப்பாடுகளையும் சுட்டி எழுதும் உத்தேசம் உண்டு.

நிழலைக் கொன்றவன்

குறிப்பு: இக்குறுநாவல் நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4, மே 1998 – ல் எனது மொழியாக்கத்தில் வெளிவந்தது. சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க கறுப்பின எழுத்தாளரான ரால்ஃப் எல்லிசனின் Invisible Man மற்றும் Juneteenth இரு நாவல்களையும் மீண்டுமொருமுறை வாசித்தபோது, இதையும் தூசிதட்டி எடுத்து வாசிக்க நேர்ந்தது. பகிர்ந்துகொள்ளும் விருப்பத்தில் இங்கு. இக்குறுநாவலின் ஆசிரியர் ரிச்சர்ட் ரைட்(1908 – 1960) அமெரிக்க கறுப்பின எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். ரிச்சர்ட் ரைட் – டின் Eight Men (Thunder’s Mouth Press, New York, 1987) என்ற குறுநாவல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

அவன் சின்னஞ் சிறிய பையனாக இருந்தபோதே அது எல்லாம் ஆரம்பித்துவிட்டது. அப்போதிருந்தே அவன் நிழல்களைக் கண்டு பயப்பட ஆரம்பித்துவிட்டான். அவசரப்பட்டு விடாதீர்கள். அவன் பயந்தது தகதகக்கும் அந்தச் சூரியன் இந்த நிலத்தின் மீது படியவிட்ட அழகான நிழலுருவங்களைப் பார்த்து அல்ல. பாவம், அவை என்ன செய்யும். ஆபத்தில்லாதவை. அதோடு, கோடையின் கண்கூசச் செய்யும் வெயிலில் அவற்றைத் துரத்திப் பிடித்து விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், மற்ற எவர் கண்களுக்குமே படாத அவனுக்கு மட்டுமே தெரிகிற மர்மமான நிழல்கள் சில இருந்தன. அவை, அவனுடைய அச்சத்தின் நிழல்கள். ஆக, இந்தப் பையனுக்கு அப்படியான நிழல்கள் இருந்தன. அவற்றில் ஒன்றைக் கொல்வதற்கு அவன் வாழ்ந்திருந்தான்.

சால் சாண்டர்ஸ் தலைநகர் வாஷிங்டன் – னிலிருந்து சில மைல்கள் தொலைவிலிருந்த தெற்கின் சிறிய டவுன் ஒன்றில் கருப்பாக பிறந்தான். அதாவது, அவன் பிறந்த உலகம் இரண்டாக பிளவுண்டிருந்தது. ஒன்று வெள்ளை உலகம்; மற்றது கருப்பு உலகம். இரண்டு உலகங்களுக்கும் நடுவில் கோடி மைல்கள் உளவியல் இடைவெளி இருந்தது. ஆக, ஆரம்பத்திலிருந்தே சால் தனது கருப்பு உலகிலிருந்து எட்டிப் பார்த்தபோது அவனுக்குச் சொந்தமில்லாத அவனால் புரிந்துகொள்ளவே முடியாத ஒரு வெள்ளை உலகின் நிழற்கோடுகளே மங்கலாகத் தெரிந்தன.

அப்புறம் என்ன நடந்ததென்றால் சாலுக்கு அவனுடைய தாயே கூட உருவில்லாத ஒரு நிழலாகவே ஆகிப்போனாள். அவனுடைய நினைவில் அவளுடைய உருவத்தை பதித்துக் கொள்ளும் முன்னமே வெகுகாலத்திற்கு முன்னதாகவே அவள் மறைந்துவிட்டாள். அவனுடைய தந்தைக்கும் இதே கதி விதிக்கப்பட்டிருந்தது. அவனும் பையன் அவனுடைய உருவத்தை மூளையில் செதுக்கிக் கொள்வதற்கு முன்னதாகவே மாண்டு போனான்.
நெருங்கிப் பழகி அறிந்துகொள்வதற்கு முன்னமே, அவன் கண் முன்பாகவே நபர்கள் காற்றில் கரைந்து போனதால் உயிர்ப்புள்ள மனிதர்களை, ஆளுமை கொண்ட நபர்களை அறிந்துகொள்ள அவனுக்கு வாய்க்கவே இல்லை. மனிதர்கள் அவனுக்கு நிச்சயமின்மையின் குறியீடாக ஆகிப் போனார்கள். வாழ்வின் நிச்சயமற்ற தன்மை அவனுக்குள் பதிந்து போனது. உருவற்ற, தெளிவில்லாத நிகழ்வு ஒன்று அவன் மீது கவியக் காத்திருப்பது போன்ற ஒரு உணர்வு நிரந்தரமாக அவனைப் பிடித்துக் கொண்டது. தொடர்பற்ற அந்நியர்களாகவே ஆகிவிட்ட சகோதரர்கள் ஐந்து பேரும் இரண்டு சகோதரிகளும் அவனுக்கு இருந்தார்கள். அத்தனை பேரையும் காப்பாற்றிக் கரைசேர்க்க யாரும் இல்லாததால் உறவினர்கள் ஆளுக்கொரு குழந்தையை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். சாலை அவனுடைய பாட்டி எடுத்துக்கொண்டாள். எப்போதும் ஒரு டவுனிலிருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டே இருந்தவள் அவள். அதனால்தான் என்னவோ அழகிய நிலப்பரப்புகளும்கூட சாலுக்கு எந்த உணர்ச்சிப் பிடிப்பையும் தராமல் போயின.

கொஞ்சகாலத்திற்கு தங்கியிருந்துவிட்டு நகர்ந்துவிடவேண்டிய உயிர்ப்பற்ற வெளிகள் என்பதற்கு மேலாக தெற்கின் அந்த சிறிய டவுன்கள் அவனுக்கு பெரிய அர்த்தம், கிளர்ச்சி எதையும் தந்துவிடவில்லை. பன்னிரண்டு வயது இருக்கும்போதே எல்லா புறயதார்த்தமும் அவனுக்கு வெறும் நிழல்களாக ஆகிப் போயின. அவனுடைய பெற்றோர்கள், அவன் விழுந்துவிட்ட கருப்புத் தீவைச் சூழ்ந்திருந்த வெள்ளை உலகம், வரிசையாக நகர்ந்துகொண்டே இருந்த தூசிபடிந்த சின்னச் சின்ன டவுன்கள் என்று எல்லா யதார்த்தத்தையுமே உள்ளீடற்ற வெறும் பெயர்களாக, சாரமற்ற பொருட்களாக, ஒரு நொடிப்பொழுது நிகழ்ந்துவிட்டு ஆழங்காணமுடியாத சூன்யத்தில் கரைந்து போய்விடுகிற சிறு துகள்களாக பார்க்கத் தொடங்கினான்.

சால் சோம்பேறியோ மந்தமானவனோ அல்ல. என்றாலும் பள்ளியில் மூன்றாவது க்ரேடை எட்டுவதற்கு அவனுக்கு ஏழு வருடங்கள் பிடித்தது. அவனுடைய வாழ்க்கையில் வந்துபோனவர்கள் எவரும் படிப்பை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்டவர்களில்லை. சாலும் இதற்கு விதிவிலக்காகிவிடவில்லை. பதினாலு வயது ஆனபோதும் மூன்றாவது க்ரேடிலேயே இருப்பது அவனுடைய சூழலில் சாதரணமான ஒன்று. சாலும் மற்ற எல்லோரையும் போலவே சாதாரணமானவனாக இருப்பதையே விரும்பினான்; சராசரியானவனாகவே இருந்தான்.

அப்புறம், சாலுடைய பாட்டி, எப்போதும் தன்னுடனேயே இருப்பாள் என்று அவன் நம்பியவள். திடீரென்று ஒருநாள் இறந்துபோனாள். அந்த நொடியிலிருந்து கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல அவனுக்கு எதுவும் புரியாமல் போனது. வெள்ளையர்களிடம் வேலைக்குப் போக ஆரம்பித்தான். திடீரென்று இப்படி வெள்ளை உலகத்துக்குள் போய் விழுந்தவனுக்கு அந்த உலகம் சுத்தமாக பிடிபடவில்லை. அவனுடைய நிழல்கள் இப்போது பயங்கர உருவங்கள் எடுத்து எங்கு சென்றாலும் அவனை சுற்றிச் சூழ்ந்து கொண்டன. அவனுக்கும் எங்கோ ஏதோவொரு இடத்தில் மறைந்திருந்த சூரியனுக்கும் இடையில் ஏதோவொரு பொருள் அந்த பயங்கரக் கரிய நிழலைக் கவித்து நின்றது.

வேலைக்குச் சேர்ந்த இடங்களில் விசித்திரமான அந்த வெள்ளையர்கள் அவனை ஏதோ இழிந்த பொருளைப்போல பார்ப்பதை சீக்கிரத்திலேயே உணர்ந்துகொண்டான். ஒருநாளும் அவன் தன்னைத் தாழ்ந்தவனாக கருதியதில்லை. ஆனால், இப்போது சுற்றிலும் ஒருமுறை பார்த்தபோது மற்ற கருப்பர்கள் எல்லோரும் தங்கள் மீது பதிக்கப்பட்ட இந்தத் தாழ்வான மதிப்பை சத்தமில்லாமல் ஏற்றுக்கொண்டிருப்பதைக் கண்டான். அப்படியிருக்கும்போது இவன் யார் அதை எதிர்க்க? வேறு எந்த வழியும் இல்லாததால், அவனோ மற்ற யாருமோ அறிந்திராத சக்திகளால் இயக்கப்பட்ட அவன் வாழ்வில் எப்போதும் வந்து போய்க் கொண்டிருந்த அந்தப் பரந்த நிழல் உலகின் ஒரு பகுதி என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு அமைதியாக இருந்துவிட்டான்.

ஆனால், வெகு சீக்கிரமே அவனுடைய கவலைகள், அச்சங்கள், எரிச்சல்கள் அத்தனையும் அவனுடைய உழைப்பை உறிஞ்சிக்கொண்டு வெறும் ரொட்டியை வீசிய அந்த வெள்ளை நிழல் உலகின் மீது குவிய ஆரம்பித்தன. ஏனென்று தெரியாமலேயே குதூகலமிழந்து சோகமாகத் திரிந்தவன் இப்போது தன்னை அச்சம் கொள்ளவைத்த அந்த நிழல் உலகின் மீது தன்னுள் பொதிந்து கிடந்த துயரத்தனையும் இறக்கிவைத்தான். இதைச் செய்யாமல் விட்டிருந்தால், தன்னுடைய சுமையை இறக்கி வைப்பதற்கு ஒரு வழியைக் கண்டிருக்காமல் விட்டிருந்தால் எப்போதோ அவன் தற்கொலை செய்துகொண்டிருப்பான். கடைசியில் அந்த யோசனையையும் அவன் விட்டுவைக்கவில்லை.

ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. பதினைந்து வயதானபோது சால், தான் அப்போது வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கைதான் தனக்கு விதிக்கப்பட்டது என்பதைப் புரிந்துகொண்டான். அவனைச் சுற்றிலும் இருந்த பொருட்கள் அத்தனையும் வெறும் நிழல்கள் என்ற உணர்வை விரட்டியடிக்கவோ மறந்துவிட்டு நிம்மதியாக இருக்கவோ வழியே இல்லை என்பதை உணர்ந்துகொண்டான். ஆனால், தன் இனத்தவரோடு, கருப்பு மக்களோடு இருந்தபோது அவன் தன்னை மறந்திருந்தான். அந்த சமயங்களில்தான் அவன் ஓரளவு மகிழ்ச்சியோடு இருந்தான். ஆனால், வயது ஏற ஏற அவனது அச்சங்கள் கூடிக்கொண்டே இருந்தன. அவனுடைய நண்பர்கள் இதையெல்லாம் கவனிக்கவே இல்லை. சொல்லப்போனால், சாலுடைய நண்பர்கள் அவனை மிகவும் நேசித்தார்கள். சால் எல்லோரிடமும் அன்பாகவே இருந்தான். இனிமையாகப் பழகினான். அடுத்தவர் பேச்சை எப்போதும் காதுகொடுத்துக் கேட்டான். அவனுடைய இனிய முகம், அமைதி, பணிவு இதெல்லாமும் அவனுடைய அச்சத்தின் விளைவுகள் என்பதை ஒருவரும் சந்தேகிக்கக்கூட இல்லை.

வாழ்க்கை அப்படியே போய்க்கொண்டிருக்கவில்லை. கொஞ்ச நாளில் சாலிடமும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதை அதிர்ஷ்டம் என்பதா அல்லது துரதிர்ஷ்டம் என்று சொல்வதா தெரியவில்லை. சொல்வது சிரமம். சால் குடிக்கப் பழகிக்கொண்டான். ஒரு இரண்டு பெக் விஸ்கி உள்ளே போனதும் நரம்புகள் தளர்ந்து உளைச்சல்கள் குறைவது போல உணர்ந்தான். உலகம் இப்போது அதன் முப்பரிமாணத்தில் அழகாகத் தெரிந்தது. நிழல்கள் எங்கே போய் ஒளிந்தன என்றே தெரியவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. விஸ்கி செய்கிற மாயம்தான் என்ன!

சால் குடிப்பதை விரும்ப ஆரம்பித்தான். சனிக்கிழமை இரவு கையில் சம்பளம் கிடைத்ததும் நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதை வழக்கமாக ஆக்கிக்கொண்டான். அந்த நேரங்கள் அவனுக்கு இதமாக இருந்தன. மகிழ்ச்சியும் தெம்பும் தந்த விஸ்கி இல்லாமல் வாழ்க்கை நிறைவாக இருக்காது என்று உணர ஆரம்பித்தான். ஆனால், உண்மையில் அது அப்படி இருக்கவில்லை. விஸ்கி அவனை மந்தமாக்கியது; சோர்வை அதிகரித்தது. அவனை அச்சுறுத்தி இறுக வைத்துக் கொண்டிருந்த நிழல்களைக் குறைத்து, அவற்றின் வெறியைத் தணித்தது.

நிதானத்தில் இருக்கும்போது வெள்ளை நிழல் உலகின் அருகாமையில் அவன் சிரித்ததே இல்லை. ஆனால், ஒன்றிரண்டு பெக் விஸ்கி உள்ளே போனதும் அங்கும்கூட தன்னால் சிரிக்க முடிவதை கண்டுகொண்டான். நீக்ரோக்களின் அவலமிக்க வாழ்க்கை பற்றி யாரவது பிரசங்கம் செய்தால் அவன் கவலையில் மூழ்கிவிடுவதில்லை. விஸ்கி எடுத்துக் கொள்வான். சோகத்தின் சுமை இறங்கிவிடும். ஒரு வெள்ளைப் பெண்ணோடு தனியாக இருக்கும்போது, அவள் வீறிட்டுக் கத்திவிட்டால் உனக்கு சங்கு ஊதப்பட்டுவிட்டது என்று அர்த்தம்; நீ ஒன்றுமே செய்திருக்கவில்லை என்றிருந்தாலும்கூட நிச்சயம் கொல்லப்படுவாய் என்றெல்லாம் சொல்லக் கேட்டபோதும்கூட அவன் அலட்டிக்கொள்வதில்லை. கருப்பர் பகுதியில் போலீஸ் கார்கள் சைரன்கள் அலற சீறிக்கொண்டு போவது, வெள்ளை போலீஸ்காரர்கள் நீக்ரோக்களை அடித்து இழுத்துச் செல்வது, எல்லாம் சாலுக்கு பார்த்துப் பார்த்து பழகிவிட்டன. ஒரேயொருமுறை அதை நினைத்து அவனுக்கு கடுமையான கோபம் வந்தது. அதே கதி தனக்கும் ஒருநாள் நேரக்கூடும்; நிழல்கள் தன்னையும் கொத்திச் சென்றுவிடக்கூடும் என்று உணர்ச்சிவசப்பட்டான். ஆனால் அவனுடைய நண்பர்கள் அந்த நினைப்பே ஆபத்தானது என்று அவனை பயமுறுத்தினார்கள். எப்போதும் கருப்பர்கள் தோல்வியடைவது எழுதிவைக்கப்பட்டுவிட்டது என்று புத்தி சொன்னார்கள். அவனும் புரிந்துகொண்டான். விஸ்கியை விழுங்கினான். சற்று நேரத்தில் எல்லோரும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு இரவு லேசான போதையில் இருந்தபோது – அப்போது அவனுக்கு முப்பது வயது; வாஷிங்டனில் இருந்தான் – அவனுக்கு திருமணம் முடிந்தது. அந்தப் பெண் சாலுக்குப் பொருத்தமானவளாக இருந்தாள். சாலைப் போலவே அவளும் குடிப்பதை விரும்பினாள். பிணக்குகள் எதுவும் இல்லாமல் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இப்போது நிலைமைகள் சற்று பரவாயில்லை என்பது போல சாலுக்குத் தோன்றியது. எப்போதும் சுற்றிவளைத்து நெருக்கப்பட்டது போன்ற உணர்வை உதறித் தள்ளிவிட முடிந்தவரைக்கும், எப்போது என்ன நடக்கும் என்கிற நிச்சயமின்மையை நசுக்கிவிட முடிந்தவரைக்கும், வாழ்க்கை துயரமில்லாமல் போனது.

சால் பார்த்த வேலைகள் எல்லாம் மிகவும் சாதாரணமானவை. அவன் முதலில் வேலைக்குச் சேர்ந்தது ஒரு பண்ணையில். அவனுடைய பாட்டி இறந்தபிறகு பதினாலு வயதில் வாஷிங்டனுக்கு போய்ச் சேர்ந்தான். ஒரு வேலையில் நிலையாக இருக்கவில்லை. பலவிதமான வேலைகளில் இருந்துவிட்டு கடைசியில் வயதான ஒரு வெள்ளைக் கொலெனலிடம் டிரைவராகவும் சமையல்காரனாகவும் சேர்ந்தான். இங்கு சராசரியாக வாரத்திற்கு இருபது டாலர்கள் தேற்ற முடிந்தது. கொலெனல் அவனுக்கு உணவும், சீருடையும் தங்குவதற்கு இடமும் தந்தான். சால் அங்கு ஐந்து வருடங்கள் வேலை செய்தான். கொலெனலும் மதுவை விரும்பினான். சில நேரங்களில் இருவரும் சேர்ந்தே குடித்தார்கள். ஆனால், கொலெனல் குடித்தாலும், தன்னிடம் நன்றாக நடந்துகொண்டாலும் அவன் நிஜமல்ல, நிழல்; எந்த நேரத்திலும் தன் மீது பாய்ந்துவிடக்கூடும் என்பதை மட்டும் சால் ஒருபோதும் மறந்துவிடவில்லை.

ஒருநாள், விஸ்கியின் போதையில் இதமாக உணர்ந்தபோது சால் கொலெனலிடம் சம்பளத்தை உயர்த்தச் சொல்லி கேட்டான். விலைவாசி ஏறிக்கொண்டே போவதையும் சம்பளம் போதவில்லை என்பதையும் சொன்னான். ஆனால், கொலெனல் அன்று விறைப்பாக இருந்தான். முடியாது என்று முகத்திலடித்ததுபோல சொல்லிவிட்டான். சால் இதை எதிர்பார்க்கவில்லை. ஏமாற்றத்தில், அதிர்ச்சியில் அந்த நிமிடமே வேலையை உதறிவிட்டான். விஸ்கி தந்த போதையில் ஒரு நிமிடம், ஒரேயொரு நிமிடம் நிழல்களின் உலகம் மறைந்துவிட்டது என்று நினைத்துவிட்டான். ஆனால் சம்பளத்தை உயர்த்திக்கேட்டு மறுக்கப்பட்டவுடன் தனது நினைப்பு எவ்வளவு தவறு என்பதை உணர்ந்துகொண்டான்.

அதிக சம்பளம் கேட்டிருக்கக்கூடாது. கொலெனல் நல்ல மனிதன் என்று நம்பியிருக்ககூடாது. அவன் ஒரு நிழல் என்பதை மறந்திருக்கக்கூடாது.

அடுத்து, ஒரு பெரிய மருந்து கம்பெனியில் சேர்ந்தான். வீடு வீடாகச் சென்று எலிகளுக்கும் கரப்பான்பூச்சிகளுக்கும் மருந்து வைக்கவேண்டியது அவன் வேலை. தன்னுள் இருக்கும் ஏதோ ஒரு இயல்புக்குப் பொருத்தமான வேலை என்று அவனுக்குத் தோன்றியது. செத்துப்போன எலிகளின் உடல்கள் நிழல்கள் அல்ல, நிதர்சனமான நிஜங்கள் என்பதைப் பார்த்தான். தான் செய்த வேலைக்குப் பருண்மையான விளைவுகள் உண்டானது அவனுக்கு மகிழ்ச்சி தந்தது. சமூகத்தின் ஒப்புதலோடு கொலை செய்வது வாழ்க்கையில் என்றுமில்லாத திருப்தியைத் தந்தது. அதோடு, அவனுடைய முதலாளி கேட்டதும் சம்பளத்தை உயர்த்திக் கொடுத்தான். இப்போது தன் இஷ்டப்படி குடிக்க ஆரம்பித்தான். யாரும் அவனை எதுவும் கேட்கவில்லை.

ஆனால், ஒருநாள் காலை, இரவு முழுக்கக் குடித்திருந்துவிட்டு எரிச்சலோடு விறைப்பாக இருந்தவனிடம் அவனுடைய முதலாளி அவனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றைச் சொல்லிவிட்டான். அந்தக் குற்றச்சாட்டை சால் உடனே மறுத்துப் பேசினான். ஒரு வாக்குவாதம் நடந்தது. சால் வேலையை விட்டுவிட்டான்.

இரண்டு வாரங்கள் வேலை தேடி வேட்டையாடியதில் நேஷனல் கதீட்ரல் என்ற மதநிறுவனத்தில், சர்ச்சில் ஜேனிட்டராக வேலை கிடைத்தது. எந்தத் தொந்தரவும், யாருடைய தொல்லையும் இல்லாது, அவன் விரும்பியது போன்றே அவனைத் தனிமையில் விட்ட வேலை அது. தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் வேலை முடிந்துவிடும். முதலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடையைத் துடைத்து சுத்தம் செய்யவேண்டும். அடுத்து நூலகம். கடைசியாக, பாட்டுப் பயிற்சி நடக்கும் அறையை சுத்தம் செய்யவேண்டும்.

ஆனால், வரிசை வரிசையாக புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த நூலகத்தை சுத்தம் செய்யும்போதுதான் அவனுக்கு ஏதோ உறுத்தலாக இருந்தது. அங்கு ஒரு நிழல் – ஒரு வெள்ளைப் பெண், எப்போதும் அவனை ஒரு மாதிரியாக வெறித்துக் கொண்டிருந்தாள். நூலகம் தனியான ஒரு கட்டிடத்தில் இருந்தது. அவன் சுத்தம் செய்யப்போகும் போதெல்லாம் அவனும் அந்தப் பெண்ணும் தனியாகவே இருந்தார்கள். பொன்னிறம், நீலக் கண்கள், ஐந்து அடி மூன்று அங்குலம் இருந்த உருவத்தில் சிறிய அந்தப் பெண் தோராயமாக ஒரு 100 பவுண்டுகள் கனத்திற்கு இருப்பாள்.

சாலுடைய முதலாளி முதலிலேயே அவனை எச்சரித்திருந்தார். “அவள் ஒரு கிறுக்கி,” என்று சொல்லியிருந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் நூலகத்துக்குப் பொறுப்பாக இருந்த அந்தப் பெண்ணோடு எந்தத் தகராறும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்று எச்சரித்திருந்தார். சாலுக்கு மட்டும் எந்தச் சண்டையில் என்ன விருப்பம். அவளுடைய பெயர் என்ன என்பதைக்கூட அவன் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால், பல சந்தர்ப்பங்களில் ஏதோ உறுத்த துடைப்பதை நிறுத்திவிட்டுத் தயங்கி நிற்பான். சற்று தெம்பை வரவழைத்துக்கொண்டு திரும்பிப் பார்த்தால், அவள் அவனை வெறித்துக் கொண்டிருப்பாள். சட்டென்று, ஏதோ வெட்கம் வந்தவளைப் போல வேறு பக்கம் திரும்பிக் கொள்வாள். “அட சனியனே, என்னிடம் என்ன இருக்கிறது இவளுக்கு?” என்று சங்கடத்தில் நெளிவான். காலை வணக்கம் சொல்வதைத் தவிர அவள் அவனிடம் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. அதையும்கூட ஏதோ வேண்டாவெறுப்பாக சொல்வதைப் போல சொல்வாள். சால், ஒருவேளை அவள் தன்னைக் கண்டு பயப்படுகிறாளோ என்றுகூட யோசித்தான். ஆனால், அவனைக் கண்டு பயப்பட என்ன இருக்கிறது? தன்னைக் கண்டு பயந்தவர்கள் என்று வாழ்க்கையில் ஒருவரைக்கூட அவனால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதுவரையில் அவன் எந்தப் பெரிய தொந்தரவு எதிலும் மாட்டிக்கொண்டது இல்லை.

ஒருநாள் காலை, பெருக்கிக் கொண்டிருந்தபோது மீண்டும் அதே உறுத்தல் அவனைப் பிடித்து நிறுத்தியது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தான். அவள் அவனை வெறித்துக் கொண்டிருந்தாள். அசையாமல் அப்படியே நின்றான். அவளும் பார்வையைத் திருப்பவில்லை. ஒரு பத்து நொடிகள் இருவரும் அப்படியே இருந்தார்கள். சட்டென்று அவள், ஏதோ பயத்தாலோ கோபத்தாலோ வெகுண்டுவிட்டவளைப் போல எழுந்து விறுவிறுவென்று நடந்து அறையைவிட்டு வெளியேறினாள். சால் அரண்டு போய்விட்டான். ஆனால், சீக்கிரத்திலேயே சம்பவத்தை மறந்துவிட்டான். “இந்தச் சனியனுக்கு என்ன வந்து தொலைத்தது?” என்று மட்டும் நினைத்துக் கொண்டான்.

மறுநாள் காலை முதலாளி அவனைக் கூப்பிட்டனுப்பினார். மெதுவான குரலில், அமைதியான தொனியில் – அது அவனுக்கு எந்தப் பெரிய வித்தியாசமும் தந்துவிடவில்லை. எரிச்சலும் அச்சமுமாகவே இருந்தது – நூலகத்தில் இருந்த அந்தப் பெண், அவளுடைய மேசைக்கடியில் அவன் சுத்தம் செய்வதே இல்லை என்று புகார் செய்திருப்பதாகக் கூறினார்.

“அவளுடைய மேசைக்கு அடியிலா?” சால் திகைத்துவிட்டான்.

”ஆமாம்,” அவனுடைய திகைப்பைக் கண்டு ஆச்சரியத்தோடு சொன்னார்.

“ஆனால், நான் ஒருநாள்கூடத் தவறாமல் அவளுடைய மேசைக்கடியில் சுத்தம் செய்கிறேனே.”

“சரி சரி சால். நான் தான் முதலிலேயே சொல்லியிருக்கிறேனே. அவள் ஒரு கிறுக்கி,” முதலாளி அவனை சமாதானப்படுத்தினார். “அவளோடு எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளாதே. உன் வேலையை நீ சரியாகச் செய். அது போதும்.”

“சரி சார்.”

அவள் எப்போதும் தன்னையே வெறித்துக்கொண்டிருந்தாள் என்பதை அவரிடம் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு நிமிடம் அவனுக்குத் தோன்றியது. ஆனால், அவனுக்குத் தெம்பு வரவில்லை. அவனுடைய கருப்பு நண்பர்களாக இருந்திருந்தால் இந்நேரம் சாதாரணமாக சொல்லிவிட்டிருப்பான். ஆனால், ஒரு விசித்திரமான நிழலைப் பற்றி இன்னொரு நிழலிடம் எதற்குச் சொல்ல வேண்டும்?

அன்று சம்பளத் தேதியாகையால் அவனுடைய வாரக்கூலியை பெற்றுக்கொண்டான். அந்த இரவு அற்புதமாகக் கழிந்தது. நினைவில் இருந்த எல்லாமும் கரைகிற வரைக்கும் கிறுகிறுத்து தள்ளாடுகிற வரைக்கும் குடித்தான். இப்போதெல்லாம் கையில் பணம் கிடைக்கிற போதெல்லாம் குடிக்க ஆரம்பித்திருந்தான். குடிப்பது அவனுக்குப் பிடித்துப் போய்விட்டது. அப்போதுதான் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். ஆனால் யாரையும் தொந்தரவு மட்டும் செய்ய மாட்டான். ஆனால், விடியல் எப்போதும் சக்கையாக உலர்ந்துபோனவனையே எழுப்பியது. முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு இப்போது அவனை நிழல்கள் சுற்றி முற்றுகையிட்டிருப்பதைப் போல உணர்ந்தான். எழுந்து வேலைக்குப் போகவேண்டும் என்கிற நினைப்பே எரிச்சலாக இருந்தது. ஆழமான தூக்கத்திற்காக ஏங்கினான். ஆனால் என்ன செய்வது. இது நல்ல வேலை. எப்படியும் இதில் ஒட்டியிருக்க வேண்டும். ஆமாம், போய்த்தான் ஆகவேண்டும்.

கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடையைத் துடைத்து முடித்ததும் – அதற்குள் சோர்ந்துவிட்டிருந்தான்; வெகுவாக வியர்த்துக் கொட்டியது – நூலகத்திற்குக் கிளம்பினான். அங்கு ஒருவரும் இருக்கவில்லை. தரையைத் துடைத்து முடித்து புத்தகங்களை தூசு தட்ட நகர்ந்தபோது அவள் அறைக்குள் வந்த காலடிச் சத்தம் கேட்டது. அரைத் தூக்கத்தில் சோர்ந்துபோய் இருந்தவனுக்கு ஒருவிதமான படபடப்பு தொற்றிக்கொண்டது. கைகள் நடுங்கின. அவனுடைய இயல்பான அசைவியக்கங்கள் வழக்கத்தைவிட வேகமாக இருந்தன. “என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாகச் சொன்ன தேவடியா நீ தானே? ம்ம்ம்.” எரிச்சலோடு சொல்லிக் கொண்டான். கொஞ்ச நேரம் எந்த நினைப்பும் இல்லாமல் தூசு தட்டிக்கொண்டிருந்தான். திடீரென்று மறுபடியும் அவள் தன்னையே வெறித்துக் கொண்டிருப்பது போல உறுத்தியது. திரும்பிப் பார்க்கக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு சில நிமிடங்களுக்கு மேலாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியவில்லை. மெதுவாகத் திரும்பினான். அவளுடைய இடத்தில் உட்கார்ந்திருந்தவள் அவனை கண் கொட்டாமல் வெறித்துக் கொண்டிருந்தாள். ஏதோ சொல்ல வருவது போலத் தெரிந்தது. அவளைப் பார்த்துக்கொண்டு என்ன சொல்லப் போகிறாள் என்று காத்துக் கொண்டிருப்பதைத் தவிர அவனுக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

“என் மேசைக்கடியில் துடைக்க உனக்கு என்ன நோகிறதா?” கட்டுப்படுத்திக்கொண்ட சற்றே நடுங்கிய குரலில் கேட்டாள்.

“மேடம்,” மெதுவாகச் சொன்னான். “சற்று முன்பாகத்தான் அங்கு துடைத்தேனே மேடம்.”

“இங்க வந்து பார்,” விரலைக் கீழே காட்டி சொன்னாள்.

புத்தகத்தை அலமாரியில் திரும்ப வைத்தான். இதற்கு முன் அவள் அவனிடம் இத்தனை வார்த்தைகள் பேசியது இல்லை. அவள் முன்பாக போய் நின்றவன் அதிர்ந்துபோனான். அவனுடைய கண்கள் பார்த்ததை மூளை ஆட்சேபித்தது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. கால்களைப் பரத்தி இடுப்புக்குக் கீழிருந்த துணியை தொடைகளுக்கு மேலாக ஏற்றி உட்கார்ந்திருந்தாள். அவளுடைய வட்ட நீல விழிகளிலிருந்து இறங்கி வெள்ளை வெளேரென்றிருந்த கால்களை வெறித்தான். மேலே ஏற ஏற சதைப்பற்று கூடியிருந்த தொடைகள் செங்குத்தாக, இறுகியிருந்த இளஞ்சிவப்பு உள்ளாடை மறைத்த ஒரு V – யில் முடிந்தன. திரும்பவும் அவள் கண்களை நோக்கினான். அவளுடைய முகம் சிவந்திருந்தது. ஏதோ அவள் விரும்பாத ஒரு காரியத்தை வலுக்கட்டாயமாக செய்ய வைக்கப்பட்டவளைப்போல இறுக்கமாக உட்கார்ந்திருந்தாள். சால் அதிர்ந்துபோய் நின்றிருந்தான்.

“கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் உங்கள் மேசைக்கு அடியில் துடைத்தேனே.” சம்பந்தமில்லாமல் உளறுகிறோம் என்ற உறுத்தலுடனே முனகினான்.

“இப்போது இங்கே தூசு சேர்ந்திருக்கிறது.” வெடுக்கென்று சொன்னாள். அவளுடைய கால்கள் இன்னும் அகலமாக விரிந்ததைப் பார்த்தவனுக்கு அவள் நிர்வாணமாகக் கிடந்தது போலத் தோன்றியது.

என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. இந்த அளவுகு அவன் அவமானப்பட்டதில்லை. பயந்து திணறியது இல்லை. கோபம் மெதுவாக அவன் தலைக்கு ஏறிக்கொண்டு இருந்தது. ஆனாலும் வெளிப்படுத்துகிற தைரியம் வரவில்லை.

“பாருங்கள் மேடம்,” வெறுப்பையும் ஆத்திரத்தையும் அடக்கிய தொனியில் பேசினான். “என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.”

“சொன்ன வேலையைச் செய்யாமல் என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறாய்.” அவள் இப்போது அனல் கக்கினாள். “கருங்குரங்கே! அதற்குத்தானே உனக்கு சம்பளம் கொடுக்கிறோம்.” அவளுடைய கால்கள் இன்னும் விரிந்தே கிடந்தன. எந்த நிமிடமும் பாய்ந்து அவனுடைய உடல்மீது தொடைய அழுத்திவிடத் தயாராக இருப்பது போல உட்கார்ந்திருந்தாள்.

ஒரு நிமிடம் அவன் அசையாமல் அமைதியாக நின்றான். இதற்கு முன் வாழ்க்கையில் அவன் கருங்குரங்கு (nigger) என்ற வசவை வாங்கியதில்லை. கருப்பர்களை ஆகக் கீழாக அவமானப்படுத்த வெள்ளையர்கள் அந்தப் பதத்தை பயன்படுத்தினார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அந்த வசவுக்கு அவன் ஒருமுறைகூட ஆளானதில்லை. விரிந்து கிடந்த தொடைகளை வெறிக்க வெறிக்க அவமானம் அவனுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. ஒரு பயங்கர ஆபத்து தன்னைச் சூழ்ந்து கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான்.

“இது எனக்குப் பிடிக்கவில்லை.” சொல்லி முடிக்கும் முன்பாகவே என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளும் முன்பாகவே அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

எதிர்பாராத அடியில் ஒரு நிமிடம் அவளுக்கு மூச்சு நின்றுவிட்டது போலிருந்தது. துள்ளி எழுந்து பின்னே நகர்ந்து நின்றாள். அடுத்த நிமிடம் வீறிட்டு கத்தினாள். அவளுடைய அலறல் சாட்டையால் அவன் நெஞ்சைப் பிளந்தது போல இருந்தது. மறுபடியும் கத்தினாள். அவன் பயந்து பின்னால் நகர்ந்தான். என்ன செய்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அவன் செய்துவிட்ட காரியம், அதன் விளைவு என்ன என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அந்த நேரத்தில் அவனால் வேறு என்ன செய்திருக்க முடியும்! அந்த அறையில் அவனுடைய இன்னொரு மனம் நின்றுகொண்டு செய்யக்கூடாத காரியங்களை எல்லாம் அவன் செய்துகொண்டிருப்பதை கவனித்துக் கொண்டே இருப்பது போலத் தோன்றியது. மூச்சை நன்றாக இழுத்து விட்டான். ஒரு நிமிடம் நிற்கவே தெம்பில்லாமல் போனது போலத் தோன்றியது. எப்போதும் அவன் அஞ்சி நடுங்கிய நிழல்கள் எல்லாமும் சேர்ந்து அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டது போலத் தோன்றியது. ஒரு கருப்பன் அதிகபட்சம் எதிர்பார்க்கக்கூடிய மோசமான ஆபத்தில் அவன் சிக்கிக்கொண்டு விட்டிருந்தது புரிந்தது.

அவள் இப்போது நிறுத்தாமல் கத்திக்கொண்டு இருந்தாள். அவன் மாடிப்படிகளை நோக்கி ஓடிக்கொண்டு இருந்தான். படியில் காலை வைத்தவன் தயங்கி நின்று திரும்பிப் பார்த்தான். கத்துவதை நிறுத்தாமலேயே அவள் அறையின் கோடியில் திறந்திருந்த ஜன்னல் பக்கம் பின்னாலேயே நகர்ந்து கொண்டிருந்தாள். ஐயோ ஆண்டவனே! அவளுடைய அலறலில் கருப்பர் பகுதியில் கருப்பர்களை வேட்டையாடிய போலீஸ் கார்களின் சைரன்கள் கேட்டது. கருப்பர்களைத் துரத்திச் சென்ற வெள்ளை போலீஸ்காரர்களின் சில்லிடும் விசில்களின் அலறல் கேட்டது. ஒரு நிமிடம் அவன் உடலை ஊடுருவிப் பாய்ந்த அந்த உணர்ச்சியில் குற்றம் செய்த எந்த ஒரு கருப்பனையும் எப்படியும் வெள்ளையர்கள் பிடித்து விடுவதைப் பற்றிய அந்த பயங்கர கதைகளெல்லாம் திரும்பக் கேட்டது. இவளோ ஏதோ இவன் கற்பழித்து விட்டதைப்போல அலறிக்கொண்டு இருக்கிறாள்.

படிகளில் ஏறி ஓடினான். ஆனால், அவளுடைய அலறல்கள் சப்தம் கூடிக்கொண்டே போனது. கடைசிப் படியில் காலை வைத்தபோது அவனுடைய வேகம் குறைந்துவிட்டிருந்தது. அவளுடைய அலறல்கள் இனிமேலும் அவனை ஓடவிடாது போலிருந்தது. அவனைச் சோர்ந்துபோக வைத்தது. சட்டையைப் பிடித்து இழுத்தது. நெஞ்சு வெடித்துவிடும்போல இருந்தது. நின்று இலக்கில்லாமல் சுற்றிலும் பார்த்தான். குளிர்காயும் இடம் கண்ணில் பட்டது. அருகில் விறகுக் கட்டைகள் ஒழுங்காக அடுக்கிவைக்கப் பட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே மறுபடியும் அவளுடைய அலறல்கள். நெஞ்சு பிளந்துவிடும் போல இருந்தது. ஒரு நடுக்கம் உடலெங்கும் பரவியது. நடுங்கும் கைகளோடு குனிந்து கோடரியால் வெட்டுப்பட்ட, முனைகளில் கூராக இருந்த ஒரு கட்டையை இடது கையால் – அவன் இடதுகைப் பழக்கமுள்ளவன் – உருவினான். திரும்பி படிகளில் விறுவிறுவென்று இறங்கி அவள் நின்று அலறிக் கொண்டிருந்த இடத்திற்கு ஓடினான். நெருங்கி கட்டையை ஓங்கியவன் ஒரு நிமிடம் தயங்கி நின்றான். அவள் அலறுவதை நிறுத்தினால் போதும். அவள் நிறுத்தியிருந்தால் அவன் அங்கிருந்து ஓடிவிட்டிருப்பான். ஆனால், அவள் தொடர்ந்து அலறிக்கொண்டு இருந்தாள். அவனுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த கோபம் எல்லை மீறிக்கொண்டு இருந்தது. அவளுடைய அலறலை நிறுத்த உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும். அவள் இரப்பை நிறைய காற்றை இழுத்து முழு வேகத்தில் அலறிக் கொண்டிருந்தாள். இடது கையை வேகமாக இறக்கினான். அவள் தலையின் பக்கவாட்டில் அடி இறங்கியது. ஆனால், அவனுக்கு அவளைக் கொல்ல வேண்டும் என்பது நோக்கமில்லை. அவளைக் காயப்படுத்தவும் விருப்பமில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் ஒன்றுதான். அவளுடைய அலறலை நிறுத்தவேண்டும். அந்த அலறல்களுக்கு அர்த்தம் ஒன்றே ஒன்றுதான். மரணம். அவள் அலறுவதை நிறுத்தியாக வேண்டும்…

அவள் தரையில் சரிந்த அதே வேகத்தில் மண்டை பிளந்து கட்டை உள்ளே இறங்குவதை உணர்ந்தான்ஆனால்இன்னும் அவள் அலறிக்கொண்டிருந்தாள்உச்சி முதல் உள்ளங்கால் வரை அவனுக்கு நடுங்கியதுஅட சனியனே … இன்னமும் ஏன் இப்படி அலறிக்கொண்டிருக்கிறாள்மீண்டும் கையை உயர்த்தி ஓங்கி அடித்தவன் கட்டை அவள் மண்டை ஓட்டைப் பிளந்துகொண்டு உள்ளே இறங்குவதை உணர்ந்தான்ஆனால் இன்னமும் அவள் அலறிக்கொண்டிருந்தாள்திரும்பவும் அடிக்க ஓங்கியவன், கை லேசாக இருப்பதுபோல உணர்ந்தான்கட்டை பாதி உடைந்து தரையில் கிடந்ததுஅவள் ஆடையெங்கும் ரத்தம் வழிந்துகொண்டிருந்ததுகால்கள் பரப்பிக் கிடந்தனஆனால் அவள் இன்னமும் அலறிக்கொண்டிருந்தாள்கையிலிருந்த துண்டை வீசிவிட்டு அவள் தொண்டையைப் பிடித்து உலுக்கினான்அது அவளை அடக்கியது போல இருந்ததுமயங்கிவிட்டவளைப் போலக் கிடந்தாள்ஆனால் அவன் விட்டுவிடவில்லைவெகு நேரத்திற்கு கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான்அவளைக் கொல்லவேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லைஅவனுக்குள் புதைந்து கிடந்த அச்சத்தையும் கோபத்தையும் மீண்டும் மீண்டும் கிளறி அவனைப் பைத்தியமாக்கிய அந்த அலறலை நிறுத்திவிடவேண்டும் என்பதற்காகத்தான் நெரித்தான்அவளைப் பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு இல்லைஅந்த அலறல்கள் கிளறிவிட்ட உணர்ச்சிகளின் வேகத்திலேயே அப்படி நடந்துகொண்டான்.

இப்போது அவள் தொய்ந்து அமைதியாகக் கிடந்தாள்மெதுவாக கழுத்திலிருந்து கையை எடுத்தான்அவள் சத்தம் எதுவும் போடவில்லைகாத்திருந்தான்இன்னும் அவனுக்கு நம்பிக்கை வந்துவிடவில்லைஆமாம்கீழே கழிவறைக்கு இழுத்துக்கொண்டுபோய் போட்டுவிட வேண்டும்அங்கு அவள் கத்தினால்கூட யாருக்கும் கேட்காது … அவளுடைய கைகளை அவனுடையதுக்குள் எடுத்துக்கொண்டு ஜன்னலிலிருந்து தள்ளி அவளை இழுத்துக்கொண்டு போக ஆரம்பித்தான்அவனுடைய கைகள் வியர்த்து ஈரமாயிருந்தனநாலைந்து முறை அவளுடைய சிறிய விரல்கள் அவன் பிடிக்குள் இருந்து நழுவி விழுந்தனஅவள் கைகள் அத்தனை சிறியதாக மிருதுவாக இருந்தனஇன்னும் இறுக்கிப் பிடிக்க முயற்சித்து அவனுடைய நகங்கள்தான் பதிந்தனஇழுத்துக் கொண்டிருக்கும்போதே அவளுடைய மோதிரம் நழுவி அவன் கைக்குள் விழுந்ததுஒரு நிமிடம் நின்றுதகதகத்த அந்த மெல்லிய வளையத்தை வெறித்துப் பார்த்தான்எந்த உணர்ச்சியும் இல்லாமல் சட்டைப்பைக்குள் போட்டுக் கொண்டான்ஒருவழியாக அவளை படிகளில் கீழே இறக்கி இழுத்துக்கொண்டு கழிவறைக் கதவுவரை போய்ச் சேர்ந்துவிட்டான்.

உள்ளே அவளை இழுத்துப்போக இருந்தவன் தரையில் ரத்ததுளிகள் இருப்பதைப் பார்த்தான்இது ஒன்றும் சரியில்லையே… நிழல்களைப் பார்த்து பயப்பட பழக்கப்பட்டவனைப் போலவே தரையை சுத்தமாக வைத்திருக்கவும் பழக்கப்பட்டிருந்தவன் அவன்ஒரு சுவரில் அவளை மொத்தாக போட்டுவிட்டு கழிவறைக்குள் நுழைந்து கழிவறைக் காகிதங்களை கொத்தாக எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்சிகப்புத் துளிகளை துடைத்தெடுத்தான்மாடிக்கு ஏறிப்போய் அவளை முதலில் அடித்த இடத்தில் சிந்திக் கிடந்த ரத்தத் துளிகளை கவனமாக துடைத்தான்சட்டென்று அவன் உடல் இறுகியதுஅவள் மீண்டும் அலறிக்கொண்டிருந்தாள்வேகமாக கீழே இறங்கி ஒடிவந்தான்இந்த முறை அவன் சட்டைப் பைக்குள் ஒரு கத்தி இருந்தது ஞாபகத்திற்கு வந்ததுவெளியே எடுத்து பட்டனை அழுத்தித் திறந்தவன் அவளுடைய தொண்டைக்குள் சொருகினான்அவள் அலறலை நிறுத்தவேண்டும் என்பதில் அவனுக்கு வெறியே வந்துவிட்டிருந்தது… தொண்டைக்குள் இருந்து கத்தியை உருவினான்இப்போது அவள் அமைதியாக இருந்தாள்.

அறையை சுற்றிலும் நோட்டம் விட்டுக்கொண்டே எழுந்து நின்றான்நீராவிக் குழாய்கள் சென்ற உள்வழிக்கு இட்டுச் சென்ற கதவு ஒரு சுவரில் இருந்தது அவன் கண்ணில் பட்டதுஅதுதான் சரிஅவளை அதற்குள் போட்டுவிடுவதுதான் நல்லதுஅவள் திரும்ப கத்தத் தொடங்கினாலும் யார் காதிலும் விழாதுஅவன் அவளை ஒளித்துவைக்க முயற்சிக்கவில்லைஅவனுக்கு வேண்டியதெல்லாம் அவளுடைய அலறல் யாருக்கும் கேட்டுவிடக்கூடாதுஅதை உறுதி செய்துகொள்ளவேண்டும்அவ்வளவுதான்அவளை இழுத்தான்ஸ்கர்ட் உருவிக்கொண்டு அவளுடைய மார்புப் பக்கம் மேலாக வந்துவிட்டதுஇளஞ்சிவப்பு உள்ளாடை மீண்டும் அவன் கண்களில் பட்டதுஅவளை இழுப்பது இப்போது இன்னும் சிரமமாக இருந்ததுதூக்கி கைகளில் சுமந்துகொண்டு ஒரு சின்ன நடையே இருந்த படிகளில் இறங்கி வந்துகொண்டிருந்தபோது அந்த இளஞ்சிவப்பு ஜட்டியை நனைத்து எடுத்துக்கொண்டால் சிதறியிருந்த ரத்தத்துளிகளை சுத்தமாக துடைத்தெடுக்க வசதியாக இருக்குமே என்று தோன்றியதுமீண்டும் அவளை ஒரு சுவரில் சாய்த்துஅவள் ஜட்டியை உருவினான்ஒரு நொடி நேரம்கூட அவள் பெண் உறுப்பை அவன் பார்க்கக்கூட இல்லைநனைத்து ரத்தம் சிந்தியிருந்த இடங்களை சுத்தமாக துடைத்தெடுத்தான்அப்புறம் குழாய்களுக்கு கீழே அந்த உள்வழியில் அவளைத் தள்ளிவிட்டான்முழுப் பார்வைக்கும் எளிதாகத் தெரியும்படி கிடந்தாள்ஈரப் பந்தாகியிருந்த ஜட்டியை அவளுக்குப் பின்னால் எறிந்தான்.

நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டு சுற்றிலும் பார்த்தான்தரை சுத்தமாகத் தெரிந்ததுதிரும்பவும் மாடிக்குப் போனான்அந்த உடைந்த விறகுக்கட்டை… இரண்டாக உடைந்திருந்த துண்டையும் இன்னும் மற்ற சிறிய துண்டுகளையும் பொறுக்கி எடுத்தான்உடைந்த முனைகளைச் சேர்த்துப் பொருத்தினான்முழுக் கட்டையைப் போலவே குளிர்காயும் இடத்தில் அடுக்கி வைத்திருந்த கட்டைகளோடு சேர்த்து கவனமாக வைத்தான்சற்று நின்று உற்றுக் கேட்டான்எந்தச் சத்தமும் இல்லைஅவள் மீண்டும் அலறவில்லைஅவளுக்கு உதவவேண்டும் என்ற எண்ணமோவலியால் துடித்திருப்பாள் என்றோ அவனுக்குத் தோன்றவேயில்லைஅவள் செத்துவிட்டிருப்பாள் என்பதுகூட அவனுக்குத் தோன்றவில்லைதொப்பியையும் கோட்டையும் எடுத்துக் கொண்டான்வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

ரொம்பவும் சோர்ந்துபோயிருந்தான்அவன் எப்போதும் செய்துவந்தஅவனுக்குப் பழகிப்போயிருந்த ஒரு வேலையைஅவனை எப்போதும் சுற்றிச் சூழ்ந்திருந்த அவனால் புரிந்துகொள்ளவே முடியாதிருந்த நிழல்களுக்கு போக்கு காட்டி ஏமாற்றும் வேலையை முடித்துவிட்டு வந்தது போல இருந்ததுஆடைகளைக் கழற்றி வீசினான்சட்டையிலும் பேண்டிலும் படிந்திருந்த ரத்தக் கறைகளை சட்டைகூட செய்யவில்லைமனைவி வேலைக்குப் போயிருந்தாள்அவன் மட்டும் தனியாக இருந்தான்பர்சை உருவியபோது மோதிரம் கண்ணில் பட்டதுமேசையின் ட்ராயரைத் திறந்து அதற்குள் அசட்டையாக வீசினான்அதை ஒளித்து வைக்கவேண்டும் என்ற யோசனையெல்லாம் அவனுக்கு இல்லைஅவள் பார்வையில் பட்டுவிடவேண்டாம் என்பதற்கு மேலாக அவன் யோசிக்கவில்லை.

களைத்து சலித்து கட்டிலில் விழுந்தவன் சட்டென்று நல்ல தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான்மறுநாள் மதியம்வரை எழுந்திருக்கவில்லைஇரத்தம் போலச் சிவந்திருந்த கண்களை சிமிட்டிக்கொண்டு அப்படியே மல்லாந்திருந்தான்முந்தைய நாள் நடந்த எதையும் அவனால் ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லைஅப்புறம் மெதுவாக சம்பவங்களின் நிழல் போன்ற படங்கள் அவன் கண்களில் விரிந்தனஒரு நிமிடம் அவையெல்லாம் உண்மையிலேயே நிகழ்ந்தவைதானா அல்லது யாராவது சொன்ன கதையா என்பது புரியாமல் குழம்பினான்எதுவும் உறுதியாகச் சொல்லமுடியவில்லைஎன்றாலும் எந்தப் பயமும் வருத்தமும் எழவில்லை.

அப்புறம் கடைசியில் நடந்தது எல்லாம் நிஜம் என்ற நம்பிக்கை வந்தபோது உணர்ச்சிகளற்ற வெறும் நினைவுகளாகவே நின்றனசோர்ந்து தூக்கக் கலக்கத்தில் இருக்கும்போது சினிமாத் திரையில் விழுந்த ஒரு காட்சியைப் போல மங்கலாக இருந்ததுஎன்ன செய்வதென்று எதுவும் புரியவில்லைஅப்படியே படுக்கையிலேயே கிடந்தான்வேலை முடிந்து வெகுநேரம் கழித்து அவன் மனைவி வந்துசேர்ந்தபோது மறுபடியும் தூக்கம் அவனை அள்ளிச் சென்றுவிட்டது.

மறுநாள் காலை மனைவி செய்து வைத்த காலை உணவை உண்டுவிட்டு மேசையிலிருந்து எழுந்தான்அவளை முத்தமிட்டான்எதுவுமே நடக்காததுபோல கதீட்ரலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்சர்ச் படிகளை மிதிக்கும் வரைக்கும் எதுவும் தோன்றவில்லைபிறகுதான் நடுங்க ஆரம்பித்ததுஒரு இரண்டு மூன்று நிமிடங்கள் கதவுக்கு எதிரில் நின்றான்அதன் பிறகுதான் இனி தான் அதற்குள் நுழையவே முடியாது என்று உணர்ந்தான்அவனுக்கு கோபம் எதுவும் இல்லைஅந்த இடத்தின் மீது ஏதோ ஒரு இனம்புரியாத வெறுப்புஅவள் உயிரோடுதான் இருக்கிறாளா அல்லது செத்துவிட்டாளா என்ற கேள்வியே அவனுக்குள் எழவில்லைஎன்ன செய்வதென்று இன்னும் அவனுக்குப் பிடிபடவில்லைஅப்போது சட்டென்று அவன் மனைவி சில மளிகை சாமான்கள் வாங்கிவரச் சொன்னது ஞாபகத்திற்கு வந்ததுசரிஅதைச் செய்யவேண்டியதுதான்வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லைவேறு வழியில்லாமல் அதைச் செய்ய நினைத்தான்.

மளிகைச் சாமான்களை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான்பிறகு நாள் முழுவதையும் ஒவ்வொரு பாராக கழித்தான்ஓடிப்போய்விட வேண்டும் என்ற எண்ணம் ஒருமுறைகூட அவனுக்குத் தோன்றவில்லைவீட்டுக்குப் போவதுரேடியோவை திருகிக்கொண்டிருப்பதுதிரும்பவும் தெருவுக்குப் போவதுகால்போன போக்கில் நடப்பதுகடைசியில் ஒரு பாருக்குள் நுழைவதுபோதை தலைக்கேறும் வரை குடிப்பது என்று கழித்துக் கொண்டிருந்தான்ஒருமுறைஉடைகளை மாற்றிக் கொண்டான்ரத்தம் படிந்திருந்த சட்டையையும் பேண்டையும் ஒரு மூட்டையாகக் கட்டி கறை படிந்த கத்தியை அதற்குள் திணித்து ஒரு மூலையில் எறிந்தான்துப்பாக்கியை எடுத்து சட்டைக்குள் வைத்துக்கொண்டான்ரொம்பவும் சோர்ந்துபோய் இருந்தான்.

ஆனால்இன்னமும் என்ன செய்வதென்று அவனுக்குப் பிடிபடவில்லைதிடீரென்று சில மாதங்களுக்கு முன்பாக மட்டமான விலைக்கு வாங்கி வைத்திருந்த கார் ஞாபகத்துக்கு வந்ததுரிப்பேருக்காக காரேஜில் விட்டிருந்தான்உடனே காரேஜுக்குப் போனான்இருபத்தைந்து டாலர்களுக்குப் பேசி அதன் உரிமையாளனிடமே அதை விற்றான்அப்போதுகூட தப்பித்துப் போகவேண்டும் என்றோ அதற்கு கார் பயன்படும் என்றோ அவனுக்குத் தோன்றவே இல்லைமாலைவரை பார்களில் குடித்துக் கழித்தான்வாழ்க்கை முழுக்க அவனை விரட்டிக்கொண்டிருந்த உணர்வுகள் அப்போதும்கூட அன்றுகூட அவனை விட்டுத் தொலைந்தது போல அவனுக்குத் தெரியவில்லை.

இரவு எட்டு மணி போலஎதிர்ப்பட்ட இரண்டு நண்பர்களை தன்னோடு குடிக்கவரும்படி அழைப்பு விடுத்தான்இப்போது நன்றாகக் குடித்திருந்தான்மேசையில் அவனுக்கு முன்பாக சாண்ட்விச்சும் ஒரு சிறிய க்ளாஸில் விஸ்கியும் இருந்ததுஇரண்டு நண்பர்களில் ஒருவன் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் கதையை தூக்கக் கலக்கத்தில் முன்னே குனிந்து கேட்டுக் கொண்டிருந்தான்

அப்போது ஒரு குரல்:

நீ தானே சால் சாண்டர்ஸ்?”

நிமிர்ந்து பார்த்தவனுக்கு இரண்டு வெள்ளை நிழல்களின் வெளிறிய முகங்கள் தெரிந்தது.

ஆமாம்.” தயக்கமில்லாமல் சொன்னான்.

உன்னிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும்ஒழுங்காக எங்களோடு வந்துவிடுவது நல்லது.” ஒரு நிழல் சொன்னது.

எதற்காகஎன்ன விஷயம்?” சால் கேட்டான்.

அவர்கள் அவன் தோளைப் பற்றி இழுத்தார்கள்சால் எழுந்து நின்றான்குனிந்துகொஞ்சம் விஸ்கி மிச்சமிருந்த க்ளாஸை எடுத்து அதை காலி செய்தான்போலீஸ்காரர்கள் ஆளுக்கொரு பக்கம் வர தடுமாறாமல் நடந்தான்பாருக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த காருக்கு வந்தார்கள்அவனுடைய மூளை சுத்தமாக துடைத்து எடுத்துவிட்டிருந்தது போல இருந்ததுகாருக்குள் அவர்கள் அவனைத் தள்ளுவதற்கு சற்று முன்பாகவரை அவனுக்கு எதுவும் தோன்றவில்லைஅப்போதுதான் அவனை சுயநினைவுக்குக் கொண்டுவந்து அவனுக்குக் காத்திருந்த அபாயத்தை உணர்த்திய அது நடந்ததுஒரு போலீஸ்காரன் அவன் துப்பாக்கி எதுவும் வைத்திருக்கிறானா என்று இடுப்பைத் தடவிப் பார்த்தான்எதுவும் அகப்படவில்லைசால் துப்பாக்கியை மார்போடு சேர்த்து வைத்திருந்தான்அந்த நொடியில் திடீரென்று அந்த எண்ணம் அவன் மூளையில் உதித்ததுஅந்த எண்ணம் கிளப்பிய கிளர்ச்சியில் அவன் உடல் நடுங்கியது … ஆமாம்அவன் தன்னைத்தானே சுட்டுக் கொள்ளவேண்டும்ஆனால்இது ஏன் முன்னமே மூளைக்கு எட்டவில்லை?

மெதுவாக தொப்பியைக் கழற்றிஇடது கையின் அசைவை மறைத்துக்கொள்ள நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டான்சட்டைக்குள் கையைவிட்டு துப்பாக்கியை வெளியே உருவினான்சடாரென்று ஒரு போலீஸ்காரன் பாய்ந்து துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டான்.

எங்களையும் கொல்லப் பார்க்கிறாயோ?”

இல்லைஎன்னையே சுட்டுக்கொள்ள நினைத்தேன்.” சால் ரொம்பவும் சாதாரணமாக சொன்னான்.

சனியனே!”

ஒரு முஷ்டி அவன் மோவாயில் இறங்கியதுமயங்கி சரிந்தான்.

இரண்டு மணி நேரம் கழித்துபோலீஸ் ஸ்டேஷனில்சால் நடந்தது ஒன்றையும் விடாமல் ஒப்புவித்தான்உணர்ச்சிகளின் எந்தத் தடயமும் இல்லாமல்விருப்பு வெறுப்பற்ற மெதுவான தொனியில் மெல்லிய குரலில் ஒவ்வொரு சிறு விவரத்தையும் தெளிவாக விளக்கிச் சொன்னான்ஆனால்என்ன விளக்கிச் சொன்னாலும் அவள் அலறல் தன்னை எப்படி நடுங்க வைத்தது என்பதை அவர்களுக்கு சுத்தமாக புரியவைக்கவே முடியாது என்பதை நன்றாக உணர்ந்திருந்தே சொன்னான்அவன் சொன்ன கதை மிகவும் கொடூரமாக இருந்திருக்கவேண்டும்அந்த போலீஸ்காரர்களுடைய முகம் வெளிறிப்போயிருந்தது.

சில வாரங்களுக்குப் பிறகு அவன் சோர்வாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கோர்ட்டில் அந்தக் குரல் இரைந்து கரைந்தது.

“…ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் மரியாதைக்குரிய ஜூரிகள் மேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தின் பெயராலும் அதன் சார்பாகவும் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் பேரில் இதைப் படிக்கிறோம்.”

குற்றம் சாட்டப்பட்ட சால் சாண்டர்ஸ் என்ற இந்த நபர், 19__, மார்ச் முதல் தேதிமேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தில்அதன் எல்லைக்குள்மேபெல் ஈவா ஹவுஸ்மேன் என்கிற பெண்மணியைக் கொல்லும் நோக்கத்தோடுதிட்டமிட்டு…”

இதுதான் அவள் பெயரா!” சால் ஆச்சரியப்பட்டுக் கொண்டான்.

“…வேண்டுமென்றேஉள்நோக்கத்தோடுமுன்கூட்டியே யோசித்த இழிந்த நோக்கோடுதிட்டமிட்டுமேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனைதலையில் முன்பக்கமாகவும் வலது பக்கமாகவும் இரண்டு ஆழமான காயங்கள் விழும்படியும்மண்டை உடையும்படியும் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்மேலும் அவரது கையால் அல்லது இரண்டு கைகளாலும் – இரண்டு கைகளாலுமா அல்லது ஒரு கையால்தானா என்பதை தெளிவாக முடிவு செய்யமுடியவில்லை என்று மேற்சொன்ன ஜூரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள் – மேற்சொன்ன மேபெல் ஹவுஸ்மேனின் கழுத்தை இறுகப் பற்றி அழுத்தியிருக்கிறார்மேலும்மேற்சொன்ன சால் சாண்டர்ஸ்மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனின் கழுத்தைமேற்சொன்னவாறு ஒரு கையாலோ இரண்டு கைகளாலோ பிடித்து மூச்சுத்திணறும் வரை நெரித்திருக்கிறார்அதன் விளைவாகமேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேன் மூச்சுத் திணறிகழுத்து முறிந்துசரியாக 19__, மார்ச் மாதம் முதல் தேதியன்றுமேற்சொன்ன கொலம்பியா மாவட்டத்தில் ,அதன் எல்லைக்குள் இறந்துவிட்டார் என்பது உறுதியாகிறது.

சால் குடிப்பதற்கு ஏங்கினான்ஆனால் இப்போது அது சாத்தியமில்லைமூச்சை நிம்மதியாக இழுத்துவிட்டான்அதே நிம்மதியோடு இத்தனை காலமும் பயந்து ஓடிக்கொண்டிருந்த அந்த நிழல்களின் உலகிடம் மண்டியிட்டு சரணடைந்தான்அவனுடைய உளைச்சல்கள் அத்தனையும் தொலைந்து அதுநாள் வரையில் அனுபவித்திராத அமைதியை உணர்ந்தான்நிழல்களின் உலகத்தோடு போராடுவதை நிறுத்திய அந்த நிமிடமே அவ்வளவு அமைதி கிடைத்தது ஆச்சரியமாக இருந்தது.

“…மேற்சொன்ன மேபெல் ஈவா ஹவுஸ்மேனுக்குச் சொந்தமான பத்து டாலர்கள் மதிப்புள்ள மோதிரத்தைஎதிர்ப்பை மீறிவன்முறையைப் பிரயோகித்துஅச்சுறுத்திஅந்த நேரத்தில்அந்த இடத்தில்மேற்சொன்ன நபரிடமிருந்து பிடுங்கிதிருடி எடுத்துச் சென்றுவிட்டார்.”

இப்போது எந்தக் கவலையும் இல்லாமல்ஆனால் இன்னும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்தான்.

ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் முறையிலும்இத்தகைய சூழல்களில் வாய்க்கிற சந்தர்ப்பங்களுக்குப் புறம்பாகவும்மேற்சொன்ன மேபெல் ஈவா ஜவுஸ்மேனை கொலை செய்திருக்கிறார் என்பது உறுதியாகிறது.”

பி.குஇதன்பேரில் டாக்டர்ஹெர்மென் ஸ்டீன் சாட்சியாக அழைக்கப்பட்டுமுறையான உறுதிமொழி எடுத்துக்கொண்டு அளித்த சாட்சி பின்வருமாறு:

“…பிறப்புறுப்புகளை ஆராய்ந்ததில் உராய்வுகளோகடுமையான காயங்களோ இல்லை என்பதோடு இறந்தவரின் கன்னிமைத்திரையும் கிழியாமல் இருப்பதுஇறந்தவர் தாக்கப்பட்டது கற்பழிக்கும் நோக்கத்தில் அல்ல என்பது உறுதியாகிறதுபுணர்வதற்கான முயற்சியும் நடைபெற்று இருக்கவில்லைஇறந்தவரின் வயது நாற்பது என்பது உறுதிசெய்யப்படுகிறது.”

நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு – 4, மே 1998.

%d bloggers like this: