முதலில், இந்தக் குறிப்பிட்ட பிரதி தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்களைப் பார்த்துவிடுவது நல்லது. இரா. நடராசனின் முன்னுரை, ஸ்நேகாவின் பதிப்புரை இரண்டிலுமே “தலித் இலக்கியத்திற்கு ஒரு முன்மாதிரிக் களனை” அமைத்துக் கொடுப்பதே நோக்கம் என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தலித் இலக்கியத்திற்கு ஒரு உற்சாகமும், தனது வடிவங்களைத் தேர்வு செய்து கொள்வதற்கு உதவியாகவும் இருக்கக்கூடும் என்ற ‘நல்ல’ எண்ணத்துடனேயே இதை எடுத்துக்கொண்டு, வெளிப்படையான இந்த அரசியல் நோக்கு வரவேற்கத்தக்கது என்று சொல்லிவிடலாம்.
தமிழினி வெளியீடுகள், பொதுவாக பதிப்புரைகளோடு வருவதில்லை. பின் அட்டையில் blurb – கள் போடுவதுண்டு. இந்நூலுக்கு இல்லை. சூத்ரதாரி எக்காரணங்கருதி பெயர்க்க எடுத்துக்கொண்டார் என்பதைச் சொல்லவில்லை. (சொல்ல வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை என்று நினைத்திருக்கலாம். அல்லது காரணம் எதுவும் இல்லாமலும் இருக்கலாம். ஒரு ‘நட்பு’ அடிப்படையில் செய்து கொடுத்திருக்கலாம்.)
ஆனால், திலீப்குமார் அணிந்துரை எழுதியிருக்கிறார். பிரதியைப் பற்றிய சில பதிவுகளோடுகூட இப்படியொன்றையும் கூறுகிறார்: “கருப்பாகவும் ‘வளர்ச்சி’யடையாதவர்களாகவும் வெள்ளைத் தோலைக் கண்டு பதறுபவர்களாகவும் உள்ள நமக்கு, (அழுத்தம் எனது) பிரெடரிக் டக்ளஸ் மிகவும் நெருக்கமானவர்தான்.”
டக்ளஸ் எப்படி ‘நமக்கு’ நெருக்கமானார்? அமெரிக்க கருப்பின மக்களை தலித்துகளின் நிலைமையோடு ஒப்பிட்டுப்பார்க்கக்கூட முடியாதவரை என்னவென்று சொல்வது? அமெரிக்காவில் இருக்கும் நிறவெறிக்கு எதிரான பிரதியை தேர்வு செய்வதில் ஒரு அரசியல் இருப்பது போலவே, அது இங்குள்ள தலித்துகளின் நிலைமைக்கு நெருக்கமாகவும் உள்ளதைப் ‘புரிந்துகொள்ள முடியாமல்’, ‘நமக்கு’ என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதிலும் ஒரு அரசியல் இருக்கிறதா இல்லையா? அரசியலற்றிருப்பது போல காட்டிக் கொள்வதே ஒரு அரசியல் என்பதை இன்னும் எத்தனை நாளைக்குச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்? (9)
சொற்தேர்வுகளுக்குள் போவதற்கு முன்பாக, மிகவும் மோசமான பிழைகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டிவிட வேண்டும். இந்தப் பிழைகள், அரசியல், கலாச்சார, இலக்கிய முக்கியத்துவம் மிகுந்த ஒரு பிரதியின்பால் இவர்கள் எவ்வளவு அசட்டையாக இருந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுபவை.
முதல் பக்கந்தொடங்கியே கொடுமை ஆரம்பித்துவிடுகிறது. பன்னிரண்டு மைல் என்று இருக்க வேண்டிய ஒரு தகவலை சூத்ரதாரி இருபது மைலாக எழுதியிருக்கிறார். இதே தவற்றை அத்தியாயம் 2 – லும் செய்திருக்கிறார். இதனால் என்ன பெரிதாகக் குடிமுழுகிப்போய் விடப்போகிறது என்று எடுத்துக்கொண்டுவிட முடியாது. டக்ளஸின் பிரதியை ஊன்றிப் படித்தால் அதிலுள்ள ஒவ்வொரு தகவலும் எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும்.
பிரதியின் ஆரம்பத்திலேயே டக்ளஸ் வெளி x காலம் என்று ஒரு முரணைக் கட்டமைக்கிறார். வெளி சார்ந்த விஷயங்கள் – ஊர், ஊரின் பெயர், அவற்றுக்கிடையிலான தூரங்கள் இவை குறித்த அறிவு அடிமைகளாக இருந்தவர்களுக்கு இருந்தது என்றும், காலம் சார்ந்த விஷயங்கள் – நாள், மாதம், வருடம், பிறந்தநாள், வயது குறித்து அறியாதவர்களாக, அறிவது மறுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள் என்றும் சொல்கிறார். காலம் சார்ந்த விஷயங்களை வெளி சார்ந்து உருவகப்படுத்தியே – விதைக்கும் பருவம், அறுவடைப் பருவம் – அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்றும் மிகுந்த நுட்பத்தோடு சித்தரிக்கிறார். இந்த நுட்பத்தைப் புரிந்துகொள்ளாமல் போகும்போது 12 மைல் 20 மைலாகிவிடுவதில் ஆச்சரியம் இல்லை. அசட்டைக்கு விலை 8 மைல்.
இன்னொன்று. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்று இரண்டு கண்டங்கள் இருப்பதும், இவற்றில் United States of America என்ற நாடு வட அமெரிக்கக் கண்டத்தில் இருப்பதும், அதைச் சாதாரண வழக்கில் அமெரிக்கா என்று எழுதுவதுண்டு என்பதும் எழுதப் படிக்கத் தெரிந்த பெரும்பாலானோருக்குத் தெரிந்த விஷயங்கள். இந்த ஐக்கிய அமெரிக்க நாட்டில், அடிமை முறை அதன் தென் பகுதிகளில் இருந்த அரசுகளில் (தென் மாநிலங்கள் என்பது போல) கோலோச்சியது வரலாறு. இதை, ‘தென் அமெரிக்காவில் அடிமைப்பட்டுக் கிடக்கும் மக்கள்’ (பக் – 17) என்று எழுதி, கண்டம் விட்டுக் கண்டம் தாவி சாதனை படைத்திருக்கிறார் சூத்ரதாரி. அதே வரியில், different looking people என்பதை ‘வித்தியாசமான பார்வையைக் கொண்டவர்கள்’ என்றும் எழுதியிருக்கிறார். ஆகா!
இதுபோன்ற ஏகப்பட்ட குப்பைகள் இரண்டு பதிப்புகளிலுமே மலிந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் பட்டியலிட்டுக் கொண்டிருப்பது வேலைக்காகாது. என்றாலும், முக்கியமான ஒரு டமாஷை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
“பெரிய வீட்டுக்கு நான் போகிறேனே …
ஓ … யே … ஓ”
(சூத்ரதாரி: பக். 26)
‘மகா பெரும்பண்ணைக்கு போகிறே’னய்யா …
நான் ஓயே … யே … ஒயே … ஓ!
(இரா. நடராசன்: பக். 20)
டக்ளஸின் ஆங்கிலப் பிரதியில் இது:
“I am going away to the Great House Farm!
O, yea! O, yea! O!”
அடிமைகளின் வாழ்வில் இதுபோன்ற பாடல்களுக்கு இருந்த முக்கியத்துவத்தை எல்லாம் கொஞ்சம் மறந்துவிட்டு (மறக்கடித்து விடுவார்கள் போலிருக்கிறது) பாடலின் இரண்டாவது அடியில் உள்ள yea என்ற அந்த வார்த்தை ஆமாம் என்பதைக் குறிக்கும் என்பதை அனைவரின் தாழ்மையான கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன். பாடல் என்ன பாடுபட்டிருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு அகராதியை எடுத்துப் புரட்டிப் பார்த்திருந்தால்கூட இது தெரிந்திருக்கும். அதைக்கூடச் செய்யாததை அசட்டை (கொஞ்சம் வாய்த்துடுக்காக ‘கொழுப்பு’) என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது! (10)
இனி சொற்தேர்வு. (வாக்கிய அமைப்பு, சொல்லாடல் களன் இவற்றையும் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். இடவசதி கருதி அவற்றை இன்னொரு சந்தர்ப்பத்திற்கு விட்டுவிட வேண்டியதாகிவிட்டது.) முதலில் சூத்ரதாரி. முதல் பக்கத்தில், “அத்தகைய கேள்விகள் எல்லாம் முறையற்றதென்றும், அதிகப் பிரசங்கித்தனமென்றும், சாந்தியடையா ஆவியின் (அழுத்தம் எனது) அடையாளமென்றும் அவர் கருதினார்,” என்பதில் உள்ள ‘சாந்தியடையா ஆவி’ – யை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
ஆங்கிலப் பிரதியில், இது restless spirit. அலைக்கழிக்கப்பட்ட ஆத்மா என்று எழுதுவது சரியாக இருக்குமா? இரா. நடராசன் இதைத் தேர்வு செய்திருந்தாலும் டக்ளஸ் தமது கதையாடலின் முதல் பத்தியில் உருவாக்கிக் காட்டும் சூழலிலிருந்து எங்கோ விலகிப் போகிறார். (”வேண்டுமென்றே இதுபோன்ற புரிதல்கள் ஏற்படாத அலைக்கழிக்கப்பட்ட ஆத்மாக்களாக நாங்கள் சீரழிக்கப்பட்டோம்” – சூத்ரதாரியின் வாக்கியம் பிரதிக்கு சற்று நெருக்கமாக இருக்கிறது.)
கதையாடலின் முதல் பத்தியில், வெளி x காலம் என்ற முரணைப் போலவே, டக்ளஸ் மனிதர்கள் x மிருகங்கள் என்ற முரணையும் எழுப்புகிறார். வயதைச் சொல்லத் தெரிந்த வெள்ளைத் தோல் குழந்தைகள் மனிதர்களாகவும், குதிரைகளைப் போல வயதைச் சொல்லத் தெரியாத கருப்புக் குழந்தைகள் மிருகங்களின் நிலைக்குத் தாழ்த்தப்பட்டதையும் சுட்டுகிறார். வெள்ளைத் தோல் எசமானர்கள் கருப்பின மக்களை அறியாமையிலேயே வைத்திருந்ததன் மூலம் அவர்களை விலங்குகளைப் போல நுகத்தடியில் வைத்திருந்தார்கள் என்பதையும் நுட்பமாகச் சொல்கிறார். மிருகங்களாக ஆக்கப்பட்டவர்களிடத்தில் எசமானர்கள் ஆத்மாக்களை எப்படிச் சந்தேகிக்க முடியும்? தவிரவும், ‘அலைகழிக்கப்படுதல்’ ஓய்வேயில்லாமல் வேலை வாங்கப்பட்டுச் சோர்ந்திருந்த ஆத்மாக்கள் என்ற – பிரதியின் இந்த இடத்தில் சேராத – அர்த்தத்தில் தொக்கி நின்றுவிடுகிறது. எசமானர்கள், சோர்ந்திருப்பவர்களைச் சந்தேகிக்க வேண்டிய தேவையில்லை. சூத்ரதாரியின் ‘சாந்தியடையாத ஆவி’யோ சுவிசேஷக் கூட்டங்களை ஞாபகப்படுத்தி விடுகிறது. ஆத்மா, சாந்தி, ஆவி போன்ற சொற்களே மதத்தில் தொய்ந்தவை என்பதை விளக்கத் தேவையில்லை.
இவற்றுக்குப் பதிலாக, வருமொழிப் பிரதியின் அர்த்தங்களுக்கு நெருக்கமான சொற் தேர்வு அவசியம். மொழிபெயர்ப்பு நிலைமொழியின் அமைப்பைக் குலைப்பதாக, அன்னியப்படுத்துவதாக (foreignizing translation) இருக்க வேண்டும். எசமானர்கள் சந்தேகங் கொள்ளக்கூடியது, எச்சரிக்கை கொள்வது அதிருப்தியுற்ற உயிரின் அசைவுகளைக் கண்டுதான். “அதிருப்தியுற்ற உயிரின்/உடலின் சலனங்களைச் சந்தேகித்தார்” என்பது இவ்விடத்திற்குப் பொருத்தமாக அமையலாம்.
இன்னொன்று. சூத்ரதாரியின் மொழியாக்கத்தில் பைபிள் வேதமாகிவிடுகிறது (பக்கம் – 17). இத்தகைய சொற்தேர்வு வருமொழிப் பிரதியை நிலைமொழியின் அமைப்பில் அப்பட்டமாகக் கரைப்பது (domesticating translation). பைபிள் தலைகீழாக நின்றாலும் வேதமாக முடியாது. பைபிள் என்றே எழுதுவது அல்லது விவிலியம் என்ற தேர்வு அன்னியத்தன்மையைத் தக்க வைக்கக்கூடிய மொழிபெயர்ப்பாக இருக்கலாம்.
இதுபோல எண்ணற்ற உதாரணங்களை இருவருடைய பிரதிகளிலிருந்தும் அடுக்கிக் கொண்டே போகலாம். மொத்தத்தில், இரண்டு பிரதிகளுமே டக்ளஸின் பிரதியை தமிழில் கரைத்த மொழியாக்கங்கள் (அவர்களுடைய ‘நல்லெண்ணங்களையும்’ மீறி) என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
கடைசியாக ஒரு உதாரணத்தைக் காட்டி இதை முடித்துக் கொள்கிறேன். சூத்ரதாரியின் மொழியாக்கத்தில், முதல் அத்தியாயத்தில், அடிமை ஆதிக்க முறை, தாய் – சேய் உறவை எப்படிச் சூறையாடிப் பிரிக்கிறது என்பது பற்றிய விவரிப்பில் (பக்கங்கள்: 14 – 15) இடையில் ஒரு இடத்தில் தாய் என்பதற்குப் பதிலாக அம்மா என்ற சொல் விழுந்து விட்டிருக்கிறது. தாய் என்ற சொல்லையே தொடர்ச்சியாகக் கையாள்வதில் ஒரு சலிப்பு தோன்றிவிடக்கூடும் என்பதற்காக, ஒரு மாறுதலுக்காக, எந்த விதமான ‘உள்நோக்கங்களும்’ இல்லாமல் சூத்ரதாரி “அம்மாவை” என்ற சொல்லைப் போட்டிருக்கலாம்.
ஆனால், டக்ளஸின் விவரிப்பில் தாயுடனான உணர்ச்சி நெருக்கம் என்பதைவிட, அடிமைகளாக்கப்பட்ட கருப்பின மக்களின் குடும்ப அமைப்பு, ஒரு நிறுவனம் என்ற வகையில் எப்படித் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டது என்பது பற்றிய அழுத்தமே அதிகம். அம்மா என்ற சொற்தேர்வு இதை மழுங்கடித்து தனிப்பட்ட பாசப்பிணைப்புறவைக் குறிப்பதாக, வருமொழிப் பிரதி சுட்டிக் காட்டும் ஒரு வன்முறை நிறைந்த வாழ்வைக் கொண்டு வருவதாக இல்லாமல், அதன் அன்னியத்தன்மையை வித்தியாசத்தை அழித்து, ஏற்கனவே பாசத்தில் உப்பிப் பெருத்துக் கிடக்கும் தமிழ் கலாச்சாரத்தில் பிரதியை குழிதோண்டிப் புதைத்து விடுகிறது. ஹே ராம்! (என் தாயை நான் பார்த்ததில்லை; வசந்தா அக்காதான் எனக்குத் தாய். இப்போது நீயும் … எவரு வே!)
பசு
பரிதாபங்கருதி தவிர்க்கப்பட்டது.
(நடக்கும் … )
புதிய கோடாங்கி ஜூலை 2002.
குறிப்புகள்:
(9) இரா. நடராசன் தனது முன்னுரையில், முதலிரண்டு பக்கங்களில், கடைசிப் பத்தியின் கடைசி வரியும், இரண்டாம் பக்கத்தின் முதல் பத்தியும் தவிர்த்து நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4 – ல் அ. மார்க்ஸ் எழுதியிருந்த அறிமுகத்தை ‘வார்த்தைக்கு வார்த்தை’ அப்படியே எடுத்துப் போட்டிருக்கிறார் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லி விடுகிறேன்.
(10) இந்தக் கேள்விகளை இன்னும் சற்றுக் ‘காட்டமான’ தொனியில் கேட்க விருப்பம்தான். ஆனால், பொதுவாக நமது இலக்கியவாதிகள், மிகுந்த நுண்மையானவர்களாக, மென்மையான இதயம் படைத்தவர்களாக இருப்பது கருதி தவிர்க்கப்பட்டது.
(11) இவை mis – translations அல்ல என்பதை மீண்டும் வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். இவற்றால் எந்தவிதமான புதிய, ஆரோக்கியமான, பயனுள்ள – அதாவது, பயன்பாட்டு நோக்கில் அல்ல; ஒரு creative play என்ற பொருளில் அர்த்த நிகழ்வுகள் ஏற்பட்டுவிடவில்லை என்பதுதான் இதில் அளவுகோல். இதை மனங்கொள்ளாமல், mis – translation, mis – reading என்பன போன்ற பின் – அமைப்பியல் உருவாக்கித் தந்த உருப்படியான கருத்தாக்கங்கள், வாசிப்பு முறைகளையெல்லாம், பின்நவீனத்துவ இலக்கியக் கர்த்தாக்கள், விமர்சகர்கள் என்று தம்பட்டமடித்துக் கொண்டிருப்போரில் சிலர், சகட்டு மேனிக்கு போட்டு உருட்டி, அவற்றின்பால் பயத்தையும் வெறுப்பையுமே உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
பின்குறிப்பாக:
தமிழினி பதிப்பில் பின் – அட்டையில் உள்ள புகைப்படம் எதைக் குறிப்பதாக இருக்கலாம்? டக்ளஸின் பிரதியை authentic – ஆக கொண்டு வந்திருக்கிறது என்று அறிவித்துக் கொள்வதாக எடுத்துக் கொள்ளலாமா? (அமெரிக்காவுக்குப் போய் திலீப்குமார் எடுத்து வந்த பிரதி. படம்?! முன்னட்டை ஒரு portrait என்பதால் ‘கலைத்தன்மையுள்ள’ பிரதி என்று குறிப்பதாக?)
ஸ்நேகாவின் அட்டைப்படம் ஸ்பீல்பர்க் கருப்பர்களை மிக நுட்பமான வகையில், மிக மோசமாக சித்தரித்த Amistad பட ஸ்டில். டக்ளஸின் பிரதிக்கு அதைத் தேர்வு செய்திருப்பது பெரிய கொடுமை.
(பல்வேறு காரணங்களால் இக்கட்டுரையின் இறுதிப்பகுதியை எழுத முடியாமலேயே போய்விட்டது.)
பயன்பட்ட நூல்கள் மற்றும் காசட்டுகள்:
Lawrence Venuti, The Translatior’s Invisibility – A History of Translation, Routledge, New York, 1995.
Susan Bassnet, Translation Studies, Roudledge, New York, 1991.
Henry Louis Gates, Jr., Figures in Black: Words, Signs and The “Racial” Self, Oxford University Press, New York, 1987.
Henry Louis Gates, Jr. and Nellie Y. McKay (eds) The Norton Anthology of African American Literature, W. W. Norton & Company, New York, 1997.
இசை ஞானி இளையராஜா, கரகாட்டக்காரன், Echo Recording Co., 1989.
ராஜேஸ்வர ராவ், மிஸ்ஸியம்மா, HMV, 1988.