தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 7

கிரேக்கத் தத்துவவாதிகள் முன்மொழிந்ததற்கு மறுப்பாக, எதிமறையாகச் சொல்வதென்றால், தத்துவத்தின் பணி இறைவனை தியானிப்பதல்ல; இறவாப்புகழ் நோக்கிய முயற்சியுமல்ல. நிகழ்கால சமூகத்தை விளக்கிக் கொண்டிருப்பதுமல்ல.

அரசியல் என்பது அடிமைகளின் உழைப்பின்மீது கட்டமைத்த, மற்றவர்களையும், பெண்களையும் விலக்கி வைத்த, நிகழ்த்துதல் வடிவிலான நடைமுறையும் அல்ல.

கலைஞர்கள் நாடுகடத்தப்பட வேண்டியர்கள் அல்லர். கலை நடவடிக்கை உழைப்பு நடவடிக்கையோடு ஒப்பிடக்கூடியதும் அல்ல.

இம்மூன்று புலங்களையும் படிநிலை வரிசையில் வைக்கவும் இயலாது.

பிரபஞ்சத்திற்கும் மானுட வாழ்விற்கும் இறுதியான உறுதியான அர்த்தம் எதுவும் இல்லை என்பதை ஒப்புக்கொண்டு வாழத்தலைப்பட்டிருக்கும் இன்றைய உலகில், மானுடப் பிறவிக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசம்தான் என்ன என்ற கேள்விக்கு இன்னமும் நியாயம் இருக்கிறது. மனிதன் தன் புறச்சூழலோடு ஆக்கப்பூர்வமான வினை புரிபவன். கலை நடவடிக்கை என்பது அதைப் பல்வேறு காலகட்டங்களிலும் ஊடறுத்துச் சென்ற/செல்லும் பல்வேறு கருத்தியல்களையும் மீறி இலக்குகள் அற்ற ஆக்கப்பூர்வமான வினையாகவே இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டுதான் “நமது மதம், அறம், தத்துவம் அனைத்தும் மனித சீரழிவின் வடிவங்கள். இதன் எதிர் இயக்கம்: கலை” என்று முன்மொழிந்தான் நீட்ஷே.

கிரேக்கத் தத்துவம் அரசியல் புலத்திற்குரியதாக வரையறுத்த praxis நிகழ்த்துதல் என்ற பொருளில் உண்மையில் கலையின் உள்ளார்ந்த சாத்தியப்பாடே. கிரேக்கத் துன்பியல் நாடகங்களுமே இத்தகைய நிகழ்த்துதல்களாகவே இருந்தன. என்றாலும், அரசியலற்ற நிகழ்த்துதல் என்ற வெட்டிப் பேச்சும் ஆபத்தானதே என்பதை விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

கிரேக்கத் தத்துவவாதிகள் முன்வைத்த அரசியல் நடைமுறையும், கிரேக்கத் துன்பியல் நாடகங்களுமே, பெண்களையும் அடிமைகளையும் மற்றவர்களையும் விலக்கி வைத்த நிகழ்த்துதல்கள் என்கிற விமர்சனப் பார்வை, அத்தகைய விலக்கி வைத்தல்கள் அற்ற, அதிகாரத்தின் மறு உற்பத்தியாக அமைந்துவிடாத கலையை நிகழ்த்துதலாக நாம் எப்படி உருவாக்கப் போகிறோம் என்ற கேள்வியையே முன்வைக்கிறது.

தத்துவமும் நடைமுறையும் கலையின் இந்த அம்சத்தை – நிகழ்த்துதலை – கிரகித்துக் கொள்ள வேண்டும். மூன்றுமே காலத்திற்கொவ்வாத (untimely) நிகழ்த்துதல்களாக இனி அமைய வேண்டும்.

நிகழ்கால சமூகத்தில் கருக்கொண்டுள்ள சாத்தியப்பாடுகளைக் ( virtual possibilities) கண்டுணர்ந்து, இறுக்கமற்ற கருதுகோள்களை (concepts) மிதக்கவிடும் நிகழ்த்துதலாக தத்துவமும், அதே சாத்தியப்பாடுகளை உணர்வுத் தளத்தில் பரவவிடுவதாக கலையும் இருக்க வேண்டும்.

நீட்ஷே, காஃப்கா, ஜார்ஜ் ஆர்வெல் போன்றோர் (மற்றும் பலர்) இதை நிகழ்த்திக் காட்டியவர்கள் என்று சொல்லலாம்.

“இனிவரும் இரண்டு நூற்றாண்டுகளின் வரலாற்றைச் சொல்லப் போகிறேன்,” என்று தொடங்குவான் நீட்ஷே. பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஐரோப்பாவை ஆட்டி வைக்கப்போகிற பாசிசத்தை, சர்வ வியாபகமான அதிகாரத்தை விசாரணை – யில் முன்னுணர்ந்து விவரித்துக் காட்டினான் காஃப்கா. இருபது ஆண்டுகளில் மேற்கத்திய முதலாளிய சமூகம் எடுக்க இருந்த பரிமாணத்தை “கண்காணிப்பு மயமான சமூகத்தை” தனது 1984 நாவலில் விவரித்தார் ஆர்வெல்.

ஒரு மதக்கறை படிந்த சொல்லைப் பயன்படுத்திச் சொல்வதென்றால், எதிர்காலத்தை முன்னுணர்ந்து சொன்ன தீர்க்க தரிசிகள் இவர்கள்.

நடைமுறை அரசியல்வாதிகள், களப்பணியாளர்கள் முன்னுள்ள சவாலும் இதுதான். நிகழ்கால சமூகப் பிரச்சினைகளுக்கு எதிர்வினை ஆற்றிக் கொண்டிருப்பது மட்டுமே களப்பணி, அரசியல் அல்ல. அதிகாரத்தை எதிர்ப்பதே புரட்சிகரமான அரசியல் அல்ல. அதிகாரம் தனது எதிரிகளை எப்போதும் தானே உருவாக்கிக் கொள்கிறது. அதன் இருப்பிற்கு எதிர்ப்புகள் வடிகால்கள் (safety valves) ஆவதும் உண்டு.

நடைமுறை என்பதன் முன்னுள்ள சவால், அதிகாரக் கட்டமைவிலிருந்து விலகி நின்று, அதிகாரப் படிநிலை வரிசையற்ற, மாற்று சமூக அமைவுகளை, வாழ்விற்கான சாத்தியப்பாடுகளை உருவாக்குவது எப்படி என்பதே. அத்தகைய நடைமுறைகளை வடித்துக் கொள்வதே. (Hakim Bey முன் மொழியும் temporary autonomous zones எப்படியானவை என்பதையாவது நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்).

நடைமுறையை தீர்மானகரமான இலக்குகள் (அதாவது, ஆதியிலே சொர்க்கம் மண்ணிலே இருந்தது, இடையில் சீரழிந்தது, மீண்டும் தேவனுடைய சாம்ராஜ்யத்தை மண்ணிலே கொண்டு வருவோம் என்ற வகையிலான இலக்குகள்; தத்துவத்தில் இதை teleology என்று சொல்வர். மார்க்சியம் இப்படியாக விளக்கப்பட்டதும் ஒரு பிரச்சினை) இன்றி நிகழ்த்திக் காட்டுவதே சவால். அதுவே நிகழ் கால சமூக அமைவில் கருக்கொண்டுள்ள சாத்தியப்பாடுகளை வெளிகொண்டு வருவதாக இருக்கும்.

இதை மறுத்துவிட்டு அல்லது இதற்காக மூளையைக் கசக்கிக் கொள்ளச் சோம்பல்பட்டு, இன்றைய சூழலுக்கான எனது எதிர்வினை என்று நியாயம் சொல்லிக் கொண்டு, எதிர் – அரசியலை மட்டுமே செய்து கொண்டிருப்பது, மறைமுகமான, நுட்பமான சுயஅரிப்புச் சமாதானமே அன்றி வேறல்ல.

(முற்றும்.)

குறிப்பு:

இவ்விஷயங்கள் குறித்து மேலும் ஆழமாக விளங்கிக் கொள்ள விரும்புவோர் வாசிக்க வேண்டிய நூல்கள் சில:

Bernstein, J. Richard Praxis and Action. The University of Pennsylvania Press, 1971.

Bridges, Thomas The Culture of Citizenship – Inventing Postmodern Civic Culture. State University of New York, 1994.

Burgass, Catherine Challenging Theory: Discipline After Deconstruction. Ashgate, 1999.

Carse, P. James Finite and Infinite Games: A Vision of Life as Play and Possibility. Ballantine Books, New York, 1986.

Kintz, Linda The Subject’s Tragedy – Political Poetics, Feminist Theory and Drama. The University of Michigan Press, 1992.

Kojeve, Alexandre Introdution to the Reading of Hegel. Cornell University Press, Ithaca, 1969.

Lobkowicz, Nicholos Theory and Practice: History of a concept from Aristotle to Marx. University of Dame Press, Notre Dame, 1967.

Osborn, Timothy V. Kaufman Politics/Sense/Experience: A pragmatic inquiry into the promise of democracy. Cornell University Press, Ithaca, 1991.

Tinder, Glenn Community: Reflections on a Tragic Ideal. Louisiana State University Press, Bato Rouge, 1980.

சாத்தியமானால் நீட்ஷேவின் நூல்கள் அனைத்தையும், அல்லது குறைந்தபட்சமாக அவருடைய The Birth of Tragedy – ஐ வாசிப்பது அவசியம்.

தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 6

இது தொடர்பாக இரண்டு முக்கிய புள்ளிகளை மட்டும் இங்கு குறித்துக் கொள்ளலாம். முதலாவது, கி. பி. 1500 – களின் வாக்கில், ஐரோப்பிய நாகரீகத்தின் கலாச்சார மையம், மத்தியத் தரைக்கடல் பகுதியிலிருந்து மேற்கு ஐரோப்பாவை – குறிப்பாக ஃப்ரான்ஸ் – நோக்கி நகர்ந்தது. மேற்கு ஐரோப்பியப் பகுதிகளில் இரும்புப் படிமங்கள் நிறைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

வாழ்க்கை நிலைமைகளைப் பொருத்த வரையில், கி. பி. ஆறாம் நூற்றாண்டின் ஐரோப்பா, கிறித்து பிறப்பதற்கு முந்தைய சில நூற்றாண்டுகளைக் காட்டிலும் பெரிதாக வித்தியாசப்பட்டிருக்கவில்லை. இரும்பு கிடைப்பதே அரிதாக, விலையுயர்ந்த ஒரு பொருளாக, போர்க் கருவிகளுக்கும், மரம் மற்றும் பிற பொருட்களைப் பிளப்பதற்கு பயன்படுவதற்கும் உரிய பொருளாக இருந்தவரையில், பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை.

ஆனால், மேற்கு ஐரோப்பாவின் இரும்புச் சுரங்கங்கள் திறக்கப்பட்டது, பெரும் மாற்றங்களை விளைவித்த (மெதுவாகத்தான் என்றாலும்), குறிப்பிடத்தக்க மாற்றங்கள், தொழில் நுப்பத்தில் நிகழத் தொடங்கின. கிரேக்க காலம் தொட்டு வழக்கத்தில் இருந்துவந்த கீறும் கலப்பை(scratch plough)க்குப் பதிலாக கனத்த கலப்பை (heavy plough) ஆறாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பா முழுக்க உடனே புழக்கத்திற்கு வந்தது. ஒன்பதாம் நூற்றாண்டளவில் சேணமும், லாடமும் வடிவமைக்கப்பட்டபோது, எருதை விடவும் விரைவாகவும் கடுமையாகவும் உழைக்கக்கூடிய குதிரையை விவசாயிகள் இன்னும் கணிசமாகவும் முறையாகவும் பயன்படுத்த உதவியாக இருந்தது.

குதிரையின் வேகம் பயணத்தை விரைவாக்கியதால், விவசாயிகள் தங்கள் உழுநிலங்களிலிருந்து தொலைவில் வசிக்கவும், இதனால் நகரங்களையொத்த வாழ்நிலை சாத்தியமான கிராமப் பகுதிகள் உருவாவதும், பொதுவான செல்வப் பெருக்கமும் எழுந்தது. எட்டாம் நூற்றாண்டிலேயே அறியப்பட்டிருந்த சுழற்சிமுறை விவசாயம் பதினோராம் நூற்றாண்டளவில் முன்னேற்றமடைந்ததன் விளைவாக, விவசாய நிலங்களின் வளமும் உற்பத்தியும் கூடியது.

எல்லாவற்றுக்கும் மேலாக, காற்றாலைகள் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் மாற்றங்களை விளைவித்தது. பதினான்காம் நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பா எங்கும் காற்றாலைகள் பரவிவிட்டிருந்ததன. தோல் பதனிடுவது, சலவை செய்வது, தாதுக்களைப் பிரிப்பது, உலைகளுக்கு காற்றூதும் துருத்தியாக, வைரங்களை பட்டை தீட்ட என்று வியக்கத்தக்க, எண்ணற்ற விதங்களில் அது பயன்படுத்தப்பட்டது.

இந்த இயந்திரமயமாக்கல், உற்பத்தியில் குறிப்பிடத்தக்களவு பெருக்கத்தைக் கொண்டுவந்தது என்பதோடு மட்டுமல்லாமல், மெதுமெதுவாக, தொழில் நுட்பங்களை செம்மைப்படுத்தவும் தூண்டியது. பதிமூன்றாம் நூற்றாண்டிலேயே தொழில்களில் உள்ள நடைமுறைப் பிரச்சினைகளை செய்து பார்த்து (trial and error) தீர்த்துக் கொள்ளும் பழக்கத்திற்குப் பதிலாக, பொது விதிகள் குறித்த ஆராய்ச்சி மீதும் முறைமைகள் (methods) மீதும் புதிய ஆர்வம் எழுந்தது. கைவினைஞர்கள் மட்டுமல்லாது, அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இதில் ஆர்வம் கொள்ள ஆரம்பித்தனர்.

கலைஞர்கள் என்றதும் மேற்சொன்ன மாற்றங்களின் துணைவிளைவான, இத்தாலியை மையமாகக் கொண்டு எழுந்த மறுமலர்ச்சி (Renaissance) என்ற நிகழ்வைப் பற்றி குறிப்பிட்டாக வேண்டும். கி. பி. 800 – ஆம் ஆண்டு வரையிலும்கூட. ஐரோப்பாவின் கலாச்சார மையமாக இத்தாலியே இருந்தது. மேற்கு ஐரோப்பாவில் இரும்புச்செல்வம் நிறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, ஃப்ரான்ஸ் கலாச்சார மையமாக மாறியதும், இத்தாலியைச் சேர்ந்த அறிவுஜீவிகளும் கலைஞர்களும் இழந்த பொற்காலத்தை மீட்டெடுக்கும் ஏக்கத்திற்கு ஆளானதில் உருவானதே மறுமலர்ச்சி என்று சொல்லலாம். இவர்களது மாபெரும் கலை – அறிவுச் சோதனைகள் பெரும்பாலும், மேற்சொன்ன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கற்பனையில் நிகழ்த்திக் காட்டியவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதிய நிலப்பகுதிகள், கடல்கள், இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டது இரண்டாவது முக்கியமான புள்ளி. இதன் விளைவாக, ஏராளமான செல்வங்கள் -பொருள், அறிவு இரண்டும் – ஐரோப்பாவை நோக்கிக் குவிந்தது நாம் அறிந்த வரலாறே.

தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய நிலப்பகுதிகளின் கண்டுபிடிப்பு, இத்தாலிய மறுமலர்ச்சிக் கலைஞர்களின் கலை – தொழில்நுட்பப் பரிசோதனைகள், இவற்றோடு பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கம் முதலே நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்த ஒரே சமூகக் குழு கைவினைஞர்கள் மட்டுமே. பதிமூன்றாம் நூற்றாண்டளவில், மத்தியகால ஐரோப்பிய சமூக அதிகார அமைவு ஆட்டம் கண்டிருந்த சூழ்நிலையில், அதன் மதிப்பீடுகள் தகர்ந்திருந்த நிலையில், தனக்கு விதிக்கப்பட்டிருந்த சமூக நிலையிலிருந்து வெளியே வந்து, செல்வத்தைச் சேகரிக்கவும், புதியனவற்றைத் தேடுவதும் அதற்குச் சாத்தியமானது. தமது முயற்சிகளை, கண்டுபிடிப்புகளை நியாயப்படுத்த, அவையனைத்தும் பொது நன்மைக்கு, ‘மனிதகுல மேம்பாட்டிற்கு’ உதவியாக இருக்கின்றன என்பதே அவர்கள் முன்வைத்த வாதம். இதனடியாகப் பிறந்ததே மனிதநேயவாதம் (humanism), மனிதகுல முன்னேற்றம் என்ற கருதுகோள்கள்.

பேகன், “அறிவு பயனுள்ள பொருட்களை உருவாக்குவதாக இருக்கவேண்டும்,” என்று அறிவுறுத்தியபோது, இந்தக் கலாச்சார சூழலையே பிரதிபலித்தார் என்று சொல்லலாம்.

மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படாத ஆகாயக் கோட்டைகளை, அருவமான கருதுகோள்களை கட்டிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக இனி அறிவின் பணி, தத்துவத்தின் பணி, விஞ்ஞானத்தின் பணி, நடைமுறை சார்ந்ததாக, அதாவது making என்ற புலத்திற்கானதாக, தொழில்நுட்பமாக மாற்றத்தகுந்ததாக, ‘மனிதகுலத்திற்கு பயன்படக்கூடிய’ தொழில்களை உருவாக்க உதவுவதாக மாறிப்போனது.

கிரேக்கத் தத்துவவாதிகள் முன்மொழிந்ததிலிருந்து முற்றிலும் விலகி, தத்துவம் தொழிற்படுத்தலுக்கானதாகியது; நடைமுறை என்பதும் doing – லிருந்து making – ற்குச் சரிந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், காரல் மார்க்ஸ் praxis என்ற “practical – critical activity – ஐ முன்மொழிந்தபோது இந்த நீண்ட வரலாற்றையும் நுட்பங்களையும் புரியாமலேயே, மேற்சொன்ன முதலாளியக் கருத்தியலின் தொடர்ச்சியாகவே வைத்தார். அதோடு மட்டுமல்லாமல் உழைப்பு நடவடிக்கையே praxis என்று உழைப்பை எல்லாவற்றுக்கும் மேலானதாக, மனிதனின் சாராம்சமான பண்பாகவே ஏற்றி வைத்தார். மனிதக் குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றதே உழைப்பினால்தான் என்று பிற்பாடு எங்கெல்ஸ் இதை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் சென்றார். இதன் அடுத்தகட்டமாக லெனினும், அவரது வழிவந்தவர்களும் கட்சி சொல்படி நடந்து கொள்வது மட்டுமே நடைமுறை என்று சீரழித்த கதையெல்லாம் இன்று ஓரளவு பொது அறிவு சாமாச்சாரங்கள்.

நம்முன் இருக்கும் கேள்வி, தத்துவம் – நடைமுறை – கலை என்று சொல்லப்படுபவற்றுக்கு, இனி என்ன பொருள் கொள்ளலாம் என்பதே.

(தொடரும் … )

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.

தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 5

முதல் முக்கிய திருப்புமுனையாக, கி. பி. நான்காம் நூற்றாண்டளவில் எழுந்த நவ – ப்ளாட்டோனிசத்தைச் சொல்லலாம். இதில்தான் சிந்தனை என்பது இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று, “எதையும் காணாத ஒரு காணல்,” ஒரு “தொடுதல்” அல்லது “பிரசன்னம்” என்று வர்ணிக்கப்படுகிற “தியானம்”. மற்றது, நாம் இன்று கோட்பாட்டு அறிவு (theoretical knowledge) என்று சொல்கிற தர்க்கரீதியான சிந்தனை.

சிந்தனையை அதாவது தத்துவார்த்த சிந்தனையை இவ்வாறு இரண்டு வகையாகப் பிரித்து, ஒரு புதிய வகைப்பட்ட சிந்தனை முறையை – discursive thought – ஐக் கண்டுபிடித்ததானது, நடைமுறைக்கு (praxis) அதனளவில் இருந்த நியாயத்தை இழக்கச் செய்தது. எல்லா நடைமுறைச் செயல்பாடுகளும் இறைவனோடு ஒன்றுகலப்பதற்கான பாதையை நோக்கிச் செல்லும் வழியில், தயார்படுத்திக் கொள்ளுதல் அல்லது தூய்மைப்படுத்திக் கொள்ளுதல் என்றானது.

அடுத்த முக்கிய தாவல், கிறித்துவ இறையியலுக்குள் நிகழ்ந்தது. கி. பி மூன்று, நான்காம் நூற்றாண்டுகள் தொடங்கி, ஆரம்பகால கிறித்துவ பாதிரிமார்கள் “இறைவனை அறிதலுக்குத்” தந்த முக்கியத்துவம் மெல்லக் குறைந்து, கி. பி. பதிமூன்றாம் நூற்றாண்டளவில் ஈகைப்பண்பு (charity) என்பதை நோக்கித் திரும்பியது. இந்நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த இறையியலாளர்களுள் ஒருவரான் டன்ஸ் ஸ்காட்டஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு praxis என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்பினார்.

அரிஸ்டாட்டில், நவ – ப்ளாட்டோனியர்களின் விளக்கங்களிலிருந்து விலகி, இறையியல் நோக்கில், “விருப்புறுதியின் வினைப்பாடுகள்” (acts of will) என்றார். எல்லாச் செயல்பாடுகளிலிருந்தும் விலகி நின்று இறைவனை அறிவதற்கான ”தியானத்தில்” இருப்பதைவிட செயலில் இறங்குவது – நலிந்தோர்க்கு சேவை செய்வது, ஈகையுடன் நடந்துகொள்வது – என்பதே உயர்ந்த, சிறந்த வாழ்க்கை, அதுவே praxis என்று விளக்கினார். இறைவனையே “doable knowable” என்றார். Praxis குறித்த அரிஸ்டாட்டிலின் விளக்கத்திலிருந்து இது முற்றிலும் மாறுபட்டதாக, விலகியதாக இருந்து ஒருபுறமிருக்க, அதுவரையிலும் தத்துவத்திற்குத் தரப்பட்டுவந்த அழுத்தம் இப்போது முதன்முறையாக Praxis – ற்கு, நடைமுறைக்குத் திரும்பியது.

அதேசமயம், அதே காலகட்டத்தில் வாழ்ந்த இன்னொரு இறையியலாளரான தாமஸ் அக்வினாஸ், தத்துவம் என்பதில் உண்டாக்கிய பிரிவினையும் முக்கியமான ஒன்று. மனிதனின் “இயல்பான இலக்கு” இறைவனைச் சேர்வதே என்றாலும், அதற்கான சரியான வழி எது என்பது பிரச்சினையான ஒன்று. இந்தச் சரியான வழி, நன்னடத்தை – அறவியல் குறித்த பிரச்சினை. ஆகையால், ”இயல்பான இலக்கு” பற்றிய சிந்தனையாக, அதாவது இறைவனைப் பற்றிய சிந்தனையாக contemplation – ம் theoretical knowledge – ம் இருக்கும் அதே நேரத்தில், இறைவனை அடைவதற்குரிய சரியான வழியைத் தீர்மானிப்பதற்கான, நடைமுறைக்கு உதவக்கூடிய, நடைமுறையில் பின்பற்றத்தக்க சிந்தனையாக practical knowledge என்று ஒன்று வேண்டும் என்பதாக அவர் முன்வைத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் அரிஸ்டாட்டிலின் மூன்றாவது பகுப்பான poiesis-ற்கு (making – தொழிற்படுதல்) என்ன நிகழ்ந்தது என்பதைப் பார்க்க வேண்டும். கலைகளைப் பொருத்தவரையில் இறைத்துதியாக மத்தியகாலத்தின் இறுதிவரை பயணித்தது வரலாறு. ஆனால், கைவினைஞன் – artisan இப்போது புதிய அவதாரம் எடுக்கிறான். மத்தியகால கிறித்துவத்தில், இறைவனே ஒரு மாபெரும் கைவினைஞனாக, படைப்பாளியாக, பிரபஞ்சத்தையும், இந்தப் பூமியையும், இதிலுள்ள சகல உயிர்களையும், மனிதனையும் படைத்தவனாக சித்தரிக்கப்படுகிறார். அக்வினாஸ் நடைமுறைக்கு எடுத்துக்காட்டாக பேசும் இடங்களில் கைவினைஞனையே எடுத்துக்கொண்டு பேசுகிறார்.

அறவியலையும் *8 தொழில்நுட்பத்தையும் இவ்வாறு இணைத்ததானது, இயற்கைப் பொருட்களின் இயல்பையும் அவற்றின் சேர்க்கை நுட்பங்களையும் நன்கு அறிந்து தெளிந்த ஒரு தேர்ந்த கைவினைஞன் அவற்றை விதிகளுக்குட்பட்டு தன் விருப்பப்படி மாற்றியமைப்பதைப்போல ( making – இல் ஈடுபடுவதைப் போல), சமூக விதிகளை அறிந்த அரசியல் அறிஞ்ன், களப்பணியாளன், அச்மூகத்தை, அதன் தவிர்க்க இயலாத விதிகளுக்கேற்ப மாற்றியமைப்பதே அரசியல், நடைமுறை; தத்துவத்தின், கோட்பாட்டின் பணி அத்தகைய விதிகளைக் கண்டுணர்ந்து சொல்வது மட்டுமே என்ற, கடந்த இருநூறு ஆண்டுகளில் பெரும் செல்வாக்கு வகித்த கருத்தியலை நோக்கி நகர்வதில் முக்கிய பங்காற்றியது.

இந்த திருப்புமுனையின் தொடர்ச்சியாகவே, “அறிவு, பயனுள்ள பொருட்களை உருவாக்குவதாக இருக்க வேண்டும்,” என்று பதினேழாம் நூற்றாண்டில் ஃப்ரான்ஸில் பேகன் அறிவித்தார் என்று சொல்லலாம். கிரேக்க நாகரீகத்தின் வீழ்ச்சியிலிருந்து மத்திய காலத்தின் இறுதிவரை மிகமிக மெதுவாக வள்ர்ந்து கொண்டிருந்த அறிவியல் – தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும்கூட தத்துவம் – நடைமுறை குறித்த பார்வைகளில் விளைந்த இந்த மாற்றத்திற்கு இன்னொரு முக்கியமான காரணம்.

குறிப்புகள்:

*8) அரசியல் அடிப்படையில் ஒரு அறவியல் பிரச்சினையே. அரசியலின் முக்கிய பிரச்சினை நீதி. நீதி என்பது நியாயமாக நடந்துகொள்வது – justice as fairness. இது அடிப்படையில் அறவியல் குறித்த ஒரு பிரச்சினைப்பாடு என்பதால் அரசியல் அறவியலுக்குட்பட்ட ஒரு கேள்வி என்று சொல்லலாம்.

(தொடரும் …)

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.

தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 4

இதில் உள்ள முரண்நகை என்னவென்றால், அரிஸ்டாட்டில் இதை முன்மொழிந்த காலப்பகுதியில், கிரேக்க நகரக் குடியரசுகள் தமது அந்திமக் காலத்தில் இருந்தன. மாசிடோனியப் பேரரசு, சுதந்திரமான நகரக் குடியரசுகளை, ஒவ்வொன்றாக விழுங்கிக் கொண்டிருந்தது. அலெக்சாண்டரின் தந்தை பிலிப், பாதிக்கும் மேற்பட்ட கிரேக்கத்தை தனது ஆளுகையின்கீழ் கொண்டு வந்துவிட்டிருந்தார். அரிஸ்டாட்டிலின் கண்முன்பாகவே, அலெக்ஸாண்டர் அதை முடித்து வைத்தான். Praxis என்ற வாழ்க்கைமுறை அவர் கண்முன்பாகவே மறைந்துபோனது.

இந்த இடத்தில் poiesis என்ற சொல்லால் குறிக்கப்பட்ட வாழ்க்கைமுறையை சற்று கவனிப்பது தேவையாகிறது. முன்பு விளக்கியது போன்று, அது making – தொழிற்படுதல்; அதாவது, கைவினைஞர்கள், கலைஞர்கள் ஆகியோரின் வாழ்க்கையைச் சுட்டிய ஒன்று. கைவினைஞர்களைப் பொறுத்தவரையில், அவர்களது வாழ்க்கை உடல் உழைப்பைக் கோருவது. அதனால், அவர்கள் கிரேக்க நகர அரசுகளின் குடிமக்களாகும் தகுதி மறுக்கப்பட்டனர். கலைஞர்களைப் பொறுத்தவரையில், ப்ளேட்டோ கவிஞர்களை (poietai) தன் கற்பனைக் குடியரசிலிருந்து நாடு கடத்தியது புகழ்பெற்ற கதை. கவிஞர்கள் உடல் உழைப்பில் ஈடுபடாதவர்கள் என்றபோதிலும் ப்ளேட்டோ அவர்களை ஏன் நாடு கடத்த வேண்டும்?

ஒரு தத்துவவாதி அழகில் சிறந்த பொருட்களை, அதாவது, கடவுளின் நமது கண்களுக்குப் புலப்படும் அந்த ஆதியும் அந்தமும் இல்லாப் பொருட்களை (eternal divine objects) தியானிப்பவன். அதுவே அவனை கடவுள் தன்மையை நோக்கி இட்டுச் செல்லும். கவிஞனோ, நாளும் தோன்றி மறையும் இவ்வுலகப் பொருட்களை – வடிவங்களை மொழியில் புனைந்து கொண்டே இருப்பவன். இதனால், தத்துவவாதி முன்மொழியும் விடுதலைக்குத் தடையாக இருப்பவன்; அதுதான் காரணம். கைவினைஞர்களும், இதேபோன்று வடிவங்களை வனைபவர்கள் என்ற ஒப்புமையைக் கவனித்தால், அவர்கள் ஒதுக்கப்பட்டதற்கு அது மேலும் ஒரு காரணமாவதும் புலப்படும்.

இதில் உள்ள வன்முறை ஏதோ விலக்கிவைத்தல் என்பதன்று. கிரேக்கத் தத்துவம் அதன் ஆரம்பம் முதலே poiesis என்ற வாழ்க்கை முறையையே ஆதாரமாகக் கொண்டு எழுந்த ஒன்று. உடல் உழைப்பில் ஈடுபட்டிருந்தவர்களின் உழைப்பைச் சுரண்டுவதால் கிடைத்த ஓய்விலிருந்தே அவர்களது வாழ்க்கை இருந்தது என்ற அர்த்தத்தில் மட்டுமன்று. சாக்ரடீசிற்கு முந்தைய, ஆரம்பகால கிரேக்கத் தத்துவவாதிகளின் மொழியும் உள்ளடக்கமும், விவசாயம் சார்ந்த உழைப்புச் செயல்பாடுகளை உருவகப்படுத்தியும், சாக்ரடீஸ் தொடங்கி (அவருக்கு சற்றே முன்பிருந்தவர்கள்கூட) கைவினைத் தொழில் சார்ந்த செயல்பாடுகளை உருவகப்படுத்தியும் அமைந்திருப்பதைக் காட்டமுடியும்.

சுருக்கமாகக் கூறினால், அன்றாட உழைப்பு நடவடிக்கைகளைக் கவனித்து, அவற்றிலிருந்து அருவமான கருதுகோள்களுக்கு வந்தடைந்ததோடல்லாமல், அவற்றை உருவகங்களாகவும் பயன்படுத்திக்கொண்ட கிரேக்கத் தத்துவம், தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்ள, அந்த உழைப்பு நடவடிக்கைகளையே இழிவுபடுத்தி கடைக்கோடிக்கு விலக்கியும் வைத்தது.

கவிஞர்களை விலக்கி வைக்க அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. தத்துவத்தின் தோற்றத்திற்கு முன்பாக, கிரேக்க உயர்குடியினரின் இருத்தலியல் நெருக்கடிக்கு வடிகாலாக இருந்தது கிரேக்கத் துன்பியல் நாடகம் (tragedy).*7

கிரேக்க உயர்குடியினரின் வாழ்வையும் இருத்தலியல் நெருக்கடிகளையும் கருப்பொருளாகக் கொண்டு, புராணங்களையும் நாட்டுப்புறக் கதைகளையும் பாடி நடித்துக்காட்டி அவர்களுக்கு இருத்தலியல் திருப்தியை வழங்கிக் கொண்டிருந்த அவ்வடிவத்தின் நியாயப்பாடு, கிரேக்க ஜனநாயக நகர அரசுகளின் (உயர் குடியினர் அல்லாத வெகுமக்களின்) எழுச்சி, கைவினைத் தொழில்களின் வளர்ச்சி, அதற்குக் காரணமாக இருந்த விஞ்ஞான அறிவின் வளர்ச்சி ஆகியவற்றால் மெல்லச் சரிந்து கொண்டிருந்தது. அச்சூழலில், புதிய விஞ்ஞான அறிவின் வளர்ச்சியை – அதற்குக் காரணமாக இருந்த கைவினைத் தொழில்களை ஒதுக்கிவிட்டு – கையிலெடுத்துக்கொண்டு, சரிந்து கொண்டிருந்த உயர்குடியினரின் இருப்பிற்கு, புதிய சூழலையொட்டிய புதிய நியாயப்பாடுகளை வழங்க கிரேக்கத் தத்துவம் முன்வந்தது.

விஞ்ஞான அறிவின் வளர்ச்சியின் காரணமாக, கிரேக்கப் புராண தெய்வங்கள், அவை மானுட வாழ்வில் குறிக்கிடுவது போன்ற நம்பிக்கைகள் மறைந்து கொண்டிருந்த சூழலில், ஆதியும் அந்தமும் இல்லாத, பெயரில்லாத, பெயரிட முடியாத ஒரே தெய்வத்தை கிரேக்கத் தத்துவவாதிகள் மும்மொழிந்தனர். புராணங்களையும் பல்தெய்வ வாழிபாட்டையும் இன்னமும் முன்வைத்துக் கொண்டிருந்த துன்பியல் நாடகங்கள் இதனால் அதன் இயல்பான தாக்குதல் இலக்காயின. இந்தத் தாக்குதலில் தவிர்க்க இயலாமல் சிக்கிக் கொண்டவர்கள் அவற்றின் ஆசிரியர்கள் – கவிஞர்கள்.

கலைஞர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் அரசியல்வாதிகளும் கோட்பாட்டாளர்களும்; கோட்பாட்டாளர்களை, அரசியல்வாதிகளை வெறுப்புடன் புறந்தள்ளும் கலைஞர்களும் என்று இந்தப் பிரச்சினை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கிரேக்கச் சூழலும் அதனடியாக எழுந்த தத்துவமும் வடித்துத் தந்த இப்பிரச்சினைக்கு குறைந்தபட்சம் மார்க்சியத்தின் வழியாக நாமும் வாரிசுகளாகியிருக்கிறோம். இன்று, அது நம் முன் எடுத்திருக்கும் வடிவத்தை எதிர்கொள்ள, கடந்த ஈராயிரம் ஆண்டுகளில் இப்பிரச்சினைப்பாட்டில் நிகழ்ந்த சில முக்கிய திருப்புமுனைகளை மிகச் சுருக்கமாகவேனும் பார்ப்பது அவசியம்.

குறிப்புகள்:

*7) கிரேக்கத் துன்பியல் நாடகங்களின் நிகழ்த்துதலிலும் பெண்கள் விலக்கி வைக்கப்பட்டனர். பெண்களின் பாத்திரங்களில் ஆண்களே நடித்தனர். இந்நாடகங்கள் ‘வயதுக்கு வந்த’ ஆண்களை குடிமக்களாக பொறுப்பேற்கச் செய்யும் ஒரு சடங்காகவே நிகழ்த்தப்பட்டன என்ற ஒரு கருத்தும் இன்று முன்வைக்கப்படுகிறது.

(தொடரும் … )

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.

தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 3

ஆனால், பகுத்தறிவு என்பதை கிரேக்கர்கள் நாம் இன்று பார்ப்பதைப்போல ஒரு உறுப்பு (மூளை) சம்பந்தப்பட்டதாகப் பார்க்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், பேச்சும் பகுத்தறிவும் அரசியல் நடைமுறையின் – தமது கருத்துக்களை தெளிவாக எடுத்துச் சொல்லி, விவாதித்து, நகர அரசின் பொது நன்மைக்கு உகந்த முடிவுகளை எடுப்பது – பிரிக்க முடியாத அம்சங்கள். அடிமைகள், கிரேக்கரல்லாதவர்கள் இருவரிடத்திலுமே இத்தகைய நடைமுறை இல்லை என்பதாலேயே அவர்கள் மனிதர்கள் அல்லர்; ஆகையால், கிரேக்க நகரங்களின் குடிகளாகும் தகுதியும் அற்றவர்கள். *3



கிரேக்கர்களின் பார்வையில், மனிதனாக இருப்பது என்பதே, கிரேக்க நகர அரசுகளின் குடிமக்களாக இருப்பது என்பதுதான். குடிமக்களாக இருப்பது என்பது அதன் அரசியல் வாழ்வில் முழுமையாக பங்கெடுத்துக் கொள்வது. கிரேக்க (ஜனநாயக) நகர அரசுகள், குடிமக்கள் அனைவரையும் உறுப்பினராகக் கொண்ட, வழக்கமாக வருடத்திற்கு மூன்று முறை கூடிய ஒரு பேரவையால் நிர்வாகம் செய்யப்பட்டவை. இப்பேரவையல்லாது, ஒவ்வொரு வட்டத்திற்கும், இனக்குழுவிற்கும் (ஏதன்ஸ் நகரின் குடிமக்கள் நான்கு இனக்குழுக்களால் ஆனவர்க்ள்) தனித்தனியே நிர்வாக சபைகள் இருந்தன. இவை இன்னும் அதிகமுறை கூடியவை.

ஒவ்வொரு குடிமகனும், தனது வாழ்வில் குறைந்தது இருமுறையாவது ஆட்சிப்பேரவைக்குத் (senate) தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒருமுறை நீதிமன்றத்திற்கு ஜுரியாக தேர்ந்தெடுக்கப்படலாம்; வட்டங்கள், இனக்குழு சபைகளுக்கு பலநூறு குற்றவியல் நடுவர்களை நியமிக்க வேண்டிய தேவையும் இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒவ்வொரு குடிமகனும், ஆண்டு முழுக்க ஏதாவது ஒரு பொறுப்பில் இருந்தே ஆகவேண்டும் என்ற நிலைமை இருந்தது.*4



வேறுவகையில் சொல்வதென்றால், கிரேக்கர்களின் வாழ்க்கை, தம்மைத் தாமே நிர்வகித்துக் கொள்வதில், அரசியலிலேயே கழிந்தது என்று சொல்லலாம். இத்தகையதொரு வாழ்க்கை முறையையே கிரேக்கர்கள் praxis என்று அழைத்தனர். இதையே மிகச் சிறந்த வாழ்க்கை முறையாகவும் கருதினர். அவர்கள் அவ்வாறு கருதியதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

மேலே விவரித்தது போன்றதொரு வாழ்க்கைக்கு, குடிமக்கள் தமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றிற்காக உழைக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு சூழல் நிலவ வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனை. ஒட்டுமொத்த கிரேக்கப் பொருளாதாரமுமே அடிமைகளின் உழைப்பில் நின்றது என்ற வகையில் இது ஓரளவிற்கு நிறைவேற்றப்பட்டது என்பதும் உண்மை. மிகுந்த வறுமை நிலைமையில் இருந்தவர் என்று கருதப்பட்டவர்கூட ஒன்றிரண்டு அடிமைகளாவது வைத்திருந்தனர் என்ற நிலைமை இருந்தது. சில சந்தர்ப்பங்களில், வறுமை நிலையில் இருந்தவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு உதவியாக இருக்கும்பொருட்டு இழப்பீட்டுத் தொகைகளும்கூட வழங்கப்பட்டது.

என்றபோதிலும், கிரேக்கத்தில் ஜனநாயக நகர அரசுகள் செழித்தோங்கியிருந்த (கி. மு. 450 – 350) காலகட்டத்தில், ஒரு சிறு எண்ணிக்கையிலான மேட்டுக்குடியினரே நகரத்தின் மொத்த செல்வத்தையும் கைக்கொண்டிருந்தனர். நிலபுலன்களையும் மற்ற செல்வங்களையும் நிர்வகிக்க விசுவாசமான அடிமைகளை வைத்துவிட்டு, முழுநேர அரசியல்வாதிகளாக வாழ்வைக் கழித்தவர்கள் இவர்களைப் போன்ற மிகச் சிலரே என்று சொல்லலாம்.

என்றாலும், குடிமகனாக இருப்பது என்பது உயிர்வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளுக்காக உழைப்பது என்பதிலிருந்து விலகிய உயர்வான வாழ்க்கை என்று சொல்லப்பட்டதால்/புரிந்துகொள்ளப்பட்டதால் கையளிக்கப்பட்ட அவ்வாழ்வைத் தழுவிக் கொள்வதில் கிரேக்கர்கள் எந்தத் துன்பமும் காணவில்லை என்றே சொல்லலாம்.

இப்படியானதொரு சூழலில், கிரேக்கத் தத்துவவாதிகள் அதை விடவும் மேலானதொரு வாழ்க்கை என்று ஒன்றை முன்வைக்கின்றனர். அது – தத்துவவாதியாக இருப்பது. முன்னர் கண்டதுபோல் தத்துவம் என்பது “அழகில் சிறந்தவற்றைத் தியானிப்பது” என்று விளக்கினர். அவ்வாறு “தியானம்” செய்வதற்கு குடிமக்களின் அரசியல் வாழ்க்கைக்குத் தேவையானதைக் காட்டிலும் கூடுதலான ஓய்வு அவசியம் என்பது வெளிப்படை. ஒருவகையில் குடிமக்களின் praxis அலைக்கழிப்புகள் மிகுந்த ஒரு வாழ்க்கை என்பதை விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை. தத்துவவாதியின் வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டால் அந்த அலைக்கழிப்புகூட மோசமானது; முற்ற முழுதான ஓய்வும், அமைதியும் கோரும் ஒரு வாழ்க்கைமுறை.

மேலும், குடிமகனாக இருப்பது மனிதனாக – அதாவது மிருகத்திற்கும் கடவுள் தன்மைக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பது*5 ஆனால், தத்துவவாதியாவது மனிதனுக்கும் கடவுளுக்கும் இடைப்பட்ட நிலையை – கடவுள் தன்மையை நோக்கி நகர்வது என்றும் அவர்கள் விளக்கங்கள் தந்தனர்.

கடவுள் எந்தச் செயலிலும் ஈடுபடவேண்டிய அவசியம் இல்லாதவர்; எல்லையில்லாத ஓய்வில், நிரந்தரமான தியானத்தில் இருப்பவர். ஒரு தத்துவவாதியாக ஆவதன்மூலம், theoria – வில் ஈடுபடுவதன் மூலம், அதுபோன்றதொரு ஓய்வும் தியானமும் சாத்தியமாவதால் கடவுளின் நிலைக்கு நெருங்கிச் செல்லமுடியும் என்றும் விளக்கி, அத்தகைய வாழ்வையும், அதன் மூலம் தமது தேர்வையுமே நியாயப்படுத்திக் கொண்டனர் என்றும் சொல்லலாம்.

அதே நேரத்தில், கிரேக்கத் தத்துவவாதிகளால் praxis – ஐ முற்ற முழுதாகவும் நிராகரித்துவிட முடியவில்லை. கிரேக்க ஜனநாயக நகர அரசுகள், அவை கோரிய praxis என்ற வாழ்க்கைமுறை, இவை நிலவும் பட்சத்திலேயே theoria என்ற வாழ்க்கைமுறையும் ஒரு தத்துவவாதியின் இருப்புமே சாத்தியம் என்பதால், இவ்விரண்டிற்குமிடையில் ஒரு இணக்கத்தை உருவாக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அவர்கள் ஆளாயினர்.

முழுக்க முழுக்க ஒரு தத்துவவாதியாக மட்டுமே இருப்பது/வாழ்வது (பிதாகரஸ்) என்ற பார்வைக்குப் பதிலாக, ஒரு நல்ல அரசியல்வாதி தத்துவவாதியாகவும் இருக்கவேண்டும் என்ற பார்வையை வைத்தனர் (ப்ளாட்டோ/அரிஸ்டாட்டில்). இதன் உள்ளீடாக, praxis – theoria இரண்டும், மாறுபட்ட எதிரெதிரான வாழ்க்கைமுறைகள் என்ற கருத்து மறைந்து, சிறந்த வாழ்வின் பிரிக்க முடியாத இரு அம்சங்கள் என்ற கருத்து எழுந்தது.*6



குறிப்புகள்:

*3 அரசியலில் இருந்து, அதனால் குடிமக்கள் என்ற தகுதியிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட இன்னொரு தரப்பினர் பெண்கள்.

*4 தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய குடிமக்கள் குடியுரிமை பறிக்கப்படும் தண்டனைக்கு ஆளாயினர். மேலும், எந்தப் பொறுப்பிலும் இல்லாத குடிமக்களும் அவர் அங்கம் வகிக்கும் சபை கூடும்போது நகரத்தில் இருந்தும் கலந்து கொள்ளாமல் இருந்தால், அவர்களை விரட்டி அழைத்துவர அடிமைகளைக் கொண்ட ஒரு சிறப்புப் படையுமே இருந்தது.

*5 “மனிதன் ஒரு அரசியல் மிருகம்” என்று அரிஸ்டாட்டில் சொன்னது இதனாலேயே.

*6 தொடக்கத்தில் குறிப்பிட்டதைப்போல கிரேக்கச் சூழலில் praxis என்ற வாழ்க்கைமுறைக்கு எதிரானதாக poiesis நிற்கவில்லை. Theoria -வே அவ்வாறு கருதப்பட்டது. Poiesis அவர்களுக்கு இழிவானது; கணக்கில் எடுத்துக்கொள்ளவே தகுதியற்ற ஒன்று.

(தொடரும் … )

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.

தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 2

இவ்விரண்டு சொற்களும் (praxis, poiesis ) அவற்றால் குறிக்கப்பெறும் அர்த்தங்களும் நேரெதிரானவை அன்று. இதை விளங்கிக்கொள்ள இன்னொரு கிரேக்கச் சொல்லைப் பார்ப்பது அவசியமாகிறது. அந்த மற்ற சொல் theoria. Theory என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து பெறப்பட்டதே. Theory (தமிழில் இதை கோட்பாடு என்று எழுதலாம்) என்பதை நாம் இன்று நடைமுறையிலிருந்து விலகிய, நடைமுறைக்கு உதவக்கூடிய ஒரு செயல்பாடாகவே புரிந்துகொள்கிறோம். ஆனால், கிரேக்கச் சூழலில் அதன் பொருள் வேறு.

Philosopher என்ற சொல்லைத் தந்தவர் பிதாகரஸ் என்று நம்பப்படுவதுண்டு. அவர் குறித்து ஒரு சம்பவமும் சொல்லப்படுவதுண்டு. தத்துவவாதி என்று தன்னை அழைத்துக் கொள்வது எந்தப் பொருளில் என்று கேட்கப்பட்டபோது அவர், “அழகில் சிறந்த பொருட்களைப் பார்ப்பவர்/கவனிப்பவர்/தியானிப்பவர்,” என்று பதில் சொன்னாராம்.*1

தத்தவவாதி என்றால் கவனிப்பவர் (one who sees) என்று பிதாகரஸ் சொன்னதை, அவரது கேள்வியாளர்கள், அன்று நிலவிய சில மரபுகளின் சூழலில் வைத்தே புரிந்து கொண்டார்கள். அன்றைய கிரேக்க நகர அரசுகள், கடவுளர்களை மகிழ்விப்பதற்காக புனித விழாக்களை நடத்துவது வழக்கம். இவ்விழாக்களில் விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு.*2 இவற்றில் கலந்து கொண்டு, போட்டிகளைப் பார்த்து வருவதற்காக ஒவ்வொரு கிரேக்க நகர அரசும் தனது பிரதிநிதியாக ஒருவரை அனுப்பி வைக்கும். இந்தப் பிரதிநிதிகள் theoros என்று அழைக்கப்பட்டனர். விளையாட்டுப் போட்டிகள் புனித விழாக்களின் ஒரு பகுதியாதலால், இந்த theoros எனப்படும் பார்வையாளர்கள் அவற்றை மிகுந்த அமைதியோடு கவனிப்பர். Theoros – களின் இந்தச் செய்கை – theoria – இதனால் கடவுளர்களை தியானிப்பது என்றாகிறது. மேலும் கிரேக்க மொழியில் theo என்றாலே கடவுள் என்றும் பொருளுண்டு (theo என்ற சொல்லில் இருந்து எழுவதே theology – இறையியல்).

இம்மூன்று சொற்களைப் பற்றிய இந்த அறிமுகம் வெறும் சொல்லாராய்ச்சியன்று. தத்துவம் – நடைமுறை – கலை இவற்றுக்கிடையிலான உறவுகளைப் புரிந்து கொள்ளவும், நமது சமகாலத்திய பிரச்சினைகளை எதிர்கொள்வதில் சில தெளிவுகளை நோக்கி நகர்வதற்காகவுமே. அதற்கு, கி. மு. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளின் கிரேக்கச் சூழலில் வைத்து இவற்றைப் பார்ப்பது அவசியம்.

Theoria. praxis, poiesis என்ற இந்த மூன்று சொற்களும் மூன்று மாறுபட்ட வாழ்க்கை முறைகளைச் சுட்டுபவை. இவை குறித்த மிகவும் விரிவானதொரு விவாதத்தை முன்வைத்தவர் அரிஸ்டாட்டில். அவருக்கு முன்பாகவிருந்த பல கிரேக்கத் தத்துவவாதிகளுக்கு இவை குறித்த புரிதல் இருந்தது என்றபோதிலும், தெளிவான, விரிவானதொரு விவாதத்தை வைத்தவர் அரிஸ்டாட்டிலே என்று சொல்லலாம்.

அரிஸ்டாட்டில், அவருடைய முன்னோடிகளான ப்ளாட்டோ, சாக்ரடீஸ் மூவருக்குமே அன்றைய கிரேக்கச் சூழலில் அவர்கள் கண்ணுற்ற வாழ்க்கை முறைகளில், எது சிறந்த வாழ்க்கை என்பதே கேள்வி. எது அதிகபட்ச மகிழ்ச்சியைத்தரும், விரும்பத்தக்க வாழ்க்கை; யார் மகிழ்ச்சி நிரம்பிய, அறிவார்ந்த, நன்னோக்குடைய, மிகச் சிறந்த மனிதன் என்பதே விசாரணை.

இவர்கள் மூவருமே இழிவானதாகச் சொல்லும் வாழ்க்கைமுறை, உடல் இன்பங்களில் திளைத்துக் களித்திருப்பது. அத்தகையோரை, மிருகத்தனமான வாழ்வை வாழ்பவர்கள் என்று இழிவாகவே பேசுகின்றனர்.

வணிகத்தில் ஈடுபடுவோரையும் அவர்கள் மதிப்பதில்லை. வணிகம் செய்பவர்கள் பொய் சொல்பவர்கள் (சொல்லியே ஆகவேண்டியவர்கள்), ஏமாற்றுபவர்கள் என்பதால், அவர்களுடைய வாழ்வும் விரும்பத்தகாத ஒன்று. அதனாலேயே, இவ்விரண்டைப் பற்றியும் அவர்கள் விரிவாகப் பேசுவதில்லை.

என்றாலும், அரிஸ்டாட்டிலைப் பொருத்தமட்டில், வணிகம் ஒரு தவிர்க்கவியலாத தீமை (necessary evil). அவரது காலத்தில், கிரேக்க வாணிபம் அதன் உச்சத்திலிருந்ததும், கிரேக்க நகரங்களின் (polis) வருவாய் பெருமளவு வணிகத்தைச் சார்ந்ததாக மாறியிருந்ததும் அவர் இவ்வாறு மொழிந்ததற்குக் காரணம் என்று சொல்லலாம்.

அடிமைகளைப் பொருத்தவரையில், அவர்களை குதிரை, கழுதை, நாய் போன்ற, மனிதர்களுக்குப் பயனுள்ள, பழக்கப்படுத்தப்பட்ட மிருகங்களோடு ஒப்பிடுகிறார் அரிஸ்டாட்டில். என்றாலும் அவர்கள் மிருகங்களும் அல்லர். ஏனென்றால், அவர்களுக்குப் புரிந்துகொள்ளும் ஆற்றல் மிருகங்களைவிடக் கூடுதலாக இருக்கிறது. மேலும், அவர்கள் மனிதர்களைப் போல நேரான, நிமிந்த முதுகெலும்பை உடையவர்கள்; ஆகையால், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்கள்; ஆன்மாவுள்ள கருவிகள்.

கிரேக்கர்கள் அல்லாத மற்ற இனத்தவர்கள் சுதந்திரமானவர்கள் தாமென்றாலும், கிரேக்கர்களுடைய பார்வையில் அவர்களும் மனிதர்கள் அல்லர்; காட்டுமிராண்டிகள். இவர்களைக் குறிக்க கிரேக்கர்கள் பயன்படுத்திய சொல் barabarous அதாவது புரியாத மொழியைப் (bara bara – வென்று) பேசியவர்கள்.

பழமையான எல்லா இனங்களையும் போலவே கிரேக்கர்களும் தமது மொழியைப் புனிதமானதாக, கடவுள் அருளியதாகவே கருதினர். அதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு கிரேக்க மொழி மட்டுமே, பகுத்தறிவை உள்ளடக்கிய, வெளிப்படுத்தக்கூடிய மொழி. மொழியை அவர்கள் பேச்சாகவே கருதினர். மொழியின் வரிவடிவம் – எழுத்து, பேச்சிலிருந்தே பெறப்பட்டது என்பது அவர்களது புரிதல். சொல் (வாய்மொழிச் சொல் – word) என்பதைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான logos – ற்கு பகுத்தறிவு என்ற பொருளும் உண்டு என்பதிலிருந்தே இதைக் காணலாம்.

ஆக, கிரேக்க இனத்தில் பிறந்து, கிரேக்க மொழியில் பேசுபவர்களே பகுத்தறிவு உள்ளவர்கள் – மனிதர்கள். “எல்லா மனிதர்களும் சமமானவர்கள்” என்ற கருத்தே கிரேக்கர்களுக்கு அந்நியமானது. இதில் உள்ள முரண்நகை, அப்படியானதொரு கருத்திற்கு அவர்கள் வரமுடியாமல் போனதற்கு, கிரேக்கன் மட்டுமே பகுத்தறிவுள்ளவன் என்ற அவர்களுடைய புரிதலே காரணமாக அமைந்துவிட்டதுதான்.

குறிப்புகள்:

*1) அழகில் சிறந்த பொருட்கள் எவை? பிரபஞ்சமும், எண்ணற்ற விண்மீன்களும், ஒரு ஒழுங்கில் சுற்றி வரும் கோள்களுமே அழகானவை. அந்த ஆதி முதல் இருப்பின் (First Being) அதாவது இறைவனின், நமது பார்வைப் புலனுக்கு அகப்படும் வெளிப்பாடுகள் அவை. அவற்றைத் தியானிப்பவர்களே “மெய்யறிவை நேசிப்போர்”. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது, கிரேக்கச் சூழலில், தத்துவவாதிகளின் தியானத்திற்குரிய (contemplation) பொருள் கடவுளின் வெளிப்பாடுகளே (eternal divine objects) அன்றி கடவுள் அல்ல; கடவுளைத் தியானிப்பது என்பது பிற்காலத்தில் உருவான கருத்து.

*2) இத்தகைய புனித விழாக்களில் முக்கியமான ஒன்று ஒலிம்பிக்ஸ். இவ்விழாக்களில் பெண்கள் கலந்து கொள்வது தடை செய்யப்பட்டிருந்தது.
அதையும் மீறி ஒரு பெண், ஆண் வேடமிட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றுவிட்டதாகவும், மேற்கொண்டு அதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கும் பொருட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆண்கள் நிர்வாணமாக கலந்து கொள்ளும் வழக்கம் உருவானதாகவும் ஒரு கதை உண்டு.

(தொடரும் … )

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003.

தத்துவம் – நடைமுறை – கலை: சில குறிப்புகள் … 1

“தத்துவவாதிகள் உலகுக்கு பலவகையான விளக்கங்கள் மட்டுமே தந்துள்ளனர்; ஆனால் விஷயமோ, அதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே.”
ஃபாயர்பாக் மீதான ஆய்வுரைகளின் இந்தப் புகழ்பெற்ற பதினோராவது ஆய்வுரையை அறியாத மார்க்சியர்கள் யாரும் இருக்க முடியாது என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. ஒரு முனையில், இனி தத்துவத்திற்கு வேலையில்லை; களத்தில், நடைமுறையில் இறங்க வேண்டும் என்பதாகவும், இன்னொரு முனையில், தத்துவத்தின் பணி, இனி நடைமுறைக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்பதாகவும் புரிந்து கொள்ளப்பட்ட வகையில், தத்துவ வரலாற்றிலேயே முதல் முறையாக, தத்துவத்தின் முடிவை அறிவித்ததாக அல்லது மிக முக்கியமான திருப்புமுனையாக இது மார்க்சியர்களால் கருதப்பட்டும் வந்திருக்கிறது.

ஆனால், காரல் மார்க்ஸ் இந்த முடிவிற்கு எப்படி வந்து சேர்ந்தார் என்ற கேள்வியைப் பொருத்த அளவில் அவர்களுடைய புரிதல் மிகமிக மேலோட்டமானது என்பது என் துணிபு. அவர்களுடைய புரிதலை ‘ஆழப்படுத்துவதை’ வேலையாக எடுத்துக்கொள்வதைத் தவிர்த்துவிட்டு, கார்ல் மார்க்சின் இந்த ஆய்வு முடிவு சரிதானா, அப்படியென்றால் எந்த அளவுக்கு என்ற கேள்வியின் மீது கவனத்தைக் குவிப்பதே நல்லது.

ஃபாயர்பாக் மீதான ஆய்வுரைகளில் முதல் ஆய்வுரை, ” Hence he (ஃபாயர்பாக்) does not grasp the significance of “revolutionary”, of “practical-critical” activity” என்று முடிகிறது. அதேபோன்று, மூன்றாவது ஆய்வுரை, “The coincidence of the changing of circumstances and of human activity or self-change can be conceived and rationally understood only as revolutionary practice” என்று முடிகிறது.

இதில், “practical-critical activity” கம்யூனிஸ்ட்டு கட்சிகளிலிருந்து விலகி நின்று செயல்பட்ட மார்க்சிய அறிவுஜீவிகள் தம்மை நியாயப்படுத்திக் கொள்ளவும், “revolutionary activity” கம்யூனிஸ்ட்டு கட்சிகள் தமது கட்சியையும், நடைமுறையையும் நியாயப்படுத்திக் கொள்ளவும், அணிகளைத் தக்கவைத்துக் கொள்ளவும், தம்மிடமிருந்து சற்று விலகி நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளை, தேவையான சந்தர்ப்பங்களில் ‘விமர்சனத்தோடு அணுகவும்’, மற்ற சந்தர்ப்பங்களில் தாக்கவும் பயன்பட்டன என்ற வரலாற்றைப் பெரிதாக விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இருதரப்பாருமே, காரல் மார்க்ஸ் praxis என்ற சொல்லில் இருந்தே, அதன் பொருளாக அவர் புரிந்துகொண்ட விஷயங்களிலிருந்தே, மேற்கண்ட இரு பதங்களையும் கையாண்டார் என்பதைக் கோட்டை விட்டுவிட்டனர். மேற்சொன்ன பதத்திற்கும் அதன் பொருளுக்கும் அவர் எங்கனம் வந்து சேர்ந்தார் என்பதை விளக்க ஒரு தனிநூலே தேவைப்படும் என்பதாலும், அது இங்கு நோக்கமில்லை என்பதாலும், தவிர்த்துவிட்டு, இச்சொல்லின் பொருள், அது குறித்த காரல் மார்க்சின் புரிதல் என்ற திசையில் திரும்பிவிடுவது நன்றென்று தோன்றுகிறது.

Praxis ஒரு கிரேக்கச் சொல். பொதுவாக, இது நடைமுறை என்று பொருள் தரும் practice என்ற சொல்லாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டாலும், இதன் பொருளுக்கு நெருங்கிவரக் கூடியதாக இருக்கும் ஆங்கிலச் சொல் doing. இதைச் சரியாக விளங்கிக் கொள்ள poiesis என்ற மற்றொரு கிரேக்கச் சொல்லைப் பார்க்கலாம்.

Poiesis என்ற கிரேக்கச் சொல்லுக்கு நெருக்கமான ஆங்கிலச் சொல் making. தொழிற்படுதல் என்று இதை தமிழில் எழுதலாம். களிமண்ணைத் தொழிற்படுத்தி நாம் மட்கலன்களை உருவாக்குகிறோம். கற்களைத் தொழிற்படுத்தி வீடுகளை உருவாக்குகிறோம்.

தொழிற்படுதல் எப்போதும் ஒரு பொருளை உருவாக்குவதில் முடிகிறது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட பொருட்கள் முழுமையாக உருவாகி முடிந்தபின்பே அர்த்தமுள்ள நடவடிக்கைகளாகக் கொள்ளப்படும். வீட்டைக் கட்டி முடித்தபின்பே அதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொருள் பதிந்தவையாக இருக்கும்.

Doing என்று பொருள்படும் praxis – ஐ தமிழில் செய்தல் அல்லது ஈடுபடுதல் என்று எழுதலாம். கிரேக்க அர்த்தத்தில் செய்தல் சிறப்பாகச் செய்தல் (doing something well). இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு புல்லாங்குழலை வாசிப்பதைச் சொல்லலாம்.

புல்லாங்குழலை வாசிப்பதால் எந்த ஒரு பொருளும் உருவாகிவிடுவதில்லை. அதேசமயம், புல்லாங்குழலை சிறப்பாக வாசித்தாலேயே வாசித்ததாகக் கொள்ளப்படும். புல்லாங்குழலை வாசிப்பதாலேயே (சிறப்பாக) அந்நடவடிக்கை நிறைவானதாகிறது. அது நிறைவு பெறுவது வாசிப்பை நிறுத்துவதால் அன்று (இதற்கு மாறாக, வீட்டைக் கட்டி முடித்தபின்பே அவ்வீட்டைக் கட்டும் நடவடிக்கை – தொழிற்பாடு நிறைவு பெறுகிறது). இங்கு, நடவடிக்கையும் முடிவும் வெவ்வேறாக இருப்பதில்லை. வாசிப்பதை நிறுத்துவதற்கு வெகுநேரத்திற்கு முன்பாகவே அது தன் இலக்கை எய்திவிடுகிறது.

தொழிற்படுதலில் (making) இலக்கும் நடவடிக்கையும் வெவ்வேறாக இருக்கிறது. ஈடுபடுதலில்/செய்தலில் (doing) இலக்கும் நடவடிக்கையும் பிரிக்க முடியாததாக இருக்கிறது.

(தொடரும் …)

கவிதாசரண் பிப்ரவரி – ஏப்ரல் 2003

%d bloggers like this: