என்னமோ நடக்குது … 2

காப்பிரைட் சமாச்சாரத்தை (கொஞ்சம் கமுக்கமாகப் படியுங்கள்) எடுத்துக்கொண்டால், முதல் கேள்வி, ஸ்நேகா அல்லது இரா. நடராசன் எங்கே, எப்போது, யாரிடம் அனுமதி பெற்று உரிமை பெற்றார்கள்? இரா. நடராசன் தமது திருமதி(?)யாரின் [Mala Natarasan (c)] பெயரில் காப்பிரைட்டைப் பதிவு செய்திருப்பது என்ன வகையான கலாச்சாரம் என்பது போன்ற கேள்விகளையெல்லாம் கேட்பது நாகரீகம் இல்லையென்பதால் தவிர்த்துவிடுகிறேன். மொழிபெயர்ப்பிற்கும் காப்பிரைட்டிற்கும் உள்ள சிக்கலான உறவு குறித்த ஒரு பதிவை மட்டும் செய்துவிட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் (காழ்ப்புணர்வுகளற்ற, கலப்பில்லாத அரசியல் பார்வை மட்டுமே எனக்கு உண்டாக்கும். அக்காங்.)

பாரீஸ் நகரில் 1971 – ஆம் ஆண்டு கூடிய, பெர்ன் மாநாடு என்று அழைக்கப்பட்ட, சர்வதேச ஒப்பந்தத்தின்படி, மொழிபெயர்ப்புகள் தம்மளவில் அசலான படைப்புகள் என்றாலும் அவற்றுக்கான காப்பிரைட வழங்கும் உரிமை ‘மூலப’ பிரதியின் ஆசிரியருக்கே உரியதாம். 1976 நவம்பர் நைரோபியில் மொழிபெயர்ப்பாளர்களின் ‘நிலைமையை மேம்படுத்துவதற்காகக்’ கூடிய UNESCO மாநாடும்கூட மேற்கண்டவாறே பரிந்துரைத்திருக்கிறது. மொழிபெயர்ப்புகள் அதிக அளவில் செய்யப்படும் பிரிட்டன், அமெரிக்கா இரண்டு நாடுகளின் சட்டங்களும் இதையேதான் சொல்கின்றனவாம். இந்தியச் சட்டம் என்ன சொல்கிறதென்று தெரியவில்லை. (அதைத் தெரிந்துகொள்ளும் வக்கற்றுதான் இந்த மேலை உதாரணங்கள். ‘கண்ணம்மாப்பேட்டைல மழ பேஞ்சா மாஸ்கோவுக்கு கொட புடிக்கும்’ கதைதான்.)

ஆனால், இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் வேறு. ‘மூலப்’ பிரதி, அதைப் ‘படைக்கும்’ படைப்பாளி (கடவுள், தந்தை, creative genius) என்ற கருத்தாக்கங்கள் சட்டங்கள் வழியாகவும் பாதுகாப்பைப் பெறுகின்றன. இக்கருத்தாக்கங்களின்படி, மொழிபெயர்ப்பு ஒரு படைப்பூக்கமுள்ள செயல்பாடு அல்ல. காரணம், அது மூலப் பிரதியை வெறுமனே நகல் செய்யும் நடவடிக்கை; மூலப்பிரதியைப் போன்று ‘படைப்பாளியின்’ மூளைக்குள்ளிருந்து வெளிவருவதல்ல. அதனால், அது ஒரு இரண்டாம் தரமான செயல்பாடு. (2)

படைப்பூக்கமுள்ள இலக்கியச் செயல்பாடு என்பதை மொழியால், மொழிக்குள், மொழி மீதான ஒரு நிகழ்வாகப் பார்த்தால் இந்தக் கருத்தாக்கங்களிலிருந்து விடுபடமுடியும். (3) மொழிபெயர்ப்பையும் ஒரு படைப்பூக்கமுள்ள செயல்பாடாக பார்க்க முடியும். இதன் தொடர்ச்சியாக, மொழிபெயர்ப்பை “மொழிபெயர்ப்பாளர், பொருள்கோடலில் தனக்குள்ள பயிற்சி கொண்டு குறிப்பான்களின் தொடர்களால் ஆன வருமொழிப் பிரதியை நிலைமொழியின் குறிப்பான்களின் தொடர்களாக மாற்றும் நிகழ்வு” என்று பார்க்கலாம். (4) (எம்மாடி!)

அர்த்தங்கள் ‘படைப்பாளியின் மூளையிலிருந்தோ’ மொழிபெயர்ப்பாளரின் ‘திறமையிலிருந்தோ’ எழுவதில்லை. எண்ணற்ற விதங்களில் தமக்குள் ஊடாடவும் உறவு கொள்ளவும் சாத்தியங்களுள்ள குறிப்பான்களின் தொடர்புகளை, சில குறிப்பிட்ட இலக்கிய வகைகள், பாரம்பரியங்கள் என்று வரையறுத்து வைக்கப்பட்டுள்ளவற்றின் தொடர்ச்சியாகவும் சமூக, கலாச்சார, அரசியல், வரலாற்று, இன்னபிற சூழல்கள், பின்புலங்களில் சற்றே நிறுத்தி வைத்துப் பார்ப்பதன் விளைவாகவுமே தோன்றுபவை. இப்படியாகப் பார்த்தால், வருமொழிப் பிரதியின் ‘சாரம்’ என்ற கருத்தும் அதை அப்படியே நிலைமொழிக்குள் கொண்டு வருவது என்ற பேச்சுமே அடிபட்டுப் போகிறது.

இதனால், சகட்டுமேனிக்கு ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம் என்றாகிவிடாது. (5) ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு, ‘துல்லியமான, உண்மையான, வரிக்கு வரி’ மொழிபெயர்ப்பு என்பவையெல்லாம் குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல்களால் நிர்ணயம் பெறுகிற கருத்தாக்கங்கள். (6) சில சந்தர்ப்பங்களில், ஒரு ‘தவறான’ மொழிபெயர்ப்புகூட நிலைமொழியின் கலாச்சார சூழலில் எதிர்பாராத, புதிய அர்த்தம் பெற்றுவிடலாம். மோச்மான மொழிபெயர்ப்பு, நல்ல மொழிபெயர்ப்பு என்ற வாய்ப்பாடுகளே அபத்தமானவை. (அதாவது, அவற்றின் விரிவான அர்த்தங்களில். நமது மொழிபெயர்ப்பாளர்கள் செய்துள்ள அபத்தங்களைத் ‘தவறுகள்’ என்ற கணக்கில்தான் சேர்க்க வேண்டியிருக்கிறது.)

இவற்றைக் கருத்தில் வைத்து, மொழிபெயர்ப்பு குறித்து மேலே சொல்லப்பட்டதை வேறு வார்த்தைகளில், இப்படியாகச் சொல்லலாம்: “மொழிபெயர்ப்பு என்பது ஒரு அன்னிய மொழிப் பிரதியை அதன் உள்ளுறைந்திருக்கும் கலாச்சார, மொழியியல், இன்னபிற தனித்துவங்களை, அதன் வித்தியாசத்தை, வலுவில் நீக்கிவிட்டு, நிலைமொழி வாசகருக்கு அணுக்கமாகவுள்ள ஒரு பிரதியை உருவாக்கித்தரும், ஒரு பிரதியை உருவாக்கித்தரும் நிகழ்வு.”

மொழிபெயர்ப்பு நடவடிக்கையை இப்படி வரையறுப்பது, அதற்குள் தவிர்க்க முடியாமல் புதைந்திருக்கும் வன்முறையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதாக இருக்கிறது. மொழிபெயர்ப்பு நடவடிக்கையில் அன்னிய மொழிப் பிரதியின் பல்வேறு சாத்தியமான அர்த்தங்களில், தெரிந்தோ தெரியாமலோ சிலது விடுபட்டுப்போகும்; சிலது முன்னிலைபெறும். நிலைமொழியின் வாசகருக்கு அணுக்கமுள்ளதாக அதை மாற்றும் முயற்சி, அம்மொழியில் அன்னியமொழிப் பிரதியில் இல்லாத அர்த்தங்கள் சிலவற்றை உருவாக்கிவிடும். மொழிபெயர்ப்பு நடவடிக்கையின் இந்த வன்முறை தவிர்க்கப்பட முடியாதது.

மொழிபெயர்ப்பாளர் ‘படைப்பாளி’ யாவதும், மொழிபெயர்ப்பு ஒரு கலாச்சார – அரசியல் நடவடிக்கையாவதும் மொழிபெயர்ப்பு என்பதே ஒரு மொழி நிகழ்வாக மாறுவதும் இந்நடவடிக்கையின் வன்முறை என்பதிலேயே தங்கியிருக்கிறது. இந்த வன்முறை, வருமொழிப் பிரதியை நிலைமொழிக்குள் நிறுவப்பட்ட இலக்கியப் புனிதக் கட்டமைப்பிற்கு வலுசேர்ப்பதாகவோ அதைத் தகர்ப்பதாகவோ வெளிப்பாடு கொள்கிறது.

வருமொழிப் பிரதியை, அதன் வித்தியாசத்தை, ‘அன்னியத் தன்மையை’ எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு நிலைமொழிக்குள் கொண்டுவரும்போது அது நிலைமொழியின் நிறுவப்பட்ட புனிதத் தொகுதியைத் தகர்ப்பதாக அமைகிறது. (7) மொழிபெயர்க்கத் தேர்வு செய்யப்படும் பிரதியிலிருந்து தொடங்கி சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, சொல்லாடல் களனின் தேர்வு, பதிப்புச் சூழல், வாசிப்புச் சூழல் என்று பல காரணிகளும் இதில் செயலாற்றுகின்றன. இந்த வகையான மொழிபெயர்ப்பு, வருமொழிப் பிரதிக்கு ‘உண்மையாக’ இருக்கும் பொருட்டு நிலைமொழிக்கு ‘துரோகம்‘ செய்யும் நடவடிக்கையாக, அன்னியமாக்கும் (foreignizing)நடவடிக்கையாக இருக்கும். நிலைமொழியின் அப்போதைய நிலைமை, தகவமைப்பு – அதன் புனிதத் தொகுதியின் பலம், பலவீனம், மொழிக் கட்டமைப்பு, இன்னபிற – பொருத்தே அதன் மதிப்பு அமையும்.

இந்தக் குறிப்புகள், ஏதோ ‘தூய’ கோட்பாட்டளவிலானவை மட்டுமல்ல. இவற்றின் நோக்கமே, மொழிபெயர்ப்பு நடவடிக்கையை ஒரு கலாச்சார – அரசியல் நடவடிக்கையாக ஆக்குவதும், மொழிபெயர்ப்புகளை மதிப்பிடுவதற்கான ஒரு கூர்மையான (வன்முறை!) ஆயுதமாகக் கொள்ளவும்தான். சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, சொல்லாடல் களன் இவற்றில் தென்படும் தொடர்ச்சியின்மைகளை அடையாளம் காணும் வாசிப்பு முறையை உருவாக்கிக்கொள்ளவும் இவை உதவக்கூடும். (8) அப்படியொரு வாசிப்பை நமது மொழிபெயர்ப்பாளர்கள் மீது பிரயோகித்துப் பார்த்துவிடுவது இந்த ‘கூற்று’க்கு (வன்முறை! வன்முறை!) வலுசேர்ப்பதாக இருக்கும்.

குறிப்புகள்:

(2) ஆகையால், மொழிபெயர்ப்பாளருக்கு காப்பிரைட் கிடையாது! ஆனால், விஷயம், காப்பிரைட் – அதாவது ‘உரிமை’ என்பதே வாரிசுரிமை என்ற ஆணாதிக்க, முதலாளியக் கருத்தியலின் அடிப்படையில் எழுந்த ஒன்று. ஆசிரியன், படைப்பாளி என்ற கருத்தாக்கங்களும்கூட முதலாளியத் தனிமனிதவாதக் கருத்தியலின் விளைபொருட்களே. இதனால்தான் அரசவிழ்ப்பாளர்கள், Situationist – கள் பலரும் தாம் எழுதும் எழுத்துக்களை ‘உரிமை’ பெறாமல் பதிப்பிக்கின்றனர். (தமிழினி பதிப்பில் ‘உரிமை’ குறித்த விபரம் ‘மிஸ்’ ஆகியிருப்பது இந்தப் புரிதலால்தான் என்று சொல்ல முடியுமா?) ஆனால், தமிழ்ச் சூழலில் ‘போஸ்ட் மார்டனிஸ்டுகளாக’ அறியப்படுபவர்கள்கூட இது குறித்த எந்தப் பிரக்ஞையுமில்லாமல் எழுதி வருவது பெருத்த சோகத்திற்குரியது என்றுதான் சொல்லவேண்டும். ப்ச்செ …

[காப்பிரைட் குறித்த எனது மேலதிகமான புரிதல்களை “இசையின் அரசியல்” நூலில் பதிவு செய்திருக்கிறேன். தற்சமயம், காப்பிரைட் தொடர்பான ஒரு பிரச்சினையை எதிர்கொண்டிருப்பதால் மேற்கொண்டு வாசித்தும் வருகிறேன். இது குறித்து தனியாகவே எழுதும் விருப்பம் உண்டு]

(3) இது தொடர்பான விவாதங்கள் தமிழில் சற்று விரிவாக (ஆனால், அரைகுறையாக – உதாரணத்திற்கு, இப்போதுதான் எழுதத் தொடங்கியிருக்கும் தலித்துகள், பெண்கள் இன்னும் மற்ற பிரிவினருக்கு இந்தக் கருத்தாக்கங்களிலிருந்து விடுபடுவது என்பது என்னவாக இருக்கும் என்பது போன்ற கேள்விகள் எதிர் கொள்ளப்படாமலிருப்பது; ஆகையால், மேற்கொண்டு தொடர, ‘புரிந்தது போல’ எடுத்துக்கொண்டு) பேசப்பட்டிருப்பதால் இங்கு தவிர்க்கப்பட்டது.

(4) குறி, குறிப்பான், குறிப்பீடு, குறிப்பிடு பொருள் என்பன போன்ற ‘jargon’ களெல்லாம் தமிழ்ச் சூழலுக்கு ஓரளவு பரிச்சயமாகிவிட்டவை என்ற நம்பிக்கையில், அந்தச் சிக்கலான, செறிவான அர்த்தங்களில் புரிந்துகொள்ளப்படும் என்று எடுத்துக் கொள்கிறேன்.

(5) இரா. நடராசன் தனது முன்னுரையில் ‘கூடுமானவரை வரிக்கு வரி மொழிபெயர்த்துள்ளேன்’ என்று அறிவித்துக்கொண்டாலும் அவரது ‘பெயர்ப்பு’ இப்படியாகத்தான் இருக்கிறது.

(6) ஒரு குறிப்பிட்ட சூழலில் துல்லியமான, வரிக்கு வரி மொழிபெயர்ப்பாகக் கருதப்படுவது வேறொரு சூழலில் ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பாகக் கருதப்படலாம்.

(7) வருமொழிப் பிரதியின் வித்தியாசத்தை அப்படியே நிலைமொழிக்குள் கொண்டு வருவது சாத்தியமில்லை. நிலைமொழியின் மொழிக் கட்டமைப்பிற்கு உள்ளாகவே இந்த முயற்சி என்பதால் ‘இழப்பு’ என்பதில்லாமல் சாத்தியமில்லை.

(8) இத்தகையதொரு வாசிப்பு முறைக்கு, வருமொழிப் பிரதியை அம்மொழியிலேயே படித்திருக்கவேண்டும் என்பதோ, நிலைமொழியில் பெயர்ப்பிற்குள்ளான பிரதியை வருமொழிப் பிரதியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பதோ அவசியமில்லை. பெயர்ப்பிற்குள்ளான பிரதியில் உள்ள தொடர்ச்சியின்மைகளை ஒரு கூர்ந்த வாசிப்பின் மூலமே நிகழ்த்திக் காட்டிவிட முடியும். இம்முயற்சியை வேறொரு சந்தர்ப்பத்தில் வைக்கிறேன்.

(தொடரும் …)

புதிய கோடாங்கி ஜூலை 2002.

என்னமோ நடக்குது … 1

ஆடு

சில நாட்களுக்கு முன்பாக நண்பர் சி. மோகனோடு அவரது பதிப்பகத்தில் அரட்டையடித்துக் கொண்டிருந்துவிட்டு புத்தகங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட புத்தகம் “மொழிபெயர்ப்பியல்”. அன்னம் வெளியீடாக 1989 – லும் இரண்டாம் பதிப்பு 94 – லிலும் வந்திருக்கிறது. டாக்சர் சி. சிவசண்முகம், டாக்டர் வே. தயாளன் என்போர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். பாரதியார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் என்று ஊகிக்க முடிகிறது. எம். ஏ. தமிழ் பாடத்திட்டத்திலும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது என்று பிற்பாடு ஒரு நண்பர் மூலமாக அறிந்து கொண்டேன்.

ஒரு ஆர்வத்தில் புத்தகத்தைப் புரட்டியபோது எடுத்தவுடன் என் கண்களுக்குச் சிக்கியது ஒரு பிழை (இந்த முறை அச்சுப் பிழையன்று; சொற்குற்றம். அது என்னமோ தெரியவில்லை, என் தலையெழுத்து இப்படியிருக்கிறது. பொருட்பிழையை நோக்கி நகரக்கூட முடியவில்லை.) மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளும் பிரதியின் மொழியை source language என்றும் பிரதி மொழியாக்கத்திற்குள்ளாகும் மொழியை target language என்றும் மொழிபெயர்ப்பு தொடர்பான விவாதங்களில் குறிப்பிடப்படுவதுண்டு. நூலில் target language என்பதற்கு ஆசிரியர்கள் செய்திருக்கும் பெயர்ப்பு “குறிக்கோள் மொழி”!

இலக்கு மொழி என்று எழுதுவது சற்றுப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அல்லது தமிழ் இலக்கண நூல்களில் புணரியல் பற்றிய விதிகளின் தொகுப்பில் பயன்படுத்தப்படும் வருமொழி, நிலைமொழி என்ற பதங்களை முறையே source language – ற்கும் target language – ற்கும் ஆள்வதும்கூட நன்றாக இருக்கலாம். என்னத்த ‘தோனி’ என்னத்தப் பண்ண. புத்தகத்தை வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

(பத்திரப்படுத்தி வைத்திருப்பதற்குக் காரணம் உண்டு. Author’s spirit “மூல ஆசிரியரின் விறுவிறுப்பு (spirit!)” என்று பெயர்த்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். ‘Spirit’ டுகளின் பால், அதாகப்பட்டது ‘விறுவிறுப்பு’ – களின்பால் எனக்குள்ள பிடிப்பு, பற்றுதல், மோகம், உற்சாகம், ஆர்வம் இன்னும் இதுபோன்ற பற்பல சொற்களால் விளக்கம் பெறுகிற உணர்ச்சிகளை, எனது நண்பர், தமிழ் நாட்டின் ஆகச் சிறந்த இலக்கிய மானேசரின் முயற்சியால் தமிழ்ச் சிறுபத்திரிகை உலகம் நன்கு அறிந்திருக்கும் என்று நம்புகிறேன்.)

மாடு

மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிற வேகத்தோடு ஒப்பிடும்போது “மொழிபெயர்ப்பின் அரசியல்” குறித்த பேச்சு தமிழில் குறைவு. அரசியல், கோட்பாடு – பொதுவில் ‘அறிவு’ என்றாலே அலறும் நமது சிறுபத்திரிகை இலக்கியவாதிகளுக்கு இது ஒருபோதும் உறுத்தலாகப் படப்போவதில்லை. நான்கு கவிதைத் தொகுதிகளைப் படித்துவிட்டால், ஒரு கவிதை, பத்து சிறுகதைத் தொகுதிகளைப் படித்துவிட்டால் ஒரு சிறுகதை எழுதத் தகுதி வந்துவிடுவதுபோல இவர்களுக்கு மொழிபெயர்ப்பும் பழகப் பழக் ‘மெருகு’ கூடிவிடக்கூடிய ஒன்று. கொஞ்சம் பழகிவிட்டால் அப்புறம் இருக்கவே இருக்கிறது ‘சுதந்திர’ மொழிபெயர்ப்பு.

இது தொடர்பாக, சில விஷயங்களை கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் தட்டிக்கழிந்து கொண்டே போகிறது. குறிப்பாக, தோட்டியின் மகன் என்ற தகழி சிவசங்கரப் பிள்ளையின் நாவலை சுந்தர ராமசாமி ‘தமிழில்’ பெயர்த்து நூலாக வந்தபோதே இது குறித்து எழுதும் உத்தேசம் இருந்தது. தவறிவிட்டது. இப்போது, ஆஃப்ரோ – அமெரிக்க எழுத்தாளரான ஃப்ரெடெரிக் டக்ளஸின் Narrative of the Life of Frederick Douglass, an American Slave, Written by Himself என்ற அடிமைத் – தன் வரலாற்று நூலை சூத்ரதாரியின் ‘மொழியாக்கத்தில்’ தமிழினி பதிப்பகமும், இரா. நடராசனின் ‘மொழிபெயர்ப்பில்’ ஸ்நேகா பதிப்பகமும் போட்டி போட்டுக் கொண்டு வெளியிட்டிருக்கும் சந்தர்ப்பத்தை சாக்காக எடுத்துக் கொள்கிறேன்.

இரண்டு பதிப்புகளிலும் தரப்பட்டிருக்கும் பதிப்பு விவரங்களிலிருந்து தொடங்குவது சற்று சுவாரசியமாக இருக்கும் (முழு நீள நகைச்சுவைச் சித்திரம் என்று சொல்லலாம்.)

முதலில் தமிழினி:

நூலின் பெயர் – ஒரு அடிமையின் வரலாறு
ஆசிரியர் ஃப்ரெடெரிக் டக்ளஸ்
நூல்வகை – வரலாறு
மொழியாக்கம் – சூத்ரதாரி
முதல் பதிப்பு – டிசம்பர் 2001
ISBN – 81 – 87641 – 42 – 8
விலை – ரூ. 50.

முன் அட்டை ஓவியம், அதிலுள்ள உள்புகைப்படம், பின்னட்டைப் புகைப்படம், உரிமை குறித்த விபரங்கள் காணாமல் போன லிஸ்டில் இருப்பவை.

அடுத்து ஸ்நேகா:

ஆசிரியர் – பிரெடரிக் டக்ளஸ்
நூலின் பெயர் – அமெரிக்க கறுப்பின அடிமையின் சுயசரிதை
மொழிபெயர்ப்பாளர் – இரா. நடராசன்
உரிமை – மாலா நடராசன் (c)
முதல் பதிப்பு – டிசம்பர் 2001
பக்கங்கள் – 96
ரூபாய் – 40.00

ஸ்நேகா பதிப்பில் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள தவல்களின் விசேஷங்கள்:

Fredrick Douglass (கவனிக்க – spelling mistake)
Auto Biography
Cover – “Amistad” Film Directed by Steven Speilberg (American Photography Issue)

(எந்த வருட, மாத/வாரத்தைய இதழ்?)

காணாமல் போன ‘சில்லறை’ விபரங்களுக்குப் பிறகு வருகிறேன். நூல் வகை, பதிப்புரிமை குறித்த விபரங்கள் மொழிபெயர்ப்பு குறித்த பிரச்சினைகளோடு நேரடி தொடர்பு கொண்டிருப்பதால் முதலில் அவற்றை எடுத்துக் கொள்கிறேன்.

வரலாறு, auto – biography என்று இரு தரப்பாரும் வகைப்படுத்தியிருப்பது இருவருக்குமே பிரதி எந்த இலக்கிய வகையைச் (literary genre) சார்ந்தது என்பதுகூடத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது. வரலாறு என்று தமிழினி வகைப்படுத்தியிருப்பது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. ஸ்நேகா குறிப்பிட்டிருப்பது போல டக்ளஸின் நூல் தன் வரலாற்று நூலும் அன்று.

ஆங்கிலத்தில் நூலின் தலைப்பைச் சற்றுக் கவனமாகப் பார்த்தாலே இது தெரியும்: Narrative of the Life of Frederick Douglass, an American Slave, Written by Himself. (அழுத்தம் எனது. இரு பதிப்புகளிலுமே நூலின் ஆங்கிலத் தலைப்பு குறிப்பிடப்படவில்லை. தமிழினி, நூலின் இறுதியில் References என்ற தலைப்பின்கீழ் இந்நூலை அரைகுறை விபரங்களோடு சேர்த்திருக்கிறது.)

இந்த அவரே எழுதியது என்ற உபதலைப்பின் முக்கியத்துவத்தை சற்று ஆராய்ந்திருந்தாலே நூல் என்ன வகைப்பட்டது என்பதை அறிந்திருக்கலாம். சூத்ரதாரி அந்த எட்டு பக்கக் குறிப்புகளை எழுதுவதற்குப் பதிலாக இதில் முனைந்திருக்கலாம். அல்லது, பின்னால் கொடுத்துள்ள பத்து நூல்களை ஒழுங்காகப் படித்திருந்தாலும் விஷயம் பிடிபட்டிருக்கும். ஆனால், அவர் இந்நூலைப் புனைவு எழுத்தாகக் கருதியிருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

ஒன்று, அவர் இதைத் தன் – வரலாற்று நூலாக எடுத்திருக்கலாம் (தன் வரலாறுகளில் ‘இலக்கிய நயம்’ இருக்கலாம்; ஆனால் அது தன்னளவில் இலக்கியமில்லை என்ற அளவுகோல்.) அல்லது திலீப்குமார் அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல ‘அசலான ஆவணமாகக்’ கருதியிருக்கலாம். எட்டுப் பக்கங்களுக்கு அந்த வெட்டியான ‘வரலாற்றுக் குறிப்புகள்’ இந்தக் காரணங்களாலேயே வந்திருக்கின்றன என்று கருதவேண்டியிருக்கிறது.

ஃப்ரெடெரிக் டக்ளஸ் என்கிற அமெரிக்க அடிமையின் வாழ்க்கைக் கதை: அவரே எழுதியது 1845 – ல் வெளியானது (இந்த விபரம்கூட இரண்டு பதிப்புகளிலுமே காணவில்லை. தெரியவில்லை? தெரிந்துகொள்ள சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை?) டக்ளஸ், 1838, செப்டம்பர் 3 – ஆம் தேதி பால்டிமோரிலிருந்து புறப்பட்ட ஒரு ரயிலில் ஏறி மறுநாள் நியூயார்க் வந்து சேர்கிறார். அடிமைத் தளையிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்ட நாள் அது. மூன்று வருடங்கள் கழித்து அடிமை ஒழிப்பு இயக்கத்தில் முழுநேரப் பேச்சாளராக சேர்கிறார். அவருடைய கம்பீரமான தோற்றமும் பேச்சாற்றலும் சீக்கிரத்திலேயே பெரும்புகழைத் தேடித் தந்து விடுகின்றன. இவ்வளவு திறமைகள் உள்ள நபர் நிச்சயம் ஒரு அடிமையாக இருந்திருக்க முடியாது என்ற புரளி கிளம்பிவிடுகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே தன் வாழ்க்கை அனுபவங்களை எழுத்தில் கொண்டுவர முடிவு செய்கிறார். இதன் பொருட்டே அவரே எழுதியது என்ற உபதலைப்பை வைக்கிறார்.

அடிமைத் தளையிலிருந்து தப்பி ஓடிவந்த ஆஃப்ரோ – அமெரிக்கர்கள் தாம் அடிமைத்தனத்தில் சிக்குண்டிருந்தபோது அனுபவித்த துன்பங்களை எழுத்தில் கொண்டு வந்தது ஒரு புதிய நிகழ்வாக இருக்கவில்லை. டக்ளசுடைய நூலுக்கு முன்பாக பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால், அவருடைய நூலே இந்த வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று சொல்லலாம். டக்ளஸினுடைய நூலுக்குப் பிறகே Slave Narrative என்ற இலக்கிய வகை அமெரிக்க சமூகத்தில் மிகப் பரவலான வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது எனலாம். (1) அவருடைய நூலுக்குப் பின்வந்த அடிமைத் தன் வரலாறுகள் அனைத்திலும் அவரே எழுதியது என்ற அந்த உபதலைப்பு, எழுதியவரது அரசியல், இலக்கியத் தற்சார்பையும் தனித்துவத்தையும் சுட்டிக்காட்டும் குறிசொல்லாகியது.

ஒரு இலக்கிய வகை என்ற அளவில், ஆங்கிலப் புனித இலக்கியத் தொகுதிக்குள் அடங்கும் தன்வரலாறுகளுக்கும் அடிமைக் கதையாடல்களுக்குமான (slave narrative) உறவுகள் சிக்கலானவை. இந்த தனிச்சிறப்புமிக்க இலக்கியவகையை ஒரு எதிர் இலக்கியவகை என்று சொல்வதே சரியாக இருக்கும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் எழுந்த sentimental novel மற்றும் picaresque(சாகச) எழுத்துக்களின் சில கூறுகளை எடுத்துக் கொண்டு அவற்றுக்கு எதிர்வினையாக உருவானவையே அடிமைக் கதையாடல்கள். சாகச் நாவல்கள் போலியான தன் வரலாறுகளாக (pseudo – autobiography) இருந்தனவென்றால் அடிமைக் கதையாடல்கள் அரைகுறையான தன் வரலாறுகளாக (quasi – autobiography) இருந்தன. இன்னும் இது போன்ற நுணுக்கமான வித்தியாசங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவற்றையெல்லாம் டக்ளசின் புனைவை (அப்பாடா! இதைச் சொல்வதற்கு எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது!) எடுத்துக் கொண்டே நிறுவவும் முடியும்.

குறிப்புகள்:

(1) டக்ளசுக்கு முன்பாக வந்த அடிமைத் தன் வரலாற்று நூல்களுள் 1789 – ல் அவுலத் ஈக்வானா என்பாருடைய அவுலத் ஈக்வானா அல்லது கஸ்தாவஸ் வஸ்ஸா என்ற ஆப்ரிக்கனின் வாழ்க்கை பற்றிய சுவையான கதை, அவரே எழுதியது (The Interesting Narrative of the Life of Olaudah Equiano, or Gustavus Vassa, the African, Written by Himself) என்ற நூல் புகழ் பெற்றது. இதிலிருந்து ஒரு பகுதி நிறப்பிரிகை இலக்கிய இணைப்பு 4 – ல் மொழியாக்கம் பெற்றிருக்கிறது.

(தொடரும் …)

புதிய கோடாங்கி ஜூலை 20002.

கவுண்டர் கல்ச்சர் அன்லிமிட்டட் (பிரமிள் நினைவாக)

அருகில் வாவென அழைத்து
எதிரில் வாகாய் நிறுத்தி
காறியுமிழ்ந்தேன் அவன் முகத்தில்
உமிழ்நீர் வழிய
உறைந்து அதிர்ந்து விழித்து
(வேறு வரிசையாகவும் இருக்கலாம்)
நின்றவன் கன்னத்தில்
ஓங்கி விட்டேனொரு அறையும்
திக்கெட்டும் கூவியழைத்து ஓலமிட்டு ஒப்பாரிவைத்து
(சந்தேகமில்லை, சாட்சாத் இதே வரிசைதான்)
அழுகிறானவன்
வேடிக்கை பார்க்க கூடியதொரு கூட்டம்
அவன் வித்தைகளை விளக்கு பிடித்துக் காட்டி
வசூலும் செய்தான்
அழுக்கைத் தேய்த்து உருட்டி
பொட்டலம் கட்டி விற்கும் சமர்த்தனொருவன்
“அறம் பிறழ்ந்தவன்”
என்று சுட்டுவிரல் நீட்டினான்
எப்போதும் கைவிலங்கை இடுப்பில்
கட்டித்திரியும் கலாச்சாரக் காவல்காரன்
காட்டிக்கொடுப்பவனை
கூட்டிக்கொடுப்பவனை
கூழைக்கும்பிடுபோடுபவனை
கூட இருந்தோரை குழிக்குள் தள்ளி மண்ணள்ளிப் போட்டு
காததூரம் ஓடி காதொளித்து நின்றவனை
செவிட்டிலறைவதில் அறமென்ன பிறழ்ந்துவிட்டது!
“உன் ஆவேசத்தை எழுத்தில் காட்டு”
கரிசனம் கொண்டவர் சொன்ன புத்தியிது
ஒருவேளை
அன்று சாட்சியாய் நின்றிருந்துவிட்டு
இங்கு
வேறொரு ‘கவிதையைக்’ கழித்திருக்கவேண்டுமோ?

கவிதாசரண் மே-ஜூன், 2003

குறிப்பு:

முதலில், இக்கவிதையை இணையத்தில் பிரசுரித்த பாஸ்டன் பாலாவிற்கு எனது நன்றிகள்.

http://snapjudge.wordpress.com/2004/10/06/

சில வருடங்களுக்கு முன்பாக, கிடைக்கும் பத்திரிகைகளில் எல்லாம் சாரு நிவேதிதா கட்டவிழ்த்துவிட்ட character assassination – ற்கு மெளனத்தையே பதிலாகத் தந்தேன். அவரது ஈனத்தனமான அவதூறுப் பிரச்சாரம் ஒரு வருட காலம் ஓயாமல் தொடர்ந்த பின்னரே எதிர்வினை ஆற்றுவது என்று முடிவு செய்து இக்கவிதை வடிவில் எழுதினேன்.

அதன் பிறகும், மூன்று வருடங்கள் கழித்தும், ஆனந்த விகடன் இதழில் மீண்டும் அவர் அவதூறைத் தொடர்ந்தபோது எழுதியதே இங்கு பதிவிலிட்டிருக்கும் “சாம்பிரதலையான் குப்பி”. ஆனால் அதையும் அப்பதிவில் குறிப்பிட்டிருந்த காரணங்களுக்காக பிரசுரிக்காமல் வைத்துவிட்டேன்.

பொதுவில் இதுபோன்ற character assassination முயற்சிகளுக்கு எனது எதிர்வினை/அணுகுமுறை இத்தகையவையே.

கவிதைகள், விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

செல்லம்மாள் – பாகம் II

அந்த ஈ மறுபடியும் அந்த உடலின் முகத்தில் வட்டமிட்டு உட்கார்ந்தது. பிரமநாயகம் பிள்ளை அதை உட்கார விடாமல் விரட்டுவதற்கு விசிறியால் மெதுவாக வீசிக்கொண்டே இருந்தார்.

சாவின் சாயலில் அவர் மனம் நிலைகுலையாமல் பக்குவப்பட்டுவிட்டதோ! சகதர்மினியாக இருந்த ஒரு ஜன்மத்துக்குத் துன்பச் சுமை குறைந்துவிட்டது என்பதிலே அவருடைய மனசுக்கு நிம்மதி ஏற்பட்டுவிட்டதா? சகதர்மினி நிம்மதியாகத்தான் கண்மூடினாளா? உடல் தந்த துன்பம் போதும், ஏ! தர்மராஜனே சீக்கிரம் என்னைக் கூட்டிக் கொண்டு போய்விடு என்று விரக்தியில் வேதனையில் உயிரைவிட்டுத் தொலைத்தாளா?

முனிசாமியைத் தந்தி கொடுக்க அனுப்பிவிட்டு வந்து உட்கார்ந்தவர் மனம் வெறுமையில் மிதந்து கொண்டிருந்தது. பொழுது இன்னும் விடிந்தபாடில்லை. எதிலும் மனம் செல்லாமல் எதிரே சற்று முன்வரை செல்லம்மாளாகக் கிடந்த அந்த உடலை உணர்ச்சி எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். சாம்பிராணி தீர்ந்து புகையும் வாசமும் குறைவது போலத் தெரிந்தது. எழுந்து மாடத்தில் வைத்திருந்த பொட்டலத்தைப் பிரித்து இன்னும் கொஞ்சம் கனலில் தூவினார். மடித்து சுவரோரமாக வைத்தார். புகை சற்று அதிகமாகவே எழுந்து பரவியது. கொஞ்சமாகத்தானே தூவினோம்.

மனசின் ஆழத்திலிருந்தல்லவா எழுந்தது அந்த வார்த்தை, “துரோகி! துரோகி! துரோகி! …” எவ்வளவு நிதானமாக இருந்தேன். இயலாமை, குற்றவுணர்ச்சி, குற்றவுணர்ச்சி. ஏன் இப்படி புகை அளவுக்கதிகமாக வருகிறது? என்னைக் கட்டிக்கொண்டு அவள் என்ன சுகத்தைக் கண்டாள். பத்து வருஷங்கள் என்ன சுகத்தைத் தந்தேன். தாம்பத்யம் … சீ! என்ன இது, புகை இப்படி … நிமிர்ந்து பார்த்தவர் …

புகை அமானுஷ்யமாக எழுந்து பரவியிருந்தது. விட்டம் வரை எழுந்திருந்த புகைமண்டலத்தில் ஒரு உருவம் … ஸ்தூலத் தடையால் மறையாமல் பிரும்மாண்டமாக … பூதம்! உடலில் ஒரு நடுக்கம் பரவி ஓடியது. உடன் பரவசம். ஒரு நிம்மதி. இனி வாழ்வதற்கு என்ன இருக்கிறது. துக்கம், மூச்சு முட்ட பரவிக்கிடக்கும் துக்கம். என்ன உலகம் இது?

பூதம் அதிரவைக்கும் சிரிப்பு, அட்டகாசம் எதுவும் செய்யவில்லை. சாதுபோல. பிரமநாயகம் பிள்ளையை உற்றுப் பார்த்தது. உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்பு. குனிந்து அவர் முகத்துக்கெதிராக தன் முகத்தைக் கொண்டு வந்தது. அவருக்கு மட்டுமே கேட்கும் படியாக, ஆழ்ந்த தொனியில்,

“என்ன பிள்ளைவாள், பயப்படாதீர்கள். உம்மை விழுங்க வரவில்லை. ஒரு சாபம், எதோ என்னாலானது, கொடுக்க வந்திருக்கிறேன். இந்தா பிடியும்! இப்போது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்வை, இந்த க்ஷ்ணம் வரைக்கும் வாழ்ந்த வாழ்வை, நீர் இன்னுமொருமுறை, இல்லை, கணக்கில்லாமல் மீண்டும் மீண்டும் வாழக்கடவீராக! அவசரப்படாதீரும். முடிவில்லாமல் திரும்பத் திரும்ப வாழப்போகும் அந்த வாழ்வுகளில் ஒரு துளிகூட புதிதாக எதுவும் இருக்காது; நீர் அனுபவித்த ஒவ்வொரு துன்பமும், ஒவ்வொரு மகிழ்ச்சியான கணமும், உம் மனதில் நிழலாடிய ஒவ்வொரு நினைப்பும், நீர் விட்ட ஒவ்வொரு பெருமூச்சும், நீர் செய்த அற்பத்தனமான சின்னச்சின்ன காரியங்கள் ஒவ்வொன்றும், பெரிய காரியங்கள் எதுவும் செய்திருந்தீர்களென்றால் அவையும், இதோ இங்கு மொய்த்துக் கொண்டிருக்கும் இந்த ஈயும், இந்த நிலவும், இங்கே இந்த மரங்களும் செடிகளும் கொடிகளும், இந்தச் சாம்பிராணிப்புகையும், இந்தக் க்ஷ்ணமும், நானும் எல்லாம் கொஞ்சம்கூட மாற்றம் இல்லாமல் அதே வரிசைக்கிரமத்தில் மீண்டும் மீண்டும் அப்படியே திரும்பத் திரும்ப உமக்கு நேரும். இருத்தலின் ஆதியந்தமில்லாத காலச்சக்கரத்தின் முள் ஒரே புள்ளியில் மீண்டும் மீண்டும் நின்று திரும்பச் சுழலும். அற்பப் பதர் நீரும் அந்தச் சுழலில் சிக்கிச் சுழன்று கொண்டிருப்பீர்!”

அதிர்ந்து போனவர் சுவரோடு சரிந்து அப்படியே உட்கார்ந்துவிட்டார். “ஐயோ!” என்றொரு மெல்லிய முனகல். சுய இரக்கமும் கோபமும் கொப்பளிக்க ஏறிட்டுப் பார்த்து, “நான் என்ன பாவம் செய்தேன். ஏன் இப்படியொரு சாபம்? இதைவிட நீ என்னை விழுங்கியிருக்கலாமே! ஏன்! ஏன்! ” ஆவேசம் தொனித்த அளவுக்கு சத்திருக்கவில்லை குரலில். கெஞ்சி இறைஞ்சுவது போல இருந்தது.

“என்னைக் கேட்டால்? என்னைப் படைத்தவன் இப்படிப் பேசவைக்கிறான். நான் என்ன செய்ய!” நிதானமாகச் சொன்னது பூதம்.

“நான் யாரிடம் போய்க் கேட்பது”, இறைஞ்சும் தொனி இறங்கி ஆவேசம் கூடியிருந்தது.

ஒரு சொடுக்கு போட்டது பூதம். ஒருக்களித்துப் படுத்த நிலையில் ஒரு மனிதர், ஒரு க்ஷ்ணத்தில் அங்கே இருந்தார். திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் மிரட்சியோடு பார்த்தவர், “என்ன இது, நான் எங்கே இருக்கிறேன்? நீர் யார்? இது என்ன … ?” பூதத்தைப் பார்த்தவர் அப்படியே வாயடைத்துப் போனார்.

“இவர்தான் உன்னைப் படைத்தவர். ஸ்ரீலஸ்ரீ. விருத்தாசலம் பிள்ளை. என்ன பித்தரே, சுகமா. நீங்கள் பிறப்பித்து விட்டதுகளுள் ஒன்று உங்களிடம் ஏதோ கேட்க வேண்டுமாம். என்னவென்று கேளுங்கள்”. கோணல் சிரிப்பு கொஞ்சமும் மாறாமல் சொன்னது பூதம்.

எத்தனை பேய்களைப் பார்த்தவர். காலனையும் காஞ்சனையையும் வேதாளத்தையும் உலவவிட்டு விளையாடியவர். நிலைமையைப் புரிந்து கொள்வது அவருக்கு சிரமமா என்ன. சுதாரித்துக் கொண்டு லேசாகச் செருமி உட்கார்ந்தபடியே, “எங்கே என் வெற்றிலைச் செல்லம்” என்று பக்கவாட்டில் துழாவினார்.

“அடடா … அதை மறந்துவிட்டேனே! அதில்லாமல் உமக்கு எதுவுமே ஓடாதே. சரி பரவாயில்லை. இந்தாரும்”. இன்னொரு சொடுக்கு. செல்லப்பெட்டி அவர் முன் காற்றில் மிதந்தது. யோசனையோடு அதைப் பிடித்து, திறந்து வெற்றிலைச் செல்லத்தை தடவ ஆரம்பித்தார். கடைசியில் நமக்கு இப்படியொரு நிலைமை வந்துவிட்டதே! சரி. என்னதான் ஆகிறது பார்ப்போம். பிரமநாயகம் பிள்ளை பக்கம் திரும்பி, “என்னப்பா, உனக்கு என்ன, சொல்லு”, என்றார் சாவதானமாக.

அவரது தொனி, செல்லத்தை அவர் தடவிய நிதானம் … பிள்ளையின் முகம் சிவந்தது. “அடப்பாவி, என்னை ஏன் இப்படி எழுதினாய். துயரம் … துயரம் … துயரம் … என்று என் தலையில் எழுதினாய். பத்து வருஷங்கள். இதோ சவமாகக் கிடக்கிறாளே, இவளுக்கும் எனக்கும் அப்படியென்னதான் உறவு. ஒரு இரவுகூடவா நாங்கள் …” நா தழுதழுத்தது. “எங்கள் வாழ்வில் இன்பம் என்று எதுவுமே இல்லையா? இப்போது பார். இந்தப் பூதம் – இந்தப்படியாக – சபித்திருக்கிறது எவ்வளவு கொடூரம். நீயே சொல். என் நிலையில் உன்னை வைத்துச் சொல்”.

தர்மங்கடம். ஆனால் நான் தான் கதையை முடித்துவிட்டேனே. இந்தப் பூதம் எங்கிருந்து கதைக்குள் வந்தது. செல்லத்தை மடித்து வாய்க்குள் திணித்துக் கொண்டே, “என்ன பூதனாரே, இது என்ன இப்படியொரு வியவகாரத்தில் என்னை மாட்டி விட்டீர்,” நாக்கில் சுரீரென்றது. சுண்ணாம்பு சற்று அதிகம் போல. இந்த மனக்கிலேசத்தில் கவனம் தப்பிவிட்டது.

“பித்தனாரே!” அந்த முகத்தில், அந்தச் சிரிப்பில் எந்த மாற்றமும் இல்லை. “நான் என்ன செய்யட்டும். என்னைப் படைத்தவன் இப்படிச் செய்ய வைத்துவிட்டான். உமது சிருஷ்டி உம்முன் நிற்கிறது. நீரே பேசும். இதில் நான் என்ன?” என்றது.

லேசுப்பட்டதாக இருக்காது போலிருக்கிறதே. விடக்கூடாது.

“அது சரி. நல்ல வேடிக்கைதான். என் கதைக்கும் உனக்கும் என்ன சம்பந்தம். என் கதைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கிறாயே. சரியான அபேதவாதியாக இருப்பாய் போலிருக்கிறதே.” இப்படிப் பிடித்தால்தான் சரிப்பட்டுவரும். இடத்தைக் காலி பண்ணும். ஜெயக்கொடி தன் பக்கம் என்று நம்பிக்கையோடு நிமிர்ந்து பார்த்தார்.

“பிள்ளைவாளுக்குப் பதி சொல்லுங்கள். அவர் கேட்பதிலும் நியாயம் இருக்கிறதில்லையா. பாவம் மனுஷன். ஒரேயடியாக நீர் அவர் தலையில் இவ்வளவு சுமத்தியிருக்கக்கூடாது. நீர் எழுதிய கதைகள், அதில் பிறப்பித்துவிட்டவைகள் எல்லாவற்றின் மீதும் ஏன் இப்படி சோகத்தைப் பிழிந்து தள்ளியிருக்கிறீர். வாழ்க்கையில் நீர் இன்பத்தை அனுபவித்ததேயில்லையா? உமது மனசாட்சியைத் தொட்டுச் சொல்லும். எனக்குத் தெரியும். அப்படியிருக்க முடியாது. ஆனால், கதை எழுதும்போது மட்டும் ஏன் அப்படி ஒரு சோகம். பாற்கடலைக் கடைந்து நீர் எடுத்தது ஆலகாலவிஷம் மட்டும்தானா? உமது தொண்டைக்குள் அதுமட்டும் சிக்கிக் கொண்டுவிட்டதா என்ன? இருக்கும். அதுதான் பித்தன் என்று சூட்டிக்கொண்டீரோ!”

பித்தன் தொண்டையை வருடிப் பார்த்துக் கொண்டார். சே! என்ன இது … லேசாக செருமுவது போல பாவனை செய்து, “என்ன அப்படிச் சொல்லிவிட்டாய். எத்தனை பேரை என் கதைகளில் கூரிய விமர்சனக் கணைகளால், கேலியால் கிழித்திருக்கிறேன். அந்தப் பரமசிவனையும் தர்மராஜனையுமே ஒரு கை பார்த்திருக்கிறேனே.” அவர் சொன்னதில் அவருக்கே நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை.

“அந்தச் சிரிப்பெல்லாம் வேதாந்தச் சிரிப்பு ஐயா. எல்லாம் துன்ப மயம், இதில் அழுதென்ன ஆகப்போகிறது என்ற வேதாந்தம். கோபித்துக் கொள்ளாதீரும். ஒரு பேச்சுக்குத்தான் கேட்கிறேன். உமது வாழ்வில் நீர் இன்பத்தைச் சுவைத்ததே இல்லையா. உமது பத்தினியாளோடு நீர் இன்புற்றிருக்கவில்லையா. குழந்தைகளின் மழலையை ரசித்ததில்லையா. தூக்கிக் கொஞ்சி விளையாடியதில்லையா. சந்தோஷங்கள் அனுபவித்த அந்த க்ஷ்ணத்தோடு மறந்துவிடும். துக்கங்கள் மட்டும் தேங்கித் தேங்கி வழிந்து ஓடும். ஏன் சந்தோஷ க்ஷ்ணங்களை சேர்த்தால் என்ன? வாழ்தலே அற்புதம். அதியானந்தம் என்று கொண்டாடினால் என்ன?” ஒரு குட்டிப் பிரசங்கமே நடத்தி விட்டது பூதம்.

லேசான ஒரு நடுக்கம். ஒரு முட்டாள் பூதத்திடம் – பூதங்களுக்கு ஏது புத்தி _ தர்க்கித்து மாட்டிக்கொள்வதா. அதுவும் என் சிருஷ்டி பிரமநாயகம் பிள்ளையின் முன்னால். பேச்சை மாற்றுவது உசிதம். “அட பரவாயில்லையே.” பிரமநாயகத்தை பார்த்துவிட்டு, “என் கதைகளையெல்லாம் படித்திருக்கிறாய் போலிருக்கிறதே. எங்கே, என் எதிர்காலம் எப்படி? சொல் பார்ப்போம்.”

“உமக்கென்ன, பிரகாசம்தான். வாழையடி வாழையாக உமக்கு வாசகர்கள் தோன்றுவார்கள். தலைமீது தூக்கி வைத்து உம்மைக் கொண்டாடுவார்கள். துயரம்! வாழ்வே பெருந்துயரம் என்று பதறுவதற்குத்தான் சீக்காளிகள் ஏராளமாக இருக்கிறார்களே. இனம் இனத்தோடு சேரும் என்பது உலக நியதி.” ஒரு க்ஷ்ணம் அவரை உற்றுப் பார்த்துவிட்டு, “உமது கதைகளைவிட உமது மேதைமையைப் போற்றுவார்கள்.”

“என்னைச் சட்டம் போட்டுச் சுவரில் மாட்டிப் பூப்போடுவதுதான் பெரிய ஆபத்து என்று எழுதிவைத்துவிட்டேனே.” க்ஷீணமாக வந்து விழுந்தன வார்த்தைகள். அந்தச் சாபம் என் மீது விழுந்திருந்தால் … மீண்டும் பிறக்க நேர்ந்தால் … ஆனால் அப்போதும் … தலை கவிழ்ந்தது, யோசனையில்.

பிரமநாயகத்தின் பார்வை தன்மீது நிலைகுத்தியிருப்பது உறுத்தியது.

உதட்டோரச் சிரிப்பு கொஞ்சமும் மாறாமல் இரக்கமற்ற அந்தப் பூதம் சாம்பிராணிப் புகையோடு கரைந்து கொண்டிருந்தது.

பின் குறிப்பு:

புதுமைப் பித்தனை பீடமாக்கும் முயற்சிகள் பற்றி tamil.com – ற்கு கட்டுரை எழுத முடிவெடுத்தபோது புனைவு x விமர்சனம் என்ற முரணை மீறும் ஒரு வடிவத்தில் எழுதித்தரவேண்டும் என்ற யோசனையே முதலில் எழுந்தது. அந்த முயற்சியின் விளைவாகவே இங்கு இந்தச் ‘சிறுகதை’. நிறப்பிரிகை சார்ந்தவர்களின் விமர்சனங்கள் ‘அரசியல்’ விமர்சனங்கள் என்று சொல்லப்பட்டுவரும் சூழலில் ஒரு மாறுதலுக்காக இந்த ‘இலக்கிய’ விமர்சனம் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

புதுமைப் பித்தனை பீடமாக்க முயற்சிப்பவர்கள் அவரை (தங்களுடைய) ஒரு குறிப்பிட்ட நோக்கில் வார்த்தெடுத்து முன்வைக்கிறார்கள். மதச் சொல்லாடல்கள் அனைத்தும் வாழ்க்கையை ஒரு ‘துன்பச் சாகரமாகவும்’ அதிலிருந்து தப்பித்து ஓடுவதைப் பற்றியுமே பேசுபவை. புதுமைப் பித்தனின் கதைகளில் வாழ்வு குறித்த இந்தப் பார்வையே ஒரு அடிச்சரடாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது என் அவதானிப்பு. அவரைப் பீடமாக்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்களிடத்திலும் இதே பார்வைதான் இருக்கிறது.

இத்தகைய கலைஞர்களை நீட்ஷே sick artists என்பான். “வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” என்று முன்மொழிந்தவன் அவன். வாழ்வை ஒரு பெரும் பேறாக, அதன் கொடூரங்கள், சிக்கல்கள், அத்தனையையும் ஏற்றுக் கொண்டு (சகித்துக் கொண்டல்ல) களிவெறியோடு, ஒரு eternal childishness – ற்குள் போக அழைப்பு விடுக்கிறான். அதற்கு அவன் வைக்கும் ultimate test இச்’சிறுகதை’யில் பூதம் கேட்கும் கேள்வி.

மற்றபடி, இது என் முழுமையான விமர்சனமும் அல்ல; இறுதியானதும் அல்ல. சந்தர்ப்பம் வாய்க்கும்போது மீண்டும் பேசுவோம் – விரிவாக.

குறிப்பு:

முதலில் tamil.com – லும் பின்னர் சுகனும் ஷோபா சக்தியும் தொகுத்த “சனதருமபோதினி” யிலும் (2001) பிரசுரமானது.

சிறுகதை, வகைப்படுத்தாதவை, விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: . Leave a Comment »

மூன்று பிணங்களும் ஒரு பேய்க்கதையும்

குறிப்பு: இக்கட்டுரையின் நோக்கத்தை வாசிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இங்கு இப்போது தருவதற்கு இன்னொரு காரணமும் சேர்ந்திருக்கிறது. தமிழ்ச் சூழலில் தற்போது சில ஆழ்ந்த கருத்தமைவுகளைக் குறிக்கும் சொற்களை எந்தப் புரிதலும் இல்லாமலேயே எதற்கெடுத்தாலும் உதிர்ப்பது சர்வசாதாரணமாகிவிட்டது. அதில் ஒன்று பெருங்கதையாடல். இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் ‘இந்துத்துவ பெருங்கதையாடல்’ என்று சொல்வது சர்வசாதாரணமாகிவிட்டது. இந்துத்துவக் கதையாடலை பெருங்கதையாடல் என்று சொல்லமுடியாது என்பது என் துணிபு. அதை இங்கு தொட்டிருக்கிறேன். அப்படிச் சொல்வதனால் என்ன அரசியல் சிக்கல் உருவாகிறது என்பதை கதையாடல் என்றால் என்ன, பெருங்கதையாடல் என்றால் என்ன, என்ற விளக்கங்களுடனும் இங்கு இந்துத்துவக் கதையாடல் குறித்து தந்துள்ள குறிப்புகளை மேலும் விளக்கியும் விரைவில் எதிர்பார்க்கலாம்.

ஆண்டு – 1780. காஞ்சிபுரத்திலிருந்து இரவோடு இரவாக, இரகசியமாக, ‘மூன்று பிணங்கள்’ கடத்திச் செல்லப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு திசையில். ஒன்று திருப்பதிக்கு பத்திரமாகப் போய்ச்சேர்கிறது. ஐந்து வருடங்கள் அப்போதிருந்த ‘Z’ பிரிவு பாதுகாப்பில் மிகமிக பத்திரமாக ‘வாழ்ந்து’ வந்தது. பிறகு, 1785 – ஆம் ஆண்டு திரும்பவும் காஞ்சிபுரத்திற்கே அதை அனுப்புவது என்று முடிவாகிறது. அப்போதிருந்த சென்னையின் ஆங்கிலேயக் கவர்னர், அதை இராணுவப் பாதுகாப்போடு கொண்டுவர உத்திரவிட்டு, சந்திரகிரியில் இருந்த ஆங்கிலப் படைப்பிரிவின் தளபதிக்கு கடிதம் எழுதுகிறார். ஒருவழியாக அதுவும் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தது. நேற்றுவரையில் அங்கு பத்திரமாக இருப்பதாகவே தகவல்.

நான் கதை எழுதுபவன் அல்லன். இது கதையும் அன்று, வரலாறு. வரலாறு எழுதுபவனும் அல்லன். ஆவிகளில் எனக்கு நம்பிக்கையில்லை. கடந்த காலங்களைத் தோண்டி, தலைமுறைகளின் ஆவிகளைக் கிளப்புவது வரலாறு. அரசியல்வாதியுமல்ல யாம். பிணங்களைக் காட்சிக்கு வைத்து அவற்றின் மீது நடப்பதே அரசியல்.

ஆனால், இந்த மூன்றையும் ஒரே ‘ஸ்ட்ரோக்கில்’ செய்து காட்டுபவர்களைப் பார்க்கும்போது ஆச்சரியப்படத்தான் தோன்றுகிறது. அதுவும், அமைதியானவர், அலட்டிக் கொள்ளாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர் என்று இலக்கிய உலகில் பெயரெடுத்த ஒருவர் இதைச் செய்து காட்டும்போது, சில நேரங்களில் மூச்சுத் திணறிவிடுகிறது. சமீபமாக அப்படித் திணறச் செய்தது ‘அவுட்லுக்’ வார இதழில் (ஏப்ரல் – 11, 2005) வந்திருந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் பேட்டி.

“தமிழ்நாட்டிலுள்ள பிராமணர்கள் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டவர்களைப் போல உணர்கிறார்கள்” என்று ஆரம்பித்து, அதற்குக் காரணம் திராவிட இயக்கம்தான் என்ற குற்றச்சாட்டை வைத்து, தமிழ்நாட்டு பிராமணர்கள் சரியான தலைமையின்றித் தவிக்கிறார்கள் (“ஜயேந்திரர் ஒருக்காலும் ஒரு நல்ல தலைவராகியிருக்க முடியாது …ராஜாஜி ஒரு நல்ல தேர்வுதான்; ஆனால் அவர் இன்று இல்லையே”) என்று புலம்பித் தீர்த்திருக்கிறார்.

அசோகமித்திரனை இப்படி ‘மனம் திறக்க’ வைத்திருப்பவர் எஸ். ஆனந்த் என்பவர். லிட்டில் ஆனந்த் என்ற பெயரில் தலித் ஆதரவுப் போராளியாக சிற்றிதழ் அரசியல் வட்டாரங்களில் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர். தமிழில் ஒரு பக்கத்தை ஒன்றரை மணிநேரத்திற்கு எழுத்துக்கூட்டிப் படித்துக்கொண்டிருப்பவர். ஆனாலும் இவரது பெயரில் இவரே எழுதிய கட்டுரைகள் தமிழில் ஒன்றிரண்டு வந்திருக்கின்றன. தமிழ்நாட்டு சமூக – அரசியல் சூழலோ, வரலாறுகளோ அதிகம் அறியாதவர். என்றாலும், ‘தமிழ்நாட்டு மக்களுக்கு பெரியார் என்றால் பெரியாறு அணைதான் ஞாபகத்திற்கு வரும்’ என்பது போன்ற அரிய, ஆழ்ந்த கருத்துக்களையெல்லாம் கண்டுபிடித்துச் சொன்ன பெருமைக்குரியவர். ஐதராபாத்திலிருந்து (கவனம், திருப்பதியிலிருந்து அல்ல) வந்தவர். தமிழ்நாட்டில் பார்ப்பனர் – தலித் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தன்னை ‘அர்ப்பணித்துக்’ கொண்டிருப்பவர்.

அந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்சொன்ன இதழில் வந்துள்ள அவரது கட்டுரை. கட்டுரையின் தலைப்பு, “தலித்துகளாக்கப்பட்டுள்ள பிராமணர்கள்” (Dalits in Reverse). தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் ‘பரிதாப’ நிலையை மிகுந்த அங்கலாய்ப்போடு அலசும் கட்டுரை. மருந்துக்கூட ஒரு தலித்தினுடைய கருத்தோ அல்லது ஒரு பார்ப்பனரல்லாதவருடைய கருத்தோ அதில் பதிவு செய்யப்படவில்லை. கட்டுரையை அவர் துவங்கியிருக்கும் விதமும் சுவாரசியமானது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா. ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார்கள். “கபாலி கபாலி” என்று ‘ஆனந்தப்’ பரவச முழக்கங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறது. நூற்றுக்கணக்கான பார்ப்பனரல்லாதவர்கள் தேரை இழுத்துக்கொண்டு வந்துகொண்டிருக்கிறார்கள். அப்போது 40 வயது மதிக்கத்தக்க P.மாதவன் (பெயர் சொல்லும் சேதி: அவர் ஒரு பார்ப்பனர்) என்பவர், தேர் வடத்தைப் பிடிக்க ஆசைப்பட்டுக் கேட்கிறார். வடத்தைப் பிடித்துவிட்டு திருப்தியோடு பழையபடி வேடிக்கை பார்ப்பவராக நின்றுவிடுகிறார். அவர் ஆசைப்பட்டது எதோ கொஞ்சம் புண்ணியத்துக்கு, அவ்வளவுதான். எவ்வளவு பரிதாபம் பார்த்துக்கொள்ளுங்கள்!

விஷயம் இன்னும் விளங்காதவர்களுக்கு கொஞ்சம் இப்படி விளக்கிச் சொல்லலாம். அதாகப்பட்டது, தேர் இழுக்கும் பிரச்சினையில் பார்ப்பனர்கள் கிட்டத்தட்ட தலித்துகளுடைய நிலைமையில் இருக்கிறார்கள். ஏதோ கொஞ்சம் ‘வடத்தை’ தொட்டுப் பார்த்து திருப்தி அடைந்து கொண்டிருக்கிறார்கள். தலித்துகளை வன்கொடுமைக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கிற அதே பார்ப்பனரல்லாதார்தான் பார்ப்பனருடைய இடத்தைப் பிடித்துக்கொண்டு அவர்களையும் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, பார்ப்பனர்களுடைய நிலை, இன்றைக்கு தலித்துகளுடைய நிலைக்கு ஒப்பானது. ஆகையால், தலித்துகள் பார்ப்பனர்களோடு சேரவேண்டியது வரலாற்று விதி!

இந்த ‘விதியை’ நினைத்து நொந்துகொண்டிருந்த நேரத்தில்தான், முதலில் சொன்ன காஞ்சிபுரத்து விவகாரம் நினைவிற்கு வந்தது. அதற்குத் திரும்புவோம்.

காஞ்சிபுரத்திற்கு வடக்கே பத்து மைல் தொலைவில், புல்லனூர் என்ற இடத்தில் 1780 – ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் 10 – ஆம் தேதி, ஐதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தானுடைய படைகள், பிரிட்டிஷ் கொலனெல் ஜான் பெய்லி என்பாரின் தலைமையிலிருந்த ஆங்கிலேயப் படையைத் தோற்கடித்து நிர்மூலமாக்கின. ஐதரின் அடுத்த இலக்கு காஞ்சி என்று தெரிந்தவுடன் தான், காஞ்சிபுரத்திலிருந்த வரதராஜசுவாமி, ஏகாம்பரநாதர், காமட்சியம்மன் கோயில் சிலைகள், பிணங்கள் என்ற போர்வையில் கண்காணா இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டன. அவற்றில், காமாட்சியம்மன் சிலை, முழுக்க முழுக்க தங்கத்தினாலானது. அதை தஞ்சை மராத்திய அரசின் ஆட்சிக்குட்பட்ட உத்தரபாளையத்தைச் சுற்றியிருந்த காடுகளுக்கு எடுத்துச் சென்றனர். பிற்பாடு அதை தஞ்சை அரசர், தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோயிலுக்கென்று ‘எடுத்துக்’ கொண்டார்.

ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்து சென்ற ‘பிணம்’ எங்கு கொண்டு செல்லப்பட்டது என்ற தகவல் இப்போதைக்கு என்னிடம் இல்லை. ஆனால், 1785 – ஆம் ஆண்டு, திப்பு சுல்தான் கொல்லப்பட்டு சிறீரங்கப்பட்டிணம் சூறையாடப்பட்ட பிறகுதான் திருப்பதியில் (கவனம், ஐதராபாத்தில் அல்ல) ஒளித்து வைக்கப்பட்டிருந்த வரதராஜசுவாமிகள் சிலையைத் திரும்பவும் காஞ்சிபுரத்திற்கே கொண்டு செல்ல முடிவெடுக்கிறார்கள்.

அதற்கு, பிரிட்டிஷ் படைகள் பாதுகாப்பும் தருகின்றன. பாதுகாப்பு தருவதோடு நின்றுவிடாமல், அச்சிலைகளை மறுபடியும் கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்து விழா ஏற்பாடுகள் நடக்கின்றன என்ற செய்தி கிடைத்ததும், கிழக்கிந்தியக் கம்பெனியின் சென்னைக் கமிட்டி, விழா எந்தத் தடங்கலும் இல்லாமலும், ‘கோலாகலமாக’ நடைபெறவும் காஞ்சிபுரத்துப் பார்ப்பனர்களுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்யுமாறு சென்னைக் கலெக்டருக்கு உத்தரவும் பிறப்பித்தது.

பிரிட்டிஷ் ஆட்சியில் பார்ப்பனர்களின் செல்வாக்கு மெல்ல மெல்லக் குறைந்தது என்றே சொல்லக் கேட்டுப் பழகியவர்களுக்கு இது போன்ற தகவல்கள் ஆச்சரியத்தைத் தரலாம். ஆனால், ஒரு சாதாரண வணிக நிறுவனம் என்ற நிலையில் இருந்து, ஒரு அரசாங்கம் என்ற நிலைக்கு மாறிய பிரிட்டிஷார், முற்றிலும் அன்னியர்களான தமது ஆட்சிக்கு ஒரு நியாயத்தை உருவக்கிக்கொள்ள, தாமும் ‘உள்ளூர்’ அரசர்களைப் போன்றவர்கள்தாம் என்று நிரூபிக்கச் செய்த முதல் வேலை, கோயில்களின் புரவலர்களாகவும், பார்ப்பனர்களின் பாதுகாவலர்களாகவும் தம்மைக் காட்டிக்கொண்டதுதான். கண்ணகி காலத்தில் மட்டுமல்ல, மன்றோக்களின் காலங்களிலும்கூட இந்த நிர்ப்பந்தம் எல்லா ஆட்சியாளர்களுக்கும் இருந்தது.

இதில், 1794 – 98 ஆண்டுகளில் சென்னை கலெக்டராக இருந்த லியோனல் ப்ளேஸ் என்பவர் எடுத்துக்கொண்ட சிரத்தை அலாதியானது. வரதராஜசுவாமி கோயில் எப்படியோ அவரது விசேஷ அன்பிற்குப் பாத்திரமானது. பாழடைந்த நிலையில் இருந்த அக்கோயிலை மறுசீரமைப்பு செய்து, வைகாசித் திருவிழா எடுத்தார். திருவிழாவிற்கு 30,000 பேர் திரண்டார்கள் என்று பூரித்தார். உணர்ச்சிவயப்பட்டு, கோயில் நிதியிலிருந்து 2,161 பகோடாக்கள் (அன்றைய நாணயம்) மதிப்புள்ள நகைகள், வெள்ளிச் சாமான்களை ‘தானமாகத்’ தந்தார். காஞ்சிபுரத்துப் பார்ப்பனர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். ஐம்பது ஆண்டுகள் கழித்தும்கூட, 1849 – ல் காஞ்சிபுரத்திற்கு ‘விசிட் அடித்த’ அலெக்சாண்டர் டஃப் என்ற கிறித்துவப் பாதிரியிடம் அவர்கள் அதை ‘நன்றியோடு’ நினைவு கூர்ந்தனர்.

ப்ளேஸைத் தொடர்ந்து கலெக்டரான ஃஅட்ஜ்ஸன் என்பவர், இன்னும் ஒரு படி மேலே போய், 1799 -ஆம் ஆண்டு வானம் பொய்த்தபோது, வருண பூசை நடத்துவதற்கு 2000 பகோடாக்கள் (இன்றைய மதிப்பில் ஏறக்குறைய நான்கு இலட்சங்கள்) அரசு நிதியிலிருந்து ‘தானமாகத்’ தந்தார்.

ஆரம்பகால பிரிட்டிஷ் ஆட்சி சநாதன ‘தர்மம்’ மீண்டும் நிலைநிறுத்தப்பட்ட பார்ப்பனப் பொற்காலம் என்று சொன்னாலும் மிகையில்லை. அதனாலேயே அவர்கள் கடைசிவரையில் பிரிட்டிஷாரின் விசுவசிகளாக இருந்தார்கள். கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில்தான் பிரிட்டிஷ் அரசு தலித்துகளுக்கு எதிரான கொடூரமான சட்டங்களையும் நடைமுறைப்படுத்தியது. உதாரணத்திற்கு, 1798 – ஆம் ஆண்டு உத்தரவொன்று, (பார்ப்பனக் கோட்டைகளான) கும்பகோணம் மற்றும் மாயவரம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து குடிபெயர்ந்து வேறு இடங்களில் வேலை செய்து கொண்டிருந்த பள்ளர்கள் மற்றும் பறையர் இனமக்களை அப்பகுதிகளைச் சேர்ந்த நிலவுடைமையாளர்கள் (90 % -கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்கள்) மீண்டும் தங்களுடைய பண்ணையடிமைகளாக்கிக்கொள்ள முழு உரிமை அளித்து பிரகடனம் செய்தது.

ஆனால், இதற்கு நேர்மாறாக, பிரிட்டிஷ் ஆட்சிக்கு முந்தைய சில நூற்றாண்டுகளில், சநாதன ‘தர்மம்’ இறங்கு முகத்தில் இருந்தது. முஸ்லீம்களின் ஆட்சி அதற்குக் கிடைத்த பலத்த அடிகளில் ஒன்று. மைசூர் உடையார் அரசர்களின் ஆட்சியில் பார்ப்பனர்கள் விரட்டியடிக்கப்பட்டது பிரசித்தி பெற்ற கதை. அரண்மனைக் கருவூலத்திற்குச் சேரவேண்டிய பணத்தை பொய் கணக்குக் காட்டி பெருமளவில் சுருட்டினார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, பார்ப்பன அதிகாரிகள் கடும் சித்திரவதைக்கும்கூட ஆளாக்கப்பட்டார்கள். உடையார்களைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஐதர் அலி, திப்பு சுல்தான் காலங்களிலும்கூட இந்தப் ‘பாரம்பரியம்’ தொடர்ந்தது.

பார்ப்பன எதிர்ப்பு என்பது, ஏதோ தமிழ்நாட்டில் மட்டும்தான், அதுவும் திராவிட இயக்கத்தால்தான் உருவானது என்றும், அதை ‘பார்ப்பனரல்லாதார்’ மட்டும்தான் முன்னெடுத்தார்கள் என்றும் தொடர்ந்து பாடிக்கொண்டிருப்பது பார்ப்பனர்களுடைய வழக்கமாகியிருக்கிறது. இதற்கு மறுப்பாக, இதுபோன்ற இன்னும் ஏராளமான தகவல்களைத் தரமுடியும். ஆனால், அதைவிட, இப்படியொரு கட்டுக்கதை ஏன் உருவானது என்று பார்க்கவேண்டியது இன்று அவசியமாகியிருக்கிறது.

கட்டுக்கதை என்று சொல்வதைவிட புராணக் கதை என்று சொல்வது சரியாக இருக்கும். கட்டுக்கதை என்பது இட்டுக்கட்டுவது; ‘இல்லாததையும் பொல்லாததையும்’ சொல்வது. புராணக்கதை, ‘காலாகாலமாக’ சொல்லப்பட்டு வருவதாகக் கருதப்படுவது; ஆதியும் அந்தமும் இல்லாதது என்று சொல்லப்படுவது.

புராணக்கதைக்கு சமஸ்கிருத மரபில் ஐந்து இலட்சணங்கள் உண்டு. உபபுராணங்கள், தலபுராணங்கள் என்று வகைப்பாடுகளும் உண்டு. அவற்றுக்குள் போகாமல், இந்த புராணக்கதை மரபின் முக்கியத்துவம் என்ன, அது எப்படி செயல்படுகிறது என்று மட்டும் பார்ப்போம்.

எளிமையாகச் சொல்வதென்றால், புராணக்கதை என்பது, ஆதியில் ‘பூலோகம் எவ்வளவு க்ஷேமமாக இருந்தது’ என்று ஆரம்பித்து, மெல்ல மெல்ல எப்படி அது ‘சீரழிந்து’ படுபாதாளத்திற்குள் வீழ்ந்தது என்று விவரித்துச் சொல்லும் ஒரு வரலாறு சொல்லும் முறை. இந்தியச் சூழலில், பார்ப்பனர்கள் தம்மைச் சுற்றியிருக்கும் சமூக வாழ்வை செரித்துக்கொள்ள உருவாக்கிய ஒரு வரலாறு எழுதும் முறை. சநாதன ‘தர்மத்திற்கு’ அரணாக எழுந்த ஒரு கருத்தியல் ஆயுதம். இந்த வரலாறு எழுதும் முறையில் காலம் கீழ் நோக்கி சுழன்று சரிந்து விழுவதாக இருக்கும்.

க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்ற நான்கு யுகங்களுள் க்ருத யுகம் பொற்காலம், அதிலிருந்து சரிந்து சத்தியத்தின் வழி சநாதனம் தழைக்கும் த்ரேதா யுகம் (உண்மையே பேசும் அரிச்சந்திரன்; ஏகபத்தினி விரதன், ‘இன்று போய் நாளை வா’ என்று நிராயுதபாணியாக நிற்கும் இராவணனை வழியனுப்பி நிற்கும் இராமன்). அதுவும் கெட்டு, எந்த வழியிலாவது சநாதனம் நிலைநிறுத்தப்படும் துவாபர யுகம் (கள்ளங்கபடம் மிகுந்த கிருஷ்ணனும் அவனது ‘லீலைகளும்’; பொய்க்குத் துணைபோயாவது துரோணரைக் கொல்லும் நிலைக்குத் தள்ளப்படும் தருமனும்). எல்லாம் கெட்டு, சநாதனம் வீழ்ந்து கிடக்கும் கலியுகம் என்று முடியும். பிரளயம் உண்டாகி பூலோகம் அழியும். மீண்டும் முதல் யுகம்.

கலியுகத்தில் எல்லாம் கெட்டது என்றால் சநாதன ‘தர்மம்’ அழிந்தது என்று பொருள். சநாதன ‘தர்மம்’ அழிந்தது என்றால். பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும்விட ‘உயர்ந்தவர்கள்’ என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள யாரும் இருக்கமாட்டார்கள் என்று அர்த்தம். புராணக்கதைப்படி அறியப்பட்ட இந்திய வரலாறு முழுவதுமே கலியுகம்தான். நாம் கலியுகத்தின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் (இன்னொரு சுனாமி நிச்சயம் உண்டு!).

புராணக்கதைப்படி கலியுகத்தில் சநாதன ‘தர்மம்’ வீழ்ந்து கிடக்கும் என்பது மட்டுமல்ல, கலியுகத்தின் இறுதியில் பார்ப்பனர்களேகூட அந்தத் ‘தர்மத்தை’ சரிவர பின்பற்றிக்கொண்டிருக்க மாட்டார்கள். “ஈமக்கிரியைச் சடங்குகளைக்கூட இந்தக் காலத்தில் சரிவர செய்யமுடியவில்லை. அதனால் என் பிள்ளைகளிடம் எனக்கு அதையெல்லாம் செய்யவேண்டாம் என்று சொல்லிவிட்டேன் … இன்னும் கொஞ்ச காலத்தில் புரோகிதர்களே இல்லாமல் போய்விடுவார்கள் போலிருக்கிறது … கமலஃஆசன் மாட்டுக்கறி தின்று திராவிடக் கருத்தியல் பேசும் பிராமணர்,” என்றெல்லாம் அசோகமித்திரன் சொல்வது வெறும் புலம்பல் அல்ல, புராணக்கதை பாடும் சநாதனத்தின் மனசாட்சி (கலி முத்திடுத்து! கலி முத்திடுத்து!).

அந்த ‘மனச்சாட்சியின் குரலால்’தான் பெரியவாளிடம் ஆசியைப் பெற, உண்ணா நோன்பிருந்து அவரது தாயார் காத்துக்கிடந்தபோதும், கணவனையிழந்த அவர், தலையை மழிக்காமல் இருந்ததால் அவரின் ஆசியைப் பெறமுடியாமல் போனது என்று கூசாமல் சொல்ல முடியும். மாட்டுக்கறி தின்னும் பிராமணர் என்று வசைபாடமுடியும். இந்தப் பேட்டியை எடுத்து வெளியிட்டு பார்ப்பனர்களும் தலித்துகளுடைய நிலைமையில்தான் இருக்கிறார்கள் என்று எழுதும் துணிச்சலும் அந்த மனசாட்சியின் குரலுக்குத்தான் வரமுடியும்.

ஆக, இப்படிக் கலி முற்றியதற்கும், பார்ப்பனர்கள் ‘சீரழிந்ததற்கும்’ ஒட்டுமொத்த காரணம், திராவிட இயக்கத்தைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்! ஆகையால், இதில் காழ்ப்பு ஒன்றும் இல்லை நண்பர்களே! தனிப்பட்ட பகை யாருக்கும் யார் மீதும் இல்லை. இது முழுக்க, அதாவது, திராவிட இயக்கத்தால் பார்ப்பனர்கள் ‘துன்புறுத்தப்பட்டார்கள்’ என்ற குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க புராணக்கதை சொல்லும் பார்ப்பன மரபிலிருந்து எழும் ‘இயல்பான’ ஒன்றுதான்.

இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், அசோகமித்திரன் போன்ற சநாதனிகள் சொல்வதைப் போல, ‘திராவிட இயக்க (அதாவது தி.மு.க.) ஆட்சியில்’ பார்ப்பனர்களுக்கு எதிராக ஒரு புடலங்காயும் அரியப்படவில்லை என்பதுதான். ஆட்சியைப் பிடிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்பாகவே அது பார்ப்பன எதிர்ப்பை மெல்ல மெல்ல கைகழுவியது என்பதே வரலாறு. பேச்சளவிலும்கூட அதிலிருந்து துண்டித்துக்கொண்டது. தி.மு.க – வே கைகழுவிய பார்ப்பன எதிர்ப்பு அரசியலை அதன் மீது சுமத்தி, தாமாகவே அஞ்சி நடுங்கிப் பயந்தவர்கள் பார்ப்பன சநாதனிகள். ‘சூத்திராள்’ ஆட்சியில் வாழப் பொறுக்காமல், தாமாகவே ‘அஸ்தினாபுரத்திற்கு’ மாற்றல் வாங்கிப் பறந்தவர்கள். அதற்குப் பிறகு, ‘பூலோக சொர்க்கமாம்’ யு.எஸ். – சிற்கு.

‘தேவன் தமக்கு உடன்படிக்கை செய்துகொடுத்த பிரதேசத்தைத்’ தேடித் தேடி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அலைந்தவர்கள் யூதர்கள். ஒருவகையில் அசோகமித்திரன் பார்ப்பனர்களை யூதர்களோடு ஒப்பிட்டிருப்பதும் சரிதான். அவர்களும் புரோகிதத் தொழிலுக்கே மிகுந்த மரியாதை கொடுத்தவர்கள். உடல் உழைப்பை வெறுத்து ஒதுக்கியவர்கள். வட்டிக்கு விட்டே ஐரோப்பாவின் அரசுகளை தமது அடகுப் பெட்டிகளில் அடைத்து வைத்திருந்தவர்கள். அந்தப் பணத்தை முதலீடாகக் கொண்டே, ஜெருசலேமைச் சுற்றியிருந்த நிலங்களை வாங்கி, இஸ்ரேல் தேசத்தை உருவாக்கியவர்கள். உலக வல்லரசான அமெரிக்காவின் பொருளாதாரத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவர்கள். என்னதான் இஸ்ரேல் என்று அவர்களுக்கு ஒரு நாடு இருந்தாலும் அவர்களுக்கும் பூலோக சொர்க்கம் அமெரிக்காதான்.

அவர்களுக்கு ஒரு கடவுள் இருந்தார். இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பே பழுத்த பழமாகிக் கிடந்தவர் அவர். நீண்ட வெண்தாடி மடிமீது புரண்டிருந்த அவரது பெயர் யஃஓவா. சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அவர் மரணமடைந்துவிட்ட செய்தியை உலகுக்கு அறிவித்தான் நீட்ஷே என்ற பெரும் தத்துவஞானி.

ஆனால், அவரது ஆவி இன்னமும் இப்புவியைவிட்டு நீங்கியபாடில்லையாம். உடன்படிக்கை செய்துகொண்ட தமது செல்லப் பிள்ளைகளான இஸ்ரவேல் தேசத்தாருக்கு, கடைசியாக ஒன்றே ஒன்றை ஞாபகப்படுத்திவிட்டுச் செல்லவேண்டும் என்ற நினைப்பிலேயே அவர் உயிர் பிரிந்திருக்கிறது. பேய்க்கதை என்று வேறு தலைப்பு வைத்துவிட்டேன். அதனால், கட்டாயம் இதைச் சொல்லியே ஆகவேண்டியிருக்கிறது. தயவு செய்து, அசோகமித்திரனோ அல்லது அவரது சகபாடி சுந்தர ராமசாமியோ (கட்டுரை எழுதப்பட்ட காலத்தில் உயிரோடிருந்தார்) அடுத்தமுறை யு.எஸ். செல்லும்போது, உமது உடன்பிறவாச் சோதரரான இஸ்ரவேல் தேசத்தாரிடம் இந்தச் செய்தியை சொல்லிவிடுங்கள்:

“அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அனுப்புவார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்க மாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள்.

இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனி புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.

அவர்கள் தனித்துத் திரிகிற கழுதையைப்போல் அசீரியண்டைக்குப் போனார்கள்; …. (ஓசியா – 8: 7,8,9).

பின்குறிப்பாக: திருவாளர் அசோக்கின் புகழ் பெற்ற நாவல் “18 – ஆம் அட்சக் கோடு”. அவரது இந்தப் பேட்டிக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை அதை எடுத்து வாசித்துப் பார்த்தேன். சுவாரசியமான விஷயங்கள் கவனத்திற்கு வந்தன. அதன் கதாநாயகன் சந்திரசேகரனுக்கு, எதிர்ப்படும் மற்றவர்கள் எல்லோரும் – எருமை மாடு முதல் ஆங்கிலோ இந்தியர்கள், முஸ்லீம்கள், பார்ப்பனரல்லாத தமிழர்கள், தெலுங்கர்கள் அத்தனை பேரும் – ஏதாவது ஒருவகையில் அவனுக்கு துன்பத்தைத் தருபவர்களாகவே இருக்கிறார்கள், ஒரேயொரு நபரைத் தவிர. அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ரங்கராமனுஜம் (ஐயங்காராக இருக்கலாம்).

அடுத்து, அவன் ‘சைட்’ அடிக்கும் பெண்கள் ஒருவர்கூட அவனை சட்டை செய்வதில்லை. அவனுடைய அக்காளின் தோழி நாகரத்தினம் உட்பட (அனிதா ரத்தினத்திற்கு 1970 -ளிலேயே தமிழ்நாடு முழுக்கத் தேடி அலசியும் தகுதியான ஒரு அவளாத்துப் பிள்ளைகூட கிடைக்கவில்லையாம். அப்போதே எல்லோரும் யு.எஸ். போய்விட்டிருந்தார்களாம்).

அடுத்த முக்கியமான விஷயம். ஒட்டுமொத்த நாவலில் தலித்துகள் ஒரேயொரு இடத்தில் வருகிறார்கள். அதுவும்கூட அவன் ‘சைட்’ அடிக்கும் ஒரு பெண் சம்பந்தமான இடத்தில். அந்தச் சித்தரிப்பை அப்படியே தருகிறேன்:

“சந்திரசேகரன் குசினி பறச்சேரியையும் கடந்து சென்றான். அவன் சிறுவனாக இருந்தது முதலில் அப்பெயரைக் கேட்டபோது எதோ வசவு போலத்தான் தோன்றிற்று. ஆனால் அங்கே வசிப்பவர்களே அந்த இடத்தை அப்படித்தான் குறிப்பிட்டார்கள். ஒரே தெலுங்காகவும் ஓரளவுக்கு உருதுவாகவும் உள்ள அந்த ஊரில் அந்த இடம் மட்டும் முழுக்கத் தமிழ். ஆனால் என்ன தமிழ்? அந்தத் தமிழ் சந்திரசேகரனுக்குச் சரியாக புரிந்ததில்லை. அந்தச் சேரியில் ஆண்களில் வயது வந்தவர்கள் அனைவரும் தங்களைப் பட்லர்கள் என்று கூறிக் கொண்டார்கள்.ஓரிருவர் கார் டிரைவர்கள். ஆண்கள் அதிகம் பேசிக்கொள்ளமாட்டார்கள். ஐந்தாறு பேராகச் சேர்ந்துகொண்டு சீட்டாட்டம் ஆடினால்கூட மிகக் குறைந்த சப்தம்தான் அவர்களிடமிருந்து எழும். அவர்கள் வேலை செய்து வந்த வெள்ளைக்காரர்கள் வீடுகளின் கட்டுப்பாடு அப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், ஆனால் பெண்கள் அவ்வளக்கவ்வளவு தொண்டையை உபயோகப்படுத்துவார்கள்.
அவர்கள் சண்டையை ஓர் உச்சக் கட்டத்தில் ஆனால் கைகலப்பில்லாமல் மணிக்கணக்கில் நடத்துவார்கள். இவ்வளவு சண்டைக்கும் அருகிலேயே ஆண்கள் பீடி குடித்தபடி அமர்ந்திருப்பார்கள். அப்படியே தூங்கியும் விடுவார்கள். அவர்கள் விழித்து எழுந்திருக்கும்போது சண்டை ஓயாமல் தொடர்ந்து கொண்டிருந்தால் ஒன்றுக்கு இரண்டாக கொட்டாவி விடுவார்கள். ஆனால் அந்த இடத்தில்தான் சேறும் சக்தியும் வெங்காயத் தோலும், கோழி எலும்புகளும், நாயும், பன்றியும், இறைச்சி சுடும் நாற்றமும் சண்டையும் காது கொடுத்துக் கேட்க முடியாத வசைச் சொற்களும் சாபங்களும் நிறைந்திருக்கும். அந்தச் சேரியில்கூட சந்திரசேகரனின் மனதிற்கு உபாதையளிக்கும் மூன்று நான்கு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒருத்தியின் பெயர் புஷ்பா என்றுகூட அவன் தெரிந்து வைத்துக் கொண்டிருந்தான்.”
(பக்: 86 – 87).

70 – களில் எழுதப்பட்ட நாவலில் இப்படியொரு சித்தரிப்பு. என்ன செய்வது! ஏதாவது சொல்ல ஆரம்பித்தால் ‘எலக்கிய’ ரசனை இல்லாதவர்கள் என்பார்கள். அப்படியே, ‘எலக்கிய’ ரசனைப்படியே பார்த்தாலும்கூட அசோகமித்திரன், சுந்தர ராமசாமி வகையறாக்களின் ‘எலக்கியங்களில்’ என்ன இருக்கிறது? எதுக்களிப்பு (எதிர்க் கழிப்பு) மட்டும்தான். தானல்லாத மற்றவர்கள் முகத்திலறைந்தார்போல முழு நிர்வாணத்தில் எதிர்ப்படும்போதெல்லாம் இவர்களுக்கு வருவதெல்லாம் எதிர்க்கழிப்பு மட்டும்தான். அவசர அவசரமாக விழுங்கிய நவீனத்துவம் இவர்களுடைய இரத்தத்தில் ஊறிப்போயிருக்கும் சநாதனத்தோடு கலக்க முடியாமல் போவதால் வரும் எதுக்களிப்பு அது.

அசோகமித்திரன் சிலாகித்த அமெரிக்க நாவலாசிரியர்களில் ஒருவர் வில்லியம் ஃபாக்னர். நவீனத்துவ நாவலின் உச்சங்களைத் தந்தவர்களில் அவரும் ஒருவர். அவருடைய பல நாவல்களில், பல கதாபாத்திரங்கள் எதுக்களிக்கும், வாந்தி எடுக்கும். அமெரிக்கக் கறுப்பின மக்கள் படும் அவலங்களைக் காணச் சகியாமல், வெள்ளை இன – நிறவெறி அதிகார அமைவுகளிலிருந்து விலகி ஓடி அலையும் கதாபாத்திரங்கள் வாந்தி எடுத்துவிடும். வாந்தி எடுத்துவிடுவதை, இனவெறி அதிகாரத்தை செரித்துக்கொள்ள முடியாததன் உருவகமாக (சரியாகச் சொல்வதென்றால் – உருமாற்றமாக) அவர் தமது நாவல்களில் கையாண்டிருக்கிறார்.

எதுக்களித்து வருவதை மீண்டும் விழுங்கி, வலிந்து ஜீரணிக்க முயல்வது, அதிகார அமைவுகளின் அங்கமாகிப் போவதன் குறியீடு (வாதாபி ஜீரனோபவ!). அசோகமித்திரனின் மேற்சொன்ன நாவலின் இறுதியில், சந்திரசேகரனுக்கும் எதுக்களித்து வருகிறது. ஒரு கலவரக் கும்பலிடமிருந்து தப்பி ஓடும் அவன், ஒரு வீட்டிற்குள் ஒளிந்துகொள்ள முயற்சிக்கிறான். அங்கு ஏற்கனவே ஒரு முஸ்லீம் குடும்பம் ஒளிந்திருக்கிறது. இவனைப் பார்த்ததுமே இன்னும் கலவரப்பட்டுப் போகிறது. கண் மூடித் திறக்கும் நேரத்தில், 15 – 16 வயதொத்த ஒரு இளம்பெண், தன் குடும்பத்தை விட்டுவிடுமாறு கெஞ்சிக்கொண்டே அவன் முன்னே வருகிறாள். நிர்வாணப்படுத்திக் கொள்கிறாள்.

பெண்களின் ஸ்பரிசத்தையே உணர்ந்திருக்காத சந்திரசேகரனைப் பாவம், இந்த திடீர் நிர்வாணம் சிதறடித்துவிடுகிறது. அவன் ‘ஓடுகிறான், ஓடுகிறான், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடுகிறான்’. “இந்த உலகத்தில் உயிர் காப்பாற்றிக்கொள்ள ஒரு குழந்தைகூட எவ்வளவு இழிவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது?” என்று நினைத்துக் கொண்டே ஓடுகிறான். அதற்கு அவனும் ஒரு காரணமாகிவிட்ட குற்ற உணர்ச்சியோடும், அந்தக் கறையை என்று, எப்படி அழித்துக்கொள்வது என்றும் யோசித்துக்கொண்டே ஓடுகிறான். ஆனால் பாருங்கள், சந்திரசேகரன் எதுக்களித்து வந்த ‘கசப்புத் திறளை’, முதன்முதலாக நிர்வாணத்தைப் பார்த்த அதிர்ச்சியில் விழுங்கிவிட்டான். அந்த நினைவே இல்லாமல் அவன் ஓடிக்கொண்டே இருந்தான். பொழுதும் விடிந்தது.

கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் ஓடிவிட்டது. சந்திரசேகரன் எடுக்காமல் விட்ட வாந்தியை, முப்பது வருடங்களாக அடக்கி வைத்திருந்த எதிர்க்கழிப்பை, இப்போது கக்கியிருக்கிறார் அசோகமித்திரன் !சுரணையுள்ளவர்களுக்கு குடலைப் பிடுங்குகிறதா இல்லையா?

புதிய காற்று மே, ஜூன் 2005.

%d bloggers like this: