என்னமோ நடக்குது!

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

கணக்குல நா வீக்; இப்படி நம்பரை கண்ட மேனிக்கு மாத்தி கேள்வி கேட்டா என்னத்த சொல்லுறது? ஒரு மண்ணும் புரியல போங்க …

முதல் ( … கடைசி … அடக் கொடுமையே) கேள்விக்கே எஸ்கேப்பான்னு சிரிக்கறவங்களுக்கு சீரியஸா ஒரு பதில்:

வாழ்வு என்பது வ்+ஆ(வா) + ஊழ்வு (அல்லது உழவு அல்லது இழவு) என்றே இச்சொல் தொடங்குவதால் இதை வ்வாழ்வு என்றே சொல்ல வேண்டும். வ்வாழ்வு என்பது இவ்வாழ்வு (உச்சரித்துப் பார்க்க). ஆக, இவ் + ஊழ்வு எனக் கொண்டால் ஊழ்வினையின் பயனே இவ்வாழ்வு. உழவு எனக் கொண்டால் உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர். இழவு எனக் கொண்டால் என்ன எழவுடா இந்த வ்வாழ்வு எனக் கொள்ள இடமுண்டு.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இளிச்சவாயன்னு பலபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கேன்.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எதையோ நினைச்சு எதையோ செய்யப் போக கடைசியில வம்புல மாட்டிக்கிட்டு உதார் விடுறதே வாடிக்கையாப் போச்சு. சரிடாப்பா இதுதான் உனக்குப் பொருத்தமான பேருன்னு (வினையானதொகை) வச்சுக்கிட்டது.

ஊறுகா மாதிரி (வினைத்தொகை) தொட்டுக்க ஒரு ஆளுன்னுட்டும் (வளர்மதி) வச்சிக்கிட்டது.

காரண இடுகுறிப்பெயர் (அப்படீன்னா என்னன்னு கேக்காதீங்க … சொல்லிட்டேன்) அப்படீங்கறதால ரொம்ப ரசிச்சு ரசிச்சு புளகாங்கிதம்தாம் போங்க.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ECR ரோட்டில் சுத்துமுத்தும் ஆள்வாசனை இல்லாத ஒரு பண்ணை வீடு. நீச்சல் குளம். குளக்கரையில ஃபாரீன் மதுப்புட்டிகள் (ஒன்னு ரெண்டு கவுந்திருக்கோனும்) குளத்துக்குள்ள பரந்த மிதவை ஒன்னு. குறைஞ்சது நாலு பெண்கள் (பெண்கள் மட்டும்). இப்படி இப்படி …

21.பிடித்த பருவ காலம் எது?

மழை பேஞ்சா ஜல்ப்பு புடிச்சுக்கும். மே மாசத்துல வெயிலடிக்கும். எப்படியா இருந்தாலும் மொட்ட மாடிக்கு போக முடியாது …

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

‘காமிராக்’ கண்ணன் எடுத்த “ஜம்பு” மாதிரி (பக்கத்து வூட்டுக்காரருங்கோ).

6.கடலில் குளிக்க பிடிக்குமா… அருவியில் குளிக்க பிடிக்குமா?

ஏஞ்சாமி மெட்ராசுல பொறந்து வளந்த ஆளிட்ட இப்படியெல்லாம் கேக்கலாமா?
காக்காக் குளியல விட்டா என்ன மண்ணாங்கட்டி தெரியும் என்ன மாதிரியான ஜென்மங்களுக்கு?

24.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

க்ளிக் … க்ளிக் … சிகரெட் பத்த லைட்டர் அழுத்தும் சத்தம் (எங்களாலயும் சவுண்டு எழுப்ப முடியுமில்ல).

மார்கழி மாசத்துல நடுராத்திரி இந்த நாயுங்க வுடற ஊள இருக்கே (கடுப்புதான்).

18.கண்ணாடி அணிபவரா?

+ – எந்தப் பிரச்சினையுமில்ல. பந்தாவுக்கு ரெண்டு வச்சிருக்கேன். 1000 ரூபாய்க்கு குறைச்சலா இதுவரைக்கும் வாங்குனதில்ல. ஒன்னு கூலிங் கிளாஸ். ஒரு தபா ஒரு நண்பன் “blind மாதிரி இருக்கடா”ன்னு சொல்லிட்டான். அதுக்கப்புறம் அதப் போடறதில்ல (கம்மணாட்டிக்கு “ராஜ பார்வை” கமல் மாதிரி இருக்கடா மாப்புன்னு சொல்ல மனசு வரல்ல பாருங்க – வேற யார் புளிப்பு பேச்சாவது ஞாபகம் வந்துச்சுன்னா சிலேட்ட எச்ச துப்பி அழிச்சிடுங்க)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

எந்தப் பாதியக் கேக்குறீங்க? மேல் பாதியா கீழ் பாதியா? இடமா வலமா? (எது கெடச்சாலும் ஓகே).

14.பிடித்த மணம்?

இவ்ளோ ச்ச்ச்சுருக்கமா கேட்டுப்புட்டீங்க!!!

ஏஞ்சாமி திருவிளையாடல் படம் பாக்கல்லையான்னு கேக்குறேன்!

17. பிடித்த விளையாட்டு?

கில்லி. (கில்லியில “ரிங்க்” தெரியுமா? மாட்டுன ஆள ‘கஞ்சி’ காச்ச வக்குறது தெரியுமான்னேன்!)

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

இப்படி இத்தனை கேள்வி வுடாம கேக்குறது.

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

“அம்மையும் அப்பனும்.” (சுற்றுலான்னா சுத்தி சுத்தி வர்றதுதானே?)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அய்யா சாமி … பல பேரோட சகவாசம் முடிஞ்சதுல ரொம்ப நிம்மதியா இருக்கேன். எதுக்கு இப்படி கோத்து விடப் பாக்குறீங்க?

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

எதாவது சொல்லித் தொலைக்கப் போறேன் … (“ஏன்னு கேக்க பொண்டாட்டி இல்லையாம் …” பழமொழிதான்).

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

ஒரு நாலு வருஷத்துக்கு முன்ன உங்க ஃபோன் நம்பரக் குடுத்துட்டு கேட்டிருந்தீங்கன்னா ராத்திரி 12 மணிக்கு மேல (சாத்தான) அனுபவிச்சிருப்பீங்க.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கேள்வியில் தெளிவில்லை. ஆணா பெண்ணா? ஆடா, மாடா, கழுதையா குதிரையா? (எப்பிடி!)

4.பிடித்த மதிய உணவு என்ன?

No way. Mostly “brunch”.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

ஒரே கேள்விய ரெண்டு தபா கேட்டா இன்னா பண்ணுறது?

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ஏமாந்ததெல்லாம் போதும் நைனா … எஸ்கேப்.

2.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

“என்னப் பாட்டுப் பாட
என்ன தாளம் போட
வண்டி ஓடும் சத்தம்
பாட்டுக் கேக்கும் சந்தம்
நிக்காத ஓடு
இது சர்க்காரு ரோடு …
ஏய் … ஏய் … ”

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

No tops. பட்டாப் பட்டி இல்ல. ஆனா டிரவுசர் கலர் மப்புல சரியா சொல்லத் தோணல. சாரி.

20.கடைசியாகப் பார்த்த படம்?

ஜூது (Casino).

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

சரியா ஞாபகமில்ல. ஒரு மூனு மாசத்துக்கு முன்ன, ஓவரா அடிச்சு ஒரு நண்பரிட்ட “மக்கா, என்ன எப்பிடிப்பா நல்லவன்னு கண்டுபுடிக்குறாங்க”ன்னு பெரிய ஒப்பாரி வச்சேன்.

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

“நான் பைத்தியமா – ஒரு விளக்கம்” (பதிவு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. சாட்சிகள் காட்ட முடியாது).

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

“மாறும் என்ற சொல்லே மாறாதது” (தத்துவம் … தத்துவம் … டே … எப்பிடிடா நீ இப்பிடி?)

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

வலிக்குது … கை (வேறு அர்த்தங்கள் கற்பித்துக் கொள்பவர்களுக்கு மறுப்பு எழுதும் நிலையில் இல்லை).

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன?

போதுஞ்சாமி … ஆள விடுங்க.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

தெருமுக்கு (முட்டுச்சந்து) … தம்மடிக்க …

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கிறுக்கிட்டுப் போங்கடே (ஆசிஃப் அண்ணாச்சி மன்னிச்சிடுங்க) அப்படீன்னு விட்டுடுவேன்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

“அலிபாபாவும் சில ஊதுபத்திகளும்”. (டிடெக்டிவ் நாவல் – திருடன வுட்டுக்கொடுத்த கதை).

விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

நறுக் கேள்விகளுக்கு சுருக்(கமான) பதில்கள் …

ஆட்டத்துல என்னையும் சேத்துக்கிட்டதுக்கு நன்றி கென் 🙂

எனது பதில்கள்:

1) வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு என்கிற நீட்ஷேவின் கூற்றை சராசரி வாசகனுக்கு எவ்வாறு விளக்குவீர்கள்?

ஒரு ‘சராசரி’ வாசகன் எனும்போது நீட்ஷேவின் மேற்சொன்ன கூற்றை இப்படி விளக்கத் தொடங்குவேன்: “அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது” – ன்னு சொல்லியிருக்காங்கப்பா, அதுனால நாமும் மகிழ்ச்சியோடவும் எத்தனை பேருக்கு முடியுதோ அத்தனை பேருக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் தரக்கூடிய வகையில் நம்மோட வாழ்க்கைய அற்புதமா வாழுறதுக்கான வழியை தேர்வு செய்யனும் …

(வாசகரின் செறிவு கூடியதும், “வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” என்று முன்மொழிந்த அதே நீட்ஷே “ஒரு பொருளை அழகானதாக அனுபவிப்பது என்பது அதை மோசமாக அனுபவிப்பதாகும்” என்றும் முன்மொழிந்திருக்கறான். இந்த “முரணை” நாம் எப்படி விளங்கிக் கொள்வது என்று கேள்வியெழுப்புவேன் …)

2) சிற்றிதழ் உலகின் கலகக்காரனாக வெளிப்படித்திக்கொண்டது உங்களின் தீவிர இலக்கிய நடவடிக்கைகளை நீர்த்துப்போகச்செய்து விட்டது என்கிற குற்றச்சாட்டை மறுப்பீர்களா?

முதலாவதாக, ஒரு ”கலகக்காரனாக” என்னை நானே எப்போதும் வரித்துக்கொண்டதில்லை. சிற்றிதழ் உலகத்திலும், சக அறிவாளர்களிடத்திலும் ஊறிக்கிடந்த அற்பத்தனங்களைக் கண்டு கோபத்தில் வெடித்த சில சந்தர்ப்பங்கள் விபத்துகளாக அரங்கேறி, அந்த முத்திரை என்மீது சுமத்தப்பட்டது என்பதே என் தரப்பு.

என்னுடன் பழகிய சக இலக்கிய நண்பர்களோ, அறிவாளர்களோ எனக்கும் சரி எனது தலைமுறைக்கும் சரி, வழிகாட்டிகளாக இருக்கத் தவறியபோது, எனது தேடல்கள் தீவிரமடைந்தன. இதில் அடைந்த தெளிவுகளை பதிவு செய்துமிருக்கிறேன். அடுத்த பதிவாக அதை மீள்பதிவு செய்யவும் இருக்கிறேன்.

அதன்பின் எனது கோபங்கள் தணிந்து ஆக்கப்பூர்வமான திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறேன். சொல்லப்போனால் இந்தக் கட்டத்திற்குப் பிறகே எனது எழுத்துக்கள் மேலும் செறிவுகூடியிருப்பதாக நினைக்கிறேன். “பரமபதம்” நாடகத்தை சாட்சி என முன்மொழியலாமா?

3) பெரியார் – இயக்கவியலின் தோல்விகளுக்கு யார் காரணம்? இந்துத்துவ பாசிசம் வளர்கிறது துணைப்போகிறவர்கள் யார்? நீங்கள் போலி பெரியாரிஸ்ட் என்கிற குற்றச்சாட்டிற்கு பதில்??

அ) முதலாவதாக, ஒரு விளக்கம். பெரியாரிஸ்ட் என்று என்னை எங்கும் சொல்லிக் கொண்டதில்லை. எந்த இசத்திலும் எனக்கு நம்பிக்கையும் இல்லை.
பெரியார் மீது மிகப்பெரும் மதிப்புகள் உண்டு. பின் அண்ணா, கலைஞர் என்ற வரிசையில் அவரவர் பங்களிப்புகளுக்குரிய மரியாதைகள் உண்டு. ஆகையால், என்னை “போலி பெரியாரிஸ்ட்” என்று குற்றம்சாட்டுவதில் எந்தப் பொருளும் இல்லை (அப்படி யாரேனும் குறிப்பிட்டிருக்கிறார்களா என்ன?)

ஆ) முதலில், திராவிட இயக்கத்தின் பல சரடுகள் குறித்தோ, அச்சரடுகள் சமூகத்தில் விளைவித்துள்ள சாதகமான மாற்றங்கள் குறித்தோகூட நமக்கு சரியான ஒரு மதிப்பீடு இல்லை.

அடுத்து, பெரியார் இயக்கத்தின் தோல்விகளுக்கு பற்பல காரணங்கள் உண்டு. அவை குறித்த நிதானமான மதிப்பீடுகளும் இன்னும் முழுமையாக செய்யப்படவில்லை. (வலதுசாரி விமர்சனங்களே மிகுந்திருக்கின்றன). விரிவான ஒரு ஆய்வை முன்வைக்கும் நிலையில் தற்சமயம் எனது நிலை அனுமதிக்கவில்லை. இப்போதைக்கு ஒன்றை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

எந்த ஒரு இயக்கமும் தொடர்ந்து முன்நகர்ந்து செல்ல, தொடர்ச்சியாக அடுத்த தலைமுறை தலைமைப் பண்பாளர்களை (second – line leadership) உருவாக்குவதில் கவனமாக இருக்கவேண்டும். இந்த அம்சத்தில், திராவிட இயக்கத்தின், குறிப்பாக, தி. மு. க – வின் தோல்வியைக் கவனிக்கலாம்.

இ) இந்துத்துவ பாசிசம் வளர்வதற்கு இன்றைய நிலையில் துணையாக இருப்பவர்கள், சொல்லப் போனால் மிக வலுவான தூணாக இருப்பவர்கள், NRI இந்தியர்கள். குஜராத் அதற்கு ஒரு சான்று. கல்விசார் ஆய்வுப்புலத்தில் இப்போக்கிற்கு New Cosmopolitanism என்று பெயரிட்டு, இவர்களிடம் வலதுசாரி நோக்குகள் வலுவாக ஊன்றியிருப்பதற்கான காரணங்களை ஆய்வும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றது, பார்ப்பனர்கள் என்ற வட்டத்தைத் தாண்டி, அடுத்த படிநிலை வரிசையில் இருக்கும் ஆதிக்க சாதிகளும் இதற்குத் துணையாக நிற்கின்றன.

4) உங்களின் முதல் காதலி பற்றி மற்றும் தற்போதும் காதலிக்கிறீர்களா? ஒரு காதல் கவிதை சொல்லுங்கள்?

சிக்க வைக்கப் பாக்குறீங்களே கென் 🙂 (ஒரு டீம் சுத்தறதா கேள்விப்பட்டேன் … அதுக்குத் தல யாருன்னும் கேள்விப்பட்டேன் … அந்தத் தலய நோக்கித்தான் அடுத்த என் கேள்விகள்).

சரி சொல்லிடறேன் … சொல்லிடறேன் … ”பனியா கும்பலோடு கூட்டு சேர முயற்சித்த வளர்மதி ஒழிக” என்ற வரலாற்றுப் பழியை சுமக்க வேண்டியிருக்கும் … என்றாலும் சொல்லிவிடுகிறேன்.

என் முதல் காதல் … எங்கள் தெருவில் இருந்த ஒரு சேட்டுப் பெண் … ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது பரஸ்பரப் பார்வைகள், குறுகுறுப்புகள் என்று தொடர்ந்து கொண்டிருந்தது … அவளுக்காகவே ஹிந்தி படிக்கவும் தொடங்கினேன் … (ஹிந்தி வால்க!) மத்யமா என்று சொல்லப்படும் இரண்டாம் நிலைத் தேர்வில் இரண்டு பாடங்கள். முதல் பாடத்தேர்வு முடிந்து, உணவு இடைவேளையில் தனியாக இடம் தேடிப் பிடித்து உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் என்னைத் தேடிக் கண்டுபிடித்து என்னோடு பேசுவதற்காக நெருங்கி வந்தாள். எனக்கு கைகால் உதறத் தொடங்கிவிட்டது. எடுத்தேன் பாருங்கள் ஓட்டம். அதற்குப் பின் அந்தப் பெண் என்னை சட்டை செய்வதே இல்லை. நான் பார்த்தால் ”சீ … ” என்பது போல முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.

சில மாதங்களுக்கு முன், அதே பெண் குண்டுக்கட்டாக, அதே குண்டு குண்டாக இரண்டு பிள்ளைகளோடு நடந்து போய்க் கொண்டிருந்ததைப் பார்த்தபோது … அப்பாடி தப்பிச்சோம் சாமி என்றிருந்தது 🙂

அப்புறம் தற்சமயம் காதல் ஏதும் இல்லை 😦 யாரையாவது கைகாட்டி உதவி செய்யுங்களேன் 😉

காதல் கவிதை … இப்போதைய வலையுலக ட்ரெண்டுக்கு ஒத்துப்போகாதே!

சரி ஒரு காதல் கவிதை … போனஸாக ஒரு காமக் கவிதையும் … இரண்டும் இதுவரையில் எந்த இதழுக்கும் அனுப்பாமல் வைத்திருப்பவை (கவிதைகள்தானா என்பதை மற்றவர்கள்தான் சொல்லவேண்டும்)

முதலில் காதல் …

நீ விரும்பாதபோதில்
நான் உனை நெருங்காமலிருப்பதும்
நான் விரும்பாதபோதில் …
மன்னிப்பாய் எனை
நீ தனித்திருக்க விரும்பும்போதில்
நானுனைத் தனித்திருக்கவிடுவதும்
(தவித்துத் தவங்கிடக்கிறேன்)
நான் தனித்திருக்க விரும்பும்போதில்
நீயெனை விடுத்திருப்பதும்
(துவங்கித் தீயிலுணர்கிறாய்)
காதலெனில்
நீயெனைச் சேர்ந்திருக்க விரும்பும் பொழுதும்
நானுனைச் சேர்ந்திருக்க விரும்பும் பொழுதும்
சேர்ந்துணரும் பொழுதெது?
காதலினும் அரிதாகிப்போன
இம்மழைப்பொழிதா?
(05.07.07)

இது காமக் கவிதை …

இதழ் பதித்து
முலை திருகி
விறைத்த காம்புகள் வருடி
தொப்புள் குழி துழாவி
சிலிர்த்த மயிர் நுகர்ந்து
அலையும் கரமும்
சுழலும் நாவும்
விடைத்த நாசியும் …
குவித்து தலைமயிர் பற்றி
இழுத்து அழுத்தி
இன்னும் இன்னும்
வேண்டும் நின் கரங்கள் …
கேட்கக் கேட்க
தீராமல் தருவேன்
அன்பே
நீ எனக்கு?
(08.08.03)

அப்பாடி … முடிஞ்சுதா … 🙂

********************************************

இப்போ அந்த ரகசியக் கூட்டத்தின் தல என்று கேள்விப்பட்ட … பைத்தியக்காரனுக்கு …

1) தமிழின் மிகச் சிறந்த நாவலாக ப. சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோனி” யை பலரும் முன்மொழிந்திருப்பதை அறிவீர்கள். (பட்டியல்களில் எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், அக்கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு). உங்கள் கருத்து என்ன? ஆமோதிக்கிறீர்கள் என்றால் சற்று விளக்கமுடியுமா?

2) புதிய ஜனநாயகம் இயக்கத்தினரோடு சில காலம் செயல்பட்டிருக்கிறீர்கள் என்று ஒருமுறை குறிப்பிட்டிருந்திர்கள். உங்கள் அனுபவம் என்ன? அவர்களைப் பற்றிய தற்போதைய உங்களுடைய மதிப்பீடு என்ன?

3) ஜெயமோகன், சாரு, பிரமிளின் ஆவி மூவரும் சந்தித்துக் கொண்டார்களானால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?

4) மறைக்காம ஒழுங்காச் சொல்லிடு … உன் வயசு என்ன?
(என்ன மாட்டிவிட்டுட்டு நீ மட்டும் தப்பிச்சுக்குவியா மாமு … )

விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »

பார்வையாளர்கள் விளையாடலாமா?

குறிப்பு: கடந்த 2002 – ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரின்போது மேற்கிந்தியத் தீவு அணியைச் சேர்ந்த சில வீரர்கள் மீது பார்வையாளர்கள் தொடுத்த வன்முறையைத் தொடர்ந்து கவனித்ததன் பிரதிபலிப்பாக உடனடியாக எழுதப்பட்ட கட்டுரை.

சமீபமாக ஆஸ்திரேலிய அணியுடனான போட்டித் தொடரின்போது ஆஸ்திரேலிய வீரர் சிமோண்ட்ஸ் மீது மீண்டும் அதே விதமான வன்முறை வெளிப்பட்டதை கவனித்தபோது உடனே இதை இங்கு பதிவிலிடத் தோன்றியது. பல்வேறு காரணங்களால், இணையப் பக்கமே வரமுடியாத நிலையிலிருந்ததால் இயலாமல் போனது. இப்போது வாய்த்திருப்பதால் பதிவிலிடுகிறேன்.

இந்தியப் பார்வையாளர்களிடையே அப்போது வெளிப்பட்ட வன்முறையில் தொனித்த இனவெறிப் போக்கை எவரும் கவனிக்கவில்லை. காரணம், மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கருப்பர்களாக இருந்தது. ஆனால், இப்போது, சிமோண்ட்ஸை மட்டுமே குறிவைத்துத் தாக்கியிருப்பதில் அது பட்டவர்த்தனமாகியிருக்கிறது.

இந்த இனவெறிப் போக்கின் ஊற்றுக்கண் பா. ஜ. க. வளர்த்திருக்கும் இந்துத்துவ மனநிலை.

வெறுமனே இந்துத்துவ மனநிலை மட்டுமேயன்று.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே கருப்பர்களை “ஊத்தையர்கள்” என்று வெறுக்கும் மனப்போக்கையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இது மிகக் குறிப்பாக சாதிய மனப்போக்கோடு இணைந்தது.

சைவ – வெள்ளாளக் கருத்தியல் போக்கின் வெளிப்பாடு. ஈழத் தமிழ் சமூக அமைப்பில் பிள்ளைமார் சாதிய ஆதிக்கத்தின் வெளிப்பாடே இந்த சைவ – வெள்ளாள கருத்தியல் போக்கு எனப்படுவது.

இன்னும் பல நுட்பங்களோடும் இக்கட்டுரையை வாசித்துப் பார்க்கலாம்.

இதில் விரித்திருக்கும் தத்துவார்த்த நோக்கு வேறொரு இடத்திலும் குறிப்பிட்டிருந்த James P. Carse – வின் Finite and Infinite Games: A Vision of Life as Play and Possibility என்ற நூலை அடிப்படையாகக் கொண்டது. சில காலம் கழித்து வாசித்த Eric Berne – ன் Games People Play: The Psychology of Human Relationships என்ற நூலினாலும் இது என்னுள் செறிவடைந்திருக்கிறது.

——–

 

நவம்பர் 6 – ஜம்ஷெட்பூர், நவம்பர் 9 – நாக்பூர், நவம்பர் 12 – ராஜ்கோட். மூன்று நாட்கள், மூன்று முற்றிலும் வேறான நகரங்கள், ஆனால் ஒரேவிதமான மனநிலையின் பிரதிபலிப்புகள்.

ஜம்ஷெட்பூரில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 3 ஓவர்களில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி இருந்தபோது, பார்வையாளர்களின் ‘அட்டகாசத்தால்’ ஆட்டம் நிறுத்தப்பட்டது. 18 நிமிடங்கள் கழித்து ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்து, இரண்டு விக்கெட்டுகள் வீழ்ந்து, ராம்நரேஷ் சர்வான் ஒருமுறை ‘தப்பிப் பிழைத்து’, கடைசி பந்தில் 3 ரன்கள் எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு, கடைசியில் அது எல்லைக்கோட்டைத் தாண்டி, 4 ரன்களாகி முடிவுக்கு வந்தது.

கடைசி நிமிடப் பதைபதைப்புவரை ஆட்டத்தை நகர்த்திக்கொண்டுபோகும் தந்திரம் கையாளப்பட்டு ரசிகர்கள் ஓரளவுக்கு திருப்தி செய்யப்பட்டார்கள்.

நாக்பூரிலும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 பந்துகள் வித்தியாசத்திலேயே வெற்றி காண முடிந்தது. இங்கு இந்திய அணி நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிலையிலேயே முந்தைய ஆட்டத்தில் எதிரணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்த ராம்நரேஷ் சர்வான் மீது பார்வையாளர்கள் தமது ‘கோபத்தைக்’ காட்டினார்கள்.

ராஜ்கோட்டிலும், இந்திய அணி வெற்றி பெறும் நம்பிக்கையான நிலையில் இருந்தபோதும், பார்வையாளர்களின் ‘கைவரிசை’ தொடர்ந்தது. இந்திய அணியின் ஒரேயொரு விக்கெட்டை வீழ்த்தியதற்காக, ட்ரேக்ஸ் மீது ‘தண்ணீர் பாட்டில் தாக்குதல்’ தொடுக்கப்பட்டது. ஆட்டத்தில் விளையாடாத மற்றொரு வீரர், பெட்ரோ காலின்ஸின் முகத்தில் ஒரு சிறு மணல் பையும், பிறகு ஒரு கல்லும் விழுந்தது. ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு இந்திய அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

ஒரு பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக, இந்திய அணி தோல்வியின் விளிம்பில் நிற்கும் சந்தர்ப்பங்களில் அரங்கில் கனத்த மெளனம் கவிழ்ந்துவிடும். பரபரப்பான கடைசி ஓவர்களில், தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால், இருக்கைகளின் நுனியில் ஒட்டிக்கொண்டிருந்த வயதுபோனவர்கள் ஒன்றிரண்டுபேரின் உயிர் மாரடைப்பில் பறந்துபோகும். இளைஞர்கள் சோகம் கவிந்த முகத்தோடு தெருக்களில் கூடி, வெற்றி நழுவிப்போன சந்தர்ப்பங்களை ஆதங்கத்தோடு பேசிக் கொண்டிருப்பார்கள்.

இப்போதோ, இந்திய அணி தோல்வி அடைவது என்பதை சகித்துக்கொள்ளவே முடியாத அளவுக்கு நிலைமை ‘முன்னேறியிருக்கிறது’. 1996 – ல் கல்கத்தாவில் நடைபெற்ற ப்ருடென்ஷியல் கோப்பை அரை இறுதிப் போட்டியில் நிகழ்ந்த கலவரம், சமீபத்திய கலவரங்களுக்கெல்லாம் முன்னோடி என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

என்ன மனநிலை இது? என்ன வகையான நோய்க்குறி இது? யார் பொறுப்பு இதற்கு? இனிவரும் ஆட்டங்களில் இதுபோன்று நடக்காது என்று என்ன உத்திரவாதம்? தீவிரமாக யோசிக்க வேண்டிய அவசியம் நம் எல்லோர் முன்னும் எழுந்திருக்கிறது.

இந்திய அரசின் தேசிய விளையாட்டு ஃஆக்கிதான் என்றபோதிலும், அரசால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டாக, பெருமளவிலான ரசிகர்களை கவர்ந்திழுக்கும், கோடிகள் புரளும், பல பன்னாட்டுக் கம்பெனிகளின் விளம்பர உத்திகளுக்கு பக்கபலமாக இருக்கும் விளையாட்டாக கிரிக்கெட் இருப்பது எல்லோரும் அறிந்த விஷயமே. என்றாலும், இந்த விளையாட்டு வெகுஜன கலாச்சாரத்தில் விளைவித்திருக்கும் போக்கை பலரும் கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள்.

ஆனால், இதைப் புரிந்து கொள்வதற்கு, விளையாட்டுக்கள் என்றாலே என்ன, வாழ்வில் அவற்றின் இடம் என்ன, சமூக வாழ்வில், பரஸ்பர உறவுகளில் நாம் விளையாடிக் கொண்டிருக்கும் விளையாட்டுகளின் தன்மை என்ன என்பவை குறித்து ஒரு தெளிவுக்கு வரவேண்டியது அவசியம்.

இயற்கைக்கு நோக்கம் எதுவும் இல்லை என்பதுபோல, வாழ்க்கைக்கு அதனளவில் அர்த்தம் எதுவும் இல்லை. இவற்றுக்கு உள்ளதாகச் சொல்லப்படும் அர்த்தங்கள் எல்லாம், மனிதர்கள் ஏற்றிச் சொன்னவை என்பதற்கு மேலாக வேறு ஒன்றும் இல்லை. அர்த்தங்கள் எதுவும் இல்லை என்றாகிவிடும்போது, நாம் வாழ்வை ஒரு விளையாட்டாகப் பார்க்கமுடியும். இதில் நாம் என்ன வகையான விளையாட்டுகளை ஆடிக்கொண்டிருக்கிறோம் என்பதே அப்போது கேள்வியாக அமையும்.

விளையாட்டுகள் இரண்டு வகையானவையாக இருக்கின்றன. ஒன்று, எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு (finite games); மற்றது, எல்லைகளற்ற விளையாட்டு (infinite games).

எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு வெற்றியை இலக்காகக் கொண்டு ஆடப்படுவது. எல்லைகளற்ற விளையாட்டின் நோக்கமோ தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு இல்லை.

வெற்றியை இலக்காகக் கொண்டு ஆடப்படும் எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு யாராவது ஒருவர், ஒரு தரப்பு வெற்றி பெற்றவுடன் முடிந்துவிடக்கூடியது.

இரண்டு வகையான விளையாட்டுகளிலுமே ஆட்டக்காரர்கள், சுதந்திரமான விருப்பத்தின் பேரிலேயே பங்குகொள்கிறார்கள். ஆனால், எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டில், வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற அழுத்தம் இருப்பதால், அதன் ஆட்டக்காரர்கள், எந்த நேரத்திலும் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளவோ, வேறு ஒரு ஆட்டத்தைத் துவங்கவோ தமக்குள்ள சுதந்திரத்தையும் விருப்பப்பூர்வமான தேர்வையும் மறந்துவிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டு காலம், இடம், எண்ணிக்கை என்பவற்றால், வெளியே இருந்து வரையறை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையிலான ஆட்டக்காரர்கள் மட்டுமே இதில் பங்குபெற முடியும். அதன் ஆட்டக்காரர்கள் திறன்களின் அடிப்படையில் கவனமாக பரிசீலனை செய்யப்பட்டு தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றவர்கள், ஆட்டத்தில் பங்குபெறத் தகுதியற்றவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் விதிமுறைகள் அனைத்து தரப்பினராலும் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாகின்றன. அவற்றை மீறுவது என்பது, எதிர்பார்க்கப்படும் முடிவுக்குத் – யார் வெற்றியாளர் என்பதை கண்டுகொள்வதற்கு – தடையாகி, குழப்பத்தை விளைவித்துவிடும் என்பதால் அனுமதிக்கப்படுவதில்லை. எப்போதும் முடிவையே எதிர்பார்த்திருப்பதால், எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் அடிப்படையான பண்பாக கடும் பொறுப்புணர்வு (seriousness) பிரிக்க முடியாமல் கலந்திருக்கிறது.

இதற்கு மாறாக, எல்லைகளுக்குட்படாத விளையாட்டின் நோக்கமே ஆட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பதாக இருப்பதால், வெற்றியாளரைத் தீர்மானிப்பதைப் பற்றிய விருப்பமே அதில் இல்லை. ஆட்டத்தில் யாரும் வெற்றிகொண்டு விடுவது ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்பதால், அதன் விதிமுறைகள் தொடர்ந்து மாற்றப்பட்டுவிடும். யாரும், அதற்குள் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம், புத்துணர்ச்சி பெற்றுக் கொள்வதற்காக தற்காலிகமாக வெளியேறலாம், அல்லது, ஆட்டத்தின் விதிகளை மாற்றக்கோரி விளையாட்டிற்கு ஒரு புதிய திசையையோ, ஒரு புதிய விளையாட்டையோகூட துவக்கி வைக்கலாம்.

எல்லைகளுக்குட்படாத விளையாட்டு, அடிப்படையில் எல்லைகளுடனேயே விளையாடும் ஆட்டமாகும். அதன் அடிப்படையான பண்பு விளையாட்டுத்தனம். கட்டற்ற சிரிப்பாக இது வெளிப்படும். மற்றவர்களைப் பார்த்துச் சிரிக்கும் சிரிப்பல்ல. மற்றவர்களோடு சேர்ந்து சிரிக்கும் சிரிப்பு.

எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டில் பங்குபெறுபவர்கள், வெற்றியாளர் என்ற பட்டத்தைப் பெறுவதற்காகப் போராடுகிறார்கள். பட்டத்தை வென்றவர் அனைவரது கவனத்திற்கும் உரியவராகிறார். அனைவரது பார்வையிலும் நிற்கிறார். தோல்வியுற்றவரை எவரும் கண்டுகொள்வதில்லை. எல்லோர் கண்முன்பாகவே அவர் காணாமல் போய்விடுகிறார்.

இந்த வகையான விளையாட்டில், வெற்றி என்பது, பார்வையாளர்கள் இருக்குப்போதே அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பார்வையாளர்களுக்கு முன்பாக விளையாடும்போது, எல்லைகளுக்குட்பட்ட விளையாட்டின் ஆட்டக்காரர்கள் எப்போதும் தோல்வி என்ற வாள் தமது தலைகளுக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருப்பது பற்றிய எச்சரிக்கையுணர்வுடன், பார்வைக்குப் புலப்படாமல் போய்விடக்கூடாது என்ற அச்சத்துடனேயே விளையாடுகின்றனர். பார்வையாளர்கள் தம்மைத் தோல்வியாளர்களாகக் கருதிவிடக்கூடாது என்ற விருப்பமே வெற்றி பெறுவதற்கான உத்வேகமாக இங்கு மாற்றம் கொள்கிறது.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தம்மைப் பற்றிப் பார்வையாளர்கள் கொண்டிருக்கும் மதிப்பீட்டைத் தவறு என்று நிரூபிப்பதற்காகவே விளையாடத் தொடங்குகிறார்கள். மற்றவர்கள் தம்மைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பை மாற்றுவதற்கானதாக விளையாட்டு மாறிவிடுவதால், ஆட்டக்காரர்கள் தமது ஆட்டத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருப்பவர்களாக, அதாவது அவர்களே பார்வையாளர்களாக மாறிவிடுகிறார்கள். இதனால், உண்மையான பார்வையாளர்கள் அவர்களுக்கு எதிரில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாகிவிடுகிறது.

இதில் பார்வையாளர்களின் பாத்திரம் என்ன? முதலில், பார்வையாளர்களை எப்படி வரையறுப்பது என்பதைப் பார்த்துவிடுவது நல்லது.

பார்வையாளர்களை எண்ணிக்கையை வைத்தோ, குறிப்பிட்ட இடத்தை வைத்தோ தீர்மானிக்க முடியாது. பார்வையாளர்கள் எப்போதும் குறிப்பான ஒரு நிகழ்வைச் சார்ந்தே உருவாகிறார்கள்.

“அன்று நான் டி.வி – யில் ஏதோ ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று படத்தை நிறுத்திவிட்டு அவசரச் செய்தி ஒன்றை ஒளிபரப்பு செய்தார்கள். முக்கிய பிரமுகர் ஒருவர் அகால மரணமடைந்த செய்தியை அறிவித்தார்கள். நான் அதிர்ந்து போனேன்,” என்று நினைவுகூறும்போது அங்கே ஒரு பார்வையாளர் இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை ஒட்டியே பார்வையாளர்கள் உருவாகிறார்கள்.

ஒரு நிகழ்வின் பார்வையாளர்கள் எங்கு வேண்டுமானாலும் சிதறி இருக்கலாம். என்றாலும், அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு பண்பு இருக்கிறது. யார் வெற்றிபெறப் போகிறார்கள் என்பதைக் காணும் ஆவலே, சிதறி இருக்கும் அத்தனை பார்வையாளர்களையும் ஒன்றுபடுத்தும் அம்சம்.

இந்த ஆவல், பார்வையாளர்களை, தாம் வெறுமனே பார்வையாளர்கள்தாம் என்பதை மறக்கச்செய்து, விளையாடும் அணிகளோடு, ஆட்டக்காரர்களோடு, தம்மை முற்றிலுமாக ஒன்றிணைத்துக்கொள்ளும் அளவிற்கு இட்டுசெல்கிறது. தாம் அடையாளப்படுத்திக்கொள்ளும் அணி தோல்வியடையும்போது, தாமே தோல்வியடைந்தது போல உணர்ந்து தலைகவிழ்கிறார்கள்.

இதன் காரணமாகத்தான், தாம் வெறுமனே பார்வையாளர்கள் மட்டுமல்ல, ஆட்டக்காரர்களும்கூட என்று நிரூபிக்க வேண்டிய – தம்மைப் பற்றிய மற்றவர்களது அபிப்பிராயத்தை மாற்றவேண்டிய – மனநிலைக்கு ஆட்படுகிறார்கள். அதற்கான செயல்களில் இறங்குகிறார்கள். மேற்கத்திய தீவுகள் அணியுடனான சமீபத்திய ஒருநாள் போட்டிகளின்போது நிகழ்ந்த பார்வையாளர்களின் கலவரங்களில் வெளிப்படும் மனநிலை இதுதான்.

இந்த மனநிலை, ஏதோ கிரிக்கெட் விளையாட்டின்போது மட்டும் வெளிப்பட்ட ஒரு விதிவிலக்கு என்று எடுத்துக்கொண்டுவிட முடியாது. நமது ஜனநாயகத்தின் ‘வளர்ச்சியை’, அது இப்போது அடைந்திருக்கும் இடத்தை, நமது சமூகக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே பார்க்கலாம்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக, இந்திய அணி தோல்வியுறும் சந்தர்ப்பங்களில், மௌனத்தைச் சுமந்துகொண்டுபோன பார்வையாளர்களின் கலாச்சாரம், இந்திய சமூகத்தில் மற்றவர்களை அங்கீகரிக்கும் பண்பாடு எஞ்சியிருந்ததைக் காட்டுகிறது. இப்போது, ஒரு இந்திய விக்கெட் வீழ்ந்தாலும், வீழ்த்திய வீரரைக் குறிவைத்துத் தாக்கும் அளவுக்குப் பார்வையாளர்களிடையே வன்மம் ஓங்கியிருப்பது, நமது பொதுவான சமூகக் கலாச்சாரத்தில், மற்றவர்களை, மாற்றுக் கருத்து உள்ளவர்களைக் கொஞ்சமும் சகித்துக் கொள்ளக்கூட முடியாத பண்பு சகல மட்டங்களிலும் பரவியிருப்பதைக் காட்டுவதாகவே இருக்கிறது.

இது ஏதோ, இந்திய சமூகத்தின் பிரச்சினை மட்டுமே என்று சொல்லி முடித்துக் கொள்ளவும் முடியவில்லை. காரணம், இது ஜனநாயகம் என்று நாம் சொல்லும், அது உருவாக்கும் கலாச்சாரத்தின் உள்ளார்ந்த பிரச்சினையும்கூட. நவீன ஜனநாயகம், பண்டைய கிரேக்க நகரங்களில் நிலவிய ஆட்சிமுறையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டதைப் பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், அந்த மாதிரியின் தன்மை என்ன?

போட்டி. வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் போட்டியின் மாதிரியில் உருவானது அது. சுயநலம் கருதாத பொதுநலன் என்ற போர்வையில், வெற்றி பெறுவதற்காக ஒருவர், மற்றவரின் கருத்துக்கள் மீது தாக்குதல் தொடுக்கும் இந்த வடிவத்தின் வெளிப்பாடு விவாதம் (debate). அடிப்படையில் இது ஒரு எல்லைக்குட்பட்ட விளையாட்டு.

இதிலிருந்து விலகி, எல்லைகளற்ற விளையாட்டாக அரசியலையும் கலாச்சாரத்தையும் மாற்றுவதற்கான வடிவங்களை உருவாக்கும் வரையில், எந்தப் பிரச்சினைக்கும் விடிவு இல்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.

தினமணி கதிர் 24.11.02

அரசியல், சமூகம், விளையாட்டு இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . Leave a Comment »
%d bloggers like this: