முட்டைக் கண்ணன்
மொட்ட தலையன்
கட்டிப் புரண்டு
காத கடிச்சு
கடுக்கண் திருடி
கம்பி வளச்சு
கடய சுருட்டி
தாவி ஓடி
தடுக்கி விழுந்து
தட்டித் தடவி
எழுந்து நடந்து
கண்ணு கசக்கி
தூசு தட்டி
தொடய குடஞ்சு
தொலஞ்சு போனான்
முட்டைக் கண்ணன்
மொட்ட தலையன்
கட்டிப் புரண்டு
காத கடிச்சு
கடுக்கண் திருடி
கம்பி வளச்சு
கடய சுருட்டி
தாவி ஓடி
தடுக்கி விழுந்து
தட்டித் தடவி
எழுந்து நடந்து
கண்ணு கசக்கி
தூசு தட்டி
தொடய குடஞ்சு
தொலஞ்சு போனான்
ஆன்மாவை விற்றவன் அறம்பாடுதல் அழகில்லை
விற்றவன் விதைப்பதில்லை
வித்தகன் கற்பதில்லை
வீரனும் விரைப்பதில்லை
விரைப்பில் விசையில்லை
வேசை மொழி வேம்பில்லை
கசடில் கனிவில்லை
கழிவில் உரமில்லை
ஆன்மாவை விற்றவன்
அறம்பாடுதல் அறமில்லை
கோடரி கொண்டு கபாலம் பிளந்து
என்னை அவர்கள் கொல்லவில்லை.
புருவங்களுக்கிடையில் குண்டு துளைத்தும்
நான் இறக்கவில்லை.
வாள் கொண்டு கழுத்தையறுத்தும்
அவர்கள் என்னைக் கொல்லவில்லை.
இதயத்தை ஊடுருவித் துளைத்தெடுத்த
வெடிச் சிதறலாலும் நான் இறக்கவில்லை.
காரக்கிரகமொன்றில் அடைத்து விஷவாயு செலுத்தியும்
அவர்கள் என்னைக் கொல்லவில்லை.
குறுவாளால் குறி அறுபட்டும்
நான் இறக்கவில்லை.
கால்களுக்கிடையில் சூலாயுதம் திணித்தும்
அவர்கள் என்னைக் கொல்லவில்லை.
பலகை ஒன்றின் மீது இலகுவாக
நெஞ்சு நிமிர்த்தி நின்றிருந்தேன்.
கரங்கள் பின்னே கட்டியிருக்க
முகமிழந்து
விழியகலத் திறந்திருக்க
கனத்த சுருக்கு
கழுத்தை இறுக்க
பலகை இழுபட
முண்டம் துடிதுடிக்க
ஐந்து நிமிடம் ஐம்பத்தைந்து நொடிகள்.
அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ பாட்டாளிவர்க்க உணர்வில் புடம்போட்டுக் கொள்ள எடுத்த முயற்சிகள் அத்தனையும் என்னளவில் தோல்வியிலேயே முடிந்தன. குட்டி முதலாளியப் பின்னணியில் இருந்து வந்த குட்டி முதலாளியாகவே வாழச் சபிக்கப்பட்டிருந்தேனோ என்னவோ, அறிவுஜீவி என்ற அடைமொழியும் அதனுடன் விரைவிலேயே என்னை மீறி சேர்ந்துகொண்டது. அதைச் சூட்டியதும் ஒரு காம்ரேடுதான்.
அறிவுஜீவிப் பட்டம் கிடைத்த வரலாறு வேடிக்கையானது என்பதால் பதிவு செய்யப்பட வேண்டியது. அறிவுஜீவிக் கூட்டத்தின் மீதான வெறுப்பின் உச்சம் தலைக்கேறியிருக்கும் இந்த சந்தர்ப்பம் அதற்குப் பொருத்தமாகவும் இருக்கும்.
90 களின் துவக்க ஆண்டுகளில் தீவிர வாசிப்பில் மூழ்கியிருந்ததில், பகல் பொழுது உறக்கம், இரவு முழுக்க பசித்த வாசிப்பு என்பதாகக் கழிந்தவை. இதன் பக்கவிளைவாக, கடுமையான டஸ்ட் அலர்ஜி. மூச்சிலே பிரச்சினையில்லை. கண்களுக்கு.
லேசாகக் கூசும் வெளிச்சமும் பிரச்சினையானது. கண்களில் ஒருவிதமான சிறு பூச்சி மொய்ப்பு தொந்தரவானது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் “ப்ளெயின் க்ளாஸ்” அணிய வேண்டியதாயிற்று. அந்த மூக்குக் கண்ணாடிதான் அறிவுஜீவிப் பட்டத்தை ஒரு தோழரிடம் இருந்து அன்பளிப்பாகக் கிடைக்க வழிகோலியதே தவிர வாசிப்பு நிமித்தமாக எழுந்த வாதப்பிரதிவாதங்கள் அன்று. அவர் அந்தப் பட்டத்தைச் சூட்டிய பிறகு தோழர்கள் பக்கம் தலைவைத்துப் படுப்பதையே நிறுத்திக் கொண்டேன்.
அந்தக் காலகட்டத்திலும் சரி, இன்றைய நிலையிலும் சரி, வாசிப்பின் நிமித்தமாக கருத்தமைவுகளைப் பகிர்ந்து கொண்டு அளவளாவும் நெருங்கிய நட்புகள் இன்றியே கழிக்க சபிக்கப்பட்டவன் போலும். இடையில் சில ஆண்டுகள் (96 – 99) ராஜன் குறையின் நட்பு அத்தகைய அறிவார்த்த பகிர்தல்களுடன் கூடிய ஒரு சிறு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.
அப்போது கிடைத்த நட்புகளே ரோசா வசந்த், சஃபி, வெங்கடேஷ் சக்ரவர்த்தி, திருச்சி கண்ணன் போன்றோர். அ. மார்க்சின் தொடர்பும் நெருங்கிய உறவும் உருவானதும் அதே காலகட்டத்திலேதான். இவர்களில் அ. மார்க்சுடனும் ராஜனுடனுமான உறவு நெருக்கமே அதிகம்.
கட்சியில் பணியாற்றிய காலம் என்னை உருவாக்கிய வடிவமைத்த ஒரு பொற்காலம். அதே போன்று, அதற்கு இணையான ஒரு பொற்காலம் அந்த “நிறப்பிரிகை” நட்பு வட்டம். இரு சந்தர்ப்பங்களிலும் வயதிலும் அனுபவத்திலும் மிக இளையவனாகவும், முதிர்ச்சியற்றவனாகவும் அனைத்தையும் வியப்போடும் உற்சாகத்தோடும் அனுபவித்த பேறு எனக்கு வாய்த்தது.
ராஜனுடனான உறவு ஒரு மூத்த சகோதரனுக்கு ஒப்பானது. ஒவ்வாத ஒரு மேட்டிமைத்தனம் கொண்டிருந்தாலும் பழகுவதில் அவரிடம் கிடைத்த சமத்துவம் முற்றிலும் புதிதான ஒன்றாக இருந்தது. சோம்பலை நெருங்கிய அவரது நிதானம் ஆச்சரியமும் பல சமயங்களில் எரிச்சலும் ஊட்டுவதாகவும் இருந்தது.
அ. மார்க்சுடனான உறவு நெருக்கம் தந்தை – மகன் என்ற அளவிற்கு பரிமாணம் பெற்றது. ஆனால், அப்போதும் அவரோடு அறிவார்த்த உரையாடல் ஒருபோதும் சாத்தியப்பட்டதில்லை.
அத்தகைய தீர்க்கமான பார்வை நான் பழகிய அளவில் அன்றும் அவருக்கு இருக்கவில்லை. ஒருவித மோசமான அறிவு எதிர்ப்பு மனநிலை, தேடித் தேடி வாசிக்கும் பழக்கமின்மை அவரிடம் ஆழ உறைந்திருந்தது. அதற்கு அவர் செய்துகொண்ட சமாதானம் “பார்ப்பன அறிவுஜீவிகளின் மேட்டிமைத்தனம்” என்பதாக இருந்தது. தமிழ்நாட்டின் அறிவுஜீவிக் கலகக் குரலாக அவர் உருப்பெற்றதற்கு இந்த “பார்ப்பனிய மேட்டிமைத்தனம்” தந்த சுயநியாயப்பாடு என்ற மோசமான விபத்தே தவிர வேறில்லை.
காரல் மார்க்ஸின் எழுத்துக்கள் வழியாக நேரடியாக மார்க்சியத்தைக் கற்க வேண்டும் என்ற வேகத்தில் 33 தொகுப்புகளை வாங்கி அடுக்கி வைத்துவிட்டேனே தவிர வாசிக்க இயலவில்லை. தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. ஜெர்மன் ஐடியாலஜி, ஹோலி ஃபேமிலி, 1844 கையெழுத்துப் படிகள் போன்ற முக்கியமான ஆக்கங்களுக்குள் நுழையவே முடியவில்லை. எங்கிருந்து தொடங்குவது என்று பிடிபடவும் இல்லை. என்ன செய்வதென்று விளங்காமல் விழித்துக் கொண்டிருந்த ஒரு பொழுதில், ஒவ்வொரு புத்தகமாக எடுத்து “வளர்மதி” என்று கையொப்பம் இடத் தொடங்கினேன். 18-04-1992 “மோகன்” “வளர்மதி”யாக மாறிய நாள் அதுதான் (உருமாற்றம் பெற்ற ட்ராக் தனி). நேரத்தைக் குறித்து வைக்கவில்லை. அநேகமாக அகாலமாக இருக்கலாம்.
இப்படி வாசிக்க வேண்டும் என்ற உந்துதல் எங்கிருந்து ஊற்றெடுத்தது என்ற பின்னணிப் படலம் இந்தக் காதையிலே முக்கியமானது. அப்படலத்திற்கான தலைப்பை “குட்டி முதலாளிய உணர்வைக் களைந்து கொள்ளுதல்” அல்லது “பாட்டாளி வர்க்க உணர்விலே புடம் போட்டுக் கொள்ளுதல்” என்று வைக்கலாம்.
மா-லெ குழு (அப்போது தமிழ் நாடு அமைப்புக் கமிட்டி; இப்போது தமிழ் நாடு மார்க்சிய லெனினிய கட்சி) அறிமுகமானது 1988 மே மாதம் இருக்கும். முழுநேர ஊழியனாக சேர முடிவெடுத்தது 1989 பிப்ரவரி மாத அளவில். ஓடி வந்தது ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னான இரண்டு வாரங்களில்.
இந்த இடைப்பட்ட இரண்டே கால் வருடங்களும் அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 1996 வரைக்கும்கூட நான் பயந்து நடுநடுங்கிய சொற்பிரயோகங்கள் இவைதாம் – குட்டி முதலாளிய ஊசலாட்டம், குட்டி முதலாளிய உணர்வுகளைக் களைந்து கொள்ளுதல், பாட்டாளி வர்க்க உணர்விலே புடம் போடுதல். இவற்றால் யாம் வறுத்தெடுக்கப்பட்டது கட்சிக் கமிட்டிக் கூட்டங்களில்.
சென்னையில் முழு நேர ஊழியர்கள் நாங்கள் ஐந்து பேர் – ஒரு பெண் தோழர் உட்பட. ஒவ்வொருவர் பொறுப்பிலும் ஒன்றிரண்டு கமிட்டிகள். எனது பொறுப்பில் புரட்சிகர மாணவர் முன்னணி (RSF). எங்கள் கமிட்டியின் செயலாளர் “மேல் கமிட்டி”யின் உறுப்பினர்.
அவரை அவரது கமிட்டியில் வறுத்தெடுக்க, அவர் எங்களை எமது கமிட்டியில் வறுத்தெடுக்க, நாங்கள் எங்கள் பொறுப்பில் இருந்த கமிட்டிகளை வறுத்தெடுப்பதான ஒரு ஸ்ட்ரக்ச்சர்.
எங்களது வழமையான கட்சிப் பணிகளாவன: 1) மாதாந்திர லெவி தருபவர்களாக ஒப்புக் கொண்டிருக்கும் தோழர்களிடம் அத்தொகையைப் பெற்று வருதல் 2) மாதம் இருமுறை வெளியான அரசியல் இதழ் “கேடயம்” மாதமொருமுறை வெளியான இலக்கிய இதழ் “மனஓசை” இரண்டையும் கடைகளில் விநியோகிப்பது. 3) விற்காமல் திரும்ப வரும் இதழ்களை பேருந்து நிலையங்களில் விற்பது (அந்த காலப்பகுதியில் ப்ராட்வே பேருந்து நிலையத்திலும், மிண்ட் பேருந்து நிலையத்திலும், பூந்தமல்லியிலுமாக “அன்பார்ந்த உழைக்கும் மக்களே! புரட்சிகர அரசியல் இதழ் கேடயத்தின் சார்பாக எமது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்!” என்று துவங்கி ஐந்து நிமிடங்கள் உரையாற்றி இதழை விற்கும் இளைஞர்களைக் கண்ணுற்றவர் எவருக்கேனும் நினைவிருக்கிறதா?).
இவை போக, மாணவர்களுக்கெனவும் பெண்களுக்கெனவும் ஸைக்லோஸ்டைல் பத்திரிகைகள் கொண்டு வரும் முயற்சி. கட்சி வழிகாட்டுதலின் படி ஒழுங்கு செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள்: அரசியல் வகுப்புகள், அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள். மாநாடு என்றால் ஒரு மாதம் பிரச்சாரமும் மாநாடு நடத்த நிதி வசூலிப்பும்.
முதலில் குறிப்பிட்ட மூன்று வேலைகளே எங்களது பெரும்பான்மையான நேரத்தை ஆக்கிரமித்திருந்தன. பொறுப்புமிக்க சில தோழர்களைத் தவிர்த்து பெரும்பான்மையோரிடம் லெவியை வசூலிக்க பலமுறை அலைய வேண்டியிருக்கும். இதழ்களை கடைகளில் போடுவது சாதாரண வேலையல்ல. புரிந்துகொள்ள, நான் விநியோகம் செய்ய வேண்டியிருந்த “ரூட்”டைச் சொல்கிறேன். சட்டக் கல்லூரி விடுதிக்க்கு அருகில் இருந்த இரண்டு கடைகளில் தொடங்கி, டவ்டன், பெரம்பூர் பாரக்ஸ் ரோடு, ஜமாலியா, அயன்புரம், கீழ்ப்பாக்கம் கார்டன், சூளைமேடு, கோடம்பாக்கம் ஆர்க்காட் ரோடு, வடபழனி, அசோக் நகர், சைதாப் பேட்டை, கிண்டி என்று முடியும். ஒரு ஓட்டை சைக்கிளில் நாள் முழுக்க அலைந்து நடக்கும்.
300 இதழ்களை கடைகளில் போட்டால், 150 விற்காமல் திரும்பும். ஐவருக்கும் இப்படி. மாதாமாதம் திரும்பி வரும் குறைந்தது 700 இதழ்களை (மனஓசையும் சேர்த்து) பேருந்துகளில் விற்கவே இருவாரங்கள் பிடித்துவிடும். பெரும்பாலான சமயங்களில் சோர்வு தட்டி பாதியில் திரும்பியும் விடுவோம். விற்காத இதழ்கள் தேங்கி நிற்கும். கமிட்டிக் கூட்டங்களில் வறுபடு படலம் தொடங்கும்.
ஆரம்பத்தில் கமிட்டி உறுப்பினராக இருந்த எங்கள் ஐவருக்கும் பிடிபடவில்லை. மிகவும் சாதாரணமாகத் தொடங்கும் கூட்டம். “ஏன் அவர் லெவி தரவில்லை? நீங்கள் எப்போது போனீர்கள்? எத்தனை முறை போனீர்கள்? என்ன நடந்தது? பேருந்துகளில் கேடயம் எத்தனை விற்றது, மனஓசை எத்தனை விற்றது? எத்தனை மணி நேரம் விற்பனை செய்தீர்கள்? எத்தனை முறை டீ குடித்தீர்கள்? ஏன் பாதியிலே திரும்பினீர்கள்?” என்பதாக இருக்கும்.
எங்களது பதில்கள் பட்டியலிடுவதாக இருக்கும். “மூன்று முறை இந்த இந்த நாட்களில் சென்றோம். முதல் முறை லெவி தரும் தோழர் அலுவலகத்தில் இல்லை. திரும்பிவிட்டேன். அடுத்தமுறை சென்றபோது, அவர் இன்னொரு நாள் வரச் சொன்னார். அவர் குறிப்பிட்ட நாள் சென்று வாங்கி வந்தேன். மனஓசை விற்றுத் தீர்ந்து விட்டது. கேடயம் இன்னும் இத்தனை பாக்கி இருக்கிறது. காலை 3 மணி நேரம், மாலை 5 மணி நேரம் விற்பனை செய்தோம். அடுத்த நாள் பேருந்துகளில் கூட்டம் இல்லை. சோர்வாக இருந்ததால் திரும்பிவிட்டோம்” என்று ஒவ்வொருத்தராக அடுக்குவோம்.
அப்புறம் தொடங்குவார் எங்கள் கமிட்டி செயலாளர்.
“முதலாவது முறை லெவி வசூல் செய்யப் போனபோது அந்தத்தோழர் இல்லை என்றீர்கள். ஏன் காத்திருந்து வாங்கிவரவில்லை?”
“அரை மணி நேரம் காத்திருந்தேன் தோழர். அவர் வரவில்லை. அதனால் திரும்பிவிட்டேன்.”
“இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்திருந்து அந்த வேலையை அன்றே முடித்திருக்கலாமே?”
“ஆமாம் தோழர். செய்திருக்கலாம்.”
“ஏன் செய்யவில்லை?”
“…”
“ஒரு வேலையை எடுத்தால், அதை செய்து முடிப்பதில் உறுதியாக இருக்கவேண்டும். அதுதானே பாட்டாளிவர்க்கப் பண்பு?”
“ஆமாம் தோழர்.”
“நீங்கள் அப்படி நடந்து கொள்ளவில்லையே. ஏன்?”
” … ”
“அப்படியானால், உங்களிடம் பாட்டாளி வர்க்கப் பண்பு இல்லை. அப்படித்தானே”
” … ஆமாம் தோழர்.”
“அப்படியானால் உங்களிடம் என்ன பண்பு இருக்கிறது?”
” … ”
“வேலையை செய்துமுடிப்பதில் உறுதி இல்லை. ஊசலாட்டப் பண்பே இருந்திருக்கிறது.”
“ஆமாம் தோழர்.”
“இந்த ஊசலாட்டப் பண்பு எந்த வர்க்கத்திற்கு உரியது?”
” … ”
“குட்டி முதலாளிகளுக்குத்தான் எதிலும் உறுதியான நோக்கு இருக்காது. அதுதான் உங்களிடம் வெளிப்பட்டிருக்கிறது.”
” … ”
” குட்டி முதலாளியப் பண்பைக் களைந்து கொள்ளாமல் இருப்பதால் தான் நீங்கள் வேலையை முடிக்காமல் ஊசலாட்டத்துடனே திரும்பி வந்திருக்கிறீர்கள்”
“ஆமாம் தோழர்.”
இப்படியாக ஒவ்வொரு வேலையாக எடுத்துக் கொண்டு எமது காரணங்களை முதலில் கேட்டு, அவரது விளக்கத்தை இதே மாதிரியாக ஒவ்வொன்றுக்கும் அடுக்குவார் கமிட்டி செயலாளர்.
இறுதியில், ஒவ்வொருவரும் தாம் செய்யவியலாமல் விடுத்த பணிகளுக்கான காரணமாக, “குட்டி முதலாளிய ஊசலாட்டப் பண்பைக் களைந்து கொள்ளாமல், பாட்டாளி வர்க்க உணர்வில் ஊன்றி நிற்காமல் இருந்ததால்தான் எனது பணிகளை முடிக்க இயலவில்லை. இனி, பாட்டாளி வர்க்க உணர்வை வளர்த்துக் கொண்டு பணிகளைச் செவ்வனே செய்து முடிப்பேன்” என்று சுயவிமர்சனமாகத் தொகுத்து முன்வைத்த பின்னரே கமிட்டிக் கூட்டம் இனிதே நிறைவுபெறும்.
கட்சியில் இருந்து ஓடிவந்த பிறகு, மார்க்சிய நூல்களை மூலங்களில் இருந்தே வாசித்துக் கற்க வேண்டும் என்று எனக்கு ஏற்பட்ட உந்துதலுக்கும், இந்தக் குட்டி முதலாளிய ஊசலாட்டத்தில் இருந்து விடுபட்டு, பாட்டாளி வர்க்க உறுதிப்பாட்டில் என்னைப் புடம் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற பயமும் விழிப்புணர்வுமே காரணமாம்.
என்பால் “மரியாதை” வைத்திருக்கும் சில நண்பர்களுடன் அரிதாக தொலைபேசியிலோ ஸ்கைப்பிலோ பேச நேர்கையில், எனது வாசிப்பு குறித்த வியப்பை அவர்கள் வெளிப்படுத்துவதுண்டு [”எப்படிங்க இப்படி” 😉 ]. எனது வாசிப்பின் “ரிஷிமூலத்தை” அப்படியாகக் கிளறிய ஒரு நண்பருடன் சமீபமாகப் பகிர்ந்துகொண்டதை “மரியாதை நிமித்தம்” நிகழ்ந்த சில அற்பமான நிகழ்வுகள் குறித்த நினைவுகளும் சேர்த்து எழுதிவிட இன்று அதிகாலை கண்ட கனா ஒன்று உந்தித் தள்ளிவிட, ஒரு கோப்பை காஃபியும் ஒரு சிகரெட்டும் பருகிவிட்டு தொடங்குகிறேன். எல்லா ரிஷிமூலங்கள் நதிமூலங்கள் போல இதுவும் அற்பமானதுதான்.
மா-லெ குழுவில் இருந்து ‘ஓடி வந்து’ வீட்டிலே முடங்கிக் கிடந்த (அதற்கு முன்னால், வீட்டிலிருந்து ஓடிப் போய் குழுவில் சேர்ந்தது, அந்தக் குழுவும் இன்னொரு குழுவால் “ஓடுகாலிகள்” என பட்டம் சூட்டப்பட்டிருந்தது ஒரு தனி ட்ராக்) கடும் மன உளைச்சல் நிரம்பிய ஒரு மூன்று மாத காலம் கழித்து அது ஆரம்பமானது.
சென்னையின் புதிய குடிசைத் தொழிலாக ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் உருவாகிக் கொண்டிருந்த 90-களின் துவக்கம். 92. 5000 ரூபாயும் மொட்டை மாடியிலே ஒரு கொட்டகையும் இருந்தால் தொழிலை ஆரம்பித்துவிடலாம். எனது வாசிப்பின் மூலதனமாக அமைந்தது இந்த யோசனைதான்.
‘தொழிலை’ செய்யும் முனைப்பு எதுவும் இருக்கவில்லை. துவங்கும் யோசனைகூட இருக்கவில்லை. தீவிரமாக வாசிக்க வேண்டும். புத்தகங்கள் வாங்க வேண்டும். பணம் வேண்டும். அதற்கான குறுக்கு வழியாகத் தான் இந்தச் சுய தொழில் முனைவோர் திட்டம்.
கட்சியிலே இருந்து ஓடி வந்து, வீட்டிலே முடங்கிக் கிடந்த மூன்று மாதங்களும் பெற்றோர் என்னை ”ஏன் என்ன” என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஏதும் கேட்டால் திரும்பவும் ஓடிப்போய்விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு. அந்த மூன்று மாதங்களும் கழிந்தவிதம் – அது ஒரு தனி ட்ராக்.
அந்த ட்ராக் முடிந்து, மெதுவாக பெற்றோரின் அழுத்தம் துவங்கியது. பாதியில் விட்ட படிப்பை தொடரச் சொல்லி. விட்ட இடத்தில் இருந்து துவங்க எனக்குச் சுத்தமாக விருப்பு இருக்கவில்லை. புதிதாக தொடங்க நான் விரும்பிய இடத்தில் அவர்களுக்கு விருப்பில்லை. அது இன்னொரு ட்ராக் – திருவனந்தபுரம் ட்ராக்.
ஆறு பத்திகளில் மூன்று ட்ராக்குகளை ஓட்டிவிட்டும் இன்னும் ’ஆரம்பப்’ புள்ளிக்கு வரமாட்டேங்குறானே என்ற சலிப்பு உருவாவதற்கு முன்பாக அதை எழுதிவிடுகிறேன். படிப்பு பற்றிய அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததற்கு முன்போ இடையிலோ, வீட்டாரின் தரப்பில் இருந்து இன்னொரு அழுத்தம். “இப்படி வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல், ஏதாச்சும் வேலைக்குப் போ”.
வேலையையும் அவர்களே ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள். ஒரு ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் கம்பெனியில். எப்படி ஒப்புக் கொண்டேனென்று நினைவில் இல்லை. ஒரே வாரத்தில் அங்கிருந்தும் ஓடி வந்துவிட்டேன். போக முடியாது என்று வீட்டில் தீர்மானமாகச் சொல்லிவிட்டேன்.
அந்த ஒரு வாரகாலம் அந்தக் குடிசைத் தொழில் கம்பெனியில் எனக்கு இடப்பட்ட வேலை ஒன்றே ஒன்றுதான். விசிட்டிங்க் கார்டுகளை ஒருவர் ஸ்க்ரீனில் தேய்த்து அச்சாக்குவார். அதை எடுத்து வரிசையாக அடுக்க வேண்டும். எட்டு மணி நேரம் நின்றபடியே இதையே செய்து கொண்டிருக்க வேண்டும். பெண்டு கழன்றுவிட்டது.
அதுபோக, இந்தியப் புரட்சியை இன்னும் பத்தே வருடங்களில் நடத்திவிடலாம் என்ற பெரும் கனவைச் சுமந்து வீட்டை விட்டு ஓடிப் போகத் துணிந்த மனது, “நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?” என்று உறுத்த ஆரம்பித்துவிட்டது.
பாட்டாளி வர்க்க உணர்வில் புடம் போடப்பட வேண்டும். உடல் நோக உழைக்க வேண்டும். ஆனால், மார்க்சியத்தைக் கற்றுத் தேர வேண்டும் என்று உள்ளூர உந்தித் தள்ளிய உத்வேகம் வேறு இன்னொரு பக்கம். அந்த உள்ளூர உந்திய உத்வேகத்தில் ஒரு இரண்டு மணிநேரம் உழைத்து, நல்ல காசு சம்பாதித்து புத்தகங்கள் வாங்கி 10 – 12 மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்று ’திட்டம்’ போட்டு கொத்தவால் சாவடியில் மூட்டை தூக்கி கழுத்து சுளுக்கிக் கொண்ட ட்ராக் இன்னொரு தனி ட்ராக்.
அந்த காலப் பகுதியில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத சங்கம் ஒன்று இயங்கி வந்தது. அதாகப்பட்டது எதுவெனில் ”கட்சியில் இருந்து ஓடிப்போனோர் சங்கம்”. அமைப்பாக்கப்படாத அமைப்பு. உருப்படாமல் போனோர் அநேகரும், தொழில் முனைவோர் ஆனோர் சிலரும், இலக்கியவாதிகளாக உருப்பெற்ற பலரும் கூடிக் கூடி பேசிக் குமைந்து கொள்ளும் இயக்கமாக அது செயல்பட்டு வந்தது.
அந்தச் சங்கத்தின் வழியாக அறிமுகமான முன்னாள் காம்ரேடு ஒருவர் – முதல் வகையினத்தைச் சேர்ந்தவர் – “ஏன் தோழர்! எனக்கு ஸ்க்ரீன் ப்ரிண்டிங்க் தெரியும். உங்க வீட்டில் இருந்து ஒரு 5000 ரூபாய் வாங்குங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து தொழில் செய்யலாமே!” என்று ஒரு யோசனையை சொல்ல, கொத்தவால் சாவடிப் பரிசோதனையில் சோர்ந்திருந்த எனக்கு வாழ்க்கையிலே புது வெளிச்சம் கொழுந்துவிட்டு எரிந்தது.
திட்டத்தை வீட்டிலே சொன்னேன். எனக்கு வேறு திட்டம் இருந்தது. ஏதாச்சும் தொழிலைச் செய்தாவது பிழைக்கிறானா பார்ப்போம் என்று அவர்களும் ஐயாயிரத்தைக் கொடுத்துத் தொலைத்தார்கள்.
மறுநாள் மாலை ஐயாயிரத்தை எடுத்துக் கொண்டு நேராக என்.சி.பி.எச். Lenin Collected Works முழுமையும். 45 தொகுதிகள். Marx – Engels Collected Works 33 தொகுதிகளே இருந்தன. லெனின் தொகுப்பு ஒன்றின் விலை ஏழே ரூபாய். மார்க்ஸ் எங்கெல்ஸ் 30 ரூபாய். மன்னிக்க, மார்க்ஸ்- எங்கெல்ஸ் தொகுதி ஒன்று 30 ரூபாயாக இருந்தது. ரசியப் பதிப்பு அவ்வளவு மலிவு அப்போது. நாவல், சிறுகதைத் தொகுப்பு என்று கண்ணில்பட்ட இலக்கியம் சம்பந்தப்பட்டவை எல்லாம் ஆங்கிலத்தில் ஒரு பிரதியும் தமிழிலும்.
லெனின் தொகுப்புகளில் ஒன்று மிஸ் ஆக இருந்தது. கட்சியில் இருக்கையில் அறிந்திருந்த தோழர் ஒருவர் – ராயன் என்பதாகப் பெயர் என்று நினைவு; லெவி மட்டும் தருவார் – லெனின் பிற்காலத்தில் ஹெகலை வாசித்து எழுதிய குறிப்புகள் கொண்ட தொகுதியை வாங்க இருந்தார். மொத்த தொகுதியை வாங்கும் எனது முனைப்பைச் சொல்லி அவரிடமிருந்து அதைப் பறித்துக் கொண்டேன்.
கையில் மிச்சம் தேறியது ஒரு 400 ரூபாய் இருக்கும். புத்தகங்களைக் கட்டி வைத்தபின் ஒரு சிறிய தயக்கம். ”தோழர், இதை இப்படிக் கட்டி இங்கே வைத்துவிட்டுச் செல்கிறேன். ஒரு ஒரு வாரத்தில் வந்து எடுத்துக் கொள்கிறேனே” என்று கேட்டேன். தாராளமாக ஒப்புக் கொண்டார்கள்.
ஒரு வாரம் காத்திருக்க முடியவில்லை. வீட்டிலே வேறு எப்போது தொழிலைத் தொடங்கப் போகிறாய் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வாரச் சனிக்கிழமை கிளம்பி, ஒரு ஆட்டோவில் அத்தனை புத்தகங்களையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
இறங்கிய புத்தகங்களைப் பார்த்தும் வீட்டிலே பெற்றோர் வாயைத் திறக்கவில்லை. ஏதாச்சும் கேட்டு திரும்பவும் ஓடிப் போய் விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு.
ஒரு தொழில் முனைவோன் உருவாகாமல் இந்த தேசம் தப்பித்த காதையும் இது.
(தொடரலாம் … )