ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 4

குடவோலை முறையின் வீழ்ச்சியும் பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் தோற்றமும் – 4

 

கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் இருந்து கி. மு. 1 ஆம் நூற்றாண்டு வரை ஏதென்ஸிலும், பல கிரேக்க நகர அரசுகளிலும் தழைத்திருந்த குடவோலை முறையிலான மக்களாட்சி, கி. மு. 146 இல் ரோமப் பேரரசின் ஆக்கிரமிப்போடு முடிவுக்கு வந்தது. என்றாலும், ஏதென்ஸின் மக்களாட்சி என்ற கனவு, தத்துவவாதிகளின் எழுத்துக்களிலும், அரசியல் கோட்பாட்டாளர்களின் கற்பனைகளிலும் தொடர்ந்து உலவிக்கொண்டிருந்தது. மறுமலர்ச்சி கால இத்தாலியில் வெனிஸ், ஃப்ளோரன்ஸ் நகரங்களில், மேட்டுக்குடியினரின் குறுகிய வட்டங்களில் குடவோலை முறையைப் பின்பற்றி அதிகாரக் குவிப்பைத் தவிர்க்கும் முயற்சி மீண்டும் முளைத்து, ஐரோப்பாவின் பல நகரங்களுக்கும் பரவியது. இறுதியாக, 1797 ஆம் ஆண்டில் வெனிஸ் நகரின் வீழ்ச்சியோடு குடவோலை முறை முற்றிலுமாக மறைந்துபோனது.

 

மத்திய கால உலகை முடிவிற்கு கொண்டு வந்து, நவீன காலத்தின் கதவுகளைத் திறந்துவிட்ட அமெரிக்கப் புரட்சியும், ஃப்ரெஞ்சுப் புரட்சியும், நாடாளுமன்ற ஆட்சியை நோக்கிய இங்கிலாந்தின் படிப்படியான முன்னேற்றமும் குடவோலை முறை நடைமுறையையும் அது குறித்த பேச்சையும் அரசியல் உலகில் இருந்து முற்றிலுமாகத் துடைத்தழித்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் உலகைக் குலுக்கிய இம்மூன்று மாற்றங்களும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையில் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் முறைக்குப் பதிலாக, தேர்தலின் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்யும் முறையே தமக்குரிய ஆட்சிமுறை என்று மிகுந்த கவனத்துடன் தேர்ந்துகொண்டன.

 

முதலாவதாக, இம்மூன்று புரட்சிகளின் நாயகர்களும் அவர்கள் புதிதாக உருவாக்கிய ஆட்சியமைப்பை ஜனநாயம் – மக்களாட்சி என்று கருதவே இல்லை. அவ்வாறு அழைப்பதை மிகுந்த கவனத்துடன் தவிர்த்து வந்தனர். தமது அரசுகளை குடியரசுகள் (Republic) என்றே அழைத்தனர். ஃப்ரெஞ்சு அரசு குடும்பத்தில் இருந்து வந்தவரும், முடியாட்சியை வெறுத்தவரும், ஆனால், உருவாகிக் கொண்டிருந்த புதிய அரசுகளின் எல்லைகளை தீர்க்கத்தரிசனத்துடன் உணர்ந்தவருமான அலெக்ஸி டி டாக்யெவெல்லி என்பார், தனது அமெரிக்கப் பயணத்தை தொடர்ந்து 1835 இல் “அமெரிக்காவில் ஜனநாயகம்” என்ற நூலை எழுதும்வரை, இப்புதிய அரசமைப்புகளை குடியரசுகள் என்று அழைக்கும் வழக்கமே நிலவி வந்தது. டாக்யெவெல்லியின் நூலைக்குப் பிறகே, இப்புதிய அரசமைப்புகளை ஜனநாயகம் என்ற சொல் பீடித்துக்கொண்டது.

 

இரண்டாவதாக, பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சிகளின் நாயகர்கள் ஏதென்ஸில் நிலவிய ஆட்சியமைப்பை நன்கு அறிந்தே இருந்தார்கள். தமது சமகாலத்தில் இத்தாலிய நகரங்கள் சிலவற்றில் – குறிப்பாக வெனிஸில் – நிலவிய வரையறுக்கப்பட்ட வகையிலான குடவோலை முறையைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார்கள். என்றபோதிலும், தாம் உருவாக்கிக் கொண்டிருந்த புதிய ஆட்சிக்கு அது உகந்ததல்ல என்றே முடிவு செய்தார்கள். ஏதென்ஸின் குடவோலை முறையிலான ஆட்சியமைப்பிற்குப் பதிலாக ரோமக் குடியரசில் நிலவிய தேர்தல் மூலமான குழு ஆட்சிமுறையே தமக்கு உகந்தது என்று தெளிவாக முடிவு செய்தார்கள்.

 

ஒரு அரசாங்கம் – ஆட்சி அமைப்பு எவ்வாறு அங்கீகாரம் பெறுகிறது என்பதைப் பற்றிய அவர்களுடைய புரிதலே இந்த தேர்வுக்கு காரணமாக அமைந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சிகள் யாவும் முடியாட்சிக்கு எதிரானவை என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். முடியாட்சியில் அரசனின் ஆட்சிக்கான நியாயப்பாடு அவன் குறிப்பிட்ட அரச பரம்பரையில், “உயர் குடியில்” பிறந்தவன் என்ற காரணத்தினாலேயே உருவாகிறது. வேறு எந்த நியாயப்பாடும் ஆட்சிபுரியும் அரசனுக்கு அவசியமில்லை.

 

அத்தகைய முடியாட்சியை தூக்கி எறிந்தவர்கள் அவ்வாறான நியாயப்பாட்டையும் நிராகரித்தார்கள். எந்தவொரு அரசாங்கமும் குடிமக்களின் ஒப்புதல் – அங்கீகாரம் பெற்றே ஆட்சி புரியமுடியும் என்ற வரையறையே சரியாக இருக்கமுடியும் என்று நம்பினார்கள். அவ்வகையிலான அரசாங்கத்தை உருவாக்க பொருத்தமான முறை தேர்தலாக மட்டுமே இருக்கமுடியும் என்று கருதியதாலேயே, குடவோலை முறையை நிராகரித்து தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் ஆட்சிமுறையைத் தழுவிக்கொண்டார்கள்.

 

ஏதென்ஸின் குடிமக்களுக்கு அனைவரும் ஆட்சியில், சுழற்சி முறையில் பங்குபெறவேண்டும் என்பதே மையமான அம்சமாக இருந்தது. அத்தகைய ஜனநாயகக் கொள்கைக்கு உகந்த முறையாக குடவோலை முறையிலான குலுக்கல் முறை இருந்ததாலேயே அவர்கள் அதை தேர்வு செய்தனர். ஆட்சிக்கான நியாயப்பாடு குடிமக்கள் தரும் ஒப்புதல் – அங்கீகாரத்திலேயே அடங்கியிருக்கிறது என்று பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்கள் நம்பினார்கள். அதற்கு உகந்த முறையான தேர்தல் முறையை தேர்வு செய்துகொண்டார்கள். எவருடைய ஒப்புதலுமற்ற முடியாட்சியுடன் ஒப்பிடும்போது இம்முறை அவர்களின் கண்களுக்கு மேலானதாகத் தெரிந்ததில் வியப்பில்லை.

 

குடிமக்கள் ஒப்புதலும் அங்கீகாரமும் வழங்கும் தேர்தல் முறையின் மறுபக்கம் ஒன்றும் இருக்கிறது. ஒப்புதல் தந்த  குடிமக்கள், ஆட்சியில் அமர்ந்தவர்களுக்கு – அதாவது தாம் அளித்த ஒப்புதலுக்கு – அடங்கி நடந்துகொள்ளவேண்டும் என்ற கடமையும் உருவாகிவிடுகிறது. குடிமக்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கக்கூடிய இத்தகைய கடமை உணர்வை தேர்தல் முறை உருவாக்குகிறது என்பதை நன்கு உணர்ந்த காரணத்தாலும், பதினெட்டாம் நூற்றாண்டின் புரட்சியாளர்கள் தேர்தல் முறையைத் தழுவிக்கொண்டனர்.

 

இறுதியாக, புரட்சியாளர்கள், புதிய ஆட்சியமைப்பில், தேர்ந்தெடுப்பவர்களுக்கும் தேர்வு செய்யப்படுபவர்களுக்கும் இடையில் தெளிவான வித்தியாசம் இருக்கவேண்டும் என்று நம்பினர். முடியாட்சியில் நிலவியதைப் போல, பிறப்பின் அடிப்படையில் “உயர்குடியினராக” இருக்கவேண்டும் என்ற கருத்தை அவர்கள் ஏற்கவில்லை. ஆனால், தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதாவது ஆட்சியில் அமர்பவர்கள், செல்வச் செழிப்பிலும், செயல்திறனிலும் தேர்ந்தெடுப்பவர்களைக் காட்டிலும் உயர்ந்த நிலையில் இருப்பதே ஆட்சிக்கு உகந்தது என்று நம்பினர். அத்தகையவர்களே நிர்வாக முறைகேடுகளில் ஈடுபடமாட்டார்கள் என்பதிலும் அவர்களுக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.

 

இதன் காரணமாகவே, தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறிப்பிட்ட அளவு சொத்துடையவர்களாக இருக்கவேண்டும் என்ற வரையறை முதலில் உருவாக்கப்பட்டது. சில குடியரசுகளில், சொத்துடையவர்களில் இருந்து மட்டுமே பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பதை உறுதிசெய்துகொள்ள, வாக்களிப்பவர்களுக்கு குறிப்பிட்ட சொத்து மதிப்பு இருக்கவேண்டும் என்ற வரையறை உருவாக்கப்பட்டது. சில குடியரசுகளில் இரண்டு நிபந்தனைகளுமே முன்வைக்கப்பட்டன.

 

செல்வச் செழிப்பிலும் செயல்திறனிலும் உயர்வானவர்கள், சிலவேளைகளில் முறைகேடாக நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணராத அளவிற்கு புதிய அரசமைப்பை உருவாக்கியவர்கள் அசடுகளாக இருக்கவில்லை. அத்தகைய நிலை உருவானால், பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால், அவர்களுக்கான அங்கீகாரம் திரும்பப்பெறப்படும் என்ற எச்சரிக்கைப் பொறிமுறையாகவே, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் மீண்டும் மீண்டும் நடத்தப்படவேண்டும் என்றும் வகுத்துக்கொண்டனர்.

 

ஆக, முதலாவதாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நிலவி வந்துள்ள பிரதிநிதித்துவ அரசாங்கங்கள், முதலில் தம்மை ஜனநாயக அரசுகளாகவே கருதிக்கொள்ளவில்லை. குடியரசுகள் என்றே கருதிவந்தன. இத்தகைய அரசுகள் தோன்றி, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் கழிந்தபிறகே அவற்றுக்கு “ஜனநாயகம்” என்ற பெயர் சூட்டப்பட்டது.

 

இரண்டாவதாக, முடியாட்சியிலிருந்து மாறுபட்ட ஆட்சியமைப்பை உருவாக்கவேண்டும் என்ற விழைவின்பாற்பட்டே, குடிமக்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் பெற்ற அரசாங்க அமைப்புகளே நியாயப்பாடுள்ள அரசமைப்புகளாக இருக்கமுடியும் என்ற கருத்தமைவின் காரணமாகவே தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை கையாளத் துவங்கினர். இதன் மறுபக்கமாக, தேர்வு செய்பவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கட்டுப்பட்டிருக்கும் கடமைப்பாடு உடையவர்கள் என்ற கருத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

மூன்றாவதாக, தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தேர்ந்தெடுப்பவர்களைக் காட்டிலும் சிறந்தவர்களாக இருப்பதே ஆட்சிக்கும் அதிகாரத்திற்கு உகந்தது என்ற நம்பிக்கை. இதன் காரணமாக, செல்வச் செழிப்பும், செயல்திறனும் உள்ளவர்களே தேர்தலில் போட்டியிடுவதற்கான வரையறைகள் உருவாக்கப்பட்டன. இதன் மறுபக்கமாக, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தமது நிலையில் இருந்து தவறினால், அவர்களுக்கான அங்கீகாரம் திரும்பப்பெறப்படும் என்ற எச்சரிக்கையாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்கள் மீண்டும் மீண்டும் நடத்தும் வழமை உருவாக்கப்பட்டது.

 

பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் தோற்றம் இவ்வாறாக இருந்ததென்றால், அவற்றின் ஆதாரமான அடிப்படைகளாக நான்கு அம்சங்கள் இருந்தன. அவை மூன்று அவதாரங்களை எடுத்துள்ளன. இந்த மாற்றங்களில், குடிமக்கள் அனைவரும் ஆட்சிப் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் சுழற்சி முறையில் பங்கேற்கவேண்டும் என்ற ஜனநாயகக் கொள்கையும் நடைமுறையும் காணாமல் போயின.

 

(தொடரும்… )

 

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 2

குடவோலை முறை எனும் மக்களாட்சி முறை – 2

கி. பி. பத்தாம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியில் நிலவிய குடவோலை முறை குறித்த தகவல்கள் அடங்கிய உத்திரமேரூர் கல்வெட்டுக்கள் வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தையும் பெரும் புகழையும் பெற்றிருந்தாலும், அவற்றில் விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சிமுறை அரசியல் ஆய்வாளர்களின் உரிய கவனத்தைப் பெறவில்லை. குறிப்பாக, ஒரு ஆட்சிமுறை என்ற அளவில் தற்கால அரசியல் நெருக்கடிகளுக்கு அக்கெல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்ற நோக்கிலிருந்து அவை அணுகப்படவே இல்லை.

தற்போது நிலவும் ஆட்சிமுறை வாக்குகளைச் செலுத்தி பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து ஆள்வதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கும் ஆட்சிமுறை என்பது அனைவரும் அறிந்ததே. இதை ஜனநாயக ஆட்சிமுறை என்று நாம் கருதுகிறோம். குடவோலை முறையையும் ஜனநாயக ஆட்சிமுறை என்று பொத்தாம் பொதுவாக சொல்கிறோம். ஆனால், குடவோலை முறை வாக்குகளை செலுத்தி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் முறையே அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளத் தவறுகிறோம்.

உத்திரமேரூர் கல்வெட்டுகளில் விவரிக்கப்பட்டிருக்கும் குடவோலை முறையின் நடைமுறை மிகவும் எளிமையானது. தோட்ட வாரியம், ஏரி வாரியம், பொன் வாரியம், நில வரி வாரியம், ஆண்டுக்கு ஒருமுறை கூடி மேற்பார்வை செய்யும் வாரியம் ஆகிய கிராம நிர்வாக சபைகளுக்கு, தகுதி உடைய நபர்களை தேர்வு செய்யும் முறை. ஊரில் இருந்த முப்பது பிரிவுகளுக்கு ஒருவர் என்ற விதத்தில் 30 நபர்கள் இவ்வாரியங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

முதலில், ஒவ்வொரு ஊர் பிரிவிற்கும் தகுதியான நபர்கள் என்று கருதப்படுபவர்களின் பெயர்களை ஓலையில் எழுதி ஒரு குடத்தில் இட்டு, இறுக மூடிவைத்துவிடுவார்கள். தேர்வு செய்யப்படும் நாளன்று, ஊரின் மகாசபையில் ஊரில் உள்ள அனைவரும் கூடியிருக்க, பூசாரிகளும் ஒருவர் தவறாமல் கூடியிருக்கவேண்டும். கூடியிருக்கும் பூசாரிகளில் வயதில் மூத்தவர், பெயர்கள் எழுதப்பட்ட ஓலைகள் அடங்கிய பானையை, சபையினர் அனைவரும் பார்க்கும் வகையில் தூக்கி காட்டவேண்டும். பிறகு அப்பானையில் உள்ள ஓலைகளை வேறொரு பானைக்குள் இட்டு, அதை நன்றாக குலுக்கவேண்டும். அதன் பிறகு, ஏதுமறியாச் சிறுவன் ஒருவனைக் கொண்டு, பானையில் உள்ள ஓலைகளில் ஒன்றை எடுக்கச் சொல்லவேண்டும். சிறுவன் எடுக்கும் ஓலையை, மத்தியஸ்தர், தன் ஐந்து விரல்களையும் அகல விரித்து வாங்கிக்கொள்ளவேண்டும். வாங்கிய ஓலையில் உள்ள பெயரை அவர் உரக்க வாசிக்கவேண்டும். அவரைத் தொடர்ந்து சபையில் கூடியுள்ள மற்ற பூசாரிகள் அனைவரும் ஓலையில் உள்ள பெயரை உரக்க வாசிக்கவேண்டும். ஊரின் 30 பிரிவுகளுக்கும் இவ்வாறு 30 பானைகளில் பெயர்கள் இடப்பட்டு 30 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எவ்விதமான முறைகேடுகளும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் தேர்வு செய்வதற்கான நடைமுறை என்பது தெளிவாகத் தெரிகிறது. எவ்விதமான அதிகாரப் போட்டிக்கும் பொறாமைக்கும் இடம் தராமலும், செல்வாக்கு பெற்றவர்கள் மறைமுகமாக அழுத்தம் தந்து தமக்கு சார்பானவர்களை தேர்வு செய்வதற்கான வழியும் இல்லாமல் தேர்தெடுக்கும் முறை என்பதும் புலனாகிறது.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படத் தகுதியானவர்கள் என்பதற்கான நிபந்தனைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தன. அவை பின்வருமாறு:

  • வரி செலுத்தக்கூடிய கால்வேலிக்கு அதிகமான நிலம் உடையவராக இருக்கவேண்டும்.
  • அந்நிலத்தில் சொந்தமான வீடு உடையவராக இருக்கவேண்டும்.
  • 35லிருந்து 70 வயதிற்கு உட்பட்டவராக இருக்கவேண்டும்.
  • மந்திர பிரமாணங்களைப் பிறருக்கு எடுத்துரைத்துச் சொல்லக்கூடியவராக இருக்கவேண்டும்.
  • வேலியில் 1/8 பங்கு நிலமுடையவராக இருந்தால், 1 வேதத்திலும் அதற்கான உரையிலும் நிபுணத்துவம் பெற்றவராக இருக்கவேண்டும்.
  • செல்வத்தை நல் வழியில் சேர்த்தவராகவும், தூய்மையான மனத்தினராகவும் இருக்கவேண்டும்.
  • மூன்று ஆண்டுகளுக்கு எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது. நெருங்கிய உறவினர்கள் எவரும்கூட அவ்வாறு எந்த வாரியத்திலும் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது.
  • ஏதாவது வாரியத்தில் உறுப்பினராக இருந்து, கணக்குகளைக் காட்டாமலோ ஒப்படைக்காமலோ இருந்தால், குடத்தில் பெயரை இடுவதற்கான தகுதியற்றவராக கருதப்படுவார். அவருடைய நெருங்கிய உறவினர்களில் எவராவது உறுப்பினராக இருந்து கணக்குகளை காட்டாமலிருந்தாலும்கூட, தகுதியற்றவராகவே கருதப்படுவார்.
  • ஆகமங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள், கையூட்டு பெற்றவர்கள், பிறர் பொருளை அபகரித்தவர்கள், மக்களுக்கு விரோதமான காரியங்களை செய்தவர்கள், இன்னபிற பாதகங்களை செய்தோரும் தகுதியற்றவர்கள்.
  • பொய் கையெழுத்து இட்டவர்கள், கழுதை மேல் ஏறியவர்களும் தகுதியற்றவர்கள்.

இந்த நிபந்தனைகளின் பாதகமான அம்சங்களை முதலில் பார்த்துவிடுவது நல்லது. முதலாவதாக, வேதங்களிலும் ஆகமங்களிலும் வல்லவர்கள் – அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படத் தகுதியானவர்கள் என்ற வரையறை. இரண்டாவதாக, குறிப்பிட்ட அளவு சொத்துடைமை வரையறை. இவ்விரண்டும், ஆட்சி செய்யத் தகுதியானவர்களை ஒரு குறுகிய வரம்பிற்குள் நிறுத்திவிடுகின்றன.

இதற்கு அப்பாற்பட்டு, விதிகளின் சாதகமான அம்சங்கள் கவனத்திற்கு உரியவை. முதலாவதாக, முறைகேடுகளைத் தடுப்பதற்கான விதிமுறைகள். சமூகத்தின் பொது நன்மைக்கு எதிரானவர்களை மட்டுமின்றி, நிர்வாகத்தில் பொறுப்பின்றி நடந்துகொண்டவர்களையும் முறைகேடுகளைச் செய்தவர்களையும் விலக்கி வைக்கும் விதிமுறைகள். இவை நிர்வாகத் தூய்மையை உறுதி செய்பவை.

இரண்டாவதாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிர்வாக சபைகளுக்கு தேர்வு செய்யப்பட முடியும் என்ற நிபந்தனை. நெருங்கிய உறவினர்கள் எவரும்கூட இக்கால எல்லைக்குள் நிர்வாக சபையில் உறுப்பினராக இருந்திருக்கக்கூடாது என்று துணை நிபந்தனை இதை மேலும் இறுக்கமாக்குகிறது.

அதிகாரம் ஒரு குறிப்பிட்ட செல்வாக்கு மிக்க நபரிடமோ செல்வாக்கு மிக்க குழுவிடமோ குவிந்துவிடாமல் இருப்பதை இந்த நிபந்தனை உறுதிசெய்கிறது. வேறு வகையில் சொல்வதென்றால், சுழற்சி முறையில் நிர்வாகத்திலும் ஆட்சிப் பொறுப்பிலும் ஊரில் இருக்கும் பலரும் பங்கேற்க வழிவகை செய்கிறது.

தற்கால அரசியல் சூழலுக்குப் பொருத்திக் கூறுவதென்றால், நிர்வாக முறைகேடுகள், ஊழல், லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவை நிகழாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது. அடுத்து, அதிகாரம் ஒரு குறிப்பிட்ட குழுவினரிடமோ, செல்வாக்கு மிக்க தனி நபர்களிடமோ குவிந்துவிடாமல் தடுக்கப்படுவதோடு, அதிகாரத்திலும் ஆட்சிப் பொறுப்பில் அனைவரும் பங்கேற்பதை சுழற்சி முறை உறுதி செய்கிறது.

இவற்றோடு, குடத்தில் ஓலைகளை இட்டு பெயர்களை தேர்வு செய்யும் முறையின் மையமான பண்பு கவனத்திற்குரியது. இவ்வாறு தேர்வு செய்யும் முறையை random process – சீர்வாய்ப்பு முறை அல்லது அறவட்டு முறை என்று கூறுவர். இம்முறையில், குடத்தில் இடப்பட்டுள்ள பெயர்களில் இருந்து எவருடைய பெயரும் தேர்வு செய்யப்படலாம். எவரது பெயர் தேர்வு செய்யப்படுவதற்கும் நூறு சதவீதம் சமமான வாய்ப்பு இம்முறையில் இருக்கிறது.

ஆட்சி புரிவதில் அனைவருக்கும் சம வாய்ப்பை உறுதி செய்யும் சீர்வாய்ப்பு/அறவட்டு முறையுடன் சுழற்சி முறையும் இணைந்த இத்தகைய குடவோலை முறை, அனைத்து மக்களும் அல்லது அவர்களின் பிரதிநிதிகளும் எந்த பாகுபாடும் இன்றி அதிகாரத்தில் அமர்ந்து ஆட்சி புரியவும், நிர்வாகம் செய்யவும் வழிவகை செய்யக்கூடியது. இதுவே மக்களாட்சி அல்லது ஜனநாயகம்.

இம்முறையில், தேர்தல் முறையில் நிலவும் போட்டியினால் உருவாகக்கூடிய பலப் பரீட்சை, மோதல், போட்டி, பொறாமை, பகைமை, செல்வாக்கு அழுத்தங்கள் போன்ற அனைவருக்கும் தீங்கை விளைவிக்கும் பண்புகளும் உருவாகாமல் தவிர்க்கப்படுகிறது.

ஆனால், சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்த குடவோலை முறை, சொத்துரிமை வரையறையுடன், சாதிய அடுக்கில் ஒரு பிரிவினரைத் தவிர பிறருக்கு வாய்ப்பை மறுத்த, மன்னராட்சிக்கு உட்பட்ட கிராம அளவிலான ஆட்சிமுறையாகவே இருந்தது கண்கூடு. இத்தகைய முறை, சோழர் ஆட்சி காலத்தில் மட்டுமல்லாது, பிற ஆட்சிக் காலங்களில் நிலவியதா, எவ்வளவு காலம் தொடர்ந்து நிலவியது என்ற கேள்விகள் எல்லாம் வரலாற்றுப் புலத்திற்குரிய விடை காணப்படாத கேள்விகள்.

இதற்கு மாறாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்க சூழலில்,  ஏதன்ஸ் நகரத்திலும், பல கிரேக்க நகர அரசுகளிலும், மன்னராட்சி முறைக்கும் செல்வாக்கு மிக்க மேட்டுக்குடியினரின் குழு ஆட்சிக்கும் உண்மையான மாற்றாக விளங்கிய ஒரு மக்களாட்சி – குடவோலை முறையை ஒத்த ஆட்சிமுறை நிலவியது.   நகரக் குடிமக்கள் அனைவரும் பாகுபாடின்றி பங்கேற்க வழிவகை செய்யக்கூடியதாக, உண்மையான மக்களாட்சியாக, ஜனநாயக அரசாக ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் தழைத்தோங்கியிருந்தது. அவ்வாட்சி முறையின் நுணுக்கங்களைச் சற்றேனும் சுருக்கமாக புரிந்துகொள்வது, குடவோலை முறை எனும் மக்களாட்சி முறையை மேலும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

(தொடரும்… )

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 1

தேர்தல் என்பது ஜனநாயகமா? – 1

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகத் திகழ்ந்த பராசக்தி திரைப்படம், தமிழக அரசியலிலும் பெரும் புயலைக் கிளப்பிய படமாக இருந்தது என்பதை பெரும்பாலானோர் அறிந்திருப்பர். நாத்திகக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிறது என்ற காரணத்தை காட்டி, படத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளும் அப்போது முன்வைக்கப்பட்டன. ஆனால், அப்போதைய முதல் மந்திரி ராஜாஜி அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்தார் என்பது வரலாறு.

 

அந்த காலப்பகுதியில், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த ராஜாஜியை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்திருந்தார் அப்போதை கவர்னர் ஸ்ரீ பிரகாசம். 1952 ஜனவரியில் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற்று, எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால் மார்ச் இறுதிவரை ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.

 

அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் 375 தொகுதிகளில் காங்கிரஸ் 152 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆந்திரப் பகுதிகளில் செல்வாக்கு பெற்றிருந்த சிபிஐ கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வெற்றி பெற்ற சுயேச்சைகளின் எண்ணிக்கையும் 62. இந்நிலைமையில், 1953 இல் சென்னை மாகாணத்தில் இருந்து பிரிந்த ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரான டி. பிரகாசம், சிபிஐ மற்றும் பிற சிறு கட்சிகளை ஒன்றிணைத்து 166 உறுப்பினர்களின் எண்ணிக்கையை காட்டி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

 

கம்யூனிஸ்டுகள் அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சியில் அமர்ந்துவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, கவர்னர் ஸ்ரீ பிரகாசம், ராஜாஜியை அழைத்து 1952 ஏப்ரல் 10 அன்று முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ராஜாஜி தேர்தலில் போட்டியிட்டிருக்கவில்லை. இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெறுமாறு வழங்கப்பட்ட ஆலோசனையையும் நிராகரித்தார். வேறு வழியில்லாமல், கவர்னர் அவரை அப்போதிருந்த தமிழக மேல்சபையின் உறுப்பினராக நியமித்தார். ஆனால், மேல்சபைக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்யும் அதிகாரம் அமைச்சரவைக்கு மட்டுமே இருந்தது. அமைச்சரவையோ இன்னும் அமைக்கப்பட்டிருக்கவில்லை.

 

ஆக, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்று அறிவிக்கப்பட்ட முதல் தேர்தலின் முடிவில், இந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தில், ஜனநாயகத்திற்குப் புறம்பான வழியில் ஆட்சியமைக்கப்பட்டது. ஆனால், வாக்குரிமை என்பது ஒரு ஜனநாயக உரிமை என்றும், பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஆட்சியமைக்கும் முறை ஜனநாயக ஆட்சிமுறை என்றும் நாம் இன்றுவரையிலும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

 

மேலே விவரித்த ஜனநாயகப் படுகொலை முடிந்து, ஆறு மாதங்கள் கழித்து, 1952 அக்டோபரில் வெளியான “பராசக்தி” திரைப்படமும் அப்படித்தான் நம்பியது. படத்தில் முக்கால் பாகக் கதை போன பிறகு, எஸ். எஸ். ராஜேந்திரன் மீண்டும் கதைக்குள் வருவார். பர்மாவிலிருந்து உயிர் பிழைத்து வரும்போது ஒரு காலை இழந்து, உயிர் பிழைத்திருக்க பிச்சையெடுத்து, அகதி முகாமில் சேர வரும் தமிழர் கூட்டத்தில் ஒருவராக வருவார். அவருக்கும் அவரோடு வந்த கூட்டத்தினருக்கும் அகதி முகாமில் இடம் கிடைக்காமல் போகும். அனைவரும் அருகில் இருக்கும் ஒரு மரத்தடியில் கூடி பேசுவார்கள்.

 

அப்போது எஸ். எஸ். ஆர் கூட்டத்தினரிடையே உரையாற்றுவார். பிச்சைக்காரர்கள் மாநாடு ஒன்றை கூட்டப்போவதாக அறிவிப்பார். பிச்சைக்காரர்களுக்கு வாக்குரிமை கோரி பெற்று, சமுதாயத்தைப் புரட்டிப்போடும் புரட்சியை செய்யப்போவதாகச் சபதமிடுவார்.

 

65 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. 15 சட்டமன்ற தேர்தல்களையும், 16 நாடாளுமன்ற தேர்தல்களையும் மக்கள் பார்த்துவிட்டார்கள். தேர்தல்கள் மீதான நம்பிக்கையும் ஜனநாயகத்தின் மீதான பார்வையும் இருக்கும் நிலை என்ன?

 

கடந்த வருடம் வெளியான “சர்க்கார்” திரைப்படமும், இவ்வருடத் துவக்கத்தில் வெளியான “எல் கே ஜி” திரைப்படமும் மக்களின் மனநிலையை ஓரளவு பிரதிபலித்திருக்கின்றன என்று கருதலாம்.

 

ஒரு வாக்கு – ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது, அதை எக்காரணம் கொண்டும் இழக்கக்கூடாது என்று வலியுறுத்தியது “சர்க்கார்”. வாக்காளர்களை ஏமாற்ற எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயாராக இருக்கும் அரசியல்வாதிகளின் செயல் நுணுக்கங்களை விவரிக்கிறது “எல் கே ஜி”.

 

இரண்டு திரைப்படங்களும், இறுதியில் தவறு இழைப்பவர்கள் வாக்காளர்களே என்று குற்றம் சுமத்துகின்றன. வாக்காளர்கள் செய்யும் தவறுகளாக இரண்டைக் குறிப்பிடுகின்றன. ஒன்று, அரசியல்வாதிகள் தரும் பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. மற்றது, மோசமான வேட்பாளர்கள் என்று தெரிந்தும் வாக்களிப்பது; படித்த, நேர்மையான, சமூக அக்கறை கொண்ட வேட்பாளர்களைப் புறக்கணிப்பது.

 

இவ்விரண்டு குற்றசாட்டுகளை வாக்காளர்கள் மீது சுமத்துவதோடு, வாக்களிக்கும் ஜனநாயக க் கடமையை, சரியான முறையைல் நிறைவேற்றத் தவறுபவர்களை நோக்கி, “நீ ஒரு மனுசன் தானா? ஆண் மகன் தானா?” என்ற கேள்விகளையும் எழுப்புகின்றன.

 

ஒரு ஜனநாயக உரிமை என்ற நிலையில் இருந்து, கடமை, நேர்மை, மனித மாண்பு, ஆண்மை ஆகிய பண்புகளுக்கு இலக்கணமாக இவ்விரு திரைப்படங்களும் வாக்குரிமையை உருப்பெருக்கி காட்டுகின்றன. தேர்தல் = ஜனநாயகம் = வாக்குரிமை = கடமை = நேர்மை = மனித மாண்பு = ஆண்மை என்ற ஒரு சமன்பாட்டை பிரச்சாரம் செய்கின்றன.

 

1952 இல் பிச்சைக்காரர்களுக்கு வாக்குரிமை பெற்று சமுதாயப் புரட்சி செய்யபோவதாக கிளம்பிய தமிழ் சினிமாவின் அரசியல் புரிதல், 2019 இல் “காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுறியே உனக்கு வெட்கமா இல்ல?” என்று மக்களை கேவலப்படுத்தி கேள்வி கேட்கும் நிலைமைக்கு வந்து நின்றிருக்கிறது.

 

எந்தக் கட்சியையும் நம்ப முடியாது, எந்த அரசியல்வாதியும் நேர்மையானவர் இல்லை என்ற அனுபவத்தைப் பெற்ற மக்களைப் பார்த்து, இவ்வாறு கேள்வி கேட்டுவிட்டு, படித்தவர்கள், நேர்மையானவர்கள், சமூக சேவகர்கள், நேர்மையான ரிட்டையர்ட் ஐஏஎஸ் அதிகார்கள் போன்றவர்களுக்கு வாக்களிக்கவேண்டும் என்று புத்திமதியும் சொல்கின்றன.

 

ஆனால், தேர்தல் = ஜனநாயகம் என்ற நம்பிக்கை மட்டும் மாறவில்லை.

 

தேர்தல்கள் மூலம் ஒரு கட்சியை தேர்ந்தெடுத்து, அதிகாரத்தில் அமர்த்தி, ஆட்சி செய்ய வழிவகுக்கும் ஆட்சிமுறை ஜனநாயக ஆட்சிமுறைதானா என்ற கேள்வியை நமது திரைப்படங்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளோ, அரசியல் ஆய்வாளர்களோகூட எழுப்பிப் பார்க்கவே இல்லை.

 

இந்த சந்தர்ப்பத்தில், நமது “மண்ணின் ஜனநாயக பாரம்பரியம்” குறித்து எவரேனும் கேள்வி எழுப்பினால், சட்டென்று இடைக்கால சோழர் காலத்தில் நிலவிய “குடவோலை முறை”யை ஞாபகப்படுத்துவார்கள். நீண்ட நெடிய ஜனநாயக பாரம்பரியம் மிக்கது நமது நாடு என்று பெருமை பேசத் தொடங்கிவிடுவார்கள்.

 

ஆனால், அந்தக் “குடவோலை முறை”யில், வாக்குரிமை என்ற உரிமையோ, வாக்குகளை செலுத்தி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையோ இருக்கவில்லை என்ற முக்கிய அம்சத்தின் மீது மட்டும் கவனத்தைக் குவிக்கத் தவறிவிடுவார்கள்.

 

இந்தக் “குடவோலை முறை”க்கு ஒப்பான முறைகளில், வேட்பாளர்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஆட்சி நிர்வாகம் செய்ய அனுமதிக்கும் ஆட்சிமுறைதான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, ஏதென்ஸ் நகரத்திலும், பல கிரேக்க நகரங்களிலும் நிலவி வந்த ஆட்சிமுறை. அதைத்தான் ஜனநாயக ஆட்சிமுறை என்று வரலாற்று ஆய்வாளர்களும் அரசியல் ஆய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.

 

பண்டைய கிரேக்க உலகின் தலைசிறந்த தத்துவ அறிஞர்களில் ஒருவரான அரிஸ்டாட்டில், தேர்தல் என்பது மேட்டுக்குடியினரின் (aristocracy) குழு ஆட்சிக்கான (oligarchy) முறை; குலுக்கலில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது மக்களின் ஆட்சியான ஜனநாயகத்திற்கான முறை என்று வலியுறுத்தியிருப்பார். 65 ஆண்டுகால தேர்தல் ஆட்சி முறையின் மோசமான அனுபவங்களுக்குப் பிறகு, தேர்தல் = ஜனநாயகம் என்ற நம்பிக்கையைப் பரிசீலனை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாமும் ஆளாகியிருக்கிறோம்.

 

(தொடரும்… )

நன்றி: விகடன்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சுட்டுவது என்ன?

நாடாளுமன்ற ஜனநாயகம் நிலவும் ஒரு நாட்டில், ஜனநாயக நெறிமுறைகள் பாதுகாக்கப்படுவதற்கு அரசின் தூண்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வுகள் (separation of powers) மீறப்படாமல் இயங்குவது அடிப்படையான நிபந்தனையாகும். அதாவது, சட்டம் இயற்றும் நாடாளுமன்றம்/சட்டசபை, சட்டத்திற்கும் அதற்கு ஆதாரமான அரசியல் சட்டத்திற்கும் பொருள்கோடல் தந்து நீதியை நிலைநாட்டும் பணியை மேற்கொண்டிருக்கும் நீதிமன்றங்கள், இவற்றை சட்டத்தின் வழி நின்று செயல்படுத்தும் நிர்வாகத் துறை ஆகிய மூன்று தூண்களும் தமது அதிகார வரம்புகளை மீறாமல் ஒன்றுடன் ஒன்று இயைந்து செயல்பட வேண்டும். நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள், இம்மூன்று தூண்களின் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனங்கள் வாயிலாக அவற்றைச் செழுமைப்படுத்தும் பணியை மேற்கொள்ளும்.

சட்டம் இயற்றும் மன்றங்கள், காலத்தின் தேவைக்கேற்ப சட்டங்கள் இயற்றுவது, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை தீர்மானிப்பது ஆகியவற்றோடு, அவற்றைச் செயல்படுத்தும் பணியையும் மேற்கொள்கின்றன. செயல்படுத்தும் நிர்வாக அலகுகளை (அதிகார வர்க்கத்தை) மேற்பார்வையும் செய்கின்றன. அரசின் கொள்கைகளை அதிகார வர்க்கம் எவ்வாறு செயல்படுத்துகிறது என்பதைக் கண்காணிக்க மதிப்பீட்டுக் குழு (Estimates Committee), பொதுக் கணக்குக் குழு (Public Accounts Committee) எனப் பல குழுக்களை, எதிர்கட்சி எம் எல் ஏக்களை உள்ளடக்கி அமைத்துச் செயல்பட நமது நாடாளுமன்றம்/சட்டசபைகளுக்கு அதிகாரம் உண்டு. நமது நாடாளுமன்றம்/சட்டசபைகளின் செயல்பாடுகள் வரைமுறைகளை மீறிச் செயல்படாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ளவே கணக்குத் தணிக்கையாளர் அமைப்பும் (Comptroller and  Auditor General of India) உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம்/சட்டசபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு கட்சியின் கட்டுப்பாட்டிற்குள், இச்சபையால் மேற்பார்வை செய்யப்படும் அதிகார வர்க்கம் வீழ்ந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்யப்படும் பொருட்டே, அதிகார வர்க்கத்தை – ஐ ஏ எஸ், ஐ பி எஸ், இன்னபிற – தேர்வு செய்வதற்கான தனித்த தேர்வு முறைகள்  வகுக்கப்பட்டுள்ளன. அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளுக்கான நெறிமுறைகளும் பயிற்சிகளும் தொடர்புடைய, தனித்தியங்கும் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

நாடளுமன்றமும் சட்டமன்றங்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நியதிகளை மீறும் சட்டங்களை இயற்றாமல் இருப்பதைக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்கும் பணியை நீதிமன்றங்கள் செய்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், சட்டங்களுக்குப் பொருள் கூறுகின்றன. அதோடு, அதிகார வர்க்கத்தின் அதிகாரங்களை சட்டத்திற்கு உட்பட்டு வரையறுத்து, கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன. தனது ஆணைகளைக்கூட செயல்படுத்தும் அதிகாரம் அற்றதாக வரையறுக்கப்பட்டிருப்பதன் மூலம் நீதிமன்றத்தின் அதிகாரமும் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

நடைமுறையில் இவற்றில் ஏற்ற இறக்கங்கள் நேரும்போதெல்லாம் இந்த வரையறையுடன் உரசிப் பார்த்து விமர்சனங்கள் எழுவது வாடிக்கை. ஆனால், இத்தூண்களில் ஒன்று பிறவற்றின் அதிகார வரம்புகளை அதீதமாக மீறுவது அசாதாரண சூழல்களைத் தோற்றுவிக்கும்.

குறிப்பாக, சட்டம் இயற்றும் மன்றங்களின் அதிகாரங்களை ஒரு கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ படிப்படியாகத் தம்மை நோக்கிக் குவிக்கும்போது, பிற தூண்களின் அதிகார வரம்புகளுக்குள் தலையிட்டு, மட்டுப்படுத்தி செயலற்றதாக்கிவிடுவது நிகழ்கிறது. ஒரு கட்சி அதைச் செய்யும்போது, அதை ஒரு கட்சி ஆட்சிமுறையாக – சர்வ-அதிகார* ஆட்சிமுறை (Totalitarianism) – ஹிட்லரின் நாசிசம், முசோலினியின் பாசிசம், ஸ்டாலினின் கம்யூனிசம் – உருவெடுக்கிறது. ஒரு தனி நபர் அதைச் செய்யும்போது, எதேச்சதிகாரம் எழுகிறது.

இந்திய ஜனநாயகமும் தமிழகமும் இவ்விரு பேராபத்துகளின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்பதைக் காட்டும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

மோடி அரசு பதவிப் பொறுப்பு ஏற்றவுடன் கொண்டுவர முயற்சி செய்த தேசிய நீதிமன்ற நியமன ஆணையச் சட்டம் (2014), இந்திய அளவில் இதற்கான முதல் அறிகுறியாக அமைந்தது. இச்சட்டத்தின் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகார வரம்புகளை நாடாளுமன்றத்தின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு முயற்சி செய்தது. நல்ல காலமாக, உச்சநீதிமன்றம் அதை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி நிராகரித்தது (தற்போதைய கொலீஜிய முறையின் குறைகள் தனித்துப் பேசவேண்டியவை).

தற்போது, ஆட்சிக்காலம் நிறைவுற இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், மீண்டும் மோடி அரசு, அதிகார வர்க்கம் தேர்வு செய்யப்படும் முறையில் மாற்றம் செய்ய முனைந்திருக்கிறது. இப்புதிய விதிகள் ஒப்புக்கொள்ளப்பட்டால், அதிகாரத்தில் உள்ள கட்சியின் கருத்தியல், அல்லது செல்வாக்கிற்கு உட்பட்டவர்களேஅதிகார வர்க்கத்தினராக தேர்வு செய்யப்படும் ஆபத்து இருப்பதைப் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இது, தற்போது அதிகார வர்க்கத்தினரின் தேர்வில் நிலவி வரும் அரசியல் சார்பற்ற தன்மைக்கு முடிவு கட்டி, ஒரு கட்சியின் சர்வ-அதிகார ஆட்சிமுறைக்கு வழிவகுக்கும்.

இந்திய அளவிலான நகர்வுகள் இவ்வாறு சர்வ-அதிகார ஆட்சியை நோக்கிய ஆபத்துகளாக இருக்கையில், தமிழகம் வேறுவகையான சரிவில் ஏற்கனவே வீழ்ந்துவிட்டிருக்கிறது எனலாம்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் முதல் குற்றவாளி என்று குறிப்பிடப்பட்டவரான மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இது சத்தமில்லாமல் நடந்தேறியது. சரியாகச் சொல்வதென்றால் இரண்டு விஷயங்கள் நடந்தேறின.

முதலாவது, சட்டமன்றத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மந்திரிசபை செயலற்றதாக ஆக்கப்பட்டு, அனைத்து அதிகாரங்களையும் ஜெயலலிதா நேரடியாகத், தன்னிடமே குவித்துக்கொண்டார். அரசு நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் ஜெயலலிதாவின் ஆணைக்கு உட்பட்டு மட்டுமே இயங்குவதாக திருகப்பட்டன. மந்திரிசபை பெயரளவிற்கு மட்டுமே இருந்தது.

இதன் விளைவாக, அரசின் பல துறைகளின் கொள்கை முடிவுகளும், செயல் நடவடிக்கைகளும் பெருத்த தேக்கத்திற்கு உள்ளாயின. தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் கடந்த மூன்று அறிக்கைகளை மேலோட்டமாக நோட்டம் விட்டாலே, அவ்வறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஏராளமான முறைகேடுகளுக்கும் கேள்விகளுக்கும் ஜெயலலிதா அரசால் முறையான பதில்கள் அளிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதைக் காணமுடியும்.

எவருக்கும் பதில் சொல்லும் கடமையோ பொறுப்போ அற்ற, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட வினோதமானதொரு தனி நபர் எதேச்சதிகார ஆட்சியாகவே ஜெயலலிதாவின் ஆட்சி இருந்தது.

அதாவது, சட்டம் இயற்றும் பொறுப்புடைய சட்டசபையும், அதிகார வர்க்கத்தை மேற்பார்வை செய்யும் பொறுப்புடைய மந்திரிசபையும் ஒரு தனி நபரின் வரம்பற்ற அதிகாரத்தால் செயலற்றவையாக மாற்றப்பட்டிருந்தன.

இரண்டாவதாக, 2010 – 16 காலகட்டத்தில், தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 25 மாவட்டங்களுக்கு ஜெயலலிதாவால் நியமன ஐ ஏ எஸ் ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டவர்கள் ஆட்சியர்களாக பொறுப்பளிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் ஜெயலலிதாவிற்கு முளைப்பாரி எடுக்காத குறையாக புகழ்ந்து பாராட்டியது சிலருக்காவது நினைவில் இருக்கக்கூடும்.

அதாவது, ஜெயலலிதாவிற்கு விசுவாசமாக இருப்பவர்கள் ஆட்சியர்களாக்கப்பட்டது அதிகார வர்க்கத்தின் தேர்வில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது என்ற ஜனநாயக ஆட்சிமுறைக்கான அடிப்படை நிபந்தனையையும் அழித்தது. அதிகார வர்க்கத்தையும் ஒரு தனிநபரின் விசுவாசத்திற்குரிய குழுவாக மாற்றியது.

ஜெயலலிதாவின் தலையீட்டில் இருந்து தப்பியவை, நீதிமன்றத்தின் அதிகார வரம்பும் தேர்தல் நடைமுறையும் வாக்களிக்கும் உரிமையும் மட்டுமே.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, ரோமப் பேரரசின் அரியாசணத்தை அரசனின் பிரத்யேக மெய்பாதுகாப்பாளர்களிடமிருந்து (Praetorian Guards) ஏலத்தில் எடுத்து டிடியஸ் ஜூலியானஸ் (Didius Julianus) முடிசூட்டிக்கொண்டதைப் போன்றதொரு சூழல் தற்போது நிலவுகிறது.

சட்டசபை/மந்திரிசபையின் மேற்பார்வையின் கீழ் கட்டுப்பட்டு நிர்வாகம் செய்யவேண்டிய அதிகார வர்க்கம், கேட்பாரின்றி அதிகாரத் துஷ்பிரயோகத்தில் திளைத்திருக்கிறது. ஜூலை 2017 இல் வெளியிடப்பட்டுள்ள தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் (அறிக்கை 3, பொது மற்றும் சமூக நலத்துறை) இதுவரை நடைபெற்றிராத முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கலில் ஒரே மாணவரின் வங்கிக் கணக்கில் பல மாணவர்களுக்கான உதவித் தொகைகள் வைப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. ஒரே மாணவருக்கு பலமுறை உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. ஒரே நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாதிச் சான்றுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இம்முறைகேடுகள் ஆயிரக்கணக்கில் நடைபெற்றுள்ளதாக கணக்குத் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில்கூட இத்தகைய முறைகேடுகள் நடைபெறவில்லை என்பது குறித்துக்கொள்ள வேண்டியது.

ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு விசுவாசமானவர்களாகக் கருதப்பட்ட, நியமன ஐ ஏ எஸ் அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற்றவர்களில் எவரெவர் இப்போது எவருக்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்பது எவருக்கும் புரியாத புதிர். எது எப்படியாக இருந்தாலும், அதிகார வர்க்கத்தின் வரம்புகளும் சட்டமன்ற/மந்திரிசபை வரம்புகளும் மீறப்பட்ட சூழல் தொடரும் நிலையில், மந்திரிசபையின் மேற்பார்வைக்குக் கட்டுப்படாமல் ஒரு அதிகார வர்க்கம் தன்னிச்சையாக செயல்படுவது மிகுந்த ஆபத்தானது.

அத்தகையதொரு பேராபத்தைத்தான் தூத்துக்குடியில் நடந்தேறியுள்ள துப்பாக்கிச் சூடு நமக்கு சுட்டிக் காட்டுகிறது.

99 நாட்கள் அமைதியான முறையில் போராடிய பல்லாயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை அறிந்துகொள்ள, பேச்சுவார்த்தை நடத்த, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மந்திரிசபையுமே முன்வராத நிலையில், அதிகார வர்க்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து தனது அதிகார வரம்பெல்லையை மீறி கொடூரமாக நடந்துகொண்டிருக்கிறது.

இக்கொடூரம் அரங்கேறிய பின்னரும், சாதாரண மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்த யார் உத்தரவிட்டது என்ற அடிப்படை உண்மைகூட எவருக்கும் தெரியவில்லை என்ற சூழலே நிலவுகிறது. ஒரு ஜனநாயக ஆட்சிமுறையில் சட்டசபைக்கும் மந்திரிசபைக்கும் பொறுப்புகூறும் கடமை (accountability) அதிகார வர்க்கத்திற்கு இருக்கிறது. அத்தகைய பொறுப்புகூறும் பொறுப்பற்ற ஒரு அதிகாரவர்க்கம் ஜனநாயகத்திற்கு மட்டுமல்ல, எந்தவொரு ஆட்சிமுறைக்குமே பெருங்கேடு விளைவிக்கும் ஒரு அங்கமாக உருவெடுத்துவிடும் பேரபாயமே தற்சமயம் நம் முன் நிற்கும் பெரும் சவால்.

—————–

* சர்வஅதிகாரம் அல்லது சர்வாதிகாரம் – ஆங்கிலத்தில் Totalitarianism என்று குறிப்பிடப்படும் இவ்வரசியல் கருத்தமைவையும், அத்தகைய ஆட்சியமைப்பின் கட்டமைப்பையும் Totalitarianism and its Origins என்ற நூலில், Hannah Arendt என்ற புகழ்பெற்ற அரசியல் தத்துவவியலாளர் விரிவாக விளக்கியிருப்பார்.

இத்தகைய ஆட்சியமைப்பு ஹிட்லரின் நாசி ஜெர்மனியிலும் ஸ்டாலினின் சோவியத் ரசியாவிலும் தோன்றி, பின்னர் சோவியத் ரசியாவின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ்டு நாடுகளால் தழுவிக்கொள்ளப்பட்டது. சீனாவின் கம்யூனிஸ்டுகளும் உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்டு கட்சியினரும் இத்தகைய ஆட்சியமைப்பையே கம்யூனிச ஆட்சியமைப்பாக வலியுறுத்தி வருகின்றனர்.

இத்தகைய ஆட்சியமைப்பில் இரு கட்சி தேர்தல் அமைப்புமுறைகூட தடைசெய்யப்பட்ட ஒன்று.

வெங்காயத்தின் கட்டமைப்பை உருவகமாகக் கொண்டு, இந்த ஆட்சியமைப்பை ஹான்னா ஹாரண்ட் விளக்கியிருப்பார். வெங்காயத்தின் அடுக்குகளைப் போல, அதிகாரம் ஒரு மையத்தைச் சுற்றிப் பல அடுக்குகளாகக் கவிந்திருக்கும். ஆனால், அதன் மையத்தில் சூன்யமே இருக்கும்.

அதாவது, இத்தகைய ஆட்சியமைப்பை இயக்குபவராக ஒரு “மாபெரும் தலைவர்“ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

இந்த விளக்கம், ஒரு தனிநபரின் கைகளில் ஒட்டுமொத்த அதிகாரமும் குவிந்திருக்கும் ஆட்சியமைப்பிலிருந்து (எதேச்சதிகாரம் -Dictatorship) சர்வ – அதிகாரத்தை (Totalitarianism) – எங்கும் பரவியிருக்கும் அதிகாரத்தை, வித்தியாசப்படுத்திப் புரிந்துகொள்ள உதவியாக அமைகிறது.

பொதுவில், அரசியல் கருத்தாடல்களில் இந்த வித்தியாசம் புரிந்துகொள்ளப்படாமல், ஒரு நபரின் கைகளில் அனைத்து அதிகாரமும் குவிந்திருக்கையில் அவரை சர்வாதிகாரி என்று அழைப்பது வழமையாகிவிட்டது. அத்தகையோரை எதேச்சதிகாரி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். மாற்றாக, கொடுங்கோலர் என்ற பழந்தமிழ் சொல்லை கையாள்வது நன்று.

நன்றி: தமிழ் இந்து

பின் குறிப்பு:

ஒரு தகவல் பிழையை நீக்கி, சர்வ-அதிகாரம் குறித்த விளக்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து வெளியாகும் ஹலோ மதுரை என்ற இதழிலும் இக்கட்டுரை மறுபிரசும் செய்யப்பட்டது.

 

ஆயிரம் லைக்குகள் வாங்கிய அபூர்வ விலாசினியும் மாடு மேய்த்துப் படித்தவர் கிரிமினலாக்கப்பட்ட கதையும் – 3

கேள்விக்கு இடமில்லாத ஆணை உரிமை (authority) எப்படிச் செயல்படுகிறது? தந்தை – மகன் உறவு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு (தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை). இவ்வுறவில், தந்தைக்கு மகனின் மீதான அதிகாரம் கேள்விக்கு இடமில்லாதது. மகன் தந்தைக்கு கீழ்ப்பட்டவர். அவர் சொல்படி நடக்கக் கடமைப்பட்டவர். (தற்காலத்தில், பெற்றோர் – பிள்ளைகள் உறவு ஜனநாயகப் பூர்வமானதாக இருக்க வேண்டும் என்ற புரிதல் உருவாகியிருப்பது இத்தகைய ஆணை உரிமைகள் சிதைவுற்றதன் விளைவு).

அதிகாரப் படிநிலை வரிசையில் மேல் நிலையில் இருப்பவரின் ஆணையை, அவருக்குக் கீழிருப்பவர்கள் கேள்விக்குட்படுத்தாமல் ”சிரமேற்கொண்டு” செய்துமுடிக்க வேண்டும். ஆணை உரிமை இயங்கும் விதம் இப்படியாகத்தான். ஆண்டான் – அடிமைச் சமூக அமைவுகள், நிலவுடைமைச் சமூகங்கள் பெரும்பாலானவற்றில் நிலவிய அரசதிகார முறை என்றும் சொல்லலாம்.

தந்தை – மகன், குடும்பத் தலைவன் – குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியன் – மாணவன், பூசாரி – பக்தன், எஜமான் – அடிமை எனப் பலநிலைகளில் கேள்விக்கு இடமின்றி செயல்படுவதே ஆணை உரிமை. ஆணை உரிமையின் அடிப்படையில் அமைந்த ஒரு சமூகம் மற்றும் அரசமைப்பை  (authoritarian state) பொதுவில் ஒரு பிரமிட் வடிவில் உருவகிக்கலாம். இந்தப் பிரமிட்டின் உச்சியில் அமர்ந்திருப்பவருக்கு அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களின் ஊடாக, அதிகாரம் கீழ்நோக்கி பாய்கிறது.

என்றாலும், உச்சியில் அமர்ந்திருப்பவர், தமது விருப்பப்படி அதிகாரத்தைத் தன்னிச்சையாகச் செலுத்தவும் இயலாது. அவ்வாறு ஒரு தனிநபரின்  தன்னிச்சையான ஆணை அதிகாரம் செயல்படும் அமைப்பு எதேச்சதிகார (dictatorship) அமைப்பு. ஆணை உரிமையின் அடிப்படையில் அமைந்த ஒரு அரசமைப்பிலோ உச்சியில் அமர்ந்திருக்கும் நபருக்கும் மேலாக, அவரும் பின்பற்ற வேண்டிய நில நியதிகள் – சட்டத் தொகுப்பு, மரபுத் தொடர்ச்சி, கடவுளரின் ஆசி போன்ற ஒன்று இருக்கும். பிரமிட்டிற்கு மேலாக அந்தரத்தில் சுழலும் ஒரு ஒளிவட்டம் என்று உருவகிக்கலாம்.

இக்கருத்தமைவுகள் குறித்து ஆழ்ந்த ஆய்வுகளைச் செய்துள்ள ஹான்னா ஆரெண்ட் (Hannah Arendt) என்ற அரசியல் தத்துவவியலாளர், ரோமானிய அரசமைப்பை இவ்வாறானதொரு பிரமிட்டாக உருவகிப்பார். ரோமானிய அரசமைவில் பிரமிட்டுக்கு மேலாகச் சுழன்ற அந்த ஒளிவட்டம், ரோமானிய அரசை நிறுவியவர்கள் உருவாக்கிய மரபின் தொகுப்பாகக் கொள்ளப்பட்டது. தமிழக / இந்திய அரசமைவுகளில் அந்த ஒளிவட்டம் வர்ணாசிரம தர்மமாக இருந்தது எனலாம்.

(தொடர்புடைய கருத்துக்களை மிகச் சுருக்கமாக What is Authority? என்ற கட்டுரையிலும், On Violence மற்றும் On Revolution ஆகிய இரு நூல்களிலும் ஆரெண்ட் விளக்கியிருக்கிறார். மேலும் விரிவான புரிதலை விழைவோர், அவருடைய The Origins of Totalitarianism என்ற நூலை வாசிக்கலாம்).

நிலவுடமைச் சமூகங்களின் வீழ்ச்சியோடு, ஆணை உரிமையின் அடிப்படையில் அமைந்த அரசமைவுகளும் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் நிலவிய ஆணை உரிமை அடிப்படையிலான உறவுகளும் படிப்படியாகச் சிதைவுற்றன. நவீன ஜனநாயக அரசுகளின் தோற்றத்தோடு, அதிகாரவர்க்க அரசு / அரசமைவு (bureaucratic state) எழுகிறது.

நவீன ஜனநாயக அரசமைவின் நான்கு தூண்களாகச் சொல்லப்படும் நாடாளுமன்றம், நீதித்துறை, அதிகாரவர்க்கம், பத்திரிகைத் துறை இந்த அரசமைவின் அதிகார எல்லைகளைப் பரஸ்பரம் கட்டுக்குள் வைத்திருக்கும் பொறியமைவாகக் (checks and balances) கொள்ளப்படுகின்றன. என்றாலும், நவீன ஜனநாயக அரசின் ஆட்சிமுறை அடிப்படையில் அதிகாரவர்க்க ஆட்சிமுறையே (bureaucratic governance).

இத்தகைய ஆட்சிமுறையில், அரச அதிகாரம் அருவமாகிவிடுகிறது. அதிகாரம் எந்த ஒரு மையத்திலும் குவிந்திருக்காமல், பரவலாகிவிடுகிறது. யாரும் எதற்கும் பொறுப்பேற்காமல் தட்டிக் கழிக்கலாம், இன்னொருவரை கைகாட்டலாம், அலையவிடலாம். எந்த ஒரு அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அலைக்கழிக்கப்படுவதை அன்றாட வாழ்வில் நாம் அனுபவிப்பது அதிகாரவர்க்க ஆட்சிமுறையின் இத்தகைய உள்ளார்ந்த இயல்பினாலேயே.

09.07.16 இரவு விலாசினியை போலீசார் அலைக்கழித்ததும் அதிகார வர்க்க ஆட்சிமுறையின் இந்த “இயல்பான” உள்ளார்ந்த இயங்குமுறையே. இது எங்கள் சரகத்தின் விசாரணை எல்லைக்குட்பட்டு வராது. கிண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு போங்கள் என்று அலையவிட்டிருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் இல்லை, காலை வாருங்கள் என்று கூறியும் அலைக்கழித்திருக்கலாம். வேறு பல காரணங்களையும் சொல்லியிருக்கலாம். பொறுப்பேற்காமல் தட்டிக் கழித்திருக்கலாம். அதிகாரவர்க்க ஆட்சிமுறை செயல்படும் விதம் அதுதான். அவ்வாறாக இல்லாமல் போயிருந்தால்தான் ஆச்சரியம்.

விலாசினி மறுநாள் வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குப் போயிருந்தாலும் அவரை அலையத்தான் விட்டிருப்பார்கள். தொழில்முறையான ஒரு வக்கீலை வைத்து தொடர்ந்து அழுத்தம் தந்திருந்தால் ஒருவேளை வழக்குப் பதிவு செய்திருப்பார்கள். வழக்குப் பதிவு செய்திருந்தால், டிரைவரும் நமக்கேன் பிரச்சினை, பிழைப்புக்கு அலையவே தனக்கு நேரம் போதவில்லை என்று மன்னிப்பு கேட்டிருக்கலாம். அல்லது, அவரும் ஒரு வக்கீலை வைத்து வழக்கை எதிர்கொண்டிருக்கலாம். விஷயம் அடுத்து கோர்ட்டுக்கு போயிருக்கும். அங்கு நாற்பது வாய்தா வாங்கி அலைக்கழித்திருப்பார்கள்.

இதுதான் ஜனநாயக ஆட்சிமுறையின் – அதிகாரவர்க்க ஆட்சிமுறையின் நடைமுறை. ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட, இந்த ஆட்சிமுறையை ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இதற்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும். யாரும் விதிவிலக்கில்லை.

இத்தகைய அதிகாரவர்க்க ஆட்சிமுறையில் நீதி / நியாயம் இவ்வாறு தள்ளிப்போடப்படுவதைக் கண்டு வெகுண்டெழுபவர்கள், மக்களைத் திரட்டி போராடலாம், அவர்களை அரசியல் மயப்படுத்தலாம், இந்த அதிகார வர்க்கப் பொறிமுறைகளை எவ்வாறு கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது முற்றிலும் புதிய முறையில் மாற்றியமைப்பது என்பது குறித்துச் சிந்திக்கலாம், செயல்படலாம்.

ஜனநாயக அரசமைப்பின் அதிகாரவர்க்க ஆட்சிமுறையின் லேபிரெந்திற்குள் நுழைந்து, அலைந்து திரிந்து நீதியைப் பெறுவது அல்லது, அரசியல் விழிப்புணர்வூட்டும், இயக்கமாக்கும், எழுத்தாக்கும், சிந்திக்கும், சிந்தித்துச் செயல்படவைக்கும் நீண்ட நெடும்பாதையையோ விலாசினி தேர்வு செய்யவில்லை. மாறாக, கோடம்பாக்கத்து இயக்குனர்களில் சிலர் தொடர்ந்து காட்டிக்கொண்டிருக்கும் அந்நியன் போலவும் ஜென்டில்மேன் போலவும் குறுக்கு வழியில் பாய்ந்திருக்கிறார்.

அந்நியனும் ஜென்டில்மேனும் ”கிரிமினல்களையும் பொறுக்கிகளையும்” வேட்டையாடிப் பழிவாங்குவதைப் போலத்தான் விலாசினியும் டாக்சி டிரைவரை “கிரிமினல்” என்றும் “பொறுக்கி” என்றும் சாடி, வேட்டையாடிப் பழிவாங்கியிருக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை.

விலாசினி சொன்ன திகில் கதையை “உண்மையாக”வே எடுத்துக் கொண்டு பார்த்தாலும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தால், பின்பற்ற வேண்டிய நெறிகளின்படி அவர் மறுநாளே காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுத்து விஷயத்தை நகர்த்திச் சென்றிருக்க வேண்டும். ஆனால் நடந்து முடிந்திருப்பது என்னவோ, காவல்துறையினர் இவரது வீடு தேடிச்சென்று புகாரை எழுதி / கேட்டு வாங்கிச் சென்றிருக்கிறார்கள். தலைகீழாக நின்றிருந்தாலும், குட்டிக்கரணம் போட்டிருந்தாலும் ஓலா டாக்சி டிரைவரால் இப்படிச் செய்திருக்க முடியுமா?

ஜனநாயக ஆட்சிமுறையின் பொறிமுறைகளை, நிர்வாக எந்திரங்களை, அதன் ஊழியர்களைத், தமது ”உயர்ந்த பிறப்பு அந்தஸ்த்தால்” கிட்டும் ஆணை உரிமையைக் கொண்டு வளைப்பது சமத்துவத்திற்கும் சமத்துவமான நீதிக்கும் எதிரானது. விலாசினி செய்திருப்பது அத்தகைய அநீதியைத்தான்.

அந்நியனும் ஜென்டில்மேனும், விலாசினி போன்ற ஜென்டில் வுமன்களும் பிறரை இவ்வாறு வேட்டையாடும் மனநிலை எதிலிருந்து பிறக்கிறது?

1950 ஆம் ஆண்டு, ஜூன் 7 அன்று, ஸ்ரீமதி சம்பகம் துரைராஜன் என்ற “ஜென்டில் வுமன்” சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். தான் 1934 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி. ஏ (இயற்பியல் மற்றும் வேதியியல்) முடித்திருப்பதாகவும், தனது குடும்பச்சூழல் காரணமாக படிப்பைத் தொடர முடியாதிருந்ததாகவும், தற்போது (அதாவது 16 ஆண்டுகள் கழித்து) சென்னை மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடர விரும்பி விசாரித்ததில், 1921 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, பிராமணர்களுக்கு இரண்டு இடங்களே ஒதுக்கப்பட்டிருப்பதால், தான் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் தனக்குக் கல்லூரியில் சேர இடம் கிடைக்காது என்பதை உணர்ந்து அவ்வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார். ஆகையால், புதிதாக இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தில் தனி மனித உரிமைகளை பாதுகாக்கும் வலியுறுத்தும் பிரிவுகளின்படி, “writ of mandamus” (கீழ்நிலை அரசு அலுவலருக்குத் தமது கடமையை நிறைவேற்றுமாறு அல்லது தன்னிச்சையாகச் செய்த தவறைத் திருத்துமாறு ஆணை பிறப்பித்தல் – A (writ of) mandamus is an order from a court to an inferior government official ordering the government official to properly fulfil their duties or correct an abuse of discretion) உத்தரவிடும்படியும்  விண்ணப்பித்துக் கொண்டார்.

வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டிற்குச் சென்றபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஸ்ரீமதி சம்பகம் துரைராஜன், மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்கவே இல்லை என்பதை அறிந்து தமது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் தீர்ப்பில் பதிவு செய்தனர். என்றாலும், சாதிரீதியான இடஒதுக்கீட்டை வழங்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவச் சட்டம் இந்திய அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கும் தனிமனித உரிமைகளுக்கு எதிராக இருப்பதால் அதை ரத்து செய்தும் உத்தரவிட்டனர்.

இந்திய அரசியல் வரலாற்றில் பிரசித்தி பெற்ற இவ்வழக்குதான் இந்திய அரசியல் சாசனத்தில் முதல் திருத்தம் செய்யப்படக் காரணமாக அமைந்தது என்பதைப் பலரும் அறிந்திருக்கக்கூடும்.

என்றாலும், இவ்வழக்கில், ஸ்ரீமதி சண்பகம் துரைராஜனுக்காக வாதாடிய, அந்நாட்களில் பிரசித்தி பெற்ற வழக்குரைஞராக அறியப்பட்டிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வைத்த வாதங்கள் உரிய கவனத்தைப் பெறவில்லை. இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் வாசிக்கையில் இந்த வாதங்களில் ஓடிய முக்கியச் சரடு ஒன்று புலப்படுகிறது.

சுருக்கமாகக் குறிப்பிடுவதென்றால், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அமெரிக்காவின் கறுப்பு இனத்தவர்கள் அங்குள்ள கல்வி நிலையங்களில் அனுபவித்த இன ஒதுக்கல்கள் பாகுபாடுகளுக்கு இணையாக, தமிழகத்தில் பிராமணர்கள் சாதி ரீதியிலான பாகுபாட்டால் கல்வி நிலையங்களில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் என்ற வாதத்தை முன்வைத்திருப்பது தெரியவருகிறது.

50 ஆண்டுகள் கழித்து தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களில் ஒருவராக அறியப்படும் அசோகமித்திரன், தமிழகப் பிராமணர்கள் யூதர்கள் அனுபவித்தது போன்ற ஒடுக்குமுறையை அனுபவித்துள்ளார்கள் என்று புலம்பினார்.

இப்போது ஜென்டில் வுமனோ, ஒரு ”கிரிமினல்” டாக்சி டிரைவரால் தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தைப் பற்றி திகில் கதை எழுதுகிறார். ஆனால், அந்தப் “பயங்கர” டிரைவரோ அன்றாடம் 14 மணி நேரம் வேலை செய்து, ஒரு நாளுக்கு ரூ. 500 சம்பாதிக்கும் ஒரு கூலித் தொழிலாளி.

சமூகத்தின் மிக உயர் நிலைகளில் இருந்த / இருக்கும், அதன் சாதகமான பலாபலன்கள் அனைத்தையும் அனுபவித்த / அனுபவிக்கும் சம்பகம் துரைராஜன், அவருக்காக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், அசோகமித்திரன், ஜென்டில் வுமன் விலாசினி ஆகிய நால்வரும் இத்தனை ஆண்டுகள் இடைவெளியிலும் இத்தனை தலைமுறை இடைவெளிகளுக்குப் பின்னரும், சொல்லி வைத்தார்போல, தம்மை பாதிப்பிற்கு உள்ளானவர்களோடு ஒப்பிட்டும், பாதிப்பிற்கு ஆளானவர்களாகவும் கற்பனை செய்துகொள்கிறார்கள்.

ஜனநாயக ஆட்சியமைப்பின் அதிகாரவர்க்க ஆட்சிமுறை அவர்களுக்கிருந்த ஆணை உரிமையை, முன்போலச் சுதந்திரமாக அனுபவிப்பதற்கு எப்போதும் இடம் கொடுப்பதில்லை என்பதுதான் இம்மனநிலைக்கான ஆதார ஊற்று. ஜனநாயக ஆட்சிமுறை திறந்து விடும் பொது வெளியில் சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் இவர்களது ஆணை உரிமையை ஏற்றுக் கொள்ளாமல் இயங்குவதே தம்மைப் பாதிப்பிற்கு உள்ளானவர்களாகவும் பிறரை ஒடுக்குமுறையாளர்களாகவும் victim X oppressor உறவைத் தலைகீழாக இவர்கள் எடுத்துக்கொள்ளக் காரணமாக இருக்கிறது.

தாம் அனுபவித்து வந்த ஆணை உரிமை தளர்ந்து போகும்போதெல்லாம் சம்பகம் துரைராஜனைப் போன்றவர்களும் விலாசினியைப் போன்றவர்களும் தம்மை ஒடுக்கப்பட்டவர்களாகக் கற்பனை செய்துகொள்ளும் பரிதாபமும் நிகழ்கிறது.

இனிய முகங்களும் “பயங்கரமான” முகங்களாகக் காட்சி தர ஆரம்பித்து விடுகின்றன. சாதாரணக் கை அசைவும் ஆயுதம் எடுக்கிறதோ  என்று பதற வைத்துவிடுகிறது. தன் பாட்டுக்கு காரை ஓட்டிச் சென்றாலும், பின் தொடர்ந்து வருவதாக மனம் கற்பனை செய்துகொள்கிறது.

விஷயம் இப்படியாக இருக்க, விலாசினி “பெண் வெறுப்பென்னும் மகா சமுத்திரத்தில் கல்லெறியும்” திருப்பணியைச் செய்துவிட்டதாகத் திருப்திப்பட்டுக் கொள்வதெல்லாம் வேடிக்கையானது.

அவர் எறிந்த கல்பட்டு பாற்கடல் பரந்தாமன் புரண்டு படுத்துவிடவில்லை. பிரளயம் ஏற்பட்டுவிடவில்லை. கல்கி அவதாரம் எடுத்து இக்கலியுகத்தில் அவதரித்துவிடவும் இல்லை.

மாறாக, மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் அலுவலகத்தில் அமர்ந்து தமது திருப்பாதக் கமலங்களால் உலகை அளந்து கொண்டிருக்கும் வாமனர்களே விழித்துக் கொண்டார்கள். தமது விரல்களை அசைத்து, கூலித் தொழிலாளியான ஒரு கால்டாக்சி டிரைவரை நசுக்கியிருக்கிறார்கள். விலாசினியும் அவர்களோடு ஊக்கமாக ஒத்துழைத்திருக்கிறார்.

பொது வெளி என்பது பல போராட்டங்கள், கருத்து மோதல்களின் ஊடாக, பல பிரிவு மக்களும் சந்திக்கும் ஒரு வெளியாக படிப்படியாக, உருவெடுப்பது. இவரைப் போன்றவர்களுக்கு பொது வெளியே ”கிரிமினல்கள்” உலவும் ஆபத்து நிறைந்த வெளியாக தோன்றுகிறது. அவ்வாறு கருதத் துணிவதற்கான காரணத்தையும் பார்த்துவிட வேண்டும்.

(தொடரும் … )

https://minnambalam.com/k/1470873612 

பாகம் – 1

பாகம் – 2 

இறுதிப் பகுதி

%d bloggers like this: