ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 6

புதிய குடவோலை முறையின் மீட்சி – 6

 

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் “ஜனநாயகம்” என்று அழைக்கப்படும் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் கட்சிகளும் தாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் அனுபவித்து சலிப்படைந்திருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் நெருக்கமான உறவு இருப்பதை நன்கு அறிந்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பெரும் தொழில்களில் முதலீடு செய்து தொழிலதிபர்களாகவும் பெரும் பணக்காரர்களாகவும் உருவாகியிருக்கிறார்கள் என்பதையும் கண்ணாறக் கண்டுகொண்டே இருக்கிறார்கள்.

 

தேர்தல் என்பதே ஐந்தாண்டுகள் தம்மை யார் கொள்ளையடிக்கப் போகிறார்கள் என்பதற்கு எழுதிக்கொடுக்கும் பிரமாணப் பத்திரம் என்று உணர்ந்திருக்கிறார்கள். நிர்வாகச் சீர்கேடுகளும், லஞ்சமும், ஊழலும், கொலையும் கொள்ளையும் நிறைந்ததுதான் அரசியல் என்ற முடிவிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். புதிய நேர்மையான தலைவர்கள், அதிகாரிகள், படித்தவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் எவராவது இந்த சீரழிவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முன்வரமாட்டார்களா என்று ஏங்கித் தவித்துக்கிடக்கிறார்கள். ஆனால், தேர்தல்கள் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறையைத் தவிர வேறு மாற்றுகள் எதுவும் இருக்கிறதா என்பது தெரியாமல் விழித்திருக்கிறார்கள்.

 

தேர்தல் முறையால் உருவாகும் பிரதிநிதித்துவ ஆட்சிமுறை ஜனநாயகமும் அல்ல, மக்களாட்சியும் அல்ல, புதிய மேட்டுக்குடியினரின் ஆட்சிமுறைதான் என்பதை வரலாற்றிலிருந்து சுருக்கமான எடுத்துக்காட்டுகளோடு இக்குறுந்தொடர் விளக்க முயற்சி செய்திருக்கிறது. தமிழக வரலாற்றில் சோழர் காலத்தில், குலுக்கல் முறையும் சுழற்சி முறையும் இணைந்த குடவோலை முறை என்று அழைக்கப்பட்ட ஆட்சிமுறையே உண்மையான ஜனநாயகம் – மக்களாட்சி என்பதையும் இத்தொடரில் விளக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆட்சிமுறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஏதென்ஸ் நகரத்தில் எவ்வாறு சிறப்புடன் செறிவாக செயல்பட்டது என்பதும் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.

 

அத்தகைய ஆட்சிமுறையை தற்காலத்தைய நிலைமைகளுக்கு ஏற்ப மீண்டும் உருவாக்க முடியுமா? நிலவும் ஆட்சிமுறையை அகற்றுவதற்கு பெரும் பிரயத்தனங்கள் எதையும் செய்யாமல், அவற்றுக்கு அருகிலேயே – அக்கம்பக்கமாக மக்களே நேரடியாக ஆட்சியில் பங்கேற்க வழிவகை செய்யும் புதிய நிறுவனங்களை உருவாக்க முடியுமா? அத்தகைய நிறுவனங்கள் எவ்வகையில் இருக்கும்? அவற்றில் மக்களை பங்குபெற செய்வது எப்படி? அவற்றின் பணிகள் எவ்வாறு இருக்கும்? இவ்வாறான கேள்விகள் பலவும் எழுவது இயல்பே.

 

இக்கேள்விகளுக்கு தீர்மானகரமான விடைகள் இன்னும் உருவாகவில்லை. என்றாலும் பல நாடுகளில் பலவிதமான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் அனுபவங்களை தொகுத்துக்கொண்டு, மேலும் செறிவான பல புதிய மாதிரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில், மிகச் சிறந்ததும், நடைமுறையில் செயல்படுத்த சற்று எளிமையானதுமான ஒரு மாதிரியை அறிமுகம் செய்வதோடு இக்குறுந்தொடர் நிறைவுபெறுகிறது. இந்த மாதிரியை, சிறிய அளவுகளில் – கல்லூரி மாணவர் மன்றங்கள், தொழிற்சங்கங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், கிராம நிர்வாக சபைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், குடியிருப்புப் பகுதிகள் – போன்றவற்றில் முதற்கட்டமாக பரிசோதனை செய்து பார்க்கலாம். அனுபவங்களை சேகரித்துக்கொண்டு, படிப்படியாக பரந்த அளவுகளில் முன்னெடுக்க முயற்சிக்கலாம்.

 

பல் அடுக்கு குடவோலை முறை என்று இதை அழைக்கலாம்.

 

முதலாவதாக, இவ்வாறு உருவாக்கப்படும் அமைப்புகளின் அடிப்படைப் பண்புகள், நிபந்தனைகள், தேர்ந்தெடுக்கும் முறைகள் ஆகியவற்றை பார்த்துவிடுவது நலம்.

 

இந்த அமைப்புகள் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கானவை அல்ல. சாதனை புரியவேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற விருப்பம் உள்ள துடிப்பானவர்களுக்கானதும் அல்ல. பல்துறை சார்ந்த வல்லுனர்களுக்கானதோ அறிவுத்துறையினருக்கானதோ தீவிர அரசியல் களப்பணியாளர்களுக்கானதோ அல்ல.

 

சாதாரண மக்களுக்கானது. எளிய மக்கள் தமது பிரச்சினைகளை தாமே முன்வந்து தீர்த்துக்கொள்வதற்கான அரசியல் – பொது நிர்வாகக் கட்டுமானங்களை உருவாக்குவதே இவற்றின் நோக்கம். அந்நோக்கில் முடிவுகளை எடுக்கவும் அவற்றை செயல்படுத்துவதற்குமான வழிமுறைகளை உருவாக்குவது. இவற்றில் வல்லுனர்கள், அறிவுத்துறையினர், தீவிர அரசியல் களப்பணியாளர்களின் பாத்திரம் தமது துறை சார்ந்த நுட்பமான அறிவு, அனுபவம், திறன்கள் ஆகியவற்றை சாதாரண மக்களுடன் பலா பலன்களை எதிர்பாராமல் பகிர்ந்துகொள்வது மட்டுமே. இறுதி முடிவுகள் எதுவானாலும் அவற்றை எடுக்கும் அதிகாரம் சாதாரணர்களுக்கு மட்டுமே உரியது.

 

இந்த அமைப்புகள் ஏற்கனவே இருக்கும் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புகளுக்கு உடனடியான மாற்றுகள் அல்ல. நிலவும் அமைப்புகளால் பலன் பெறும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் இவற்றை உடனே அங்கீகரித்துவிடப் போவதில்லை. ஒருவேளை அங்கீகரிக்க முன்வந்தால், அவற்றை தம் செல்வாக்குக்கு உட்பட்ட அமைப்புகளாக மாற்றும் முயற்சியில் தீவிரம் காட்டுவார்கள். ஆகையால், இவ்வமைப்புகளை நிலவும் அமைப்புகளுக்கு எதிரானவையாக நிறுத்திக்காட்டுவதையும் தவிர்க்கவேண்டும். அவற்றுக்கு கீழ்ப்பட்டவையாக மாறிவிடாமலும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். நிலவும் அதிகார அமைப்புகளுக்கு இணையாக – அக்கம்பக்கமாக (parallel) இயங்கும் அமைப்புகளாகவே இவை துவக்கத்தில் செயல்படமுடியும்.

இவ்வமைப்புகள் அனைத்தும் குடவோலை முறையை ஒத்த குலுக்கல் முறையிலேயே தேர்ந்தெடுக்கப்படவேண்டும். கருத்தொருமிப்பை எட்டுவதற்காகவும், முடிவுகளை எடுப்பதற்காகவும் தேவைகளுக்கேற்ப இரகசிய வாக்கெடுப்பு, வெளிப்படையான வாக்கெடுப்பு ஆகிய இரண்டு முறைகளையும் கையாளலாம். குலுக்கல் முறையோடு சுழற்சி முறையும் இணைந்திருப்பது கட்டாயம்.

 

பாகுபாடுகள் நிறைந்துள்ள நமது சமூகத்தில், ஒடுக்கப்பட்ட பிரிவினரான தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், மாற்றுத் திறனாளிகள், இன்ன பிறருக்கு உரிய பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவது கட்டாயமாக இருக்கவேண்டும். மொத்த உறுப்பினர்களில் 50 விழுக்காடு பெண்களாக இருப்பதையும் கட்டாயம் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

 

பொது நிர்வாகத்திற்கு வாக்காளர் பட்டியல், தொழிற்சங்கம் போன்ற குறிப்பான நிறுவனங்களுக்கு உறுப்பினர்/பதிவுப் பெயர் பட்டியல் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, சீர்வாய்ப்பு தேர்வு முறையில் (random selection process) நபர்களை தேர்வு செய்வதிலிருந்து துவங்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளின் பணிச்சுமைகளுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படும் எளியோர்க்கு ஊதியம் வழங்குவது சாலச் சிறந்தது. அவர்களது தனிப்பட்ட வாழ்விற்கான வருமானத்தை ஈடுசெய்யும் வகையில் அத்தகைய ஊதியங்கள் இருப்பது நல்லது.

 

இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு இனி விரித்துச் சொல்லப்படும் ”பல் அடுக்கு குடவோலை முறை” தமிழகம் என்ற பரந்த அளவில் செயல்பட தேவையான உறுப்பினர் எண்ணிக்கையை மனதில் கொண்டு விவரிக்கப்பட்டுள்ளது. கிராம அளவிலான, குடியிருப்புகள் அளவிலான, பிற சிறிய அளவிலான அமைப்புகளுக்கு அவற்றுக்கே உரிய வகையில் உறுப்பினர் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம். சூழல்கள், நிறுவனங்களின் செயல்பாட்டு எல்லைகளுக்கு ஏற்ப ஒரு சில அமைப்புகள் அவசியமில்லாமலும் போகலாம்.

 

நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு மன்றம்

தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள், தேவைகளின் பொருட்டு உருவாக்கப்படவேண்டிய திட்டங்கள், அவை குறித்து இயற்றப்படவேண்டிய சட்டங்கள் அல்லது தீர்மானங்கள் குறித்த பட்டியலை நிகழ்ச்சி நிரலாகத் தயாரிக்கும் மன்றம். 150 – 400 உறுப்பினர்களைக் கொண்டிருக்கவேண்டும். தேவைக்கேற்ப உபகுழுக்கள் அமைத்து செயல்படலாம். செயல்படுவதற்கு தாமாக முன்வரும் குடிமக்களில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

இம்மன்றம் தயாரிக்கும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட அம்சம் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புவோர், குறிப்பிட்ட எண்ணிக்கையில் கையெழுத்துகள் சேகரித்து மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான சாத்தியத்தையும் அனுமதிக்கலாம்.

 

நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது மட்டுமே இம்மன்றத்தின் பணி. அவற்றை நிறைவேற்றவோ நிறைவேற்றும்படி கட்டாயப்படுத்தவோ இம்மன்றத்திற்கு அதிகாரம் இல்லை.

 

துறைசார் குழுக்கள்

நிகழ்ச்சி நிரல் மன்றம் தயாரித்து அனுப்பும் பிரச்சினைகளைப் பரிசீலித்து அவற்றுக்கு சட்ட முன்வரைவு வடிவம் கொடுக்கும் குழுக்கள். ஒவ்வொரு துறை சார்ந்த பிரச்சினைக்கும் தனிக் குழுக்கள் அமைக்கப்படவேண்டும். தேவைக்கேற்ப குழுக்களை அமைத்துக்கொள்ளலாம். தமது துறை சார்ந்த குழுக்களில் செயல்பட விரும்புவோர் முன்வரலாம். ஒவ்வொரு குழுவிலும் 12 உறுப்பினர்கள் அவசியம். தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். தேவைக்கேற்ப இக்குழுக்கள் அடிக்கடி கூடி விவாதித்துக் கொள்ளலாம். கால வரம்பை நிர்ணயித்து குறித்த காலத்திற்குள் தமது பணியை முடிக்கவேண்டும். துறை வல்லுனர்கள், குறிப்பிட்ட பிரச்சினை சார்ந்து செயல்படும் களப்பணியாளர்களைக் கொண்டதாக இருக்கலாம். சட்ட முன்வரைவைச் சமர்ப்பிப்பதோடு இக்குழுக்களின் பதவிக்காலம் நிறைவுபெற்றுவிடும். ஊதியம் வழங்கவேண்டிய அவசியம் இல்லை. இம்மன்றத்திற்கு அதிகாரம் ஏதும் இல்லை.

 

பரிசீலனைக் குழுக்கள்

துறைசார் குழுக்கள் சமர்ப்பிக்கும் சட்ட முன்வரைவுகளைப் பரிசீலித்து அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் குழுக்கள். ஒவ்வொரு துறைசார்ந்த பிரச்சினைக்கும் தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்படவேண்டும். மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 150. தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். துறைசார் குழுக்களைப் போன்று, இவர்கள் தமது விருப்பம் சார்ந்து குழுக்களை தேர்வு செய்ய அனுமதி இல்லை. செயல்படும் காலம் 3 ஆண்டுகள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

குறித்த சட்ட முன்வரைவு குறித்து பொதுமக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களை கூட்டி கருத்துக்களைக் கேட்டறிதல், துறைசார் வல்லுனர்களின் கருத்துக்களை கேட்டறிதல், பிரச்சினை குறித்து கள ஆய்வுகளும், கல்விசார் ஆய்வுகளும் மேற்கொள்ளல், தேவையெனில் அவற்றுக்குப் உதவியாளர்கள், பணியாளர்களை நியமித்துக்கொள்ளல், சேகரிக்கப்பட்ட கருத்துக்கள், கள ஆய்வுகள், கல்வி ஆய்வுகளைக் கொண்டு சட்டமுன்வரைவில் திருத்தங்களோ புதிய அம்சங்களோ சேர்த்தல், உறுப்பினர்களோடு கலந்து விவாதித்தல் ஆகியவற்றின் இறுதியில் சட்டத்திற்கு இறுதி வடிவம் கொடுத்தல் ஆகியவையே இக்குழுக்களின் பணிகள்.

 

சட்ட முன்வரைவுகளுக்கு இறுதி வடிவம் மட்டுமே தர இயலும். சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை.

 

கொள்கை முடிவெடுக்கும் சான்றாளர் (Jury) குழு

பரிசீலனைக் குழுக்கள் சமர்ப்பிக்கும் சட்டத்தின் இறுதி வடிவின் மீது இரகசிய வாக்கெடுப்பின் மூலம் சட்டத்தை நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்கும் குழு. ஒவ்வொரு சட்டத்தை இறுதி செய்வதற்கும் ஒரு தனிக் குழு கூட்டப்படவேண்டும். அனைத்து குடிமக்களில் இருந்தும் 400 உறுப்பினர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். முன்மொழியப்பட்டுள்ள சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரின் வாதப் பிரதிவாதங்களை கூட்டப்படும் பொது சபை அமர்வில் கேட்டு, இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தீர்ப்பளிப்பதே இக்குழுவின் பணி. விவாதங்களில் ஈடுபடுவதோ, தமக்குள் கலந்தாலோசிப்பதோ கூடாது. பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் சட்டம் ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும். சட்டத்தின் தன்மையைப் பொறுத்து இக்குழுவின் பணிக்காலம், ஒரு நாளாகவோ சில நாட்களாகவோ இருக்கலாம். பயணப் படி, பிற படிகள் உட்பட குறித்த நாட்களுக்கான ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

விதிகள் உருவாக்கும் மன்றம்

அனைத்து மன்றங்கள், குழுக்களுக்குமான விதிமுறைகள், குலுக்கல் முறை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான விதிகள், துறை வல்லுனர்களின் கருத்துக்களை அறிவதற்கான வழிமுறைகள், விவாத நெறிமுறைகள், குறைந்தபட்ச உறுப்பினர்/வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை வடிவமைப்பதற்கான மன்றம். பிற மன்றங்கள், குழுக்களில் செயல்பட்ட அனுபவம் கொண்டவர்களில் இருந்து குலுக்கல் முறையில் இதற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவது நலம். உறுப்பினர் எண்ணிக்கை 50. செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

மேற்பார்வை மன்றம்

அனைத்து மன்றங்கள், குழுக்களின் உறுப்பினர்கள், பரிந்துரை வழங்கிய துறை வல்லுனர்கள், பிற உதவியாளர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பணிகள் அனைத்தும் நியாயமாகவும் நேர்மையாகவும் செய்யப்பட்டனவா என்பதையும், அவர்கள் குறித்த குற்றச்சாட்டுகள் எழுமானால் அவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கும் குழு. உறுப்பினர் எண்ணிக்கை 20. தாமாக முன்வருவோரில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படவேண்டும். செயல்படும் காலம் 3 வருடங்கள். ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் மூன்றில் ஒரு பகுதியினரின் பொறுப்புக் காலத்தை முடித்து புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இம்மன்றத்திற்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர் மீண்டும் தேர்வு செய்யப்படக்கூடாது. முழுநேரப் பணி. ஊதியம் வழங்கப்படவேண்டும்.

 

இவ்வாறான பல் அடுக்கு குடவோலை முறையிலான அமைப்பு முறை, அதிகாரம் ஏதாவதொரு படிநிலையில் குவிந்துவிடாமல், ஒன்றை ஒன்று சரிபார்த்து சீர் செய்யும் (checks and balances) தன்மை கொண்டிருப்பதை மேலே விவரித்திருப்பதிலிருந்து உணரலாம். வெளிப்படைத் தன்மையும், பல தரப்பினரின் பங்களிப்பும், சாதாரண மக்கள் அனைவரது பங்கேற்ப்பையும் படிப்படியாக உறுதி செய்வதாக இருப்பதையும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் மக்களுடையதாகவே இருப்பதையும் உணரலாம். பரந்த அளவில் செயல்படுவதற்கு ஏற்றதாகவும், உள்ளூர் அளவிலும் குறிப்பான அமைப்புகளுக்கு ஏற்பவும் இவற்றை வடிவமைத்துக்கொள்வதும் எளிதானது.

 

இவ்வமைப்பு முறையின் செயல்பாடுகள் அதிகரிப்பதைப் பொறுத்தும், மக்கள் இவற்றின் பால் ஆர்வம் செலுத்தி, பங்கேற்க முன்வருவதைப் பொறுத்தும், இவற்றின் செயல்பாடுகள் நிலவும் அதிகார அமைப்பின் மீது அழுத்தங்கள் செலுத்தலாம். படிப்படியாக இவற்றின் செல்வாக்கு கூடுவதும், இவற்றின் குரல்களுக்கு நிலவும் ஆட்சியமைப்பும் அதிகார வர்க்கமும் செவிமடுக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் உருவாகலாம். அதற்கான சாத்தியங்கள் உண்டு.

 

பொது வாழ்வில் நேர்மை, அரசியலில் தூய்மை, மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணும் கனவு கொண்ட இளம் தலைமுறையினர் இப்பரிசோதனையை சிறிய அளவில் மேற்கொண்டு, தாம் பெறும் அனுபவங்களில் இருந்து மேலும் மெருகேற்றலாம்.

(முற்றும்.)

நன்றி: விகடன்

ஒரு விரல் புரட்சிக்கு தெரியாத ஜனநாயக ரகசியங்கள் – 5

பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் அடிப்படைகளும் பரிணாம வளர்ச்சியும் – 5

 

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் கொண்ட பிரதிநிதித்துவ அரசாங்கங்கள், தம்மை குடியரசுகள் என்றே கருதின என்பதையும், ஏறத்தாழ 50 ஆண்டுகள் கழித்தே ஜனநாயக அரசுகள் என்று அழைக்கப்படலாயின என்பதையும் கண்டோம். அதே போன்று, நாம் இன்று அடிப்படை ஜனநாயக உரிமை என்று கருதும் வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையும்கூட ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுகாலம் சொத்துடையோருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளிலேயே சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் அவ்வுரிமை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது.

 

ஜனநாயக அரசியலின் தவிர்க்கமுடியாத அங்கமாக நாம் கருதும் கட்சி அரசியலும்கூட இவ்வரசுகளின் ஆரம்பகாலங்களில் இருக்கவில்லை. பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவிய புரட்சியாளர்கள் கட்சிகளை நாட்டின் நலன்களுக்கு கேடு விளைவிக்கும் “குழுக்களின் பிளவுபடுத்தும் அரசியல்” என்றே கருதினர். “ஒரு கட்சி இல்லாமல் நான் சொர்க்கத்திற்குச் செல்லமுடியாதென்றால், அப்படிப்பட்ட சொர்க்கம் எனக்கு தேவையே இல்லை,” என்ற அமெரிக்கப் புரட்சியின் தலைவர்களில் ஒருவரான  தாமஸ் ஜெஃபர்ஸனின் வாசகம் புகழ் பெற்றது. வெகுமக்கள் கட்சிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிகளில்தான் தோன்ற ஆரம்பித்தன.

 

அண்மைக்காலங்களிலோ, உலகம் முழுக்கவே தேர்தல் அரசியலின்பால் வாக்காளர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. வாக்களிப்போரின் சதவீதமும் சரிந்துகொண்டே வருகிறது. கட்சிகளின் மீதான நம்பிக்கையையும் மக்கள் இழந்து வருகிறார்கள். கட்சிகளின் கொள்கைகளை முன்வைத்து வாக்குகள் சேகரிப்பதற்கு மாறாக, வலுவான தலைவர்களை முன்நிறுத்தி வாக்கு சேகரிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும், தேர்தல் அரசியலின் – பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் அடிப்படைகளாக இருப்பவை வாக்குரிமையும் கட்சி அரசியலும்தான் என்ற கருதுகோள் தவறானது என்பதை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. வாக்குரிமையை சமூகத்தின் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே வரையறுத்து வைத்தும் தேர்தல் அரசியல் செயல்படமுடியும். கட்சிகளே இல்லாமலும் தேர்தல் அரசியல் செயல்படமுடியும் என்பதை உணர்த்துகின்றன.

 

அவ்வாறெனில், தேர்தல் அரசியலின் – பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் அடிப்படைகள் எவை என்ற கேள்வி எழுகிறது.

 

பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் எங்கெல்லாம் அமைக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் பின்வரும் நான்கு முக்கிய அம்சங்கள் அவற்றின் அடிப்படையான அம்சங்களாகத் திகழ்கின்றன.

 

முதலாவதாக, குடிமக்களின் ஒப்புதலையும் அங்கீகாரத்தையும் பெற்றவர்களுக்கே ஆட்சி புரியும் உரிமை இருக்கிறது என்ற கருதுகோளில் இருந்தே பிரதிநிதித்துவ அரசாங்கம் பிறந்தது என்பதை முந்தைய பகுதியில் கண்டோம். அவ்வாறு வழங்கப்பட்ட ஒப்புதலும் அங்கீகாரமும் வாழ்நாள் முழுமைக்குமான அங்கீகாரம் அன்று. தமது விருப்பத்திற்குரிய ஒரு பிரதிநிதியையோ, கட்சியையோ, அதன் தலைவரையோ வாழ்நாள் முழுக்க ஆள்வதற்கு அனுமதிக்கும் வகையில், ஒரேயொருமுறை மட்டுமே நடத்தப்படுவதல்ல தேர்தல். வழங்கப்பட்ட ஒப்புதலும் அங்கீகாரமும் மீண்டும் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படவும் புதுப்பிக்கப்படவும் வேண்டும். எனவேதான், குறிப்பட்ட வருடங்களுக்கு ஒருமுறை, சீரான இடைவெளியில் மீண்டும் மீண்டும் தேர்தல்களை நடத்துவது பிரதிநிதித்துவ அரசாங்கங்களின் அடிப்படையான அம்சமாக அமைகிறது.

 

இரண்டாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், வாக்காளர்களின் விருப்பங்களுக்குக் கட்டுப்படாமல், கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல், தம் விருப்பத்தின் பேரில் செயல்படுவதற்கான சுதந்திரம். இதன் காரணமாகவே, வேட்பாளர்களைத் திருப்பி அழைப்பதற்கான உரிமையையும், வேட்பாளர்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட உரிமையையும் பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் தம் ஆரம்ப காலங்களிலேயே நிராகரித்தன. தமது விருப்பங்களை நிறைவேற்றாத, தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத வேட்பாளர்களை அடுத்த தேர்தலில் நிராகரிக்கும் உரிமையை மட்டுமே வழங்கின.

 

மூன்றாவதாக, கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம். வேட்பாளர்களைத் திருப்பி அழைக்கும் சுதந்திரம், சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றுக்குப் பதிலீடாகவே கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை பிரதிநிதித்துவ அரசாங்கங்கள் வழங்கின. தாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளின் – அரசாங்கத்தின் கருத்துக்களுக்கு மாறுபட்ட கருத்துக்களை குடிமக்கள் எப்போதும் எங்கும் முன்வைக்கவும் வெளிப்படுத்தவும் செய்யலாம். அவற்றை ஆட்சியிலிருப்போர் கவனத்தில் கொள்வார்கள் என்ற அளவிற்கே இவ்வுரிமை வரையறுக்கப்பட்டது. இவ்வுரிமை வேட்பாளர்களும் வாக்காளர்களும் சந்திக்கும் புள்ளியாகவும், ஒருவகையில், வாக்காளர்களின் இணக்கத்தை உருவாக்குவதாகவும் இருப்பது கவனிக்கத்தக்கது.

 

இறுதியாக, விவாதங்களின் மூலம் முடிவெடுத்தல் என்ற அம்சம். பிரதிநிதித்துவ அரசாங்கங்களை தோற்றுவித்தவர்கள், தமது அரசமைப்பை பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை உடையவர்களும் ஒரு சபையில் ஒன்றாகக்கூடி, விவாதித்து, முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு முறையாகவே கருதினர். இவ்விடத்தில் முடிவின்றி கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டே இருப்பதுதான் விவாதம் என்று பொருள் இல்லை. விவாதம் கருத்தொருமிப்பை நோக்கியது. ஒரு குறிப்பிட்ட சட்டம் அல்லது திட்டம் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக நடத்தப்படுவது. கருத்தொருமிப்பு பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதி செய்யப்படுவது.

 

இந்நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான பிரதிநிதித்துவ அரசமைப்பு, தனது இருநூறாண்டு கால வரலாற்றில் மூன்று பரிணாம வளர்ச்சிகளைக் கண்டுள்ளது. அம்மூன்று நிலைகளிலும் மேற்கண்ட நான்கு அடிப்படை அம்சங்களையும் வெவ்வேறு வடிவங்களில் தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

 

பிரதிநிதித்துவ அரசாங்கம் எடுத்த முதல் வடிவம் நாடாளுமன்றவாதம். இக்காலகட்டத்தில் வாக்குரிமை சொத்துரிமையால் வரையறுக்கப்பட்டிருந்தது. சமூகத்தில் பெரும்பான்மையானவர்களுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. கட்சிகளோ அவை முன்வைத்த கொள்கைத் திட்டங்களோ இருக்கவில்லை. சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் பெற்ற “பெரிய மனிதர்கள்” தமக்கிருந்த பரவலான தொடர்புகள், வரையறுக்கப்பட்டிருந்த வாக்காளிடர்களிடையே பெற்றிருந்த நன்மதிப்பு ஆகியவற்றின் காரணமாக, நம்பிக்கையின் பாற்பட்டே தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமது வாக்காளர்களின் “அறங்காவலர்” என்றே தம்மைக் கருதிக்கொண்டனர். ஆக, பிரதிநித்துவ அரசாங்கம் பெயர் பெற்ற பிரமுகர்களின் – மேட்டுக்குடியினரின் ஆட்சியாகவே தொடங்கியது.

 

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள், நாடாளுமன்றங்களில் தமது தொகுதி வாக்காளர்களின் “அறங்காவலர்” என்ற வகையிலேயே செயல்பட்டனர். வாக்காளர்களுக்கு வாக்குறுதிகள் அளிக்கும் தேவையே இவர்களுக்கு இருக்கவில்லை என்பதால் வாக்காளர்களின் விருப்பங்களின்பாற்பட்டு நடந்துகொள்ளும் நிர்ப்பந்தங்களும் இவர்களுக்கு இருக்கவில்லை.  இக்காலகட்டத்தில், கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் என்பது, குறிப்பிட்ட கோரிக்கைகள் சார்ந்த அமைப்புகளால் நாடாளுமன்றத்திற்கு மனுக்கள் அளிப்பது, போராட்டங்களில் ஈடுபடுவது போன்ற வடிவங்களை எடுத்தன. விவாதங்கள் மூலம் முடிவெடுத்தல் என்பது நாடாளுமன்றங்களில் தமது சொந்த ‘மனசாட்சியின்’படியும், நம்பிக்கைகளின்படியும் வாக்களிப்பதாகவும், குறிப்பிட்ட பிரச்சினைகளில் ஒத்த கருத்துள்ள மற்ற பிரதிநிதிகளோடு குழுவாக இணைந்து செயலாற்றுவதாகவும் இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை பிரதிநிதித்துவ அரசாங்கத்தின் செயல்பாடுகள் இவ்வாறான நாடாளுமன்றவாதமாகவே இருந்து வந்தது.

 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி கால்நூற்றாண்டில் வாக்குரிமை படிப்படியாக விரிவாக்கப்பட்டதாலும், வெகுமக்களுக்கான கட்சிகள், சோஷலிசக் கட்சிகளின் எழுச்சியாலும் இந்நிலையில் மாற்றங்கள் நிகழத்தொடங்கின. பிரமுகர்களின் செல்வாக்கு முடிவுக்கு வந்து அரசியலில் கட்சிகள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின. பிரதிநிதித்துவ அரசாங்கம் நாடாளுமன்றவாதம் என்ற வடிவத்திலிருந்து கட்சி ஜனநாயகம் என்ற வடிவத்திற்கு மாறியது.

 

சமூகத்தில் நிலவும் பிளவுகளைப் பிரதிபலிப்பதாக பிரதிநிதித்துவம் வெளிப்படத் தொடங்கியது. கட்சிகள் தாம் சார்ந்திருந்த சமூகக் குழுக்களின் நலன்களை முன்வைத்து வாக்குகளை சேகரித்தனர். வாக்காளர்களும் அவ்வாறே வாக்களிக்கத் தொடங்கினர். என்றாலும் கட்சிகளின் ஆட்சியில், கட்சியின் தொண்டர்களும் கட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்களும் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினர். பிரமுகர்களின் இடத்தை இவர்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்கவேண்டும் என்று பிரதிநிதித்துவ ஆட்சிமுறையை தோற்றுவித்த புரட்சியாளர்களின் பார்வை இதிலும் தொடர்ந்தது.

 

வேட்பாளர்கள் தமது சொந்த மனசாட்சிப்படியும், நம்பிக்கைகளின் அடிப்படையிலும் செயல்படுவதற்குப் பதிலாக, கட்சியின் கட்டளைப்படி நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் உள்ளேயும் செயல்பட்டனர். வாக்காளர்களின் விருப்பங்கள் கோரிக்கைகளைக் காட்டிலும் கட்சியின் செயல்திட்டங்களும் ஆணைகளுமே பிரதிநிதிகளின் செயல்பாடுகளை தீர்மானித்தன. கருத்துக்களை வெளிப்படுத்துவற்கான சுதந்திரம் நாடாளுமன்றத்திற்குள் எதிர் கட்சிகளுடனான கருத்து மோதலாக வெளிப்படத் தொடங்கியது. விவாதங்களின் மூலம் முடிவெடுத்தல் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு பெரும்பான்மை அல்லது கட்சித் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவதாக மாறியது.

 

கட்சி ஜனநாயகம் கட்சிகளின் ஆதிக்கத்திலிருந்த ஆட்சியமைப்பாகவே இருந்தது.

 

மேலை நாடுகளில் 1970-கள் தொடங்கியும், இந்திய/தமிழக சூழலில் கடந்த இருபது ஆண்டுகளிலும் பெரும்பாலான கட்சிகள் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்கின. ஒவ்வொரு தேர்தலிலும் ஆளும் கட்சி தோல்வியைத் தழுவுவது வழக்கமாகிப் போனது. “பார்வையாளர்” ஜனநாயகம் என்ற புதிய போக்கு தலைதூக்கத் தொடங்கியது. ஊடகங்களைத் திறம்படக் கையாளத் தெரிந்த புதிய மேட்டுக்குடியினரின் ஆட்சியாக இந்த “பார்வையாளர்” ஜனநாயகம் உருவாகியிருக்கிறது.

 

கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்களுக்குப் பதிலாக, ஆற்றல் மிக்க தலைவர்களை முன்நிறுத்தும் போக்கு இப்புதிய முறையில் பரவலாகியுள்ளது. கட்சி தொண்டர்களுக்கும், கட்சிப் பிரமுகர்களுக்கும் இருந்த இடத்தை ஊடகச் செல்வாக்கு மிக்க புதிய பிரமுகர்கள் நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பிரதிபலிப்பதற்கு மாறாக, குறிப்பிட்ட தேர்தலில் தலைதூக்கி நிற்கும் ஏதாவது ஒரு பிரச்சினை அல்லது சில முக்கிய பிரச்சினைகளே தேர்தலின் முடிவுகளை தீர்மானிப்பவையாக மாறிக்கொண்டிருக்கின்றன.

 

வேட்பாளர்கள் கொள்கைகளையோ திட்டங்களையோ முன்னிறுத்துவதற்குப் பதிலாக, எந்த விஷயத்தை முன்னிலைப்படுத்தினால், வாக்காளர்களைப் பிளவுபடுத்தி அதிக வாக்குகளை சேகரிக்கமுடியும் என்ற நோக்கில் அணுகத் துவங்கியிருக்கிறார்கள். தம்மைப் பற்றியும் தமது கட்சியைப் பற்றியும் தமது தலைவரைப் பற்றியும் ஊடகங்கள் வாயிலாக சில குறிப்பிட்ட பிம்பங்களை முன்னிறுத்துவதையே பிரதானப்படுத்துகிறார்கள். வாக்காளர்கள் தமது விருப்பங்கள் சார்ந்து வாக்களிப்பதற்குப் பதிலாக, பிரச்சினைகளுக்கு எதிர்வினையாற்றும் முகமாக வாக்களிக்கும் போக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வாக்காளர்கள் பார்வையாளர்கள் போன்று எதிர்வினையாற்றுபவர்களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

 

கட்சிக்குள் நடைபெறும் விவாதங்களாக இருந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், கருத்துக் கணிப்புகளாக உருமாற்றம் கண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்ட வணிக நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய கருத்துக் கணிப்புகள் அரசியல் ஆர்வம் குறைந்துள்ள வாக்காளர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பவையாகவும், அவர்களுடைய கருத்துக்களின் பரப்பைக் குறைப்பவையாகவும் உள்ளன.

 

இறுதியாக, அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்தும், நேரடி அரசியலில் ஆர்வம் குறைந்தும் போயுள்ள பெருவாரியான வாக்காளர்கள், அரசியல் விழிப்புணர்வு கூடியுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக பெறும் வாய்ப்புள்ளவர்களாக இருப்பதால் எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்குபவர்களாகவும் தமக்குள்ளாக விவாதிப்பவர்களாகவும் உருவெடுத்துள்ளார்கள்.

 

தமிழக இந்திய சூழலில் இந்த மாற்றங்களை விரிவாகவும் தனிக் கவனம் கொடுத்தும் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.

 

நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை, ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்குமான இடைவெளி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கும் “பார்வையாளர்” ஜனநாயகத்தில் இருந்து விடுபட்டு, தற்காலத்திற்கு உகந்த முறையில் குடவோலை முறைக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா என்பதே.

(தொடரும்… )

நன்றி: விகடன்

%d bloggers like this: