சில தப்புகளைப் பற்றி …

சிறுபத்திரிகை உலகத்தைப் போல அரைவேக்காடுகள் நிரம்பிய உலகம் எதுவும் இல்லை என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. ஆங்கிலம் தெரிகிறதோ இல்லையோ கையில் ஒரு ஆங்கிலப் புத்தகம் (ஜோல்னாப் பை பழைய ஸ்டைல்), ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போன்ற ஒரு பாவனை, மூக்கு நுனியில் காத்திருக்கும் ‘நான்’ – இதன் citizen – களின் சில தனிச்சிறப்புகள்.

இத்தகைய ‘தனிச் சிறப்புகள்’ வாய்ந்தவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பதே நல்லது என்ற முடிவெடுத்து சமீப காலமாக தனித்து திரிந்துகொண்டிருந்த வேளையில், சில நாட்களுக்கு முன்பாக சென்னை ஜெமினி மேம்பாலத்திற்கு அருகில் உள்ள Land Mark புத்தகக் கடைக்குள் நுழைந்தேன்.

புத்தகங்களை நோட்டம் விட்டுக்கொண்டு நகர்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒன்று (புத்தகம்தான்) கண்களில் வெட்டியது. (சனியன், அன்று யார் முகத்தில் விழித்தேனோ தெரியவில்லை.) சு. ரா -வின் “புளியமரத்தின் கதை” ஆங்கிலத்தில். Penguin வெளியீடு. எடுத்துப் புரட்டினேன்.

மொழிபெயர்ப்பாளர் (எஸ், கிருஷ்ணன்?) குறிப்பு. இரண்டாம் பத்தி. The novel is different in that it attempts magical realism before the phrase had become popular. (“மாந்த்ரீக யதார்த்தவாதம் என்ற பதம் பரவலான புழக்கத்திற்கு வருவதற்கு முன்பாகவே அதை முயற்சித்துப் பார்த்திருக்கிறது என்ற வகையில் இந்த நாவல் சற்று வித்தியாசமானது”, என்று ஒரு குத்துமதிப்பாக மொழிபெயர்க்கலாம்.)

சாமி, பேத்தலுக்கு ஒரு அளவேயில்லையா! முன்பு “ஜே. ஜே: சில குறிப்புகள்” எக்ஸிஸ்டென்ஷியலிச நாவல் என்ற சிலாகிப்பு. இப்போது “புளியமரத்தின் கதை” magical realism ஆகப் பார்க்கிறது. சாயிபாபா ஸ்டைலில் சு.ரா. உள்ளங்கையை உயர்த்தினால் எக்சிஸ்டென்ஷியலிசமும் magical realism – மும் கொட்டுகிறது. பக்த கோடிகள் புல்லரித்து பொட்டு வைத்துக் கொள்கிறார்கள்.

* * *
ஒரு சின்ன அபத்த நாடகம்.
காட்சி – 1

விசாலமான ஒரு வீடுதான் அரங்கு. பின்புறம் நோக்கித் திறக்கும் ஒரு வாசல். முன்பக்கமும் ஒரு வாசல் உண்டு.

காலம்: “சுபமங்களா”வில் கடுமையான விவாதங்கள் சற்று ஓய்ந்திருந்த சமயம். சு. ரா. அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த நேரம். புத்தகங்கள் சீராக அடுக்கி வைத்த அறை. அ. மார்க்ஸ், பொ. வேல்சாமி, ரவிக்குமார் ஒரு அரைவட்டமாக அமர்ந்திருக்க எதிரில் சு. ரா.

சு. ரா: அமெரிக்காவில் நூலகங்கள் அற்புதமாக இருக்கின்றன. தமிழ்நாட்டில் நாம் கேள்விப்பட்டிருக்காத மேதைகளுடைய நூல்களையெல்லாம் வைத்திருக்கிறார்கள்.

அ. மா: அப்படியா! என்ன மாதிரியான மேதைகள், யாராவது ஒருவரைச் சொல்லுங்களேன்.

சு. ரா: இம்ம்மானுவேல் க்க்கான்ட்ட்!

திரை கவிழ்கிறது.

திரைக்குப் பின்னிருந்து ஒரு குரல்: “இந்த அபிஷ்டுவுக்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது!”

* * *

ஒரு ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக (1998), அதுவரை வாசித்திருந்ததை தொகுத்துக் கொள்ளவும், மேற்கொண்டு இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டிய திசைகளைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காகவும் போட்ட வரைபடம் இது.

[அதை இங்கு பகிர்ந்து கொள்ள இயலவில்லை. Scan செய்து பார்த்தேன். தெளிவாக வரவில்லை. மற்றொன்று. கல்விப் புலம் சார்ந்து நான் +2 விற்கு மேலாக படிக்கவில்லை. மிகவும் சாதரணமான ஒரு நர்சரிப் பள்ளியில் 5 – ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வி. பின் மீண்டும் மிகவும் சராசரியான அரசு சார் பள்ளியொன்றில் +2 வரை. இதுவே எனது கல்விப் பின் புலம். இதையும் மீறி பல துறை சார்ந்த விரிவான எனது வாசிப்பிற்கு சோர்வடையாத எனது கடும் முயற்சி மட்டுமே காரணம். நான் பயணித்த பல்வேறு துறை சார்ந்த வாசிப்புகள், நூல்களின் கடும் ஆங்கிலத்திற்கும் தமிழ் நாட்டில் உள்ள மேட்டுக்குடி பள்ளிக் கல்விக்கும்கூட ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இந்நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.]

இதிலுள்ளவர்கள் அத்தனை பேரையுமோ அல்லது குறிப்பிட்ட சிலரது படைப்புகள் அத்தனையையுமோ வாசித்து விட்டதாக இன்னும்கூட சொல்லிவிட முடியாது. இங்கு வாசகர்களுக்கு இதைத் தருவதற்கு சில காரணங்கள் உண்டு.

தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலின் வாசகர் தளத்தை சற்று பொதுமைப்படுத்தி இரண்டு விரிவான பிரிவினர் இருப்பதாகச் சொல்லலாம். இலக்கியம் ‘உய்விக்கும்’ என்ற ஒருவிதமான பரவச மனநிலையில் மிதந்து கொண்டிருப்பது; பிச்சமூர்த்தி, மெளனி, புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன் என்று ஒரு லிஸ்டைப் படித்துவிட்டால் தமக்கும் ‘இலக்கியம்’ சித்தித்துவிடும் என்று ஒரு உத்வேகம்; ‘சற்றே’ பலவீனமான ஆங்கில வாசிப்பு; தத்துவங்கள், கோட்பாடுகள் என்றாலே ஒரு அலர்ஜி; அவை ‘படைப்புத் திறனை’ மழுங்கடித்துவிடும் என்ற ஒரு நம்பிக்கை; தமது சமூக இருப்பு, தமது ‘நான்’கள் குறித்த எந்தவிதமான தீவிரமான விசாரணைகளும் இல்லாமல் கையளிக்கப்பட்ட ‘நான்’கள் துருத்திக் கொண்டிருப்பது; ஒரு பிரிவினரின் ‘குணாதிசயங்கள்’ இவை. சிறுபத்திரிகைச் சூழலின் பெரும்பான்மையான ‘படைப்பாளிகள்’, ‘படைப்பாளிகளாகத் துடித்துக் கொண்டிருக்கும் வாசகர்கள்’ இதற்குள் விழுவர்.

விமர்சகர்களாக, கோட்பாட்டாளர்களாக, ‘அரசியல் அறிஞர்களாக’, ‘அறிவுப் பயங்கரவாதிகளாக’, அறியப்படுபவர்கள், இவர்களுடைய வாசகர்கள் இரண்டாவது பிரிவினர். முதல் பிரிவினருடைய அத்தனை நம்பிக்கைகளையும் கோட்பாட்டளவில் கேள்விக்குள்ளாக்குபவர்கள். ஆனால், ‘நான்’கள் குறித்த விசாரணை என்ற அந்தப் புள்ளியில் மட்டும் இவர்களுக்கும் மேலுள்ளவர்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவும் கிடையாது (அடியேன், இதற்குள் விழுவேன் என்று நினைக்கிறேன்.)

இன்னும் சற்று துல்லியமாகச் சொல்வதென்றால், ‘நான்’கள் குறித்த இவர்களுடைய விசாரணைகள் வெறும் கோட்பாட்டளவில் நின்றுவிடும். தமது ‘சொந்த’ ‘நான்’கள் குறித்த எச்சரிக்கைகளோ, விசாரணைகளோ இவர்களிடத்திலும் இல்லை என்பது அடியேனின் அவதானிப்பு (சிலரைப் பொருத்த அளவில் இது தவறானதாகவும் இருக்கலாம்.) இதனால், முதல் பிரிவினரைப் போன்றே இவர்களுடைய ‘நான்’களும் துருத்திக் கொண்டு முன்னே வந்து நிற்பதுண்டு. என்றாலும், இதையும் மீறி, சிறுபத்திரிகை வாசிப்புச் சூழலில் பல புதிய திசைகளைத் திறந்துவிட்டது, எந்தக் கேள்விகளுக்கும் இடமேயில்லாத ‘லகரி’ இலக்கியம், ‘அப்பாவித்தனமான’ வாசிப்புகள், போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கியது இவர்களது பங்களிப்புகளில் சில.

இந்த இரண்டாவது பிரிவினரில் விழுந்துவிட்டவர்களில் ஒருவன் என்கிற முறையில், மேற்சொன்ன ‘சுயவிமர்சனம்’ (இன்னும் பல உண்டு) நீட்ஷேவை வாசித்த பிறகே கிடைத்தது என்கிற ஒப்புதலை வாசகர்கள் முன் வைக்க விரும்புகிறேன்.இரண்டாயிரம் ஆண்டு கால மேற்கத்திய தத்துவ மரபு இருப்பின் ஆதாரம், அடிப்படை (Being of beings) என்ன என்ற கேள்வியில் சிக்கியிருந்ததன் அபத்தத்தைச் சுட்டிக்காட்டி தேக்கமடையாமல், தொடர்ந்து உருவாகி, உருமாறிக் கொண்டிருக்கும் நிகழ்வின்மீது (Becoming) அழுத்தத்தைக் குவிக்கும் நீட்ஷே “வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” என்றும் முன்மொழிகிறான்.

இவ்விடத்தில், “நமது மதம், ஒழுக்கவியல், தத்துவம் அனைத்தும் மனிதனின் சீரழிவின் வடிவங்கள். இதன் எதிர் – இயக்கம் கலை” என்ற நீட்ஷேவின் மும்மொழிதலை ஏற்றுக் கொள்ள முடிகிற போது, சு.ரா “ஒரு இலக்கிய அறிதல்முறை வேண்டும்” என்று சொல்வதைக் கேட்டு எங்களைப் (அதாவது இரண்டாவது பிரிவினரி சிலர்) போன்றவர்கள் ‘பாய்ந்து பாய்ந்து தாக்குவதேன்?”

ஒன்று, சு. ரா முன்வைக்கும் ‘இலக்கிய அறிதல்முறை’, ‘எங்கோ, ஏதோவொரு’ இடத்தில், இறுதியில் இருப்பின் ஆதாரம் குறித்த தேடலாகத்தான் முடிகிறது. இரண்டாவது, நீட்ஷே மூளைச் சோம்பேறி அல்ல.

“வாழ்வே ஒரு அழகியல் நிகழ்வு” எனும்போது இலக்கியம் குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், அந்த இலக்கியம் Being – ஐ நோக்கிய ஏக்கமாக அல்ல Becoming – ஐப் பிடிக்க முயற்சிப்பதாக (அது சாத்தியமேயில்லை என்றாலும்கூட) அதற்கு அழுத்தம் தருவதாக இருக்க வேண்டும்.

இந்த முன்மொழிதல்களை அதன் சிக்கல்களோடும் செறிவுகளோடும் ஆழத்தோடும் புரிந்துகொள்ள ஒருவர் மேற்கத்திய தத்துவ மரபை ‘கரைத்துக் குடித்தே’ ஆக வேண்டும். முன்னும் பின்னுமாக ஒரு தீவிர வாசிப்பைத் தந்தே ஆகவேண்டும். அதன்பிறகு, அதோடு சேர்த்து நாம் ‘இந்தியத்’ தத்துவ மரபுகள் குறித்துப் பேசலாம்.

மேற்கத்திய தத்துவ மரபுக்கு இவ்வளவு அழுத்தம் தருவதற்குக் காரணங்கள் உண்டு. ஒன்று, நாம் இன்று முன்வைக்கும் அத்தனை வடிவங்களும் மேற்கிற்கே உரியவை. அப்புறம், காலனியத்திற்குப் பிறகு காலனியக்கறை படியாத, ‘தூய’ தனித்துவமான பாரம்பரியம் என்று எதுவும் இல்லை. ‘இந்தியத்’ தத்துவ மரபுகளைக்கூட நாம் மேற்கத்திய தத்துவச் சொல்லாடல்களின் ஊடாகத்தான் பேச வேண்டியிருக்கிறது.

எனது வாசிப்பு இந்த வரைபடத்தின் வலது கீழ் மூலையிலிருந்து (லெனின்) தொடங்கி இடப்பக்கமாக மெதுவாக நகர்ந்த ஒன்று. இன்னொருவருக்கு இன்னொரு மாதிரியாகவும் இருக்கலாம். அதோடு, இது முழுமையான, நிறைவான ஒன்றும் இல்லை. உதாரணத்திற்கு, விட்கென்ஸ்டெய்னுக்கு முன்னும் பின்னுமான analytic மற்றும் linguistic தத்துவ மரபுகளைத் தவிர்த்திருக்கிறேன். ‘இம்ம்மானுவேல் க்க்கான்ட்’ – ற்கு பின்னே நீண்டு செல்லும் மத்தியகால தத்துவப் போக்குகள், கிரேக்க தத்துவப் பாரம்பரியம் அத்தனையும் விட்டிருக்கிறேன்.

எது எப்படியிருந்தாலும் ஒரு புதிய அழகியலோடு, வீர்யம் மிகுந்த படைப்புகளைத் தருவதற்கு, அறிவின் அதிகாரத்தை வெல்வதற்கு, ‘பைத்திய நிலைக்குள்’ போவதற்கு, ஒருவர் முதலில் அறிவை வென்றாக வேண்டும். ‘நிதானமானவர்கள்’ தான் ‘பைத்தியமாக’ முடியும். பிறவியிலேயே பைத்தியங்கள் கிடையாது. அப்படியானவர்கள் மூளை வளர்ச்சி குன்றியவர்கள். இல்லையா?

(முற்றும்.)

நிறப்பிரிகை இதழ் 10, 2000.

சில தப்புகளைப் பற்றி தப்புத் தப்பாய் சில குறிப்புகள் – தப்புக்குப் பிறந்தவன்

குறிப்பு:
இக்கட்டுரையில் spelling mistake குறித்து எழுதியிருப்பவை அச்சொற்கள் குறிக்கும் கருதுகோள்கள் குறித்த அடிப்படைப் புரிதல்கள் கூட இல்லாமல் ஜெயமோகன் போன்றவர்கள் உளறிக் கொட்டியவை குறித்த ‘பகடி’ என்பதை வாசகர்கள் ‘உய்த்து உணர்ந்து கொள்வார்கள்’ என்று நம்புகிறேன்.
_______________________________________________
இரத்தத்தால் எழுது. இரத்தமே ஆன்மா என்றுணர்வாய்.
ஒரு காலத்தில் ஆன்மா கடவுளாக இருந்தது. பின்பு மனிதனானது. இப்போது எழுத்துக் குப்பையாகியிருக்கிறது.
மனிதன் மிருகத்திற்கும் மீமனிதனுக்கும் இடையில் ஒரு பாலம் – அதளபாதாளத்திற்கு மேல் தொங்கும் பாலம்.
– Nietzsche, Thus Spoke Zarathustra.
முதலில் சில பிரகடனங்களைச் செய்துவிடுகிறேன்:
1. மக்கள் மந்தைகள்.
2.மனிதன் இன்றைக்கு நீட்ஷே சொன்ன பாலமாகக்கூட இல்லை. மனிதக்குரங்கு என்ற இன்னொரு இடைப்பட்ட நிலையிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறான்.
3. இதில் சிலதுகள் ‘இலக்கியம்’ சமைப்பதாகவும், ‘ஆய்வுகள்’ செய்யும் ‘அறிஞர்’களாகவும், அரசியல் ‘செயலாளிகளாகவும்’ பாவனைகள் செய்து கொண்டிருக்கின்றன.
இனிவரும் குறிப்புகள் தமிழ்நாட்டு அரசியல், இலக்கியச் சூழலில் இந்தச் சிலதுகளின் on/off the record சேஷ்டைகள் சிலவற்றைப் பற்றிய பதிவுகள்.இங்கு இந்த விஷயங்களைப் பதிவு செய்வது “இந்த உலகில் மிகச் சிறந்த விஷயங்கள்கூட அவற்றை வைத்து வேடிக்கை காட்ட யாரும் இல்லையென்றால் சீண்டுவாரில்லாமல் ஆகிவிடுகின்றன; இந்தப் பாவனை மனிதர்களைத்தான் மக்கள் அறிஞர்கள் என்கிறார்கள்,” (நீட்ஷே) என்பதைச் சுட்டிக்காட்டத்தான். மற்றபடி, இவர்கள் எவரிடமும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொள்ளும் அளவுக்கு இவர்களோடு எனக்குப் பழக்கம் இல்லை என்பதை சொல்லி விடுகிறேன்.
* * *
ஒரு வருஷத்திற்கு மேலாகிறது. காலச்சுவடு ஜனவரி – மார்ச் ’99 இதழில் ‘குரு’ நித்ய சைதன்ய யதியுடன் உரையாடல். உரையாடியவர் சிற்றிதழ் உலகத்தை கதிகலங்கடித்துக் கொண்டிருக்கும் நமது ‘வருங்கால முதல்வர்’ (புரியாதவர்கள் எக்ஸில் – 09 இல் சாருவின் “கோணல் பக்கங்களைப்” பார்க்க) சு. ரா – விற்குப் பிறகு இலக்கிய பீடத்தின் தலைமைப் பொறுப்பைச் ‘சுமக்கப்’ போகிறவர் என்பதால் இப்படிச் சொல்வது தவறாகிவிடாது. அதற்கான முஸ்தீபுகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் என்பதை விளக்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்.
உரையாடலைப் படித்துக் கொண்டிருந்தபோது இரண்டு வார்த்தைகளால் கொஞ்சம் சங்கடப்பட்டுப் போனேன். வாசகர்களுக்கு சந்தேகம் வேண்டாம். ‘கீழ்த்தரமான’ வார்த்தைகளைப் போடுகிறவர் அல்ல ஜெயமோகன். Epitome, epitomology. ஜெயமோகன் இவற்றை முறையே அறிவுக்கூறு, அறிவியங்கியல் என்று ‘மொழியாக்கம்’ (சுதந்திர மொழிபெயர்ப்பு!) செய்திருக்கிறார். அது கிடக்கிறது விடுங்கள். Spelling mistake – தான் என் கண்களை உறுத்தியது. Episteme, epistemology என்பதுதான் சரியான spelling. சரி, ஏதோ அச்சுப்பிழை என்று சமாதானம் செய்துகொண்டு மேலே படித்துக்கொண்டு போய்விட்டேன்.
ஆனால், சனியன் என்னை விட்டபாடில்லை. (பிடித்திருப்பது ஏழரை நாட்டு சனியனாம். வீட்டில் சொல்கிறார்கள்.) அடுத்த இதழில் (ஏப்ரல் – ஜூன் ’99) மேற்சொன்ன வார்த்தைகளுக்கு “பிழை திருத்தம்” போட்டிருந்தார்கள்: ” epitome, epitomology என்பது epistome, epistomology என்று இருக்க வேண்டும்” !
இதை ஜெயமோகன் தான் எழுதி அனுப்பியிருந்தாரோ அல்லது ஃஅமீதோ (மன்னிக்க, மனுஷ்யபுத்திரன். முஸ்லீமாகப் பிறந்துவிட்டதற்கு அவர் என்ன செய்வார் பாவம். இயல்பிலேயே ‘சமஸ்கிருத மூளை’ படைத்தவர். அதை நமக்கெல்லாம் அடையாளம் காட்டி அருள்பாலித்தவர் சு. ரா. – சுஜாதாவும். தமிழ் இலக்கிய உலகம் இந்த நன்றிக் கடனை எப்படி கழிக்கப் போகிறதோ!) மனுஷ்யபுத்திரன் திருத்தினாரோ அல்லது கண்ணனோ அல்லது ஜெயமோகன் சரியாக எழுதி அனுப்பி இவர்கள்தான் மீண்டும் தவறு செய்து விட்டார்களோ என்று ஏகமாகக் குழம்பிக் கிடந்த நேரம். ஜுலையில் “சொல் புதிது” ரிலீஸ்.
மீண்டும் ஜெயமோகன். மொழியியல் குறித்த ‘பிரமாதமான’ அவருடைய கட்டுரை. அப்புறம் யதியின் நூலின் ஒரு பகுதி, அவரது மொழியாக்கத்தில். இதிலும் spelling mistake. ‘பிழை திருத்தத்தை’ ஏற்றுக்கொண்டு. Epistime (இதை ‘அச்சுப் பிழை’ என்று மீண்டும் சமாதானம் செய்து கொள்ளலாம்) epistomology !
என்ன கெரகம்யா இது! அப்ப மூணு பேருக்குமே spelling தெரியாதா ?!
என் கனவுகள் தகர்ந்தன. பிம்பங்கள் உடைந்து நொறுங்கின. தமிழ் நாட்டின் ஆகப் பெரிய நாவலாசிரியர், ஆகச் சிறந்த கவிஞர், ஆகச் சிறந்த இலக்கிய மானேசர் இவர்கள்கூட, இப்படியெல்லாம்கூட spelling கூட தெரியாமல் இருப்பார்களா?
Side – ல் இன்னொரு யோசனை. இப்படியெல்லாம் கேட்பது கலைஞனையும் கவிஞனையும் கொச்சையாகப் பார்ப்பதாகிவிடாதா. ஒருவேளை, spelling correctness பார்ப்பது கலையின், இலக்கியத்தின் ‘புதிர்ப் பாதைகளுக்குள்’ பிரவேசிக்க இயலாத என் ‘மன வறட்சியைத்’தான் காட்டுகிறதோ! ஒருவேளை இது இலக்கியத்தின் மீது, இலக்கியவாதிகள் மீது, ‘அறிவாளிகள்’ செலுத்தும் வன்முறை என்று சொல்லப்படுகிறதே, அதாகிவிடாதா! ‘விஷயத்தை’ விட்டுவிட்டு வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில்லையா இது. கெரகம் உனக்கே ஒற்றுப் பிழை பற்றிய பயம் உண்டே, நீ எப்படி இதைப் பற்றியெல்லாம் பேசலாம். இப்படி ஏகப்பட்ட ‘சிந்தனை’ !
ஆனால், இன்னொரு பக்கம், இப்படி spelling mistake செய்திருக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் (இதுவரைக்கும்கூட) நாவலைப் பற்றியும் கவிதையைப் பற்றியும் வாசிப்பு பற்றியும் இலக்கியத்தைப் பற்றியும் தத்துவங்களைப் பற்றியும் தெரிதாவைப் பற்றியும் பின் – நவீனத்துவத்தைப் பற்றியும் அனாசயமாக அபிப்பிராயங்களை உதிர்த்துக் கொண்டு போகிறார்களே அதையெல்லாம் என்னவென்று சொல்வது என்றும் ஒரு யோசனை.
என்னத்த யோசிச்சு என்ன பண்ண, மயிராப் போச்சு, ஏதாவது படிப்போம் என்று பேப்பரைப் புரட்டினால், சாமி அதிலும் (தின மணி, 25.05.00) ஜெயமோகன். சுத்தமான ரஜினி ஸ்டைலில் ஃபோட்டோ. “பின் – நவீனத்துவம் என்பது என்ன?” என்று நடுப்பக்க கட்டுரை. ஏகப்பட்ட பேத்தல்! வேற என்னத்த சொல்ல!
இன்னொரு விஷயம். சமீபத்தில், சென்னையில் அவருடைய மூன்றாவது நாவலுக்கு நடந்த விமர்சனக் கூட்டத்தில் ஜெயமோகன் “விஷ்ணுபுரம்” நாவலைப் பற்றி யாராவது, ஒருத்தராவது, ஒரு வார்த்தையை, ஒரேயொரு வார்த்தையைச் சொல்வார்களா என்று ஏங்கித் தவித்தது பற்றி அங்கலாய்த்தார். கடைசியில், ‘தமிழ் நாட்டில் நான் ஒருத்தன் தான் அறிவாளி’ என்று மார்தட்டிக் கொண்ட (அ. மா., கே. ஏ. குணசேகரன் முன்னிலையில்) ப்ரேம் மட்டும்தான் அந்த வார்த்தையைச் சொன்னாராம். அப்படியென்னப்பா அது யார் வாயிலும் நுழையாத வார்த்தை என்று நானும் வாயைப் பிளந்துகொண்டு காத்திருந்தேன்: ‘meta – novel’ என்று பிரணவ மந்திரத்தை உதிர்த்தார் ஜெயமோகன். “நாவலைப் பற்றியே பேசும் நாவல்” என்று அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார். Self – referentiality – ஐ நாவல் முழுக்கவும் விரவவிட்டிருக்கிற self – conscious – ஆன writing என்று இதை சற்று விளக்கப்படுத்தலாம்.
இதற்கு இரண்டு மறுப்புகளைச் சொல்லவேண்டும். மேற்சொன்ன இரண்டையும் தனிச்சிறப்பான பண்புகளாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள்தான் ‘meta – novel’ என்ற வரையறைக்குள் வரும் என்று சொல்ல முடியாது. காரணம் மிகவும் சாதாரணமானது.
இந்த இரண்டும் எல்லா வகைப்பட்ட எழுத்துக்களிலும், அதிலும் குறிப்பாக, மரபுவழிப்பட்ட யதார்த்தவாத நாவல்களிலுமேகூட ‘நீக்கமற நிறைந்திருப்பதைக்’ காட்ட முடியும். இது குறித்து சற்று விளக்கமான ஒரு கட்டுரையை “வேறு வேறு” இதழில் வாசகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம். [முதல் இதழோடு நின்று போனது. ‘சோம்பலில்’ வேறு எதிலும் எழுதவும் தோன்றவில்லை] சுருக்கம் கருதி இங்கு, ‘meta – novel’ என்று ஜெயமோகன் சொல்ல வருவதை யதார்த்தம் x புனைவு, புனைவெழுத்து x விமர்சன எழுத்து என்று எல்லைக் கோடுகளிட்டு சில புலங்களைப் பிரித்து வைத்திருப்பதை கேள்விக்குள்ளாக்குகிற, ஒரு பிரச்சினைப்பாடாக எடுத்துக்கொண்டு எழுதுகிற நாவல் என்று வரையறுக்கப்பட்டுள்ளதைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
இரண்டாவது மறுப்பு மிகவும் அடிப்படையானது. அது ‘meta – novel ‘ இல்லை; meta – fiction. மேற்சொன்ன வகைப்பட்ட நாவல்களை இப்படியாகத்தான் விளிப்பார்கள்.
ஆக, ‘தமிழ் நாட்டிலேயே ஒரே அறிவாளி’ – யான ப்ரேமுக்கு meta – fiction என்ற மிகவும் சாதாரணமான, அடிப்படையான ஒரு வார்த்தைகூடத் தெரியவில்லை என்று ஆகிறது. ஆனால், சடாரென்று இப்படியான முடிவுக்கு வருவதற்கும் சற்று அச்சமாக இருக்கிறது. காரணம், திடீரென்று ‘meta – novel’ என்பது தன்னுடைய ‘neo – logism’ – களில் ஒன்று என்று அவர் எழும்பி வரலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு கத்தியையும் வைத்திருக்கலாம். (தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக meta – fiction – ஐப் பற்றிப் பேசியது நான் தான் அல்லது meta – fiction – ஐ ‘வெறும் கோட்பாட்டு அறிமுகமாக அல்லாமல் முதன்முதலாக படைப்புகளூடாக நிகழ்த்திக் காட்டியவர்கள் நாங்கள்தான்’ என்று தமது அடுத்த ஏதாவது தொகுப்பு ஒன்றின் பின்னட்டையில் போடலாம்.) யார் கண்டது. ஆனால், ஜெயமோகன் அதைச் சொன்ன சீரியஸான தொனியைப் பார்த்தால் அதை அப்படியே literal – ஆக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது. தமிழ் நாட்டு அறிவு உயிரிகள், படைப்பாளிகளின் இலட்சணம் … முருகா!
சரி, ஜெயமோகன் கட்டுரைக்கு வருவோம். அதில் தமிழவன் (கொடுமையே!), நாகார்ச்சுனன், ப்ரேம் : ரமேஷ், க. பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக்குமாரசாமி இவர்கள்தான் தமிழில் பின் – நவீனத்துவவாதிகள் என்று மறுபடியும் ஒரு லிஸ்ட் கொடுத்திருக்கிறார். (அ. மார்க்சை இந்த லிஸ்டில் சேர்க்காததற்கு நன்றிகள் சொல்வோமாக!) இதாவது பரவாயில்லை. லக்கான், லெவி ஸ்ட்ராஸ், ஃபூக்கோ, தெரிதா, போத்ரியா (ஃபூக்கோ – சமூகவியல் அறிஞர், தெரிதா – மொழியியல் அறிஞர்; இந்தப் பட்டங்களை உலகிலேயே முதல் முறையாக இவர்களுக்குக் கொடுத்திருப்பது ஜெயமோகந்தான். துதிப்போமாக!) இவர்கள் மேற்கில் பின் – நவீனத்துவவாதிகள் என்று இன்னொரு லிஸ்ட்.
ஐயா, லெவி ஸ்ராஸுக்கும் பின் – நவீனத்துவத்திற்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது. தான் ஒரு ஸ்ட்ரக்ச்சுரலிஸ்ட் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர் அவர். மிகக் கறாரான ஸ்ட்ரக்சுரலிச அணுகுமுறை அவருடையது. லக்கானுடைய அணுகுமுறையும் ஸ்ட்ரக்சுரலிச அணுகுமுறையே. ஃபூக்கோ எந்தவொரு பட்டப் பெயருக்கும் அகப்படாதவர். போஸ்ட் – ஸ்ட்ரக்சுரலிஸ்ட் என்று தான் அடையாளப்படுத்தப்பட்டதை மறுத்தவர். தெரிதா தத்துவவாதி என்பது உலகறிந்த விஷயம் (நீட்ஷே முன்னறிவித்த வருங்காலத்தின் தத்துவவாதிகளில் – attemptors/artist – philosophers – களில் ஒருவர் என்று சொல்லலாமா?)
அப்புறம், இலக்கியத்தில் post modern writing என்று அடையாளம் சொல்லத்தக்கவை உண்டு. அந்த வகையில், பின் – நவீனத்துவ இலக்கியம் என்று ஒரு ‘இசத்தைப்’ பற்றிப் பேசலாம். ஆனால், தத்துவத்தில் பின் – நவீனத்துவம் என்று ‘இசம்’ எதுவும் இல்லை. பின் – நவீனத்துவம் ஒரு ‘போக்கு’ (trend) இல்லை. சிம்பிளாகச் சொல்வதென்றால், அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சகாப்தத்தின் mood – ஒருவிதமான பொதுவான ‘மனநிலை’.
இறுதி உண்மைகள், உறுதியான பதில்கள், எல்லாக் கேள்விகளுக்கும் தெளிவான பதில்களைத் தயாராக வைத்திருக்கும் தத்துவங்கள், கோட்பாடுகள் மீது உலகின் பெருவாரியான மக்கள் நம்பிக்கை இழந்து போயிருக்கும் நிலை. (இதனால், இது ஒரு gloomy mood என்று எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.) பின் – நவீனத்துவ நிலை – Post modern Condition.
‘இந்தியக் காவிய மரபின்’ தொடர்ச்சியாக நாவல்கள் பண்ணிக்கொண்டு இருப்பதாகச் சொல்கிறீர்கள். வாழ்த்துகிறோம். அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அறிவுத் துறைகள் என்று வந்தால் கொஞ்சமாவது அறிவு தேவை. நிறைய உழைப்பு தேவை. அறிமுகப் புத்தகங்களைப் படித்துவிட்டு, ‘தமிழ் நாட்டின் ஒரே அறிவாளியோடு’ உரையாடிவிட்டு சகட்டுமேனிக்கு அபிப்பிராயங்களை உதிர்ப்பதும், லிஸ்டுகள் போடுவது உங்களுக்கு ‘அழகு செய்யுமா’? யோசித்துப் பாருங்கள்.
* * *
(தொடரும் … )

நிறப்பிரிகை இதழ் 10,செப்டம்பர் 2000.

மதன காமராஜன் கதைகள் !

“அறிவுஜீவி எனப்படும் குழுதான் அக்கிரமம் செய்கிறது. இவர்களுக்கு நகைச்சுவை என்றால் வேப்பங்காய். அட்வெஞ்சர், கதையம்சம், சுவாரஸ்யம், ஜனரஞ்சகம் முதலிய அம்சங்களில் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஆசாரக்காரர்கள் இவர்கள்.”
ரா.கி.ரங்கராஜன்,தினமணிகதிர் – 08.08.99

வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக முதலில் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லதெனப்படுகிறது. கி. ரா. வின் கதை சொல்லி இப்பொழுது ப்ரேம் – ரமேஷ் கைகளுக்குப் போயிருக்கிறது. ‘கண் தெரியவில்லை, ஜாடை புரியவில்லை’ என்று சொல்லி கி. ரா. ரிடையர்மென்ட் வாங்கிக் கொண்டிருக்கிறார். (ஆசிரியர் குழுவில் க. பஞ்சாங்கம் ஒப்புக்கு, தங்கர்பச்சான் துட்டுக்கு என்று சொன்னால் ஆள் வைத்து அடிக்கவும் வாய்ப்புண்டு. தவிர்த்துவிடுகிறேன்).

ப்ரேம் – ரமேஷ் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே தமிழ் அறிவுச் சூழலில் நன்கு அறியப்பட்டவர்கள் என்றாலும், “ப்ரேம் பேசாமல் ஒரு இலக்கியக் கூட்டமா?” என்ற அளவிற்கு நிலைமை முன்னேறியிருப்பது சமீக காலங்களில்தான்.

“பின்நவீனத்துவத்தை வெறும் கோட்பாட்டு அறிமுகமாக இல்லாமல் முதன் முறையாகப் படைப்புகளுடாக நிகழ்த்திக் காட்டியவர்கள். இவர்களுடைய தத்துவக் கட்டுரைகள் தமிழில் பல புதிய சிந்தனைத் தளங்களை உருவாக்கிக் கொடுத்திருப்பதுடன், அவற்றினூடாக ஒரு புதிய அறவியல், அரசியல், அழகியல் சாத்தியப்பாடுகளை தமிழ்ச் சமூகத்தில் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது. தமிழில் நவீனத்துவத்திற்குப் பின்னான காவிங்களை முன்னுதாரணமற்ற வகையில் பேரளவில் எழுதிய இவர்களின் தாக்கம் இல்லாமல் இலக்கியம், தத்துவம் இவற்றில் மாற்றுச் சிந்தனை எதுவும் இல்லை என்னும் அளவுக்கு பாதிப்பை நிகழ்த்தியவர்கள்”, என்று தமது தொகுப்பின் (இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்) பின்னட்டையில் போட்டுக் கொண்டவர்கள் என்று இன்னமும் இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிராத துர்பாக்கியசாலிகளுக்கு அறிமுகப்படுத்தலாம்.

இவர்களுடைய மொத்த எழுத்துக்களையும் எடுத்துக் கொண்டு இந்தத் துணிபுகளுக்கு அவை தகுதியானவைதானா என்று அலசுவது இங்கு சாத்தியமில்லை என்றாலும், இதழின் சரிபாதி பக்கங்களை இவர்களது ‘சிந்தனைகளே’ அடைத்துக் கொண்டிருப்பதால் அவற்றுக்குக் கொஞ்சம் அதிகக் கவனம் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

முதலில், உம்பர்ட்டோ ஈக்கோ – வின் நாவல்களை முன் வைத்து பின்நவீனத்துவ கதை சொல்லல் குறித்து இவர்கள் சொல்பவை.

ஈக்கோவின் முதல் நாவலான Name of the Rose பற்றிய குறிப்புகளில், “எழுத்து எத்தனை முறை எழுதப்பட்டாலும் எழுத்தைத்தான் எழுதிச் செல்கிறதே தவிர உலகை அல்ல. எழுத்தின் வெளிக்குள் எவ்வளவு திணித்தாலும் எழுத்துக்குப் புறம்பான எதையும் நுழைத்துவிட முடிவதில்லை.

இலக்கிய ஆக்க முறையில் ‘பாவனை எழுத்து’ அல்லது ‘நிகழ்த்துதல் எழுத்து’ என்பது முக்கியமானது. அதாவது இங்கு உண்மை என்று எதுவும் கூறப்படாமல் – கூறுதல் முறை மட்டுமே – ‘இது இப்படியாக’ … என்பது போல் எழுதிச் செல்லும் முறை.

மத்தியகால ஐரோப்பிய வரலாறு, கலாச்சாரம் பற்றிய தகவல்களை ஆய்வுப்பூர்வமாக பல்வேறு பிரதிகளிலிருந்து தொகுத்து ஒரு முன்பிரதித் தொகுப்பு அமைக்கப்பட்டிருக்கிறது.

மேற்குலகின் – குறிப்பாக கிறிஸ்தவ – இறையியல் பற்றியும், தத்துவ முரட்டுவாதம் பற்றியும் பல கேள்விகளை விளையாட்டுத்தனமாக இந்நாவல் எழுப்பி சந்தேகப்படுதலின் சாத்தியங்களை அதிகமாக்கிவிடுகிறது. இந்தப் புனித மறுப்பு கதை கூறல் எல்லாப் புனிதப் பிரதிகளின் முற்றொருமையையும் கலைத்துப்போட்டு அவற்றின் ‘கதைப்பாட்டு’ சாத்தியங்களை அதிகமாக்கிவிடக்கூடியது.”

இரண்டாவது நாவலான Foucault’s Pendulum பற்றிய குறிப்புகளில், “புனைவு மற்றும் உண்மை என்பவை தனித்தனியே இல்லை எனவும் புனையப்படுபவையே எல்லாம் என்பதையும் இந்நாவல் அடையாளப்படுத்தும்”, என்று எழுதுகிறார்கள்.

இங்கு பிரித்து – தொகுத்துத் தந்திருப்பவற்றை மேலோட்டமாக ஒரு வாசிப்பு தந்தாலே அடிப்படையான ஒரு முரண் எழுவதைக் காண முடியும்.

எழுத்து, புனைவு, புற உலகை – உண்மையைச் சுட்டுவதில்லை என்று ஒரு பக்கமும் ஈக்கோவின் நாவல் (Name of the Rose) மத்தியகால ஐரோப்பாவின் வரலாறு, கலாச்சாரம், தத்துவ நம்பிக்கைகள் பற்றிய ‘தகவல்களை’ ‘ஆய்வுப்பூர்வமாக’ தொகுத்து வைக்கின்றன – அதாவது ஒரு கடந்தகாலப் புற உலகை ‘அப்படியே’ நம்முன் உருவாக்கி வைக்கின்றன என்று இன்னொரு பக்கமும் சொல்வது பிடிபடும்.

இங்கு உதைக்கிற சொற்கள் ‘தகவல்கள்’ மற்றும் ‘ஆய்வுப்பூர்வமாக’ இரண்டு மட்டும்தான். இந்த இரண்டு சொற்களுக்கும் வழக்கில் உள்ள அர்த்தங்களைப் பற்றிய (தகவல்கள் என்பவை புறவயமாகக் கண்டறியப்பட்டு சேகரிக்கப்படுபவை, அதனால் மறுக்கப்படமுடியாதவை; ஆய்வு புறவயமாக, ஒரு புறவயமான முறையியலின் அடிப்படையில் செய்யப்படுவது, அதனால் மறுக்கப்படமுடியாதது) கேள்விகளே இல்லாமல் ஆளப்பட்டிருப்பதே பிரச்சினை. தகவல்களும், ஆய்வுகளும் மொழியில், மொழியால் செய்யப்படுவதும் அவை ஒரு கதையாக (கதை சொல்லுதல் என்றால் பொய் சொல்லுதல்; கதை விடுகிறான், கதை சொல்கிறான் என்றுள்ள வழக்குச் சொற்களை நினைத்துப் பார்க்க) சொல்லப்படுவதும் அன்றாட வாழ்விலும்கூட நாம் காணும் ‘உண்மை’.

இந்த ஒரு சறுக்கல் தொடர்ந்து இவர்களுடைய பார்வைகளைப் பற்றிய கேள்விகள் பலவற்றை எழுப்பிவிடுகிறது. ‘உண்மை’, மனித அர்த்தப்படுத்தல்களிலிருந்து விலகிய தனித்த அர்த்தமுள்ள ஒரு புற உலகு என்று எதுவுமே இல்லை என்பதெல்லாம் உண்மைதான். மனித வாழ்க்கையும், புற உலகு பற்றிய பல்வேறு பார்வைகளும் எல்லாமும் புனைவுகள்தான். ஆனால், இதிலிருந்து எழும், இந்தப் புனைவுகளுக்கும் இலக்கியப் புனைவுகளுக்கும் என்ன உறவு என்ற கேள்விக்கு இவர்கள் எந்தப் பதிலும் தருவதில்லை. இதை இவர்கள் எந்த இடத்திலும் எதிர்கொண்டதாகவும் தெரியவில்லை.

இந்தக் கேள்வியை இவர்கள் எதிர்கொள்ளாததன் விளைவாக, மிகவும் நுட்பமான ஒரு அழகியல்வாதத்திற்குள் விழுந்துவிடுவதைக் காட்டமுடியும். ஈக்கோவின் நாவல்கள் ‘இலக்கியத் தரமானவை’. ‘தீவிர இலக்கியப் பயிற்சி’ இல்லாதவர்களும் விரும்பிப் படிக்கத் தக்கவையாக அமைந்தவை என்றெல்லாம் பேசுவதே வேடிக்கையான ஒரு சான்று.

ஈக்கோவின் நாவல்கள் துப்பறியும் நாவல் வடிவத்தில் எழுதப்பட்டதே ‘இலக்கியத் தரத்தை’க் கேலி செய்த ஒரு நிகழ்த்துதல். பின்நவீனத்துவ சிந்தனைகளின் அடிப்படையான முற்கோள்களில் ஒன்று ‘தீவிர இலக்கியத்திற்கும்’ ‘வணிக இலக்கியத்திற்கும்’ இடையில் உள்ளதாகச் சொல்லப்பட்ட மதிப்பு வித்தியாசத்தைக் கேலி செய்வதும், ‘தீவிர இலக்கியத்தை’ அதன் பீடத்திலிருந்து இறக்கி வைப்பதும்தான் என்பது ‘தமிழில் முதன் முதலாக பின்நவீனத்துவ படைப்புகளை நிகழ்த்திக் காட்டியவர்களுக்கு’ எப்படி மறந்து போனது!

எப்படி மறந்து போனது என்பதைப் பற்றிய விசாரணையை இன்னொரு சந்தர்ப்பத்திற்கு வைத்துக்கொண்டு இப்போதைக்கு இது selective amnesia – வாக இருக்க வாய்ப்புண்டு என்று எடுத்துக் கொள்வோம். ஆனால், இந்த selective amnesia இவர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் போலிருக்கிறது.

“ஸீரோ டிகிரி” – க்கு விமர்சனத்தை எழுதும்போது ரமேஷ் பிரேதனுக்கு இது அடிக்கடி வந்து விட்டிருக்கிறது போலிருக்கிறது. லால் சலாம் அத்தியாயத்தில் முனியாண்டி, தமிழ்ச் செல்வன் என்கிற தீவிரவாதி இருவர் மீதும் முனியாண்டியின் பாங்க் கொள்ளை பற்றிய நாவல் தொடர்பான விசாரணை நடக்கும். ரமேஷ் பிரேதன் இதை “தனித் தமிழ்நாடு கேட்கும் ஒரு தீவிரவாதியை போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும்போது வேறொரு விசாரணைக்காக அங்கு வரும் “சூர்யா” என்று எழுதுகிறார். இதைவிட பெரிய வேடிக்கையான s.a., “தமிழகத்தின் மூன்றாம் அரசியலையும் ஏறக்குறைய அதன் இணை அமைவாக இயங்கும் சிறு பத்திரிகை கலாச்சாரச் சூழலையும் கிண்டலுக்கும் கேலிக்கும் உட்படுத்தும் சாரு நிவேதிதா” என்று எழுதுவதுதான். Millenium Joke! Thanks to s. a. !

ஏற்கனவே சொல்லப்பட்டு வந்த கதைகளை (புனைவுகளை) கதை சொல்லும் முறைகளை, ஒரு முறை என்ற அளவில் கேலியும் கிண்டலுமாகத் திரும்பச் சொல்வது, அதனூடாகக் கதை, கதைக் கரு, கதாபாத்திரம், (யதார்த்தவாத) எழுத்து, புனைவு இவற்றுக்கு பழக்க அடிமையாகிக் கிடக்கும் வாசகனின் கவனத்தை சற்று விமர்சன நோக்கில் திருப்புவது பின்நவீனத்துவ கதை சொல்லல் முறைகளில் ஒன்று என்பதே அடியேனின் எளிய அறிவுக்கு எட்டிய புரிதல். ஈக்கோவின் நாவல்களும் இந்த வகைக்குள் வருபவையே.
ஆனால், இதழில் ப்ரேம் – ரமேஷ் எழுதியுள்ள “ஆதியின தேவதைகளின் தலைமறைவுக் காலம்” என்ற குறுநாவலில் மருந்துக்கூட ஒரு எள்ளல் தொனி இல்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட புனைவுகளும் எதுவும் இல்லை. வலிந்து வரிந்து ஒரு ‘செவ்வியல் தரமான’ ‘படைப்பை’த் தரும் முயற்சியே இருக்கிறது.

இதழில் உள்ள “நதிக்கரையில்” என்கிற ஜெயமோகனின் குறுநாவலிலும் இதே முயற்சிகளும் (இன்னும் சிலவும்) இருந்தாலும் ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு புனைவைத் திரும்பச் சொல்லும் முயற்சி என்ற அளவிலாவது குறிப்பிடத்தக்கது. ஜெயமோகனின் குறுநாவலில் உள்ள இன்னொரு முக்கிய பிரச்சினை அவரது முயற்சி காவியத்தை ‘மறுவாசிப்பு’ (!) செய்வதன் ஊடாக நாவலை எழுதுவது.

இதிலிருந்து கி. ரா. வின் நாட்குறிப்புகளில் அவர் சொல்லும் குட்டிக்கதைகள் பெரிதும் மாறுபட்டவை. எனது சாய்வில் வரவேற்கத் தக்கவை. நாட்டுப்புற கதைகளைச் சொல்லி அதைத் தன் வாழ்க்கையோடு (எனும் புனைவோடு) இடம் மாற்றிப் போட்டுப் பார்ப்பது. ப்ரேம் – ரமேஷ் போல பின்நவீனத்துவம் போன்ற கொம்புகள் எதுவும் தெரியாமலேயே மெல்லிய எள்ளல் தொனியோடு ஒரு கதையைத் திரும்பச் சொல்லிப் பார்ப்பது.

கி. ரா. வுக்கு கண் தெரியாமல் போனாலும் ஜாடை புரியாமல் போனாலும் கதை சொல்லத் தெரிந்திருக்கிறது. ஏராளமான கதைகள் அவர் வசம் இருக்கும். ப்ரேம் – ரமேஷ் அவரிடமிருந்து உருப்படியாக ஒரு கதையையாவது கேட்டுத் தெரிந்து கொள்வது மிகுந்த புத்திசாலித்தனமான ஒரே காரியமாக இருக்கும்.

குறிப்பு:

ஆறாம் திணை மின் இதழில் சிற்றிதழ் பக்கத்தில் கதை சொல்லி – 5 -ஆம் இதழுக்கான விமர்சனமாக 99′ -ல் எழுதப்பட்டது. ஒரே ஒரு இதழோடு நின்று போன பெருமாள் முருகனின் வேறு வேறு (ஏப்ரல் 2000) இதழில் வெளியானது. இதற்கு ‘மறுப்பு’ என்ற பேரில் ரமேஷ் ப்ரேதன் எழுதி அனுப்பிய மிகக் கேவலமான தனிநபர் தாக்குதலை பெருமாள் முருகன் வெளியிட மறுத்து எனக்கு ஒரு பிரதியை அனுப்பி வைத்தார். தமிழில் தாம் இருவர் மட்டுமே ‘சிந்தனையாளர்கள்’, ‘தத்துவாதிகள்’ என்று வெட்கமின்றி சுயதம்பட்டமடித்துக் கொண்டிருக்கும் இவர்களது இலட்சணம் அதை வெளியிட்டால் கிழிந்து நாறிவிடும்.

அதற்கான தேவையும் இப்போது இல்லை என்று தோன்றுகிறது. சமீபத்திய நிகழ்வு ஒன்றில் இதே ‘பெண்ணிய சிந்தனையாளர்’ “என் பொண்டாட்டியை இப்படிச் சொல்லியிருந்தால் நான்கு தலைகள் உருண்டிருக்கும்”
என்று ‘பண்பட’ பேசியதும் இன்னும் இவர்களது பல்வேறு நடவடிக்கைகளும் (காலச்சுவடு, உயிர்மை, ஜெயமோகன் என்று எந்தவித பாரபட்சமுமின்றி யாரிடமும் சந்தர்ப்பத்திற்கு தகுந்தார்போல கூட்டுவைத்துக் கொள்ளும் இவர்களது ‘புதிய அறவியலை’ச் சொல்கிறேன்) இவர்களது போலித்தனங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

அது கிடக்கட்டும். இங்கு தொட்டுச் சென்றிருக்கும் சில விஷயங்களை வாசகர்கள் இதற்கு முன் பதிவிட்டுள்ள ‘தலைப்பும் வாலும்’ கட்டுரையோடும் அடுத்து பதிவிடவுள்ள கட்டுரையோடும் இணைத்து வாசிக்க வேண்டுகிறேன்.

நன்றி.

%d bloggers like this: